Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts
Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts

Monday, March 4, 2024

அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய பெண்கள் உறுதி பூண வேண்டும்


அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய பெண்கள் உறுதி பூண வேண்டும்
 

"ஆணின் அழகும் ஆளுமையும்"
ஆசிரியர்: முனைவர் த.ஜான்சி பால்ராஜ்
நூலின் விலை: ₹ 200
வெளியீடு: எழிலினி பதிப்பகம்


பெண்ணியம், சமூகம், சுற்றுச் சூழல் சார்ந்து கதை, கவிதை, கட்டுரைகள், புதினங்கள் எழுதிவரும் முனைவர் த.ஜான்சி பால்ராஜ் அவர்களின் நூல் "ஆணின் அழகும் ஆளுமையும்".   அனைத்துலக மகளிர்  நாள் கொண்டாடப்படும் மார்ச் மாதம் பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான தலைப்பின்  மூலம் பெண்ணியக் கருத்தை முன்வைத்துள்ள முனைவர் ஜான்சி பால்ராஜ் அவர்களின் நூலின் கருத்துகளைப் பார்ப்பது பெண்ணுரிமை குறித்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொள்ளவும்  உதவும் என்பதில் ஐயமில்லை

பெண்களின் உரிமைகள் குறித்தும் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு,  வாய்ப்புகள் பல மறுக்கப்பட்டு அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த, இன்றும் சிக்குண்டிருக்கும் மகளிர் நலம் மேம்பட வேண்டும் என்ற அக்கறையில் சமூகப் பொறுப்புடன் முனைவர் ஜான்சி பால்ராஜ்  எழுதியுள்ள பல கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.  இந்நூலைப் பெண்கள் எந்த அளவு படிக்க வேண்டியது  முக்கியமோ, அதே அளவு ஆண்களும் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.  பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய  சமத்துவம் குறித்து இருபாலரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு தரும் நூல் இது.  

பாரதி பாடிய புரட்சிப் பெண்ணாகப் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று பல துறைகளில் இன்று பெண்கள் சாதனை செய்வது பாராட்டிற்கு உரிய முன்னேற்றம்.  இருப்பினும்,   இன்றும் சமூக வாழ்வில் தன்னைக் கட்டுப்படுத்தும், பல உரிமைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலையில் பெண்கள் சிக்கித்தான் இருக்கிறார்கள்.

கடந்த பல நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி வளர்ச்சி முன்னேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் வளர்க்கப்பட்ட முறையும், வளர்ந்த சூழ்நிலையின் தாக்கமும் இன்றும் பெண்களுக்குப் பல மனத்தடைகளை அவர்களின் ஆழ்மனதில் நிரந்தரமாகப் பதியவைத்துவிட்டது. கூண்டுக்கிளிகளின் கூட்டைத் திறந்து விட்டாலும் வெளியேறத் தயங்கும் பறவைகளாக  முடங்கியே உள்ளனர் பலர்.  அதற்குக் காரணம் பெண்கள் என்றால்  அவர்கள் பண்பில்  அச்சம், மடம், நாணம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு இசைந்து சச்சரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிடலாமே என்ற எண்ணம்தான்.  பெண் என்றால் அழகு, சகிப்புத்தன்மை,  பொறுமையின் நிறைகுடம், அர்ப்பணிப்பு மனப்பான்மை என்று சமூகம் காலம் காலமாகப் பெண்களின் வாழ்வில் செய்த கருத்துத் திணிப்புகளை அப்படியே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்து விட வேண்டும் என்ற முனைப்பும் பெண்களிடத்தில் மாறாமல் நிரந்தரமாக உள்ளது.    

தான் யார்? தன் திறமைகள் என்ன? வாழ்வில் தன் எதிர்பார்ப்புகள் என்ன ? என்று தன்னைக் குறித்து உள்நோக்கி ஆராய மறந்து, அடுத்தவர் குறிக்கோளுக்கு ஏற்ப அவர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யத் தீர்மானித்துவிட்ட நிலைதான் பெண்களின் வாழ்வை  இன்று வரை நிர்ணயித்து வருகிறது.  பெண்கள் பலருக்குத் தங்களின் மீது  சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்கும் மனப்பான்மையும் இல்லை.  பெண்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தி உள்ள எவரும் அதைப் பெண்களின் நன்மைக்காகச் செய்ததில்லை. தங்களின் வசதிக்காக விதிகளைச் செய்து வைத்தார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்துக் கேள்வி கேட்கவும், அவற்றுக்காகப் போராடவும் தேவையான அறிவு வளர்ச்சியைத் தரும் கல்வியும், தற்சார்புடன் வாழ உதவும் சொத்தும், ஊதியமும் மறுக்கப்பட்ட நிலையில், தன் வாழ்வாதாரம், தன் பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேறு வழியின்றிப் பெண்களும் சமூகம் தங்களிடம் இருந்து பறித்த உரிமைகளை ஒப்புக் கொண்டு, அது வகுத்த வழியில் வாழ முற்பட்டுவிட்டார்கள்.

பெண்களின் இந்த அடிமை நிலை  குறித்து கேள்வி கேட்ட சில நல்ல உள்ளங்களும் நம்முடன் வாழ்ந்து உள்ளார்கள். அவர்கள் பெண்கள் சார்பில் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்கள். அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளைக்கண்டு அவர்கள் அஞ்சியதும் இல்லை, பின் வாங்கியதும் இல்லை.  அத்தகையரில் பெண் நலத்திற்காகப் பாடுபட்ட ஆண்களும் உள்ளனர்.  சென்ற நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தேவதாசி முறையை ஒழிக்கும்  சட்டம் உருவாகக் காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம்  போன்ற முன்னோடி மகளிர் பெயர்களை நினைவு  கூராமல்  தமிழகப் பெண்களின்  வரலாற்றை எழுத இயலாது.  

அவ்வாறே பெண்களால் தந்தை பெரியார் என்று பாராட்டப் பட்ட பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களையும் போற்றாமல் இருக்க முடியாது.  ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்பது அவருடைய கேள்வி.  பெண்களுக்கு விடுதலை என்ற நிலை உருவாக, கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவாகி,  ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படுதல் வேண்டும் என்பது அவரது உறுதியான கொள்கை.   99.80% பெண்களுக்கு நமக்கு ஏன் இந்த அடிமை நிலை என்ற எண்ணம் கூட வருவதில்லை என்றார் பெரியார்.  கற்பு, தெய்வீகக் காதல், புனிதத் திருமணம், கைம்பெண் நிலை, விபச்சாரம் என்று சமூகம் வகுத்துள்ள விதிகள் ஆண்களைக் கட்டுப்படுத்தாமல் பெண்களை மட்டுமே குறிவைத்ததைப் பெண்களுக்கு விளங்க வைக்க முற்பட்டார், அவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்பி விழிப்புணர்வை ஊட்டினார்.  

தன்னல நோக்குடன் வலிய  நிலையில் ஆதிக்க மனப்பான்மையிலிருந்த ஆண்களால் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் சமைக்கப்பட்டு  பெண்கள் வாழ்வில் அவை திணிக்கப்பட்டு பெண்களை அடிமைத் தளையில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்க்கேள்வி எழுப்பாமல் இதனைப் பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கியதுதான் அவர்களின் அடிமை நிலைக்குக் காரணம். கீழ் சாதி என்பவர்கள் எவ்வாறு தங்களுக்கு விதிக்கப்பட்ட அந்த நிலையை  மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்கிறார்களோ  அது போன்றே பெண்ணடிமை நிலையும் உருவாகிவிட்டது என்று பெரியார் பரப்புரை செய்து பெண்களின் நிலைக்காகச் சென்ற நூற்றாண்டிலேயே வாதாடினாலும் இன்றும் கூட ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதைப் பெரும்பாலோர், குறிப்பாகப் பெண்களிலும் ஒரு சிலர்  உட்பட ஏற்போர் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பெண்களுக்கான சமவுரிமை என்ற கருத்தில் பெரியார் போன்றே கொள்கைகள் கொண்டிருந்தவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன் என்று கூறியவர்  அண்ணல் அம்பேத்கர்.  அவருக்குச் சட்டமுறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அவற்றைச்  செவ்வனே பயன்படுத்திப் பெண்களின் பல உரிமைகளுக்கு வழி வகுத்தார். அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களின் சமத்துவத்துக்காக, இந்து நெறிமுறை மசோதாவை (Hindu Code Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். ஆதிக்கச்சாதி இந்துக்களின் எதிர்ப்பால் பெண்கள் முன்னேற்றத்திற்கான அவரது புரட்சிகர மசோதா நிறைவேற்றப் படாத பொழுது அண்ணல்  அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியையும் துறந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.  

பெண்களின் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அண்மைய அறிக்கை ஒன்று உலகில் பெண்களின் தற்போதைய முன்னேற்ற நிலையைக் கருத்தில் கொண்டால், ஆண்களுக்கு நிகரான சட்ட உரிமைகளும்  பாதுகாப்புகளும்  பெண்களுக்குக்  கிடைக்க இன்னும் 286 ஆண்டுகள் ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.  எனவே தொடர்ந்த பெண் சமத்துவப் பரப்புரையும் விழிப்புணர்வும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  அந்தக் குறிக்கோளில் அனைவரும் தொடர்ந்து செயல்படுவதும் தேவையாகிறது.  

முனைவர். ஜான்சி பால்ராஜ் அவர்களும் தன் பங்கிற்குப் பெண் சமத்துவ விழிப்புணர்விற்கு இந்த நூலில் கட்டுரைகள் பல வடித்துள்ளார். மனித இனத்தின் சரிபாதியரான பெண்களை மதிக்காமல் அடிமைப்படுத்தும் நிலை உருவான வரலாற்றையும், பெண்களைப் பண்பாட்டுக் குறியீடாக மாற்றி அவர்களது அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து வாழ்வெல்லையைச் சுருக்கி கட்டுப்படுத்திய சமூக வரையறைகளையும் தெளிவாக விளக்கும் கட்டுரைகள் இவை.  சமூகத்தில் பெண்கள் குறித்து இருக்கும் பல பிற்போக்கான சூழல்களை நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.  அத்துடன் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் பலவற்றையும் முன்வைக்கின்றார். அது மட்டுமின்றி பெண் சமத்துவ இலக்கு என்ற மாறுதலை நோக்கி நடை போடச் சிறந்த வழிமுறைகளையும் காட்டியுள்ளார்.  

இந்த நூலில்;  சமத்துவத்தைத்  தங்களது வாழ்வியல் முறையாகக்  கொண்டிருக்கும் மக்களே உயர்ந்த பண்பாட்டின்  குறியீடு என்று வரையறுத்து, பெண் தன்னைப்   பண்பாட்டின் குறியீடாகக் காட்டும் சமூக அமைப்பிலிருந்து வெளிவர வேண்டும் என்று தெளிவாக வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.  அற்பத்தனமான  ஆதிக்க ஆசையால் தன் இனத்தின் சரி பாதியான பெண்ணினத்தின் அறிவிற்கு விலங்கிட்ட மனிதர்களது செயலை  அவர்களது அறிவின்மைக்குள் அடக்குவதா இயலாமையில் இணைப்பதா என்ற வினாவையும் எழுப்புகிறார்.  

பெண்ணின் நல்லொழுக்க அடையாளமாக இச்சமூகம்  வரையறுத்து  வைத்திருக்கும் மாயத்தைத்  தோலுரிக்கும் அறிவுசார் சிந்தனை மாற்றம் வரவேண்டும் என்கிறார் முனைவர் ஜான்சி பால்ராஜ்.  பெண்களுக்கு அவர்களது வலிமையை  உணரவைக்கும்  ஒரே ஆயுதம்  கல்விதான் என்று ஆணித்தரமாகக் கூறும்  முனைவர் ஜான்சி பால்ராஜ், குடும்பமே பெண்களுக்கு முதல் எதிரியாக அமைந்துவிடுகிறது.  குடும்பத்தின்  உயர்ந்த கௌரவத்திற்கு என்று பெண்ணின் சுதந்திரப் பறிப்பும்  அவள் மீதான அடக்கு முறைகளும்  மறைமுகமாகப்  பயன்படுத்தப் படுகின்றன என்று பெண் இனத்திற்கு எதிரான பாகுபாட்டின் 'கிரவுண்ட் சீரோ' (ground zero) எது என்பதைத்  துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.

எந்த ஒரு  சரியான சமூக மாற்றமும்  சமூகத்தின் அடிப்படை  அலகான குடும்பத்திலிருந்துதான் தொடங்கியாக  வேண்டும்.  அவ்வாறே பெண்கள் நிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அதைச் சமூகத்தின் அலகான குடும்பத்தில் தொடங்க வேண்டும்.  ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் என்ற சமத்துவக் கருத்தை  இருபாலினப் பிள்ளைகளும் உணரும் வண்ணம் அவர்கள் வளர்க்கப் பட வேண்டும். கல்வி நிலையங்களும் இதை வளரும் பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் வளர்க்கப்படும் விதம் ஒரே விதமாக  இருந்தால் பெண்கள் நிலை விரைவில் தானே மாறும் என்பது நூலாசிரியர் முடிபு.

