Saturday, April 26, 2014

சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்

சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்

சோழர் காலத்தில் சித்திரைத் திருவிழாக்கள் எவ்வாறு கொண்டாடப்பட்டன என்பதனை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமக்கு அறியத் தருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரசாட்சி செய்த உத்தமசோழரின் (கி.பி. 970-985) செப்பேடுகளும்[1] முதலாம் குலோத்துங்கரின் (கி.பி. 1070-1120) கல்வெட்டுகளும்[2] சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதையும், அதற்கான செலவினங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன.

கல்வெட்டுகள் வழங்கும் தகவல்களின்படி, சித்திரைத் திருவிழா, சித்திரை மாதத்தின் சித்திரைத் திருநாளுக்கு (சித்திரை நட்சத்திரம் வரும் நாள்) ஏழு நாட்களுக்கு முன்னரும், சித்திரைத் திருநாளுக்குப் பிறகு ஏழு நாட்களும் என ஆக மொத்தம் 15 நாட்கள் விழா நடத்தப்பட்டிருக்கிறது. இச்சித்திரைத் திருவிழாக்கள் சிவன், திருமால் கோயில்களில் நடை பெற்றிருப்பதும், விழாச் செலவுகளுக்காகத் தானமாகப் பொதுமக்கள் அளித்த செல்வங்கள், இறையிலி (அரசாங்க வரியற்ற) நிலங்கள், பொன் கழஞ்சுகள் ஆகியவை ஒழுங்காகக் கணக்கிடப்பட்டு சாட்சிக் கையெழுத்துகளுடன் வருமானமாக வரவு வைக்கப்பட்டதையும் குறிக்கிறது. மேலும் பொன் கழஞ்சுகள் நெல்லாக மாற்றப்பட்டு, அவை முதலீடாகப் பாவித்துக் கடனாக வழங்கப்பட்டதும், அக்கடனுக்கு வட்டியாக நெல் பெற்று, அந்த நெல் செலவுக்குப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகக் கோயில்கள் என்றாலே இயல், இசை, கூத்து இன்றி வழிபாடுகள் அமைவதில்லை. திருவிழாக்களும் அவ்வாறே. இசையும் கூத்தும் திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள். அன்னதானங்களும் திருவிழாக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி. இவற்றைத் தவிரப் பூசைக்குத் தேவையான மலர், சந்தனம் போன்றவற்றிற்குச் செலவிட்ட தகவல்களும் நமக்குக் கல்வெட்டுகள் வழியும் செப்பேடுகள் வழியும் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கோயிலுக்கான இசைக்கருவிகள் வாசிக்கும் ‘உவச்சர்கள்’ என்னும் இசைக் கலைஞர்கள் இருந்தபோதும் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் உள்ள உத்தமசோழரின் செப்பேடுகள், கச்சிப்பேடு(கச்சிப்பேட்டை) நகரின் ஊரகப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்த பொழுது ஏற்பட்ட வரவு செலவுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செலவினம் எண்ணெய், நறுமணம் கொண்ட மலர்கள், மணம் ஊட்டப் பெற்ற சந்தனம், கொட்டி செய்யும் தேவர் அடியார்க்குக் கொற்றுக்கும் பூசைக்கும், பிராமணர் உணவுக்கு, இறைவனுடைய பள்ளியறைச் சிவிகையைச் சுமப்பார்க்கு, விழாவுக்கென்று சிறப்பாக அழைக்கப் பெற்ற இசைக் கலைஞர்களுக்கு, கண்டழிவு செலவுகள் (பல்வேறு வகைச் செலவுகள்/miscellaneous) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கம்புழான்பாடியார், அதிமானப்பாடியார், கஞ்சகப்பாடியார், எற்றுவழிச்சேரியார் என்ற ஊர் மக்கள் நால்வர் வழங்கிய பொற்கழஞ்சுகள் 200 க்கான வட்டித் தொகையான முப்பது பொன்கழஞ்சு விழாச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டதும், விழாவிற்கான செலவு செய்த பின்னர் கணக்கு வரவுக்கும் செலவுக்கும் சரியாக நேர் செய்யப்பட்டுள்ளதைச் செப்பேட்டு ஆவணம் அறியத் தருகிறது.

