Thursday, October 31, 2013

பண்டிகை தந்ததொரு பாடம்

 பண்டிகை தந்ததொரு பாடம்





சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும்
சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும்
நாம் வாழும் வாழ்க்கைதான் நிர்ணயிக்கும்
நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை

நல்லவர் மாண்டால் துக்கம் சூழ்வதும்
தீயவர் மாண்டால் துயரம் நீங்குவதும்
எடுத்துரைக்கும் செய்தி அறியாதவரா நாம்
அறிவுறுத்தும் பாடம் புரியாதவரா நாம்

காந்தியாக ஏசுவாக வாழ்ந்ததற்காக
என்றும் போற்றப்படுவதும் நம் கையில்
நரகாசுரனாக மகிஷாசுரனாக வீழ்ந்ததற்காக
என்றும் விழாவாகிப் போவதும் நம் கையில்

பிறர் போற்றும் வாழ்வாக இல்லாவிடினும்
பலர் தூற்றும் மறைவாக இல்லாதிருக்கட்டும்
திருந்தி நாம் வாழ்ந்திடப் பெற்றிடும் அறிவுரையிது
தீபாவளிப் பண்டிகை தரும் நல்லதோர் பாடமிது



குறிப்பு:
தன்னிலை விளக்கம் - தீபாவளி சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் அடைந்த வீடுபேற்றை (மறைவு) நினைவு கூரும் நாள் என்ற வரலாற்று உண்மையை அறிந்திராத காலத்தில் எழுதிய கவிதை 


நன்றி வல்லமை - சிறப்பிதழ்
அக்டோபர்  31, 2013


#கவிதை, #வல்லமை, #Themozhi 


Tuesday, October 29, 2013

அனிச்சமலர்கள்

 

அனிச்சமலர்கள்
ஆசிரியர் : தேமொழி
வகை: சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு ஆண்டு : அக்டோபர் 2013
பதிப்பு :    முதற் பதிப்பு
பதிப்பகம் :கௌதம் பதிப்பகம்
பக்கங்கள் :192
விலை :80.00
ISBN :    978-93-81134-49-8

மின்னூலாக இணையத்தில் . . . 



                 உள்ளடக்கம் . . . 

     1. சிலை அழுதது
     2. பழங்கணக்கு
     3. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
     4. யாருக்காக அழுதாள்?
     5. நீ என்றுமே என் மகன்தான்
     6. சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
     7. அம்மனோ சாமியோ !!!
     8. காசியில் பிடிச்சத விடணும்!
     9. எழுதிச் செல்லும் விதியின் கைகள்
     10. தீதும் நன்றும் பிறர் தர வாரா
     11. சற்றே இளைப்பாற
     12. தெய்வமே கலங்கி நின்ற நேரம்
     13. உண்மைக்காதல்
     14. மை லிட்டில் ரெட் வேகன்
     15. ஜினா என்றொரு க்ருயெல்லா
     16. வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
     17. அனிச்ச மலர்கள்


என்ற சிறுகதைகள் தொகுப்பு, என் முதல் நூல், கௌதம் பதிப்பகம் வெளியீடாக வெளிவருகிறது. பல்துறை நாயகியும், வீணை இசைக்கலைஞரும்,  எழுத்தாளருமான திருமதி கீதா பென்னெட் அவர்கள் அன்புடன் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.  








#நூல், #அனிச்சமலர்கள், #சிறுகதைகள், #Themozhi,



Friday, October 25, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17



ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு

 
காத்திருப்பில் கலங்காதே …

கொல்லிமலை காட்டுக்குள்ள
மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
மூணு நாளா தவிச்சிருக்கு -என்
முகம் காண துடிச்சிருக்கு.

பச்சரிசி சோறோடு
கருவாட்டுக் குழம்பாக்கி
தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
ஒத்தையிலே காத்திருக்கு.

கொஞ்சிப்பேச வாரேனடி
கொஞ்சம் பொறு மயிலே!
கூட்டிக் கொண்டு வாரேன்
குளிர்காயும் நிலவை!
  

