Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Friday, September 6, 2024

ஆற்றலின் மறுபெயர் கமலா ஹாரிஸ்

No photo description available.

இன்றைய உலக மக்கள் எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவை இல்லாத ஒரு பெண்மணி கமலா ஹாரிஸ். உலகின் முதன்மை வல்லரசு நாடான அமெரிக்காவின் துணைத் தலைவர் பதவி என்றால் சாதாரணப் பொறுப்பா  என்ன?

இன்று அமெரிக்கத் துணைத்தலைவர் பதவியில் இருக்கும் கமலா ஹாரிஸ் பல முதல் சாதனைகளைச் செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர்.  அவர் அமெரிக்கத் துணைத்தலைவர் பதவியை வகிக்கும் முதல் பெண்,  முதல் கறுப்பின துணைத்தலைவர் மட்டுமல்ல முதல் ஆசிய அமெரிக்கரும் ஆவார் என்பது யாவரும் அறியப்பட்ட ஒன்று.




இப்பொழுது அடுத்த சாதனையையும் நிகழ்த்தப் போகிறார் என்பதுதான் அமெரிக்க அரசியலைக் கவனித்து வருபவர்கள் கருதுவது.  ஆம்; நடக்கும் இந்த ஜோ பைடன் ஆட்சி ஜனவரி 2025 இல் முடிந்தவுடன், அடுத்த அமெரிக்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட மிக ஒளிமயமான வாய்ப்பும் அவருக்கு வந்திருக்கிறது.  அவ்வாறு அமெரிக்கத் தலைவர் பொறுப்பேற்றால் அவர்தான் உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண் தலைவராகவும், முதல் ஆசிய அமெரிக்கப் பின்புலம் கொண்ட தலைவராகவும் இருப்பார்.

மக்கள்கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்கொள்வதற்குப்  போதுமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்நாள் அமெரிக்கத் தலைவர் ஜோ பைடன் முதற்கொண்டு, முன்னாள் அமெரிக்கத் தலைவர்கள் பராக் ஒபாமா, பில் கிளிண்டன், ஜிம்மி கார்ட்டர்  ஆகியோர் கமலா ஹாரிசை மக்கள்கட்சி வேட்பாளராக ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி, குறிப்பாக தமிழின வழி வந்தவர் என்பதில் உலகத் தமிழர் அனைவருமே அவர் அமெரிக்கத் தலைவராவதை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள்.

கமலா ஹாரிஸ் யார்?
விரைவில் 60 வயது என்ற எல்லையை எட்டவிருக்கும் கமலா தேவி ஹாரிஸ் அக்டோபர் 20, 1964 இல் கலிபோர்னியா மாநிலத்தின் ஓக்லாண்ட் நகரில் பிறந்தவர். ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்.  அங்கு ஜமைக்காவில் பிறந்த டொனால்ட் ஹாரிசை சந்தித்து அவரை மணந்து கொண்டார். சியாமளா மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், கமலா ஹாரிசின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணி புரிந்தனர்.  இருவரும் சமூகநீதி செயற்பாட்டாளராகவும் தொண்டாற்றியவர்கள், மக்கள் உரிமைக்காகக் குரல் எழுப்பித் தொடர்ந்து பல போராட்டங்களுக்காகக் களம் இறங்கியவர்கள். அதனால்  இளம்பருவத்திலேயே கமலா ஹாரிஸ் பல சிவில் உரிமைகள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்.

கமலா ஹாரிசிற்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் மணவிலக்கு பெற்றுக் கொண்டனர். கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலுக்கு தயார் தன் குழந்தைகளுடன் புலம் பெயர்ந்த பொழுது கமலா ஹாரிசிற்கு வயது 12.  அவர் கியூபெக்கில் இருந்த காலத்தில், பிரெஞ்சு மொழியைப் பேசக் கற்றுக்கொண்டார்.  அப்பகுதி சிறுவர்களை புல்வெளியில் விளையாட அனுமதிக்காத கட்டிட உரிமையாளருக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தி வளரும் வயதிலேயே தனது அரசியல் உள்ளுணர்வை வெளிப்படுத்தினார். கமலா அவரது தங்கை மாயா ஆகிய இருவரையும் இந்து மத நம்பிக்கைகளுடன் அவர்களது தாயார் வளர்த்தார். அவர்களை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று இந்தியப்  பாரம்பரிய உறவுகளைப் பேணுவதைத்  தொடர்ந்து செய்து வந்தார்.

கல்வியும் சட்டத் தொழிலும்:
கமலா ஹாரிஸ் கியூபெக்கில் உள்ள வெஸ்ட்மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தன் தோழர் ஒருவருடன் ஒரு  நடனக் குழுவை நிறுவினார். பாப்டிஸ்ட் பாடகர் குழுவிலும் பாடினார். உயர் கல்விக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பிய கமலா ஹாரிஸ் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள ஹொவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு லிபரல் ஆர்ட்ஸ் மாணவர் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளங்கலை படிக்கும் பொழுது விவாதக் குழுவில் பங்கேற்றார். ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1989 இல் தனது J.D. வழக்கறிஞர் பட்டத்தைப் பெற்றார்.

கமலா ஹாரிஸ் கலிபோர்னியா சட்ட அமைப்பின் மூலம் படிப்படியாக பொது வாழ்வில் உயர்ந்தவர்.  1990 இல் கலிபோர்னியாவின் ஸ்டேட் பாரில் அனுமதி பெற்ற பிறகு, கமலா ஹாரிஸ் அலமேடா கவுண்டியில் ஒரு துணை மாவட்ட வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1998 இல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தொழில் குற்றவியல் பிரிவின் நிர்வாக வழக்கறிஞரானார். தொடர்ந்து, 2000 இல், அவர் அதன் சமூகம் மற்றும் சுற்றுப்புறப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார், அந்த நேரத்தில் அவர் மாநிலத்தின் முதல் குழந்தைகள் நீதிப் பணியகத்தை நிறுவினார். 2003 இல், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரானார்.  2010 இல் கலிஃபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞரானார் (அட்டர்னி ஜெனரல்).  

டக்ளஸ் எம்ஹாஃப் என்ற வழக்கறிஞரை  2014 ஆம் ஆண்டு மணந்தார், டக்ளஸ் எம்ஹாஃப் அவர்களின் முதல் திருமணத்தில் அவருக்குப் பிறந்த  இரு பிள்ளைகளின் மாற்றாந் தாயும் ஆவார்.  "ஸ்மார்ட் ஆன் க்ரைம்: எ கேரியர் ப்ராசிகியூட்டர்ஸ் ப்ளான் டு மேக் அஸ் சேஃபர்" மற்றும் "தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்: ஆன் அமெரிக்கன் ஜர்னி" என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.  

