Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Tuesday, December 2, 2025

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .

      பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மை உண்டாகப் பெறின் (54)
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதி நிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

கற்பென்பது ஒருத்திக்கு  ஒருவன் என்று வாழும் இல்லற வாழ்வைக் குறிப்பதாகப் பொருள் கூறப்படும்.  ஆனால் ஆணுக்குக் கற்பு  என்ற கட்டுப்பாடு இல்லை என்பது இன்றுவரை நடைமுறை வழக்கு. கைம்பெண் ஆனவள் வேறு ஆணுடன் இல்லறம் தொடரும்  நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவளை இறந்த கணவனுடன் சேர்த்து உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் முறை முன்னர்  இருந்தது.  ஆங்கிலேயர் ஆட்சியில் கடுமையான சட்டத்தை அவர்கள் இயற்றும் வரை இந்தியாவின் பல பகுதிகளில்  'சதி' என்ற இந்தக் காட்டுமிராண்டி சடங்கு வழக்கமாகவே இருந்தது.

சென்ற நூற்றாண்டில் பெண்ணுரிமைக்குக்  குரல் கொடுத்த புரட்சியாளர்களான பெரியார், பாரதியார் போன்றோர் பெண்களுக்கு  மட்டும் கற்பை  வலியுறுத்துவதை ஏற்றவர்கள்  இல்லை. கற்பை இருபாலருக்கும் பொதுமைப்  படுத்தினார்கள்.  
      "கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
என்று  முழங்கினார் பாரதி. "சந்திரிகையின் கதை" என்று அவர் எழுதிய புனைகதை மூலம்  விசாலாட்சி என்ற இளம் கைம்பெண் ஒருத்திக்கு மறுமணம் குறித்தும் எழுதி இருப்பார்.

அதற்கும் முன்னர் ஆரியப் பண்பாட்டின் தாக்கமாகப் பெண்கள் கற்பு என்பது குறித்து மூளைச் சலவை செய்யப் பட்டார்கள் என்பதை  இக்கால 'இசட் தலைமுறை' (Generation Z) அறிந்திருக்க மாட்டார்கள். கற்பு என்பதை 'பதிவ்ரதாத்வம்' அல்லது பதிவிரதம்  என்று சாத்திரங்களில் விளக்கினார்கள்.  "பதிவ்ரதாத்வம் - நாரீணாம் - ஏதத் -ஏவ - ஸநாதனம்" என்று மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 249ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் கூறுகிறதாம்.

ஆண்கள் மேலோகம் செல்ல வேண்டுமானால் (உத்தம கதி அடைதல்) அவர்களுடைய ஊனக்கண்ணுக்குத் தெரியாத கடவுளை சாத்திரங்கள் கூறுவது படி  மனதில் உருவகித்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை வணங்க வேண்டும்.  ஆண்கள் கவுளை வழிபடுதல், வேள்வி செய்தல், யக்ஞம், தானம்  என்ற பல செய்தே கடவுள் அருளைப் பெற வேண்டி இருக்கிறது.
 
ஆனால் பெண்களுக்கு இத்தகைய கவலையே இல்லை.  அவர்கள் தங்கள் கண்ணெதிரே காட்சி தரும் கணவனையே தெய்வம் என வழிபாடு செய்து சொர்க்கம் போகலாம்  என  கடவுளின் ஆணையான சாத்திரங்கள் கூறுகின்றனவாம். கணவனைத்  தெய்வமாக மதித்து அவனுக்குப் பணிவிடை செய்தாலே எளிதாகச் சொர்க்கம் போகலாம். அக்கணவன் கேடு கெட்டவனாக இருந்தாலும் கூட கடவுள் அவன் வழியே மனைவிக்கு அருள் தந்து அவளைக்  கடவுள் கடைத்தேற்றுவாராம். அதாவது மற்றவர்களைவிட பதிவ்ரதாஸ்தரீகளே எளிதில்  கடைத்தேறும் பாக்கியம் பெற்றவராகி யிருக்கிறவர்கள் என்று சாத்திரம் பெண்களுக்கு வழி காட்டுவதாகக் கூறப்படுகிறது.

"பெண்டிர்க்குப் பதியே தெய்வம்; வேறு புகலிடம் இல்லை" என மகாபாரதம் அனுசாஸனிகபர்வம் 250ஆவது அத்தியாயம் 25ஆவது சுலோகம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.  உடலை வருத்தி மிகுந்த துன்பங்களுடன் ஓர் ஆண் அல்லது கணவன் அடையும் பயனை,  கணவனை  வணங்கி பூஜை செய்வதினாலேயே பெண்ணானவள் எளிதில் அடைந்துவிடுவாள்  என்று  அதற்கு அடுத்து வரும் மகாபாரத அனுசாஸனிகபர்வம் பர்வம் 250ஆவது அத்தியாயம் 26ஆவது சுலோகமும் கூறுகிறதாம்!!!

பெண்களுக்கு ஏதோ சிறப்புச் சலுகை அளிப்பது போல ஆசை வார்த்தைகள் எல்லாம் காட்டி,  மனைவியைக் கணவனுக்குக் குற்றேவல்  செய்ய வைத்து ஆண்கள்  எவ்வாறு சுகமாக வாழ்ந்திருக்கிறார்கள், அதற்குச் சாத்திரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று சிந்தித்தால் பெண்கள் ஏமாற்றப் பட்ட நிலை கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.  



மணமான பெண்கள் கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் பதிவிரதம் அல்லது  கற்பு. இந்நிலை மேன்மை அடையும் பொழுது மனதில் முதிர்ச்சி ஏற்படுகிறது மனம் ஒருமைப் படுகிறது. அப்போது கடவுளின் அருளால்  பெய் என்றால் மழை பெய்யக் கூடிய சக்தி கிடைக்குமாம்.  அதாவது, பெய்யெனப் பெய்யும் மழை. பெரிய யோகிக்கும் கூட பெரிய முயற்சி மூலம்தான் கிட்டும் இந்தச் சக்தி பதிவிரதைக்கு எளிதில் கிட்டிவிடுகிறதாம். அடேயப்பா ?? என்ற வியப்புதான் வருகிறது. ஏமாற்றுவதற்கும் ஓர் எல்லை இல்லையா ?  மனம் கூசாமல்  இதை எல்லாம் சாத்திரம் என்று கூறுபவர்கள் மீது மோசடி  வழக்குதான் போட வேண்டும்.

மாதம் மும்மாரிப் பெய்கிறதா என அக்காலத்துத் தெருக்கூத்து,  நாடகங்களில் அரசர் அமைச்சரைக் கேட்பதாகக் காட்சிகள் வரும். பராசக்தி படத்தில் அது ஓர் எள்ளல் காட்சியாக "மந்திரி நமது- மாநகர் தன்னில்- மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்ற வசனம்  இடம் பெறுவதை நினைவு கூரலாம்.
     "வேதமோதிய வேதியர்க்கோர்மழை,
     நீதிதவறா நெறியினர்க் கோர்மழை,
     காதல்கற்புடை மங்கையர்க்கோர் மழை,
     மாதம் மும்மழை பெய்யெனப் பெய்யுமே"
         (விவேகசிந்தாமணி பாடல்)
என மூன்று மழைகளில் ஒரு மழை பெண்களின் கற்புடன் தொடர்பு படுத்தி இருப்பதைக் காணலாம்.  நாட்டில் வறட்சி என்றால் பெண்களிடம் கற்பில்லை என்று பழி போடக்கூடிய இக்கட்டும் இதனால்  உள்ளது அல்லவா?

மழைபொழிதல் குறித்து சுற்றுச்சூழலியல், அறிவியல் பாடங்களில் அறிந்ததைப் பெண்கள் வாழ்வில்  தொடர்புப்படுத்தி தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
--


கட்டுரைக்கு உதவிய நூல்: ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற தலைப்புடன் 1950ஆம் ஆண்டு ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்ட நூல்.

நன்றி :
பெண்ணின் பெருந்தக்க யாவுள . . .
- முனைவர் தேமொழி  
சக்தி இதழ் [டிசம்பர் 2025]
https://archive.org/details/sakthi-202512
பக்கம்: 76-78


Tuesday, October 28, 2025

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025)இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணியின் சார்பாகப் பங்கேற்ற சென்னை கார்த்திகா சிறப்பாக விளையாடி இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிச் சுற்றில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்டது. 


தொடரின் தொடக்கமாக வங்காளதேசத்திற்கு எதிராக 46–18; தாய்லாந்து அணிக்கு எதிராக 70–23; இலங்கை அணிக்கு எதிராக 73–10; ஈரான் அணிக்கு எதிராக 59–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இந்தத் தொடரில் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவும் ஈரானும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மீண்டும் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை வகித்து,75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த ஆட்டத்தில் தனித்துத் தெரியுமாறு திறன் காட்டியவர்களுள் ஒருவர் 17 வயதான சென்னை கார்த்திகா. இதுதான் கார்த்திகா உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பெற்ற முதல் பதக்கமும் கூட. இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வெல்ல விரும்பிய இவரது கனவு இதனால் நிறைவேறியுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானை வென்றதால் கபடியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன் குறித்த ஒளிமயமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. 

வெற்றிபெற்ற சென்னை கார்த்திகா மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்று இந்தியாவிற்காகப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சென்ற 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், பீகார் மாநிலத்தில் நடந்த இந்தியாவிற்கான மகளிர் தேசிய 33வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை கார்த்திகா தமிழ்நாடு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பீகார் அணியை 33-32 புள்ளிக் கணக்கில் அப்பொழுது வென்றார். அந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர் விளையாட்டுத் திறமைக்காக ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணிக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த தங்கமகள் சென்னை கார்த்திகாவிற்குப் பாராட்டு. 


