Showing posts with label தமிழணங்கு. Show all posts
Showing posts with label தமிழணங்கு. Show all posts

Saturday, October 11, 2025

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"


சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்னவாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.  மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம். சித்தன்னவாசல் குகைக்கோயிலின் முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஓவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.  வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஓர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவு கொண்டனர். அவனுக்கு அண்மையில் உள்ளது அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது;  என்று இவ்வாறாகத் தமிழ் அறிஞரும் வரலாற்று  ஆய்வாளரும் ஆன டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர் எழுதிய "பல்லவர் வரலாறு" நூலில் குறிப்பிடுகிறார். 

ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்  எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்:   மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.  நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை,  காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக  அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில்  காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில்,  மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும்.  அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு.  அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள்.  இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன.  உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார்  மயிலை சீனி வேங்கடசாமி.


செய்யறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட சித்தன்னவாசல் குகைக்கோயில்
"அரசன் அரசி ஓவியம்"



 
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு அக்கால வரலாற்று  ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர்.  மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.  

மேலும்; பாண்டிய மன்னன்  ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர்  சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

      "திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
      தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
      அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
      வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
      லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை  . . . . . . . . .
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
      அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
      சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
      புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
      மெடுத்தான் முன்"

சொல் பிரித்து :
      "திருத்திய பெரும் புகழ் தைவ தரிசனத்து 
      அரும் தவ முனிவனை பொருள் செல்வன்
      அறம் கிளர் நிலைமை இளங்கௌதமன் என்னும் 
      வளம் கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனே பார் முழுதும் ஆண்ட பஞ்சவர் குல 
      முதலார் கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை......   
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாயில்  அலறிவர் கோ இன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி...... 
      அழியா வகையாற் கண்டனனே...... 
      சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம்
      புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டகம் 
      எடுத்தான் முன்"

இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில்,  சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது.  இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்துத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும்  காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும்,  அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


அடிக்குறிப்புகள்:
https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htm
https://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை

நன்றி: தமிழணங்கு - நவம்பர் 2025 (பக்கம்: 3-6)

Monday, September 29, 2025

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

முனைவர் மு. முத்துவேலு
முதல் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது "வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்" என்னும் நூலாகும்.




நூலைத் தொகுத்தவர் பைந்தமிழ் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள்.  ஆத்திசூடி என்பது தமிழ் அற நூல்கள் மரபில் ஒரு புதிய யாப்பு வடிவத்தில்  அமைந்திருப்பதாகும்.  இது அறக்கருத்துக்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவமாக அமைந்துள்ளது. எனவே ஆத்திசூடி வடிவத்தை ஔவைக்குப் பின் பாரதியும் அதற்குப் பின்னர் பாரதிதாசனும் இன்னும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புலவர் மக்களும் தாங்கள் கூற வந்த கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ற வடிவமான ஆத்திசூடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள் திருக்குறளை ஆத்திசூடி முறையில் தொகுத்துள்ளார். தமிழின் நெடுங்கணக்கு அகர வரிசைப்படிச் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறுகிற ஆத்திசூடி முறையினுக்கு ஏற்ப
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" எனத் தொடங்கும் முதல் குறளில் இவரும் தொடங்கியுள்ளார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்"  என்னும் அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் 363-ஆம் குறளோடு இதனை நிறைவு செய்துள்ளார்.

எழுபது திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அமைத்துள்ளார். இந்த நூலில் கடவுள் வாழ்த்து, கல்வி, காலம் அறிதல், அவா அறுத்தல், புகழ், பெருமை, வாய்மை முதலிய அதிகாரங்களிலிருந்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனைய 54 அதிகாரங்களிலிருந்து ஒரு குறள் என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து மொத்தம் எழுவது குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் சில சிறப்புச் செய்திகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருக்குறள் பற்றிச் சில ஆராய்ச்சிச் செய்திகளை ஆய்வறிஞர் தொகுத்து வழங்கியிருப்பது மிகுந்த பயன்பாட்டுக்கு உரியதாகும்.