அரசியல் நுழைவு:
கமலா ஹாரிஸ் பொதுச் சேவையில் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையைக் கொண்டவர். சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் பதவியை வகித்த முதல் பெண்மணி மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்த முதல் பெண்மணி, முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் தெற்காசியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.  கலிபோர்னியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க செனட்டரான கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க செனட்டர் ஆவார்.  சட்டமன்றத்தில் மதிப்பு மிக்க பொறுப்புகளை வகித்தவர்.  உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரக் குழு, புலனாய்வுத் தேர்வுக் குழு, நீதித்துறைக்கான குழு மற்றும் நிதிநிலை அறிக்கை குழு ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.  

2019இல் அடுத்த அமெரிக்கத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை அவர் அறிவித்தார், ஆனால் அந்த ஆண்டு இறுதிக்குள் போட்டியிலிருந்து விலகினார். ஆனால், ஆகஸ்ட் 2020 இல், மக்கள் கட்சியின் அமெரிக்கத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிசை, தனது துணைத் தலைவர் என அறிவித்தார். இதன் மூலம் பெரிய கட்சியால் தேசிய அலுவலகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் அறியப்பட்டார்.  

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் நவம்பர் 2020 இல் நடந்த தேர்தலில் வென்றனர். இருவரும் சிறப்பாக அமெரிக்க ஆட்சியை வழி நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் துணைத் தலைவராக, 2021ஆம் ஆண்டு  முதல் தற்போது வரை இப்பதவிக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.  இப்பொழுது அடுத்து வரும்  2024 தேர்தலுக்குப் பிறகு அடுத்த அமெரிக்கத் தலைவர்  என்ற எல்லையைத் தொடவிருக்கிறார். அமெரிக்கத் தலைவர் தேர்தலில் ஜோ பைடன் விலக்கிக் கொண்டு கமலா ஹாரிசை பரிந்துரைத்தார்.  

வெள்ளை மாளிகை அறிக்கையின்படி  கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணைத் தலைவராக பத்துக்கும் மேற்பட்ட  வெளிநாட்டுப் பயணங்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், உலகளாவிய கூட்டணிகளை வலுப்படுத்த உதவுவதற்காக 150 க்கும் மேற்பட்ட உலக தலைவர்களைச் சந்தித்துள்ளார் என்பது அயல்நாட்டு உறவைத் திறமையுடன் கையாளக் கூடியவர் என்பதைக் காட்டுகிறது.  

கமலா ஹாரிஸ் அமெரிக்கத் தலைவரானால் சிறுபான்மையினர், மகளிர் மற்றும் தெற்காசியர்களுக்கு அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.   சட்ட அமலாக்கம், சட்டமன்றப் பணி மற்றும் நிர்வாகத் தலைமை ஆகியவற்றில் விரிவான அனுபவத்தையும்,  சிக்கலான தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைக் கையாளவும் நன்கு பயிற்சி கொண்டவராகவும் உள்ளவர் கமலா ஹாரிஸ்.   சமூக நீதி, பொருளாதார சமத்துவம், சுகாதாரம், உள்ளூர் வேலைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உருவாக்குதல், அயல்நாட்டினர் குடியேற்றம், வாக்களிக்கும் உரிமைகள், இனப்பெருக்க உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, துப்பாக்கி வன்முறை தடுப்பு, புலனாய்வு மற்றும் குற்றவியல் நீதி சீர்திருத்தம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருபவர் என்பதால் இவற்றில் வரவேற்கத் தக்க மாறுதல்களும் முன்னெடுப்புகளும் ஏற்படும்.  

அமெரிக்கக் கனவு:
எந்த நிலையில் பிறந்த எவரும் கடின உழைப்பு முயற்சிகள் மூலம் சமுதாயத்தின் ஓர் உயர்ந்த இடத்தை அடையலாம்  என்பது அமெரிக்கக் கனவு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா கட்டி எழுப்பப்பட்டதற்கு, வளர்ந்ததற்குக்  காரணம்,  இந்த அடிப்படை நம்பிக்கைக்கு எந்த இடையூறும் தடங்கலும் இதுவரை நிகழாததால்தான். 'உன் உயர்வு இருப்பது உன் கையில். . .  உன் முயற்சியி. . . ' என்பது  அமெரிக்க மக்களின் வாழ்வியல் கோட்பாடு.  அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது அயல் நாட்டிலிருந்து குடியேறிய புலம் பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்களும், முன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களும்  டொனால்ட் டிரம்ப் போன்ற பரம்பரை வெள்ளையின, செல்வந்தர் குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு நிகராக உயர் பதவிகளையும், அதிகாரம் மிக்க தலைமைப் பொறுப்புகளை அடையும் நிலை.   முன்னர் பராக் ஒபாமா, இன்று கமலா ஹாரிஸ் அமெரிக்கக் கனவை வென்றெடுக்கும் எளிய பின்னணி கொண்டவர்களாக உலகிற்கு அமெரிக்காவின் பெருமையை உணர்த்தி வருகிறார்கள்.
 
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கமலா ஹாரிஸ் என்ற தமிழ்மகள் அமெரிக்கத் தலைவராவது தமிழர்களின் பெருமை.

 

நன்றி:
"சக்தி" பெண்ணிதழ்
செப்டம்பர் 2024 
ஆற்றலின் மறுபெயர் கமலா ஹாரிஸ்
https://archive.org/details/sakthi-sep-2024/page/77/mode/2up

#சக்தி, #வரலாறு, #அமெரிக்கா, #Themozhi 




Saturday, June 11, 2016

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது. குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லினப் பின்புலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும் பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.

கலிபோர்னியா எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள் தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின மூதாதையர் ஒருவரின்  வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது. சமீபத்திய மக்கள்தொகை புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில் வாழ்பவர்களில் இனி மூவரில்  ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும் அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு வெள்ளையின மக்கள்  தள்ளப்படுகிறார்கள்.

இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலிக்கிறது. தற்பொழுது பள்ளிகளில் பயிலும் 6.2 மில்லியன் மாணவர்களில் பெரும்பான்மையினர், பொதுவாக வழக்கத்தில் அமெரிக்காவின் சிறுபான்மையினர் என்று குறிப்பிடப்படுபவர்களே. அமெரிக்காவில் வாழும்  2.5 மில்லியன் இந்துக்களில் சரிபாதியினர், அதாவது சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் கலிபோர்னியாவில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், சிலிக்கான் பள்ளத்தாக்குள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியின் தொழில்நுட்பத்துறைப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும் ஆவார்கள். மாநில அரசின் கல்வித்துறையின் புள்ளிவிவரப்படி (California State Board of Education; http://www.cde.ca.gov/ds/sd/cb/ceffingertipfacts.asp), கலிபோர்னியா பள்ளி மாணவர்களில் 53% இலத்தீனோ (ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்சிகோ நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோர்) இன மக்கள், 25% வெள்ளையினத்தவர், 12% ஆசியா மக்கள், 6% கறுப்பின மக்கள், இவர்களைத் தவிர்த்த சிறுபான்மையினர் சிலர் தங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இனம் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்.