கோயில்கள் கடைப்பிடிக்கும் வழிபாட்டு முறைகள் 16 பிரிவுகளைக் கொண்டது, இதனை ‘ஷோடசோபசாரம்’ என்றழைப்பர். இப்பதினாறு பிரிவுகளில் வாத்திய இசை பதினைந்தாகவும், நாட்டியம் பதினாறாவதாகவும் அமைகிறது. இவையிரண்டும் திருவிழாக் காலத்து வழிபாட்டிலும் இடம் பெறுகின்றன. தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கூத்துகள் பொதுவாக ‘சாந்திக்கூத்து’, ‘விநோதக்கூத்து’ என இருவகைகளாகப் பகுக்கப்பட்டது தெரிகிறது. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் மேலும் சில உட்பிரிவு வகைகளும் உண்டு. சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நால்வகையாகப்பட்டது சாந்திக்கூத்து எனவும்; குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என விநோதக்கூத்து ஆறு வகைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் மேலாகச் சாக்கைக் கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற கூத்துக்களும் சோழர் காலத்தில் கோயில் விழாக்களில் இடம்பெற்றன.

கும்பகோணம் அருகில், மானம்பாடி எனும் சிறு கிராமத்தில் உள்ள ‘நாகநாத சுவாமி கோயில்’ என்ற பெயரில் அழைக்கப்படும் சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு, இக்கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில் தமிழ்க்கூத்து நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. முதலாம் இராஜேந்திர சோழர் காலத்தில் கையிலாயநாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (Annual Report of Epigraphy 1931-32). நகரத்தார் என அழைக்கப்படும் வணிகர்கள் குலம் இக்கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றிருந்ததையும் கல்வெட்டுகள் குறிக்கிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவில், இறைவன் ‘திருவோலக்கம்’ என அழைக்கப்படும் கோயில் திருமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது ‘விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆச்சாரியன்’ என்பவர் ‘தமிழ்க்கூத்து’ நடத்தினார் என்றும் இக்கூத்து இவ்விழாவில் 5 முறை நிகழ்த்தப்பெற்றதாகவும் கல்வெட்டு குறிக்கிறது. கோயில்களில் பலவகைக் கூத்துக்கள் நடைபெற்ற தகவல்கள் கிடைத்தாலும், தமிழ்க்கூத்து நடந்ததற்கான சான்றைத் தருவது முதலாம் குலோத்துங்க சோழரின் 18ம் ஆட்சியாண்டைக் குறிக்கும் இக்கல்வெட்டு (கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32, முதலாம் குலோத்துங்கசோழனின் 18ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகாலம்: கி.பி. 1088) மட்டுமே என்பது இக்கல்வெட்டின் தனிச் சிறப்புமாகும். கூத்தாடும் கூத்தருக்கு நிலம் (கூத்தாட்டு காணி) வழங்கப்படுவதும், அந்நிலம் மூலம் பயனுறும் கூத்து கட்டுபவர் கோயிலுக்காகக் கூத்து நடத்த வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். கூத்தாடுபவரின் சந்ததியினரும் தொடர்ந்து கூத்துக்கட்டி இறைச்சேவையைப் புரிவாரானால், அவர்களும் நிலத்தின் மூலம் பெறும் பயனைத் தொடர்ந்து அனுபவிக்க உரிமை கொடுக்கப்பெற்றார்கள்.

