Saturday, June 28, 2014

ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்

ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்
 

நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது.
- ஸ்டெப்ஃபெனி கோலக்

ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.

உலகப்புகழ் பெற்ற நிறுவனமான ‘டூபாண்ட்’ (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக டாலர்களில் பொருள் ஈட்டியது. அதற்கு அடிப்படைக் காரணம் ஸ்டெப்ஃபெனி கோலக் கண்டுபிடித்த ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின் உயிர்களைக் கவசமாக இருந்து காப்பாற்றியது இந்த ஆடைகளில் இருக்கும் குண்டு துளைக்காத இழை (bulletproof fiber)தான். உயிர் காக்கும் இந்தச் செயற்கை இழையின் பெயர் கெவ்லர் (Kevlar®).

குறைந்த எரிபொருள் பயன்படுத்தி ஓடும் கார்களைத் தயாரிக்க 1970 களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குக் காரணம் அக்காலத்தில் இருந்த பெட்ரோல் பற்றாக்குறையாகும். அதனால் இரும்புக் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கார் சக்கரங்களில் (car tires) அவற்றிற்கு மாற்றாக எடை குறைந்த, ஆனால் உறுதியான செயற்கை இழைகளைப் பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

நைலான் போன்ற செயற்கை இழைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த டூபாண்ட் நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. டூபாண்ட் நிறுவனத்தின் வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் ஸ்டெப்ஃபெனி கோலக்கும் அங்கு ஓர் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பலபடி சேர்ம ஆராய்ச்சி ( polymer research) முறையில் நீளமான கரிமச் சங்கிலியால் ஆன இழைகளைத் தயாரிக்க விரும்பிய ஆய்வாளர்கள் பல வேதிப்பொருட்களை ஒன்றுடன் ஒன்றாகக் கலந்தனர். பின்னர் அக்கலவையை ஒரு திரவத்தில் கரைத்து, அந்தத் திரவக் கரைசலைச் செயற்கை இழை செய்யும் சுழலும் கருவியில் ஊற்றி (பஞ்சு மிட்டாய் செய்வது போலவே), கருவியைச் சுழற்றி இழைகளாக உருவாக்கினர். உருவாக்கிய இழைகளின் பண்புகளையும், உறுதியையும் அறிய அவற்றை அடுத்த படியாகப் பலவகைச் சோதனைகளுக்கு உட்படுத்தி ஆராய்ந்தனர்.



ஸ்டெப்ஃபெனி கோலக்கும் இதே முறையில் திட நிலையில் இருந்த வேதிப் பொருள்களின் கலவையை, திரவக் கரைசலாக மாற்றினார். பொதுவாக இவ்வாறு கிடைக்கும் கரைசல் அடர்த்தி நிறைந்த பாகு போலவும், தெளிந்தும் இருந்தால் (அதாவது பார்ப்பதற்குத் தேன் அல்லது சர்க்கரைப் பாகு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தால்) செயற்கை இழைகளை உருவாக்கச் சிறந்த கரைசலாக ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும். ஆனால் ஸ்டெப்ஃபெனி கோலக் உருவாக்கிய கரைசல் துகள்கள் நிறைந்து, கலங்கலாக மிகவும் நீர்த்துப் போன தோற்றம் (மோர் போன்ற தோற்றம்) கொண்டதாக இருந்தது.

அவருடன் பணிபுரியும் ஆய்வாளர்கள் அக்கரைசலைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்க ஆலோசனை சொன்னார்கள். கரைசலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு இழைகளை விட்டுவிடும் இழை தயாரிக்கும் கருவியை (laboratory spinneret machine) இயக்கும் ஆராய்ச்சியாளரும் அந்தக் கரைசலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டெப்ஃபெனி கோலக் அந்தக் கரைசலை வடிகட்டி துகள்களை நீக்கிய பிறகு, மீண்டும் மிகவும் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தி செயற்கை இழை தயாரிக்கச் செய்தார்.