பெற்றோர்களும்  ஆசிரியர்களும் வளரிளம்  பருவத்தினரைத் தக்க வழியில்  நெறிப்படுத்தும் போது  பாலின வன்முறைகள் போன்ற மிகப் பெரிய சமூகப் பிழைகளிலிருந்து திசைதிருப்பி சமூகத்தின் எதிர்கால, அறிவார்ந்த சிற்பிகளாக அவர்களை மாற்ற முடியும் என்ற வழிமுறையையும் கூறுகிறார்.  இது குறிப்பாக அடுத்த தலைமுறையை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பெண்கள் கையில்தான் உள்ளது.  குடும்பத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறை  ஆண் குழந்தைக்கு இணையானதாக இயல்பான பராமரிப்பாக  இருக்க வேண்டும்.பாலினச் சமத்துவத்தைக் காட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குமுன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் நூலாசிரியர்.  

குடும்ப அளவில் பெண்களைக் கீழமைப் படுத்தாமல் மதிப்பளிக்கும் முறையில் ஒவ்வொரு செயலிலும் தங்கள் செயல்பாடுகளைப் பெற்றவர்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப வேலைகளில் ஆண் வேலை இது, பெண்ணின் பொறுப்பு இது என்ற பாலினப் பாகுபாடு காட்டுவது இருவரும் உழைத்து ஊதியம் ஈட்டும் காலத்திற்குப் பொருத்தமற்ற நடைமுறை.  பெண்களின் உழைப்பை இரு மடங்கு உறிஞ்சும் நிலையில், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் நிலை பெண்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதிப்பதுடன் அவர்களுக்கான ஓய்வு, பொழுதுபோக்கு என்பனவற்றை இல்லாமல் செய்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.  

பெண்களும் தாங்கள் ஒரு பாலினப் போகப் பொருள் என்ற பழமையான கருத்துகளைக் கைவிட்டு, ஆண்களை ஈர்ப்பதுதான் பெண்ணுக்குரிய இலக்கணம் என்ற எண்ணத்துடன் தங்களின் மதிப்பைத் தாங்களே குறைத்துக் கொள்ளும் வகையில் அமையக் கூடிய  நடை உடை பாவனைகளைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களுக்குச் சட்டம் மூலம் கொடுக்கப்படும் உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ள, தங்களுக்கு உள்ள வாக்குரிமையைத் திறமையாகப் பயன்படுத்தி தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது, தங்கள் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று பெண்களுக்கு நேரடியாக நல்ல பல ஆலோசனைகளையும் கூறுகிறார்.

புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் சமூக ஆர்வலருமான  மாயா ஆஞ்சலூ தனது 'நான் எழுவேன்' (Still I Rise) கவிதையில் . . .
நிலவினைப் போலக் கதிரவனைப் போல
நிரந்தரமான அலைகளைப்போல
மேலெழும் நம்பிக்கை போல
நானும் மேலெழுவேன் . . .
என்று குறிப்பிட்டவாறு பெண்கள் தங்களை அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்து மேலே உயர இந்த நூல் உதவும்.

பெண்கள் சமத்துவத்திற்காகத் தன் எழுத்து மூலம் விழிப்புணர்வு கொண்டு வர இந்த நூல் மூலம் முயலும்  முனைவர். ஜான்சி பால்ராஜ் பாராட்டிற்குரியவர். உயர்நிலைப்பள்ளி பதின்மவயது மாணவர்களுக்குத் துணைப்பாட நூலாக  இந்த நூல் அறிமுகப் படுத்தப் பட்டால் தமிழ் இளைஞர் மனதில் தேவையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும்.

பெண்ணியத்தை வலியுறுத்தும் நூலைப் படைத்த முனைவர் ஜான்சி பால்ராஜ்  அவர்களுக்குப்  பாராட்டுகளும் வாழ்த்துகளும். 



நன்றி:
தமிழணங்கு 
மார்ச்,  2024 




#நூல் மதிப்புரை, #தமிழணங்கு, #Themozhi  



Monday, February 5, 2024

நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு

நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு



அடுக்குப் பானை கவிதைகள் இனிமையான மெல்லிய இசையாய் நெஞ்சத்தை மீட்டிச் செல்லும் கவிதைகளின் ஓர் தொகுப்பு.

கருவறை முதல்  கல்லறை வரைக்கும் இமையாய் காத்து வளர்த்த தன்  பெற்றோருக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்யும் கவிதையுடன் தொடங்கும்  இக்கவிதைத் தொகுப்பு, உணர்வோடு கலந்த கவிதைகளின் ஒரு தொகுப்பு. இலக்கிய வெளியில் எதையும் அழகுணர்வோடு வெளிப்படுத்த உதவுவது கவிதை மொழி என்பதற்கு மீண்டும் ஒருமுறை இந்த நூல் சான்று கூறி நிற்கிறது. காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலில் தன் நெஞ்சில் இட்ட அழியாத கோலங்களைப்  படம் பிடித்து வழங்கியுள்ளார் கவிஞர் சுகந்தி அன்னத்தாய்,

தனது தாய்மொழி, பெற்றோர், ஆசிரியர், உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, இயற்கை, அன்புக்குரிய தலைவர்கள்  என அனைவர் மீதும்  கவிஞர் சுகந்தி அன்னத்தாய் அவர்கள் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் கவிதைகளாக வெளிப்பட்டு படிப்பவரைப் பரவசமூட்டுகிறது. தன்னுடன் படிப்பவரையும் அவரது சிறுவயது நாட்களுக்குக் கடத்திச் செல்லும் வித்தையைக் கற்றுள்ளார் கவிஞர். கவிதைகள் சிலவற்றில்  புது முயற்சிகளையும் புகுத்தியுள்ளார்.

திருக்குறள்  அடியொட்டி 'ஆசிரியர் மாட்சி' என்ற 10 குறட்பாக்களை உடைய அதிகாரம் குறள்  நூலிலிருந்து தப்பி வந்த அதிகாரம் போலச் சிறப்புடன் ஆசிரியப் பணியின் சிறப்பைப் போற்றுகிறது, ஆசிரியரின் கடமையைக் கூறுகிறது.
         குறைகளைந்து கற்பிக்கும் ஆசான் மாணவர்க்கு
         இறையென்று போற்றப் படும்.

மாலையாகி பூஜைக்குச் செல்லும் மலர்களுடன் ஒப்பிட்டு,  மலர்போன்ற தமிழ்மொழி  செம்மொழித் தகுதி பெறும் சிறப்பை இணைத்துக் காட்டும் பாங்கும்  சிறப்பு.  தமிழைத் தன் நட்பாக, ஆசிரியராக  உருவகிக்கும் முறையும் சிறப்பு.  உருவகங்கள் மிக எளிதாகக் கவிஞருக்குக் கைவருகின்றது!  சுகம்தேடா சுமைதாங்கி என்கிறார் அம்மாவை. அவ்வாறே அன்னையும் ஆசானும் இணைந்து மனிதரை உயர்த்துவார்கள் என்ற கருத்தும் சிறப்பு.    

குழந்தைகள்தானே என நாம் எளிதாகக்  கடந்துவிடும் மழலைகளை, அவர்களை  முன்மாதிரியாகக் கொண்டு நாம் அவர்களிடம் கற்க வேண்டிய பல நற்குணங்கள் உள்ளன, அதனால் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என நினைவூட்டுகிறார். அது போன்றே முதியோரின் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார்.  ‘தலைமுறை இடைவெளி’யென பாரா முகமாய் நடத்திடாமல் பாசத்துடன் பண்பாய் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஊரின் அடையாளமாக இருந்த மரங்கள் பலவும், வயல்கள் பலவும் நகரமயமாக்கலில்  மறைந்து போனதை மனம் உலுக்கும் வண்ணம் கூறுகிறார்.  ஆண்டுகள் பல கழிந்து சொந்த ஊருக்குப் பசுமையான நினைவுகளோடு திரும்பியவர்,  ஊரின் புதிய கான்கிரீட் கட்டிடப்  பரவலைக் கண்டு மலைப்பவர், தனது இளமைக்கால நினைவுகள் கருகிப்போன அதிர்ச்சியை அனுபவித்தவர் எவரும் இந்த வரிகளுடன் உணர்ச்சிப் பூர்வமாகக் கலந்து போவார்கள்.  

மரங்கள் என்று மட்டுமல்ல, "பொருநை நதியெனும் பெயர் பெற்றவள்- இன்று கருணையில்லா மனித செயலால் துயரில் மூழ்கினாள்!" என்று மணற் கொள்ளையால் பொலிவிழந்த தாமிரபரணியைக் கண்டும்  கலங்குகிறார்.
      நாளைய வாழ்வின்
      நிழலைத் தேடலில்
      இன்றைய வாழ்வின்
      நிஜங்கள் தொலைத்தோம்!
என்ற வரிகள் இக் கையறு நிலையின் எதிரொலி.

அவரது இளம்பருவத்து நாட்களின் கவிதைகள் மூலம் நம் பள்ளி நாட்களையும் விடுமுறை நாட்களையும் நெஞ்சில் அசைபோட வைக்கிறார் . மகிழ்வின் நாட்களில் அவருடன் நாமும் இணைந்து மகிழ்ந்து களிக்கலாம்.  நினைக்கையில் நெஞ்சமெல்லாம் நிறையத்தான் செய்கிறது.

ஆழம் காண இயலா பெண்மனம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவகை சிந்தனைகளுடன் போர்க்களமாவதைச் சித்தரிக்கும் முறை அழகிய கவிதையாக உருவெடுத்துள்ளது. வெற்றியின் வித்து, வாழ்க்கை ஒரு வரம் கவிதைகள்  எளிய சொற்களில் அமைந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்.

உழைத்தும் வெள்ளாமை வீடு வந்து சேராத நிலையில் உழவரின் கலைந்த கனவு, கிராமத்துக் கணவன்-மனைவியின் காதல் பாடல், கடல் கடந்த காதல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை. இவற்றில் நம் நெஞ்சை நெகிழவைப்பது  நன்றிக்கடன்-முத்துராசுவின் அன்பும் பாசமும் கடமையுணர்வும்.

ஓசை என்ற சொல்லுக்குப் பலபொருள்கள் அமையுமாறு அமைக்கப்பட்ட தமிழின் இன்பம் கவிதையும்,  நீரின்றி அமையாது உலகு கவிதையும், தமிழ்நேசன் கண்ணதாசன் கவிதையும் வித்தியாசமான முயற்சியால் கவனத்தைக் கவரும் கவிதைகள்.  

ஆளுமைகளைப் போற்றும் விதமாக அமைந்துள்ள பூலித்தேவன்,  வேலு நாச்சியார்,  பசும்பொன்னார், காந்தி, நேரு, கலாம், காமராஜர்,  கருணாநிதி, பாரதி, கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் மீது பாடப்பட்ட கவிதைகள் ஓர் அருமையான பாடல் தொகுதி. குறிப்பாக . . .
      சொத்து நிலையென்று சொல்லவந்தால்
      இருபாலருக்கும் பொதுவில் வைக்க
      சட்டம் இயற்றிய திராவிடத் துணைவன்
என்று பேனாவின் கூர்முனையால் தமிழ் இலக்கியங்களில் வாழும் கலைஞர் எனும் காவியத்தைப்  பாராட்டும் பாங்கு படித்து மகிழத்தக்க வரிகள்.

சமர்ப்பணம் தொடங்கி அறுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பொதிந்து வைத்துள்ள முனைவர் சுகந்தி அன்னத்தாய் அவர்களின்  "அடுக்குப் பானை' கவி நூலைப் படித்த பிறகு நம் உறவுகளைப் போற்றுவோம்... நம்  உணர்வுகளைப் போற்றுவோம் என்று நம்மை நாமே நினைவூட்டிக் கொள்ளமுடியும் என்பது உறுதி. அருமையான கவிதை நூலைப் படைத்தளித்த கவிஞர் சுகந்தி அன்னத்தாய் அவர்களுக்குப் பாராட்டுகள்.




நன்றி:
தமிழணங்கு 
பிப்ரவரி,  2024


#நூல் மதிப்புரை, #தமிழணங்கு, #Themozhi  



Saturday, February 1, 2020

காலந்தோறும் வள்ளுவர் வரலாறு

காலந்தோறும் வள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் யார்? நூல் மதிப்புரை  


திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை, சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்றுப் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத ஓர் இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன. அவற்றை மீள்பார்வை செய்து “திருவள்ளுவர் யார்?” என்று ஆராய்ந்து கௌதம சன்னாவால் அவர் கோணத்தில் அளிக்கப்படும் விளக்கமே 150 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூல். திருவள்ளுவர் யார் என அறிந்து கொள்ள முற்படுகையில் திருக்குறளின் நீண்ட புனைகதை வரலாற்றையும் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

நூலின் முதல் பகுதி, பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை குறித்தும், சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் என்பவர்தாம்  தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை அச்சுப் பதிப்பிற்குக் கொடுத்து உதவிய பெருந்தகை. இதனால் திருக்குறள் அச்சுப் பதிப்பு முயற்சிகளின் வரலாற்றை அறிவதும் தவிர்க்க இயலாத தேவையாகிறது.

எனவே, நூலின் இரண்டாம் பகுதி குறளின் பதிப்பு வரலாறு குறித்து விரிவாக விவரிக்கிறது. திருக்குறளின் முதல் பதிப்பு எது, எந்த ஆண்டில் அது யாரால் பதிப்பிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி இது. ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்கிறது மற்றொரு குறிப்பு. இத்தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் இக்குறிப்புகள் கொடுக்கும் ஆண்டுகள் முரண் என்று ஆய்வு கூறுவதை அடியொட்டி முதலில் ஞானப்பிரகாசர் வெளியிட்ட நூலுக்கான சுவடி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆராய முற்பட்டு, 1812இல் வெளியான திருக்குறள் நூலானது கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட சுவடியின் பதிப்பே என்பது காட்டப்படுகிறது. கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட அந்த குறளின் சுவடியை எல்லீஸின் பதிப்பு நிறுவனத்தின் மேலாளர் முத்துசாமிப்பிள்ளையும், ஞானப்பிரகாசரும் அச்சு நூலக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஞானப்பிரகாசர் அச்சகத்தார் என்பதால் அக்காலப் பதிப்பு வழக்கப்படி அவர் பெயர் திருக்குறள் பதிப்பின் மேலட்டையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே ஞானப்பிரகாசர் அச்சகத்தார், பதிப்பித்தவர் அல்ல. வேப்பேரியில் இருந்த அவரது அச்சகத்தை எல்லீஸ் பயன்படுத்த வேண்டிய நிலைக்குக் காரணம், பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டில் எல்லீஸின் சொந்த அச்சகம் உருவாகாததால், எல்லீசிடம் இருந்த திருக்குறள் சுவடி ஞானப்பிரகாசர் அச்சகத்தால் அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்.

மூன்றாம் பகுதி, “திருக்குறளா அல்லது திரிகுறளா” எது சரி என்ற கேள்வியை எழுப்பி, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்ற விளக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அதற்கான பண்டிதர் அயோத்திதாசர் கொடுத்த விளக்கத்தை விரிவாக நூல் அலசுகிறது. அதாவது பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்.

வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்:
இதுவரை கூறப்பட்ட அறிமுகப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் நூலின் நான்காம் பகுதியானது நூல் உருவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. ‘புனைவுகளில் சிக்கிய வள்ளுவர்’ என்ற இப்பகுதியே ‘திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?’ என்று கேள்விகளுக்குப் பல நூல்கள் வழியாகவும் ஆவணங்கள் வழியாகவும் விடை காண முற்படுகிறது. வள்ளுவரின் வரலாறு என்று பலர் கூறிச்சென்ற, சான்றுகளற்ற புனைவுகளின் தொகுப்புகளை படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இப்பகுதிக்கு உதவிய ஆவணங்களை நூலாசிரியர் நூலில் பின்னிணைப்பாகவும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பார்ப்பன குல தந்தைக்கும், பறையர் குல தாய்க்கும் பிறந்தவர் வள்ளுவர் என்ற புனையப்பட்ட கதைகளின் பின்னணிக்குக் காரணம், வள்ளுவர் குலத்தில் பிறந்த ஒருவருக்கு மிக்க அறிவுத் திறத்தை வெளிப்படுத்தக்கூடிய நூலொன்றை இயற்றும் திறன் இருந்திருக்க வழியில்லை என்ற கருத்தில் மக்களைச் சாதி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் கோணத்தில் உருவான சிந்தனையன்றி வேறில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கிவிட மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டுப் புனைவுகளை உருவாக்கினர் என்பது ஒரு கசப்பான உண்மை.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார் என்கிறார் நூலாசிரியர் சன்னா.

முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.

இருப்பினும், இக்கதைகளுக்கும் மூலக்கதைகளை வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன, அவை பின்னர் மெக்கன்சி ஆவணங்களின் தொகுப்பில் இடம் பிடித்தவை என்கிறார் நூலாசிரியர். அக்கதைகள் இராம அவதாரம் வரை கற்பனைகளை நீட்டிச் செல்பவை என அறிய நேர்கையில், உண்மையிலேயே மக்களின் மிதமிஞ்சிய கற்பனைத் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணப் பகுதி காட்டும் கதை (1772), விசாகப்பெருமாள் ஐயர் (1831), சரவணப் பெருமாள் ஐயர் (1837), வேதகிரி முதலியார் (1850) காட்டிய பதிப்புக் கதைகளை மேலதிகத் தகவலாகப் பின்னிணைப்பாக நூலில் கொடுத்துள்ளார் கௌதம சன்னா. உருவாக்கப்பட்ட ஒரு கதை ஒவ்வொரு முறையும் வளர்ந்து பல துணை கதைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடையும் இந்தக் கதைகள் வளரும் முறையானது, புராணக் கதைகள் உருவாகிப் பல்கிப் பெருகி வளர்ந்த விதம் குறித்து ஆய்வோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு கருவூலம். மேலும் இத்துறையில் ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு உதவும் பகுதி இது. புனைவுகளின் நோக்கம் வழியே அக்கால மக்களின் சிந்தனை ஓட்டத்தையும், அவர்கள் சிந்தனை மீது சமூகம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் எடைபோடலாம்.

இவற்றில் சிலவற்றில் ஆதி பார்ப்பனக் குடும்பத்துப் பெண் என்ற கோணங்களும் உண்டு. இக்காலத் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று, பிரிந்து போன குடும்பத்தினர் தங்களின் குடும்பப் பாடலைப் பாடி தொலைந்து போனவரைத் தேடிப் பிடிக்கும் முறையில் கூட ஒரு கதை இருந்திருக்கிறது (பக்கம்-58, 118) என்பதும் படிக்கும் பொழுதே புன்முறுவலை வரவழைக்கும் ஒரு வேடிக்கை. கடவுளர் ஒருவர் மீது ஒருவர் சாபம் விட்டுக் கொண்டு பூமியில் பிறப்பது முதற்கொண்டு இக்கதைகளில் புராணப் புனைவு இலக்கணங்கள் எவையும் விட்டுவைக்கப் படவில்லை.   இவற்றுடன் ‘கபிலர் அகவல்’ பாடலையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம்.

பின்னிணைப்புகள் காட்டும் அனைத்து திருவள்ளுவர் வரலாற்றுப் புனைவுகளுக்கும் மூலக்கதை ‘கபிலர் அகவல்’ என்றே இருந்திருக்க வாய்ப்புண்டு (பார்க்க – கபிலக்கல், குடவாயில் பாலசுப்பிரமணியன்). சோழர், பாண்டியர் ஆட்சிகள் தமிழகத்தில் சரிந்த 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சாதிச் சண்டைகள் கட்டுக்கடங்காமல் உச்சக்கட்டத்திற்குப் போன ஒரு காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் சாதிகளைக் குறிப்பிட்டவாறே எழுதப்பட்டது வழக்கமானது. எடுத்துக்காட்டாக காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம். இப்போக்கைக் கட்டுப்படுத்த எண்ணி பேதங்களைச் சாடும் உள்ளம் கொண்டோரும் அக்காலத்திலிருந்துள்ளனர். எல்லா சாதியிலுள்ளோரையும் மனிதர்கள் தான் எனக் காட்ட இக்காலகட்டத்தில் எழுந்த நூல்கள் பெரிய புராணம், கபிலர் அகவல் போன்றவை.

கபிலர் அகவலில் சங்கப்புலவர்கள், சங்ககால மாந்தர்களை உள்ளடக்கி அறிவுக்குச் சாதி பேதமில்லை எனக்காட்ட வள்ளுவர், கபிலர், ஔவையார், அதியமான், உப்பை, உருவை, வள்ளி என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அவர்கள் பெற்றோரே பறையரும்-பார்ப்பனரும் கலப்பு மணம் செய்தோர்தான் எனக் காட்ட ஒரு புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனைவில் பெற்றோர் பெயர் தேர்வுக்கு ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற குறளின் வரியே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. இப்பிள்ளைகள் எழுவரும் வள்ளுவர், பார்ப்பனர் (கபிலர்), பாணர் (ஔவை), வேளிர் (அதியமான்) எனக் கொடுக்கப்படும் குலப்பிரிவுகள் யாவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடும் உண்மைச் செய்திகள்தான். மனிதர்கள் எவ்விடத்தில் வளர்க்கப்பட்டாலும் மேன்மையானவர்களே என்று காட்டும் ஒரு முயற்சியே கபிலர் அகவல் பாடல் உருவான நோக்கம். “தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்” என குடவாயிலாரும் தம் கட்டுரையில் குறிப்பிடுவார். அவ்வாறுதான் பெரியபுராணமும் அனைத்துக் குலத்தில் பிறந்தோரையும் கடவுளின் அன்பர்களாக உயர்த்திக் காட்ட முயலும். ஆனால் நம் மக்கள் படிப்பதில் கொள்ள வேண்டிய கருத்தைக் கொள்வார் இல்லை என்பதுதான் நடைமுறை வழக்கு.

கபிலர் அகவல் கொடுத்த செய்திகளையே சான்றாக வைத்து மேலும் மேலும் சாதி கதைகளை எழுதி வள்ளுவர் மேல் திணித்தார்கள். ஆக, இக்கதைகள் “கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்” என்று குடவாயிலார் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இக்கதைகளையே நூல் வெளியிட்ட விசாகப்பெருமாள் ஐயர், அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர், வேதகிரி முதலியார் போன்றோர் தாம் ஆற்றும் இலக்கியப் பணியாக நினைத்து தாங்கள் வெளியிட்ட திருக்குறள் நூல்களில், தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி இணைத்து விட்டிருக்கின்றனர். இவையாவும் மக்கள் அறிந்து அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் புழங்கிக் கொண்டிருந்த வள்ளுவரின் பிறப்பு வரலாற்றுப் புனைவுகள்தாம். வைதீக சமயம் இதுபோன்ற கற்பனைக் கதைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்போராகவே பக்தி என்ற பெயரில் தமிழரின் அறிவை மழுங்கடித்து வைத்திருந்தது, இன்றும் வைத்திருக்கிறது.

வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.

திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி’ என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். 'சிலசாசனத் தியான பஞ்சரத்தினப்பா' என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.

வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.

சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோ அல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).

இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?
- பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:
திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசரின்  ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே கூட ஆய்வாளர்களால்  மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).

வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.

மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.

அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.

அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.


---
நூல் குறிப்பு:
நூல்: திருவள்ளுவர் யார் ?
கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்
ஆசிரியர்: கௌதம சன்னா
முதற்பதிப்பு – டிசம்பர் 2019
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு
விலை: ரூ.180/-
---

நன்றி: சிறகு, பிப்ரவரி  1, 2020
திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?
http://siragu.com/திருவள்ளுவர்-யார்-அவரது/


#சிறகு, #திருக்குறள்,  #நூல் மதிப்புரை, #Themozhi     

Wednesday, August 26, 2015

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை




‘லேஸ்லோ க்ரேசேஹார்க்கை’ (László Krasznahorkai) என்ற ‘ஹங்கேரிய மொழி’ (Hungarian) எழுத்தாளர் சிறந்த இலக்கியப் படைப்பாளருக்கான 2015 ஆண்டின் ‘மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு’ (Man Booker International Prize) பரிசினைப் பெற்றுள்ளார்.

ஹங்கேரியைச் சேர்ந்த 61 வயதாகும் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, சமூகத்தின் இருண்ட பகுதியை, ஆழ்ந்த தீவிரமான முறையில் விவரிக்கும் புனைகதைகளின் மூலமும், மாறுபட்ட எழுத்து நடையின் மூலமும் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர். இவருடைய படைப்புகள் ‘பின் நவீனத்துவம்’ பிரிவில் அடங்குவன. இவரது புகழ்பெற்ற கதைகள் சில ஹங்கேரிய மொழியில் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

‘ஷத்தன்டங்கோ’ (Satantango), ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ (The Melancholy of Resistance) ஆகிய இரு நூல்களும் அவ்வகையில் திரைப்படங்களாக வெளிவந்தவற்றில் குறிப்பிடத்தக்கன. இவரது நூல்களில் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியப் பங்களிப்பிற்காக இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றவர் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை. அவற்றில் ‘காசத் பரிசு’ (Kossuth Prize), ‘வெலேனிக்கா பரிசு’ (Vilenica Prize) ஆகியவையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் புதினமான ஷத்தன்டங்கோ மூலமே இவர் முன்னணி எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பிடித்தவர்.

