Showing posts with label மொழியியல். Show all posts
Showing posts with label மொழியியல். Show all posts

Sunday, November 10, 2013

மூளைக்குப் பயிற்சி தரும் இருமொழித் திறன்

 மூளைக்குப் பயிற்சி தரும் இருமொழித் திறன்



தமிழறிஞர்கள் பலரும் இந்த வாரம் 'தி இந்து' தமிழ் நாளிதழ் (நவம்பர் 4, 2013 அன்று) வெளியிட்ட எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின்  "ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?" என்ற கட்டுரையைப் பற்றிய தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்டுரையில் அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரோமன் (அவர் ஆங்கில எழுத்துரு என்று பிழையாகக் குறிப்பிடுகிறார்) எழுத்துருவில் தமிழை எழுதிப் பழகப் பரிந்துரை செய்கிறார். அதாவது 'அம்மா' என்பதை 'amma' என்று எழுதுவது தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் என்பது அவர் கருத்து. அது தவறு என்று பற்பல மொழியியலாளர்களும், தமிழறிஞர்களும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். தமிழை அழிக்க நினைக்கும் நடவடிக்கை என்று அவரை ஏசுவதும் நடக்கிறது.

மொழிச் சீரழிவு விவாதம் ஒருபுறமிருக்க, அவர் இக்கருத்தை முன்னிறுத்திய விதம் அறிவியல் ஆதாரமற்றதாகவும் இருக்கிறது. திரு. ஜெயமோகன் அவர்கள் குழந்தைகள் கற்பதற்கு இருமொழிப் பயன்பாடு தடைக்கல்லாக இருக்கிறது என்ற கவலை தொனிக்கும் விதத்தில், "இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது" கவலை தெரிவித்து இருக்கிறார். அதற்கு ஏற்றார் போன்று சோகம் ததும்பிய முகத்துடன் உள்ள மழலையர் பள்ளி மாணவர்களின் படமும் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இக்கருத்து, அதாவது இருமொழிக் கொள்கை கற்றலுக்கு இடையூறாக விளங்கும் என்னும் கருத்து, உண்மையல்ல என்பதை நரம்பியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் பலமுறை ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். இந்த ஆராய்ச்சிகளில் முடிவின்படி, திரு. ஜெயமோகனின் கவலைக்கு மாறாக, இருமொழி பயிலும் இந்திய மாணவர்கள் அறிவில் சிறந்து விளங்கவே வாய்ப்புள்ளது. திரு. ஜெயமோகனின் கட்டுரை வெளியான இருநாட்களில் நியூராலாஜி ஆராய்ச்சி சஞ்சிகையில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. ஒருவருக்குள்ள இருமொழித்திறன் அவருக்கு முதுமை மறதி தோன்றுவதை ஐந்தாண்டுகள் தாமதப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது இந்த ஆராய்ச்சி. எழுதப் படிக்கத் தெரியாது, வெறும் இருமொழிகளை மட்டும் பேசும் திறனே இந்த முதுமை மறதியைத் தள்ளிப்போடுவதும் தெரிய வந்திருக்கிறது. அத்துடன் அக்கட்டுரை குறிப்பிடும் ஆராய்ச்சி நிகழ்ந்த இடமும் நம் இந்தியாவே, ஹைதராபாத் மக்களிடம் நடத்தப் பெற்ற ஆய்வு இது.

ஆய்வுக்கு இந்த நகரைத் தேர்ந்தெடுப்பதற்கு அங்கு மக்களில் பெரும்பாலோர் இருமொழிகளையோ, அல்லது அதற்கும் மேலாகவோ தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் நிலை இருப்பதே காரணம். தெலுங்கு, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகளை வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளியிலும் என ஒரே நாளில் பலமுறை மாற்றி மாற்றிப்  பேசும் வகையில் அமைந்துள்ளது அந்நகர மக்கள் பெரும்பாலோரின் தினசரி வாழ்க்கை. அவ்வாறு ஒருமொழியிலிருந்து மறுமொழிக்கு மாற்றி மாற்றிப் பேசுவது மூளைக்குச் சிறந்த பயிற்சியாக அமைகிறது. இவ்வாறு செய்யும் பொழுது, மொழிகளின் ஒலி வடிவம், இலக்கணக் கட்டமைப்பு, கலாச்சாரப் பின்னணிக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் முறை எனப் பலவற்றையும் மூளை கவனிக்க வேண்டியிருக்கிறது. இத்தொடர் பயிற்சி முதுமை மறதியிலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தாமஸ் பாக், இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் (Thomas Bak, a neurologist at the University of Edinburgh, Scotland). இந்த ஆராய்ச்சியில் உடன் ஈடுபட்ட மற்றொரு ஆராய்ச்சியாளர் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ நிலையத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் சுவர்ணா ஆலடி என்பவர் (Suvarna Alladi, a neurologist at Nizam's Institute of Medical Sciences, Hyderabad). இவர் அனைத்துத்தரப்பு இந்திய மக்கள் வாழ்விலும் இருமொழி பயன்பாடு இயல்பாகப் பரவி இருப்பது இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள உதவியாக இருந்தது என்கிறார்.

