Showing posts with label முக்குடை. Show all posts
Showing posts with label முக்குடை. Show all posts

Tuesday, November 11, 2025

குறளுக்கு உரிமை கோரல்

குறளுக்கு உரிமை கோரல்

திருக்குறளின் சிறப்பு, நூலின் ஆசிரியர் யார் என்பதையும், அவர் பற்றிய குறிப்பாக அவருடைய காலம், இடம், சமயம், இனம் என எதுகுறித்தும் எக்குறிப்பையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடாமல் இருப்பது. வள்ளுவர் என்பவர் தமிழ் அறிந்தவர் என்பதையும் அவர் மக்கள் தம்  வாழ்வில் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பி அவற்றைக் குறள் வெண்பாக்களாக எழுதிவிட்டுச் சென்றார் என்பதை மட்டுமே நாம் உறுதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் நூலின் வழியே கிடைக்கும் குறிப்புகள் மூலம் ஏதேனும் அவர் குறித்துத் தெரிந்து கொள்ள இயலுமா என ஆராய்வது ஆய்வாளர்களின் ஆர்வம்.  ஆனால் அது போன்ற தேடல்களைத் தடை செய்ய இயலாது. வள்ளுவரைத் தங்கள் இனம் என்றும், தங்கள் சமயம் என்றும் என்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தமிழ் ஆய்வுலகின் தொடர்கதை.  

வள்ளுவர் ஒரு தமிழறிந்த ஆண் புலவர் என்பதையும், அறம் மிக்க வாழ்வை அவர் வலியுறுத்தினார் என்பதையுமே நாம் அவர் குறித்து உறுதியாகக் கூறக் கூடிய கருத்துகள்.
மழை மீதும், உழவு மீதும் பெருமதிப்பு  கொண்டிருந்தார்;
முன்னோர் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார்;
ஊழ் என்பதன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்;  
இல்லறத்தைப் போற்றினார் துறவறத்தையும் மதித்தார்;
ஈகைக் குணத்தைப் போற்றினார், பிச்சை எடுப்பதை வெறுத்தார்;
கொல்லாமை, ஊனுண்ணாமை ஆகிய பண்புகளைப்  போற்றினார்;
வாழ்வில் கல்வி, அன்பு, நட்பு, இல்வாழ்க்கை, நல்லொழுக்கம்  ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்;
பொய், களவு, கள், கொலை, காமம் (முறையற்ற உறவு/கணிகையர் உறவு) ஆகிய ஐந்தையும் தீய ஒழுக்கங்கள் என்றார்;
சினம் கொள்ளுதல், கடுஞ்சொல் கூறல், கேடு செய்தல்,  பற்று கொண்டிருத்தல், சூதாடுதல் ஆகியனவற்றைக் கண்டித்தார்;
முற்பிறவி, மறுபிறவி, ஏழ்பிறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பதை அவர் கொள்கை  நோக்குகளாக அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றின் மூலம் தெளிவாக அறிய முடியும்.  

வள்ளுவர் தன் சமயத்தவர் என உரிமை  கொண்டாட விரும்புபவர்களுக்கு ஆணித்தரமான குறிப்பு  எதையும் அவர் விட்டுச் செல்லாததுடன், அவர் எவற்றையும் பொதுச் சொல்லால் சொல்லிச் செல்வதே பலர் அவருடைய பாடல் குறிப்புகள் மூலம் தங்கள்  பிரிவில் அவரை அடக்கும் முயற்சிக்கு  வழிகோலிட்டு விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. முதல் குறள் குறிப்பிடும் "ஆதிபகவன்" யார் என்பதிலேயே கேள்விகள் தொடங்கிவிடுகின்றன.  இந்திய நிலப்பரப்பில் தோன்றாத ஆபிரகாமிய சமயங்களும் கூட வள்ளுவரை  உரிமை கொண்டாடும் அளவிற்கு வள்ளுவர்பால் ஆர்வம் கரை புரண்டு ஓடுவது இன்றைய நிலை. இவ்வாறிருக்க, இந்திய மண்ணின் வைதீக சிரமண சமயங்கள் வள்ளுவர் கருத்துக்களின் அடிப்படையில் அவரை உரிமை கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை. குறள் சொல்லும் கருத்துக்களைச்  சீர் தூக்கிப் பார்த்தால்  அவர் யார் என்ற குறிப்பு கிடைக்கக் கூடும்.