மான் புக்கர் இண்டர்நேஷனல் பரிசு என்பது உலகளாவிய முறையில், ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரது கற்பனையில் உருவான சொந்தப் படைப்புகள், உலக புத்திலக்கியத்தில் ஆற்றிய பங்கினைப் பாராட்டி வழங்கப்படுகிறது. வாழும் எழுத்தாளர் ஒருவரின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் இப்பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

எழுத்தாளரின் பரிசுக்குரிய தகுதி பற்றி ஆராய பரிசுக் குழுவின் நடுவர்களே படைப்பாளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், பிறருடைய பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது இப்பரிசுக்காக நடத்தப்படும் போட்டியின் விதி. எழுத்தாளரின் இலக்கியத்திற்கான தொடர் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் பரிசு என்பதால் இதைக் குறிப்பிட்ட ஒருநூலுக்கான பரிசு என்பதைவிட எழுத்தாளரின் தொடர்ந்த இலக்கியப் பணி பாராட்டப்படுகிறது என்ற வகையில் இப்பரிசு அமைகிறது.

மான் புக்கர் இண்டர்நேஷனல் பரிசு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் பரிசு பெற்றவர் அல்பேனியா எழுத்தாளர் ‘இஸ்மாயில் கடரே’ (Ismail Kadare), இவரது அல்பேனிய மொழி இலக்கியங்களுக்காகப் பாராட்டப்பட்டார். இப்பொழுது ஆறாவது விருதாளராக லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, ஹங்கேரி மொழியில் படைத்த இலக்கியங்களுக்காக இப்பரிசைப் பெற்றுள்ளார். பரிசுபெற்ற ஏனைய எழுத்தாளர்கள் கனடா, அமெரிக்கா, நைஜீரியா என்ற பலநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்கள் படைத்த ஆங்கில இலக்கியங்களுக்காகப் பரிசு பெற்றனர்.

இப்பரிசுத் தொகையின் மதிப்பு 60,000 பிரித்தானிய வெள்ளிகள், எழுத்தாளர் வாழ்நாளில் ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்படுவார். நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கும் 15,000 பிரித்தானிய வெள்ளிகள் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் பரிசுக்காகக் கருதப்பட்ட எழுத்தாளர்களில் ‘அமிதவ் கோஷ்’ (Amitav Ghosh) என்ற இந்திய எழுத்தாளரும் அடங்குவார்.
[குறிப்பு: ‘மான் புக்கர் புனைகதை விருது’ (Man Booker Prize for Fiction) என்னும் வேறோர் விருதை, இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் (The God of Small Things), கிரண் தேசாய் (The Inheritance of Loss), அரவிந்த் அடிகா (The White Tiger) ஆகியோர் வென்றுள்ளனர்.]

ஷத்தன்டங்கோ (Satantango), தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் (The Melancholy of Resistance), வார் அண்ட் வார் (War & War), செய்போ தெர பெல்லோ (Seiobo There Below), அனிமல் இன்சைட் (Animal inside), எசர்கோர்ல் ஹேக் தெரல் தொ, நியூகத்ரோல் உத்தக், கெலத்ரோல் ஃபால்யோ (Északról hegy, Délről tó, Nyugatról utak, Keletről folyó), தி பில ஃபார் பால்மா வெச்சியோ அட் வெனிஸ் (The Bill: For Palma Vecchio, at Venice), அஸ் உட்ல்லுசோ ஃபார்க்கஸ் (Az utolsó farkas), மியுசிக் அண்ட் லிட்டரேச்சர், இஷ்யு (Music & Literature: Issue 2), அஸ் உர்கை ஃபோகொலி (Az urgai fogoly) ஆகிய நூல்களை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர்கள் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) மற்றும் ‘ஒத்திலியே மொசாட்’ (Ottilie Mulzet) ஆகியோர். மான் புக்கர் இண்டர்நேஷனல் வழங்கிய மொழிபெயர்ப்பாளருக்கான பரிசுத் தொகையை இவரது இந்த இரு மொழி பெயர்ப்பாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ அல்லது ‘எதிர்ப்பினால் விளையும் துயரம்’ என்ற பொருள்படும் புதினம் பற்றி சற்றே விரிவான முறையில் இக்கட்டுரையில் காணலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கை அவர்கள் ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ (The Melancholy of Resistance) என்ற புனைகதைப் புதினத்தை , 1989 ஆம் ஆண்டு ‘ஏஸி எல்லானலாஸ் மெலன்காலியஹா’ (Az ellenállás melankóliája) என்ற தலைப்பில் ஹங்கேரிய மொழியில் வெளியிட்டார். இந்நூல் ஆங்கிலத்தில் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், இந்தப் புதினம் ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனியாக்’ (Werckmeister harmóniák) என்று ஹங்கேரிய மொழியிலும், ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ்’ (Werckmeister Harmonies) என்ற ஆங்கிலத் தலைப்பில், புகழ் பெற்ற இயக்குநர் ‘பெலா டார்’ (Béla Tarr) இயக்கத்திலும் தயாரிப்பிலும் 2001ஆம் ஆண்டு ஹங்கேரிய மொழித் திரைப்படமாக வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது.

அப்படத்தின் திரைக்கதையை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, இயக்குநர் பெலா டார் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ் என்பது தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் புதினத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு. அது இசை மேதை ‘ஆண்ட்ரியஸ் வெர்க்மெய்ஸ்ட்டர்’ (Andreas Werckmeister) அவர்களின் இசைக் கோட்பாடானது, சுருதிபேதங்கள் என்பவை இசையின் ஒரு பகுதி என்று வரையறுப்பது போல, மக்களிலும் குறையற்றவர்கள் இருப்பது கிடையாது என்ற தத்துவ நோக்கை அடிப்படைக் கருத்தாகக் கொண்டது. வாழ்வில் இடர்கள் வந்து செல்வதை, “இது கடந்து சென்றது, ஆனால் முற்றிலும் மறையவில்லை” (“It passes, but it does not pass away”) என்று; இடர் நமக்கு வந்தது முடிந்துவிட்டது, ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் வாழ்க்கை அமைந்துள்ளது என்ற தத்துவத்தை நூலின் முதலில் வரும் சொற்றொடர் நூலைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறது.

இந்த நூல் பொழுது போக்காகப் படித்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு நூலல்ல; ஆழ்ந்து படிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கருத்துகள் கொண்ட ஒரு கற்பனைப் புதினம். கதைக்களம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் பிடியில் அகப்பட்ட ஹங்கேரியின் நிலையை மறைமுகமாக உணர்த்தும் உருவக நோக்கில் அமைக்கப்பட்டது எனவும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கதை நடைபெறுவதாக நகரத்தின் இடக்குறிப்புகள் கூறுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், கதையின் காலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இரயில் பயணம் என இக்கால வசதிகள் யாவும் பரவலாகிவிட்ட பிற்கால நிகழ்வுகளைக் கொண்டுள்ளதுடன், கதை நிகழும் இடம் ஹங்கேரியின் சிறிய நகரொன்று என்றுதான் காட்டப்படுகிறது. ஆனால் கதையின் எந்த ஓர் இடத்திலும் நகரின் பெயர் கொடுக்கப்படவில்லை. கிழக்கு ஐரோப்பாவின் அரசியலையும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த நூல் தருகிறது என்பது இதன் சிறப்பு.

இந்த நூலில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள ஒன்று எழுத்தாளரின் எழுத்தின் நடையாகும். முக்கியமாக இவரது எழுத்து நடை அனைவரும் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. எழுத்து வழியாக ஒரு கருத்து வாசிப்பவரை எளிதில் சென்றடையத் தேவையானால் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இந்த வரைமுறைகள் கட்டாயம் அல்ல என்றாலும் அது வாசிப்பவரை எழுத்தை நோக்கி ஈர்க்கும் வகையில், புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க விரும்பும் வகையில் அமைந்திருப்பது எழுத்தாளரின் எழுத்துப் பரவலுக்கு உதவும். எழுத்து நடை சுஜாதா போலவும் இருக்கலாம் அல்லது சாண்டில்யன் போலவும் இருக்கலாம், அது எழுத்தாளரின் தனித்தன்மையைக் காட்டும். அவர்கள் கூறும் கருத்தும் வரலாறாகவும் இருக்கலாம் அல்லது மர்மக் கதையாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கியங்கள் மிகவும் எளிமையாக, சிறு சிறு வரிகளாக, ஒவ்வொரு கருத்தும் தனித் தனியே பத்தி பிரிக்கப்பட்டு அமைப்பது வாசகரைக் கவரும் எழுத்தின் அடிப்படைப் பண்பு. இந்த அடிப்படை எதிர்பார்ப்பை முற்றிலும் தகர்த்து எறிகிறது லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடை.

இக்கதையில் ஒரு பக்கத்தில் தொடங்கும் வரி அடுத்த பக்கத்திலும் முடியலாம், அல்லது அதற்கும் அடுத்த பக்கத்திலும் கூட முடியலாம். குறைந்தது 300 வார்த்தைகளுக்குப் பின்னரே ஒரு வாக்கியம் முடிவடைகிறது. வரிகளில் பல காற்புள்ளிகளைக் கொண்டே பல வாக்கியங்களாக எழுதக் கூடிய செய்தியை ஒரே வாக்கியமாக எழுதும் உத்தியைக் கடைப் பிடித்துள்ளார் ஆசிரியர். அதற்கேற்பக் காற்புள்ளிகளை முற்றுப் புள்ளிகளாக மதித்துப் படிக்கும் வகையில் நம்மை மாற்றிக் கொண்டால் படிப்பது எளிதாகிவிடுகிறது. பத்தி என்பதே இல்லாத நூல் இருக்கலாம் என்பதையும் எழுத்தாளரின் எழுத்துமுறை காட்டுகிறது. இதை அப்படியே அவர் நடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் திறமைதான் மிகவும் பாராட்டிற்குரியது.

எழுத்தாளரின் வார்த்தைகளின் தேர்வு பாத்திரங்களின் மனநிலையையும், குணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைவதுடன், சூழ்நிலையைக் கண்முன் நிறுத்தும் சரியான வகையில் அமைவதால் நாமும் கதைக் களத்தில் ஒருவராக மாறிவிடும் தோற்றத்தை உருவாக்குகிறது. இவரது வார்த்தைகளைத் தொடர்ந்து வாசிப்பது ஓர் இசை போலக் கூட அமைந்திருக்கிறது, இதனை உரத்து வாசிக்கும் பொழுதோ அல்லது பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்கும் பொழுதோ உணரலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடையில் கருத்தைக் கவரும் மற்றொன்று, அவர் பல இடங்களில் வாக்கியங்களைத் தமிழில் நாம் ‘அந்தாதி’ என்று கூறும் வகை போல அமைத்திருக்கும் முறை. ஒரு வாக்கியத்தின் முடிவு அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக அமையுமாறு பல இடங்களில் எழுதியுள்ளார்.
காட்டாக, கீழ்வரும் வரிகளைக் கருத்தில் கொள்ளலாம்…
“at which point he took a tight grip of Valuska’s arm and continued on his way. He continued on his way, having decided that Valuska …”
மற்றும்,
“he had nevertheless to acknowledge that Mrs Harrer’s chattering had not been entirely beside the point. Not entirely beside the point, that was true …”
தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் கதை ஒரு நவம்பர் 30 ஆம் தேதி மாலை, அதிகக் குளிர் நிறைந்த நாளொன்றில் தொடங்கி, அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சிறுநகரையும், அங்கு மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்ட சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் நூற்றுக்கணக்கான முரடர்களையும், அவர்களில் முப்பதுக்கும் சொச்சமான கேடிகளின் கைகளில் நகரம் சின்னாபின்னம் அடைவதையும் சித்தரிக்கிறது. சர்க்கஸ் நிகழ்த்துவோர் பாடம் செய்யப்பட்ட மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்றை மிகப் பெரிய ட்ரக் ஒன்றில் காட்சிப் பொருளாக வைத்துக் கட்டணம் வசூலித்து மக்களைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதைத் தவிர்த்து வேறு வித்தைகள் எதுவும் நடத்தவில்லை, அல்லது வித்தைக் காட்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும் முன்னர் நிலைமை மாறிவிட்டதா என ஆசிரியர் குறிப்பிடவும் இல்லை. திமிங்கிலத்தை மட்டுமே டிசம்பர் முதல்நாள் அன்று சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கிறது.