இக்கோயிலின் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண். 5 : ARE 93/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106), பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் (நகரத்தார்) குழுவினர், அரசாங்க வரி நீக்கப்பட்ட இறையிலி நிலத்தைத் தானமாக அளித்தனர் என்றும், அது சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் தொடங்கிய பின்னேழு நாட்களில் நடத்தப்பட்ட விழாவில் இறைவன் திருக்கயிலாயமுடையாருக்கு அமுது படைப்பதற்கான செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவ்வூருக்கு வடக்கில் உள்ள நம்பி நங்கை என்றழைக்கப்பட்ட குளத்திலிருந்து நாளொன்றுக்கு 2000 செங்கழுநீர்ப் பூக்கள் வீதம் ஏழு நாட்களுக்கு (இச்சேவை முன் ஏழு நாட்களா அல்லது பின்னேழு நாட்களா என அறியக்கூடவில்லை) 14000 பூக்கள் பறித்து, கருவறையில் உள்ள மூலவருக்கும், நகருலா நாயகரான உற்சவ மூர்த்திக்கும் மலர் அலங்காரத்திற்கு (கோயிலின் பூந்தோட்டப் பூக்களை மலர்மாலைகளாகவும் சரங்களாகவும் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தும் பணி அல்லது ‘திருப்பள்ளி தாமம்’ செய்வதற்கு) வீரநாராயணபுரத்து நகரத்தார் தானமளித்தனர் என்பதையும் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 6: ARE 95/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106) குறிப்பிடுகிறது.

மேலும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 7 : ARE 91 / 1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 38ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1108) சித்திரைத் திருவிழாவிற்கான அனைத்து நாட்களிலும் நடைபெறவுள்ள சிறப்புப் பூஜைகளுக்கும், இறைவன் திருவீதியுலா வரும் பொழுது பணி செய்யும் சிவனடியார்களுக்கும் இறைவனுக்கும் அமுது செய்விக்க நிலம் ஒன்று தானமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இத்தானத்தை வழங்கியவர்கள் அணுக்க நம்பி, வாடிமங்கலமுடையான் வெண்காடு தேவர் திருச்சிற்றம்பலமுடையான், வெண்காடு தேவன் பொன்னம்பலக்கூத்தன், நம்மன் பும்மாண்டான், வெண்காடு சோழன், மற்றும் காறாயில் கயிலாயம் என்னும் ஆறு பேர் அடங்கிய வியாபாரிகள் குழு ஒன்றாகும்.

இன்னமும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 8 : ARE 95 / 1931-32) சித்திரைத் திருவிழா செலவினங்களுக்காக வணிகர் நம்பன் சூரியதேவன் என்பவர் பொற்கழஞ்சுகளும் அளித்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது. அது போல நெல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலும் கல்வெட்டு வழி தெரிய வருகிறது. அதன்படி விழா வேலைகளில் பங்களித்த பணியாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்கு ஊதியமாக நெல் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

இவ்வாறாகச் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்காகப் பொன்னையும், பொருளையும், நிலங்களையும் தானமாகப் பெற்று வரவு வைத்தும், அவற்றை முதலீடாகாக் கொண்டு அவற்றிலிருந்து கிடைக்கும் வட்டியில் திருவிழாவின் பற்பல செலவினங்களுக்கும் அளிக்கப்பட்டதையும் சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப் பட்டதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வளநாட்டில் எவ்வாறு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்றும் அத்திருவிழாவின் நிகழ்ச்சிகளைப்பற்றியும், அதற்கான செலவினங்கள் மூலமாகவும் அக்காலச் சித்திரைத் திருவிழா பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

சான்றுகள்:
[1] சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் – 4, மு. நளினி, http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1047

[2] தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து – 1 & 2, தொடர்: சிதையும் சிங்காரக் கோயில்கள், பால.பத்மநாபன்,
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1193
&
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1204 


நன்றி:  சிறகு
ஏப்ரல் 26, 2014

#சிறகு, #வரலாறு, #கல்வெட்டு, #செப்பேடு, #தொல்லியல், #Themozhi 


Saturday, April 12, 2014

தவிராத சுங்கத் தவிர்த்தோன்

தவிராத சுங்கத் தவிர்த்தோன்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அரசவைகளில்  அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்து பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது. அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவில் இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார். இவ்வாறு பாடும் பொழுது ஒவ்வொரு மன்னனின் உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும் அவற்றின் 26 ஆவது கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.

