Showing posts with label தமிழணங்கு. Show all posts
Showing posts with label தமிழணங்கு. Show all posts

Tuesday, March 3, 2026

அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்

 "அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"


முன்னுரை:
தமிழ் அறவியல் புலம் பரந்துபட்டது. மக்களுக்கு அறநெறி உரைக்க இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களையும், அயலகத்தில் தோன்றிய சமயங்களையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் பல சமய நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம் தமிழ்மொழி.  அத்துடன் சமயக் கோட்பாடுகளை விமர்சிக்கும் சித்தர் பாடல்களுக்கும் தமிழில் இடமுண்டு. இத்தகைய தமிழ் அறநெறிச் சிந்தனையின் வளமான மரபில், மணிமேகலை காப்பியமும் திருக்குறளும் இரண்டு பெரும் தூண்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டு படைப்புகளும் அறம், ஒழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள் குறித்த ஆழமான பார்வைகளை முன்வைத்தாலும், அவற்றின் தத்துவப்பின்னணிகள் வேறுபட்டவை.

பௌத்தம் கூறும் அறம்:
அறத்தின் மையம் மனிதம், இப்பூமியில் மனிதருக்கும் மனிதச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவு அன்பு என்று உரைத்த பௌத்தம்; எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஏனைய பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமல், அவ்வுயிர்களின் துயர் களைவதே அறமாகும் என்று வரையறுத்தது. பௌத்தம் காட்டும் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய பண்புகளின் செயல் வடிவம்.

வள்ளுவம் காட்டும் அறம்:
மக்களுக்கு அறவழி காட்ட வந்த வள்ளுவர், தன் அறவுரைகளைச் சமய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவில்லை. உலக உயிர்கள் எல்லாம் அறம் என்ற குடையின் கீழ் அமைபவை என்ற கொள்கையுடன் சமயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகில் எவருக்கும் பொருந்தும் வண்ணம் அறவழி காட்டினார். சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் முன்னிறுத்தும் பௌத்த அறநெறிக் கோட்பாடுகளையும், திருவள்ளுவர் போதிக்கும் உலகப் பொதுவான அறக் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் அறநெறிச் சிந்தனையின் இருபெரும் கிளைகளின் ஒற்றுமை, வேற்றுமை மற்றும் அவை ஒன்றுக்கொன்று துணைநிற்கும் பாங்கினை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் மையமாகும்.

மணிமேகலை காப்பியம்:
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, பௌத்த அறிஞரான சீத்தலைச்சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை காப்பியம், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தாலும், அதன் தனித்துவம் பௌத்த மெய்யியலை மையமாகக் கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது. உலக இன்பங்களைத் துறந்து, கருணை வழியில் பயணிக்கும் மணிமேகலை என்ற கதைநாயகியின் வழியே, பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான அறம், இரக்கம், கொடை, துறவு, அருள், நிலையாமை ஆகியவற்றை இக்காப்பியம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக, பசித்தவருக்கு உணவளிக்கும் அமுதசுரபி என்னும் பாத்திரம், பௌத்த அறத்தின் செயல் வடிவமாகவும் குறியீடாகவும் விளங்குகிறது. எனவே மணிமேகலை என்றால் அறம், அறிவு, துறவு ஒருங்கிணைந்த ஓர் உருவம்.

திருக்குறள்:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் அறநெறி மரபில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட சமயம், இனம் அல்லது காலச் சூழலுக்குள் தன்னை வரையறுத்துக் கொள்ளாமல், மானுடப் பொதுமைக்கான அறக் கோட்பாடுகளைத் திருக்குறள் முன்வைக்கிறது.

[அ] அற விழுமியங்களில் ஒற்றுமையும் வேற்றுமையும்
திருக்குறளின் உலகப் பொது நெறியும், மணிமேகலையின் பௌத்த மெய்யியலும் பல முக்கிய அற விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் காணப்படும் ஒற்றுமைகள், தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த ஒப்பீட்டு ஆய்வில், திருக்குறளின் அறக்கருத்துக்கள், மணிமேகலையின் பௌத்த அறநெறிகளுடன் ஒத்திருக்கும் இடங்களிலும் நுட்பமாக வேறுபடும் இடங்களிலும் ஓர் ஒப்பீட்டு அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பௌத்த அறக் கருத்துக்களுக்கு இணையான அல்லது மாற்றான வள்ளுவரின் சிந்தனைகள், தமிழ் அறநெறி மரபின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

அறத்தின் ஆற்றல்: இரு நூல்களிலும் 'அறம்' என்ற கருத்தாக்கம்
மணிமேகலை மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களுக்கும் 'அறம்' என்ற கருத்தாக்கமே மைய அச்சாக விளங்குகிறது. அறம் என்பது வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அது அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இவ்விரு படைப்புகளும் அறத்தை வரையறுக்கும் விதத்தினை ஆராய்வது, அவற்றின் தத்துவ அடித்தளத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பௌத்த மரபில் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வடிவமாகும். அறம் எங்கிருக்கிறதோ அங்கு அன்பு, இரக்கம் ஆகியன தாமாகவே குடிகொண்டுவிடும் என்பது பௌத்த அறத்தின் உள்ளடக்கம். அறம் என்பது விதிகளின் தொகுப்பு அல்ல; அது அனைத்து உயிர்கள் மீதும் காட்டப்படும் பேரன்பின் வழியே பற்றற்ற நிலையை அடைய உதவும் மெய்யியல் பாதையாகும். மணிமேகலையின் செயல்கள் துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும் இந்தப் பேரறத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. மணிமேகலை அன்பை, அறத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடாகக் காண்கிறது. துறவறம், தவம் ஆகிய வழிகளைத் தேர்வு செய்து அறம் என்பதைச் செயல்படுத்துகிறது.
     "மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
     மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
     உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே"
          [மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை: 94-96]

உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, இந்த நிலவுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர் என்கிறது மணிமேகலையின் பௌத்தம். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதைச் சங்ககாலப் புலவரான குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப் பாடலும் (பாடல் எண் 18) கூறும் முறைமையால் இக்கருத்தாக்கம் தமிழ் மண்ணின் பண்பாகவும் இருந்ததை அறிய முடிகிறது.

மறுபுறம், திருக்குறள், அறத்தை உலகியல் வாழ்வோடு இணைத்து, ஒரு நடைமுறை ஒழுக்கக் கோவையாக முன்வைக்கிறது.
     "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
     பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள்: 49)
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் என்று இல்லறமே அறம் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். தொடர்ந்து;

     "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
     தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள்: 322)
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும் என்று கூறும் வள்ளுவர் மணிமேகலை காட்டிய பல்லுயிர் ஓம்புவது என்கிற தலையாய அறத்தை இல்லறம் வழிச் செயல்படுத்த அறிவுறுத்துகிறார் என்பதைக் காணமுடிகிறது. திருக்குறள் துறவறம், தவம் ஆகியவற்றை விவரித்தாலும், அறத்தை இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மைக் கடமையாக வரையறுக்கிறது.