வைதீக சிரமண சமயங்களும்  தமிழ் மண்ணுக்குப் புறச் சமயங்களே என்பதைத் தமிழர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வள்ளுவர் ஏதோ ஒரு சமயத்தில்  பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம் அதன் தாக்கமும் அவருக்கு  இருந்திருக்கலாம். மெய்ப்பொருள் காண விழைந்த அவர் பின்னர் வேறு ஏதோ  ஒரு சமயத்தையும் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது எந்தச் சமயமுமே எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கலாம். உலகைப் படைத்தவர் என்று எவரும் இல்லை (1.atheistic) என்றோ, அல்லது படைத்தவர் யார்? அப்படி என ஒருவர் உண்டா இல்லையா என்ற அக்கறை எனக்கில்லை (2.agnostic) என்ற பிரிவுகளின் கீழும் வள்ளுவர் நகர்ந்து இருக்கலாம். இந்திய மண்ணின் சமணம் பௌத்தம் எனப்படும் சிரமண  சமயங்களை  மெய்யியலாளர் முறையே  முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்துவதைக் காண இயலுகிறது.  ஆக, இறுதியில் வள்ளுவரின் கொள்கைகள் மூலம் அவர் வாழ்வின் சமய நிலைப்பாட்டைக் கண்டுணர இயலுமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

தனி வாழ்வில் அன்புடைமை, அருளுடைமை, அற வாழ்வு, பிறர்க்குத் தீங்கிழைக்காத வாழ்க்கை,  நன்னெறி பின்பற்றல் ஆகிய அறப்பொருள்  கருத்துக்களைக்  கொண்டோ;  அல்லது  பொது வாழ்வில்  மன்னனின் கடமை, மக்களுக்கு முறை செய்தல், பொருளாதாரக் கொள்கை, வரிவிதித்தல்  போன்ற  புறப்பொருள் கருத்துக்களைக்  கொண்டோ வள்ளுவரை ஒரு சமயத்திற்குள்  அடையாளப் படுத்தலாம் என்ற முயற்சி தெளிவான ஒரு முடிவைத் தராது.  ஏன் எனில், மக்களை  நோக்கிய நற்பண்புகளும், வாழ்க்கை நடைமுறைகளும் உலகின் அனைத்து   மண்ணிலும் வழக்கமாகவே இருக்கும், அவை பொதுவான கருத்துகள்.
     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு. (72)
என்பது உலகம் தழுவிய கோட்பாடு, அனைத்துச் சமயங்களும் தோன்றுகையில் இதை அடிப்படையாகக்  கொண்டே தொடங்கப்பட்டிருக்கும். சமயம் நிறுவனமயமாக்கப் பட்ட பிறகு அதன் கொள்கைகள் மாறிவிடுவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

     தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
     மெய்வருத்தக் கூலி தரும். (619)

     இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
     கெடுக உலகியற்றி யான். (1062)

     நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று. (222)

என்ற  இவை போன்று   கடவுளைப் பொருட்படுத்தாமை, கடவுளையே கண்டிக்கும் முறை, மேலுலகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் கருத்துகள் உலகின் பல சமய நம்பிக்கைகளுக்கு அடிப்படை அல்ல.  இது ஒருபுறமிருக்க,  உலகின் 'அனைத்து' உயிர்களிடமும் அன்பு செலுத்துக, 'புலால் உண்ணுவதைத் தவிருங்கள்' என்று கூறும் சமயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதைத்தான் வள்ளுவரின் சமயம் எது என்ற தேடலுக்கு முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972), பரந்து கெடுக உலகியற்றியான்  (1062) என்ற கூற்றுகளும்; புலால் மறுத்தல் (251-260) கருத்துகள் யாவும்   வள்ளுவர் யார் என்று அறியும் நோக்கில் முன்னேற வேண்டிய திசை காட்டும் கைகாட்டிகள்.