விக்கிரம சோழனுலா:
… உடலை
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி … (26)

குலோத்துங்க சோழனுலா:
…எங்கோன்
புவிராசராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் … (26)

இராச ராச சோழனுலா:
… நாடும்
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் … (26)

முதலாம் குலோத்துங்கன் “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். “சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்ட குலோத்துங்க சோழ தேவன்” எனக் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1194 கல்வெட்டு ஒன்று “சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை” (288 – 1907) என்று சுட்டுகிறது. சோழநாட்டில் நிலவரிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).

நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து, சோழர்களின் ஆதிகாலத்து மனுநீதிச் சோழன் காலம் முதல் பண்டு தொட்டு வசூலிக்கப்பட்டு வந்த சுங்கவரியை நீக்கியவன் குலோத்துங்கன் என்கிறார் ஒட்டக்கூத்தர். அதனால் சுங்க வரி நீக்கியதன் சிறப்பும் தெளிவாக விளக்கப்படுகிறது.

இந்த முதலாம் குலோத்துங்கனே சாளுக்கியச் சோழர்களில் முதன்மையானவன். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுக்குத் தந்தை, இரண்டாம் குலோத்துங்கனுக்கு பாட்டன், இரண்டாம் இராசராச சோழனுக்கு கொள்ளுப்பாட்டன். இவர்கள் சோழ நாட்டை ஆண்ட காலங்கள் கீழ்க்காணுமாறு அமைகிறது.

குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163

ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப்புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும், பிறகு அவனது  மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.

இவ்வாறு முதற் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்ததற்குக் காரணம் என்ன? அவ்வாறு சுங்கம் தவிர்த்ததால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வாறு ஈடுகட்டப்பட்டது என்பது வரலாற்றுச் சான்றுகளான, இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சோழர் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களான இராசமாணிக்கனார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரும் இப்பிரச்சினை குறித்துத் தெளிவுபடுத்தவில்லை. ஆதலால், இது பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினைத் தங்கள் ஆய்வின்படி முன் வைத்து வருகிறார்கள். இங்கு அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்களைப் பார்ப்போம். ஆராய்ச்சி முடிவுகள் அரசன் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற காரணத்தையும் கருத்தில் கொள்வதால், இங்குக் குலோத்துங்கன் சோழ மன்னனான வரலாற்றையும் சுருக்கமாக விளக்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது.

குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சாளுக்கிய அரசின் ஆண் வழித்தோன்றல். இவனது தந்தை இராசஇராச நரேந்திரன் என்பான், முதலாம் இராசஇராச சோழனின் மகள் குந்தவைக்கும், வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த மகன். இராசஇராச நரேந்திரன் தனது மாமன் முதலாம் இராசேந்திரனின் மகளான அம்மங்காதேவியை மணந்து கொண்டான். சோழ குலத்தோன்றல் அம்மங்கா தேவிக்கும், சாளுக்கிய இராசஇராச நரேந்திரந்திரனுக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். குலோத்துங்கன் என்ற பெயர் அவனது அரசாட்சிக்காகச் சூட்டப்பட்ட பெயர். பிறந்த பொழுது தாய்வழிப் பாட்டன் பெயரான இராசேந்திரன் என்னும் பெயரும், தந்தைவழி சாளுக்கிய அரச பெயராக விஷ்ணுவர்த்தன் என்ற பெயரும் பெற்றிருந்தான். இவனும் தனது தந்தையைப் போலவே, சோழகுலத் தோன்றலான தனது மாமன் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகியை மணந்து கொண்டான்.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு அவனுடைய மகன்கள் மூவர் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்தனர். அவ்வரிசையில் இறுதியாக வீர இராசேந்திரன் சோழன் அரசனானான். தந்தை வீர இராசேந்திர சோழன் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய அதிராசேந்திர சோழன் ஆட்சிக் காலம் மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் மரணமடைந்தான். இவ்வாறு குறுகிய காலத்தில் அவன் மரணம் அடைய நேர்ந்ததன் காரணமாக இந்த மரணத்தில் சதி ஏதும் இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு அக்காலத்திலும், இக்கால ஆராய்ச்சியாளர்களிடமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

