அம்பிகாபதி காதல் காப்பியம் வழங்கும் அஷ்டோத்திர சத நாமாவளி
இந்திய ஆன்மீகவியலில் 108 என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அது ஒரு புனிதமான எண்ணாகக் கருதப்பட்டு அதற்காகப் பற்பல விளக்கங்களும் கொடுக்கப்படுவதுண்டு. இக்காலத்தில் இந்த எண்ணுக்கான காரணத்தை அறிவியலுடன் வானியலுடன் இணைக்கும் முயற்சியும் இந்த விளக்கங்களில் காணப்படும். நூற்றெட்டு என்ற எண்ணுக்கான முக்கியத்துவம் இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் என இந்திய மண்ணின் சமயங்கள் அனைத்திலுமே இருக்கிறது. ஒளவையார் அருளிய ஆத்திசூடியும் 108 அறிவுரைகளை வழங்குவதைக் காணலாம். திருக்குறளிலும் காமத்துப்பால் அதிகாரங்கள் 25 என்பதைக் கணக்கில் கொள்ளாவிட்டால் அறம், பொருள் அதிகாரங்களின் எண்ணிக்கை 108 என்பது தற்செயலான ஒற்றுமை எனக் கருத இயலாது.
இந்திய வழிபாட்டு முறையில் அஷ்டோத்திர சத நாமாவளி என்பவை கடவுளரின் நூற்றெட்டு பெயர்களைக் கொண்டு போற்றும் ஒரு தொகுப்பாகும். இவை நூற்றெட்டுக் கடவுள் போற்றிகள் அல்லது 108 போற்றிகள் என்று தமிழில் குறிப்பிடப்படுவது வழக்கம். நாம ஆவளி என்பதற்குப் பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கடவுள் வழிபாட்டின் பொழுது இப்பெயர்களைக் கூறி பூசை செய்ய ஏதுவாக நாம ஆவளி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக நாமறிந்த கடவுளர் அனைவருக்கும் அஷ்டோத்திர சத நாமாவளி என்னும் நூற்றெட்டுக் கடவுள் போற்றிகள் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக; முருகப் பெருமானை 108 திருநாமங்களால் போற்றி பாடுவது முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி எனப்படும்.
ஓம் ஸ்கந்தாய நம
ஓம் குஹாய நம
ஓம் ஷண்முகாய நம
என்ற முறையில் 'ஓம்' என்று தொடங்கி 'நம', 'நமக' என்று முடியும் வகையில் ஒவ்வொரு போற்றியும் அமையும். இணையத்தேடலில் எண்ணற்ற கடவுளர் மேல் பாடப்பட்ட எண்ணற்ற போற்றிகள் கிடைக்கின்றன.
புதுவையில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர் சுந்தர சண்முகனார், அவர் எழுதிய 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்ற நூலின் 28ஆவது காதையான 'கடவுள் வழிபாட்டுக் காதை' பகுதியில் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர்கள் கொண்ட போற்றி ஒன்று எழுதியுள்ளார். புலவர் கம்பரின் மகன் அம்பிகாபதி தன்னுடைய மகள் அமராவதியைக் காதலிப்பது அறிந்து வெகுண்டு சூழ்ச்சியாக அவனை ஒழிக்கத் திட்டமிடுகிறான் சோழ மன்னன் குலோத்துங்கன். அம்பிகாபதி அகப்பாடல்கள் (காதல் பாடல்கள்) கலக்காமல் கடவுளை வாழ்த்தி கடவுள் மீது நூறு பாடல்களைப் பாடினால் அமராவதியைத் திருமணம் செய்து கொள்ளலாம், தவறினால் மரணதண்டனை என்று சொல்கிறான். அதற்கு அம்பிகாபதியும் உடன்படுகிறான்.