 
  
நன்றி: வல்லமை - அக்டோபர் 25, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



Sunday, October 20, 2013

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்

"காமன்சென்ஸ்" இல்லாத "காமன்வெல்த்" நாடுகள்


சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல.  தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1].  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல நோக்கு அமைப்புகளும் வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி  அக்டோபர் 1, 2013 முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மக்கள் உணர்வை மதித்து நல்லதொரு முடிவெடுப்பேன் என்ற இந்தியப் பிரதமரின் உறுதிமொழியின் பேரில் அவரது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது [2]. 

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான கனடாவின்  பிரதமர்  ஸ்டீஃபன் ஹார்பர் புறக்கணித்துவிட்டார் [3].  இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் [4].  உலக அளவில் இலங்கையில் காமன்வெல்த்  மாநாடு நடத்த எதிர்ப்புகள் கிளம்பினாலும் உறுதியான முடிவு எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth National) என்ற அமைப்பு தேவையா? அதனால் யாருக்கு என்ன பயன் என்பதை ஆராய்வது பலனளிக்கும்.  காமன்வெல்த் நாடுகள் என்பவை சென்ற நூற்றாண்டு வரை இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த 54 நாடுகள்.  தற்பொழுது இவையாவும் சுதந்திர நாடுகள்.  முன்னாள் இங்கிலாந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த  இந்த நாடுகள் யாவும் இணைந்து, இங்கிலாந்து நாட்டுடனும்;  அதன் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த தங்கள் நாடுகளுக்கு  இடையேயான நல்லுறவுக்காகவும்  தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு காமன்வெல்த் நாடுகள் என்ற அமைப்பு.  ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளின் பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்தத் தோற்றுவிக்கப்பட்டதே  இந்த அமைப்பு என்று இந்த அமைப்பு தோன்றியதற்குக்  காரணம், நோக்கம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.  அத்துடன் அமைப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைவதே அமைப்பின்  கொள்கைகளும், செயல்பாடுகளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல.  இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் [5] [6].


உறுப்பினர் பதவி கட்டாயம் இல்லை என்பது மிக மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.   இதையும் தெரிந்துகொண்டே உறுப்பினராக இருக்க விழைவது இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அடிமை மனப்பான்மையையே காட்டுகிறது.  ஒருகாலத்தில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா இந்த அமைப்பில் பங்கெடுக்க விண்ணப்பிக்கவும் இல்லை, உறுப்பினராகவும் இல்லை. இது அமெரிக்காவின் சுயமதிப்பின் நிலையை, சுதந்திர மனப்பான்மையைப் பறைசாற்றுகிறது.  வரலாற்று உண்மையாக இருந்தாலும் தங்கள் நாடு அடுத்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு என்ற அவமானகரமான காலநிலையை அமெரிக்கா மறக்கவிரும்பும் செயலாகவே இதைக் கருதலாம்.  அமெரிக்கா எடுத்த இந்த நிலைப்பாட்டின் காரணமாக அமெரிக்காவின் சுயகௌரவத்தைப் பாராட்டவே தோன்றுகிறது.

அமெரிக்காவைப் போன்றே எகிப்து, ஜோர்டான், ஈராக், பாலஸ்தீனம், சூடான், சோமாலியா, குவைத், பஹ்ரெய்ன், ஓமன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் யாவும்  தங்களுக்கு இங்கிலாந்துடன் வரலாற்றுத் தொடர்பு இருந்தும் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை [5]. 

அக்டோபர் 3, 2013 அன்று காம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பிலிருந்து வெளியேறி உள்ளது [7]. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே  (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என அறிவித்துள்ளார் [8]. இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச் சிறிய நாடு  இந்தக் காம்பியா.

இதனால் இந்த அமைப்பில் பெருமையுடன் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு, "காமன்சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகளே, தெளிவு பெறுங்கள், நாமார்க்கும் குடியல்லோம்," என்று உணர்த்த வேண்டும் என்பது தெரிகிறது. இந்நாடுகளுக்கு அடிமை நாடாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை  என்பது  விளங்கவில்லை.  இதுவரை காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு உருப்படியாக என்ன சாதித்தது என்பதும் கேள்விக்குரியதே.