அத்துடன் தீய குணங்களிலிருந்து விலகி இருப்பதே அறத்தின் அடிப்படை என்கிறார் அவர்:
     "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு தீய குணங்களையும் விலக்கி வாழ்வதே அறம் என்பது இதன் பொருள். எனவே, திருக்குறள் தீயவற்றை நீக்குவதே அறத்தின் இயல்பு என ஒரு வாழ்வியல் நெறியை வரையறுப்பதுடன், இல்லறம் போற்றி அனைவருக்கும் உதவ அறிவுரை கூறுகிறது.

[ஆ] பொதுவான அற விழுமியங்கள்: அன்பும் இரக்கமும் அருளும் நன்னெறிகளும்
அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஒத்துக் காணப்படும் திருக்குறளும் மணிமேகலையும் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
     "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்: 80)
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் என்பது இதன் பொருள். அத்துடன்,

     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு" (குறள்: 72)
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிச் செயல்படுபவர்கள் என்று அத்தகையவர்கள் பண்பையும் குறள் சுட்டுகிறது. குறளின் அதிகாரங்கள் பலவும், பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகளான 1. கொல்லாமை, 2. கள்ளாமை, 3. காமத்தில் தவறாமை, 4.பொய்யாமை, 5. கள் உண்ணாமை ஆகிய ஐந்து நல்லொழுக்கக் கொள்கைகளையும்; அத்துடன் பௌத்தம் போதிக்கும் ஈகை, நிலையாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை, ஒழுக்கமுடைமை, ஊழ் போன்ற நெறிகளையும் அதிகார அளவில் விளக்கும் குறட்பாக்களைக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அத்துடன், திருக்குறள் முன்வைக்கும் 'ஒழுக்கம்' என்பது எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் சாராத, மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் நெறியாகும்.

     "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும்" (குறள்: 131)
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பது திருக்குறளின் துணிபு. திருக்குறளில் வலியுறுத்தப்படும் 'ஒழுக்கம்' என்பது மதம், இனம், மொழி கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஓர் உலகப் பொதுவான அறநெறியாகும்.

[இ] உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதுதலும் ஈகையும்
மணிமேகலையின் ஆபுத்திரன் கதை மக்களிடம் உயர்வு தாழ்வு பேசுவதை மறுப்பதற்கும், அனைத்து உயிர்களையும் கருணையுடன் போற்றவதை வலியுறுத்தவும் படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். பிறந்த பின் அனாதையாக விடப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர் வேள்வியில் உயிர்ப்பலியைத் தடுப்பவனாகவும், அமுதசுரபி உதவியுடன் வறியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளிக்கும் இரக்கமுள்ளவனாகவும் காட்டப்படுகிறான்.

     "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
     செய்தொழில் வேற்றுமை யான்" (குறள்: 972)
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும் என்று கூறும் குறளும்;

     "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள்: 259)
அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது என்று கூறும் குறளும்;

     "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து" (குறள்: 221)
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது என்று கூறும் குறளும் அனைவரும் சமம், பிறப்பில் பேதமில்லை என்று கூறுகிறது.

மணிமேகலையின் அறவியல் கட்டமைப்பு, பௌத்தத்தின் தத்துவார்த்த இலக்கான 'நிப்பானம்' (நிர்வாணம்/முக்தி) என்ற வீடுபேற்றை அடைவதோடு பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை கூறும் அறங்கள் அனைத்தும் பிறவித் துன்பச் சங்கிலியை அறுக்கும் கருவிகளாகும். இதற்கு மாறாக, திருக்குறள் ஓர் உலகப் பொதுவான, சமயச் சார்பற்ற அறவியல் அமைப்பை முன்வைக்கிறது. அதன் நோக்கம், இவ்வுலகில் ஒரு சீரான, இணக்கமான, அறம் சார்ந்த வாழ்வை வாழ்ந்து சிறப்படைவதே ஆகும்.

     "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று" (குறள்: 222)
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது. நன்னெறி என்பதற்காக மட்டுமே அறம் செய்தல் சிறப்பாகும். மாறாக; முக்தி அடைதல், மேலுலகம் அடைதல் போன்ற நோக்கில் இல்லாமல், அதை எதிர்பார்க்காமல், பலன் எதிர் பார்க்காமல், அறவிலை வணிகம் செய்யாமல் நன்னெறி என்பதற்காகவே தேவையானவருக்கு உதவ வேண்டும் என்கிறது. இவ்வகையில், எந்த ஓர் உயிருக்கும் தீங்கு செய்யாமை, பல்லுயிர் ஓம்புதல் என்ற கொள்கையில் இவ்விரு நூல்களும் மிக வலுவாக ஒன்றிணைகின்றன. இது இவ்விரு அறவியல் மரபுகளுக்கும் இடையேயான ஒரு முக்கிய ஒற்றுமைப் புள்ளியாகும்.

மணிமேகலை, ஈகையைத் துறவறத்தின் ஒரு கடமையாகச் சித்திரிக்கிறது. திருக்குறளோ, அதை ஒரு சமூக மற்றும் தனிமனித அறமாக, ஒரு செம்மையான இல்லற வாழ்வின் இன்றியமையாத அங்கமாகக் கருதுகிறது. திருக்குறள் ஈகையை இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. துறவறம் போற்றவும் இல்லற வாழ்வினர் மேற்கொள்ளும் ஈகை உதவுகிறது என்று காட்டுகிறது.

முடிவுரை:
திருக்குறள் மணிமேகலை ஆகிய இவ்விரு நூல்களிலும் அறம் அடித்தளமாக விளங்குவதையும், அவ்வறச்சிந்தனைகளை இருவேறு கோணங்களில், ஆனால் ஒரே குறிக்கோள் நோக்கி வெளிப்படுத்துவதையும், இரு நூல்களும் அறம், அன்பு, அருள், கருணை, கொல்லாமை, நிலையாமை, ஊழ்வினை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஆழமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளமையையும், அவை மானுட வாழ்வின் மேன்மைக்கு அறமே அடித்தளம் என்பதை ஒருமித்த குரலில் பறைசாற்றுகின்றன என்பதையும் இந்த ஒப்பீட்டு ஆய்வானது எடுத்துரைக்கிறது.