முதுமை மறதி தாக்கப்பட்டு சிகிச்சை பெரும் முதியவர்கள் 648 பேரில், பலமொழித் திறன் கொண்ட பிரிவினருக்கு 65 வயதில் தோன்றத் தொடங்கிய முதுமை மறதி, அத்திறன் இல்லாதவர்களை 61 வயதிலேயே ஆட்கொண்டிருப்பது இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அத்துடன் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களிடம் மூவகையான முதுமை மறதி நோய் வகைகளும் (அல்சைமர், மூளைக்கு இரத்த ஓட்டக் குறைவதால் வரும் மறதி, மூளையின் முன்கதுப்புகள் வளர்ச்சி குறைவதால் வரும் மறதி — Alzheimer's disease, vascular dementia, frontotemporal dementia) தோன்றுவது தாமதப் பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கும் முன்னர் கனடாவில் புலம் பெயர்ந்து வந்த இருமொழி பேசும் திறன் உள்ளவர்களை அந்நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட பொழுதும் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் புலம் பெயர்ந்தவர்களின் கலாச்சாரப் பின்னணி ஏதும் காரணமாக இருக்குமோ என்று தோன்றிய ஐயம் இந்தியாவில் ஒரே நகரில் வசிக்கும் மக்களிடம் நடத்திய ஆய்வின் மூலம் நீங்கியுள்ளது. 

இத்துடன் இது போன்ற ஆராய்ச்சிகள் பலவும் முன்பு வெளி வந்துள்ளன. அவற்றில் இருமொழி பேசுபவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும் விளங்குவது கண்டறியப் பட்டுள்ளது. இருமொழி பேசுபவர்கள் புதிர்களை விடுவிப்பதில் விரைவாகச் செயல்படுவதை மழலையர் பள்ளி சிறார்களைக் கொண்டு கண்டறிந்துள்ளார்கள் எல்லென் பியாலிச்டோக், மிச்சேல் மார்டின்ரீ என்ற உளவியல் நிபுணர்கள் (Psychologists Ellen Bialystok and Michelle Martin-Rhee). மழலையர்கள் கணினித் திரையில் உள்ள நீல நிற வளையங்களும், சிவப்பு நிறச் சதுரங்களையும் தனித்தனியாகப் பிரிக்குமாறு சொல்லப்பட்டர்கள். அவற்றைப் பிரித்துப் போடப்படவேண்டிய பெட்டியிலோ நீல நிறச் சதுரமும், சிவப்பு நிற வளையமும் என மாற்றிப் படம் எழுதியிருக்கும். நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கும் செயலைச் சிறார்கள் சுலபமாகச் செய்து முடித்தனர். பின்னர், மீண்டும் விளையாட்டை மாற்றி வடிவங்களைக் கொண்டு அவற்றைப் பிரித்து வளையம் மற்றும் சதுரம் வரைந்த பெட்டியிலே போடவேண்டும், ஆனால் நிறத்தைப் பற்றிக் கண்டு கொள்ளக்கூடாது என்ற விதிமுறை கொடுத்தனர். இது சவால் நிறைந்தது, வடிவங்களின் நிறம் கவனச் சிதறலைக் கொடுக்கும். ஆனால், இம்முறையில் வடிவங்களைப் பிரிப்பதில் இருமொழி பேசும் திறன் உள்ள மாணவர்கள் விரைவில் செய்து முடித்துவிட்டனர்.