----------------












கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா
முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-nov-25/page/11/mode/2up
நன்றி: சக்தி நவம்பர் 2025 (பக்கம்: 11-12)


#சக்தி, #பெண்ணியம், #Themozhi 

Tuesday, September 30, 2025

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்

பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்


கட்டுமானங்களின் தனிச்சிறப்பு என்ற அடிப்படையில் இன்றைய உலகில் பல பாலங்களுக்குப் பற்பல சிறப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதையும் இருக்கும்.  அவ்வாறான சிறப்புப் பெற்ற பாலங்களுள் ஒன்றுதான் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள  வாட்டர்லூ  பாலம் (Waterloo Bridge).  இதன் சிறப்பு, இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையோர் (70 விழுக்காட்டினர் அல்லது சற்றேறக்குறைய 350 பணியாளர்கள்) பெண்கள் என்பதுதான். எனவே, இது பலகாலம் 'லேடீஸ் பிரிட்ஜ்' (The Ladies Bridge) என்றே அழைக்கப்பட்டு வந்தது.  தேம்ஸ் ஆற்றின் படகோட்டிகளும், பயணிகளும் லேடீஸ் பிரிட்ஜ் என்றே அழைத்தாலும், இது பெண்களால் கட்டப்பட்டப் பாலம் என்ற வாய்மொழிக் கதை மக்களிடையே இருந்தாலும்,  இதற்கு வரலாற்றுச் சான்றுகள் தரப்படாத காரணத்தால் இது ஒரு கட்டுக்கதை என்ற எண்ணமே மக்களிடையே நிலவி வந்தது. அண்மையில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் பெண்கள் பங்கேற்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.




இந்தப் பாலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தப் பாலத்தின் தொடக்கம் 19ஆம் நூற்றாண்டு. லண்டனின் ஸ்ட்ரான்ட் பகுதியில் 'ஸ்ட்ரான்ட் பிரிட்ஜ்' (the Strand Bridge) என்ற பெயரில் 1810–1817 காலகட்டத்தில் போக்குவரத்துப் பயணிகளிடம் பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்துடன் இப்பாலம் கட்டப்பட்டது.  ஒன்பது வளைவுகளைக் கொண்டதாக, சற்றொப்ப 2500 அடிகள் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட பாலம் இது.   ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பொழுது இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் நாட்டு ஆட்சியாளர் நெப்போலியனை வாட்டர்லூ போரில் 1815ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. எனவே அதைக் கொண்டாடும் இரண்டாம் ஆண்டு விழாக் காலத்தில்,  1817இல் பாலம் திறக்கப்பட்டபொழுது வெற்றியைச் சிறப்புச் செய்யப் பாலத்தின் பெயர் வாட்டர்லூ பிரிட்ஜ் என மாற்றப்பட்டது.  

காலப்போக்கில் ஆற்றின் நீரோட்டத்தால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலத்தின் அடிப்பகுதியின் கட்டுமானம் அரிக்கப்பட்டு பாலம்  வலுவிழந்து மறுசீரமைப்பு  செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  கில்பர்ட் ஸ்காட் (Sir Giles Gilbert Scott) என்பவர் புதிய பாலத்தை வடிவமைத்தார்.  பாலத்தின் கட்டுமானம் தொடங்கிய பொழுது அதன் அருகே இணையாக ஒரு தற்காலிக இரும்புக் கிராதி பாலம் எழுப்பப்பட்டு, வாட்டர்லூ  பாலத்தின் பகுதிகளையே மீண்டும் மறுசுழற்சி செய்யும் திட்டத்துடன் பழைய பாலத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்டது.  இந்நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த  ஆண்கள் யாவரும் போர்முனைக்கு அழைக்கப் பட்டார்கள்.  ஆனால், கட்டுமானப் பணிகளும் நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வேறுவழியின்றிப் பெண்களைக் கட்டுமானப் பணிக்கு அமர்த்தினார்கள்.  இந்த நிலை உலகம் முழுவதுமே போரில் ஈடுபட்ட நாடுகளின் நிலையாக அக்காலத்தில் இருந்தது.  வழக்கமான போர்க்காலப் பணியாக மருத்துவச் செவிலியர், தொலைபேசி இணைப்பாளர், அலுவலகச் செயலாளர்  போன்ற பணிகளைத் தவிர்த்து ஆண்களின் பணியாகக் கருதப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், ஊர்திகள் இயக்குபவர், விமானம் ஓட்டுபவர் போன்ற புதிய பணிகளில் எல்லாம் பெண்கள் பங்கேற்றனர். அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டும் 25,000 மகளிர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தரவுகள் சொல்கிறது. அதாவது, கட்டுமானப் பணியில் மூன்று விழுக்காட்டினர் அளவில் பெண்கள் பங்கேற்று இருந்தனர்.  இவர்கள் வெல்டிங், கான்கிரீட் கலவை தயாரித்தல் போன்ற வேலைகளையும் செய்தனர்.  இக்காலத்தில் சராசரியாகக் கட்டுமானப் பணியில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் ஈடுபடுவதுடன் இதை ஒப்பிட்டால், சென்ற நூற்றாண்டில் கட்டுமானப் பணியில் மகளிர் பங்களிப்பின் தீவிரம் புரியும்.  

பணியில் அமர்த்தப்பட்ட பட்ட பெண்களுக்கு நீண்ட நேர வேலை, கழிப்பிடம் ஓய்வறை போன்ற வசதிகளும் குறைவு. இருப்பினும், ஆண்களைவிடக் குறையான ஊதியம் என்பது மட்டுமல்ல, போர் முடிந்து ஆண்கள் நாடு திரும்பினால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வீடு திரும்ப வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.  போர் தொடர்ந்தது, ஒரு முறை வாட்டர்லூ பாலமும் நாஜிப் படையின் குண்டு வீச்சிற்கு  உள்ளானது. இருந்தும்  கட்டுமானம் தொடர்ந்தது. தொடர வேண்டியது நாட்டின் கௌரவம், அது  மக்களுக்கு நம்பிக்கை தருதல் போன்றவற்றுடன், அப்பாலம்  போர்க்கால இராணுவத்திற்குத் தேவையானதாகவும் இருந்தது,  பெண்கள்  தொடர்ந்து பணி புரிந்தனர்.  இக்கட்டுமானப் பணி 1937இல் தொடங்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரினால் பணி சற்றே தொய்வடைந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.  ஆனால், அங்குதான் ஒரு கசப்பான திருப்பம்.  



பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பொழுது விழாவில் பங்கேற்ற இங்கிலாந்தின் துணை முதல்வர் ஹெர்பர்ட் மோரிசன் (Herbert Morrison) அவ்விழாவில் ஆற்றிய உரையில்,  பாலம் உருவானதில் பெண்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப் படவே இல்லை. ஆண்களுக்குப் பாராட்டு கூறப்பட்டது. அவ்வாறே எங்கும் இப்பாலக் கட்டுமானத்தில் மகளிர் பங்கேற்றதற்கான எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பும் இடம் பெறவில்லை.  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம் பீட்டர் லிண்ட் அண்ட் கம்பெனி  (Peter Lind & Company) அதை மூடிவிட்டு, தங்கள் வர்த்தகத்தையும் முடித்துக் கொண்டு நிறுவனத்தைக் கலைத்தவுடன் அதில் இருந்த ஆவணங்களும்  மறைந்து போயின.  

மக்கள் வழக்கில் மட்டும் காரணம் தெரியாத வகையில் லேடீஸ் பிரிட்ஜ்  என்ற பெயர் உள்ளதைக் கவனித்த வரலாற்று ஆய்வாளர் கிறிஸ்டின் வால் (Christine Wall) அருங்காட்சியகத்தின் (The Archives of The National Science and Media Museum) சேமிப்பில் இருந்த பழைய திரைப்படங்களையும் படங்களையும் தேடிப் பார்த்து,  பாலத்தின் பணியில் ஈடுபாடிருந்த சில பெண்களின் படங்களைக் கண்டெடுத்தார். அதில் பெண்கள் வெல்டிங் வேலை செய்யும் படங்கள் கிடைத்தன. அப்பெண்களில் ஒருவரின் பெயர் 'டாரத்தி' (Dorothy) என்றும் அடையாளம் காணப்பட்டது.  இதனால் லேடீஸ் பிரிட்ஜ்  என்று வாட்டர்லூ  பாலம் அழைக்கப்பட்ட காரணமும், அதன் கட்டுமானப் பணியில் பெண்கள் ஈடுபட்டு இருந்ததும் கட்டுக்கதையல்ல உண்மை என்பது நிறுவப்பட்டது. வரலாற்றில்  மறைந்து போன, மறைக்கப்பட்ட மகளிரின் பங்களிப்பு மீண்டும் வெளிப்பட்டது இப்பாலத்தின் சிறப்பு.

இதன் வரலாற்றுச் சிறப்பிற்கு மதிப்பளிக்க, பாலத்தில் இங்கிலாந்தின் வரலாற்றுச் சின்னம் பொறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் பள்ளி பாடத் திட்டங்களில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதத் துறையில் பெண்களின் பங்களிப்புகள் (STEM-courses) மறைக்கப்படுவதைக் கண்டித்து இங்கிலாந்து பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுது,  லேடீஸ் பிரிட்ஜ் பாலத்தில் பதாகைகளுடன் எதிர்ப்பைக் காட்டி அடையாளப்  போராட்டமாக ஊர்வலம் சென்றனர்.  



புதியதாக எழுப்பப்பட்ட வாட்டர்லூ  பாலத்திற்கு  முன்பிருந்த பழைய பாலத்தை 1810  இல் ஜான் ரென்னி (John Rennie) வடிவமைத்திருந்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் கிளாட் மோனெ (claude monet)  1903இல்  அப்பாலத்தை வரைந்த வண்ண ஓவியம் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஓவியமாக விளங்குகிறது.  




அதிகாலை மூடுபனியின் இடையே பாலத்தின் தோற்றமானது  கனவுலகில் காணும் பாலம் போல அந்த ஓவியத்தில் தோற்றமளிக்கும்.  அதே பழைய  வாட்டர்லூ  பாலத்தின் அமைப்பின் அடிப்படையில்தான் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது.