குறள் சொல்லும் சமயம் கடந்த பொது நன்னெறி கோட்பாடுகளை விளக்க, அவற்றைக் கதைவடிவில் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு புனைவு எழுதப்படுமானால், ஒரு பௌத்தப் படைப்பாளரின் கருத்துரிமை அடிப்படையில் உருவான காப்பியமாக, மணிமேகலையாக அது திகழ்கிறது எனலாம். "பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்" (மணிமேகலை - 22; சிறைசெய் காதை) என்று சீத்தலைச் சாத்தனார் வள்ளுவரை மேற்கோள் காட்டும் வரிகள் மேகலை ஆசிரியருக்கு வள்ளுவம் கொடுத்த தாக்கத்திற்கும் சான்றாக அமைகிறது.

மணிமேகலையின் கதை வடிவ விளக்கமும், திருக்குறளின் கோட்பாட்டு விளக்கமும் ஒரே அறத்தின் இருவேறு வெளிப்பாடுகளாகும். ஆக, மணிமேகலை ஓர் ஆன்மீகத் தலைவியாக மட்டுமின்றி, சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறாள். உலக இன்பங்களைத் துறந்து, ஞானத்தைத் தேடி, மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆழமான ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறாள்.

இருப்பினும், அவற்றில் நுட்பமான சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. மணிமேகலை, பௌத்த மெய்யியலின்படி, பற்றுகளை அறுக்கும் துறவு நெறியை வீடுபேற்றுக்கான வழியாக முன்வைக்கிறது. மேலும், ஆன்மா குறித்த அதன் அனாத்மா பார்வை, இந்திய மெய்யியலின் பிற மரபுகளிலிருந்து தனித்து நிற்கிறது. மறுபுறம், திருக்குறள் இல்லறத்தை மையமாகக் கொண்ட ஓர் உலகப் பொது நெறியை வகுத்து, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்துகிறது வையத்தில் வாழ்வாங்கு வாழ அறிவுறுத்துகிறது.

இறுதியாக, இந்த இரு பெரும் நெறிகளும் முரண்பட்டவை அல்ல, மாறாகத் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பார்வையை வழங்கும் இருவேறு கிளைகள் என்பது நிறுவுகிறது. 'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை' என்ற பார்வையில் மணிமேகலையில், அறம் என்பது ஆன்மிக விடுதலையை நோக்கிய ஒரு பயணம்; திருக்குறளிலோ, அறம் என்பதே மனிதராக வாழ்வதன் இலக்கணம். இந்த இரு பெரும் மரபுகளும் இணைந்து தமிழ் அறநெறிச் சிந்தனையை வளப்படுத்தி, உலகிற்கே வழிகாட்டும் ஒருங்கிணைந்த பார்வையை வழங்குகின்றன.

சான்றாதாரங்கள்:
1. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்), ந.மு. வேங்கடசாமிநாட்டார் (ஆசிரியர்).  மணிமேகலை (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2019

2. வரதராஜன்.மு, திருக்குறள் உரை விளக்கம், திருவள்ளுவர் நிலையம், திருச்சி, 1954.

"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
— முனைவர் ஜோதி எஸ். தேமொழி
செயலாளர், தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
சான் பிரான்சிஸ்கோ, யூ.எஸ்.ஏ
-------


தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி. . .
டோக் பெருமாட்டி கல்லூரி-மதுரை, தமிழ் உயராய்வு நடுவம்
24.02.2026 அன்று நடத்திய
'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில்
"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
என்னும் தலைப்பில் முனைவர் ஜோதி எஸ். தேமொழி வழங்கிய கட்டுரை
கருதரங்க மலர் - ISBN: 978-93-47702-06-8




----

[நன்றி: தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம்-24.02.2026]

நன்றி: தமிழணங்கு,  ஏப்ரல் 2026 (பக்கம்: 37 - 42)



#தமிழணங்கு, #கருத்தரங்கம், #திருக்குறள், #சொற்சுவை, #மணிமேகலை, #Themozhi 

Tuesday, February 17, 2026

தமிழணங்கு - பதிவுகள்

தமிழணங்கு  - பதிவுகள்
இலக்கியம், சமயம், பண்பாட்டு ஆய்விதழ்
                           (இத்தளத்தில் . . . )


1. 18 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பதிவுகள் (ஜூலை - 2022)
https://aintinai.blogspot.com/2022/07/18.html

2. செய்க பொருளை (அக்டோபர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/10/blog-post.html

3. ஆய்ச்சியர் குரவை (நவம்பர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/11/blog-post_5.html

4. தீபாவளி என்ற சொல் எப்பொழுது தோன்றியது (டிசம்பர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/12/blog-post.html

5. இந்தியாவின் முதலை இனங்கள் (பிப்ரவரி - 2023)
https://aintinai.blogspot.com/2023/02/blog-post.html

6. பெண்ணடிமை நிலை குறித்து பெரியாரின் பார்வை (மார்ச் - 2023)
https://aintinai.blogspot.com/2023/03/blog-post.html

7. அண்ணல் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் (ஏப்ரல்-2023)
https://aintinai.blogspot.com/2023/04/blog-post.html

8. சிறு நல் வாழ்க்கை (ஜூன் - 2023)
https://aintinai.blogspot.com/2023/06/blog-post.html

9. நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா? (ஆகஸ்ட் - 2023)
https://aintinai.blogspot.com/2023/08/blog-post_7.html

10. அறிஞர் அண்ணா எழுதிய"செவ்வாழை" (செப்டம்பர் - 2023)
https://aintinai.blogspot.com/2023/09/blog-post.html

11. ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் (நவம்பர் - 2023)
https://aintinai.blogspot.com/2023/11/blog-post.html

12. என்றென்றும் பெரியார் (டிசம்பர்- 2023)
https://aintinai.blogspot.com/2023/12/blog-post.html

13. உணக்குதல் (ஜனவரி - 2024)
https://aintinai.blogspot.com/2024/01/blog-post_8.html

14. நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு (பிப்ரவரி - 2024)
https://aintinai.blogspot.com/2024/02/blog-post_5.html

15. அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய வேண்டும் (மார்ச் - 2024)
https://aintinai.blogspot.com/2024/03/blog-post_4.html

16. சுழற்சியாண்டு தொடராண்டுக் கணக்குகளின் நிறை குறைகள் (மே - 2024)
https://aintinai.blogspot.com/2024/05/blog-post.html

17. இளங்கோவடிகளின் பார்வையில் பருவங்கள் தோறும் மதுரை மாநகர் (ஜூன் - 2024)
https://aintinai.blogspot.com/2024/06/blog-post.html

18. நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நிழலற்ற நாள் (ஜூலை - 2024)
https://aintinai.blogspot.com/2024/07/blog-post.html