நூலில் ஆத்திசூடி என்பதற்கான இலக்கணத்தை அருமையாக எடுத்துரைப்பதும் மாணவர்களின் நலன் கருதி அமைந்தது எனலாம் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுகிற பொழுது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அமைத்துச் சொல்லுகிறார்.  ஔவையின் ஆத்திசூடியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

திருக்குறளில் இருந்து ஆத்திசூடி முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்களைப் பட்டியலிடும்போது முனைவர் சேயோன் அவர்கள் 2001 இல் தொகுத்தளித்த திருவள்ளுவர் ஆத்திசூடியையும் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமையையும் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

அகரவரிசையில் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அடுக்கித் தருகிற பணியை மட்டும் செய்யாமல் அந்தக் குறள்களுக்கு எளிய முறையில் உரையையும் வழங்கி உள்ளார்.  ஆய்வறிஞர் தேமொழி அவர்களின் எளிய உரைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
      முயற்சித் திருவினை யாக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்  (ஆள்வினை உடைமை குறள்- 616)
இந்தக் குறளுக்கு ஆசிரியரின் உரை பின்வருமாறு அமைகிறது. "முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையை வந்து சேரும்"

இரண்டாவதாக, 
      பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
      நன்மை பயக்கும் எனின்  (வாய்மை அதிகாரம் குறள் - 292)
இதற்கான தேமொழியாரின் உரை: பொய்யினால் நல்ல நன்மை ஏற்படக்கூடுமானால் அப்பொய்யையும் மெய்யாக ஏற்கலாம்.

இந்த வகையில் ஒவ்வொரு குறளுக்கும் இனிய எளிய உரை அமைத்திருப்பது சிறப்பாகும்.  இந்த உரைகளைக் காணும் பொழுது தேமொழியார் திருக்குறள் முழுவதற்கும் இது போன்ற எளியதோர் உரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

முனைவர் க. சுபாஷிணி  அவர்கள் தம் பதிப்புரையில், "பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிய முறையில் சில குறட்பாக்களைப் பிழையின்றிக் கற்றுக் கொள்வதற்கு இது சிறந்த முறை மட்டுமல்ல எளிமையானதும் கூட" என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம் உடையதாகும்.

ஆய்வறிஞர் தேமொழியார் தம் எளிய உரையின்மூலம் படிப்பவர்களை திருக்குறளுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.  எல்லோரும் திருக்குறளைக் கற்க இந்நூல் கைவிளக்காகத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
 — முனைவர் மு. முத்துவேலு
நன்றி: தமிழணங்கு - அக்டோபர் 2025 (பக்கம்: 91-93)



#தமிழணங்கு,  #திருக்குறள், #நூலறிமுகம், #முனைவர்.மு.முத்துவேலு, #Themozhi


சமணர்களுக்குரிய தீபாவளி

சமணர்களுக்குரிய தீபாவளி


"தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் தீபாவளி பண்டிகையாக விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதல் பன்னாட்டு அரங்கில்,  பரவலாக உள்ளது. உண்மையில் தீபாவளி சமணர்களின் பண்டிகை.  தீபாவளி  என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாகச் சமணர்கள் தொன்று தொட்டுக்  கொண்டாடுகின்றனர் என்ற  'வரலாற்று அடிப்படை'  உள்ளதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்  அடிப்படையாகக்  கொண்டது  இந்த விளக்கேற்றும் பண்டிகை.

வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமண சமயத்தின் 24ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறு பெற்ற தினத்தை  விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடு நாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள்  (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி)  என்பது இவர்கள் முடிவு.

முற்றும் துறந்த துறவியான தீர்த்தங்கரர் மகாவீரர் அறவுரை ஆற்றிட பல இடங்களுக்கு எழுந்தருளுவார். இதை  ‘ஸ்ரீ விஹாரம்’ என்பர். சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றிப் போதிக்கும் இடம் சமவசரணம் எனப்படும். 'சமவசரணம்' என்ற அறவுரை  நிலையங்களில்  மகாவீரர் எழுந்தருளி அறவுரை ஆற்றி மக்களை  வழி  நடத்துவார்.  அதன் மையப்பகுதியில் அரியணை, முக்குடை முதலான சிறப்புகளோடு கூடிய இடத்தில்  இருந்து அறவுரை வழங்குவார்.  மகாவீரர் தன் இறுதி நாளில் (அக்டோபர் 15,   527 பொ.ஆ.மு) பாவாபுரி நகரின் சமவசரணமத்தில் அறவுரை ஆற்றினார்.