கர்மவினை, மறுபிறவி, முக்தி, தர்மம் இவை யாவும் இந்திய மண்ணின் சமயங்களில் பொதுவாக உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கம் தருவதில்தான்  அவற்றிற்கு  இடையே சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அது போன்றே, சொர்க்கம் நரகம் போன்றவையும் இச்சமயங்களில் உண்டு. இருப்பினும்,  இவற்றுக்கான விளக்கங்களும் வேறுபடும். இந்திரன் லட்சுமி போன்ற கடவுளரும் இச்சமயங்களில் உண்டு. ஆனால், அவர்களை அச்சமயத்தார் அணுகும் நோக்கமும் வேறுபடும். இந்தியச் சமயங்கள் யாவும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பல்வேறு நம்பிக்கைகளை, சடங்குகளை, வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொண்டவை  என்பது சமய ஆய்வாளர்கள் கூறும் கருத்து. காலப்போக்கில் அச்சமயங்களின் பரிமாணங்களிலும் மாற்றம் ஏற்பட்டு; மக்களின் தேவையை, விருப்பத்தை உள்வாங்கித் தங்களுடையதாக்கிக் கொண்டு வளர்ந்தவை. 

சொல்லப் போனால், அடிப்படையில் உலகைப் படைத்தவர் பற்றிய கருத்து, கொல்லாமை, புலால் மறுத்தல் கொள்கைகள் மட்டுமே இந்தியச் சமயங்களின் தனித்தன்மையை ஒவ்வொன்றிலும்  வேறுபடுத்திக் காட்டும்.  இவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளே ஆய்வாளர்களுக்கு அவர் யார் எனக் காட்டவும்  கூடும். வள்ளுவர் காலத்தில் கடவுளைப் பற்றிய கருத்திலும் புலால்மறுத்தலிலும் தீவிரமாக இருந்தவை  சிரமண சமயங்களான சமணமும் பௌத்தமும் என்பது வரலாறு. கொல்லாமை கருத்தில் பௌத்த சமயம், வைதீகம்-சமணம்  சமயக் கொள்கைகளுக்கு  இடைப்பட்ட வழியில் பயணித்தது. 

தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி "THIRUKKURAL–An Abridgment of Sastras" (2017) என்ற நூலை வெளியிடுவதற்கு முன்னரே; ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற நூலை 1950இல் (சங்கத மேற்கோள்களுடன்) ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டுள்ளது; நூலின் உரையாசிரியர் பெயர் கொடுக்கப்படவில்லை, இது மடத்தின் வெளியீடு.  சுருக்கமாக; திருக்குறள் வேதங்களின் சாரம் என்பதுதான் அந்த நூலின் நிலைப்பாடும். ஏன் 108 திருக்குறள்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது? இந்திய ஆன்மீகத்தில் 108 என்ற எண்ணிற்குத்  தனிச்சிறப்பு உண்டு, வைதீகச் சமயத்திற்கு மட்டுமல்ல சமண புத்த சமயங்களுக்கும் 108 என்ற எண் முக்கியமானதே. ஒவ்வொரு சமயமும் 108 என்பதற்கு ஒவ்வொரு காரணத்தை அடிப்படையாகக் கூறும்.  இந்நூலில் பெரும்பாலும் சனாதன கருத்து சாயல் கொண்ட குறள்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு  வைதீகச் சமய தொடர்பு காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது "புலால் மறுத்தல்" என்பதற்கு இந்நூல் தரும் விளக்கத்தை மட்டும் காணலாம். 
     அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (259)
[அறத்துப்பால், துறவறவியல், புலால் மறுத்தல்]
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது (மு. வரதராசன் உரை). 
சனாதனத்தின் அடிப்படை செயலான வேள்வி குறித்த இக்குறளை  வைதீகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் பொழுது, கொடுக்கப்படும் விளக்கமே களத்தில் எதிரணிக்குச் சார்பாக விளையாடும் ஆட்டக்காரரின் செயல்பாடு போல அமைகிறது. குறிப்பாகப் பௌத்தச் சமயத்திற்குச் சார்பாக அமைகிறது இந்நூல் தரும் விளக்கம்.  அந்த விளக்கத்தை அவ்வாறே இங்குக்  கொடுப்பது தெளிவுதரும். 