சான்றாதாரங்கள்:
1.  The original Waterloo Bridge
https://www.thehistoryoflondon.co.uk/the-original-waterloo-bridge/

2.  The story behind the iconic 'Ladies' Bridge' in London
https://www.ice.org.uk/news-views-insights/inside-infrastructure/the-story-behind-the-bridge-in-london-known-as-the-ladies-bridge


பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்
 — முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-october-2025/page/71/mode/2up
நன்றி: சக்தி அக்டோபர் 2025 (பக்கம் :72-77)


#சக்தி, #பாலம், #வாட்டர்லூ, #பெண்ணியம், #Themozhi 

Saturday, June 21, 2025

பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மன்னராட்சி காலத்தில் அரசர்களை வழிநடத்த எழுதப்பட்ட திருக்குறள், குடியாட்சி காலத்திலும், இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மக்களின் பிரதிநிதியாக அரசாட்சி செய்பவருக்குப்  பொருந்தி வருவதில்தான் குறளின் சிறப்பு இருக்கிறது.  இருப்பினும் மனைவி, பெண்கள்  இவர்களைக் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் அதிகாரங்களில்  உள்ள குறள்கள்  இக்காலத்தில் ஏற்க இயலாவண்ணம் பெண்களுக்கு  மதிப்பு தராமல் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணியவாதிகள் பலர் இந்த அதிகாரங்களைப் பற்றிய கசப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில்  முதன்மை இடம் பெரியாருக்குத்தான் உள்ளது. வள்ளுவரைக் கேள்விகேட்ட, மறுதலித்த துணிச்சலான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இவர் திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களையும் நீக்கிவிடவேண்டும் எனப் பேசியவர். பெண்ணியம், சமத்துவம், பகுத்தறிவு எனப் பேசிய எழுத்தாளர்களான பாரதிதாசனும், கலைஞர் மு. கருணாநிதியும்  இக்குறள்களுக்கான  உரைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க  முனைந்தனர்.  இக்கட்டுரை  வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேரல் ஆகிய அதிகாரங்களின் குறள்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரான முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்கள் உரை எழுதிய முறையைக் குறிப்பிட்டு அந்த நன்முயற்சியைப் பாராட்டுகிறது.
 
வாழ்க்கைத் துணைநலம்:
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் மனைவி குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை; 1. மாண்புடையள், 2. மனைமாட்சி இல்லாள், 3. இல்லதென் இல்லவள், 4. பெண்ணின் பெருந்தக்க யாவுள, 5. கொழுநன் தொழுதெழுவாள், 6. சொற்காத்துச் சோர்விலாள், 7. மகளிர் நிறைகாக்கும், 8. பெண்டிர் பெருஞ்சிறப்பு போன்ற முதல் 8 குறள்கள் நேரடியாகக் குறிக்கும். 
 
இருப்பினும்; இறுதி 2 குறள்களும்  (குறள் - 59, 60)  மேலோட்டமாக பெண்ணைக் குறிக்கும்.  ஆனால் இன்றைய உலகில் சமத்துவக்   கருத்தை மதிப்பவர்கள், இவை பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் வகையில் பொருள் கொள்ள விரும்புவார்கள்.  ஓர் ஒப்பீட்டிற்காக வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் இறுதி  இரு குறள்களுக்கும்  எழுதப்பட்ட உரைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
 
      புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
      ஏறுபோல் பீடு நடை.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 59]
 
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
—மு. வரதராசன்
 
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
—சாலமன் பாப்பையா
 
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
—மு. கருணாநிதி   
 
இதில் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  நல்ல கணவன் அமையாத  மகளிர் துயர் குறித்து, அவள் எதிர்கொள்ளும் அவமானம் குறித்து வள்ளுவர் ஏன் எழுதவில்லை என்று இப்பொழுது வள்ளுவரைக்  கேட்க வாய்ப்பில்லை.  ஆனால் நாம் அந்த எதிர்பார்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரலாம், அதாவது தக்கவாறு பொருள் கூறுவதன் மூலம். அடுத்து;
 
      மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
      நன்கலம் நன்மக்கட் பேறு.  
      [இல்லறவியல்; வாழ்க்கைத் துணைநலம்; குறள் - 60]
 
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
— மு. வரதராசன்
 
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.  
— சாலமன் பாப்பையா
 
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
— மு. கருணாநிதி
 
இதிலும் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானது, ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  குடும்பத்தின் பெருமைக்கு அவர்களின் நற்பண்பும், நல்ல மக்கட் செல்வங்களும் அமைவது என்று, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.
 
ஆனால் இது வள்ளுவரின் எண்ணம் அல்ல.  இருப்பினும்,  குறளின்  அதிகாரத்தைக்  கணக்கில் கொள்ளாமல், இவற்றைத்  தனிப்பட்ட குறள்கள் என்ற அணுகுமுறையில் பொருள் கொண்டால் இக்காலத்திற்கும் அவை செவ்வனே பொருந்தும்.
 
பெண்வழிச்சேரல்:
பெண்வழிச்சேரல் அதிகாரத்தில்; மனைவிழைவார் (901), இல்லாள்கண் (903), மனையாளை (904), இல்லாளை (905), இல்லாள் (906) என்று குறிப்பிடும் குறட்பாக்களின் மூலமாக 'மனைவி சொல்லைக் கேட்பவன் மடயன்' என்ற கருத்தை வலியுறுத்தித்தான் வள்ளுவர் எழுதியுள்ளார். இதில் எவருக்கும் வள்ளுவர் நோக்கம் குறித்து மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இவ்வாறு  5 குறட்பாக்களில் நேரடியாக மனைவி என்றே குறிப்பிட்ட வள்ளுவர்; மற்றும் ஐந்து குறள்களில், பெண்  (902, 907, 908, 909, 910) என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் அவையும் மனைவியைக் குறிக்கும் குறள்கள்தான். பொம்பளை பேச்சைக் கேட்கிறான், பொண்டாட்டி  பேச்சைக் கேட்கிறான் என்று இன்றும் இழிவாகத்தான் மனைவி சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவரைக் கூறுவது உலக வழக்கம்.
 
இந்த அதிகாரத்திற்கு கருணாநிதி உரையைப் படிக்கும் பொழுது மனைவி சொல்லிற்கு  மதிப்பு தருவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதைக் காண  இயலும்.  அதனால்,  "பண்பில் குறைபாடு கொண்ட" மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பது சரியல்ல என்று உரை எழுதுகிறார். எல்லா மனைவிகளும், எல்லாப் பெண்களும் பண்பற்றவர்கள் இல்லையே.  குறைபாடு கொண்ட மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்பதுதான் உண்மையும் கூட.  அந்த அடிப்படையில் ஆணவம், அகங்காரம் கொண்டு தன் வாழ்க்கைத் துணையை  மதிக்காமல் நடக்கும் மனைவியின் சொல்லுக்கு அவன் மதிப்புத் தரத் தேவையில்லை என்று பொருள் கூற முற்படுகிறார் என்பது தெளிவு.
 
மனைவி என்ற நேரடியாக வள்ளுவர் குறிப்பிடாத பொழுது, மாறாக பெண் என்று மட்டும் குறிப்பிடும் பொழுது,  அந்தப் பெண்ணை மனைவி என்று கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, பொதுவாகப் பெண்கள், அதிலும் ஆணவம் அகங்காரம் கொண்ட பெண்கள் மட்டுமே என்ற கோணத்தில் கருணாநிதி உரை எழுதுகிறார்.  இது மீண்டும் மனைவியை இளக்காரமாகக் கருதும் போக்கைத் தவிர்க்கும் மற்றொரு முறை.
 
      அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
      பெண்ஏவல் செய்வார்கண் இல். 
      [நட்பியல்; பெண்வழிச்சேரல்;  குறள்- 909]
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் 'மனைவியின் ஏவலைச்  செய்வோரிடத்தில்' இல்லை.
—மு. வரதராசன்
 
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் 'மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம்' இருக்கமாட்டா.
—சாலமன் பாப்பையா
 
'ஆணவங்கொண்ட பெண்கள்' இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
—மு. கருணாநிதி
 
பொதுவாக, பகுத்தறிவு, சமத்துவம் என்ற வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த அதிகாரங்கள் மிக உறுத்தலாக இருக்கும். தங்கள் கொள்கைக்கு மாறுபட்டவையாக அவை இருப்பதை உணர்வார்கள்.   அதனால் வள்ளுவர் மேல் குற்றம் காண்பதைத் தவிர்த்து, காலத்திற்குப் பொருத்தமான விளக்கம் தர முற்படுவார்கள். இலக்கியவாதிகளான கருணாநிதி, பாரதிதாசன் போன்றோர் குறளுக்கு உரை எழுதும் முறையை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
 
ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் சிந்தனைக்கு மதிப்பு தரவேண்டாம் என எண்ணுவது எத்தகைய அறமற்ற செயல் என்று மனதில் தோன்றுவதை நேரடியாகச் சொல்ல இலக்கியத்தின் மீது பற்று அற்ற பெரியார் போன்றவராலேயே முடிந்தது.  “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால், இக்கருத்துகளைக் கூறியிருக்கமாட்டார்” என்று,  தான் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்' நூலின் 'வள்ளுவமும் கற்பும்' என்ற இரண்டாவது அத்தியாயத்தில் பெரியார் குறிப்பிட்டிருப்பார். பண்டைய தமிழ்ப் பண்பாட்டின்படி 'யார் சொன்னாலும் குற்றம் குற்றமே' என்று பெரியாரால் சொல்ல முடிந்தது. ஆனால், மற்ற எழுத்தாளர்களால் அவ்வாறு நேரடியாக உண்மையைக் குறிப்பிட முடியாமல் போனது. 
 
பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்பது காலத்திற்கு ஒவ்வாத கருத்து; இதனைப்  பள்ளியில் முதல் வகுப்பில் ஔவை எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடம் படித்தவர்களால் மறுக்க இயலாது. வள்ளுவர் கருத்திற்கு நேரடியாக உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி,  காலத்திற்குத் தக்கவாறு  உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி வள்ளுவரின் அறிவுரையை ஏற்று "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டால், வள்ளுவரின் குறள்களில் சில காலத்திற்கு ஏற்றவை அல்ல என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது.
 
வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேரல் அதிகாரங்கள்  - வள்ளுவர் காலத்துக் கருத்துகள் கொண்டவைதான்.  அவற்றில் உள்ள குறள்கள் பல இக்காலத்திற்குப்  பொருந்தாது என்றால் அந்த  உண்மையை நாம் ஏற்க வேண்டும். பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டார், அக்காலத்தில் அவர் ஆணையை ஏற்று நடக்க வேண்டிய சூழல் அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது. அத்தகைய சூழலில் பெண்ணின் சொல்லைக் கேட்காதே  என்று  கூறும் குறள்  பொருந்துமா? இந்தியாவிற்கு அந்நாட்களில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டதா? அவர் காலத்தில்தான் இந்தியச் சட்டவரையறையின்  முகப்புரையில், 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதனைக் கருத்தில் கொண்டால் கருணாநிதி உரை ஏற்கத்தக்கது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் ஒன்றிற்குக்  காலத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைக் குறை காண்பதற்கு வழியில்லை. இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர் கருணாநிதி உரைகள் சிறந்தவை. காலத்திற்கேற்பப் பொருந்துபவை.
 
நன்றி: "கனடியன் ரேஷனலிஸ்ட்" இதழ், ஜூன் 2025


#கனடியன் ரேஷனலிஸ்ட், #திருக்குறள், #கலைஞர், #பெண்ணியம், #Canadian Rationalist,  #Themozhi



Sunday, March 11, 2018

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ்




தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் ராஜாஜி  21.04.1938 அன்று ஆணையைப் பிறப்பித்தபொழுது அதை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியவர் அன்னை மீனாம்பாள் சிவராஜ். முதல் இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாற்றினார். “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்று முழக்கமிட்ட முன்னணிப் பெண்ணியத் தலைவர், ஈ.வெ.ரா. அவர்களை நாம் “பெரியார்” என அழைக்கக் காரணமானவர், அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்து அம்பேத்கரால் எனது அன்புச் சகோதரியே என்று அழைக்கப்பட்டவர், தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்கச் சமூகப்பணிகளை ஆற்றிய மீனாம்பாள் அவர்கள்,  புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.

பர்மாவிற்குக் குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தின், முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை என்றழைக்கப்பட்ட செல்வந்தரின் வழித்தோன்றலாக பர்மாவில் பிறந்து, வளர்ந்து தனது உயர்கல்விக்காக இந்தியா வந்தவர் இவர். நீதிக்கட்சியில் இணைந்து கணவருடன் பணியாற்றியவர், பின்னர் பெரியார் மீது பேரன்பு கொண்டவராகச் சுயமரியாதை இயக்கத்திலும் தொடர்ந்தார். சாதி எதிர்ப்பு ஆதரவாளரான இவர் சைமன் கமிஷனை ஆதரித்து உரையாற்றி 1928 ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கினார்.



மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அவர் அன்று வழங்கிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. இந்துமதம் கடைப்பிடித்த வர்ணாசிரமத் தர்மமே நாட்டு மக்களின் கல்வி மற்றும் ஒற்றுமை சீர்குலைவு, மகளிர் வாழ்ந்த அடிமைநிலை வாழ்வு யாவற்றுக்கும் காரணம் என இன்று நாம் அறிவோம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மீனாம்பாள் தனது உரையில் நாட்டின் கல்வி, ஒற்றுமை, சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மகளிர் முன்னேற்றம், நீதிக்கட்சி செய்த மனிதநேய நன்மைகள் ஆகியவற்றைக் குறித்து தமது கருத்துகளைக் கீழ்வருமாறு அந்தத் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.

நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.

ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதிப்பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய இன்னமும் பலகாலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட, வாழ்வில் முன்னேற, எல்லா உரிமையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும்.

ஒற்றுமையாக இயங்க நாம் சங்கங்கள் அமைக்க வேண்டும், சங்கங்கள் வாயிலாக அனைவரும் சேர்ந்து பழகுவதால் நமக்குள் ஒற்றுமை ஏற்படும், கூட்டாக நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய சௌகரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், அதன் மூலம் கல்வி பெற்று முன்னேற்றமடையவும், ஒற்றுமையின் பலத்தால் அரசின் கவனத்தைக் கவரவும் முடியும். ஒடுக்கப்பட்ட இனத்தவர் கூட்டுறவுச் சங்கங்களால் உதவி செய்யப்படாமல் புறக்கணிக்கப் படும்பொழுது அவர்கள் தங்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களைத் தாமே உருவாக்கிக் கொண்டு ஒற்றுமையாகப் பயன்பெற்று மேல்நிலைக்கு வரவேண்டும்.

பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது.

நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுச் சாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது. இதன் பிறகே ஆதிதிராவிடர்களைக் கவர காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்ற ஒன்றைத் துவக்கிக் கொண்டு பெயருக்குக் கண்துடைப்பு செயல்களைச் செய்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். பூனா ஒப்பந்தம் என்ற நெருக்கடி கொடுத்து தேர்தல்களின் மூலம் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகள் வருவதைத் தடுத்தார்கள். அதுமட்டுமல்ல அந்த பூனா ஒப்பந்தத்தில் ”காந்தியின் உயிரைக் காப்பாற்ற” என்பதற்காகவே கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் வேட்பாளரையும் நிறுத்தி தொந்தரவு கொடுத்தார்கள். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் நன்மை செய்பவர் யாரெனத் தெளிவாக விளங்கும்.



துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

திருநெல்வேலி ஜில்லா – ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdf


நன்றி:
திண்ணை
மார்ச் 11 , 2018


#திண்ணை, # வரலாறு, #பெண்ணியம், #Themozhi  




Saturday, December 26, 2015

பாலினச் சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா

பாலினச் சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா



பாலினச் சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா … ஐக்கிய நாடுகள் சபை அண்மையில்  (டிசம்பர் 15, 2015) வெளியிட்ட அறிக்கையில் காணும் தகவல் இது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டப் பிரிவு (United Nations Development Programme – UNDP) ஒவ்வொரு நாட்டின் மனிதவள மேம்பாட்டின் நிலையை அளவிடும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் (Human Development Index -HDI) அடிப்படையில் நாடுகளின் நிலையை ஆய்ந்து, தரவரிசைப்படுத்தி ஆண்டறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் மனிதவளம் மேம்பாடு அடைவதன் அறிகுறியாக; நீண்ட ஆரோக்கியமான ஆயுள், கல்வி கற்கும் வாய்ப்பு, அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்க்கைத் தரம் (a long and healthy life, access to knowledge and a decent standard of living) ஆகியவை உலகளவில் 188 நாடுகளுக்கிடையே ஒப்பிடப்பட்டுத் தரவரிசைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியில் இருக்கும் அரசு இத்தகவலை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத் திட்டத்தை வகுக்க உதவ வேண்டும் என்பதே இந்த ஐ. நா. அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம். தங்களது நாட்டு மக்களின் உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மற்ற நாட்டுத் தரவரிசையுடன் ஒப்பிட்டு நாட்டு மக்களும் தங்களது வாழ்க்கை நிலை பற்றிய ஒரு புரிதலை இந்த அறிக்கையின் மூலம் பெறலாம். உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் தனிமனித முன்னேற்றத்தையும் குலைக்கும், அதனால் அந்த நாடும் வளர்ச்சியில் பின்தங்கும்.

அறிக்கைகள் வெளியிடப்படுவது என்பது முதல் படிதான். அதில் உள்ள தகவல் சேரவேண்டியவர்களைச் சென்று சேர்கிறதா என்பதே மிக முக்கியமானது. இந்த அறிக்கை கூறும் தகவல்கள் பற்றி இந்தியப் பத்திரிக்கைகளில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் கவனம் செலுத்திய அளவிற்குத் தமிழ் நாளிதழ்கள் கவனம் செலுத்தவில்லை. ஓரிரு இணைய இதழ்களும் ஓரிரு பத்திரிக்கைகளும் செலுத்திய கவனமும் அந்த அறிக்கையின்படி இந்தியப் பெண்களில் 80 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை, இந்தியப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது போன்ற மிக மேலோட்டமான தகவல்களே. அதாவது, தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் தேர்தலுக்குக் கொடுத்த அளவு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதில்  ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. எனினும் கொஞ்சம் விரிவான செய்தியாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்திய மக்களின் நிலை என்ன என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதைத் தமிழ்ப் பத்திரிக்கைகள் உணர வேண்டிய தேவை இருக்கிறது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஐ. நா. மனிதவள மேம்பாடு குறித்த 2015 ஆண்டிற்கான அறிக்கையின்படி, முதல் மூன்று இடங்களில் இருக்கும் நாடுகள் முறையே நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாண்ட் ஆகிய நாடுகள். சென்ற ஆண்டின் நிலையுடன் ஒப்பிடும் பொழுது இந்தியா சற்றே தர வரிசையில் முன்னேறியிருக்கிறது. அறிக்கையின்படி, 188 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பெற்றிருக்கும் இடம் 130, சென்ற ஆண்டின் 135 என்பதிலிருந்து கொஞ்சமே முன்னேறியிருக்கிறது. உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை சராசரிக்கும் கீழே உள்ளது. ஆனால் இது போன்ற பின்தங்கிய நிலையிலேயே பலகாலமாக இந்தியா இருந்து வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அத்துடன் முன் காணப்பட்ட ஆரோக்கியமான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு வளர்ச்சி நிலை மிக மந்தநிலையிலும் உள்ளது. பிரிக்ஸ் (BRICS – Brazil, Russia, India, China and South Africa) கூட்டணியில் உள்ள நாடுகளில் இந்தியாவே கடைசி நிலையில் உள்ளது. இது உலகின் ஒன்பதாவது பணக்கார நாடான இந்தியாவின் நிலை. தெற்காசியப் பிராந்தியக் கூட்டமைப்பில் (SAARC) உள்ள நாடுகளில் பங்களாதேஷ் 142ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 147ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியில் சற்றே மேம்பட்டதன் காரணம், மக்களின் ஆயுள் சிறிது நீண்டிருப்பதும், வருமானம் சற்று அதிகரித்திருப்பதுமாகும். ஆயுள் சென்ற ஆண்டின் 67.6 ஆண்டுகள் என்பதிலிருந்து, 68 ஆண்டுகள் என்று உயர்ந்திருக்கிறது. இதனையே 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1980 ஆண்டின் தகவலுடன் ஒப்பிட்டால் 53.9 ஆண்டுகள் என்பதிலிருந்து நல்ல முன்னேற்றம் என்பது தெரியும். அவ்வாறே நாட்டின் மொத்த வருமானம் (Gross National Income – GNI) சென்ற ஆண்டில் தலைக்கு 5,180 (அமெரிக்க டாலர்களில்) இருந்து இந்த ஆண்டு 5,497 ஆக உயர்ந்துள்ளது. இது 1980 இல் 1,255 ஆக இருந்தது. ஆனால் சராசரி கல்வி பயின்ற ஆண்டுகளான 5.4 என்பதில் கடந்த ஐந்தாண்டுகளாக எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை.