அதிராசேந்திர சோழன் இறப்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும், அதிராசேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. குலோத்துங்கனின் எதிரியான மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் அவைப்புலவர் ‘பில்கனர்’ என்பார் குலோத்துங்கன் அதிராசேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியைப் பிடித்தான் என்று கூறுகிறார். மற்றொரு கருத்தின்படி அக்காலத்தில் இருந்த சைவ வைணவக் கலவரம் தீவிரமடைந்ததால், அக்கலகத்திற்கும் அதிராசேந்திர சோழன் உயிரிழப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்கக்கூடும் என்ற ஐயமும் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வருகிறது. அத்துடன் அக்காலகட்டத்தில் துவங்கிய வலங்கை, இடங்கை படைத்தளங்களுக்குள்ளான சச்சரவுகளும் மன்னனின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயமும் சிலவரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.

காரணம் எவ்வாறாயிருப்பினும், முதலாம் இராசேந்திர சோழனின் அரசுரிமை கொண்ட மகன்களும், அவனது மகன் வழிப் பேரன்களும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட, சோழ அரசுரிமை இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான முதலாம் குலோத்துங்கனிடம் சென்று சேர்ந்தது. அதன் பிறகு சாளுக்கிய வழி வந்த சோழனின் குலம் தொடர்ந்து ‘சாளுக்கியச் சோழர்கள்’ என்ற பெயருடன் சோழ நாட்டினை ஆண்டார்கள்.

இவ்வாறாகச் சோழ அரசுரிமையை மரபுக்கு முரணாக, தந்தை வழியில் வேங்கி நாட்டின் சாளுக்கிய மரபினையும், தாய் வழியில் சோழ மரபினையும் கொண்ட குலோத்துங்கன் பெற்றதற்கும், அவன் சுங்கம் தவிர்த்ததற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி வருகிறார்கள். குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பற்பல உத்திகளைக் கையாண்டான் என்பது இவ்வாராய்ச்சிகளின் அடிப்படைக் கோணமாகும்.

குலோத்துங்கன், சோழ மக்கள் அரசுக்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சுங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருட்களுக்கு இடப்படும் தீர்வையாகும் என்று இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர் என்பதும் ஒரு கருத்து.

குலோத்துங்கன் தனது அரசாட்சியை உறுதிப்படுத்த விரும்பி, கி.பி. 1085-86ஆம் ஆண்டில் உள்நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் விதமாகச் சுங்கவரியை நீக்கி ஆணையிட்டான். இதன் காரணமாக வணிகர் – வேளாளர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு அரண்களாக மாறினர் என்று என். சேதுராமன் கூறுகிறார்.

சோழநாட்டின் வலங்கை மகா சேனை மற்றும் இடங்கை மகா சேனை என இருந்து வந்த இரு படைக்குழுவினருக்குள்ளும், அவர்கள் சார்ந்திருந்த சாதிப்பிரிவுக்கும் இடையில் கலகம் ஏற்படுத்தி, அந்தக் கலகத்தின் காரணமாக, அதிராசேந்திர சோழன் மரணத்தைத் தழுவச் செய்து குலோத்துங்கனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வணிகர்கள். அந்த வணிகர்களுக்குப் பிரதிபலனாக உதவும் வகையில் சுங்கவரி நீக்கி சலுகை அளித்தான் என்று ஆய்வாளர் திரு. தி. நா. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

மரபுக்கு முரணாகச் சோழ அரச பட்டத்தைக் கைப்பற்றிய முதற் குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பலவித உத்திகளைக் கையாண்டான். அரசகுலப் படைகளல்லாத, குடி படைகள் எனத்தக்க சமூகத்தவர் பலரின் நிலையையும் அதிகாரத்தையும் உயர்த்தியது அத்தகைய உத்திகளுள் ஒன்று. இது தென்னிந்தியச் சமூக அமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திற்று என்று ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