இதற்கிடையில் நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களில் சிலர் உணர்ந்துவிடுவதால் அச்செய்தி வதந்தி போல நகரத்திலும் பரவத் தொடங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு அந்தச் சிறிய நகர், முரடர் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி நகர மக்களில் பலரும் உயிரையும் உடமைகளையும் இழக்கிறார்கள். அழிவுக்குக் காரணமான போக்கிரிகள் சிலரும் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதன் பிறகு, இரண்டு வாரம் கடந்த பின்னர் நகரின் நிலையில் ஏற்பட்ட மாற்றம், கதையின் இறுதியில் மிகச் சுருக்கமாகப் பின்னுரை பகுதியில் சொல்லப்படுகிறது. கலவரத்திற்கு முன்னர் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்ட முன்னுரையாக வரும் முதல் அத்தியாயப் பகுதி ஒரு சிறு கதை போலவும், கலவரத்தின் பின்விளைவுகள் ஒரு சிறு தனிக்கதை போலவும் தோற்றம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது.

நவம்பர் மாதத்தின் இறுதி நாளிலும், டிசம்பரின் முதல் இரண்டு நாட்களில் நகரில் நடைபெறும் கலவரத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நகர மக்களில் யார் யாரை எவ்விதம் பாதிக்கிறது, பிறகு அவர்கள் நிலை என்னவாகிறது என்பதையே கதை சித்தரிக்கிறது. கதையில் பல நகர மாந்தர்கள் குறிப்பிடப்பட்டாலும் கதையின் முக்கியமான பாத்திரம் என்பது, பதவியையும் அதிகாரத்தையும் அடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் “மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர்” (Mrs. Tünde Eszter) என்ற 52 வயதுப் பெண்மணியா; அல்லது நகரில் நடக்கும் அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டும், முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கும், வயதிற்கேற்ற மனமுதிர்ச்சியற்று, தன்னுடைய கனவுலகில் காலத்தைத் தள்ளிவரும், நல்ல மனதுடைய அப்பாவி 35 வயது இளைஞன் “யானோஸ் வலஸ்க்கா ஜூனியர்” (János Valuska, Jr.) என்பவனா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவில் இருவரைச் சுற்றியுமே கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள்:
மிஸ்ஸஸ் யோஃசெப் பிலஃப் (Mrs. József Plauff) – மிஸ்ஸஸ் பிலஃப் என்று அழைக்கப்படும் இவர் கதாநாயகன் யானோஸ் வலஸ்க்காவின் தாயார். வலஸ்க்காவின் தந்தையான யானோஸ் வலஸ்க்கா சீனியர் என்பவரை மணந்து, அவர் இறந்த பிறகு மற்றொருவரை மணந்து அவரும் இதயநோயால் இறந்த பிறகு, மகன் வலஸ்க்காவை 27 வயது வரை பராமரித்தவர் இத்தாய். அவன் பொறுப்பற்றவனாகத் தனக்கு அவமானம் தரும் வகையில் நடப்பதாலும், குடிகாரனாக இருப்பதாலும் அவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டுத் தனிமையில் வாழ்கிறார். தனது துயரை மறக்கத் தோட்டம், வீட்டு அலங்காரம் என எதை எதையோ செய்து பார்த்தும் அவை எதுவுமே உதவாமல், மகன் தந்த ஏமாற்றத்தால் நிம்மதி இழந்து வாழ்க்கையைக் கடத்தும் 58 வயதுப் பெண்மணி இவர்.

யானோஸ் வலஸ்க்கா ஜூனியர் (János Valuska, Jr.) – இவனது வாழ்க்கை நிலை இவனது தாய் மிஸ்ஸஸ் பிலஃப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இவன் தன்னைப் பொறுத்தவரை அதைப்பற்றிய கவலையற்றவன். சூரிய மண்டலம், நிலா, வானம், சூரியன், சூரியகிரகணம் போன்றவற்றில் அதிகப்படியான ஆர்வம் கொண்டவன். தான் இரவில் மது அருந்தச் செல்லும் மதுபான விடுதியில் தனக்கென இருக்கும் நண்பர்களான ஓட்டுநர், நாவிதர், சமையல்காரர் போன்ற உழைப்பாளர் கூட்டத்திற்காக அவர்களையே நடிக்க வைத்து தினம் தினம் சூரியகிரகணத்தைச் செயல்முறையில் விளக்குபவன். பகல் பொழுதில் அஞ்சல் அலுவலக ஊழியனாகப் பணியாற்றி, தனது தோளில் என்றும் நிரந்தரமாகத் தொங்கும் பையில் நாளிதழ்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி செய்பவன். எதைப் பற்றியும் கவலையற்றவன், யாரையும் நம்புபவன், எவருடைய உள்நோக்கத்தையும் அறியும் திறனற்றவன்.

விவாகரத்து இன்றி பிரிந்து வாழும் எஸ்ட்டெர் தம்பதிகளிடையே இணைப்புப் பாலமாக இருந்து இருவருக்கும் உதவுபவன். தனிமையில் உடல்நலமற்று வாழும் முதியவர் மிஸ்டர் எஸ்ட்டெருக்கு உணவு கொண்டு வருவது, அவர் மனபாரத்தைக் குறைக்கப் பேச்சுத் துணையாக இருப்பது போன்றவை வலஸ்க்காவின் தினசரி நடவடிக்கைகள்.

பலர் வலஸ்க்காவை முட்டாள் என்று நினைக்க விரும்பினாலும், அவன் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வலஸ்க்காவைத் தனது உற்ற தோழனாக நினைக்கும் மிஸ்டர் எஸ்ட்டெர் மட்டும், அப்பாவியாக இருக்கும் அவன் ‘அரிய அழியக்கூடிய நிலையில் உள்ள வண்ணத்துப் பூச்சி ஒன்று தீப்பிடித்த காட்டில் பறக்கும் போது காணாது போவது’ (‘Like a rare endangered butterfly lost in flight in a burning forest …’) போன்ற பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பவன் என்று எண்ணுபவர்.

மிஸ்டர் கையோர்கி எஸ்ட்டெர் (Mr. György Eszter) – காரியவாதியான மனைவி மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். இசைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு வீட்டில் எடுபிடியாக உதவி செய்யும் மிஸ்ஸஸ் ஹாரர், வலஸ்க்கா ஆகியோர் துணையுடன் காலத்தைக் கழிப்பவர். கலவரத்தில் வலஸ்க்கா காணாமல் போன பிறகு அவனுக்காக மிகவும் கவலைப்பட்டு அலைகிறார்.

மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர் (Mrs. Tünde Eszter) – தன்னம்பிக்கையையும் துணிச்சலும் கொண்ட பெண்மணி இவள். பிறர் அழிவில் தன்னை உயர்த்திக் கொள்பவள், கதையின் போக்கின்படி மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் எந்த வகையிலும் மிஸ்டர் எஸ்ட்டெர்ரைத் துன்புறுத்தியதாகக் காட்டப்படவில்லை. மாறாக, கிறுக்குப் பிடித்தவர் போலச் சமயத்தில் கணவர் நடந்து கொண்டாலும், தானுண்டு தனது இசையுண்டு என்று துறவி போல வாழும் கணவரை; சமூகத்தில் மதிப்புடன் வாழும் (someone who was an idol of the educated public, … man generally regarded as an eccentric hermit living in absolute isolation) ஒரு பெரிய மனிதரான மிஸ்டர் எஸ்ட்டெரை விவாகரத்து செய்யவில்லை மிஸ்ஸஸ் எஸ்ட்டெர். தன்னை, தனது உறவை அவமதித்த கணவரை மிகவும் வெறுத்தாலும், அவருடன் இருக்கும் உறவை வெட்டாமல் இருப்பது தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இவளது எண்ணம்.

நகரத்தின் காவல்துறைத் தலைவருடன் காதல் உறவு கொண்டு அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவரது உதவியுடன் நகரசபையின் “தூய்மை மற்றும் துப்புரவு திட்டத்தின்”(A TIDY YARD, AN ORDERLY HOUSE) ஒன்றின் பிரதிநிதியாகவும், நகர கவுன்சிலின் மகளிர் குழுவின் தலைவியாகவும் பதவி பெறுகிறாள். இதனால் டவுன்ஹாலில் நுழைந்து, சமயம் வரும்பொழுது நகரசபையின் முக்கியப்பதவி ஒன்றை அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவும், பதவியை அடையவும் திட்டம் போட்டுக் காய்களை நகர்த்தி, வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேராசை கொண்ட அரசியல்வாதி இந்த மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

கதையில் வரும் அனைத்து மாந்தர்களையுமே தன்னல நோக்குடன் தனது காரியத்தைச் சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் ஒவ்வொருவரையும் எதனால் வீழ்த்த முடியுமோ, அல்லது விலைக்கு வாங்க முடியுமோ அதைக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்பவள். வலஸ்க்காவின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். சர்க்கஸ் நிகழ்ச்சியால் நகருக்குள் கலவரம் ஏற்படும் பொழுது நகர மேயர் முதல் கொண்டு கலவரம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது, அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதிலேயே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் குறியாக இருக்கிறாள். மோசமான சூழ்நிலையையும், தடைகளையும் நம்பிக்கையுடன் தனது உயர்வுக்குத் தனது திட்டத்திற்குப் பயன்படுத்துவதில் குறியாக இருப்பதும், தக்கச் சமயத்தில் ராணுவத்தினருக்கு நகரின் நிலையை விளக்கும் பொறுப்பை வலிந்து ஏற்று நகரத்தின் கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எதிர்த்து நிற்க உதவும் பாங்கும் (leader of the resistance) இவளது வியக்க வைக்கும் நடவடிக்கைகள். அதனால் நகர சபையினர், இவளைப் போலத் தலைவர் ஒருவர் நகருக்குத் தேவை என எண்ணி நகர கவுன்சிலின் செயலாளர் பதவியை வழங்கி, ‘மேடம் செகரட்டரி’ என்று மரியாதையுடன் அழைக்கும் நிலையை அடைகிறாள்.

தன்னலவாதியாக இருந்தாலும் தனக்கு வலது கை போல உதவும் மிஸ்டர் ஹாரருக்கு நகரசபையில் ஒரு பணிக்கு ஏற்பாடு செய்ய முயல்வதும், தவறாகக் கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளும் தனது மற்றொரு உதவியாளனான வலஸ்க்கா குற்றங்கள் செய்யத் திறனற்றவன் என இராணுவ அதிகாரிக்கு எடுத்துக் கூறி அவன் கொல்லப்படாமல் தடுத்து, அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்வதும், திறமையுடன் தன்னை வெளியேற்றிய கணவரின் வீட்டிலேயே மீண்டும் சமயம் பார்த்து நுழைந்து விடும் திறமை எனக் கனக்கச்சிதமாகச் செயலாற்றும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் பாத்திரப்படைப்பு வலஸ்க்காவை விடக் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் (Mr. and Mrs. Harrer) – இத்தம்பதிகளின் வீட்டின் பின்னறை ஒன்றில்தான் வலஸ்க்கா வசிக்கிறான். மிஸ்டர் ஹாரர் ஊரின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர், கற்தச்சர், மிகப்பெரும் குடிகாரர். மிஸ்ஸஸ் பிலஃப், வலஸ்க்கா ஜூனியர், மிஸ்டர், மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்; மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் ஆகிய இந்த முக்கியமான ஆறு பாத்திரங்களின் மூலமே கதையைச் சொல்லிச் செல்கிறார் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை.

கதையின் சுருக்கம்:
கதை தொடங்கும் முதல்நாள் மாலையில் மிஸ்ஸஸ் பிலஃப் நடமாட இயலாத தனது சகோதரிகளைச் சந்தித்துவிட்டு இரயிலில் வீடு திரும்புகிறார். தாமதமாக வந்து சேரும் இரயிலினால் வீடு செல்லும் கடைசிப் பேருந்தையும் தவறவிட நேருகிறது. என்றும் இல்லாதவகையில் நகர் இருளில் வேறு மூழ்குகிறது. அச்சத்துடன் அவசர அவசரமாக அவர் வீடுதிரும்பும் வழியில் மறுநாள் நகரில் நடைபெறப்போகும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்காகப் பெரிய ட்ரக் ஒன்று வருவதையும், ஊருக்குப் புதியவர்களான முரடர் கூட்டம் சாலைகளில் குழுமுவதையும், அவர்களில் ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடுவதையும் காணுகிறார். அவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவரைச் சந்திக்க வரும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது உதவியாளனான மிஸ்ஸஸ் பிலஃப்பின் மகன் வலஸ்க்காவை தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் தனது கணவரிடம் உதவி கோரி அனுப்பப் போவதாகச் சொல்லி மிஸ்ஸஸ் பிலஃப்பின் கருத்தை அறிய விரும்புகிறாள். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் மீது நன்மதிப்பு கொண்டிராத மிஸ்ஸஸ் பிலஃப் அவளிடம் பட்டும்படாமல் பேசி அவளை வெளியேற்றிவிடுகிறார்.

மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் தனது வீட்டிற்குத் திரும்பி அவளது காதலரான நகரக் காவல்துறை அதிகாரிக்காகக் காத்திருக்கிறார். பெரும் குடிகாரரான காவல்துறைத் தலைவர் வந்து அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். சர்க்கஸ் நிறுவனம் எங்குச் சென்றாலும் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தொல்லை தரும் முரடர் கூட்டம் இந்த ஊருக்கும் வந்துவிட்டதால், அடுத்தநாள் நிகழவிருக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலவரம் நிகழலாம் என எதிர்பார்க்கும் சர்க்கஸ் நிறுவனம் காவல்துறையின் பாதுகாப்பைக் கோருவதாகக் கூறிச் செல்கிறார். கலவரம் நடந்தால் அதனைத் தனக்குச் சாதகமாக்கும் வகையில் திட்டமிடுகிறது மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் மனம். அடுத்தநாள் பிரிந்துவாழும் தனது கணவரின் வீட்டில் குடியேற எண்ணி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறாள்.

இதற்கிடையில் வலஸ்க்கா மதுபான விடுதியில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு விடியப்போகும் நேரத்தில் வீடு திரும்புகிறான். வழியில் சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பாடம் செய்த திமிங்கிலத்தை ஆர்வத்துடன் பார்க்கிறான். தனக்காக மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனது வீட்டில் வழக்கமாகச் சந்திக்க வரும் நேரம் கடந்துவிட்டது நினைவு வந்து அவசரமாகத் தனது வீட்டிற்குச் செல்கிறான். அவனுக்காக அங்குக் காத்திருந்து, தனது கணவரின் துவைத்த துணிகளை அவரிடம் ஒப்படைக்கக் கொடுக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது கணவரைத் தனது திட்டத்திற்கு உதவும் வகையில் அவரது நண்பர்களிடம் பேசச் சொல்லி உதவி கோரும் கடிதத்தையும் கொடுக்கிறாள். கடிதத்தை மிஸ்டர் எஸ்ட்டெரிடம் சேர்ப்பிக்கிறான் வலஸ்க்கா.

வலஸ்க்கா உண்மையை அறிந்திருப்பான் என யூகிக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனைத் திசை திருப்பக் காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளைக் கவனித்துவிட்டு அவனது வழக்கமான வேலைகளுக்குத் திரும்பச் சொல்கிறாள். இடையில் நகரே குலுங்கும் வண்ணம் பெரிய ஓசைகள் எழுகின்றன. மிஸ்டர் எஸ்ட்டெர் பற்றிய கவலையுடன் வெளியேறுகிறான் வலஸ்க்கா. மிஸ்டர் எஸ்ட்டெர் தனது நண்பர்களுடன் கொண்ட உரையாடல்களால் எச்சரிக்கை அடைந்து, பாதுகாப்பிற்காக ஜன்னல்களை மரப்பலகைகள் வைத்து மறைத்துவிட்டு வலஸ்க்காவிற்காகக் காத்திருக்கும் வேலையில் அசதியால் உறங்கிவிடுகிறார். அவரை சந்திக்க வரும் வலஸ்க்கா முரடர்கள் கையில் மாட்டிக் கொள்கிறான். அவனையும் இழுத்துக் கொண்டு செல்லும் முரடர் கூட்டம் ஊரில் உள்ள திரையரங்கம், அஞ்சல் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை இரும்புத் தடிகொண்டு நொறுக்குகிறது, கார்களைக் கவிழ்க்கிறது, அகப்படும் மக்களைக் கொலை செய்கிறது. முப்பது பேர் கொண்ட முரட்டுக் கூட்டத்தை, நகரின் காவல்துறை சரியான தலைமை இல்லாத காரணத்தால் தடுக்கமுடியாமல் போகிறது. முரடர் கூட்டம் கலைந்து செல்லும்பொழுது அசதியில் இருக்கும் வலஸ்க்காவை தனியே விட்டுவிட்டுப் போய் விடுகிறது. இராணுவம் உதவிக்கு வரவழைக்கப்படுகிறது. அவர்களிடம் கலவரக்காரர்களின் குறிப்புக்கள் கொடுக்கப்படும் பொழுது வலஸ்க்கா பற்றிய குறிப்பும் அதில் மாட்டிக் கொள்கிறது.

மிஸ்டர் ஹாரர் வீடு திரும்பி, முரடர்களின் வன்முறையால் தாக்கப்பட்டுச் சேதமடைந்திருந்த தனது வீட்டில் அச்சத்துடன் இருக்கும் மனைவியிடம் வலஸ்க்கா பற்றிக் கூறி மிஸ்டர் எஸ்ட்டெருக்கு தகவல் கொடுக்க அனுப்பிவிட்டு, மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் கொடுத்த ஆலோசனைப்படி வலஸ்க்காவைச் சந்தித்து ஊரைவிட்டு ஓடி மறைந்து வாழ எச்சரிக்கச் செல்கிறார். இரயிலடியில் அவனைச் சந்தித்து எச்சரிக்கிறார். மிஸ்ஸஸ் ஹாரர் மூலம் வலஸ்க்கா பற்றிய தகவல் அறிந்து மிஸ்டர் எஸ்ட்டெர் வலஸ்க்காவைக் காப்பாற்ற, இராணுவத்திடம் முறையிட நகரசபைக்கு ஓடுகிறார். வழியில் முதல் நாளிரவு கலவரத்தில் உயிரிழந்தவர்களில் வலஸ்க்காவின் தாயும் ஒருவர் எனத் தெரிகிறது.

இராணுவம் வந்தபொழுது அச்சத்தில் இருந்த மேயரும், போதையில் இருந்த காவல்துறை அதிகாரியும் செயலிழந்த நிலையில் இருக்க மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், சூழ்நிலையைத் தனது கையில் எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு உதவும் வகையில் தகவல்கள் கொடுத்து உதவுகிறாள். அதனால் இராணுவ அதிகாரியின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுகிறாள். இராணுவ விசாரணை நடக்கும்பொழுது வலஸ்க்கா குற்றம் செய்யும் திறனற்றவன் என்று எடுத்துக் கூறி அவனை மனநல விடுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து காப்பாற்றுகிறாள். அவளது திறமையான வழிப்படுத்துதலைக் கண்டு நகரசபையின் செயலாளர் பதவி அவளைத் தேடி வருகிறது. தனது கணவரின் வீட்டிற்கு மீண்டும் குடிபெயர்கிறாள் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

வலஸ்க்காவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்த மிஸ்டர் எஸ்ட்டெர், வீட்டிற்குள் நுழைந்துவிட்ட மனைவியைப் பொருட்படுத்தாமல் தனது இசை ஆராய்ச்சி பக்கம் கவனத்தைத் திருப்புகிறார். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் நகர மக்களால் மதிக்கும் நிலையை அடைகிறாள். தனக்கு உதவி செய்த மிஸ்டர் ஹாரருக்கு நல்ல பதவியை அளிக்க ஏற்பாடும் செய்கிறாள். மேலும், வலஸ்க்காவின் தாயாரின் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று மிஸ்ஸஸ் பிலஃப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறாள்

லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் வர்ணனைகள் சூழ்நிலையைக் கண்ணெதிரே கொணரவும், ஒரு கதாபாத்திரத்தின் குணநலன்களை விவரிக்கவும் திறமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும் கதையின் சில இடங்களில் தேவையற்ற வகையில் அமைந்த வர்ணனைகள் வாசிப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முழுக்கதையையுமே படித்து முடித்த பின்னர் காட்சிகளை ஆராயும்பொழுது, கதையின் முதல் காட்சியில் வரும் மிஸ்ஸஸ் பிலஃப்பின் இரயில் பயணமும், அதில் அவர் எதிர் கொள்ளும் மாந்தர்களுமே கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்பது தெரிகிறது. அதைப்போன்றே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் உறங்கும் பொழுது தேவையற்ற வகையில் விவரிப்பு விரிந்து சென்று அறையில் அலையும் எலிகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுவதும் கதையோட்டத்திற்குக் கொஞ்சமும் உதவும் வகையில் இல்லை. மற்றொரு காட்சியில் மிஸ்ஸஸ் ஹாரர், மிஸ்டர் எஸ்ட்டெர் வீட்டிற்குக் கலவரம் நடக்கும் நள்ளிரவில் ஓடிவந்து வலஸ்க்கா கலவரம் செய்யும் முரடர்கள் கையில் சிக்கிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு ஆதியில் தொடங்கி அந்தம் வரை நீள நீளமாக விவரிப்பது கேட்பவர் யாராக இருந்தாலும் பொறுமையை இழக்கச் செய்யும் செயலே.

மிஸ்ஸஸ் ஹாரர் வழியாகக் கலவரத்தை விவரிக்க ஆசிரியர் மேற்கொண்ட உத்தியாக அது இருந்தாலும் தொடர்ந்து, முரடர்களின் கைப்பாவையாக மாட்டிய வலஸ்க்கா மூலமாகவே கலவரக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை விளக்கும் காட்சியும் தொடர்வதால் மிஸ்ஸஸ் ஹாரர் வாய்மொழியாக வரும் பகுதியைத் தவிர்ப்பதனால் கதையோட்டத்தில் இழப்பு ஏதும் ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. மற்றொரு இடத்தில் கலவரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல்களில் மரச்சட்டங்களை மிஸ்டர் எஸ்ட்டெர் ஆணி வைத்து அடிப்பதைச் சித்தரிக்கும் காட்சியும் தேவையற்ற அளவுக்கு மீறிய விவரிப்பு என்ற வகையில் அடங்கும். இது போன்று மேலும் சில இடங்கள், கதையோட்டத்திற்கும் உதவாமல், கதாபாத்திரத்தின் குணநலனையும் விவரிக்க உதவாமல் மேம்போக்காகக் கதையின் போக்கைத் தொய்வடையச் செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

ஹங்கேரிய மொழியில் அமைந்த மூலநூல் மிகவும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் மிகவும் பாராட்டத் தக்க வகையில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றாலும் ஆழமான, மிகத் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கும் இந்தப் புதினத்தைத் தீவிரமான இலக்கிய இரசிகர்கள் மட்டுமே விரும்புவார்கள் என்று கூறும் வகையில்தான் இந்த நூல் அமைந்துள்ளது.



நன்றி: “இலக்கிய  வேல்”  இலக்கிய மாத இதழ் 
ஜூலை & ஆகஸ்ட் – 2015 

மறுபகிர்வுக்கு நன்றி:  வல்லமை 
ஆகஸ்ட் 26, 2015


#இலக்கியவேல், #வல்லமை,  #நூல் மதிப்புரை, #Themozhi 






Monday, August 3, 2015

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை - 2


லேஸ்லோ க்ரேசேஹார்க்கை - 2










நன்றி: இலக்கியவேல் 
ஆகஸ்ட் 2015


#இலக்கியவேல், #நூல் மதிப்புரை, #Themozhi 


Friday, July 3, 2015

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை -1

 
லேஸ்லோ க்ரேசேஹார்க்கை -1









நன்றி: இலக்கியவேல் 
ஜூலை 2015


 


#இலக்கியவேல், #நூல் மதிப்புரை, #Themozhi 


Monday, April 22, 2013

காற்றுக்கென்ன வேலி!!!

 காற்றுக்கென்ன வேலி!!!





Lean In: Women, Work and the Will to Lead
- by Sheryl Sandberg
Hardcover: 240 pages
Publisher: Knopf (March 11, 2013)
Language: English
ISBN-10: 0385349947

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு, மகளிருக்குத் தலைமைப் பதவி ஏற்கும் தகுதி இருக்கிறதா என்ற சந்தேகமே வர வாய்ப்பிருக்காது.  அவரவர் பிறந்த காலக்கட்டத்தை வைத்து உலக நாடுகளில் ஓரிரு நாடுகளிலாவது பெண்கள் தலைமை ஏற்றுத் திறம்பட வழி நடத்துவதைப் பார்த்துத்தான் வளர்ந்திருப்பார்கள். அதிலும் கீழை நாடுகளில் பெண்களின் மேல் அடக்குமுறை அதிகம் எனக் கூறப்பட்டாலும், அந்த நாடுகள்தான் பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டதில் முன்னணி வகிக்கின்றன. ஆனால் அரசியல் ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுப்பணிகளில் முத்திரை பதித்திருக்கும் பெண்களைப் போல, பெண்களால் வர்த்தக நிறுவனங்களிலும் அதே அளவு தலைமைப் பதவிகளைப் பெற முடிந்திருக்கிறதா என்பது பலரும் வியந்து கேட்கும் கேள்வி.