தனது  ஆயுள் விரைவில் முடியும் என்று உணர்ந்து அறவுரை நிலையத்தை விட்டு அகன்றார். பாவாபுரியில் மிகவும் அழகான பெரிய தாமரைக் குளம் ஒன்று இருக்கின்றது (அத் தாமரைக் குளம் இன்றும் உள்ளது).  அக்குளத்தின் நடுவில்  உள்ள  அகன்ற கற்பாறையின் மீது நின்ற நிலையில் மகாவீரர் இரு நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் (தற்போது அப் பாறையின் மீது ஆலயத்தை உருவாக்கி மகாவீரரின் திருவடிகளை வைத்து  வழிபாடு  நடை பெறுகிறது).  மன்னன் மற்றும்  மக்கள் பகற்பொழுதில்  வந்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். மகாவீரர் வாழ்க்கையின்  இறுதிநாள் பின்னிரவில் அவருடைய ஆயுள் முடிவுற்ற இடம் பாவாபுரி தாமரைக்குளக்  கற்பாறை.  அவர் அன்று ஆன்ம விடுதலை பெற்று ‘பரிநிர்வாணம்’ என்ற பிறவாநிலையை எய்தினார் என்பது சமண நூல்கள் தரும் செய்தி. மறுநாள் காலையில் மக்கள் வழக்கமாக மகாவீரரை வழிபட வந்தபோது அவர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதை அறிந்த மக்கள் எளிதில்  பெற  இயலா ஆன்ம  விடுதலை என்னும்  பிறவாநிலையை  எய்திய மகாவீரர் உலக உயிர்களுக்கு அறிவொளியை வழங்கியதை எண்ணி அவர் நினைவாக அனைவருடைய இல்லங்களிலும் வரிசையாகப் பல விளக்குகளை ஏற்றி மகாவீரரை தம் மனதில் இருத்தி வழிபட்டனர். இதுவே  நாடெங்கும் தீபாவளி விழாவாக இந்நாள்வரை ஒளிர்கிறது.  மகாவீரர் மறைந்தாலும், அவரது ஆன்மிக ஞானம் உலகின் இருளை நீக்கி ஒளியேற்றுகிறது என்பதை விளக்குவதற்காகத் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.  மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல்.

 
மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஓர் அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்ற சொல்  முதன் முதலில்  எழுத்து வடிவில் கிடைப்பது  சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்,  கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena)  இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.

           ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்
           ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .
           ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்
           ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்

என்ற வரிகளில்  மகாவீரர் மறைந்த நாளில் பாவாபுரியில்  'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் என்பவர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூலில்தான் சமணர்கள் தீபாவளி  கொண்டாடியதாக 'தீவாளி' அல்லது 'தீபாவளி'  என்ற சொல்  முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  வைதீகர் கொண்டாடும் தீபாவளி  பண்டிகைக்குக்  கிடைக்கும் சான்றுகள் மிகப் பிற்காலத்தவை.  அதன் தீபாவளி  கொண்டாடப் படுவதற்கான புரணக்கதைகளும்  இயற்கைக்கு  மாறான புனையப்பட்ட  கதைகள்.

சமண நாட்காட்டியின்படி, தீபாவளி அந்த ஆண்டின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த நாள், சமணப் புத்தாண்டு தொடங்குகிறது. (மகாவீரர் ஆண்டு) மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளில், அவரது தலைமை சீடரான கணாதர் கௌதம சுவாமிக்கு, முழு ஞானம் (கேவலஞானம்) கிடைத்ததும் தீபாவளியின்போது நினைவுகூரப்படுகிறது.

பொதுவாக சமணர் எனும் சொல் தமிழ்ச் சமணர்களைக் குறிக்கும். ஜைனம், ஆருகத மதம், அனேகாந்த மதம், ஸ்யாத்வாத மதம், நிகண்ட மதம் எனப் பலவாறாகச்  சமணம் குறிப்பிடப் படுகிறது (சமணமும் தமிழும்,  பக்கம்: 1- , கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி )   தமிழகத்தில் வாழும்   மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). பொதுவாக தமிழ்ச் சமணர் அனைவரும் திகம்பர சமணத்தைப் பின்பற்றுபவர்.  

சமணர்களின் தீபாவளி கடைப்பிடிக்கப்படும் முறைகள் வைதீகர்  கொண்டாடும் தீபாவளி  நடைமுறை வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சமணர்களின் மிக முக்கியமான கொள்கையாக உயிர்களைத் துன்புறுத்தாமை (அகிம்சை) என்பதைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, பட்டாசுகள் வெடிப்பதால் பல உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதால் தீபாவளியன்று அவர்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. மகாவீரரின் துறவற வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக சமணர்களில் சிலர் தீபாவளியன்று நோன்பு மேற்கொள்வதுண்டு.