சோழ குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் வலங்கை மகா சேனை படைவீரர்கள். இந்த அரசகுலப் படையின் அதிகாரத்தைக் குறைக்கும் வழியாகவும், அதே சமயம் வணிகர்களுக்குச் சலுகை தரும் விதமாகவும் எடுக்கப்பட்ட முடிவு சுங்க வரி நீக்குதல் என்கிறார் எஸ். இராமச்சந்திரன். இவ்வாறு குலோத்துங்கன் எடுத்த முடிவு, குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்களுக்கும் இதுவே காரணமாகி இருக்கலாம் என்பதும் இவர் முடிவு.

வணிகர்களுக்குப் பாதுகாப்புப் படையாகச் செயல்பட்டுவந்த அரச குலப்படைகளைக் கலைத்துவிட்டோ, அவ்வீரர்களை வணிகர்களிடமிருந்து ஊதியம் பெறுகின்ற படைகளாக மாற்றி ஆணையிட்டோ, அரச குலப் படைகளின் மானிய நிலங்களை அரசர்களிடமிருந்து கையகப்படுத்தியோ, ஏதோ ஒரு வகையில் வணிகர்களின் பாதுகாப்புப் பொறுப்புக்காக அரசு ஏற்றிருந்த செலவினங்களைக் குலோத்துங்க சோழன் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கக்கூடும் என்கிறார் இவர்.

சோழர்காலத்தில் வணிகர்களிடம் வரி வசூலித்து, அந்த வருவாயில் படை அமைத்து, கடல் கடந்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு சோழப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. முதலாம் இராசேந்திரனின் கடல் கடந்த படையெடுப்புகளின் நோக்கமும் அதுவே. கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிகர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கும், பலநாடுகளுடன் வணிக உறவை மேம்படுத்தச் சோழ படைகள் உதவின. இவ்வாறு வணிகத்தை மேம்படுத்தும் பொருட்டு வணிகர்களிடம் வரி வசூலித்து, அதைப் பயன்படுத்தி அதன் வழியாகப் படைவீரர்கள் கொண்டு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, வணிகர்களின் வரியை நீக்கிவிட்டால் அந்தத் தொகையில் அவர்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும், அத்துடன் அரச படைகளின் அதிகாரத்தையும் குறைக்கும் வழியாகவும் குலோத்துங்கனின் சுங்கம் தவிர்த்த நடவடிக்கை இருந்திருக்கும் என்பது எஸ். இராமச்சந்திரன் அவர்களது கருத்து. இவ்வாறு சுங்க வரி வசூல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்பட்டு வந்த ஒரு செலவினம் இப்போது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டதால் சுங்க வரி வசூல் செய்வது தேவையற்ற ஒன்றாக ஆகிவிட்டது என்கிறார் இந்த ஆய்வாளர்.


சான்றுகள்:
[1] “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் – இதழ் 75 – அக்டோபர் 2008. பக்கங்கள் 28-31. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 600 008. (http://m.sishri.org/msungam.html & http://www.subaonline.net/thfebooks/THFkalvettu42008oct.pdf)

[2] “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்,” எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்). பதிப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113, 2004.

[3] The Cholas, N.Sethuraman; பக்கம் 107, “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் -இதழ் 75 – அக். 2008. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8. (பார்க்க: http://www.sishri.org/sungam.html)

[4] திரு. தி. நா. சுப்பிரமணியம் தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள், மூன்று பாகங்கள் II சரித்திரக்குறிப்புகள், பக்கங்கள் 87-101 G O M L 1957

[5] சோழர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம் 273

[6] இராமானுசர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் – வரலாறா? கற்பனையா?, எஸ். இராமச்சந்திரன், http://www.sishri.org/ramanuja.html

[7] 5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை, http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm

[8] முதலாம் குலோத்துங்க சோழன், https://ta.wikipedia.org/s/23o 

நன்றி:  சிறகு
ஏப்ரல் 12, 2014

#சிறகு, #வரலாறு, #இலக்கியம், #Themozhi