உலக அமைதிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் தமிழர்களுக்குச் சரியான உதவி செய்யாமல் இருக்கும் நிலையில்,  காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் 'ஹாரேர் பொதுநலப் பிரகடனம்' (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்கு [9] புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டன.  அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது.  தற்பொழுது ஃபிஜி நாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது [5].  இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும் [10], இங்கிலாந்தும் [11] இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின.  ஆனால் இந்தியாவில் இருந்து எந்த எதிர்ப்பும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறுவது போல பட்ட காயத்தினைப் பெரிதுபடுத்தி நோகச் செய்யும் செயலாக இருக்கிறது மனித உரிமைகளை மீறிய, காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும்  இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடக்கப்போகும் இம்மாடு இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இல்லவே இல்லை என்பதைச்  சிறு குழந்தை கூடச் சொல்லிவிடும்.  காமன்வெல்த் நாடுகளின் இந்த மாநாடு [12] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம்.  வரும் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடக்கப்போகும் மாநாட்டின் விளைவுகள்  இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும்.  சென்ற முறை 2011 ஆம் ஆண்டு நடந்த இம்மாநாடு ஆஸ்திரேலியாவில் கூட்டப்பட்டதால்  அந்த நாட்டின் பிரதமர் 'ஜூலியா கில்லர்ட்' (Julia Gillard) 'காமன்வெல்த் சேர் பெர்சன் இன் ஆஃபிஸ்' (Commonwealth Chairperson-in-Office) என்ற தலைவர்  பதவியைப் பெற்றார்.  ஆஸ்திரேலியப் பிரதமரின் இப்பதவிக்காலம் வரும் மாநாட்டுடன் முடிவடைந்து அடுத்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இப்பதவியைப் பெறுவார்; தொடர்ந்து அடுத்த மாநாடு நடக்கும் 2015 ஆம் ஆண்டு வரை இப்பதவியையும் வகிப்பார் [5].  இந்த பதவியளிப்பு நடவடிக்கை இலங்கையின் மனிதநேய மீறல்களை ஆதரிப்பதாகவே அமைகிறது. நடக்கப்போகும்  இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பது என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்கும் பொழுது (அதாவது உறுப்பினராக இருக்க எந்த ஒரு கட்டாயமும் இல்லாத பொழுது); காமன்வெல்த் நாடுகள்  அமைப்பு ஏற்பட்ட நோக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும்  முரணாக இலங்கையில் நிலைமை மாறும்பொழுது; முதன் முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து வெளிவந்திருக்க வேண்டிய இந்திய அரசு ஏன் இன்னமும் உறுப்பினராக ஒட்டிக் கொண்டிருக்கிறது?  பங்களாதேஷை 1972 ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு  ஒரு தனி நாடாக அங்கீகரித்த பொழுது, தனது கண்டனத்தைக் காட்ட பாகிஸ்தான் கூட உறுப்பினர் பதவியை ஒருமுறை  நீக்கிக் கொண்டு தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது [5].  காமன்வெல்த் நாடுகள்  அமைப்பில் அதிக மக்கள்தொகை உள்ள நாடான இந்தியா இது போன்று அமைப்பை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் அது இலங்கை அரசின் மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு நல்லதொரு கண்டனமாக அமைந்திருக்கும்.

குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டிக்காத பொழுது அவர்கள் குற்றத்தை ஊக்குவிப்பவர்களாக ஆகிறார்கள், அத்துடன் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாகவும்  ஆகிறார்கள் என்பது பொது மொழி.  இந்திய அரசுக்குத்  தான் இன்னமும் இங்கிலாந்து நாட்டின் அடிமை நாடு என்ற எண்ணம் மாறவில்லை என்பதையே காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இந்தியாவின் இச்செயல் தெளிவு படுத்துகிறது.  இந்தியா ஒரு  சுதந்திர நாடாக இருக்கும் பொழுது, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு சரிவரத் தன் கடமையை ஆற்றாத பொழுது அந்த அமைப்பிலிருந்து வெளியேற இந்தியாவிற்கு என்ன தயக்கம்? ஏன் துணிச்சல் இல்லை?