"தமிழ்நாட்டில் பண்டை சங்கநூல்களில் புலால் உண்ணுவது ஆக்ஷேபிக்கப்படாதது மாத்திரமேயன்றி அது போற்றப்பட்டு மிருக்கிறது. பழைய தமிழ்மக்கள் புலாலருந்துவதைச் சிறப்பாகத்தான் கொண்டிருந்தார்கள். வேதங்களிலும் யாகம் முதலியவைகளில் மாம்சம் உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால் திருவள்ளுவர் வைதிகக் கொள்கையினராயிருந்தாலும் முதன் முதலாக புலால் மறுத்தலைப் பிரசாரம் செய்ததற்குக் காரணம் என்னவெனின், அவர்காலத்தில் வடநாட்டிலிருந்து புத்த சமண மதப்ரசாரங்கள் தென்னாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அப்போதிருந்த வைதிகமகான்கள் பௌத்தர்களுடைய அஹிம்ஸைக் கொள்கையைத் தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.அதனால்தான் இக்காலத்து பிராமணர்கள் புலால் தவிர்த்திருக்கிறார்கள் போலும்.

ஆனால் இவ்விதம் அபிப்பிராயப்படுவது சரியாகத்தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸாதர்மத்தை உபதேசித்திருப்பது பௌத்தசமயக் கொள்கைகளை அனுசரித்து அன்று, வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் உபதேசிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸாதர்மத்தை யனுசரித்தே ஆகும். அதெப்படியென்றால், வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் ஒருவன் கிரகஸ்தாச்ரமத்தை விட்டு ஸன்யாஸாச்ரமத்தை யடையும் போது உலகிவுள்ள எல்லாப்ராணிகளுக்கும் அபயப்ரதான ப்ரதிக்ஞை செய்து அஹிம்ஸா விரதத்தைக் கைகொள்ளும்படி உபதேசிக்கின்றன. பௌத்தமதமோ அம்மதத்தில் சேர்ந்தோர் எல்லாருக்குமே கொல்லாமையை உபதேசிக்கிறது. ஆனால் அந்த உபதேசம் அனுஷ்டானத்தில் விபரீதமாகவே முடிந்திருக்கிறது....    ....    ....  ஆதி புத்த பகவான்*  மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில் அவனால் பரிமாறப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத் தின்றுவிட்டதால் ஏற்பட்ட அதிசாரம் காரணமாகத் தான் என்று புத்தருடைய சரித்திரங்கள் கூறுகின்றன. (Vide Sacred Books of the East Vol XI page 71-73) பிறர் கொன்றதைத் தாம் சாப்பிட்டால் தவறில்லை என்ற கொள்கையை நம் நாயனார் கீழ்வரும் குறளில் பரிஹசித்திருக்கிறார் :-
      தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (256) 
(என்ற குறளுக்குப் பொருள் விளக்கம் அளித்துவிட்டு; தொடர்ந்து.....) 
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லாமக்களுக்கும் பூர்ண அஹிம்ஸாதர்மத்தை உபதேசிக்கவில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு மாத்திரம் உயிருள்ள ஒரு செடியினுள்ள இலையைக்கூடக் கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம் உபதேசிக்கிறது. வர்ணாச்ரமங்களின் படிகளையனுசரித்து அஹிம்ஸா தர்மமும் படிப்படியாக கடுமையாக்கப் பட்டிருக்கிறது....   ["திருக்குறள் நூற்றெட்டு" 1950, பக்கம் 56-57] என்று தொடர்கிறார் உரைகாரர். 
(*முதல் குறள் விளக்கத்தில் 'ஆதிபகவன்' என்பதை கீதையின் கண்ணனுடன் தொடர்புப்படுத்தியவரே இங்குப் புத்தருக்கு  அச்சொல்லைப்  பயன்படுத்துகிறார் !!!!!)