19. தமிழ் நூல்களில் தமிழ் மாதங்கள் (செப்டம்பர் 2024)
https://aintinai.blogspot.com/2024/09/blog-post_2.html

20. தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர் (அக்டோபர் - 2024)
https://aintinai.blogspot.com/2024/10/blog-post_7.html

21. ரிக் வேதம் கூறும் அகத்தியர் (மார்ச் - 2025)
https://aintinai.blogspot.com/2025/03/blog-post_7.html

22. தென்திசையின் அகத்தியன் (ஏப்ரல் 2025)
https://aintinai.blogspot.com/2025/04/blog-post.html

23. மனிதத்தின் பன்முகம் - கவிதை  (மே - 2025)
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

24. அட்சய திருதியை (ஜூன் - 2025)
https://aintinai.blogspot.com/2025/05/blog-post_28.html

25. Ranking Thirukkural by Web Popularity (ஜூலை - 2025)
https://aintinai.blogspot.com/2025/06/ranking-thirukkural-by-web-popularity.html

26. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா? (ஆகஸ்ட் -2025)
https://aintinai.blogspot.com/2025/08/blog-post.html

27. சமணர்களுக்குரிய தீபாவளி (அக்டோபர் - 2025)
https://aintinai.blogspot.com/2025/09/blog-post_29.html

28. சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்" (நவம்பர் - 2025)
https://aintinai.blogspot.com/2025/10/blog-post.html

29. கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி (பிப்ரவரி - 2026)
https://aintinai.blogspot.com/2026/01/PaleBlueDot.html

30. அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும் (ஏப்ரல் - 2026)
https://aintinai.blogspot.com/2026/03/blog-post.html




#பதிவுத்தொகுப்பு, #தமிழணங்கு, #Themozhi 


Sunday, January 25, 2026

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி


கார்ல் சாகன் (1934-1996), ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர், அண்டவியல் ஆய்வாளர்.  சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிய முறையில் தெளிவிக்கக்கூடிய வகையில் உரையாற்றக் கூடிய வல்லமை பெற்றிருந்த அறிவியல் உரையாளராக அறியப்பட்டதால் மக்களிடம் அவர் உரைகளுக்கு நல்ல செல்வாக்கு  இருந்தது. 


கார்ல் சாகனின் ஆலோசனையின் பேரில், 1990 பிப்ரவரி 14 அன்று விண்கலம் வாயேஜர் -1 புவியின் சுற்றுப்புறத்தை விட்டு சூரிய மண்டலத்தின் விளிம்புகளுக்குப் புறப்படும்போது, புவியை இறுதியாக ஒருமுறை சுற்றிவந்து படம் எடுத்தது.   புவியின் இந்த வெளிர் நீலப் புள்ளி உருவப்படத்தைப் படம்பிடித்தபோது வாயேஜர்-1 விண்கலம் சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தது, சிதறிய ஒளிக்கதிர்களின் இடையே சூரியனுக்கு மிக அருகில் படம் எடுத்ததன் விளைவாக, இப்படத்தில் பூமி, ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக, 0.12 பிக்சல் அளவுள்ள வெளிர் நீலப் புள்ளியாகத் தெரிகிறது.



கார்ல் சாகன் எழுதிய "பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்" (Pale Blue Dot: A Vision of the Human Future in Space by Carl Sagan) என்ற நூல் அதிகம் விற்பனையான நூல்களுள் ஒன்று.  இது விண்வெளி ஆய்வின் தேவையை வலியுறுத்தியது. கார்ல் சாகனின் 'வெளிர் நீலப் புள்ளி: விண்ணை நோக்கிய பார்வையால் உணரும் மனிதர்களின் எதிர்காலம்' என்ற இந்த நூலின் கருத்து மிகவும் பரவலாக வாசிக்கப்படு பாராட்டப்படும் ஒரு கட்டுரை.  அதன் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

நாம் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து புவியைப் பார்த்தால், அது ஒரு சிறிய புள்ளியாகத் தான் தெரியும்…

“மீண்டும் அந்தப் புள்ளியைப் பாருங்கள். அதோ அங்கே. அதுவே நம் வீடு. அதுவே நாம் இருக்குமிடம்.  அங்குதான் நீங்கள் விரும்பும் அனைவரும், நீங்கள் அறிந்த அனைவரும், நீங்கள் எப்போதாவது  கேள்விப்பட்ட அனைவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்கையை அங்கேயே வாழ்ந்தார்கள்.

நமக்கு மகிழ்ச்சியும் துயரமும் தரும் அனைத்தும், நம்பிக்கை தருவதற்குத் தோன்றிய ஆயிரக்கணக்கான மதங்கள், கொள்கைகள், பொருளாதாரக் கோட்பாடுகள், வேட்டையாடியும்  சேகரித்தும்  வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும், ஒவ்வொரு வீரரும் கோழையும், ஒவ்வொரு பண்பாட்டை ஆக்கியவரும் அழித்தவரும், ஒவ்வொரு அரசரும் உழவரும்,  காதலிக்கும் இளவயது இணையர்கள் அனைவரும், ஒவ்வொரு தாயும் தந்தையும், வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையும், கண்டுபிடிப்பாளர்களும் ஆய்வாளர்களும், ஒவ்வொரு வாழ்வியல் நெறி வழிகாட்டியும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு ‘சூப்பர் ஸ்டார்’ பிரபலங்களும், ஒவ்வொரு ‘உயர்வாக மதிக்கப்பட்டத் தலைவர்களும்’,  ஒவ்வொரு புனிதரும் பாவியும் என நம் மனிதயின வரலாற்றில் வாழ்ந்த அனைவரும் அந்தச் சூரிய ஒளிக்கதிரில் மிதக்கும் தூசித் துகள் போலத் தெரியும் அந்தச் சிறு புள்ளியில்தான் வாழ்ந்தார்கள்.