பல சமணர்களில் சிலர் மகாவீரர் முக்தி பெற்ற பீகார் மாநிலத்திலுள்ள பாவாபுரிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அடிப்படை நோக்கமாக, மகாவீரரின் ஆன்மிக வெற்றியைக் கொண்டாடும் ஒரு புனிதமான, அமைதியான பண்டிகையாக ஆரவாரமின்றித் தீபாவளியைச் சமணர்கள் கொண்டாடுவர். வெவ்வேறு பகுதியில் வாழும் சமணர்களிடமும், சமண சமயப் பிரிவுகளிடையேயும்,  பண்டிகை  வழக்கங்களில் வெவ்வேறு பாரம்பரிய முறைகளின் காரணமாகச் சிற்சில வேறுபாடுகளும் உண்டு.


சமணக் கோவில்களில் மகாவீரருக்கு, நிர்வாண லட்டு எனப்படும் ஓர் இனிப்பு வகை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.  இது தமிழ்ச் சமணர்களுக்கு வடக்கிலிருந்து இங்கு வந்தவர்களிடமிருந்து வந்த  புது வரவு.   மகாவீரர் முக்தியடைந்த நாளில் சமணர்கள் ஆலயத்தில் (ஜினாலயம்)   மாவிளக்கேற்றி வழிபாடு இயற்றுவர்.  இதற்கென சிறப்பாகப்  பச்சரிசியைக் கழுவி  பதமாக உலர்த்தி இடித்து அந்த மாவைக்கொண்டு அகல்போன்ற விளக்கைச் செய்து, இதற்கென தனியே நெய்யைச் சேகரித்து வைக்கப்பட்ட தூய நெய்விட்டு விளக்கேற்றுவார். தற்போது மாவிளக்கு மற்றும் நிர்வாண லட்டு ஆகிய இரண்டும் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

மகாவீரரின் அறிவுரைகளை நினைவுகொள்ளும் விதமாக, வழிபாடுகளிலும், சிறப்புச் சொற்பொழிவுகளிலும் நிகழ்த்தப்படும்.

 
தமிழ்ச் சமணர்கள் தமிழகத்தின் ஜினாலயங்களில் (ஜினர் ஆலயம்) விடியற்காலையில் வரிசையாக  அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.   மகாவீரர் வரலாற்றைப் படிப்பார்கள் (இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் வரலாற்றைக் கூறும் 'ஸ்ரீபுராணம்' எனும் நூலில் உள்ள மகாவீரர் வரலாறு படிக்கப் பெறும்).  இதுமட்டுமின்றி  சித்தபக்தி, பரிநிர்வாண பக்தி  எனும் போற்றிப் பாடல்கள் (தோத்திரங்கள்) ஓதப்படும். பாவாபுரியில் உள்ள தாமரைக் குளம் போன்ற  அமைப்பைச் சிறிய அளவில் அமைத்து அதில்  மகாவீரர் திருவடிகளை வைத்து  சில இடங்களில் வழிபடுவர்.  தமிழ்ச் சமணர்களும்  ஆடவரும்  மகளிரும் விரதம் ஏற்பர்.

மகாவீரர் முக்தி பெற்ற  நிகழ்வு முதன்மையானது என்றாலும், மற்றும் சில சமண சமூகத்தினர் அவருடைய தலைமைச் சீடரான கௌதம சுவாமி, மகாவீரரின் மறைவுக்குப் பின் ஞானம் பெற்றதையும் முக்கியமாகக் கருதுகின்றனர்.  சுவேதாம்பர பிரிவு சமணர்கள், மகாவீரரின் இறுதித் தவத்தை நினைவுகூரும் வகையில், தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்கள் நோன்பு இருப்பதுண்டு.


சுவேதாம்பர சமணர் ஆலயங்களில்  "உத்தரத்யாயன சூத்திரம்" போன்ற புனித நூல்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கின்றனர்.  சுவேதாம்பர பிரிவு ஜைனர்களால் மகாவீரரின் பிறப்பு வரலாற்றைச் சொல்லும் கல்பசூத்திரம் என்ற புனித நூல் இந்த நாட்களில் வாசிக்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளில், ஞானபஞ்சமி ("அறிவின் ஐந்தாவது") என்ற விழாவைக் கொண்டாடி, கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர்.

குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பல ஜைன  (சமண) வணிகர்களுக்கு, தீபாவளி நிதி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இவர்கள் புதிய கணக்குப் புத்தகங்களை வாங்கி, சோப்தா பூஜை எனப்படும் சடங்குடன் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். சிலர் சதர்மிக் வாத்சல்யா போன்ற சமூக சமையல் நிகழ்வுகளை நடத்தி, அனைவரும் ஒன்றுகூடி உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கொடை அளிப்பது, பரிவு ஆகியனவற்றுக்குத் தீபாவளி  நாளில் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் சமூக சேவையாக உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிப்பது  (ஆகார தானம்), குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது  (ஞான தானம்), நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் இலவச மருந்துகள் அளிப்பது (ஔஷத தானம்),  உயிர் வாழும் உயிரினங்களைக் காப்பது மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது (அபய தானம்) போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதும் உண்டு.   உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலைப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமண சமூகத்தினர் பங்கேற்று, உயிர்களைக் காப்பதற்கான உறுப்பு தானத்தின் தேவையை வலியுறுத்துகிறார்கள். தன்னலமற்ற தொண்டு செய்வதற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நேரத்தையும், திறன்களையும் தானாக முன்வந்து செலவிடுவது ஒரு சிறந்த அறச் செயலாகக் கருதப்படுகிறது.

இறுதியாக, சமணர்களுக்குத் தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா மட்டுமல்ல, ஆன்மாவின் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஆன்மிகப் பயணத்தின் ஒரு குறியீடு ஆகும்.  



 இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாகத் தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி 'இந்தியப் பண்டிகை என்றால் அது தீபாவளி' என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது.

---------------------------------


""சமணர்களுக்குரிய தீபாவளி""
— முனைவர் தேமொழி
https://archive.org/details/thamizhanangu-october-2025/page/1/mode/2up
நன்றி : தமிழணங்கு - அக்டோபர் 2025  (பக்க: 1-6)


#தமிழணங்கு,  #தீபாவளி, #Themozhi 

Friday, August 1, 2025

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!


“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி  பகவத்கீதையின் சாரம் என்ற குறிப்புடன் “கீதாசாரம் சுவரொட்டி"யில் இடம் பெறும் கருத்துகள் யாவும் ஓர் ஆன்மீகப் புனைவு அல்லது கட்டுக்கதை.



வேதங்களின் சாரம் உபநிஷத்துகள்; அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத்கீதை. உபநிஷத்துகளின் சாரமான பகவத்கீதையை கண்ணன் மக்களுக்காக அருளிச் செய்தார் என்பது ஆன்மீக வாதிகள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. இவ்வாறாக பகவத்கீதை என்பதே எழுநூறு வசனங்களில் கொடுக்கப்பட்ட உபநிஷத்துகளின் சுருக்கமான சாரம்  என்ற நிலை இருக்கையில், அந்த சாரத்திற்கும் சாரம் என்று கீழ்க்காணும்;

      "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
      எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
      உன்னுடையதை எதை இழந்தாய்,
      எதற்காக நீ அழுகிறாய்?
      எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
      எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
      எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
      அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
      எதைக் கொடுத்தாயோ,
      அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
      எது இன்று உன்னுடையதோ
      அது நாளை மற்றொருவருடையதாகிறது
      மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
      இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்."
 பதினைந்து வரிகள் கொண்ட சொற்றொடர்கள் மிகப் பரவலாக அறியப்படுகின்றன.  

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ததும் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அவர் அளித்த செய்தியில்;  
      "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"
என்று தமது சமயச்சார்பற்ற உள்ளத்தை வெளிப்படுத்தினார்.

கீதையின் சுருக்கமாக கீதையின் இறுதியில் இரண்டே வசனங்களில் கண்ணனே கூறும் சாரத்திற்கும், கீதாசாரம் என அறியப்படும் இந்த 15 வரி சொற்றொடர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும்; பகவத்கீதையை முழுமையாகப் படித்தவர்கள், கீதாசாரம் சுவரொட்டியில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளைக் கீதையிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது என்கிறார்  ஸ்ரீ கிரிதாரி தாஸ் (https://www.facebook.com/profile.php?id=100005426808787).  

மேலும் அவர்,   கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது.  இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல, கீதாசாரம் சுவரொட்டியில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமும் இல்லை. என்கிறார்.

அனைத்தும் நன்மைக்கே என்பதைக் கீதையில் காண இயலாது.
"இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத்கீதை: 8.15) என்கிறது கீதை.
இவை  ஒன்றுக்கு  ஒன்று முரண் படும் கருத்துகள்.

தொடர்ந்து வரும் மற்ற வரிகளும்  கீதை சொல்லும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்பயன் கருத்துக்கு மாறான கருத்துகளாகவே  அமைந்துள்ளன என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ். அதாவது, புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும், பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படியே நடக்கின்றது  என்பது கண்ணன் கீதையில் கூறும் தத்துவம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் கண்ணனைச் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். என்பது இவர் வைக்கும் கருத்தாகும்.