கலிபோர்னியாவில் வசிப்பவர்களில் ஆசியாவில் இருந்து குடியேறியவர்களின் தலைமுறையினர், அதிலும் தெற்காசியப் பகுதியில் இருந்து குடியேறியோர் வெகு வேகமாக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். இதனால்,  பல பின்னணி உள்ள அமெரிக்கர்களைப் பற்றிச் சரியான முறையில் அறிந்து கொள்ளும் வகையில்,  சமூகவியல் மற்றும் உலக வரலாற்றுப் பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் முறை மாநிலக் கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லின மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்கலைக்கழகக் கல்வி வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும், பரிந்துரைகள் பெறப்பட்டு, அவை ஒரு குழுவினரின் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுப் பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும் முறை கலிபோர்னியா மாநில அரசின் பள்ளி பாடத்திட்டக் குழுவினரால் (Instructional Quality Commission of California’s Department of Education) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக கலிபோர்னியாவின் கல்வித்திட்டத்தில் கொண்டுவரப்படும் எந்த ஒரு மாற்றமும் அமெரிக்காவின் பிற மாநிலங்களின் கல்வித் திட்டங்களிலும் பின்பற்றப்படும். கலிபோர்னியாவின் மக்கள்தொகையின் தாக்கம் மற்ற மாநிலங்களின் பாடநூல் விற்பனையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். பாடநூல் பதிப்பகத்தார் கலிபோர்னியா பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டப் பாடநூல்களைப்  பிற மாநில பள்ளிகளுக்கும் விற்கும் வாய்ப்புகள் அதிகம்.

சென்ற ஆண்டின் (2015) இறுதியில் துவங்கி, இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்ற கல்விச்சீரமைப்பு கலந்தாய்வு நிகழ்விலும் பல இனத்தைச் சார்ந்தவரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கினர். ஆனால், மிகப் பெரிய அளவில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிலையில் அமைந்தது இந்தியர்கள் இந்தியாவைப் பற்றிப் புகுத்த நினைத்த வரலாற்று மாற்றங்கள்தான். இந்த வரலாறு பற்றிய விவாதங்களின் அடிப்படை… அமெரிக்கப் பள்ளிகளில் இந்தியாவைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பள்ளிப் பாடங்களின் வழியே மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்கள்?  அமெரிக்காவில் வளரும் தெற்காசிய (இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களின்) மாணவர்கள் தங்கள் மூதாதையர்கள் பற்றியும், அவர்கள் கலாச்சாரம் பற்றியும் சமூகவியல் நோக்கில் எந்த வகையில் கற்பிக்கப்படுகிறார்கள்? என்பதைப் பற்றிச் சுற்றிச் சுழன்றது.

இந்தியப்பகுதியைப் பற்றிய கல்வித்துறைகளின் வல்லுநர்களான  பெரும்பான்மையான பல்கலைக்கழகப் பேராசிரியர்களும்; இந்தியாவைத் தவிர்த்த பிற தெற்காசியப்பகுதி நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், அதாவது, இக்கால இந்தியாவின் அரசியல் எல்லைக்குள் பிறக்காதவராக, தங்கள் வேர்கள் இந்தியாவில் இல்லை என்னும் கருத்து கொண்ட பிரிவினரும்; வரலாறு உண்மையைச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும்; இந்தியத் துணைக்கண்டத்தைப் பாடங்களில் “தெற்காசியா” என்று குறிப்பதே சரியான முறை என்று பரிந்துரைத்திருந்தனர்.

“இந்தியா” என்பதையே பண்டைய காலம் முதல் இந்தியாவைப் பற்றி உலகத்தினர் அறிந்திருந்த முறை. கொலம்பஸ் இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்கத்தான் கிளம்பினார். அமெரிக்கப் பழங்குடியினரை இந்தியர் எனத் தவறாகக் கருதியே அவர்களை இந்தியர் எனக் குறிப்பிட்டார். இங்கிலாந்தினர், போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், மற்றும் டச்சுக்காரர் ஆகியோர் கிழக்கிந்திய நிறுவனம் போன்ற பெயர்களில்தான் இந்தியாவுடன் வர்த்தகத்தைத் துவக்கினார்கள். இந்தியாவின் தெற்கு எல்லை இந்தியப் பெருங்கடல் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இவையனைத்தும் தெற்காசியா என்ற அடிப்படையில் அமையவில்லை. இந்தியா என்பதை நீக்கி தெற்காசியா எனக் குறிப்பிடுவது இந்தியர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என்று மாற்றுக் கருத்துகள் கொண்ட வலதுசாரிகள் பரிந்துரைத்தனர்.

சீனாவை கிழக்காசியா என மாற்றி அழைக்காத பொழுது, இந்தியாவைத் தெற்காசியா என்பது சரியல்ல என்று கருத்துகள் அவர்களால் முன் வைக்கப்பட்டன. வலதுசாரிகள், #DontEraseIndia! என்ற ஹேஷ்டேக் குறிப்புடன் சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு திரட்டினர். ஐரோப்பிய நாடுகள் என்றால் அந்தக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் யாவும் எனப் புரிந்து கொள்ள இயலும் போது, வரலாற்றில் இந்தியா என்றால் அது தெற்காசியப் பகுதி நாடுகளைக் குறிக்கும் என்று எவராலும் புரிந்து கொள்ள இயலும் என்றும் இவர்களால்   மாற்றுக் கோணம் கொடுக்கப்பட்டது. இவர்கள் கருத்து இக்காலத் தெற்காசியப் பகுதியைச் சரிவரக் குறிப்பதற்கு உதவவில்லை என்று கருதியவர்களும் கூட, இந்தக் கருத்து ஒருவகையில் ஒப்புக்கொள்ளக்கூடியதே என்று நினைத்தனர்.  உண்மையில், வலதுசாரிகளின் கோரிக்கைகள் சரியே என்று எண்ணும் அளவிற்குத்தான் மேம்போக்காக நிகழ்வைக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் #DontEraseIndia! என்ற கோரிக்கை திசைதிருப்பும் முறையில் அமைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தக் கோரிக்கை, இந்திய இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்க இந்திய வலதுசாரி அமைப்பினர் முன்வைத்த 30 மாற்றங்களின் உண்மையான நோக்கத்தை மறைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