உண்மையில் இது ஒரு மிக நல்ல  வாதம், உரிமை கோரல் வழக்கைத் தெளிவாக்கிவிட்டது.  வைதீகர்கள் வேள்வியில் உயிரினங்களைப்  பலியிட்டனர் என்பது வேதத்தில் பதிவாகி உள்ளது என்றால்; 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு'  என்ற வகையில் உணவுக்கொள்கை வைத்திருக்கும் பௌத்தர்களை வள்ளுவர் கண்டிக்கிறார் என்றால்;   இந்த வாதத்தின் முடிவாகக் கொல்லாமை, புலால் மறுத்தலை அறிவுறுத்தும் திருக்குறளை  சமணக் கொள்கைகளின் தாக்கம் கொண்ட நூல் என்றுதான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.



[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 310, 311 - 12.11.2025, 19.11.2025]

Saturday, October 11, 2025

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"


சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்னவாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.  மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம். சித்தன்னவாசல் குகைக்கோயிலின் முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஓவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.  வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஓர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவு கொண்டனர். அவனுக்கு அண்மையில் உள்ளது அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது;  என்று இவ்வாறாகத் தமிழ் அறிஞரும் வரலாற்று  ஆய்வாளரும் ஆன டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர் எழுதிய "பல்லவர் வரலாறு" நூலில் குறிப்பிடுகிறார். 

ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்  எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்:   மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.  நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை,  காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக  அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில்  காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில்,  மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும்.  அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு.  அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள்.  இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன.  உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார்  மயிலை சீனி வேங்கடசாமி.


செய்யறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட சித்தன்னவாசல் குகைக்கோயில்
"அரசன் அரசி ஓவியம்"



 
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு அக்கால வரலாற்று  ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர்.  மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.  

மேலும்; பாண்டிய மன்னன்  ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர்  சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

      "திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
      தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
      அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
      வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
      லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை  . . . . . . . . .
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
      அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
      சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
      புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
      மெடுத்தான் முன்"

சொல் பிரித்து :
      "திருத்திய பெரும் புகழ் தைவ தரிசனத்து 
      அரும் தவ முனிவனை பொருள் செல்வன்
      அறம் கிளர் நிலைமை இளங்கௌதமன் என்னும் 
      வளம் கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனே பார் முழுதும் ஆண்ட பஞ்சவர் குல 
      முதலார் கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை......   
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாயில்  அலறிவர் கோ இன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி...... 
      அழியா வகையாற் கண்டனனே...... 
      சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம்
      புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டகம் 
      எடுத்தான் முன்"

இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில்,  சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது.  இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்துத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும்  காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும்,  அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


அடிக்குறிப்புகள்:
https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htm
https://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை

நன்றி: தமிழணங்கு - நவம்பர் 2025 (பக்கம்: 3-6)

Tuesday, August 19, 2025

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும் 



ஔவையின் தனிப்பாடல் ஒன்று 'நான்கு கோடி பாடல்' என்று அறியப்படுகிறது. அரசன் இட்ட கட்டளைப்படி ஓர் இரவுக்குள் நான்கு கோடிப் பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ மன்னனின் அவைக்களப் புலவர்கள் கலங்கியதாகவும், அப்பொழுது, ஔவையார் நான்கு வரிகளைக் கொண்ட இப்பாடலைச் சொல்லி, இப்பாடல் சொல்லும் வாழ்வியல் நெறி ஒவ்வொன்றும் கோடிப் பொன்னுக்குச் சமம் என்று கூறியதாகவும் அக்கதை அறியப்படுகிறது. 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
          மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் 
          உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
          கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
          கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)