இது போன்று இருமொழித் திறன் அடிப்படையில் நிகழ்த்தப் பட்ட பல ஆராய்ச்சிகளிலும் இது போன்ற முடிவே கிடைத்துள்ளது. இதனால் இருமொழி பேசும் திறன் உள்ளவர்களின் மூளை கட்டளைகளை நிறைவேற்றி செயல்களை முடிப்பதில் விரைந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. ஒரு மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு மாறும் செய்கை, நாளடைவில் கவனச் சிதறல்களைக் குறைத்து விரைவில் செயல்பட உதவுவது ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் திட்டமிடுதல், புதிர்களை விடுவித்தல் போன்ற சவால் நிறைந்த செயல்களை விரைவில் முடிப்பது இருமொழித் திறன் உள்ளவர்களுக்கு எளிதாக வசப்படுகிறது.

மற்றொரு ஆராய்ச்சி ஆக்னெஸ் கோவக்ஸ் (Agnes Kovacs) என்பவரால் குழந்தைகளை வைத்து இத்தாலியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் பிறந்ததில் இருந்து இருமொழிகள் புழங்கும் சூழ்நிலையில் வளரும் ஏழு மாதக் குழந்தைகளை ஒரு மொழி மட்டுமே பேசும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிட்டனர். இரு பிரிவுக் குழந்தைகளுக்கும் ஒலி எழுப்பிய பின்னர், திரை ஒன்றில் ஒரு பக்கத்தில் இருந்து பொம்மை வருவதைக் காண்பித்தனர். சிலமுறை செய்த பிறகு ஒலி எழுப்பிய பின்னர் குழந்தைகள் பொம்மை வரும் திசையை நோக்கத் துவங்கின. பின்னர் ஒலி எழுப்பிய பின்னர் பொம்மையை எதிர்ப்  புறத்தில் இருந்து வரும்படி செய்தனர். இருமொழி சூழ்நிலைக் குழந்தைகள் உடனே மறு திசையைப் பார்க்கக் கற்றுக் கொண்டன. ஆனால் ஒரு மொழிச் சூழலில் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த மாற்றம் புரியாது பழையபடியே முதலில் கற்ற திசையையே நோக்கின.

கவுஷன்ஸ்காயா மற்றும் மாரியன் (Kaushanskaya & Marian) மேற்கொண்ட ஆராய்ச்சியும் ஐந்து முதல் பத்தாண்டுகள் இருமொழிகளில் பயின்றவர்கள் ஒரு மொழியில் பயின்றவர்களைவிட அறிவுப் போட்டிகளிலும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருமொழித் திறன் உள்ளோரின் முன்மூளை சிறந்த முறையில் செயல்படுவதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்று இருமொழி அறியும் வாய்ப்புகளற்ற பிற நாடுகளில், புலம் பெயர்ந்து வரும் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் தாய்மொழியில் பேசும் வழக்கத்தைக் கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் உளவியல் மருத்துவர் ஜூடி வில்லிஸ் (Judy Willis) குறிப்பிடுகிறார். அதிக உடற்பயிற்சியின் மூலம் தசை வலுவடைவது போல, இருமொழித்திறன் மூளைக்கு அதிகப் பயிற்சி கொடுத்துச் சிறப்பாகச் செயல் படவைப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, இருமொழிகளில் பயிலும் வாய்ப்புள்ள இந்தியாவின் கல்விமுறை மாணவர்களின் மூளைக்குச் சிறந்த பயிற்சியே அன்றி அவர்களுக்கு அது பெரிய சுமை என்று கருதுவது தவறு.

பெற்றோர்களைத் தங்களது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்குக் கல்வியில் சிறந்து விளங்கச் செறிவூட்டப்பட்ட பானங்களை வழங்க விளம்பரங்கள் அறிவுறுத்துவது போல, இருமொழிப் பயிற்சியும் அறிவுத்திறனை மேம்படுத்தும் என்று விளங்க வைக்கவேண்டும். சிறுவயது மூளையின் பண்பான எதையும் உள்வாங்கும் திறனை 'இளமையில் கல்' என்ற வழக்கின் மூலமாகக் காலம் காலமாக அறிந்தவர்கள் நாம் என்பதை மறக்கத் தேவையில்லை.