ஆனால் அரசன் செய்யும் சூழ்ச்சியால் அம்பிகாபதி அம்பிகையின் மீது பாடிய பாடல்களின் தொகுப்பில் ஒரு காதல் பாடலும் நுழைக்கப்படுகிறது. அம்பிகாபதி தோல்வியடைந்ததாகக் கூறி அவனைச் சிறையில் அடைத்துக் கொலை செய்யப்பட வேண்டிய நாளும் குறிக்கப்படுகிறது. மகனின் உயிருக்காகக் கம்பர் வைக்கும் கோரிக்கை மன்னனால் மறுக்கப்படுகிறது. மன்னன் மனம் மாற வேண்டும் அம்பிகாபதி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகக் கம்பர் ஒரு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து கடவுளிடம் வேண்டுவதாகக் கடவுள் வழிபாட்டுக் காதை பகுதியில் ஒரு காட்சியை அமைக்கிறார் சுந்தர சண்முகனார். இக்காதையில் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகள் மற்றும் குரவையாடல் (குரவைக்கூத்து) ஆகியன இடம் பெறுகின்றது.
இந்த நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகளில் எந்த ஒரு கடவுள் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவான கடவுளின் பண்புகளைப் போற்றி பாடும் வகையில் அமைத்துள்ளார். மேலும் அவை தமிழிலக்கியங்களான கம்பராமாயணம், திருக்குறள், திருவாய்மொழி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா நூல்களில் இடம்பெறும் புகழ் பெற்ற வரிகளை நினைவூட்டும் விதமாக அவற்றை எடுத்தாண்டுள்ளார் என்பதால் இப்பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. அவை கீழே ஒப்பிட்டுக் காட்டும் வகையில் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்மிகம் என்பதை வடமொழியுடன் இணைத்தே வாழ்வில் கடைப்பிடிக்கும் தமிழர்கள் இந்த நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகளைச் சிறப்பு என்று கருதினாலும் வழிப்பாட்டில் நடைமுறைப் படுத்த விரும்ப மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
— கம்பராமாயணம்
உலகம் யாவையும் உளவாக்கினோய் போற்றி
உலகம் யாவும் நிலைநிறுத்துவோய் போற்றி (13-14)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]
திருக்குறள் கடவுள் வாழ்த்து ஒன்று முதல் ஒன்பது குறட்பாக்கள்;
ஆதி பகவனாம் ஐயா போற்றி
வாலறி வுடைய வள்ளால் போற்றி
மலர்மிசை ஏகிய மாண்பினோய் போற்றி
வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
இருவினை சேரா இறைவா போற்றி
பொறிவாயில் ஐந்தவித்த புலவனே போற்றி
தனக்குவமை யில்லாத் தண்ணியோய் போற்றி
அறவாழி அந்தண அண்ணலே போற்றி
எண்குணம் இயைந்த ஏந்தலே போற்றி (15-23)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
— நம்மாழ்வார் திருவாய்மொழி 1
உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி (35-36)
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
— திருநாவுக்கரசர் தேவாரம்
5.090: ஐந்தாம்-திருமுறை
மாசில் வீணைநேர் மாண்பினோய் வணக்கம்
மாலை மதிய மானோய் வணக்கம்
வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்
வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
[அம்பிகாபதி காதல் காப்பியம், கடவுள் வழிபாட்டுக் காதை]
அடுத்துள்ள திருவாசகம் திருவருட்பா பாடல்களின் கருத்துகள் தொடர்ச்சியாக இல்லாது கடவுள் வழிபாட்டுக் காதையில் ஆங்காங்கே விரவிக் காணப்படுகிறது;
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
— மாணிக்கவாசகர், திருவாசகம்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே.