திருவண்ணாமலை முனிவர் பகவான் ரமண மகரிஷி அவர்கள் பகவத்கீதையின் 700 வசனங்களில் 42 வசனங்களைத் தேர்ந்தெடுத்து, முழு கீதையின் சாரத்தையும் கீதாசாரம்  என்று தமிழில் வழங்கியுள்ளார்.  


கண்ணனின் கூற்றாகக் கீதை சாரத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மிகச் சுருக்கமாக கர்ணன் திரைப்படப் பாடலில்  தந்துள்ளார்:
"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்

என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே
[நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்]
கண்ணதாசன் (கர்ணன் - 1964)

கீதாசார சுவரொட்டியில் உள்ளவை பாபர் மசூதி இடிப்புக்குப்பின் அதை நியாயப்படுத்த ஆர் எஸ் எஸ்ஸால் பரப்பப்பட்ட வரிகள். ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்ட எல்லா கோவில்களிலும் இவ்வரிகள் கீதாசாரம் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பதாகவும் கருத்தொன்று மக்களிடையே இருப்பது தெரிகிறது.


சான்றாதாரம்:
1.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். டிசம்பர் , 2012. https://tamilbtg.com/whatever-happened-it-happened-well-is-this-gitacharam/

2.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். ஜனவரி  3, 2013
https://tamilbtg.com/what-is-real-gita-charam/

3.  கீதாச்சாரம் யாரால் உருவானது?
https://ta.quora.com/கீதாச்சாரம்-யாரால்

4. ரமண மகரிஷி வழங்கிய பகவத் கீதை சாரம் - 42 வசனங்கள்
https://www.facebook.com/watch/?v=4881951441837476


நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up
_________________________

#தமிழணங்கு,  #வரலாற்றில் பொய்கள், #Themozhi 

Friday, June 27, 2025

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

—Dr. Jothi S. Themozhi 



The Digital Dilemma: Can Search Data Reflect Literary Fame?
In a bold attempt to map the popularity of all 1,330 Thirukkural couplets, one researcher turns to Google—an unconventional yet data-rich platform. The plan? Use Google search result counts to rank each couplet by popularity. 

But this method prompts a deeper, critical question:
What does the “number of results” from a Google search actually measure?
To design a methodologically sound study, researchers must first understand the limitations and nuances of using this digital data source.

Search Strategies: ‘All Results’ vs. ‘Verbatim’
The first major decision is choosing the search method. Google offers two fundamentally different modes:
All Results (Default):
          -Finds synonyms
          -Corrects spelling
          -May omit words
          -Tailors results based on user history and location
          -Example result count: 4,500,000

Verbatim Mode:
          -Searches exact phrase as typed
          -No synonyms or auto-corrections
          -Offers consistent, reproducible results
          -Example result count: 120,000
Choosing ‘Verbatim’ mode and using exact phrases in quotes (e.g., "exact couplet text") is essential for data reliability.

The Myth of Precision: What Google Really Tells Us
Google’s result count, often mistaken for a hard metric, is a broad estimate based on how many web pages it has indexed with the search terms. While appealing for its scale, this number comes with substantial caveats:
Advantages:
          -Easily accessible
          -Reflects global web presence
          -Encourages scalable analysis

Limitations:
          -Highly imprecise estimate
          -Affected by hidden algorithms
          -Varies by user and geography
          -Reflects web presence—not real-world popularity
          -Results fluctuate frequently

Six Hidden Pitfalls in Search-Based Literary Analysis:
1. Estimated, Not Exact
Google clearly warns users that its result counts are only rough approximations—unsuitable as a stand-alone metric in serious research.
2. Algorithmic Influence
Over 200 unseen ranking factors affect search outcomes. A couplet could rank high due to SEO tricks rather than genuine popularity.(SEO stands for Search Engine Optimization)
3. Personalization Bias
Results vary depending on who searches, where, and when. This makes data replication incredibly difficult.
4. Web Presence ≠ Popularity
A widely duplicated couplet might dominate result counts—even if few people actually read or value it.
5. Volatile Data Landscape
Google updates its index continuously. A search at 9 AM may yield very different results than the same search at 4 PM.
6. The Ecological Fallacy
Inferring individual-level insights from aggregate web data can be misleading. Web frequency does not equal cultural significance.