எவ்வாறு வலதுசாரிகள் இந்தியா என்றால் அது இந்துக்களின் நாடு மட்டுமே என்று கருதுகிறார்களோ, மதச்சார்பற்ற இந்தியாவை இந்துஸ்தானம் என்று கருதுகிறார்களோ, இஸ்லாமியரை வெறுக்கும் அடிப்படை மனநிலை அவர்களால் வெளிப்படுத்தப்படுகிறதோ, இந்தியாவின் பல்லின மக்களும், மாறுபட்ட பின்னணி கொண்ட சிறுபான்மையினரும் இந்தியர்களே என்று ஏற்றுக் கொள்ள விரும்பாமல் உள்ளார்களோ, எவ்வாறு இந்துமதத்தின் சாதி, வர்ணாசிரமப் பிரிவுகள் நல்ல நோக்கத்தில் உருவானது என்ற நம்பிக்கையில் செயல்படுகிறார்களோ அவையாவும் அமெரிக்காவில் வசிக்கும் இந்து  வலதுசாரிகளின் பரிந்துரைகளிலும் பிரதிபலித்தது. அமெரிக்கர்களின் பார்வையில் உண்மையான இந்துமத வரலாறு, சமூகவியல் மறைக்கப்பட்டு, குறைகள் பூசி மெழுகப்பட்டு இந்து மதம் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் உருவாக்கும் வகையில் கருத்துக்கள் இவர்களால் கொடுக்கப்பட்டன.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அவர்கள் விரும்பும் பொழுது ஒருங்கிணைந்த பண்டைய இந்தியா என்ற கோரிக்கையை வைப்பதும், தங்கள் நோக்கத்திற்கு எதிராகப் பாதகமாக அமையக்கூடிய வகையில் பழமையில் ஊறிப்போன கருத்துக்களை எதிர்கொள்ளும் பொழுது இவையிவை தற்கால இந்தியாவின் கருத்தாக்கங்கள், இவை இந்தியாவின் தொன்மை நிறைந்த உண்மை வரலாற்றைக் காட்டவில்லை என்பது போன்ற மறுப்புக்களை முன்வைக்கும் வகையிலும் வலதுசாரிகளின் பரிந்துரைகள் அமைந்திருந்தன.

வரலாறு என்பது நடந்ததை நடந்தபடியே அறிந்து கொள்வதா? அல்லது தங்களை மற்றவர் பார்வையில் உயர்ந்தவராகத் தோற்றம் அளிக்கும் வகையில் குறைகளைப் பூசி மெழுகி, தங்கள் கலாச்சாரத்தை உருவகப்படுத்துவதா? இரண்டாவது கோணமே சரி என்ற எண்ணத்தில் செயல்பட்டனர் வலதுசாரி இந்துக்கள்.

இந்துமதத்தினர் என்றால் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்போர், தாவர உணவு உட்கொள்வோர், பக்தி, யோகா, அன்பு, கருணை ஆகியவற்றைப் பின்பற்றுவோர் என்ற கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இந்துமதத்தின் மற்றொரு கோணமான வர்ணாசிரமத் தர்மம் என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே  உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு இன்றுவரை நிகழும் சாதிக் கொலைகள், ஒடுக்கப்பட்ட  பிரிவினர் மீது நடந்துவரும் அடக்குமுறைகள், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், காலம் காலமாகச் சமத்துவமற்ற நிலைமையில் கல்வி, செல்வம் ஆகியன மறுக்கப்பட்டு  ஆணாதிக்கத்தினால் அடிப்படை உரிமையின்றி  வாழ்ந்த பெண்களின் நிலை என்ற இந்தியச் சமூகநிலையின் மற்றொரு கோணமான அடக்குமுறைக்  கலாச்சாரங்களை வலதுசாரிகள் எதிர் கொள்ள விரும்பவில்லை. அவை பாடத்திட்டத்தில் இடம் பெற்று அமெரிக்க மாணவர்கள் அறிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பவுமில்லை. அத்துடன், இவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilization) என்பதையும் “சரஸ்வதி-சிந்து நாகரிகம்” (Sarasvati-Sindhu civilization) குறிப்பிட  வேண்டும்  என்ற கருத்தையும் பரிந்துரைத்தனர்.

சாதிகள் பற்றியும், ஆணாதிக்க விளைவுகளின் நிகழ்வுகளையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அவர்கள் அளிக்கும் விளக்கம்; இதனைத் தெரிந்து கொள்வதால் பள்ளியில் பயிலும் இந்திய வழித்தோன்றல்களான மாணவர்கள் பிற மாணவர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், கேவலமாகப் பார்க்கப்படுகிறார்கள், அவமானப் படுத்தப் படுகிறார்கள். அத்துடன் இந்துமதம் என்பது சாதி, தீண்டாமை ஆகியவற்றை மட்டும் கொண்டதல்ல என்பதாகும்.

ஏன் இந்து மதத்தில் மட்டும்தான் இது போன்ற வர்க்கப் பிரிவுகள், அதன் காரணமாகத் தோன்றிய அடக்குமுறைகள், ஆணாதிக்கம் ஆகியவை இருந்தனவா? பிற மதங்களில்  இவை இருந்ததில்லையா? எதற்காக இந்து மதத்தின் இந்த ஒரு  கோணத்தைப் பெரிதுபடுத்தி  இதுதான் இந்துமதம் என்பது போன்ற கருத்தைப்  பாடமாக வைக்க வேண்டும்?  என்பது  போன்ற கேள்விகளை அடுக்கி, முடிவாக நடுநிலைப்பள்ளி அளவில் (6-7 ஆம்) வகுப்புப் பாடங்களுக்கு இது போன்ற தகவல்கள் பொருத்தமுமல்ல, அவசியமும் கிடையாது  என்ற   கருத்தையும்  தெரிவித்தார்கள்.

குறிப்பாக அவர்கள் வர்ணாசிரமத் தர்மத்தை அறிமுகப்படுத்த விரும்புவது, இந்துமதத்தின் அடிப்படையில் இருந்த இது போன்ற பிரிவுகள் சமூகத்தினர் அவரவர் கடமையைச் செய்ய வழிகாட்டுவதன் மூலம் சீரான ஒரு வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதாகும். அத்துடன் சாதிப்பிரிவினை, அதன் விளைவான உயர்வு தாழ்வு கருத்தியல்கள் இந்தியாவின் இந்து மதத்தினரால் மட்டும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தியப்பகுதியில் வாழும் அனைத்து மதத்தினரிடமும் இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ‘தலித்’ என்ற சொல் தற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அது தொன்மையான இந்துமதத்தின் சாரம் அல்ல.  அது பற்றிய குறிப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெறுவது வரலாற்று நோக்கில் பிழையானது என்பதும் இவர்களது கருத்து.