ஆதாரங்கள்:
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? - ஜெயமோகன், எழுத்தாளர், தி இந்து, நவம்பர் 4, 2013 (http://tamil.thehindu.com/opinion/columns/article5311674.ece)
Speaking more than one language may delay dementia - Kim Painter, USA TODAY, November 7, 2013 (http://www.usatoday.com/story/tech/2013/11/06/language-bilingual-dementia/3452549/)
Why Bilinguals Are Smarter - Yudhijit Bhattacharjee,The New York Times, March 17, 2012 (http://www.nytimes.com/2012/03/18/opinion/sunday/the-benefits-of-bilingualism.html?_r=0)
Bilingual Brains – Smarter & Faster  - Better attention and cognition in children who grow up in bilingual settings.
Dr. Judy Willis, M.D., M.Ed. in Radical Teaching, Psychology Today, November 22, 2012 (http://www.psychologytoday.com/blog/radical-teaching/201211/bilingual-brains-smarter-faster)


நன்றி: கீற்று - நவம்பர்  10, 2013
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25425-2013-11-10-10-56-43



#கீற்று, #அறிவியல், #மொழியியல், #Themozhi 



Sunday, June 23, 2013

மொழியின் அளவுகோல்

 மொழியின் அளவுகோல்


ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?

உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்),
   ●  10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன
   ●  22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன
   ●  35% மொழிகள் நல்ல பயன்பாட்டில் இருக்கின்றன ஆனால் அவற்றின் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது
   ●  21% மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப்படுகிறது
   ●  13% மொழிகள் அழியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன, இதனைப் பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் இம்மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.

இந்த 7105 உலக மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஆஸ்திரேலிய/பசிபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. வாழும் மொழிகள் அதிக எண்ணிக்கையில் ஆசியாவிலும், எண்ணிக்கையில் குறைவாக ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன.  அத்துடன் அதிக மொழிகள் அழியக்கூடிய ஆபத்தில் இருப்பது அமெரிக்க நாடுகளில். வாழும் மொழிகளில் பல நல்ல பயன்பாட்டில் இருப்பது ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய/பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில்.  ஐரோப்பிய நாடுகளில் மொழிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பல மொழிகள் நல்ல மேன்மையான நிலையில் பயன்பாட்டில் உள்ளன.

இது போன்ற மொழிகளைப் பற்றிய புள்ளி விபரங்களைத் தருவது ‘எத்னலாக்’ (Ethnologue – http://www.ethnologue.com/). எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை (comprehensive language catalogue). உலகளவில் மொழியியல் வல்லுநர்களுக்கும், மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஓர் இன்றியமையாத பட்டியல்.  பொதுவாக மதத்தினைப் பரப்பும் பொருட்டு தங்கள் மறை நூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்குப் பெரும் பொருளைச்  செலவு செய்ய எண்ணும் மத நிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்ட மொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்பப்  பொருட் செலவு செய்வதைப் பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும் இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும்.

இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு ‘தி சம்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிங்க்விஸ்டிக்ஸ்’ (The Summer Institute of Linguistics – SIL) என்ற மொழியியல் நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப் பட்டது  இந்த விரிவான மொழி அட்டவணை. இப்பட்டியல் உலகில் உள்ள  புழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளையும், 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல் களஞ்சியம். இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கள்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை, உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலை போன்ற தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய  மேம்படுத்தப்பட்ட ‘எத்னலாக்’ பதிப்பு வெளியிடப்படுகிறது. தற்பொழுது வெளிவந்துள்ள இப்புதிய பதிப்பின்படி 1950 ஆம் ஆண்டு வழக்கில் இருந்த மொழிகளில் 375 மொழிகள்  மறைந்துவிட்டது தெரிய வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் (மார்ச் 2013) வெளிவந்துள்ள ‘எத்னலாக்’ நூலின் புதிய 17 ஆம் பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுநர்கள் மட்டுமின்றி, மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நூல் வடிவம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இப்புதிய பதிப்பில் ஒவ்வொரு மொழிக்கும் மூன்றெழுத்திலான ஒரு குறியீடு (ISO-codes, three-letter language identifier codes) அளிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகள் சர்வதேசத் தரநிர்ணய அமைப்பின் (International Organization for Standardization, ISO 639-3) முறையினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்றெழுத்துக் குறியீடுகள் ஆகும். இதில் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட குறியீடு  tam (http://www.ethnologue.com/language/tam). பொதுவாக ஒரு மொழியைப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நிலை இருக்கும்பொழுது இந்தச் சீரான குறியீட்டு முறை குழப்பத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, சமஸ்கிருதம் என்பது சான்ஸ்க்ரீட்  என்றும் வடமொழி என்றும் அறியப்படும் பொழுது ‘san’ என்னும் அதன் குறியீடு குழப்பத்தைத் தவிர்க்கிறது (http://www.ethnologue.com/language/san). கவனத்தைக் கவரும் பக்கக் குறிப்பு ஒன்று: இந்த அட்டவணை தரும் தகவலின்படி சமஸ்கிருதம் ஒரு  செம்மொழி (Classical language) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தமிழ் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