இந்த இழையை அழுத்தம் கொடுத்துச் சிதைக்கும் சோதனைக்குட்படுத்திய பொழுது, பெரும்பாலான இழைகள் நொறுங்கிவிடும். ஆனால் இந்த இழை அழுத்த நிலையையும் தாண்டி மிகவும் விரைப்பாகவும் நொறுங்காமலும் சிதையாமலும் இருந்தது. இந்தப் பண்பை நன்கு உறுதி செய்து கொண்ட பின்னர், ஸ்டெப்ஃபெனி கோலக் நிர்வாகத்தினரிடம் இந்தத் தகவலை அளித்தார். டூபாண்ட் நிர்வாகத்தினர் உடனே ஓர் ஆராய்ச்சிக் குழுவையே இதற்காக உருவாக்கி இழையின் பல்வேறு பண்புகளைத் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தினர்.

பாலி – பாரஃபைனைலீன் டெட்ரிஃப்தாலமைட் (poly-paraphenylene terephthalamide) என்ற இந்த இழைக்கு ஆய்வகத்தில் “ஃபைபர் பி” (“Fiber B”) எனப் பெயரிட்டு ஆய்வுகள் நடத்தப் பட்டன. அச்சோதனைகளின் மூலம் இந்தச் செயற்கை இழை எஃகை விட ஐந்து மடங்கு மிகவும் உறுதியானதாகவும், அதேசமயம் எடை குறைவானதாகவும் இருப்பதும், தீயெதிர்ப்பு திறன் கொண்டிருப்பதும் அறியப்பட்டது. சந்தையில் ‘கெவ்லர் ‘ என்ற பெயரில் இந்த இழை அறிமுகப்படுத்தப்பட்டது. இழை கண்டுபிடிக்கப்பட்ட 1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு கார் சக்கரங்களில் மட்டுமின்றி, அதன் உறுதியான மற்றும் எடை குறைவான பண்புகளின் காரணமாக உயிர்காக்கும் கவச ஆடைகளிலும், தலைக்கவசங்களிலும் 1975 ஆம் ஆண்டு முதல் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

குண்டு துளைக்காத கவச ஆடை தயாரிப்பில் பெரும்பங்கு இடம் பெற்று அதனால் உலகப் புகழ் பெற்று பலரால் அறியப்பட்டாலும், கெவ்லர் செயற்கை இழை மேலும் பல வகைகளில் நம் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளது. சில எடுத்துக் காட்டுகள்: எடைக்குறைவான உறுதியான கருவிகள், கார் டயர்கள், தீயணைப்பு வீரர்களின் காலணிகள், ஹாக்கி மட்டைகள், கிழியாத கையுறைகள், கண்ணாடி கம்பிவடம் (fiber-optic cables), தீப்பற்றாப் படுக்கைகள், ஓடங்கள், விமானங்கள், கவச ஊர்திகள், தீப்பற்றாக் கட்டிடப் பொருட்கள், சூறாவளியாலும், குண்டுகளாலும் சிதைவுறா பாதுகாப்பு அறைகள், தேய்வுற்ற பாலங்களின் சீரமைப்பு, கைபேசிகள் எனப் பல வழிகளிலும் பல பொருட்களிலும் பற்பல வகைகளில் கெவ்லர் இழை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பின்னாளில் இந்த இழையைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டெப்ஃபெனி கோலக் , கெவ்லர் உருவானது ஒரு தற்காலிக விளைவுதான், ‘யுரேகா’ கண்டுபிடித்துவிட்டேன் என்பது போன்ற பிரிவில் இந்த நிகழ்வு அடங்காது. அவசரப்பட்டு உடனே அறிவித்து, பிழையானால் நகைப்புக்குள்ளாக நேரும் என்பதால், நானும் பொறுமையாக இழையின் பண்புகளை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே நிர்வாகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், உழைப்பை முதன்மையாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டெப்ஃபெனி கோலக். இவர் பெற்றோர்கள் போலந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். ஸ்டெப்ஃபெனி கோலக் ஆடைகளை வடிவமைப்பது உட்பட, சிறு வயதில் பல துறைகளிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். ஆசிரியராக, மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளும் கொண்டிருந்தார். இவரது கலைப் பின்னணியையும், ஆடைகளுக்கு வடிவமைக்கும் திறனையும் இவர் அன்னை ஊக்கப்படுத்தினார். இயற்கையை விரும்பும் இவரது தந்தை இவரை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காக்களுக்கும், காடுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் அழைத்துச் சென்று மரம் செடி கொடிகள், விலங்குகள் இவற்றைக்காட்டியும் அறிவியல் கணிதம் போன்றவற்றில் இவருக்கு ஆர்வமூட்டினார்.