பாலின சமத்துவத்திலும், பெண்களின் முன்னேற்றத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. ஆண் பெண் வேறுபாடுகளில் காணும் அதிகப்படியான இடைவெளியின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சியின் நிலை தரவரிசையில் பின்தங்க நேர்ந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. பெண்களின் முன்னேற்றம் என்ற அளவீட்டில் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை பங்களாதேஷைவிடவும், பாகிஸ்தானைவிடவும் பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாலின சமத்துவ அளவீட்டில் (Gender Inequality Index – GII) 155 நாடுகளுடன் ஒப்பிடுகையில் தரவரிசையில் இந்தியா பெற்ற இடம் 130. இந்தியாவின் 15-24 வயது இளைஞர்களில் கல்வி கற்ற பெண்கள் 74.4% சதவீதம் என்பது அதே வயது கல்விபெற்ற ஆண்களின் 88.4% சதவீதம் என்பதுடன் ஒப்பிடுகையில் குறைவே. சராசரியாக, வயதுவந்த ஓர் இந்திய ஆணின் கல்வித்தகுதி, வயது வந்த இந்தியப் பெண்ணின் கல்வித் தகுதியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாக உள்ளது.

மகப்பேறு மருத்துவ உதவி, மகப்பேறு காலத்தில் தாயின் மரணம் மற்றும் பதின்ம வயதில் மகப்பேறு, நாடாளுமன்ற அதிகாரமிக்க உறுப்பினர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை, பெண்களின் கல்வி நிலை, பொருளாதாரம் மற்றும் ஊதியம் பெறும் பணிகளில் பெண்களின் பங்கேற்பு போன்ற காரணிகள் கொண்டு ஒரு நாட்டின் பெண்களின் நிலை மதிப்பிடப்படுகிறது (The index captures inequalities in gender-specific indicators: reproductive health measured by maternal mortality ratio and adolescent birth rates, empowerment quantified by share of parliamentary seats and attainment in education, and economic activity measured by labour market participation rate – measured by comparing male and female life expectancy, expected years of schooling and Gross National Income per capita as well as looking at reproductive health and empowerment). இந்தப் பாலின சமத்துவ அளவீட்டில், பிற தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில், ஆப்கானிஸ்தானை விட மட்டுமே இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவல். இந்தியாவின் இடம் 130, ஆப்கானிஸ்தான் 152. பங்களாதேஷும், பாகிஸ்தானும் கூட தரவரிசையில் முறையே 111 மற்றும் 121 இடங்களைப் பெற்று இந்தியாவைவிடச் சிறந்த நிலையில் இருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத் தரவரிசையில் இந்தியாவையும் விடப் பின்னுள்ள நிலையில் இருக்கும் பங்களாதேஷும் பாகிஸ்தானும், பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் ஒப்பிடுகையில் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன.

முன்னர் இந்தியாவின் பகுதிகளாக இருந்த பங்களாதேஷுடனும் பாகிஸ்தானுடனும் ஒப்பிடுகையில் …
இந்தியாவில் 12.2% பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களே உள்ள நிலையில் பாகிஸ்தானில் 19.7 %ம், பங்களாதேஷில் 20%ம் இருக்கிறார்கள்.
மகப்பேறு காலத்தில் ஒருலட்சம் பிறப்புகளில் இந்தியாவின் 190 பெண்கள் உயிரிழக்கிறார்கள், பேறுகாலத் தாய் இறப்பு விகிதம் பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் 170 ஆக இருக்கிறது.

இந்தியாவில் மேல்நிலைக் கல்வி பெரும் பெண்கள் 27%, ஆனால் பங்களாதேஷிலோ 34% பெண்கள் மேல்நிலைக் கல்வியைப் பெறுகிறார்கள்.
ஊதியம் தரும் பணிகளில் 27% இந்தியப் பெண்கள் பங்கேற்கிறார்கள், பங்களாதேஷிலோ 57% பெண்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்.
மேற்காணும் இத்தனை அளவீட்டிலும், தெற்காசிய நாடுகளில் இந்தியா பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. பதின்மவயது பெண்கள் தாயாவதில் மட்டுமே பாராட்டக்கூடிய வகையில் இந்தியா குறைவான விகிதத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் போரினால் நிலைகுலைந்த சிரியா, ஈராக் போன்ற நாடுகளையும் விட இந்தியாவில் பெண்களின் நிலை மோசம். இந்தியப் பெண்களின் வாழ்க்கைத்தரம் சகாரா பாலைவனத்தினைச் சூழ்ந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒப்பாக இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய நிலை. இதைவிடவா 80% இந்தியப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பது இந்த அறிக்கை தரும் மிக முக்கியமான செய்தி?

தரவரிசையில், வளர்ச்சி ஒப்பீட்டில் இந்தியா 28.6% அளவு மதிப்பீடுகளை இழந்து பின்தங்க நேர்ந்ததன் காரணம் கல்வியில் காணும் பாலின சமத்துவமின்மையே (India loses 28.6% HDI due to inequality, largely due to inequality in education (42.1%) என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்திய “பெண்களின் நிலையை” மட்டும் வைத்து மனிதவள மேம்பாட்டைக் கணக்கிட்டிருந்தால் இந்தியா 155 நாடுகளுக்கான இந்தத் தரவரிசையில், இப்பொழுது இருக்கும் 130ஆவது இடத்தில் இருந்து 151ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். ஆனால் “ஆண்களின் நிலையை” மட்டும் வைத்துக் கணக்கிட்டிருந்தால் 120ஆவது இடத்தைப் பிடித்திருக்குமாம். இந்த வேறுபாடு மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பாலின வேறுபாடுகளையும் பேதங்களையும்.

மேலும், பெண்கள் தொடர்ந்து குறைந்த அளவே ஊதியம் பெறுவதாகவும், அவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதாகவும், தலைமைப் பதவிகளைப் பெறுவதில்லை என்பதையும் அறிக்கை கூறுகிறது. தனது உழைப்பில் முக்கால் பங்கு உழைப்பிற்குப் பெண்கள் ஊதியம் இன்றியே வேலை செய்கிறார்கள். இந்த ஒப்பீட்டுக்காக ஊதியம் பெறும் பணியில் ஆற்றும் உழைப்பை மட்டும் கணக்கிடாது, ஊதியம் பெற்றோ பெறாமலோ உழைக்கும் மொத்த உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு உழைக்கும் பொழுது ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அந்த ஊதியமும் குறைத்தே கொடுக்கப்படுகிறது. உலக அளவில் பெண்கள் பணியில் ஈடுபடும் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகவே இந்த அறிக்கை ஆண்டில் குறைந்துள்ளது. அதற்கு, பணிபுரியும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததும் (1990 இல் இருந்த 35% இல் இருந்து இப்பொழுது 27% ஆகக் குறைந்துள்ளது), சீனாவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததும் (1990 இல் இருந்த 73% இல் இருந்து இப்பொழுது 64% ஆகக் குறைந்துள்ளது) காரணமாக இருக்கிறது. உலக அளவிலும் பெண்களின் உழைப்பிற்குச் சராசரியாக ஆண்களைவிட 24% ஊதியம் குறைவாகக் கொடுக்கப்படுவதும், பெண்களில் 25% க்கும் குறைவானவரே தலைமைப் பதவியையும் பெறுகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற உழைப்பிற்குத் தகுந்த சம அளவு ஊதியம், மாறுபட்ட வேலை நேரங்கள், ஊதியமற்ற பணிச்சுமையைக் குறைப்பது, பெண்களை வருமானம் தரும் பணிகளில் ஈடுபட வாய்ப்புகளை உருவாக்குவது, சமூகப் பாதுகாப்பு தரும் நல்ல சேமநிதி திட்டங்களை உருவாக்குவது, பெற்றோருக்கான பேறுகால விடுப்புகள், பணியிடப் பாலின தீவிரவாதங்களையும் வன்முறைகளைக் குறைக்க நடவடிக்கை போன்ற கொள்கைகளை வகுத்து பெண்களை ஊதியம் தரும் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பை அதிகரிக்க இந்த அறிக்கை ஆலோசனை கூறுகிறது.

இந்தியப் பெண்களின் நிலையை உயர்த்துவதால், பாலின சமத்துவம் பெறுவதால் இந்தியாவின் பொருளாதார நிலை உயரும் என்பதை மெக்கின்சி அறிக்கையும் (McKinsey Report) கூறுகிறது. மேலும் ஐ.நா. அறிக்கை குறிக்கும் அதே அளவீடுகளில் ஆய்வு செய்த மெக்கின்சி அறிக்கையும், ஐ.நா. அறிக்கை குறிக்கும் அதே முடிவுக்கு வருவதால், பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் பாலின பேதம் கொண்ட இந்தியச் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை உயராமல் இருப்பது உறுதியாகிறது. இந்தப் பிற்போக்கான நிலை இந்தியாவின் முன்னேற்றத்தையும் பின்னடையச் செய்கிறது. இந்தியப் பெண்களின் நிலை உயர அரசு சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும். ஊடகங்களும் தங்கள் கடமையைப் பொறுப்புடன் சரிவரச் செய்து மக்களுக்கு உலக நிலையை உணர்த்த வேண்டும்.