பரந்த பிரபஞ்ச அரங்கில் பூமி என்பது மிகச் சிறிய மேடையே. இந்த ஒரு சிறு புள்ளியின் ஒரு மூலையில் வாழ்பவர்கள்,  தாங்கள் சென்ற இடத்தில் தம்மைப் போலவே இருக்கும் உலகின் மற்றொரு மூலையில் வாழ்பவர்களுக்கு இழைத்த முடிவில்லா கொடூரங்களை எண்ணிப் பாருங்கள். அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், எவ்வளவு ஆவலுடன் ஒருவரையொருவர் கொல்லத் தயாராக இருக்கிறார்கள், எவ்வளவு தீவிரமான வெறுப்பை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நினையுங்கள். பெருமையும் வெற்றியும் அடைய வேண்டும் என்று, இந்தப் புள்ளியின் ஒரு சிறு பகுதியினைத் தற்காலிகமாக ஆதிக்கம் செய்யும் ஆசையில், எத்தனை தளபதிகளும் பேரரசர்களும் இரத்த ஆறுகளை  மண்ணில் ஓட்டவிட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நம்முடைய தோரணைகள், கற்பனையான நமது முக்கியத்துவம் என்ற உணர்வு, பிரபஞ்சத்தில் நமக்கு ஒரு தனிச் சிறப்பிடம் இருக்கிறது என்று கருதும் அறியாமை  ஆகியவற்றை எல்லாம் இந்த வெளிர்நீலப் புள்ளி சவாலுக்கு உள்ளாக்குகிறது. இந்தப் பரந்த, அனைத்தையும் சூழ்ந்த பெரிய அண்டவெளி இருளில், நம் பூமி ஒரு தனிமையான சிறு துகள் மட்டுமே. இந்தப் பரந்த அண்ட வெளியில்  நம்மிடமிருந்து நம்மையே காப்பாற்ற வேறு எங்கிருந்தாவது உதவி வரும் என்பதற்கு எந்த ஓர் அறிகுறியும் இல்லை.
 
இதுவரை உயிர் வாழத் தகுதியான உலகமாக அறியப்பட்ட ஒரே இடம் பூமி தான். வேறு எங்கும், நாம் எதிர்நோக்கும் குறைந்த அளவு  எதிர்காலத்தில், மனித இடம் குடியேற வேறிடம் ஏதும் கிடையாது.  ஆமாம்.  வேறு கோள்களுக்குச் சென்று வரமுடியும், —ஆனால் குடியேற இன்னமும் வாய்ப்பில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்பொழுது வாழ நமக்கு இருக்கும் ஒரே இடம் இந்தப் பூமிதான். 

வானியல் உண்மைகள் மனிதரிடம் பணிவு மனப்பான்மையை, பண்பை உருவாக்கும் அனுபவம் என்று சொல்லப்படுகிறது.  நாம் காணும் நமது சிறிய உலகின் இந்தத் தொலைதூர உருவத்தை விட மனித அகந்தையை அறியாமையை உணர்த்தும்  சிறந்த சான்று வேறொன்றும் இல்லை.

எனக்கு இது, நாம் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பையும், இதுவரை நாம் அறிந்த ஒரே இல்லமான இந்த மங்கலான வெளிர் நீலப் புள்ளியைப் பாதுகாத்து, மதித்து, நேசிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது.”   
— கார்ல் சேகன், பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்


உதவிய தளங்கள் :
காணொளி: https://youtu.be/tgQ1PtkZvGU
தகவல்: https://www.planetary.org/worlds/pale-blue-dot; 
Carl Sagan (1934-1996), https://science.nasa.gov/people/carl-sagan/


நன்றி:
கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி
 - தேமொழி
இதழ்: தமிழணங்கு-பிப்ரவரி 2026; 
பக்கம்: 19-21


#தமிழணங்கு,  #மொழிபெயர்ப்பு, #அறிவியல், #கார்ல் சாகன், #Themozhi

Saturday, October 11, 2025

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"


சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்னவாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.  மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம். சித்தன்னவாசல் குகைக்கோயிலின் முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஓவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.  வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஓர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவு கொண்டனர். அவனுக்கு அண்மையில் உள்ளது அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது;  என்று இவ்வாறாகத் தமிழ் அறிஞரும் வரலாற்று  ஆய்வாளரும் ஆன டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர் எழுதிய "பல்லவர் வரலாறு" நூலில் குறிப்பிடுகிறார். 

ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்  எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்:   மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.  நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை,  காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக  அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில்  காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில்,  மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும்.  அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு.  அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள்.  இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன.  உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார்  மயிலை சீனி வேங்கடசாமி.


செய்யறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட சித்தன்னவாசல் குகைக்கோயில்
"அரசன் அரசி ஓவியம்"



 
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு அக்கால வரலாற்று  ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர்.  மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.  

மேலும்; பாண்டிய மன்னன்  ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர்  சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

      "திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
      தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
      அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
      வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
      லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை  . . . . . . . . .
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
      அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
      சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
      புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
      மெடுத்தான் முன்"

சொல் பிரித்து :
      "திருத்திய பெரும் புகழ் தைவ தரிசனத்து 
      அரும் தவ முனிவனை பொருள் செல்வன்
      அறம் கிளர் நிலைமை இளங்கௌதமன் என்னும் 
      வளம் கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனே பார் முழுதும் ஆண்ட பஞ்சவர் குல 
      முதலார் கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை......   
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாயில்  அறிவர் கோ இன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி...... 
      அழியா வகையாற் கண்டனனே...... 
      சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம்
      புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டகம் 
      எடுத்தான் முன்"

இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில்,  சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது.  இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்துத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும்  காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும்,  அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


அடிக்குறிப்புகள்:
https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htm
https://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை

நன்றி: தமிழணங்கு - நவம்பர் 2025 (பக்கம்: 3-6)

Monday, September 29, 2025

சமணர்களுக்குரிய தீபாவளி

சமணர்களுக்குரிய தீபாவளி


"தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் தீபாவளி பண்டிகையாக விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதல் பன்னாட்டு அரங்கில்,  பரவலாக உள்ளது. உண்மையில் தீபாவளி சமணர்களின் பண்டிகை.  தீபாவளி  என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாகச் சமணர்கள் தொன்று தொட்டுக்  கொண்டாடுகின்றனர் என்ற  'வரலாற்று அடிப்படை'  உள்ளதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்  அடிப்படையாகக்  கொண்டது  இந்த விளக்கேற்றும் பண்டிகை.

வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமண சமயத்தின் 24ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறு பெற்ற தினத்தை  விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடு நாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள்  (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி)  என்பது இவர்கள் முடிவு.

முற்றும் துறந்த துறவியான தீர்த்தங்கரர் மகாவீரர் அறவுரை ஆற்றிட பல இடங்களுக்கு எழுந்தருளுவார். இதை  ‘ஸ்ரீ விஹாரம்’ என்பர். சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றிப் போதிக்கும் இடம் சமவசரணம் எனப்படும். 'சமவசரணம்' என்ற அறவுரை  நிலையங்களில்  மகாவீரர் எழுந்தருளி அறவுரை ஆற்றி மக்களை  வழி  நடத்துவார்.  அதன் மையப்பகுதியில் அரியணை, முக்குடை முதலான சிறப்புகளோடு கூடிய இடத்தில்  இருந்து அறவுரை வழங்குவார்.  மகாவீரர் தன் இறுதி நாளில் (அக்டோபர் 15,   527 பொ.ஆ.மு) பாவாபுரி நகரின் சமவசரணமத்தில் அறவுரை ஆற்றினார்.