இதில் வேடிக்கை என்னவென்றால் வலதுசாரிகள் மிகத்தீவிரமாக இந்துமதத்தின் சாதிப்பிரச்சினையைப் பாடத்திட்டத்தில்  இடம்பெறக்கூடாது என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்த அதே வேளையில், உலகின் மறுபக்கத்தில், இந்திய மண்ணில் சாதிப்பிரிவினைக் கொடுமைகள் தொடர்ந்து  அரங்கேறிய வண்ணம் இருந்தது. இந்தியாவில் தலித் பிரிவு மாணவரான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் ரோஹித் வெமுலா தனது வருங்காலக் கனவுகள் கருகியதால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடிவிட்டு  தற்கொலை செய்து கொண்டார். கலப்பு மணம் செய்து கொண்ட உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர் பட்டப்பகலில் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை, கொலைக்குப் பலியான இருவாலிபர்களும் உயிரிழந்த காரணம் அவர்கள் தலித் சமூகத்தில் பிறந்ததால் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாக இருக்கும் பொழுது, அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பாடத்தில் இந்துமதத்தினரால் கடைப்பிடிக்கப்படும்  சாதிப்பிரிவுகள், தலித் வகுப்பினரிடம் நடத்தப்படும் அடக்குமுறைகள் யாவையும் நீக்கும்படி வலதுசாரிகள் கலிபோர்னியாவின் கல்வித் திட்டத்திற்கான கலந்தாய்வில் பரிந்துரைத்துக் கொண்டிருந்தனர்.

இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவா காவியினர் இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் குஜராத், கர்நாடகா மாநிலப் பாடநூல்களில் குளறுபடி செய்து வருவதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் அதனை நடைமுறைப்படுத்த விரும்பிய நிலைதான் இது. இதையொட்டி  அமெரிக்க இந்தியர்கள் இருபிரிவினராகப் பிரிந்து விவாதங்கள் தொடர்ந்தன.   வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்களைக் கொண்ட குழுவினர்  (Hindu American Foundation – HAF;   Hindu Education Foundation – HEF;  Uberoi Foundation – UF; and the Dharma Civilization Foundation – DCF) செல்வாக்குள்ள பிரிவினர். இவர்கள் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மாயையை முன் வைக்க முயன்றனர். இவர்கள் இந்திய  இந்துத்துவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

இந்தப் பழமைவாதிகளின் வாதங்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்பியவர்கள் மதச்சார்பற்றவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பல்கலைக்கழக  ஆய்வாளர்கள் எனப் பலவகை பின்னணிகளைக் கொண்டவர்கள். இவர்களில் பல்வேறு 24 இந்தியப் பிரிவினர் (The South Asian Histories for All Coalition  – SAHFA; http://www.southasianhistoriesforall.org/)  ஒருங்கிணைந்தனர். இவர்கள் இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் அடிப்படையில் ‘சாதி’ என்ற கருத்தாக்கத்தை இந்திய  வரலாற்றில் இருந்து மறைக்க முயல்வதைச் சுட்டிக்காட்டவும் விவாதம் சூடு பிடித்தது. இந்தியா பற்றிய இந்த விவாதம் அமெரிக்கர்கள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்துத்துவா ஆதரவு பிரிவினர் மிகத் தீவிரமாகப் போராட்டத்தைச் சமூக வலைத்தளம் மூலம் பரப்புவது; இந்துமதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பாடத்தில் வைத்தால் பிறமாணவர்கள் அக்கருத்துக்களைப் பொதுமைப்படுத்தி எங்களை அவமானப்படுத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பள்ளி மாணவர்களை அழைத்துப்  புலம்ப வைப்பது என்ற முறைகளைக் கையாண்டதுடன், பாடாதிட்டக்குழுவினரை அவமதிக்கும் வகையிலும் தங்கள் வாதங்களை வைத்தனர். இதனைப் பாடத்திட்டக்  குழுவின் உறுப்பினர் ஒருவரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலதுசாரி இந்துத்துவா ஆதரவு பிரிவினர்கள் ‘தலித்’ என்ற கருத்துக்கு ஆதரவு தருபவர்களை, இந்துமதத்தின் வகுப்பு வாத நம்பிக்கையால் தலித்துகள் மீது நிகழும் ஒடுக்குமுறையைப் பற்றிக் குறிப்பிடுபவர்களை இந்துமதத்தை அழிக்க நினைக்கும் வேற்றுமதத்தினர் என்றோ, அல்லது கிறித்துவ மத போதகர்கள் என்றோ, அல்லது அவர்கள்  கிறித்துவ  மதத்தின் கைக்கூலிகள் என்றோ, அல்லது இனவாதம் பேசுபவர்கள் என்றோ, இந்துக்களை வெறுக்கும் மனப்பான்மை கொண்டவர் என்றோ விதம் விதமாகத் தங்கள் மனம் போனபடி குறிப்பிட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கவும் தயங்கவில்லை.

இரு பிரிவுகளின் வாதங்களையும் கருத்தூன்றிக் கவனித்த கலிபோர்னியாவின் பாடத்திட்டக் குழுவினர், வரலாற்றைப் பற்றிப் பலரும் பற்பலக் கோணங்களை முன் வைக்கலாம், ஆனால் பாடத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை அறியத் தருவது  மட்டுமே என்று தங்கள் நிலையை வலியுறுத்தினர். முடிவாக, தெற்காசியா என்று குறிப்பதைக் கைவிட்டு ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டனர்.  மேலும், சாதி உயர்வு தாழ்வினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளின் தோற்றம் இந்துமதத்தில் வேரூன்றிய ஒரு  கருத்தாக்கம் என்பதால் ‘தலித்’ என்ற சொல், இந்தியாவில் நிலவும் சாதிப் பிரிவினைகள், இந்துமதத்தின் வர்க்கப் பிரிவுகளைப் பற்றிய செய்திகள், அதனால் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட விளைவுகள் போன்ற வரலாற்றுச் செய்திகள் பாடத்தில் இருந்து  நீக்கப்பட மாட்டாது என்றும் தங்கள் தீர்ப்பை, மே 19, 2016 அன்று முடிவாக வெளியிட்டனர்.