இப்பட்டியல் தமிழ் மொழியைப் பற்றி அளிக்கும் தகவல்: தமிழ் உலகளவில் 68 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதில் 60 மில்லியன் தமிழர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இது தமிழகப்பகுதியில் பெரும்பாலும் பேசப்படுகிறது.  அத்துடன் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அன்றி இரண்டாம் நிலையில் ஒரு மாநிலத்தின் மொழியாக உள்ளது (Language Status – 2 /Provincial). இளநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகிறது.  1727 ஆம் ஆண்டு முதல்  தமிழ் விவிலியத்தின் முழுமையான பதிப்பு வழக்கில் உள்ளது.  அத்துடன் உலகில் மற்ற எந்தெந்த  நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது  என்றும், எத்தனை வட்டார வழக்குகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர், மரைட்டஸ், ஸ்ரீலங்கா நாடுகளில் தமிழின் நிலை பற்றிய மேலதிகத் தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.  அவற்றில் ஸ்ரீலங்காவில் மட்டும் தமிழ் ஆட்சி மொழியின் நிலையிலும் (நிலை 1), மற்ற பிற நாடுகளில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் நிலையிலும் (நிலை 4) இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மொழிவாரியாகவும், உலகின் பகுதிவாரியாகவும், நாடுகள் வாரியாகவும் தகவல்கள் வழங்கப் பட்டுள்ளன (http://www.ethnologue.com/statistics). குறிப்பாக இந்தியாவில் மொழிகளின் நிலையைப் பற்றி அறிய விரும்பினால், இத்தளம் வழங்கும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் பகுதிகளை விளக்கும் வரைபடங்கள் (http://www.ethnologue.com/country/IN/maps), மற்றும் இந்திய மொழிகளின் நிலையைப் பற்றிய தகவல்கள் (http://www.ethnologue.com/country/IN) ஆகியவற்றின் துணை கொண்டு அறிந்து கொள்ளலாம்.  இந்திய மொழிகள் எனப் பட்டியலிடப் பட்ட 461 மொழிகளில் 447 மொழிகள் மட்டுமே தற்பொழுது புழக்கத்தில் உள்ளன,14 மொழிகள் முற்றும் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. அவ்வாறு இருக்கும் 447 மொழிகளிலும் 55 மொழிகள் ஆபத்தான நிலையிலும், 12 அழிவுப் பாதையிலும் சென்று கொண்டுள்ளன, 380 மொழிகள் மட்டுமே நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன.

மொழியின் அளவுகோல்:
இவ்வாறு பற்பல தகவல்களைத் திரட்டித் தரும் இந்த அட்டவணை, மொழிகளின் வளர்ச்சி நிலையை எவ்வாறு அளக்கிறது என்பதையும் அறிந்து கொள்வது நம் மொழியின் வளர்ச்சியை நாம் கண்காணிக்க உதவும். இப்புதிய பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ‘மொழிமேகம்’ (Language Cloud) என்ற விளக்கப் படம் ஒரு ‘மொழிவளர்ச்சி அளவுகோல்’ ஆகும். ஒரு மொழியின் தற்கால வளர்ச்சி நிலையை உலகில் உள்ள  மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வண்ணம் வரைபடமாகவும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த அளவீடுகள் மிகவும் பயனுள்ளது. மொழியின் உபயோக நிலையைப் பல்வேறு வர்ணங்களால் குறியிட்டு விளக்கப்படுவதால் இம்முறை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அளவிடும் முறை EGIDS (Expanded Graded Intergenerational Disruption Scale) என்று குறிப்பிடப்படுகிறது.  ‘ஜாஷுவா ஃபிஷ்மேன்’ (Joshua Fishman) என்னும் மொழியியல் வல்லுநர் (linguist) 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘ரிவர்சிங் லாங்குவேஜ் ஷிஃபிட்’ (Reversing Language Shift) என்னும் நூலில் அவர் உருவாக்கியிருந்த GIDS (Graded Intergenerational Disruption Scale) என்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு, அதனை மேலும் விரிவுபடுத்தியதாக இம்முறை விளங்குகிறது. 0 முதல் 10 வரை உள்ள அளவுகளில் குறிக்கப்படும் இந்த அளவுகோலின்படி, 0 என்னும் நிலை ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டு மொழியையும், 10 என்பது மறைந்துவிட்ட மொழியையும் குறிக்கும். மேலும் இந்த 0 – 10 வரை உள்ள மொழியின் வளர்ச்சி நிலையை மேலும் தெளிவாக வகைப்படுத்த, மொழிகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்கு ஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளது.