Building a More Credible Research Framework:
Despite its flaws, Google search data can still serve as a component of a larger analytical framework. A few strategic enhancements can boost its credibility:
1. Precision in Search Technique
Use ‘Verbatim’ mode exclusively. Enclose each couplet in double quotes for consistent phrasing and phrase order.
2. Standardize the Research Environment
Combat personalization by using:
          -Incognito browsing
          -VPN to standardize location (A VPN, or Virtual Private Network, creates a secure, encrypted connection over the internet.)
          -Consistent logging of search date and time
3. Embrace the Imperfections
Clearly state in the final paper that data reflects estimated web presence. Collect multiple data points to analyze consistency (average and standard deviation).
4. Triangulate Your Metrics
Combine Google data with:
          -Literary citation frequency (academic papers, news, blogs)
          -Surveys/interviews with Tamil scholars
          -Appearance in school curricula or anthologies
This multipronged strategy offers richer, more reliable conclusions about each couplet’s cultural relevance.

Conclusion: Search Wisely, Analyze Deeply
Google is a powerful but slippery tool for literary analysis. Alone, it risks misrepresentation. With rigor and triangulation, however, it can help shine new light on ancient wisdom like the Thirukkural—revealing how digital footprints mirror enduring textual resonance.

Thanks to : Thamizhanangu-July 2025 - (Pages : 15-18)

"Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor"
— Dr. Jothi S. Themozhi
https://archive.org/details/thamizhanangu-july-2025/page/15/mode/2up


#தமிழணங்கு,  #திருக்குறள், #English,  #Themozhi 

Wednesday, May 28, 2025

அட்சய திருதியை எவருடைய பண்டிகை ?

 
ஒவ்வொரு ஆண்டும் இளவேனில்  காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை அட்சய திருதியை, வட இந்தியாவில்  இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அக்ஷய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) பண்டிகை கொண்டாடப்படும்.  அதே நாளானது  தமிழகப்பகுதிகளில் சித்திரை மாதத்து  வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளாக இருக்கும். எனவே தமிழகத்தில் சித்திரை வளர்பிறை  மூன்றாம் நாள்  அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
 
அட்சய  / அக்ஷய என்றால் குறைவற்ற  என்ற பொருள்; அட்சய பாத்திரம் என்பது அதே பொருளின் அடிப்படையில்  உருவான சொல்தான்.  திருதியை என்றால் 3 ம் நாள் என்பதாகும்.   இது நாட்காட்டியில் பழைய முறையில் வானியல் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடும் முறையில் அமைகிறது.  
வளர்பிறை (சுக்கில பட்சம்/நிலவொளி அதிகரிக்கும் நாட்கள்) மற்றும் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்/நிலவொளி குறையும் நாட்கள்) நாட்கள் அமாவாசை (அல்லது) பௌர்ணமி அடுத்த நாள் முதலாகத் தொடக்கம் கொண்டு  கணக்கிடப்படுவது வழக்கம். 
 
இவ்வாறு தொடங்கும் வரிசையில்  மூன்றாவது நாள் திரிதியை எனக் குறிப்பிடப்படும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. "திருதியை", 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி,  12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அல்லது) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
 
அட்சய திருதியை நாளில் அசையும் அசையா சொத்துக்களில் பணம் முதலீடு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது வணிகர்கள் தொடக்கி வைத்த வணிகத் தந்திரம்.  குறிப்பாக இது  தங்க நகை  வியாபாரிகளின் முன்னெடுப்பு.  அட்சயதிருதியை நாளில் 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என்று கூறும் வழக்காறு மக்களிடையே நிலவி வரும் காரணத்தால் கடன் வாங்கியாவது குன்றிமணி அளவு  தங்கம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை  இது மக்களிடம் வளர்த்துவிட்டது.சென்ற ஆண்டு வாங்கினோமே  அதனால்  செல்வம் கொழித்ததா என்பது ஆராயப்படுவதில்லை.  அட்சய திருதியை கொண்டாட்டம் அண்மைய வழக்கம்.  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அட்சய திருதியை என்பதை ஆன்மீகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.  குறிப்பாக 50 அல்லது 60 அகவை முதிர்ந்த பெரியோர்களைக்  கேட்டாலோ, அக்காலத்து ஏப்ரல் மே மாதங்களில் வெளியான பத்திரிக்கை செய்திகள், கதைகள் போன்றவற்றை மீள்பார்வை செய்தாலோ இந்த உண்மை தெளிவாகும்.  இது மக்களின் ஆசைக்குத் தூபம் போட்டு வணிக நோக்கில் பெரிதாக்கப்பட்ட பண்டிகை.
 
 
 

 
தீபாவளியைப்  போலவே  சமணர்களிடம் இருந்து வைதீகச் சமயத்தார் உள்வாங்கிக் கொண்டது இந்த அட்சய திருதியை பண்டிகையாகும்.  
 
சமணத்தில், அட்சய திருதியை நாள் என்பது, சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது.
 