இப்பாடலில் ஒளவையார் வாழ்வியல் நெறிகளாக நான்கு செயல்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்குச் சமம் எனக் கூறுகிறார். அவை முறையே; 
தன்னை மதிக்காதவர்களின் வீட்டுக்குச் சென்று அவ்வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது.
உண்ண வருமாறு வருந்தி அழைக்காதவர்களின் வீட்டில் உண்ணாமல் இருப்பது.
கோடி கொடுத்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்திருப்பது.
எத்தனை கோடி கொடுத்தாலும், தான் சொன்ன சொல் தவறாமல் இருப்பது. 
'மிதியாமை', 'உண்ணாமை' ஆகிய அறிவுரைகள் செய்யாதீர் என்று எதிர்மறை கருத்துகளாகவும், நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்! சொன்ன சொல் தவறாமல் வாழ்! என்பன உடன்பாட்டுக் கருத்துகளாகவும் அமைந்துள்ளன. 
இந்த வரிகள், ஒருவரது குடிப்பிறப்பும், நற்பண்புகளும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை உணர்த்துகின்றன. 

வாழ்வியல் நெறிகளை வகுத்தளித்த வள்ளுவர் ஔவையார் போல எவையெவை கோடி மதிப்புப் பெறுபவை  என்று  கூறுகிறார் என்று அறிய விரும்பி  திருக்குறளை ஆராய்ந்தால் வள்ளுவத்தில் 10 குறள்கள் கோடி பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் இரண்டு குறள்கள்   (குறள்கள் - 554,  559) கோடி என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் மன்னனின் வளைந்த செங்கோல் (கோல்கோடி)  என்ற கொடுங்கோன்மை ஆட்சியைக் குறிப்பிடுகின்றன, இவற்றில் கோடி  என்பது வளைந்த என்ற பொருள் தருபவை. இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டால் எட்டு குறள்கள்  பின்வரும் கருத்துகளைச் சொல்கின்றன:
1. அறிவற்றவரின் தீங்கு விளைவிக்கும் நட்பை விட, அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகை அதைவிடக் கோடி மடங்கு மேலானது (816); 
2. சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பால் விளையும் தீங்கை விடப் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துகோடி மடங்கு நன்மையானது (817); 
3. தவறாக வழிநடத்தும் அமைச்சரை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலானது (639); 
4. இரக்கச்சிந்தையுடன் ஒருவர் பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அவரிடமும் சென்று இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும் (1061); 
5. கொடுத்து உதவும் பண்பில்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் இருந்தாலும் அதனால் எவருக்கும் பயனில்லை (1005); 
6. பலகோடிப் பொருள் கொடுத்தாலும் நற்பண்பு நிறைந்த குடியில் பிறந்தவர் தன் குடிப்பெருமையைக் குலைக்கும் செயலைச் செய்ய மாட்டார் (954); 
7. ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றிக் கோடிக்கும் மேலான எண்ணங்களுடன் மனக் கோட்டைகள் கட்டுவார்கள் (337);  
8. ஒருவர் முயன்று கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தாலும் அவரிடம் எது தங்குமோ அதன் பயனை மட்டுமே அவரால் துய்க்க இயலும் (377). 

கோடி என்ற சொல் இடம் பெறும்  குறள்களும் அவற்றுக்கு மு. வரதராசனார் வழங்கிய தெளிவுரையையும்  அடுத்துக் காணலாம்: 
         1.  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
          ஏதின்மை கோடி உறும்.    (குறள் - 816)
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். 

          2. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
          பத்தடுத்த கோடி உறும்.   (குறள் - 817)
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

          3. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
          எழுபது கோடி உறும்.   (குறள் - 639)  
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.  

          4. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
          இரவாமை கோடி உறும்.   (குறள் - 1061)
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். 

          5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
          கோடியுண் டாயினும் இல்.    (குறள் - 1005)
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

          6. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
          குன்றுவ செய்தல் இலர்.   (குறள் - 954)
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. 

          7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
          கோடியும் அல்ல பல.   (குறள் - 337)
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். 

          8. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
          தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (குறள் - 377)
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் என்று ஔவையும்; அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் என்று வள்ளுவரும் நற்குடி பிறந்தவர் சிறப்பைப் பாராட்டுகிறார்கள்.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 297 &  298  -  13.08.2025 & 20.08.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #முக்குடை, #Themozhi 

Wednesday, May 28, 2025

அட்சய திருதியை எவருடைய பண்டிகை ?

