Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, May 2, 2025

மனிதத்தின் பன்முகம்

மனிதத்தின் பன்முகம்



அடுத்து ஆட்சியைப் பிடிக்க
அரசியல்வாதிகள் போடுவர் திட்டம்
இவரது குட்டை அவர் உடைக்க
அவரது முகத்திரையை இவர் கிழிக்க
குப்பையைக் கிளறிக் கிளறி
தாங்கவியலாத முடை நாற்றம்
நிரந்தரமாக என்றுமே பட்டை நாமம்

நொந்ததே என்று தளர்பவருக்கும்
வந்திடும் ஒரு நாள் புது வாழ்வு
கடந்ததை எண்ணிக் கலங்காது
இழந்ததை எண்ணிப் புலம்பாது
வருவதை எதிர்கொள்வோருக்கு
வாழ்வில் என்றுமே தாழ்வில்லை

வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
கொஞ்சமேனும் கருணையற்ற பிள்ளை
நெஞ்சமதில் அன்பின்றித் துரத்தியதால்
பஞ்சைப் பராரியாய் அலையும் பெற்றோரே
நஞ்சு தோய்த்து அவர் உதிர்க்கும் இன்மொழியை
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்

உயிர் குடிக்கும் துணிவு பெற்றது
போலி மதவாதிகளின் கூட்டம்
கடவுள் எமக்கே உடைமை என்றே
கூசாது பொய்யுரைத்துப்  போராட்டம்
மாந்தர் யாவரும் சமம் என்றாலோ
சகித்திடாது செய்வர் ஆர்ப்பாட்டம்
உண்மையை மறைத்துப் பழியுரைத்து
நன்றே நடத்திடுவர் பித்தலாட்டம்

எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கரிடமும்  மீனாளிடமும் கருணை வேண்டி
சிறப்புத் தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டுமந்தப் பணம்
காசு பணம் துட்டு மணி மணி

எண்ணிக் குமைந்து மந்தராகியவரும்
பண்பினில் சிறந்தால் மாந்தராகிவிடுவார்
அன்பில் திளைத்துப் புனிதராகியே
மன்பதை காத்திடும் தன் மனச்செல்வம்

பசிப்பிணியும் மாநிலத்தே ஒழிந்திடுக
பல்லுயிரும் இன்புறவே நல்லறம் ஓங்கிடுக
பாரெல்லாம் அன்புநெறி தழைத்திடுக
பாங்குடனே சிறந்தென்றும் வாழ்ந்திடுக

சக்தி வடிவென்றே பாடலெழுதுவார் ஒரு சிலர்
மறைப்போசைப் பாடலெழுதுவார் மறு சிலர்
பெண்ணுக்குப் பரிந்து பாடலெழுதுவார் அவர்
இது பொல்லாத உலகம் பெண்ணே
இது புரியாதென்றால் வாழ்வில்லை கண்ணே


நன்றி:
தமிழணங்கு - மே 2025
https://archive.org/details/thamizhanangu-may-2025/page/43/mode/2up

மின்தமிழ்மேடை  - 4 [ஜனவரி  - 2016]
https://archive.org/details/THFi-QUARTERLY-4/page/183/mode/2up


#தமிழணங்கு, #மின்தமிழ்மேடை, #கவிதை, #Themozhi 



Friday, October 4, 2024

அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் . . .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் தர்மச் சக்கரம் சுழற்றினார்
சித்தார்த்த புத்தர் - போதித்தார்
உலக மக்களுக்கு அமைதி
 
இருபதாம் நூற்றாண்டில்
இராட்டைச் சக்கரம் சுழற்றினார்
அண்ணல் காந்தி - வழங்கினார்
இந்திய மக்களுக்கு விடுதலை
 
அன்பும் அருளும் அறநெறியும்
கொண்டது உயர்ந்த வாழ்க்கைமுறை
வன்முறைத் தவிர்தலும் இரக்கமும் தொண்டும்
நேர்மையும் அமைதியான வாழ்க்கைமுறை
 
வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது
என்றும் ...
வரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது
என்றும் ...
புத்தனின் சக்கரம் சுழன்றது
அறத்திற்காக...
காந்தியின் சக்கரம் சுழன்றது
அமைதிக்காக ...
 
அறச்சக்கரம் என்றும் சுழலும்
அமைதிக்காக என்றும் உலகில்
வாழ்க அண்ணல்

 

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு  எழுதியது - அக்டோபர் 2024  
நன்றி: 
சக்தி  - அக்டோபர் 2024
அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் . . .
https://archive.org/details/sakthi-oct-2024/page/33/mode/2up

 

#சக்தி, #கவிதை, #Themozhi