ஊதா = (EGIDS 0-4) —  நிலைப்படுத்தப்பட்டுவிட்ட மொழி – மொழி நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளது
நீலம் = (EGIDS 5) — வளரும் மொழி – மொழி பயன்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கிறது
பச்சை = (EGIDS 6a) — உயிரோட்டமுள்ள மொழி – மொழி நல்ல பயன்பாட்டில் இருக்கிறது ஆனால் வளர்ச்சி நிலை தேக்கமடைந்துள்ளது, ஆனால் பரவலான பயன்பாட்டில் இல்லை
மஞ்சள் = (EGIDS 6b-7) — சோதனையைச் சந்தித்துள்ள மொழி – மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவதால் மறையக்கூடிய ஆபத்தில் இருக்கிறது, ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் இன்னமும் பயன்படுத்தப் படுவது மட்டுமே மொழியின் நிலை மாறக்கூடும் என்று நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளது
சிவப்பு = (EGIDS 8a-9) — அழியும் நிலையில் உள்ள மொழி – மொழி அழியும் ஆபத்தான நிலையில் இருக்கிறது, இதனைப் பயன்படுத்துவோர் முதியோர்கள் மட்டும், ஆனால் சந்ததிகளை உருவாக்கும் திறனுடைய இளைய தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் மொழியின் எதிர்காலம் கேள்விக்குரிய நிலையில் இருக்கிறது.
கருப்பு = (EGIDS 10) — அழிந்துவிட்ட மொழி – யாருமே பயன்படுத்தாத நிலையை அடைந்து, யாரும் தங்கள் கலாச்சாரப் பின்னணியாகவும் அந்த மொழியை அடையாளம் காட்டாத நிலை (கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மேற்கூறப்பட்ட இந்த அளவீட்டை அடிப்படையாகக் கொண்டது).

இந்த அளவிடும் முறைப்படி மொழியின் தற்கால நிலையென (0 விலிருந்து 10 வரையான எண்)  கணக்கிடப்பட்ட EGIDS அளவு உலகில் அம்மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டு, பிறகு இம்மொழியையும் அதனது பயன்பாட்டு நிலையைக் குறிக்கும் வண்ணத்தில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் ஒரு புள்ளியாகக் குறிப்பதால், ஒரே பார்வையில் அந்த மொழியின் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.  உலகத்தில் உள்ள 7105 மொழிகளும் இந்த வரைபடத்தில் அதன் வளர்ச்சிக்கேற்ப ஒரு புள்ளியாகக் குறிப்பிடப்படுகிறது. நேர் அச்சில்(y axis) மொழியினைப் பேசும் மக்கள்தொகை ‘மடக்கை அளவிலும்’ (in logarithmic scale, 100 = 1; 102 = 100; 104 = 10,000; 106 = 1,000,000; 108 = 100,000,000), கிடை அச்சில் (x axis) EGIDS அளவீடான மொழியின் வளர்ச்சியின் அளவும் குறிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து மொழியின் புள்ளிகளையும் ஒருங்கே பார்க்கும் பொழுது இப்படம் ஒரு மேகம் போலத் தோற்றமளிப்பதால் ‘மொழிமேகம்’ என்று இந்த வரைபடம் குறிப்பிடப்படுகிறது.  அதிகமாகப் பேசப்படும், நன்கு வளர்ச்சியடைந்த மொழியானது  படத்தில் இடது மேற்புறம் ஊதா வண்ணத்திலும் அழிந்துவிட்ட மொழியானது  படத்தில் வலது கீழ்ப்புறத்தில் கருப்பு வண்ணத்திலும்  இடம் பெறும்.

ஒவ்வொரு மொழிக்காகவும் ஒரு குறியீடு கொடுக்கப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அதன் தனிப் பக்கத்தில் மொழிமேகத்தில் அந்த மொழியின் வளர்ச்சியைக் குறிக்கும் வரைபடமும் கொடுக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில், படம் – 1 இல் ‘மொழியின் அளவுகோல்’; படம் -2 இல் மொழியின் அளவுகோலைக் கொண்டு உருவாக்கப் பட்ட மாதிரி ‘மொழிமேகம்’ விளக்கப்படத்தில் ‘தமிழின் வளர்ச்சி நிலை’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.







தமிழ் மொழியின் நிலை தற்கால நிலை:
இந்த மொழியின் அளவுகோலின்படி, ஒரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது ஒரு முக்கிய அடிப்படைத் தகுதியாகவும், அளவுக்குறியாகவும் இருக்கிறது.  ஒருவருக்கு அவரது தாய்மொழியில் படிப்பதுதான் எளிது என்ற ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டு, உலக ஐக்கிய நாடுகள் சபை (UNESCO) தாய்மொழிக் கல்வியினை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி நாளாகக் குறிப்பிட்டு, விழா எடுத்து தாய்மொழியின் முக்கியத்தை உணர்த்தப் பாடுபட்டு வருகிறது. மொழிகளைப் பாதுகாக்க உலகம் தழுவிய முறையில் எடுக்கப்படும் உன்னதமான நடவடிக்கையாக இச்செயல் விளங்குகிறது.

இன்றைய நிலையில் தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்திருந்தாலும் அது ஒரு மாநில மொழி மட்டுமே, இந்தியாவில் தமிழ் ஓர் ஆட்சி மொழியல்ல. தமிழர்களும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கௌரவமாகவும், ஆங்கில நூல்களைப் படித்து விவாதிப்பதைப் பெருமையாகவும் பல தலைமுறைகளாகக் கருதி வருகின்றனர். மேலும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அறிவும் குறைவு என்ற ஆணித்தரமான மனப்பான்மையும் உள்ளவர்கள் பெரும்பாலான தமிழர்கள்.

இவ்வாறாக மொழியின் அளவுகோலின்படி மொழியின் மாட்சியான நிலையெனக் குறிக்கும் ஒவ்வொரு அளவீடுகளிலும் தமிழின் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழின் நிலை இவ்வாறிருக்க, சமீபத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளும், பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி என்ற நிலைப்பாடும் மொழியின் வளர்ச்சி அளவுகோலின் பயிற்றுமொழி என்ற தகுதியிலிருந்தும்  தமிழை விலக்கிச் செல்லும் முதல் நடவடிக்கையாக இருக்கிறது.  இந்த முடிவு சரிதானா என்பதை மொழியின் ஆர்வலர்கள் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகிறது.


References:
[1] Ethnologue’s newest edition reports vitality of sign languages worldwide. (http://www.sil.org/about/news/ethnologue%E2%80%99s-newest-edition-reports-vitality-sign-languages-worldwide)
[2] Assessing endangerment: Expanding Fishman’s GIDS. Revue Roumaine de Linguistique, Paul M. Lewis & Gary F. Simons. 2010. 55.2: 103–20. (http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf)
[3] Language development versus language endangerment: Assessing the situation worldwide, Gary F. Simons, SIL International. IAS and GILLBT conference on Language and Culture in National Development, University of Ghana, Legon, 12–13 April 2012. (http://www-01.sil.org/~simonsg/presentation/Ghana%202012.pdf)
[4] Expanded Graded Intergenerational Disruption Scale.(http://surveywiki.info/index.php/EGIDS)
[5] International Mother Language Day (IMLD). (http://www.un.org/en/events/motherlanguageday/)
[6] UNESCO Atlas of the World’s Languages in Danger.(http://www.unesco.org/culture/languages-atlas/index.php)
[7] Analyzing the role of instructional language in Enhancing scientific cognition of elementary level Students belonging to marginalized communities; Sindh – Pakistan, Dr. Tayyaba Zarif and Dr. Aijaz Ahmed. ISSN: 2186-8492, ISSN: 2186-8484 Print Vol. 2. No. 1. February 2013. (http://www.ajssh.leena-luna.co.jp/AJSSHPDFs/Vol.2(1)/AJSSH2013(2.1-29).pdf)
[8] Karuna opposes English in govt schools as medium of instructions, Chennai, May 14, 2013. (http://indiatoday.intoday.in/story/karuna-opposes-english-in-govt-schools-as-medium-of-instructions/1/271024.html)




நன்றி: திண்ணை - ஜூன் 23, 2013

#திண்ணை, #அறிவியல், #மொழியியல், #Themozhi