அடுத்த கல்வியாண்டில், வரும் செப்டெம்பரில் பள்ளிகள் துவங்கும் பொழுது, கலிபோர்னியா பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்திய வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களின் நூல்கள் கலிபோர்னியா கல்வித் திட்டத்தின் இந்த முடிவின் அடிப்படையிலேயே வெளியிடப்படும். சாதி பற்றிய குறிப்புக்களை மறைக்கப்பட வேண்டும் என முயன்ற இந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கைகள் இதனால் படுதோல்வியடைந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா மாநிலக் கல்வித்திட்டத்தில் இந்தியாவைப் பற்றிய கருத்துக்களில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் மாற்றம் வேண்டுவது இது முதல்முறையும் அல்ல.  பத்தாண்டுகளுக்கு முன்னரே (2006 இல்) பாடநூல்களில்  இந்தியக் கலாச்சாரம் பற்றிக் கற்பிக்கும் பாடத்தில் இந்துமதக் கலாச்சாரத்தை மட்டுமே பெரும்பான்மையாகக் குறிப்பிடவேண்டும் என்றும், இந்தியாவைப் பற்றி அறிமுகப்படுத்தும் பொழுது இந்து மதத்திற்கு முதன்மை நிலை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் அவை பாடத்திட்டக் குழுவால் புறக்கணிக்கப்பட்டு, அக்கோரிக்கைகள் நிறைவேறாமலும் போயுள்ளன. மேலும், இம்முறையோடு இந்தப் பிரச்சினை முடியப்போவதும் கிடையாது.

ஒவ்வொரு ஆறாண்டுகளுக்கும் கலிபோர்னியா மாநில அரசின் கல்வித்துறை பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பொழுதும் மீண்டும் புலம் பெயர்ந்த இந்தியர்கள், அவர்களில் வலதுசாரிகள் உட்பட தாங்கள் விரும்பும் மாற்றங்களை இந்தியக்  கலாச்சாரப் பாடங்களில் பரிந்துரைக்க  முயல்வர். அமெரிக்க இந்துத்துவா குழுவினர் தாங்கள் விரும்பிய மாற்றங்களை டெக்சாஸ் மாநிலம், ஃபுளோரிடா மற்றும் விர்ஜீனியா மாநிலங்களிலும் ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளனர். அதைப்பற்றிய தகவல் அவர்களது (hafsite.org) தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது (http://www.hafsite.org/sites/default/files/Texas%20Ed%20Infograph.jpg). இருப்பினும், கலிபோர்னியாவில் அவர்களது  முயற்சி (“இம்முறை”) தோல்வி கண்டுள்ளது.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக; அமெரிக்காவில் இந்தியாவைப் பற்றிய கல்வியில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தில் பெரும்பான்மையினர் அறிய வழியில்லாது போனது என்பது வருத்தம் தரும் ஓர் உண்மை. ” * வினவு”,  ” ** விடுதலை” ஆகிய சீர்திருத்தக் கருத்துக்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிக்கைகள் தவிர மற்ற  எந்தத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பது இணையத் தேடலின் மூலம் தெரிய வருகிறது.



சான்றுகள்:
[1]
Erasing Caste: The Battle Over California Textbooks and Caste Apartheid, May 3, 2016, The Huffington Post, http://www.huffingtonpost.com/thenmozhi-soundararajan/erasing-caste-the-battle_b_9817862.html

[2]
Debate Erupts in California Over Curriculum on India’s History, May 4, 2016, The New York Times, http://www.nytimes.com/2016/05/06/us/debate-erupts-over-californias-india-history-curriculum.html?

[3]
South Asian Community Debates 'South Asia,' 'India' Ahead of Textbook Updates, May 16, 2016, NBC News, http://www.nbcnews.com/news/asian-america/south-asian-community-debates-south-asia-india-ahead-textbook-updates-n570671

[4]
California Curriculum Body Acknowledges Reality of Caste System; Hindu American Foundation concedes on word “Dalit”, May 19, 2016, South Asian Histories For All, http://www.southasianhistoriesforall.org/

[5]
Caste Won’t Be Erased from California Textbooks, Says Committee, May 21, 2016, The Wire, http://thewire.in/2016/05/21/caste-wont-be-erased-from-california-textbooks-says-committee-37669/

[6]
Viewpoint: Why Hindu groups are against California textbook change, May 27, 2016, BBC News, http://www.bbc.com/news/world-asia-india-36376110


* கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
http://www.vinavu.com/2016/05/26/rss-deny-caste-discrimination-california-textbooks/

** அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6, 7ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு பகுதி நீக்கிட முயன்ற இந்துத்துவா சக்திகளுக்குப் படுதோல்வி!
http://viduthalai.in/headline/122778--6-7-.html


நன்றி:  சிறகு
ஜூன்  11, 2016


#அமெரிக்கா, #கல்வி, #சிறகு, #வரலாறு, #Themozhi


Saturday, January 23, 2016

பாயும் காளை

பாயும் காளை


ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்ற சிற்பி உருவாக்கிய “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் நியூயார்க் நகரின் “பாயும் காளை” சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு வெண்கலச் சிற்பம் (bronze sculpture). நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற சிற்பம் “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) எனவும், “பவுலிங் கிரீன் புல்” (Bowling Green Bull) எனவும் அழைக்கப்படுவதுண்டு. அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உருவாக்க இதன் சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா $360,000 டாலர்களைச் செலவிட்டார். 



பாயும் காளை நியூயார்க் நகரின் சின்னமாகவும், வால் ஸ்ட்ரீட்டின் சின்னமாகவும் கருதப்படுவதால் வால் ஸ்ட்ரீட் ஐகான் (Wall Street icon), ஃபைனான்சியல் டிஸ்ட்டிரிக்ட் ஐகான், நியூயார்க் ஐகான் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்னோக்கிப் பாயத் தயாராக உள்ள காளையின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆளுமைத் தன்மையையும், செழிப்பையும், நிதிநிலை முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. உருவில் மிகப் பெரியதாக அமைந்ததால், பல பாகங்களாகச் செய்யப்பட்டு, அவையாவும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டச் சிற்ப வடிவம் இது. 



“வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” (Occupy Wall Street Movement) இந்தப் பாயும் காளை சிற்பத்தின் மீது பாலே நடனமாடும் பெண்ணின் உருவத்தைக் கொண்ட படங்கள் கொண்ட பதாகைகளை உருவாக்கி, தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர் என்பது, எவ்வாறு இந்தக் காளை சிற்பம் வால் ஸ்ட்ரீட் என்பதன் மறு உருவமாகவே மாறிவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. ஆர்ட்டுரோ டி மோடிக்கா உருவாக்கத் திட்டமிட்ட ஐந்து பாயும் காளைகளில் ஒன்று இந்த வால் ஸ்ட்ரீட் பாயும் காளை. மற்றொன்று சீனாவின் ‘ஷாங்காய், (Shanghai) நகரிலும், மேலும் ஒன்று ஆம்ஸ்டர்டாமின் ‘ஹெட் போவர்ஸ்பிளைன்’ (Het Beursplein) நகரிலும் முறையே 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டதும், அது வால் ஸ்ட்ரீட்டில் நிறுவப்பட்டதும் கருத்தைக் கவரும் ஒரு வரலாற்றுக் கதை எனலாம். அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாற்றில் “கருப்புத் திங்கள்” (Black Monday – Monday, October 19, 1987) என அழைக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் அன்று பங்குச்சந்தை ஒரே நாளில் அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இழப்பைத் தாங்க இயலாத பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு. அந்த நிகழ்விற்குப் பிறகு பங்குச் சந்தை இது போன்று மோசமான நிலையில் விரைவில் சரியும் போக்கில் திரும்பும்பொழுது, அதன் அதீதச் சரிவை முறையாகக் கட்டுப்படுத்தும் திட்டங்களும் விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இழப்பினால் கலங்காமல் மீண்டும் துடிப்புடன் உயிர்த்தெழுந்தது அமெரிக்கப் பங்குச்சந்தை. பொருளாதாரத்தில் அமெரிக்க மக்களின் வலிமையையும் சக்தியையும் சித்தரிக்கும் கருத்தை, சிற்பம் ஒன்றாக உருவாக்க விழைந்த ஆர்ட்டுரோ டி மோடிக்காவிற்கு முன்னோக்கி ஆளுமையுடன் பாயும் காளை ஒன்றை உருவாக்கும் திட்டம் தோன்றியது. பங்குச் சந்தை முன்னேற்றம் அடைவதைக் காளை அல்லது “புல் மார்க்கெட்” (bull market) எனவும், வீழ்ச்சி அடைவதைக் கரடி அல்லது “பியர் மார்க்கெட்” (bear market) எனவும் பொதுவாகக் குறிப்பிடுவதும், பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருப்பதை “புல்லிஷ் அவுட்லுக்” (bullish outlook) என்பதும் வழக்கம். எனவே துடிப்பு நிறைந்து சீற்றத்துடன் முன்னோக்கிப் பாயும் காளையின் சிற்பம் வால் ஸ்ட்ரீட்டைக் குறிக்க மிகவும் பொருத்தமாகவும் அமைந்தது. 

ஆனால், இதை வால் ஸ்ட்ரீட்டில் நிறுவ வேண்டும் என்பது ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் திட்டம் மட்டுமே. அமெரிக்க அரசோ, நியூயார்க் நகராட்சியோ சிற்பியிடம் கேட்டுக் கொள்ளவும் இல்லை, இந்தப் பொறுப்பை ஒப்படைக்கவுமில்லை. இதைச் செய்வதற்குச் சிற்பிக்கு எந்த ஓர் அதிகாரப்பூர்வமான அனுமதியும் கிடையாது. சிற்பி தனது சொந்த விருப்பத்தில் சிற்பம் வடித்து அதிரடியாக நகரின் சாலையில் நிறுவி விட்டார். எனவே இதனை “கொரில்லா கலை” (guerrilla art) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. சிற்பத்தை டிசம்பர் 1989இல் வடித்து முடித்த ஆர்ட்டுரோ டி மோடிக்கா அதற்குப் பொருத்தமான இடம் என்று கருதிய வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் முன் பிராட்வே இல் வைக்க விரும்பினார். நகராட்சியிடம் அனுமதி கேட்கும் எண்ணமே அவருக்கு இல்லாததால் யாருக்கும் தெரியாமல் இரவில் கொண்டு வந்து கிறிஸ்துமஸ் பரிசு போல விட்டுவிட்டுச் செல்ல எண்ணி, சிலையை ஏற்றிச் செல்லத் தகுதி படைத்த ஒரு ட்ரக் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு அந்த இடத்தை வேவு பார்த்தார். அந்தச் சாலையில் ஐந்தாறு நிமிடங்களுக்கு ஒரு முறை காவல்துறை ஊர்தி கண்காணிப்பதைக் குறித்துக் கொண்ட ஆர்ட்டுரோ டி மோடிக்கா, சிலையை இறக்கி வைப்பதை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்தார்.

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 15, 1989 அதிகாலையில் ஆர்ட்டுரோ டி மோடிக்கா தனது சிற்பத்துடன் குறித்த இடத்திற்கு வந்த பொழுது, அதற்கு முன்னர் அங்கு நியூயார்க் பங்குச் சந்தை கிறிஸ்துமஸ் விழாவிற்காக அலங்கரித்த 60 அடி உயரக் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு வைத்திருக்கக் கண்டார், தனது திட்டத்தைக் கைவிட முடியாமல் அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் அடியிலேயே நவீனக் காலத்துச் சாண்டா கிளாசின் கிறிஸ்துமஸ் பரிசு போல, தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் சிலையை இறக்கிவைத்துவிட்டு மாயமாகிவிட்டார். மறுநாள் காலை நகர மக்களுக்கு அவர் அளித்த பரிசு பெரும் பரபரப்பை உண்டாக்கியது, யார் அங்கு நிறுவியது என்ற ஆராய்ச்சியும், சிற்பத்தின் கவரும் தோற்றமும் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டியது. நகராட்சி தனக்கும் சிற்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதை தாங்கள் உருவாக்கி அங்கு வைக்கவில்லை என்று சொல்லித் துப்பறியத் துவங்கியது.

இதற்கிடையில் அமைதியாக, சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா நியூயார்க் மக்களுக்கான பரிசாக, தான் உருவாக்கிய சிற்பம் பற்றிய தகவல்கள் நிறைந்த அறிக்கைகளை விநியோகிக்கத் தொடங்கினார். பொது இடத்தில், சாலையில் அத்து மீறி நிறுத்தப்படும் கார்களை அகற்றுவது போலச் சிலையை அகற்ற, சிலையின் அளவைக் கையாளும் ட்ரக் வரவழைக்கப்பட்டு, நகராட்சியும் நியூயார்க் பங்குச் சந்தை நிறுவனமும் சிலையை அப்புறப்படுத்தின. அதற்குள் சிற்பத்தின் மீது பற்று மிகக் கொண்டுவிட்ட மக்கள் அதை அகற்றக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் செய்து, எதிர்ப்புக் குரல் எழுப்பத் துவங்கினர். சிற்பி சிலையை விட்டுச் சென்ற இடம் பொருத்தமாக இல்லை, அச்சிலை அந்த இடத்திற்கு இடையூறாக அளவில் பெரியதாக இருக்கிறது. எனவே பாயும் காளை பங்குச்சந்தையை நோக்குவது போல, பவுலிங் கிரீன் பகுதியின் பிராட்வே – மோரீஸ் சாலையில் அந்தச் சிலையை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்த நகராட்சியின் பார்க் நிர்வாகம் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, டிசம்பர் 21, 1989 அன்று அகற்றிய சிலையைத் தானே மீண்டும் கொண்டு வந்து வைத்தது.