 
ஒவ்வொரு ஆண்டும் இளவேனில்  காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை அட்சய திருதியை, வட இந்தியாவில்  இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அக்ஷய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) பண்டிகை கொண்டாடப்படும்.  அதே நாளானது  தமிழகப்பகுதிகளில் சித்திரை மாதத்து  வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளாக இருக்கும். எனவே தமிழகத்தில் சித்திரை வளர்பிறை  மூன்றாம் நாள்  அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
 
அட்சய  / அக்ஷய என்றால் குறைவற்ற  என்ற பொருள்; அட்சய பாத்திரம் என்பது அதே பொருளின் அடிப்படையில்  உருவான சொல்தான்.  திருதியை என்றால் 3 ம் நாள் என்பதாகும்.   இது நாட்காட்டியில் பழைய முறையில் வானியல் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடும் முறையில் அமைகிறது.  
வளர்பிறை (சுக்கில பட்சம்/நிலவொளி அதிகரிக்கும் நாட்கள்) மற்றும் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்/நிலவொளி குறையும் நாட்கள்) நாட்கள் அமாவாசை (அல்லது) பௌர்ணமி அடுத்த நாள் முதலாகத் தொடக்கம் கொண்டு  கணக்கிடப்படுவது வழக்கம். 
 
இவ்வாறு தொடங்கும் வரிசையில்  மூன்றாவது நாள் திரிதியை எனக் குறிப்பிடப்படும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. "திருதியை", 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி,  12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அல்லது) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
 
அட்சய திருதியை நாளில் அசையும் அசையா சொத்துக்களில் பணம் முதலீடு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது வணிகர்கள் தொடக்கி வைத்த வணிகத் தந்திரம்.  குறிப்பாக இது  தங்க நகை  வியாபாரிகளின் முன்னெடுப்பு.  அட்சயதிருதியை நாளில் 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என்று கூறும் வழக்காறு மக்களிடையே நிலவி வரும் காரணத்தால் கடன் வாங்கியாவது குன்றிமணி அளவு  தங்கம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை  இது மக்களிடம் வளர்த்துவிட்டது.சென்ற ஆண்டு வாங்கினோமே  அதனால்  செல்வம் கொழித்ததா என்பது ஆராயப்படுவதில்லை.  அட்சய திருதியை கொண்டாட்டம் அண்மைய வழக்கம்.  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அட்சய திருதியை என்பதை ஆன்மீகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.  குறிப்பாக 50 அல்லது 60 அகவை முதிர்ந்த பெரியோர்களைக்  கேட்டாலோ, அக்காலத்து ஏப்ரல் மே மாதங்களில் வெளியான பத்திரிக்கை செய்திகள், கதைகள் போன்றவற்றை மீள்பார்வை செய்தாலோ இந்த உண்மை தெளிவாகும்.  இது மக்களின் ஆசைக்குத் தூபம் போட்டு வணிக நோக்கில் பெரிதாக்கப்பட்ட பண்டிகை.
 
 
 

 
தீபாவளியைப்  போலவே  சமணர்களிடம் இருந்து வைதீகச் சமயத்தார் உள்வாங்கிக் கொண்டது இந்த அட்சய திருதியை பண்டிகையாகும்.  
 
சமணத்தில், அட்சய திருதியை நாள் என்பது, சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது.
 
'வர்சி தப' என்றும்  சமணர்கள் இவ்விழாவைக் குறிப்பிடுவது வழக்கம். ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர். இந்நாளில் சமணர்கள் உண்ணாநோன்பு இருப்பதும் வழக்கமே.
 