__________________________________________________________________________________

மேலும் தகவலுக்கு:
[1] Human Development Report. 15 December 2015
http://report.hdr.undp.org/

[2] Human Development Report 2015
http://www.undp.org/content/undp/en/home/presscenter/events/2015/december/HDR2015.html

[3] Two billion move out of extreme poverty over 25 years – UN flagship development report
http://www.un.org/apps/news/story.asp?NewsID=52811#.Vm-gYfkrL4Y

[4] The Human Development Index – what it is and what it is not
http://www.undp.org/content/undp/en/home/blog/2015/3/10/The-Human-Development-Index-what-it-is-and-what-it-is-not.html

[5] UNDP urges that no one is left behind in the fast-changing world of work
http://www.undp.org/content/undp/en/home/presscenter/pressreleases/2015/12/14/-address-challenges-and-seize-opportunities-of-the-new-world-of-work-undp-urges/

[6] Inequality Pulls India’s Human Development Score Down
http://thewire.in/2015/12/15/inequality-pulls-indias-human-development-score-down-17294/

[7] India could boost 2025 GDP by 60% by promoting gender diversity at work: McKinsey report, India is clubbed among the lowest scorers in parameters such as gender equality in work
http://www.business-standard.com/article/economy-policy/india-could-boost-2025-gdp-by-60-by-promoting-gender-diversity-at-work-mckinsey-report-115092401091_1.html

[8] Gender parity to add Rs 46 lakh cr to India’s GDP: McKinsey report, The report said that about 70% of the increase would come from raising India’s female labour-force participation rate from the existing 31% to 41% in 2025
http://www.business-standard.com/article/companies/gender-parity-to-add-rs-46-lakh-cr-to-india%E2%80%99s-gdp-mckinsey-report-115110201045_1.html







நன்றி: சிறகு
டிசம்பர் 26, 2015


#சிறகு, #பெண்ணியம்,  #Themozhi 


Thursday, July 16, 2015

102 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!

102 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!


உயர்கல்வியின் சிகரமாக விளங்கும் முனைவர் படிப்பை முடித்து, முனைவர் பட்டம் என்ற வெற்றிக் கொடியை நாட்ட விரும்புவது பெரும்பாலோருக்கு நிறைவேறாக் கனவாகவே முடிந்துவிடும். அதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை, திறமையில்லை போன்ற காரணங்களைச் சொல்வதற்குக் கூட சிலசமயம் வழியிருக்காது. பெரும்பாலும் படித்து முடித்து சொந்தக்காலில் நிற்கவேண்டிய நேரம், தன்னுடைய கடமைகளும் தன்னை அழைக்கிறது என்ற வயதில் பலர் சிக்கிக் கொள்ளும் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் அது. சரி இப்பொழுது கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் திரும்ப வந்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கல்விக்குத் தற்காலிக இடைவெளி விடுபவர் மீண்டும் முடிக்கமுடியாமல் கூட போய்விடுவதும் பலர் வாழ்வில் எதிர்கொள்ளும் உண்மை. அதற்குள் வாழ்க்கையில் பெரிய திருப்பங்கள் தோன்ற நிரந்தரமாகவே தங்கள் முனைவர் பட்டக் கனவைக் கைவிடும் நிலை ஏற்பட்டு விடுவதும் உண்டு.

இங்கு அடுத்து வைக்கப்படும் கருத்துகள் இந்தியக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு கூறுவது. பெரும்பாலும் அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் படிப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், அதுவும் அவர்கள் வீட்டிற்கு அவர்கள் கடைசி மகனாய் இருந்தால் அவர்களுக்கு முனைவர் படிப்பை முடிப்பதற்குத் தடைகள் மிக மிகக் குறைவு. வீட்டின் மூத்தபிள்ளையாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையில் ஆர்வமுள்ள ஒருவர் இருப்பார் என்றால், வேலைக்குச் சென்று கொண்டே மாற்றுவழியில், பகுதி நேரமாக முனைவர் ஆய்வு செய்து முடிக்க வேண்டிய நிலைமை இருக்கும். இதில் வயதும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆண்கள் முப்பது வயது வரை குடும்ப வாழ்க்கையைத் துவக்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் முனைவர் படிப்பு மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுவதில்லை.

ஆனால் பெண்களாக இருந்தால், அவளுக்கு இருபத்தைந்து வயது நெருங்கத் துவங்கும் பொழுதே பெற்றோர்களுக்கு மகளின் வயது கவலை தரத் தொடங்கிவிடும். அந்தப் பெண்ணே திருமணம் பற்றிக் கவலைப்படாமல், படிப்பிலேயே கவனமாக இருந்தாலும்கூட பெற்றோர்களிடம் இருந்து திருமணம் பற்றிய கேள்விகளும் முயற்சிகளும் துவங்கிவிடும். அதுவும் அந்தப்பெண் மூத்த பெண்ணாக இருந்தால், அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பை முடித்து, திருமணத்தை முடித்து தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். ஆனால் அதுவே கடைசி மகளாக இருந்தால் தாங்கள் பாடும் பாட்டை மாற்றிப் பாடுவார்கள். நாங்கள் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று மகளின் படிப்பை ஒரு வழி செய்துவிடுவார்கள். இது போன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் முனைவர் பட்டப்படிப்பும் ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் முடியாமல் ஆராய்ச்சி நிலை பலமுறை வரையறுக்கப்பட்ட கால எல்லையையும் தாண்டி நீடித்து விடுவதுதான்.

முனைவர் பட்டத்தை முடிப்பதற்கு இது போன்ற வழக்கமான தடைகளைப் பார்த்துப் பழகிய நமக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ‘இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்’ (Ingeborg Syllm-Rapoport) என்பவர் எதிர்கொண்ட தடை மேலும் வியப்பைத் தரும். சென்ற மாதம் (ஜூன் 9, 2015) தனது 102 வயதில் (ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள், சந்தேகம் வேண்டாம்) தனது முனைவர் படிப்பை முடித்து பட்டம் வாங்கியிருக்கிறார். உலகிலேயே மிகவும் வயதாகி முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பட்டத்தையும் இதனால் இவர் பெறுகிறார். இவரது இந்தச் சாதனையை முறியடிப்பதற்கு வரலாற்றில் மேலும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். இனி இவர் ஏன் இந்த வயதில் முனைவர் பட்டம் பெறுகிறார், இவர் எதிர்கொண்ட வழக்கத்திற்கு மாறான தடை என்ன என்று பார்ப்போம்.

அவர் எதிர்கொண்ட தடை இனப்பேதம். இந்த நூற்றாண்டில் நம்மால் இது நம்பக்கூட முடியாத ஒன்றுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் ஒருவரது இனம் என்ற பின்புலம் கல்வி கற்பதில் இடையிட்ட போராட்டங்கள் நிறைந்த காலம்.


இன்ஜ்போர்க் 1912 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் காமரூன் (Cameroon) பகுதியில் பிறந்தவர். ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் (Hamburg University) 1937 ஆம் ஆண்டில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். தொடர்ந்து அதில் முனைவர் பட்டப்படிப்பும் மேற்கொண்டார். அவரது 25 ஆவது வயதில், 1938–ம் ஆண்டில் அத்துறையில் ஆய்வுகள் செய்து, அக்காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதித்த தொண்டை அழற்சி தொற்றுநோய் பற்றி முனைவர் பட்ட ஆய்வறிக்கையை (PhD thesis on infectious disease – diphtheria) சமர்ப்பித்தார். அந்த நாட்களில் உலகப் போர் சூடுபிடித்திருந்தது. ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோலாட்சி நிகழ்ந்த காலமது. இனப்பேதம் தலைவிரித்தாடிய அக்கால கட்டத்தில், ஹிட்லரின் கட்டளைக்கிணங்க யூதக்குலத்தை அடியோடு அழித்தொழிக்கும் நிலையை ஜெர்மன் நாடு நடைமுறைப்படுத்தியது. நியாயம் கேட்பார் இல்லை. யூதர்கள் பணம், பதவி, உடமை, சொத்து, சுகம் என அனைத்தும் இழந்து உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிடிபட்டவர்களைச் சிறையில் அடைத்து நச்சு வாயு அறையில் அடைத்து உயிரை எடுத்தார்கள்.

இந்தக் கொடிய காலகட்டத்தில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இன்ஜ்போர்க் ஒரு கலப்பினப் பெண்ணாக இருந்தார், ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக வளர்க்கப்பட்டவர் இவர். ஆனால், இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர், அவர் ஒரு பியோனா இசைக்கலைஞர். இன்ஜ்போர்க் அவர்களது ஆய்வறிக்கையின் மேல் அவரது ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல், இவர் யூதப் பின்புலம் கொண்டவர் அதனால் பட்டம்பெறத் தகுதியற்றவர் என்று மஞ்சள் வண்ணத்தில் கோடிட்டு இவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப் பட்டது (அந்நாட்களில் யூதர்கள் தங்கள் ஆடைகளின் மீது அடையாளம் தெரிவதற்காக மஞ்சள் வண்ண நட்சத்திரங்களை அணிய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்). இவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மேற்கொண்டு வாய்வழித் தேர்வில் இவர் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டார்.

ஒருவரது மூதாதையரின் இனம் அடிப்படையில் அவரது தகுதியை நிர்ணயிக்கும் நாட்டின் சட்டங்கள் குறுக்கிடாவிட்டால் மட்டுமே இவர் தேர்வில் அமர அனுமதிக்கலாம் என்ற குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டு இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையில் இணைக்கப்பட்டுவிட்டது. செய்வதறியாது திகைத்த இன்ஜ்போர்க் பிற யூதர்கள் போல நாட்டை விட்டு வெளியேறினார். தனது மருத்துவப் பணியின் எதிர்காலமே நொறுங்கிப் போனதாகப் பின்னர் இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். அது ஜெர்மனிக்கும், அறிவியல் உலகத்திற்கும் அவமானம் தரும் ஒரு நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க மண் இந்த அகதிக்குப் புகலிடம் கொடுத்தது. கையில் பணமின்றி வேலைக்கு அலைந்தார். நியூயார்க், பால்ட்டிமோர் போன்ற நகர்களில் சிறு சிறு வேலைகளை ஏற்று வாழ்க்கையுடன் போராடினார். அமெரிக்காவின் மருத்துவக் கல்லூரிகளில் 48 கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சியைத் தொடர விண்ணப்பித்ததில் பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டுமே பயிற்சியாளராகச் சேரும் வாய்ப்பு கிடைத்து, பயிற்சியைத் தொடர்ந்து மருத்துவப் பட்டம் பெற்று, 1944 ஆம் ஆண்டில் சின்சினாட்டி மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவரானார்.