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என்று பெருமை பேசி அதன் வழி நடக்க ஆசைகொள்ளும் இந்தியர்கள் இந்த நிலைமையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னுதாரணமாகக் கொள்வது நல்லது. காமன்வெல்த் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர் பதவியை மறுக்கும் இந்தியாவின் நடவடிக்கை மனித உரிமைகளை ஆதரிக்க முன்வரும் செயலாக அமையும், பாராட்டவும் படும்.  இந்தியா ஒரு நல்ல வழிகாட்டியாக அமையுமா?



சான்றாதாரங்கள்:
1. காமன்வெல்த் மாநாடு: பிரதமருக்கு ஜெ., கடிதம், அக்டோபர் 17, 2013, http://www.dinamalar.com/news_detail.asp?id=828940

2. தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்,  அக்டோபர் 15, 2013, http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131015_thiyaguwid.shtml

3. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பில்லை: கனடா பிரதமர் முடிவு, அக்டோபர் 7, 2013, http://tinyurl.com/kk7orao

4. இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது : இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தல்,  அக்டோபர் 18, 2013, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65720

5. Commonwealth of Nations - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations

6. Commonwealth of Nations membership criteria  - https://en.wikipedia.org/wiki/Commonwealth_of_Nations_membership_criteria

7. Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on The Gambia - http://thecommonwealth.org/media/news/statement-commonwealth-secretary-general-kamalesh-sharma-gambia

8. Q & A: Gambia and the Commonwealth,  David Blair1, 03 Oct 2013, Telegraph, http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/gambia/10352888/Q-and-A-Gambia-and-the-Commonwealth.html

9. Harare Declaration - https://en.wikipedia.org/wiki/Harare_Declaration

10. Mike Blanchfield (14 January 2013). "Harper rebukes Sri Lanka over jurist's dismissal as talk of summit boycott heats up". The Globe and Mail.  - http://www.theglobeandmail.com/news/politics/harper-rebukes-sri-lanka-over-jurists-dismissal-as-talk-of-summit-boycott-heats-up/article7341673/

11. David Miliband (11 March 2013). "Britain must stand up for human rights in Sri Lanka". M.guardian.co.uk. - http://www.theguardian.com/commentisfree/2013/mar/11/britain-human-rights-sri-lanka?view=mobile

12. Commonwealth Heads of Government Meeting 2013 - http://thecommonwealth.org/


Picture Courtesy:
Wikipedia: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/51/Commonwealth_of_Nations.svg
The Commonwealth - http://thecommonwealth.org/sites/default/files/styles/large/public/images/event/chogm-flags.jpg?itok=gXMAF4HF




நன்றி:
திண்ணை
அக்டோபர் 20, 2013 


#திண்ணை, # வரலாறு, #Themozhi  



Monday, October 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16





கலைமகள் வாழ்த்து
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்
 -- பாரதி 

 
 
படத்தைப் பற்றிய குறிப்பு:
1987 இல் வரைந்த கோட்டோவியம் இது.  மாசு படிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

 

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 14, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 

Friday, October 11, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15



கௌதம புத்தர்

[மின் பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கௌதம புத்தர் ஓவியம்.]


  
நன்றி: வல்லமை - அக்டோபர் 11, 2013 

#ஓவியம், #வல்லமை,  Themozhi 


 

Monday, October 7, 2013

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்


சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license)  பெற்றார்.  பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's license) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும்  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகத்  தடைப்பட்டது.  விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார். 

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் (Wright Brothers) நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 (at Kitty Hawk, North Carolina on December 17, 1903) அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.  உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமானச் சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின.  ‘வான்பயணத்தின் பொற்காலம்’ (Aviation's Golden Age 1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப்போரின் துவக்கம் உரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமானச் சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர்.  அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர்.  அமெரிக்காவின் ‘ஹரியெட் குயிம்பி’ (Harriet  Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார்.  இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார்.  தற்காலத்தின் "ஏர் இந்தியா" விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக  ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானச்சேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த  காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.