தனது  ஆயுள் விரைவில் முடியும் என்று உணர்ந்து அறவுரை நிலையத்தை விட்டு அகன்றார். பாவாபுரியில் மிகவும் அழகான பெரிய தாமரைக் குளம் ஒன்று இருக்கின்றது (அத் தாமரைக் குளம் இன்றும் உள்ளது).  அக்குளத்தின் நடுவில்  உள்ள  அகன்ற கற்பாறையின் மீது நின்ற நிலையில் மகாவீரர் இரு நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் (தற்போது அப் பாறையின் மீது ஆலயத்தை உருவாக்கி மகாவீரரின் திருவடிகளை வைத்து  வழிபாடு  நடை பெறுகிறது).  மன்னன் மற்றும்  மக்கள் பகற்பொழுதில்  வந்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். மகாவீரர் வாழ்க்கையின்  இறுதிநாள் பின்னிரவில் அவருடைய ஆயுள் முடிவுற்ற இடம் பாவாபுரி தாமரைக்குளக்  கற்பாறை.  அவர் அன்று ஆன்ம விடுதலை பெற்று ‘பரிநிர்வாணம்’ என்ற பிறவாநிலையை எய்தினார் என்பது சமண நூல்கள் தரும் செய்தி. மறுநாள் காலையில் மக்கள் வழக்கமாக மகாவீரரை வழிபட வந்தபோது அவர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதை அறிந்த மக்கள் எளிதில்  பெற  இயலா ஆன்ம  விடுதலை என்னும்  பிறவாநிலையை  எய்திய மகாவீரர் உலக உயிர்களுக்கு அறிவொளியை வழங்கியதை எண்ணி அவர் நினைவாக அனைவருடைய இல்லங்களிலும் வரிசையாகப் பல விளக்குகளை ஏற்றி மகாவீரரை தம் மனதில் இருத்தி வழிபட்டனர். இதுவே  நாடெங்கும் தீபாவளி விழாவாக இந்நாள்வரை ஒளிர்கிறது.  மகாவீரர் மறைந்தாலும், அவரது ஆன்மிக ஞானம் உலகின் இருளை நீக்கி ஒளியேற்றுகிறது என்பதை விளக்குவதற்காகத் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.  மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல்.

 
மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஓர் அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்ற சொல்  முதன் முதலில்  எழுத்து வடிவில் கிடைப்பது  சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்,  கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena)  இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.

           ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்
           ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .
           ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்
           ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்

என்ற வரிகளில்  மகாவீரர் மறைந்த நாளில் பாவாபுரியில்  'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் என்பவர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூலில்தான் சமணர்கள் தீபாவளி  கொண்டாடியதாக 'தீவாளி' அல்லது 'தீபாவளி'  என்ற சொல்  முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  வைதீகர் கொண்டாடும் தீபாவளி  பண்டிகைக்குக்  கிடைக்கும் சான்றுகள் மிகப் பிற்காலத்தவை.  அதன் தீபாவளி  கொண்டாடப் படுவதற்கான புரணக்கதைகளும்  இயற்கைக்கு  மாறான புனையப்பட்ட  கதைகள்.

சமண நாட்காட்டியின்படி, தீபாவளி அந்த ஆண்டின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த நாள், சமணப் புத்தாண்டு தொடங்குகிறது. (மகாவீரர் ஆண்டு) மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளில், அவரது தலைமை சீடரான கணாதர் கௌதம சுவாமிக்கு, முழு ஞானம் (கேவலஞானம்) கிடைத்ததும் தீபாவளியின்போது நினைவுகூரப்படுகிறது.

பொதுவாக சமணர் எனும் சொல் தமிழ்ச் சமணர்களைக் குறிக்கும். ஜைனம், ஆருகத மதம், அனேகாந்த மதம், ஸ்யாத்வாத மதம், நிகண்ட மதம் எனப் பலவாறாகச்  சமணம் குறிப்பிடப் படுகிறது (சமணமும் தமிழும்,  பக்கம்: 1- , கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி )   தமிழகத்தில் வாழும்   மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). பொதுவாக தமிழ்ச் சமணர் அனைவரும் திகம்பர சமணத்தைப் பின்பற்றுபவர்.  

சமணர்களின் தீபாவளி கடைப்பிடிக்கப்படும் முறைகள் வைதீகர்  கொண்டாடும் தீபாவளி  நடைமுறை வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சமணர்களின் மிக முக்கியமான கொள்கையாக உயிர்களைத் துன்புறுத்தாமை (அகிம்சை) என்பதைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, பட்டாசுகள் வெடிப்பதால் பல உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதால் தீபாவளியன்று அவர்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. மகாவீரரின் துறவற வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக சமணர்களில் சிலர் தீபாவளியன்று நோன்பு மேற்கொள்வதுண்டு.

பல சமணர்களில் சிலர் மகாவீரர் முக்தி பெற்ற பீகார் மாநிலத்திலுள்ள பாவாபுரிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அடிப்படை நோக்கமாக, மகாவீரரின் ஆன்மிக வெற்றியைக் கொண்டாடும் ஒரு புனிதமான, அமைதியான பண்டிகையாக ஆரவாரமின்றித் தீபாவளியைச் சமணர்கள் கொண்டாடுவர். வெவ்வேறு பகுதியில் வாழும் சமணர்களிடமும், சமண சமயப் பிரிவுகளிடையேயும்,  பண்டிகை  வழக்கங்களில் வெவ்வேறு பாரம்பரிய முறைகளின் காரணமாகச் சிற்சில வேறுபாடுகளும் உண்டு.


சமணக் கோவில்களில் மகாவீரருக்கு, நிர்வாண லட்டு எனப்படும் ஓர் இனிப்பு வகை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.  இது தமிழ்ச் சமணர்களுக்கு வடக்கிலிருந்து இங்கு வந்தவர்களிடமிருந்து வந்த  புது வரவு.   மகாவீரர் முக்தியடைந்த நாளில் சமணர்கள் ஆலயத்தில் (ஜினாலயம்)   மாவிளக்கேற்றி வழிபாடு இயற்றுவர்.  இதற்கென சிறப்பாகப்  பச்சரிசியைக் கழுவி  பதமாக உலர்த்தி இடித்து அந்த மாவைக்கொண்டு அகல்போன்ற விளக்கைச் செய்து, இதற்கென தனியே நெய்யைச் சேகரித்து வைக்கப்பட்ட தூய நெய்விட்டு விளக்கேற்றுவார். தற்போது மாவிளக்கு மற்றும் நிர்வாண லட்டு ஆகிய இரண்டும் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

மகாவீரரின் அறிவுரைகளை நினைவுகொள்ளும் விதமாக, வழிபாடுகளிலும், சிறப்புச் சொற்பொழிவுகளிலும் நிகழ்த்தப்படும்.

 
தமிழ்ச் சமணர்கள் தமிழகத்தின் ஜினாலயங்களில் (ஜினர் ஆலயம்) விடியற்காலையில் வரிசையாக  அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.   மகாவீரர் வரலாற்றைப் படிப்பார்கள் (இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் வரலாற்றைக் கூறும் 'ஸ்ரீபுராணம்' எனும் நூலில் உள்ள மகாவீரர் வரலாறு படிக்கப் பெறும்).  இதுமட்டுமின்றி  சித்தபக்தி, பரிநிர்வாண பக்தி  எனும் போற்றிப் பாடல்கள் (தோத்திரங்கள்) ஓதப்படும். பாவாபுரியில் உள்ள தாமரைக் குளம் போன்ற  அமைப்பைச் சிறிய அளவில் அமைத்து அதில்  மகாவீரர் திருவடிகளை வைத்து  சில இடங்களில் வழிபடுவர்.  தமிழ்ச் சமணர்களும்  ஆடவரும்  மகளிரும் விரதம் ஏற்பர்.

மகாவீரர் முக்தி பெற்ற  நிகழ்வு முதன்மையானது என்றாலும், மற்றும் சில சமண சமூகத்தினர் அவருடைய தலைமைச் சீடரான கௌதம சுவாமி, மகாவீரரின் மறைவுக்குப் பின் ஞானம் பெற்றதையும் முக்கியமாகக் கருதுகின்றனர்.  சுவேதாம்பர பிரிவு சமணர்கள், மகாவீரரின் இறுதித் தவத்தை நினைவுகூரும் வகையில், தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்கள் நோன்பு இருப்பதுண்டு.


சுவேதாம்பர சமணர் ஆலயங்களில்  "உத்தரத்யாயன சூத்திரம்" போன்ற புனித நூல்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கின்றனர்.  சுவேதாம்பர பிரிவு ஜைனர்களால் மகாவீரரின் பிறப்பு வரலாற்றைச் சொல்லும் கல்பசூத்திரம் என்ற புனித நூல் இந்த நாட்களில் வாசிக்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளில், ஞானபஞ்சமி ("அறிவின் ஐந்தாவது") என்ற விழாவைக் கொண்டாடி, கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர்.

குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பல ஜைன  (சமண) வணிகர்களுக்கு, தீபாவளி நிதி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இவர்கள் புதிய கணக்குப் புத்தகங்களை வாங்கி, சோப்தா பூஜை எனப்படும் சடங்குடன் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். சிலர் சதர்மிக் வாத்சல்யா போன்ற சமூக சமையல் நிகழ்வுகளை நடத்தி, அனைவரும் ஒன்றுகூடி உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கொடை அளிப்பது, பரிவு ஆகியனவற்றுக்குத் தீபாவளி  நாளில் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் சமூக சேவையாக உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிப்பது  (ஆகார தானம்), குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது  (ஞான தானம்), நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் இலவச மருந்துகள் அளிப்பது (ஔஷத தானம்),  உயிர் வாழும் உயிரினங்களைக் காப்பது மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது (அபய தானம்) போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதும் உண்டு.   உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலைப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமண சமூகத்தினர் பங்கேற்று, உயிர்களைக் காப்பதற்கான உறுப்பு தானத்தின் தேவையை வலியுறுத்துகிறார்கள். தன்னலமற்ற தொண்டு செய்வதற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நேரத்தையும், திறன்களையும் தானாக முன்வந்து செலவிடுவது ஒரு சிறந்த அறச் செயலாகக் கருதப்படுகிறது.

இறுதியாக, சமணர்களுக்குத் தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா மட்டுமல்ல, ஆன்மாவின் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஆன்மிகப் பயணத்தின் ஒரு குறியீடு ஆகும்.  



 இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாகத் தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி 'இந்தியப் பண்டிகை என்றால் அது தீபாவளி' என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது.

---------------------------------


""சமணர்களுக்குரிய தீபாவளி""
— முனைவர் தேமொழி
https://archive.org/details/thamizhanangu-october-2025/page/1/mode/2up
நன்றி : தமிழணங்கு - அக்டோபர் 2025  (பக்க: 1-6)


#தமிழணங்கு,  #தீபாவளி, #Themozhi 

Friday, August 1, 2025

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!


“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி  பகவத்கீதையின் சாரம் என்ற குறிப்புடன் “கீதாசாரம் சுவரொட்டி"யில் இடம் பெறும் கருத்துகள் யாவும் ஓர் ஆன்மீகப் புனைவு அல்லது கட்டுக்கதை.



வேதங்களின் சாரம் உபநிஷத்துகள்; அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத்கீதை. உபநிஷத்துகளின் சாரமான பகவத்கீதையை கண்ணன் மக்களுக்காக அருளிச் செய்தார் என்பது ஆன்மீக வாதிகள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. இவ்வாறாக பகவத்கீதை என்பதே எழுநூறு வசனங்களில் கொடுக்கப்பட்ட உபநிஷத்துகளின் சுருக்கமான சாரம்  என்ற நிலை இருக்கையில், அந்த சாரத்திற்கும் சாரம் என்று கீழ்க்காணும்;

      "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
      எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
      உன்னுடையதை எதை இழந்தாய்,
      எதற்காக நீ அழுகிறாய்?
      எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
      எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
      எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
      அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
      எதைக் கொடுத்தாயோ,
      அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
      எது இன்று உன்னுடையதோ
      அது நாளை மற்றொருவருடையதாகிறது
      மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
      இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்."
 பதினைந்து வரிகள் கொண்ட சொற்றொடர்கள் மிகப் பரவலாக அறியப்படுகின்றன.  

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ததும் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அவர் அளித்த செய்தியில்;  
      "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"
என்று தமது சமயச்சார்பற்ற உள்ளத்தை வெளிப்படுத்தினார்.

கீதையின் சுருக்கமாக கீதையின் இறுதியில் இரண்டே வசனங்களில் கண்ணனே கூறும் சாரத்திற்கும், கீதாசாரம் என அறியப்படும் இந்த 15 வரி சொற்றொடர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும்; பகவத்கீதையை முழுமையாகப் படித்தவர்கள், கீதாசாரம் சுவரொட்டியில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளைக் கீதையிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது என்கிறார்  ஸ்ரீ கிரிதாரி தாஸ் (https://www.facebook.com/profile.php?id=100005426808787).  

மேலும் அவர்,   கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது.  இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல, கீதாசாரம் சுவரொட்டியில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமும் இல்லை. என்கிறார்.

அனைத்தும் நன்மைக்கே என்பதைக் கீதையில் காண இயலாது.
"இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத்கீதை: 8.15) என்கிறது கீதை.
இவை  ஒன்றுக்கு  ஒன்று முரண் படும் கருத்துகள்.

தொடர்ந்து வரும் மற்ற வரிகளும்  கீதை சொல்லும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்பயன் கருத்துக்கு மாறான கருத்துகளாகவே  அமைந்துள்ளன என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ். அதாவது, புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும், பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படியே நடக்கின்றது  என்பது கண்ணன் கீதையில் கூறும் தத்துவம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் கண்ணனைச் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். என்பது இவர் வைக்கும் கருத்தாகும்.

திருவண்ணாமலை முனிவர் பகவான் ரமண மகரிஷி அவர்கள் பகவத்கீதையின் 700 வசனங்களில் 42 வசனங்களைத் தேர்ந்தெடுத்து, முழு கீதையின் சாரத்தையும் கீதாசாரம்  என்று தமிழில் வழங்கியுள்ளார்.  


கண்ணனின் கூற்றாகக் கீதை சாரத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மிகச் சுருக்கமாக கர்ணன் திரைப்படப் பாடலில்  தந்துள்ளார்:
"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்

என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே
[நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்]
கண்ணதாசன் (கர்ணன் - 1964)

கீதாசார சுவரொட்டியில் உள்ளவை பாபர் மசூதி இடிப்புக்குப்பின் அதை நியாயப்படுத்த ஆர் எஸ் எஸ்ஸால் பரப்பப்பட்ட வரிகள். ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்ட எல்லா கோவில்களிலும் இவ்வரிகள் கீதாசாரம் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பதாகவும் கருத்தொன்று மக்களிடையே இருப்பது தெரிகிறது.


சான்றாதாரம்:
1.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். டிசம்பர் , 2012. https://tamilbtg.com/whatever-happened-it-happened-well-is-this-gitacharam/

2.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். ஜனவரி  3, 2013
https://tamilbtg.com/what-is-real-gita-charam/

3.  கீதாச்சாரம் யாரால் உருவானது?
https://ta.quora.com/கீதாச்சாரம்-யாரால்

4. ரமண மகரிஷி வழங்கிய பகவத் கீதை சாரம் - 42 வசனங்கள்
https://www.facebook.com/watch/?v=4881951441837476


நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up
_________________________

#தமிழணங்கு,  #வரலாற்றில் பொய்கள், #Themozhi 

Friday, June 27, 2025

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor

—Dr. Jothi S. Themozhi 



The Digital Dilemma: Can Search Data Reflect Literary Fame?
In a bold attempt to map the popularity of all 1,330 Thirukkural couplets, one researcher turns to Google—an unconventional yet data-rich platform. The plan? Use Google search result counts to rank each couplet by popularity. 

But this method prompts a deeper, critical question:
What does the “number of results” from a Google search actually measure?
To design a methodologically sound study, researchers must first understand the limitations and nuances of using this digital data source.

Search Strategies: ‘All Results’ vs. ‘Verbatim’
The first major decision is choosing the search method. Google offers two fundamentally different modes:
All Results (Default):
          -Finds synonyms
          -Corrects spelling
          -May omit words
          -Tailors results based on user history and location
          -Example result count: 4,500,000

Verbatim Mode:
          -Searches exact phrase as typed
          -No synonyms or auto-corrections
          -Offers consistent, reproducible results
          -Example result count: 120,000
Choosing ‘Verbatim’ mode and using exact phrases in quotes (e.g., "exact couplet text") is essential for data reliability.

The Myth of Precision: What Google Really Tells Us
Google’s result count, often mistaken for a hard metric, is a broad estimate based on how many web pages it has indexed with the search terms. While appealing for its scale, this number comes with substantial caveats:
Advantages:
          -Easily accessible
          -Reflects global web presence
          -Encourages scalable analysis

Limitations:
          -Highly imprecise estimate
          -Affected by hidden algorithms
          -Varies by user and geography
          -Reflects web presence—not real-world popularity
          -Results fluctuate frequently

Six Hidden Pitfalls in Search-Based Literary Analysis:
1. Estimated, Not Exact
Google clearly warns users that its result counts are only rough approximations—unsuitable as a stand-alone metric in serious research.
2. Algorithmic Influence
Over 200 unseen ranking factors affect search outcomes. A couplet could rank high due to SEO tricks rather than genuine popularity.(SEO stands for Search Engine Optimization)
3. Personalization Bias
Results vary depending on who searches, where, and when. This makes data replication incredibly difficult.
4. Web Presence ≠ Popularity
A widely duplicated couplet might dominate result counts—even if few people actually read or value it.
5. Volatile Data Landscape
Google updates its index continuously. A search at 9 AM may yield very different results than the same search at 4 PM.
6. The Ecological Fallacy
Inferring individual-level insights from aggregate web data can be misleading. Web frequency does not equal cultural significance.

Building a More Credible Research Framework:
Despite its flaws, Google search data can still serve as a component of a larger analytical framework. A few strategic enhancements can boost its credibility:
1. Precision in Search Technique
Use ‘Verbatim’ mode exclusively. Enclose each couplet in double quotes for consistent phrasing and phrase order.
2. Standardize the Research Environment
Combat personalization by using:
          -Incognito browsing
          -VPN to standardize location (A VPN, or Virtual Private Network, creates a secure, encrypted connection over the internet.)
          -Consistent logging of search date and time
3. Embrace the Imperfections
Clearly state in the final paper that data reflects estimated web presence. Collect multiple data points to analyze consistency (average and standard deviation).
4. Triangulate Your Metrics
Combine Google data with:
          -Literary citation frequency (academic papers, news, blogs)
          -Surveys/interviews with Tamil scholars
          -Appearance in school curricula or anthologies
This multipronged strategy offers richer, more reliable conclusions about each couplet’s cultural relevance.

Conclusion: Search Wisely, Analyze Deeply
Google is a powerful but slippery tool for literary analysis. Alone, it risks misrepresentation. With rigor and triangulation, however, it can help shine new light on ancient wisdom like the Thirukkural—revealing how digital footprints mirror enduring textual resonance.

Thanks to : Thamizhanangu-July 2025 - (Pages : 15-18)

"Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor"
— Dr. Jothi S. Themozhi
https://archive.org/details/thamizhanangu-july-2025/page/15/mode/2up


#தமிழணங்கு,  #திருக்குறள், #English,  #Themozhi