அந்நாட்களில், இவரைப்போலவே ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து அகதியாகத் தப்பி வந்த, வியன்னா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘சாமுவேல் மிட்ஜா ரபோபோர்ட்’ (Samuel Mitja Rapoport) என்ற யூதரைச் சந்தித்தார். மருத்துவரும் உயிர்வேதியியல் துறையைச் சார்ந்தவருமான சாமுவேல் ரபோபோர்ட்டை விரும்பி மணந்து கொண்டார். இவர்களது அன்பான சிறிய குடும்பம் 1950 களில் மீண்டும் புதுவகை இடரைச் சந்தித்தது. கம்யூனிச, இடதுசாரி சிந்தனையைக் கொண்டவர்கள் ரபோபோர்ட் கணவன் மனைவி இருவருமே. ஐம்பதுகளில் அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு அலை மிகவும் தீவிரமடைந்திருந்தது. இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் அந்நாள் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு மீண்டும் 1952 ஆம் ஆண்டில் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தனர். முதலில் கருத்தரங்கு ஒன்றுக்காகச் சென்ற கணவர் அங்கேயே தங்கி வேலைத்தேட, நான்காவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருந்த இன்ஜ்போர்க் குழந்தைகளுடன் சென்று அவருடன் சேர்ந்து கொண்டார்.

இன்ஜ்போர்க் கிழக்கு பெர்லினில் ஒரு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராகவும், குறிப்பாகப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணராக (neonatologist ) பணி புரிந்தார். இவர் பணிசெய்த காலத்தில் ‘குழந்தைகள் மரண விகிதம்’ (Infant mortality rate) வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிறகு, குழந்தைநல மருத்துவப் பேராசிரியராகவும் 1964 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார், குழந்தைகள் பராமரிப்புத் துறையின் முதல் தலைவராகவும் பெர்லினின் புகழ் பெற்ற சாரைட் மருத்துவமனையில் (Charité Hospital in East Berlin) பதவி வகித்தார். பின்னர் 1973 – ஆம் ஆண்டு இன்ஜ்போர்க் ஓய்வு பெற்றாலும் தனது 80 வயதுகளிலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். குழந்தை இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்ததற்காக, கிழக்கு ஜெர்மனியின் தேசிய விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.

இவரது இத்தனை சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளுவது, எந்த முனைவர் பட்டம் இவருக்கு அநீதியான முறையில் மறுக்கப்பட்டதோ அதை மீண்டும் உழைத்து நியாயமான முறையில், அதுவும் தனது 102 ஆவது வயதில் இவர் பெற்றதே. சற்றொப்ப 80 ஆண்டுகள் கடந்த பின்னர், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் முயற்சியின் அடிப்படையில் பெற்ற முனைவர் பட்டம், ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற விரும்புபவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான வழிகாட்டல் என்றால் அது வெறும் வெற்றுப் புகழுரை அல்ல.

இவருக்குக் கல்வியில் கிடைத்த மறுப்பு கசப்புணர்வு தராதவகையில் பணியில் பல வெற்றிகள் பெற்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இவரது மகன் ‘டாம் ரபோபோர்ட்’ (Tom Rapoport) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவப் பேராசிரியர். இவர் தனது தாயின் கதையை, அவர் முனைவர் பட்டம் பெறுவதில் எதிர்கொண்ட ஏமாற்றத்தை ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவரிடம் பகிர்ந்திருந்தார். அவர் இன்ஜ்போர்க் படித்த ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது, இன்ஜ்போர்க்கின் கதையைக் குறிப்பிட்டார். துறைத்தலைவர் அநீதியைச் சரி செய்யவேண்டிய தேவை இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார்.

இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரும் அமெரிக்காவில் படிப்பைத் தொடர்ந்து மருத்துவராகவும் ஆகிவிட்டார், ஆண்டுகள் பலவும் கழிந்துவிட்டன சட்டச் சிக்கல்கள் உள்ளன என்று மறுப்புக்கான காரணங்களை அடுக்கியது பல்கலைக்கழக நிர்வாகம். நிர்வாகம் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் இன்ஜ்போர்க் விவகாரத்தில் ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. அவருக்கு ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கதையை முடித்துவிட நினைத்தது. இதனை இன்ஜ்போர்க்கும், துறைத்தலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இரக்கத்தின் பேரில் தருவது போன்ற பட்டதை ஏற்க மனமில்லை இருவருக்கும். தகுதியுள்ள ஒருவர் மறுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அவரது தகுதி அடிப்படையில் பட்டம் வழங்குவதையே இருவரும் எதிர்பார்த்தனர். இதனால் ஏற்படும் சட்டச்சிக்கல்களை, விதி புறக்கணிப்புகளைப் பல்கலைக்கழகம் எதிர் கொள்ளாதவாறு இன்ஜ்போர்க் மீண்டும் ஓர் ஆய்வறிக்கை தயார் செய்து, அதில் வாய்வழித் தேர்வை விதிகளின் முறைப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்றால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப் பட்டது.

இன்ஜ்போர்க்கிற்கு பார்வை குறைந்ததால் படிப்பதோ, கணினி வழி ஆய்வு செய்வது இயலாது போனது. தற்கால மருத்துவ முன்னேற்றங்கள், கடந்த 80 ஆண்டுகளில் குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் மருத்துவச் சிகிச்சைமுறை ஆகியவற்றை ஆராய இவருடைய நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தார்கள். இணையத்தில் தகவல் சேகரித்து, அவரது ஆய்விற்குத் தேவையான தகவல்களை இவரிடம் கொண்டு வந்து தொலைபேசி வழியே சேர்த்தார்கள். இவர் அவற்றின் அடிப்படையில் மீண்டும் ஓர் அறிக்கை எழுதிச் சமர்ப்பித்தார். அவர் படித்த காலத்தைவிட இப்பொழுது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் இவருக்கு வியப்பளித்தது. பல்கலைக்கழகம் இவரது வேண்டுகோளுக்குப் பொறுமையாக ஒத்துழைத்ததற்கும் இன்ஜ்போர்க் பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார்.


பல்கலைக்கழகத்திலிருந்து இரு மருத்துவத் துறை ஆசிரியர்களும், துறைத் தலைவரும் வாய்வழித் தேர்விற்காக இவரது வீட்டிற்கே வந்தனர். இவரது வரவேற்பறையிலேயே இவருக்கு 45 மணித்துளிகள் கேள்விகள் மேல் கேள்விகள் வீசப்பட்டுத் தேர்வு நடந்தது. பரிசோதிக்க வந்தவர்கள் இவர் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தைக் கண்டு பேச்சிழந்து போனதாகப் பாராட்டினார்கள். தேர்வு இவருக்குக் கொஞ்சம் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் கூறிய இன்ஜ்போர்க், இந்த முதுமையில் அவர் மேற்கொண்ட இந்த முயற்சி தனக்குப் பட்டம் வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் காலத்தில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் நியாயம் கிடைத்ததாக ஏற்பட்ட உணர்விற்காக என்றும், இது கொள்கைக்குக் கிடைத்த வெற்றிக்கான அறிகுறி என்றும் பட்டமளிப்பு விழா உரையில் குறிப்பிட்டார். தனக்கு வாழ்க்கையில் வாய்ப்புகள் மட்டும் அமையவில்லை, தன்னிடமும் விடாமுயற்சி இருந்தது என்றும் இன்ஜ்போர்க் குறிப்பிட்டார்.

கொள்கை வென்றது, நீதி வெற்றிபெற்றது, விடாமுயற்சி வெற்றி தரும், கல்விக்கு வயது ஒரு தடையல்ல என எத்தனையோ செய்திகளைத் தான் 102 வயதில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ள இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட் பாராட்டப்படவேண்டியவர்.


News Sources:
The Wall Street Journal‎:
Ingeborg Rapoport to Become Oldest Recipient of Doctorate After Nazi Injustice is Righted
http://www.wsj.com/articles/from-nazi-germany-a-tale-of-redemption-1431576062
The Daily Mirror:
The shocking reason a 102-year-old woman waited 77 years to get her PhD published
http://www.mirror.co.uk/news/world-news/shocking-reason-102-year-old-woman-waited-5802450
The Sydney Morning Herald:
Ingeborg Syllm-Rapoport, 102, completes degree denied her by Nazis 77 years ago
http://www.smh.com.au/world/ingeborg-syllmrapoport-102-completes-degree-denied-her-by-nazis-77-years-ago-20150610-ghke0k.html


நன்றி: வல்லமை 
ஜூலை  16, 2015

#பெண்ணியம், #வல்லமை, Themozhi 



Friday, February 7, 2014

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

கல்வி கற்று அறிவு பெறுதல் கற்புடைமையாம்
சொல் தவறா ஒழுக்க நெறியும் கற்புடைமையாம்
கற்புடைமை மகளிருக்கு மட்டுமென இங்கு
வற்புறுத்துவது மனிதரின் மடமையடி கண்மணி

ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புநெறியானால்
ஒருத்திக்கு ஒருவன் என்பதும் கற்பு நெறிதானே
ஒருவனுடன் மட்டுமே உன்வாழ்க்கை என்போர்
ஒருத்தி மட்டுமே ஆணுக்கென்பதை மறப்பதேனோ

வாழ்க்கைத் துணைநலப் பண்புரைத்த வள்ளுவனும்
வாழ்த்துவதேனோ பெண்ணடிமைப் பேதைமையை
பெண்வழிச்சேரல் வாழ்க்கை நெறியுரைத்தவனோர்
பெண்ணில்லை என்பதால் இத்தீங்கடி கண்மணி

வேத நூலாக்கியோர் நெஞ்சில் கொண்டதந்த
பேத மனநிலையே சீரழித்தது பெண்ணுரிமையை
நன்னெறி நூலாக்கியவர் மங்கையரெனில் அதில்
நன்னடத்தை பொதுவாக அன்றோ இருந்திருக்கும்