வாழ்க்கைக் குறிப்பு:
சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பவரைத் தனது 16 வயதில் மணந்த சரளா பொது ஆண்டு 1914 இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி'  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot's license) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விடக்  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிட்டாததைக் கண்ட அவர் தானே தனது மருமகளை "லாகூர் ஃப்ளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:
பயிற்சியாளர் தஸ்த்தூர் சரளாவிற்கு  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரை காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு 'ஜிப்சி மாத்' (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.

இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஓர் ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப்  பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.  

இவர் கணவர் பி.டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது 24 வயதில் தனது ஒன்று மற்றும் ஆறு வயது மகள்களுடன்  சரளா தனித்து விடப்பட்டார்.  தொடர்ந்து தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் (Jodhpur) சென்றார்.  அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைப்பட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று 'மேயோ கலைக் கல்லூரி'யில் (Mayo School of Art) ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் (trained in the Bengal school of painting) நுண்கலையில் பட்டயப் படிப்பை (diploma in fine arts) முடித்தார். 

சுதந்திர இந்தியாவில் சரளாவின் வாழ்க்கை:
நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகாமையில் வரும் பொழுது பாகிஸ்தானில் கலவரங்கள் அதிகரித்தது.  பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச்  சென்றுவிடும்படி  ஆலோசனை வழங்கப்பட்டது.  அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத்தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் துவக்கினார்.  மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி துவக்கிய ஆரிய சமாஜத்தின் வழிநடந்த இவர், அந்த சமாஜத்தின் இந்துமதச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தனது பெற்றோர் தந்த ஆதரவினால் மீண்டும் பி.பி. தாக்ரல் (P. P. Thakral) என்பவரை 1948 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டார்.  தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா  1948  ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார்.  அப்பொழுது செய்தித்தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத்திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக (job in Rajasthan as a personal pilot to the royalty of Alwar) ஆறு மாதங்கள் அப்பணியை மேற்கொண்டார்.


மார்ச் 15, 2009 இல் உயிர்நீத்த சரளா தன்னுடைய வாழ்நாட்களின் பிற்பகுதியில்  ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார்.  அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன.  அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் (Vijaylaxmi Pandit) குறிப்பிடத் தகுந்த ஒருவர்




ஆதாரங்கள்:
First Licensed Women Pilots, 1936 - India - Sarla Thakral
http://centennialofwomenpilots.com/node/25

Women's Day: Top 100 coolest women of all time, Sarla Thakral: The first Indian woman to fly a plane, back in 1936.
http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72

Flying colours & ground reality, Smriti Kak Ramachandran, February 5, 2006, The Tribune
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm

Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231

Remember Sarla Thakral's maiden flight of fancy, Nov 25, 2009, DNA INDIA
http://www.dnaindia.com/speakup/1316073/report-remember-sarla-thakrals-maiden-flight-of-fancy

Sarla Sharma: Being a Woman and a Pilot in Lahore in 1936, Anurag Sharma
http://www.smartindian.com/Sarla-Sharma-Thakral-Pilot.html

Sarla Thakral - https://en.wikipedia.org/wiki/Sarla_Thakral

India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/

Rahul Ittal's statement on India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/#comment-371

இந்தியாவின் முதல் பெண் விமானி, டிசம்பர் 15, 2009, விடுதலை
http://viduthalai.periyar.org.in/20091215/news21.html


காணொளி:
Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231


படங்கள் உதவி:
Sarla Thakral, First Woman Pilot of India - Late 1930's   - http://www.oldindianphotos.in/2012/07/sarla-thakral-first-woman-pilot-of.html   &
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm


நன்றி:
திண்ணை
அக்டோபர் 7, 2013 

#திண்ணை, #பெண்ணியம்,  #Themozhi  




Friday, October 4, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14



மணமகள்

  
நன்றி: வல்லமை - அக்டோபர் 4, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi