மனிதத்தின் பன்முகம்
அடுத்து ஆட்சியைப் பிடிக்க
அரசியல்வாதிகள் போடுவர் திட்டம்
இவரது குட்டை அவர் உடைக்க
அவரது முகத்திரையை இவர் கிழிக்க
குப்பையைக் கிளறிக் கிளறி
தாங்கவியலாத முடை நாற்றம்
நிரந்தரமாக என்றுமே பட்டை நாமம்
நொந்ததே என்று தளர்பவருக்கும்
வந்திடும் ஒரு நாள் புது வாழ்வு
கடந்ததை எண்ணிக் கலங்காது
இழந்ததை எண்ணிப் புலம்பாது
வருவதை எதிர்கொள்வோருக்கு
வாழ்வில் என்றுமே தாழ்வில்லை
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
கொஞ்சமேனும் கருணையற்ற பிள்ளை
நெஞ்சமதில் அன்பின்றித் துரத்தியதால்
பஞ்சைப் பராரியாய் அலையும் பெற்றோரே
நஞ்சு தோய்த்து அவர் உதிர்க்கும் இன்மொழியை
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
உயிர் குடிக்கும் துணிவு பெற்றது
போலி மதவாதிகளின் கூட்டம்
கடவுள் எமக்கே உடைமை என்றே
கூசாது பொய்யுரைத்துப் போராட்டம்
மாந்தர் யாவரும் சமம் என்றாலோ
சகித்திடாது செய்வர் ஆர்ப்பாட்டம்
உண்மையை மறைத்துப் பழியுரைத்து
நன்றே நடத்திடுவர் பித்தலாட்டம்
எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கரிடமும் மீனாளிடமும் கருணை வேண்டி
சிறப்புத் தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டுமந்தப் பணம்
காசு பணம் துட்டு மணி மணி
எண்ணிக் குமைந்து மந்தராகியவரும்
பண்பினில் சிறந்தால் மாந்தராகிவிடுவார்
அன்பில் திளைத்துப் புனிதராகியே
மன்பதை காத்திடும் தன் மனச்செல்வம்
பசிப்பிணியும் மாநிலத்தே ஒழிந்திடுக
பல்லுயிரும் இன்புறவே நல்லறம் ஓங்கிடுக
பாரெல்லாம் அன்புநெறி தழைத்திடுக
பாங்குடனே சிறந்தென்றும் வாழ்ந்திடுக
சக்தி வடிவென்றே பாடலெழுதுவார் ஒரு சிலர்
மறைப்போசைப் பாடலெழுதுவார் மறு சிலர்
பெண்ணுக்குப் பரிந்து பாடலெழுதுவார் அவர்
இது பொல்லாத உலகம் பெண்ணே
இது புரியாதென்றால் வாழ்வில்லை கண்ணே
நன்றி:
தமிழணங்கு - மே 2025
https://archive.org/details/thamizhanangu-may-2025/page/43/mode/2up
மின்தமிழ்மேடை - 4 [ஜனவரி - 2016]
https://archive.org/details/THFi-QUARTERLY-4/page/183/mode/2up
#தமிழணங்கு, #மின்தமிழ்மேடை, #கவிதை, #Themozhi