சுயதொழில்களில் பெண்கள் முன்னின்று தங்கள் நிறுவனங்களைக் கட்டிக் காத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனாலும் மற்ற பிற வணிக நிறுவனங்களில் அவர்கள் பணியாற்றும் பொழுது, அவர்களது பங்களிப்பு பாராட்டப் படுவதில்லை, அவர்கள் தகுதிக்கேற்ற பதவிகள் வழங்கப் பெறுவதில்லை என்பது பெண்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் என்றும் உள்ள மனக் குறைபாடு. பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி  இந்திரா நூயி புகழ் பெற்ற பெண் நிர்வாகியாக உலகில் அறியப்படுகிறார்.  அவர் போல விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில பெண்கள்தான் 'ஃபார்ச்சுயூன் 500' (Fortune 500) எனப் போற்றப்படும் பெருவணிக நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஏன் இந்தப் பாகுபாடு? பெண்களின் முன்னேற்றத்தில் எதனால் தடை ஏற்படுகிறது? 1960 கள் முதல் பெண்ணியம் என்று மகளிரின் சமுதாய முன்னேற்றத்திற்காக, சம உரிமைக்காகப் பாடுபட்ட புரட்சி அலை ஏன் செயலிழந்து நிற்கிறது? இது போன்ற தடைக்கற்களை எப்படி அகற்றுவது? இதனைச் செய்ய வேண்டியவர் யார்? எங்கே குறைபாடு இருக்கிறது? எனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதல் பத்திரிக்கை ஆசிரியர்கள் எனப் பலரும் அவரவர் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அது போன்ற பெருவணிக நிறுவனங்கள் ஒன்றில் தலைமைப் பொறுப்பேற்ற பெண் நிர்வாகியின் கண்ணோட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் நாம் படிக்க வேண்டியது "ஷெரில் சேண்ட்பெர்க்" (Sheryl Sandberg) எழுதிய "லீன் இன்: விமன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்" (Lean In: Women, Work and the Will to Lead) என்ற புத்தகத்தை.

ஷெரில் ஃ ப்பேஸ் புக் (Face Book) சமூக வலைத்தள நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண்ணதிகாரி (chief operating officer of Facebook), ஃபார்ச்சுயூன் 50 தரவரிசைப் பட்டியலில் அதிகாரம் நிறைந்த பெண் நிர்வாகியாகவும் (Fortune’s list of the 50 Most Powerful Women in Business), டைம் இதழின் உலகில் செல்வாக்குமிக்க 100 மனிதர்களில் (Time’s 100 Most Influential People in the World) ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

ஷெரில் இந்த நூலை எழுத நேர்ந்த காரணம் என்ன என்பதையும் கூறுகிறார். அவர் முதன் முதலில் பணியில் சேர்ந்தபொழுது அவரது தலைமுறையினருக்குச் சம அளவு பொறுப்பும் வாய்ப்பும் இருப்பதாக நினைத்திருந்தாராம்.  ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருந்திருக்கிறது.  பெண்கள் அதிக அளவில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள்.  மேல் நிலைப் பட்டங்களும் பெறுகிறார்கள்.  பல பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஏனோ ஒவ்வொரு துறையிலும் 20 விழுக்காடுகளுக்கும் குறைவாகவே தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நிலையை அடைகிறார்கள். இது அவரது கவனத்தை ஈர்த்து மேலும் இதன் காரணத்தை ஆராயத் தூண்டியிருக்கிறது.

அவரது கூர்ந்த கவனிப்பு பெண்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்பதாக அவருக்குத் தெரிவித்தது; பணியிடத்தில் நிலவும் பாரபட்சமான நிலை, பணியில் இசைவான முறையில் பணியாற்ற வகையில் இல்லாத வரைமுறைகள்,  குறைவான வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவது எனப் பற்பல தடைகளாகும். அத்துடன் பெண்களும் தங்களை அறியாமலே தங்கள் முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சில பழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்குகிறார்கள், ஆர்வமுடன் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை, தங்கள் கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பதில்லை. எந்தப் புதிய பணியையும் தங்களால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கை பல பெண்களுக்கு  ஏற்படுகிறது. எதையும் செய்ய என்னால்  இயலும்  என்ற தன்னம்பிக்கை குறைவால் முன்னேற வாய்ப்பளிக்கும் புதிய பதவிகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். தவறாக ஏதேனும் செய்து கேலிக்குரிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், தயக்கமும் அவர்களைக் கட்டுப் படுத்துகிறது.

வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளாலும், சமுதாயம்  காலம் காலமாகப் பெண்களுக்கென வரையறுத்த சில கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படும் வகையிலுமே அவர்களது நடை முறைகள் அமைகிறது. இவை அவர்கள் முன்னேற்றத்தின் தடைக் கற்களாக விளங்குகிறது.  ஷெரில் இது போன்ற பண்புகளைத் தன்னிடமும், தன்னுடன் பணியாற்றும் பெண்களிடமும் கண்டு, அதனால் அவர்கள் நல்ல பல வாய்ப்புகளையும் நழுவ விடுவதை உணர்ந்து இதனை நீக்கும் முயற்சியினைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.  திறமை இருந்தும் தயக்கத்துடன் வாய்ப்புகளை நழுவ விடும் செயல்கள் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதற்குத் தடையாக இருக்கிறது.

எந்த வயதிலும், எந்தப் பணியிலும், எந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் இருக்கும் பெண்களுக்கும் இந்த அறிவுரைகள் பொருந்தும்.  கல்வி முடித்து முதன்முறையாகப் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், குடும்பப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் பணிபுரியச் செல்லும் பெண்களானாலும், அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் திறமையில் நம்பிக்கைக் கொள்ள, தாங்கள் கண்ட கனவுகள் வழி குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்கு இவர் அறிவுரை உதவும். தங்கள் துறையில் மற்றவர்களைத் தலைமை ஏற்று வழி நடத்த விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது ஷெரிலின் அறிவுரைகள்.

இந்நூலில் பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களும் தங்களுக்குரிய பங்கினை உணர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று  ஷெரில் கூறுகிறார். ஒருவரின் முன்னேற்றத்திற்கு அவரது பாலினம் எந்த வகையிலும் தடையாக இல்லாதவாறும், அவர்களது ஆர்வமும் முயற்சியும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து சமநீதி உள்ள உலகம் அமைய நடவடிக்கைகள் எடுப்பது அனைவரின் பொறுப்பாகும்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிகம் உறுதுணையாக இருக்கப் போவது பெண்களில் பலர் தலைமைப் பதவிகளுக்கு வருவதே ஆகும்.  அவ்வாறு தலைமைப் பொறுப்பேற்கும் பெண்கள், தங்களின் கண்ணோட்டத்தில் பெண்களுக்குத் தடைகளாக இருக்கும் காரணங்களை உடைத்தெறியும் வழியில் வகை செய்யலாம்.  ஆனால் இது கோழியில் இருந்து முட்டை வருமா அல்லது முட்டையில் இருந்து கோழி வருமா என்பது போன்ற விவாதமாகவும் அமைகிறது.

இதற்கு எடுத்துக் காட்டாக அவர் கூறுவது கூகிள் (Google) நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை. மகப்பேறு காலத்தில் அவரது ஊர்தியை நிறுத்துமிடம் அதிகத் தொலைவில் இருந்த பொழுது அவர் அடைந்த சிரமத்தினால் உடனடி நடவடிக்கையாக கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்க அவர் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறார். அவரும் பெண்ணாக இருந்தும் அதுவரை அவருக்குக் கர்ப்பிணிப் பெண்கள் அடைந்த சிரமம் புரியாமல் இருந்ததாகவும், அதுபோலவே கூகிள் தலைமை அதிகாரிகளுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியாததும் அவரை வியக்க வைத்ததாகக் கூறுகிறார்.  அதுவரை அங்குப் பணி புரிந்த பெண்களும் சிறப்புச் சலுகை கேட்பதைத் தவிர்த்ததன் காரணம், பணியிடத்தில் இது போன்ற சிறப்புச் சலுகைக் கோரிக்கைகள் வைப்பது அவர்களைக் குறைவாக மதிப்பிடச் செய்யும் என்ற அச்சமாகவோ தயக்கமாகவோ இருந்திருக்கக் கூடும் என்பது ஷெரிலின் கருத்து.

ஒரு ஆணுக்கு அவர்  ஆண் என்ற ஒரே காரணத்தினால், அவரால் தலைமை ஏற்க முடியும் என்று கருதி தலைமைப் பதவி தேடி வரும்.  ஆனால் பெண்களோ தாங்கள் அந்தப் பதவிக்குத் தகுதிகள் உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொழில் முறையில் பெண்களுக்குத் தலைமைப் பதவியை அடைய ஏற்படும் தடையை 'கண்ணாடிக் கூரை' (Glass ceiling) என்ற முட்டுக் கட்டை இருப்பதாகக் கூறுவதுண்டு.  தொழிலேணியில் (career ladder/corporate ladder) அவர்கள் ஓர் அளவிற்கு மேல் ஏற முற்படுவது பலரால் விரும்பப் படுவதில்லை.  அது போன்ற தடைகள் ஏற்படும்பொழுது பெண்கள் தொழிலேணி  வழியாகக் குறிப்பிட்ட உயர்நிலைப் பதவியை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்வதைத் தவிர்த்து, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள 'ஜங்கிள் ஜிம்' (Jungle Gym) விளையாட்டு உபகரணத்தில் எப்படிப் பல வழிகளில் ஏறி உச்சியை அடைய முடிகிறதோ அதைப்போன்று செயல் பட வேண்டும்.  குறிப்பிட்ட தலைமைப் பதவியை அடைய அந்த நிறுவனத்தில் முட்டுக்கட்டை இருப்பதாகக் கருதினால் அந்தப் பதவியை அடைய வழிவகுக்கும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஷெரில்.

இந்த நூலின் மூலமாக அவர் அறிவுறுத்துவது இரு முக்கியக் கருத்துக்கள்:  ஒன்று, பெண்கள் தலைமைப் பதவிகளை அடைந்து தன்னையொத்த பெண்களும் முன்னேறி தலைமைப் பதவியை அடைய வழி வகுக்க வேண்டும், அவர்கள் பெண்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். மற்றொன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்தெறிந்து அவர்கள் குறிக்கோள்களை அடைய பெண்களின் தன்னம்பிக்கையை வளர்த்து ஊக்குவிக்க வேண்டும்.

இக்கருத்துக்களை முன்னிறுத்தத் தனது வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகளை, செய்த பிழைகளை, அவருக்கு ஏற்பட்ட தடைகளை, தொழிலிலும் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்க முற்படுகிறார். பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் சிறந்த முடிவுகளை எடுத்து தன்நிறைவு பெற்று வாழ்க்கைக் கனவுகளையும் குறிக்கோளையும் அடைய வழி சொல்லுகிறார்.

ஷெரில் பெண்கள் தலைமைப் பதவியை அடையத் தடைகளாக இருக்கும் முக்கிய காரணங்களாகக் கருதுவது ...

[1] வாழ்வில் அனைத்தையும் செய்ய வேண்டும், அதுவும் அனைத்தையும் சரியாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது; கச்சிதமாக ஒரு தவறு கூட இருக்கக்கூடாது என்று செயல்படுவது நடைமுறையில் உதவாது.  இந்த எண்ணமே முன்னேற்றத்தின் முக்கிய எதிரி.

[2] வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டுவது போன்ற அருமையான நேரங்களில், பெண்கள் தங்கள் திறமையிலோ, அல்லது தங்கள் வாழ்க்கை சூழ்நிலையை முன்னிறுத்தி இது தன்னால் இயலுமா என்பது போன்ற சந்தேகங்கள் கொள்வது. அதனால் தன்னம்பிக்கையின்றி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி அவற்றை நழுவ விட்டுவிடுவது.

[3] பொதுவாக அனைவரும் அறிவதும், ஆண்களைப் பொறுத்தவரை அடிப்படையில் அனைவரும் நம்புவதும் பணியிலும் குடும்ப வாழ்க்கையிலும் அவர்களுக்கு எந்த விதத் தடைகளும் கிடையாது என்பதை.  பணியிலும் வெற்றி பெற்று, ஒரு நிறைவான குடும்ப வாழ்க்கையும் அவர்களால் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களுக்கு ஏதோ ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பணியினைத் திருப்திகரமாகச் செய்தாலும், மேலும் பல பொறுப்புகளைப் பெற்றுத் தலைமைப் பதவிக்குச் செல்ல பெண்களுக்குக் குடும்ப வாழ்வில் பல நிர்ப்பந்தங்கள் தடையாக அமைந்து விடுகிறது.

[4] பெண்களும் தாங்களே தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். யாராவது உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  தங்கள் தலைமைப் பண்புகளைச் செயல்களில் காட்டவேண்டும்.  எப்பொழுதும் அடுத்தவர் சொல்வதை மட்டுமே செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதும், சுயசிந்தனையின்றிப் பிறர் ஆட்டுவிப்பதற்கு ஏற்ப ஆடும் பண்புகளைக் காட்டும் ஒருவரால் தலைமைப் பொறுப்பைத் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை அடுத்தவர்கள் கோணத்தில் எண்ணிப் பார்ப்பதற்கு இயலாததாக இருக்கும்.