வீரம் கல்வி செல்வம் என்பதோ ஆணுரிமை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்ணுடமை
மிச்சமின்றி பிடுங்கப்பட்ட பிறப்புரிமைகளால்
நச்சுப்பல் பிடுங்கப்பட்ட நாகமானாளடி கண்மணி

ஆண்களுக்கும் நல்ல கற்புநெறி தேவையென்பதை
அடியோடு மறந்திட்டார் மூடமக்கள் நம்நாட்டில்
உடல் வலிமையினால் கல்வி செல்வம் மறுத்தே
அடிமையாக்கினர் பெண்ணினத்தை நம்மண்ணில்

திட்டங்கள் பலவும் சட்டங்கள் பலவும் செய்து
திரையிட்டு மறைத்தார் பெண்களை இங்கே
உரிமையைப் பறித்தே உறுதியைக் குலைத்தார்
உண்மை நிலையுணர்ந்து விழித்திடடி கண்மணி

ஆண் உயர்வென்ற ஆணாதிக்கம் போற்றி
பெண்ணடிமை என்ற தாழ்வெண்ணம் ஏற்றி
அடக்கினார் பெண்களைத் திட்டமிட்டு அன்றே
அடங்கினர் பெண்களும் மறுப்பின்றி என்றும்

பிறப்பிற்கொரு நீதியென்ற நெறிமுறை மறுத்து
சிறப்பான கற்பென்பது பொதுவென்று உரைத்து
பிறப்புரிமை என்பதில் அடங்காது அடிமைத்தனமென
சிறப்புடன் கூறி சீரிய வாழ்வு காண்பாயடி கண்மணி


#கவிதை, #சிறகு, #பெண்ணியம்

Monday, October 7, 2013

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்


சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license)  பெற்றார்.  பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's license) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும்  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகத்  தடைப்பட்டது.  விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார். 

உலக வரலாற்றில் முதன் முதலில் ரைட் சகோதரர்களால் (Wright Brothers) நார்த் கரோலினா மாநிலத்தின் கிட்டி ஹாக் என்னுமிடத்தில் டிசம்பர் 17, 1903 (at Kitty Hawk, North Carolina on December 17, 1903) அன்று வெற்றிகரமாக விமானம் பறக்கவிடப்பட்டது.  உலக அளவில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் விமானச் சேவையில் 1909 ஆம் ஆண்டு முதல் இறங்கின.  ‘வான்பயணத்தின் பொற்காலம்’ (Aviation's Golden Age 1918–1939) எனக் கருதப்பட்ட காலம் என்பது முதலாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, இரண்டாம் உலகப்போரின் துவக்கம் உரையில் உள்ள இடைப்பட்ட காலமாகும். இக்காலம் விமானங்களின் தொழில் நுட்பமும் எண்ணிக்கையும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்த காலமாகும்.

இக்காலத்தில் விமானச் சேவை வணிக அளவில் வளர்ந்தபொழுது பல விமானிகள் தோன்றினர்.  அவர்களில் மகளிர் பலரும் அடங்குவர்.  அமெரிக்காவின் ‘ஹரியெட் குயிம்பி’ (Harriet  Quimby) என்ற பெண்மணி 1911 ஆம் ஆண்டு விமானி உரிமம் பெற்று விமானத்தில் பறந்த முதல் பெண்மணி ஆவார்.  இவர் விமானி உரிமம் பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பெண் விமானியாக சரளா தாக்ரல் (அக்காலத்தில் சரளா ஷர்மாவாக இருந்தவர்) விமானி உரிமம் பெற்றார்.  தற்காலத்தின் "ஏர் இந்தியா" விமான நிறுவனம் (அக்கால இந்தியாவில் தனியார் நிறுவனமாக  ஜே.ஆர்.டி டாட்டாவும் அவர் குடும்பத்தினரும் துவக்கிய வர்த்தக விமானச்சேவை) துவக்கப்பட்டு நான்காண்டுகளே ஆகியிருந்த  காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது ஒரு செயற்கரிய வியப்பூட்டும் சாதனை.

வாழ்க்கைக் குறிப்பு:
சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பவரைத் தனது 16 வயதில் மணந்த சரளா பொது ஆண்டு 1914 இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி'  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot's license) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.

தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விடக்  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிட்டாததைக் கண்ட அவர் தானே தனது மருமகளை "லாகூர் ஃப்ளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:
பயிற்சியாளர் தஸ்த்தூர் சரளாவிற்கு  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரை காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு 'ஜிப்சி மாத்' (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.

இவர் விமானம் ஓட்ட கற்ற பிறகே கார் மற்றும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாகக் கூறும் இவர், இவரது நோக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே ஆள் ஃப்ளையிங் கிளப்பில் வேலை செய்த ஓர் ஊழியர் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார். முதல் பெண் விமானியாகப் பறந்ததற்குப்  பிறகு தனியாக லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் பறந்த பிறகு விமானியாக உரிமம் பெற்றார்.  

இவர் கணவர் பி.டி. ஷர்மா ஒரு விமான விபத்தில் 1939 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது 24 வயதில் தனது ஒன்று மற்றும் ஆறு வயது மகள்களுடன்  சரளா தனித்து விடப்பட்டார்.  தொடர்ந்து தொழில்முறை விமானியாகத் தகுதி பெற விரும்பி இவர் ஜோத்பூர் (Jodhpur) சென்றார்.  அந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் உள்நாட்டு விமானப் பயிற்சிகள் தடைப்பட்டது. எனவே, தனது தொழில்நிலை விமானியாகும் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் லாகூர் சென்று 'மேயோ கலைக் கல்லூரி'யில் (Mayo School of Art) ஓவியம் கற்று வங்காள முறை ஓவியத்தில் (trained in the Bengal school of painting) நுண்கலையில் பட்டயப் படிப்பை (diploma in fine arts) முடித்தார். 

சுதந்திர இந்தியாவில் சரளாவின் வாழ்க்கை:
நாடு சுதந்திரம் அடையும் நாள் அருகாமையில் வரும் பொழுது பாகிஸ்தானில் கலவரங்கள் அதிகரித்தது.  பெண்கள் அவர்களது கணவர் அல்லது வீட்டில் பிற ஆண்கள் இறக்க நேர்ந்தால் எதிரிகள் கையில் சீரழியாமல் இருக்க, நஞ்சுண்டு உயிரை மாய்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு நச்சுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  கைம்பெண்ணாக இரு சிறுமிகளுடன் இருந்த சரளாவை டெல்லிக்குச்  சென்றுவிடும்படி  ஆலோசனை வழங்கப்பட்டது.  அவரும் நிலைமையை உத்தேசித்து தனது மகள்களுடன் புகைவண்டியில் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 

டெல்லியில் ஓவியங்களை வரைந்தும், ஆடை ஆபரணங்களை வடிவமைத்தும் விற்பனை செய்து ஒரு தொழிலதிபராக சரளா வாழ்க்கையைத் துவக்கினார்.  மகரிஷி சாமி தயானந்த சரஸ்வதி துவக்கிய ஆரிய சமாஜத்தின் வழிநடந்த இவர், அந்த சமாஜத்தின் இந்துமதச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தனது பெற்றோர் தந்த ஆதரவினால் மீண்டும் பி.பி. தாக்ரல் (P. P. Thakral) என்பவரை 1948 ஆம் ஆண்டு மறுமணம் புரிந்து கொண்டார்.  தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளா  1948  ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் பெற்றார்.  அப்பொழுது செய்தித்தாளில் வெளிவந்த, ராஜஸ்தான் அரச குடும்பத்தின் அரச குடும்ப விமானத்திற்குப் பெண் விமானி தேவை என்ற விளம்பரத்திற்கு விண்ணப்பித்தார். ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக (job in Rajasthan as a personal pilot to the royalty of Alwar) ஆறு மாதங்கள் அப்பணியை மேற்கொண்டார்.


மார்ச் 15, 2009 இல் உயிர்நீத்த சரளா தன்னுடைய வாழ்நாட்களின் பிற்பகுதியில்  ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார்.  அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன.  அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் (Vijaylaxmi Pandit) குறிப்பிடத் தகுந்த ஒருவர்




ஆதாரங்கள்:
First Licensed Women Pilots, 1936 - India - Sarla Thakral
http://centennialofwomenpilots.com/node/25

Women's Day: Top 100 coolest women of all time, Sarla Thakral: The first Indian woman to fly a plane, back in 1936.
http://ibnlive.in.com/photogallery/inside_photo_new_des.php?slideshow_id=3515&num=72

Flying colours & ground reality, Smriti Kak Ramachandran, February 5, 2006, The Tribune
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm

Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231

Remember Sarla Thakral's maiden flight of fancy, Nov 25, 2009, DNA INDIA
http://www.dnaindia.com/speakup/1316073/report-remember-sarla-thakrals-maiden-flight-of-fancy

Sarla Sharma: Being a Woman and a Pilot in Lahore in 1936, Anurag Sharma
http://www.smartindian.com/Sarla-Sharma-Thakral-Pilot.html

Sarla Thakral - https://en.wikipedia.org/wiki/Sarla_Thakral

India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/

Rahul Ittal's statement on India’s First women in air – India’s first lady pilot – Sarla Thakral
http://vivchavan.wordpress.com/2007/10/17/indias-first-women-in-air-indias-first-lady-pilot-sarla-thakral/#comment-371

இந்தியாவின் முதல் பெண் விமானி, டிசம்பர் 15, 2009, விடுதலை
http://viduthalai.periyar.org.in/20091215/news21.html


காணொளி:
Down memory lane: First woman pilot recounts life story - August 13, 2006 - NDTV
http://www.ndtv.com/video/player/news/down-memory-lane-first-woman-pilot-recounts-life-story/6231


படங்கள் உதவி:
Sarla Thakral, First Woman Pilot of India - Late 1930's   - http://www.oldindianphotos.in/2012/07/sarla-thakral-first-woman-pilot-of.html   &
http://www.tribuneindia.com/2006/20060205/society.htm


நன்றி:
திண்ணை
அக்டோபர் 7, 2013 

#திண்ணை, #பெண்ணியம்,  #Themozhi