— இராமலிங்க அடிகள், திருவருட்பா (4091)
______________________________
அம்பிகாபதி காதல் காப்பியம்; 28. கடவுள் வழிபாட்டுக் காதை , அடிகள் 13-120 இல் இடம்பெறும் நூற்றெட்டுக் கடவுள் திருப்பெயர் போற்றிகள்
— பேராசிரியர் சுந்தர சண்முகனார்
உலகம் யாவையும் உளவாக்கினோய் போற்றி (13)
உலகம் யாவும் நிலைநிறுத்துவோய் போற்றி
ஆதி பகவனாம் ஐயா போற்றி
வாலறி வுடைய வள்ளால் போற்றி
மலர்மிசை ஏகிய மாண்பினோய் போற்றி
வேண்டுதல் வேண்டாமை யிலாதோய் போற்றி
இருவினை சேரா இறைவா போற்றி
பொறிவாயில் ஐந்தவித்த புலவனே போற்றி
தனக்குவமை யில்லாத் தண்ணியோய் போற்றி
அறவாழி அந்தண அண்ணலே போற்றி
எண்குணம் இயைந்த ஏந்தலே போற்றி
எங்கும் மிளிர்ந்தே இருப்போய் போற்றி
எல்லாம் செய்ய வல்லோய் போற்றி
யாதும் அறிந்த எந்தாய் போற்றி
தன்வயம் உடைய தகையோய் போற்றி
தூய்மை நிறைந்த தொல்லோய் போற்றி
இயற்கை உணர்வுடை எம்பிரான் போற்றி
முற்றும் உணர்ந்த முதல்வா போற்றி
இயல்பாய்க் கட்டுகள் இரிந்தோய் போற்றி
பேரரு ளுடைய பெரியோய் போற்றி
முடிவில் ஆற்றல் உடையோய் போற்றி
வரம்பில் இன்பம் வாய்த்தோய் போற்றி
உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி
பிறப்பினை அறுத்திடும் பெரியோய் போற்றி
ஆராத இன்பம் அருள்வோய் போற்றி
எண்ணிறந் தெல்லை யிலாதோய் போற்றி
இல்லா இடமே இல்லோய் போற்றி
தாயிற் சிறந்த தன்மையோய் வணக்கம்
மாசற்ற ஒளியாய் மலர்ந்தோய் வணக்கம்
அன்பருக் கன்பனாய் அருளுவோய் வணக்கம்
நோக்கரிய நுண்ணிய பொருளே வணக்கம்
போக்கும் வரவும் இலாதோய் வணக்கம்
அன்னையிற் சிறந்த அமிழ்தமே வணக்கம்
அனைத்து நுகர்வாயும் அமைந்தோய் வணக்கம்
பல்லுயி ரெல்லாம் பயின்றோய் வணக்கம்
வல்லிருள் ஓட்ட வல்லோய் வணக்கம்
அன்பு வலையில் அகப்படுவோய் வணக்கம்
சொற்பதங் கடந்த தொல்லோய் வணக்கம்
அணுவினுள் அணுவாய் அமைந்தோய் வணக்கம்
இயம்பரும் பெருமை இயைந்தோய் வணக்கம்
அரியதில் அரிய அருமையோய் வணக்கம்
மருவியெப் பொருளும் வளர்ப்போய் வணக்கம்
நூலுணர் வுணரா நுண்ணியோய் வணக்கம்
மேலொடு கீழாய் விரிந்தோய் வணக்கம்
தோற்றமும் முடிவும் இல்லோய் வணக்கம்
அச்சந் தவிர்க்கும் அருளோய் வணக்கம்
தொல்லைத் துன்பம் துடைப்போய் வணக்கம்
எய்ப்பினில் வைப்பாய் இருப்போய் வணக்கம்
பூவில் மணம்போல் பொலிவோய் வணக்கம்
விறகில் தீபோல் விளங்குவோய் வணக்கம்
பாலில் நெய்போல் படுவோய் வணக்கம்
ஒப்பிலா மணிபோல் உயர்ந்தோய் வணக்கம்
மணியில் ஒளியாய் மன்னியோய் வணக்கம்