[5] தங்கள் வெற்றி தங்கள் கையில், தங்கள் நடவடிக்கையில் இருக்கிறது அதனைச் சரியாகக் கையாள்வதே மேலும் முன்னேறுவதற்கு வழி வகுக்கும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அவர்களது முன்னேற்றத்தை விரும்புவதில், அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில் அவர்களைத் தவிரப் பிறருக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

[6] தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், தன்னம்பிக்கையுடன் இருப்பதாகப் பிறர் உணரும் வண்ணம் செயல் படுவதும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடைய வழி வகுக்கும். பெரும்பாலும் வாய்ப்புகள் யாருக்கும் வழங்கப் படுவதில்லை, விருப்பப்படுபவர்களால் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதே உண்மை.  அத்துடன், மிக வேகமாக இயங்கும் தற்கால உலகில் வாய்ப்புகள் யாருக்காகவும் வழங்கப் படுவதும் இல்லை, அவர்கள் வழியில் தென்படும் வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதே அவரவர் வெற்றிக்கு வழி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

[7] தாய்மார்கள் தங்களுக்குத் தோன்றும் தேவையற்ற குற்ற உணர்வுகளுக்குப் பலியாகாமல், காலத்தைத் திறம்பட  நிர்வகித்துச் செயல்படுவது தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

[8] எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் மிக முக்கியமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியது தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பதாகும். தங்களுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்று முடிவெடுக்கும் பெண்கள், தங்கள் பணிக்கும் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளுக்கும் உறுதுணையாக இருக்கும், உதவும், தன்னலமற்று மனைவியின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

[9] அச்சமே பெண்களுக்கு முதல் எதிரி. சரியான முடிவுகளை எடுக்காமல் போய் விடுவோமோ? அவ்வாறு செய்தால் நம்மைப் பார்த்து பிறர் நகைப்பதற்கு இடம் கொடுத்துவிடுவோமோ? தோல்வி அடைந்து விடுவோமோ? பிறர் நம்மைத் தவறாக எண்ணும் வாய்ப்பை அளித்துவிடுவோமோ? நம் முன்னேற்றம் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்துமோ? தகுதிக்கு மீறிய செயலாக அகலக்கால் வைக்கிறோமோ? என்பது போன்ற தேவையற்ற அச்சங்கள் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.  அதிலும் தங்களால் சிறந்த மகளாக அல்லது, சிறந்த மனைவியாக அல்லது, சிறந்த தாயாகச்  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்பது போன்ற அச்சங்கள் பல பெண்களையும் காலம் காலமாகப் பிடித்தாட்டி அவர்கள் முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கிறது.

[10] எந்த முடிவையும் எடுப்பதில் அச்சம் குறுக்கிடாவிட்டால், அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் தொழில் முறையில் எடுக்கும் முடிவுகள் என்னவாக இருக்குமோ அந்த முடிவினை  எடுப்பதில் பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது.

ஷெரில், தான் பணிபுரியும் ஃபேஸ்புக்  நிறுவன அலுவலகச் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஊக்கமூட்டும் கருத்துப்படச் சுவரொட்டிகள் குறிப்பிடும் அறிவுரைகளை நூலைப் படிப்பவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறர். "தன்திறமையில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்," "தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்" என்பது போன்ற வாசகங்களைத் தாங்கியவை அச்சுவரொட்டிப் படங்கள். அவற்றில் ஷெரிலின் கவனத்தை மிகவும் கவர்ந்ததாக, "அச்சம் என்பதே உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?" என்ற வாசகத்தைக் குறிப்பிடுகிறார்.

     "காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
      கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
      மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"
என்ற கண்ணதாசனின் வரிகள் தனது வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பும் பெண்களுக்குச்  சிறந்த அறிவுரை.  இந்த அறிவுரைதான் ஷெரிலின் நூல் முழுவதும் விரவி நின்று பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தந்து "உன்னால் முடியும் பெண்ணே" என்று உற்சாகமூட்டுகிறது. பெண்களின் வாழ்வில் பங்குபெறும் ஆண்களுக்கும் சமுதாயத்திற்கும், பல்லாண்டுகளாக அடக்கு முறையினால் தவிக்கும் பெண்களுக்குச் சமவுரிமை பெற்றுத்தரத்  தடையாக இருக்கக்கூடாது, தங்கள் கடமையை உணர்த்து உதவ வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.  பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவுடன் செயல்படும் பணியிடங்களும், குடும்பமும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணையுமே பெண்களுக்குச் சமவுரிமை கிடைக்க வழி செய்ய முடியும்.



நன்றி:
திண்ணை
ஏப்ரல் 22, 2013 

#திண்ணை, #பெண்ணியம், #நூல் மதிப்புரை, #Themozhi  




Monday, February 18, 2013

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?



     மங்கையைப் பாடுவோருண்டு
     மழலையைப் பாடுவோருண்டு
     காதலைப் பாடுவோருண்டு
     கருணையைப்  பாடுவோருண்டு
     அன்னையைப் பாடுவோருண்டு
     அரசினைப் பாடுவோருண்டு
     கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ?
     கதரினைப் பாடுவாருண்டோ?
என வியக்கலாம்.  கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன்.

இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன்.  அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் மின்னூல் வடிவம் கொடுக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் அவர்களது மின்னூல்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கவிதை நூல் பிறந்த வரலாறு:
இந்த நூலினை அறிமுகப் படுத்தும் மாலன் அவர்களின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த உணர்ச்சிப் பூர்வமான கதையும் நமக்குத் தெரிய வருகிறது.

1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள், வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியைச் சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த கதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்த நூல் இந்தக் கதர் ராட்டினப் பாட்டுக் கவிதை நூல். சுருங்கச் சொல்லின், இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்டப் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒன்று.

கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் கதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர்.  தானே தனது கையினால் நூற்ற நூலில் கதர் சேலையை நெய்யச் செய்து தீபாவளிப் பரிசாகத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கிறார். அது போன்றே தன் கையால் நூற்ற நூலைத் திரித்து தனது குழந்தைக்கு அரைநாண் கயிறும் அணிவித்திருக்கிறார்.  அத்துடன் நில்லாது, கடன் கொடுக்கும் அடிப்படையில் கதர் துணி விற்பனையையும் செய்து மக்கள் கதராடை அணிய  ஊக்கப் படுத்தியிருக்கிறார் கவிஞர்.  அவரிடம் கடனுக்குத் துணி வாங்கிய புதுவை ஜெகநாதம் என்பவரின் குறிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பாரதிதாசன் அவர்கள் இந்தக் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதும் தனது சொந்தச் செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலைக் குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசனின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்குக் கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்னாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலன் அவர்களுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.

கதர் இராட்டினப் பாட்டு:
(1) பாரததேவி, (2) ஜன்ம பூமியின் சிறப்பு, (3) காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம், (4) சுதந்திரதேவியும் கதரும், (5) தேசத்தாரின் பிரதான வேலை, (6) இராட்டினச் சிறப்பு, (7) அன்னைக்கு ஆடை வளர்க, (8) பாரததேவி வாழ்த்து ஆகிய எட்டு சுவை மிகு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

     “பாரததேவி”
     விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
     பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
     வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
     உளமேதன் மேனிக் குவப்பு

என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன.  சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.  தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையைக் குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.   காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்குச் சுருதிப்பெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலும் அதைப் பட விரும்புவோருக்குக் கவிதை நூல் வழங்கிய ஸ்வரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

     “பறை முழக்கம்”
     அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
     அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
     அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
     சுற்றும்-சுற்றும்-சுற்றும்

     இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
     என்று சொல்லிப் புயம் தட்டு – அட
     யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
     கொட்டு-கொட்டு-கொட்டு

இதன்மெட்டு:
ஆர்மோனிய ஸ்வரம்

     ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
     அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

     ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
     அறைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

     ஸஸ ஸஸா / ஸநி நீநீ / தா தா நீ* / பா மா கா
     அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

     கா கா , / கா கா , / கா பம பா ,,
     சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

     ஸ ஸ நீ / ஸ ஸ ஸ ஸ ஸ ஸ / ஸ ஸ ரீ
     இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

     ஸ ஸ நீ / தா தா தா / தா தா ,, / தப
     என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

     பா ஸ ஸ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
     யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

     கா கா / கா கா / காம மபா
     கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சுதந்திரதேவியும் கதரும்.  பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது.  அந்த அழகியை நீ யாரெனக் கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள்.  ஆளை மயக்கிடும் மாதொருத்தி எனத் துவங்கும் அப்பாடலில் அவள் யாரென அறியும் வரை அது ஒரு நாட்டுப் பற்றினைக் குறிக்கும் பாடல் என்ற எண்ணம் வராது.  தொடர்ந்து வரும் வரிகளில் அந்தச் சுதந்திர மங்கை அவளை அடையும் வழியையும் உரைக்கிறாள். அந்நியர் துணிகளை வாங்காதே, நீயே நூல் நூற்று ஆடை நெய்து கதராடை உடுத்து. அந்நியர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் வணிகம் வீழ்ச்சி அடையும்.  அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடையலாம்.  எனவே சுதந்திரம் அடைய இராட்டினம் சுழற்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார்.  அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

     “சுதந்திரதேவியும் கதரும்”
     ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
     அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
     பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
     பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
     தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
     சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
     காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
     காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
     .
     .
     .
     கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
     காதல் இருப்பது மெய் எனிலோ – அட
     சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
     தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
     அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
     கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
     கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
     கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)

இந்தக் கவிதைத் தொகுப்பில் கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சிறந்த உவமைக் கவிதையாக விளங்குகிறது.  அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கௌரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கண்ணா என் மானத்தைக் காப்பாற்று என்று பாஞ்சாலி கதறியபோது கண்ணன் ஆடை வழங்கி அவளது துயர் தீர்த்தான். இதனைக் கவிஞர் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது அவர் கற்பனையின் வளம் நம் கருத்தைக் கவர்வதாக உள்ளது. கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின்  துயர் நீக்குகிறாராம் காந்தி.  அப்பாடலின் இடம் பெற்ற வரிகளைக் கீழே காண்க.

     “அன்னைக்கு ஆடை வளர்க”
     “தீயார் துகிற் பறித்துத்
     தீர்க்கின்றார் எனமானம்
     மாயாமலர்க்கண்ணா
     வந்துதுயர் தீர்த்திடுவாய்”

     என்று பாஞ்சாலி
     இசைக்க அது கேட்டுச்
     சென்று மலர்க் கண்ணன்
     சித்திரஞ் சேர் ஆடை
     வளர்ந்திடுக என்றான்
     அறம் வளர்க்க வந்தோன்

     “தீயர் துகில் பறித்துத்
     தீர்கின்றார் என்மானம்
     மாயாமலர்க்கண்ணா
     வந்து துயர் தீர்த்திடுவாய்”

     என்று ரைத்திட்டாள்
     இதனைச் செவியுற்றுச்
     சென்று கண்ணக் காந்தி
     சித்திரஞ் சேர் ஆடை
     வளர்ந்திடுக என்றான்
     அறம் வளர்க்க வந்தோன்

கைராட்டினத்தையும் போற்றிப்பாடும் ஒரு கவிதை நூலா என்று முதலில் எழுந்த எண்ணம்; கவிதைகள் பிறந்த காலப் பின்னணியையும், நாட்டுப்பற்றுடன் தனது சொந்தச் செலவில், மனைவியின் நகையை விற்று, கவிஞரின் குடும்பமே கவிதை நூலைத் தயாரித்த தகவல்களாலும், அதற்குப் பிரெஞ்சு அரசாங்கம் ஏற்படுத்திய தடைகளை எண்ணும் பொழுதும், கவிஞரின் கவிதை வரிகளின் உவமை அழகிலும், கருத்துச் செறிவிலும் மனம் ஆழ்ந்து வந்தே மாதரம் என்று பாரதத் தாய்க்கும், சுதந்திர தாகம் கொண்ட அவளது அருமை மகனுக்கும் ஒருசேரத் தலை வணங்கும் வகையில் மாறிவிடுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தருவது நாட்டுப் பற்றையும், கவிதை அழகையும் ஒருங்கே அளிக்கும் சுவை விருந்து.

நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation): http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html

படங்கள்:
சுரதாவின் ‘பாரதிதாசன் பரம்பரை’ (பொதுவுடைமையாக்கப்பட்ட நூல்) நூலிலிருந்து.



நன்றி:
திண்ணை
பிப்ரவரி 18, 2013


#திண்ணை, #பாரதிதாசன், #நூல் மதிப்புரை, #Themozhi