 
சமண பண்டிகையான தீபாவளியை  எடுத்துக் கொண்டு அதற்கு ஒன்றுக்கும்  மேற்பட்ட  கதைகளாக நரகாசுரன் வதம்,ராமர் சீதை அயோத்தி திரும்பிய நாள், லக்ஷ்மி பூஜை  நாள் என்று பற்பல காரணங்களைக் காட்டி இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கம் போலவே;  வைதீகச் சமயம் இந்நாளுக்கும்  ஒன்றுக்கு மேற்பட்ட பல புராணக் கட்டுக் கதைகள் கொடுத்துள்ளது; அவை
 
1.  பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
2.  ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
3.  திரேதாயுகம் ஆரம்பமான நாள்
4.  பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
5.  அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
6.  கங்கை நதி பூமியைத் தொட்ட நாள்
7.  குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
8.  வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
9.  குசேலர் கிருஷ்ண பகவானைச் சந்தித்த நாள்
இவற்றில் இழையோடி இருக்கும் கருத்து செல்வச் செழிப்பின்  தொடக்கம் என்பதாக இருப்பதைக் காண முடிகிறது.
 
இந்துமதத்தினர் தங்கள் சமயத்தில் அட்சயதிருதியை இணைத்துக் கொண்டது போலவே புத்த சமயத்தினரும் பிழையாக அட்சயதிருதியை நாளை மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரம் கிடைத்த நாளாகக்  கூறி வருகிறார்கள்.   மணிமேகலை காப்பியம் சொல்லும் தகவலுடன் இக்கருத்து  முரண்படுகிறது.  அட்சயதிருதியைக்கும் மணிமேகலை  அமுதசுரபி  என்ற  அட்சய பாத்திரத்தைப் பெற்ற கதைக்கும் தொடர்பில்லை. 
 
மணிபல்லவம் தீவில்  (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி  மணிமேகலைக்குக் கிடைத்த நாள்  வைகாசி விசாகம் முழு நிலவு நாளாகும். இந்த நாள் புத்த பூர்ணிமா நாள்  என்று அழைக்கப்படும். புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
அதாவது, வரும் மே 12, 2025 வைகாசி விசாகம் / புத்த பூர்ணிமா என்ற முழுநிலவு நாள், இது வட இந்திய நாட்காட்டி கணக்கு முறை; பார்க்க:https://www.drikpanchang.com/panchang/month-panchang.html?date=12/05/2025)
 
மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக்  காத்து நிற்கும் தீவதிலகை என்பவள் மணிமேகலையிடம் கூறுகிறாள்.  இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல்.
(ref : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017366_மணிமேகலை.pdf)
எனவே, வைகாசி விசாக நாள் என்பது வேறு, அட்சயதிருதியை நாள் என்பது வேறு. 
 
ஒரு பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பண்டிகைக்கு,  நம்ப முடியாத வகையில் பல்வேறு  கதைகள் சொல்லப்பட்டால்,  அவை யாவும் அப்பண்டிகையைத்  தங்கள் வழக்கத்தில் உள்வாங்கிக் கொள்ளப் புனையப்பட்ட புனைவுகள் என்பதையும், அப்பண்டிகை  உண்மையில் வேறு ஒருவருக்குச் சொந்தம் என்பதற்கான அறிகுறி அது என்பதையும்  புரிந்து கொள்ளலாம்.  பிறகு முறையான ஆய்வை முன்னெடுப்பதன் மூலம் அப்பண்டிகை எவருடைய வழக்கம் என்பதும் தெளிவாகும்.   இது போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் பண்பாட்டுக் கலப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.  

நன்றி:
தமிழணங்கு

அட்சய திருதியை
முனைவர் தேமொழி

தமிழணங்கு - ஜூன் 2025 (பக்கம்:3-6)
https://archive.org/details/thamizhanangu-june-2025/page/3/mode/2up

&

முக்குடை - ஜூலை 2025 (பக்கம்: 21 -23)


"அட்சய திருதியை" என்ற கரும்புச்சாறு திருவிழா!
மின்தமிழ்மேடை  - 30 [ஜூலை  - 2022]
https://archive.org/details/THFi-QUARTERLY-30/page/n41/mode/2up















































































































































#தமிழணங்கு,  #மின்தமிழ்மேடை, #வரலாற்றில் பொய்கள், #Themozhi