நிறுவப்பட்ட நாள் முதலே இந்தச் சிற்பத்தின் புகழும் வளரத் தொடங்கியது. திரைப்படங்களில், பத்திரிக்கைகளில் என எதிலும் நியூயார்க் நகரைக் குறிக்கும் சிற்பமாக இடம் பிடிக்கத் துவங்கியது. நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ‘சுதந்திர தேவி” (Statue of Liberty) சிலைக்கு நிகராக, அதிகச் சுற்றுலாப் பயணிகள் சிலையுடன் தங்கள் படங்களை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் புகழ் பெற்று விட்டது இந்தப் பாயும் காளை. அத்துடன் இந்தப் பாயும் காளையின் உறுப்புகளை வருடிக் கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற மூடநம்பிக்கையும் மக்களிடம் வளர்ந்து வருகிறது. பாலிவுட் படமான ஷாரூக்கான் நடித்த “கல் ஹோ நா ஹோ” (Kal Ho Naa Ho – 2003) படத்தின் இந்தச் சிற்பத்துடன் படம் எடுத்துக் கொள்வது பற்றிய பாடல் இடம் பெற்ற பிறகு இது இந்திய மக்களின் விருப்பமான சுற்றுலாத்தலமாக நியூயார்க்கில் மாறிவிட்டதாகவும் தெரிகிறது. 

ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பை விலையின்றி, காட்சிக் கட்டணமின்றி நியூயார்க் நகருக்குள் காட்சிப்படுத்த ஓர் ஆண்டுக்கு மட்டுமே தற்காலிக அனுமதி உண்டு. எனவே அந்த ஓராண்டுக் காலக்கெடுவும் என்றோ முடிந்துவிட்டது. அதன் பிறகு ஒரு கால் நூற்றாண்டும் கூட கடந்துவிட்டது. இந்தச் சிற்பத்தை விலைக்கு வாங்கும் எண்ணமும் நியூயார்க் நகருக்கு இல்லை. அது சிலையை நன்கொடையாக ஏற்றுக் கொள்ளவுமில்லை. அதாவது சிற்பியும் சிற்பத்தை நன்கொடையாக நியூயார்க் நகருக்கு வழங்கவுமில்லை. சட்டப்படி தற்காலிக அனுமதி காலாவதியானது பற்றியெல்லாம் யாரும் இதுவரை அக்கறை கொள்ளவும் இல்லை. இருந்தாலும், அது நியூயார்க் நகர் வால்ஸ்ட்ரீட்டின் சின்னம் என்பது மட்டும் அனைவரது மனதிலும் ஆழப் பதிந்துவிட்டது. “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” போராட்டம் நடத்திய பொழுது சிலைக்குச் சேதம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் நகரக் காவல்துறையும் சிலைக்கு மூன்றாண்டுகள் பாதுகாப்பும் கொடுத்தது. சுற்றுலாப்பயணிகளைச் சிலையின் அருகே நெருங்கவும் அனுமதிக்கவில்லை.

இந்தச் சிற்பத்தின் காப்புரிமை ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் வசம்தான் உள்ளது. இதனை விற்பதற்கும் அவர் தயாராக உள்ளார், ஆனால் சிலையை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்பது அவரது விற்பனையின் நிபந்தனை. இதற்கிடையில் இந்தச் சிலையின் படத்தைப் பயன்படுத்தி நூல் ஒன்றை வெளியிட்ட ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் மீதும், காளையின் உருவத்தை மாதிரிப் பொம்மைகளாகச் செய்து விற்ற வால்மார்ட்டின் மீதும், சிலையின் படத்தை விளம்பரங்களில் பயன்படுத்திய மற்ற சில நிறுவனங்கள் மீதும், முறையற்ற வகையில் அனுமதியின்றித் தனது கலையை விற்றுப் பொருளீட்டுவதாகக் குற்றம் சுமத்தி காப்புரிமையின் அடிப்படையில் இழப்பு கோரி ஆர்ட்டுரோ டி மோடிக்கா நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்ந்துள்ளார்.

சிற்பியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: 
சிசிலியைச் சேர்ந்த 74 வயதாகும் இத்தாலியச் சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா, ஜனவரி 26, 1941 இல் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் ஜிஸ்செப்பி மற்றும் ஆஞ்சலா (Giuseppe and Angela), தந்தை ஒரு சிறு தொழில் வணிகர். தனது எதிர்கால விருப்பம் சிற்பியாவது என்று முடிவு செய்த ஆர்ட்டுரோ டி மோடிக்கா அவர்கள் செய்த சிற்பங்கள் யாவும் பதின்ம வயதிலேயே அவருக்குப் புகழைத் தேடித் தந்தன. இதனால் தனது கலைத்திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பி கலைகளுக்கு வரலாற்றுப் புகழ் பெற்ற ஃப்ளோரன்ஸ் நகருக்குச் சென்று சிற்பக்கலைக்குப் புகழ்பெற்ற கல்லூரியில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். இத்தாலியின் புகழ் பெற்ற சிற்பிகள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் கனவாக இருந்தது. பயிற்சிக்குப் பிறகு ஃப்ளோரன்ஸ் நகரில் தனது கலைக்கூடத்தைத் துவக்கி வெண்கலம், பிற உலோகங்கள், பளிங்குச் சிற்பங்கள் ஆகியவற்றை உருவாக்கி புகழேணியில் ஏறத் துவங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் இத்தாலிய கலை வாழ்க்கையின் தொடர்ச்சியாக அமெரிக்கா சென்று அங்குத் தனது கலைத்திறமையைக் காட்டத் திட்டமிட்டார். அவரது அமெரிக்கக் கலைக்கூடத்தில் உருவான சிற்பங்களும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் அவருக்குக் கொண்டுவந்து சேர்த்தன. பாயும் காளை சிலைக்காக அமெரிக்காவின் எல்லீஸ் தீவு கௌரவ விருதினையும் 1999 ஆம் ஆண்டு பெற்றார் (United States the Ellis Island Medal of Honor). அடுத்து ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய சிற்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Broadway & Morris St, New York, NY 10004 என்ற இடத்தில் உள்ள புகழ் பெற்ற இந்தப் பாயும் காளை சிலையை விலைக்கு வாங்க விரும்புபவரோ, அல்லது மற்றத் தகவல்கள் வேண்டுவோரோ சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்காவை dimodica@earthlink.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இணையத்தின் வழி சிலையின் ஒளிக்காட்சி தொடர் ஒளிபரப்பை (live streaming broadcast by webcam) இங்குக் காணலாம் http://chargingbull.com/video.html 


கட்டுரைக்கான தகவல்கள் பெற்ற தளங்கள்:
[1] Charging Bull
http://chargingbull.com/

[2] Charging Bull
https://en.wikipedia.org/wiki/Charging_புல்

[3] A New York Story: How the Charging Bull “chose” Wall Street, by Tiziano Thomas Dossena
http://www.bridgepugliausa.it/articolo.asp?id_sez=2&id_cat=37&id_art=3483&lingua=en


நன்றி:  சிறகு
ஜனவரி  23, 2016

அமெரிக்கா, சிறகு, Themozhi