'வர்சி தப' என்றும்  சமணர்கள் இவ்விழாவைக் குறிப்பிடுவது வழக்கம். ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர். இந்நாளில் சமணர்கள் உண்ணாநோன்பு இருப்பதும் வழக்கமே.
 

 
சமண பண்டிகையான தீபாவளியை  எடுத்துக் கொண்டு அதற்கு ஒன்றுக்கும்  மேற்பட்ட  கதைகளாக நரகாசுரன் வதம்,ராமர் சீதை அயோத்தி திரும்பிய நாள், லக்ஷ்மி பூஜை  நாள் என்று பற்பல காரணங்களைக் காட்டி இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கம் போலவே;  வைதீகச் சமயம் இந்நாளுக்கும்  ஒன்றுக்கு மேற்பட்ட பல புராணக் கட்டுக் கதைகள் கொடுத்துள்ளது; அவை
 
1.  பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
2.  ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
3.  திரேதாயுகம் ஆரம்பமான நாள்
4.  பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
5.  அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
6.  கங்கை நதி பூமியைத் தொட்ட நாள்
7.  குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
8.  வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
9.  குசேலர் கிருஷ்ண பகவானைச் சந்தித்த நாள்
இவற்றில் இழையோடி இருக்கும் கருத்து செல்வச் செழிப்பின்  தொடக்கம் என்பதாக இருப்பதைக் காண முடிகிறது.
 
இந்துமதத்தினர் தங்கள் சமயத்தில் அட்சயதிருதியை இணைத்துக் கொண்டது போலவே புத்த சமயத்தினரும் பிழையாக அட்சயதிருதியை நாளை மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரம் கிடைத்த நாளாகக்  கூறி வருகிறார்கள்.   மணிமேகலை காப்பியம் சொல்லும் தகவலுடன் இக்கருத்து  முரண்படுகிறது.  அட்சயதிருதியைக்கும் மணிமேகலை  அமுதசுரபி  என்ற  அட்சய பாத்திரத்தைப் பெற்ற கதைக்கும் தொடர்பில்லை. 
 
மணிபல்லவம் தீவில்  (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி  மணிமேகலைக்குக் கிடைத்த நாள்  வைகாசி விசாகம் முழு நிலவு நாளாகும். இந்த நாள் புத்த பூர்ணிமா நாள்  என்று அழைக்கப்படும். புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
அதாவது, வரும் மே 12, 2025 வைகாசி விசாகம் / புத்த பூர்ணிமா என்ற முழுநிலவு நாள், இது வட இந்திய நாட்காட்டி கணக்கு முறை; பார்க்க:https://www.drikpanchang.com/panchang/month-panchang.html?date=12/05/2025)
 
மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக்  காத்து நிற்கும் தீவதிலகை என்பவள் மணிமேகலையிடம் கூறுகிறாள்.  இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல்.
(ref : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017366_மணிமேகலை.pdf)
எனவே, வைகாசி விசாக நாள் என்பது வேறு, அட்சயதிருதியை நாள் என்பது வேறு. 
 
ஒரு பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பண்டிகைக்கு,  நம்ப முடியாத வகையில் பல்வேறு  கதைகள் சொல்லப்பட்டால்,  அவை யாவும் அப்பண்டிகையைத்  தங்கள் வழக்கத்தில் உள்வாங்கிக் கொள்ளப் புனையப்பட்ட புனைவுகள் என்பதையும், அப்பண்டிகை  உண்மையில் வேறு ஒருவருக்குச் சொந்தம் என்பதற்கான அறிகுறி அது என்பதையும்  புரிந்து கொள்ளலாம்.  பிறகு முறையான ஆய்வை முன்னெடுப்பதன் மூலம் அப்பண்டிகை எவருடைய வழக்கம் என்பதும் தெளிவாகும்.   இது போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் பண்பாட்டுக் கலப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.  

நன்றி:
தமிழணங்கு

அட்சய திருதியை
முனைவர் தேமொழி

தமிழணங்கு - ஜூன் 2025 (பக்கம்:3-6)
https://archive.org/details/thamizhanangu-june-2025/page/3/mode/2up

&

முக்குடை - ஜூலை 2025 (பக்கம்: 21 -23)


"அட்சய திருதியை" என்ற கரும்புச்சாறு திருவிழா!
மின்தமிழ்மேடை  - 30 [ஜூலை  - 2022]
https://archive.org/details/THFi-QUARTERLY-30/page/n41/mode/2up















































































































































#தமிழணங்கு,  #மின்தமிழ்மேடை, #வரலாற்றில் பொய்கள், #Themozhi