மாசில் வீணைநேர் மாண்பினோய் வணக்கம்
மாலை மதிய மானோய் வணக்கம்
வீசு தென்றலாய் விளங்குவோய் வணக்கம்
வீங்கிள வேனிலாய் விளைந்தோய் வணக்கம்
வண்டறை பொய்கையாய் வயங்குவோய் வணக்கம்
அம்மை யப்பனாய் அமைந்தோய் போற்றி
அன்பில் விளைந்த அமிழ்தே போற்றி
என்பெலாம் உருக்கும் இன்பமே போற்றி
வானாகி நின்ற வலிமையோய் போற்றி
காலா யிருக்குங் கடவுளே போற்றி
நெருப்பா யுள்ள நெடியோய் போற்றி
நீரா யெங்கும் நிறைந்தோய் போற்றி
மண்ணா யமைந்த மன்னா போற்றி
ஊனாய் உயிராய் உற்றோய் போற்றி
விரிமலர்க் காவாய் விளங்குவோய் போற்றி
பயன்மர மாகிப் பழுத்தோய் போற்றி
மருந்தாம் மரமாய் மன்னினோய் போற்றி
உதவிடும் ஊருணி போன்றோய் போற்றி
கோடையைத் தணிக்கும் குளிர்மரமே போற்றி
வெய்யிலில் நிழலாய் விளங்குவோய் போற்றி
உயிருக் குயிராய் உற்றுளோய் போற்றி
உள்ளத் துள்ளே ஒளித்துளோய் போற்றி
முத்தொழில் புரியும் முதல்வா போற்றி
குறிஞ்சி மலையாய்க் குலவுவோய் வணக்கம்
முல்லைக் காடாய் முகிழ்த்தோய் வணக்கம்
மருத நாடாய் மன்னியோய் வணக்கம்
நெய்தல் நிலமாய் நிலவுவோய் வணக்கம்
கருமுகில் மழையாங் கடவுளே வணக்கம்
பரவையாங் கடலாய்ப் பரந்தோய் வணக்கம்
உருவாய் அருவாய் உற்றோய் வணக்கம்
பெறலரும் பெரும்பெயர் பெற்றோய் வணக்கம்
மணந்தரு மலராய் மலர்ந்தோய் வணக்கம்
இனிக்குங் கனியாய் இலங்குவோய் வணக்கம்
பருகும் நீராய்ப் பயப்போய் வணக்கம்
உண்ணும் உணவாய் உற்றோய் வணக்கம்
வறுமை போக்கும் வளமே வணக்கம்
வினையினை விலக்கும் விறலோய் வணக்கம்
பகையினைத் தவிர்க்கும் பண்பினோய் வணக்கம்
அனைத்து நன்மையும் ஆனோய் வணக்கம்
ஒழுங்கிலா தோரை ஒறுப்போய் வணக்கம்
அரும்பெரு மொழிகளாய் அமைந்தோய் வணக்கம்
நயந்தரு நூல்களாய் நயப்போய் வணக்கம்
பயன் தரும் பாக்களாய்ப் பயப்போய் வணக்கம்
ஏழிசை தாமாய் இலங்குவோய் வணக்கம்
இசையின் பயனாய் இயைந்தோய் வணக்கம்
ஒளிதரு ஞாயிறாய் ஒளிர்வோய் போற்றி
ஞாயிற் றொளியாய் நண்ணியோய் போற்றி
நிலவின் ஒளியாய் நிகழ்வோய் போற்றி
விண்மீன் தாமாய் விளங்குவோய் போற்றி
அளவில் கோள்களாய் ஆனோய் போற்றி
இயற்கைப் பொருளாய் இருப்போய் போற்றி
செயற்கை கடந்த செல்வா போற்றி
காலங் கடந்த கடவுளே போற்றி
புலவரைப் புரக்கும் புலவனே போற்றி (120)
----------
நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
(மே 2026, பக்கம் 9-16)
https://archive.org/details/sakthi-2026-may/page/9/mode/2up
#சக்தி, #இலக்கியம், #அமரகாதல், #Themozhi