இவரது தந்தை இவரது பத்தாவது வயதில் மரணமடைந்துவிட தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். அமெரிக்காவின் பஞ்ச காலமான 1930 களில் இவரது அன்னை மிகவும் சிரமப்பட்டு இவரை வளர்த்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கார்னகி மிலான் (Carnegie-Mellon Univeristy)பல்கலைக் கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்கொண்டு மருத்துவம் படிக்க பணம் சேர்ப்பதற்காகத் தற்காலிகமாக ஒரு பணியில் சேர விரும்பி கல்ஃப் ஆயில் (Gulf Oil), டூபாண்ட் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார். பொதுவாகப் பெண்கள் அதிகம் பணிபுரியாத காலம் அது. அத்துடன் நிறுவனங்களும் பெண்களைப் பணியமர்த்துவதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போரின் காரணமாக, ஆண்கள் பலர் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால், வேறு வழியற்ற நிலையில் பெண்களுக்குப் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதனால் ஸ்டெப்ஃபெனி கோலக்கிற்கும் டூபாண்ட் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

கெவ்லர் இழை கண்டுபிடிப்பிற்குப் பிறகு, ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டெப்ஃபெனி கோலக் கைவிட்டார். இளங்கலைப் பட்டத்தைத் தவிர்த்து மேற்படிப்பிற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இழை கண்டுபிடிப்பின் காப்புரிமையை டூபாண்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்துவிட்டார். இழை கண்டுபிடிப்பு மட்டுமே தனக்கு உரிமை, ஆனால் அதைப் பலவிதப் பயன்பாட்டிற்கும் பதப்படுத்தி சந்தைக்கு ஏற்றவாறு வெளியிட்டதில் அவர் பங்கு கொள்வது முறையல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். கெவ்லர் இழையை மேன்மைப்படுத்தத் தொடர்ந்து உழைத்தார். நிறுவனம் இவருக்கு என ஒரு தனி ஆய்வுக் கூடத்தை வழங்கியது, பலபடி சேர்ம ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கல்விக்குப் பணம் சேர்க்க ஒரு தற்காலிகப் பணி என்று ஏற்றுக் கொண்ட பணியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து 1986 ல் பணி ஓய்வு பெற்றார்.

“பெண்களில் ஓர் அறிவியல் முன்னோடி” என்றும் “கண்டுபிடித்தலின் தாய் ” என்றும் பாராட்டப்பட்டார் ஸ்டெப்ஃபெனி கோலக். அறிவியலில் இவர் ஆற்றிய பங்கிற்காகப் பற்பல விருதுகளும் பரிசுகளும் பெற்றார். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி, ” நேஷனல் மெடல் ஆஃப் டெக்னாலஜி (National Medal of Technology) விருது 1996 ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப் பட்டது. பின்னாளில் ஓய்வு பெற்ற பிறகும் பள்ளிகளில் இளம்பெண்களைச் சந்தித்து பெண்களை அறிவியல் துறையில் பங்காற்றும்படி ஆலோசனை கூறும் தன்னார்வப் பணியினைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதுவரை ஒரு மில்லியன் குண்டு துளைக்காத கவச ஆடைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என டூபாண்ட் நிறுவனம் ஜூன் 2014 இல் அறிவித்தது. அறிவிப்பு நிகழ்ந்த பின்னர் அதற்கு மறுவாரத்தில், உடல் நலமற்று இருந்த 90 வயதான ஸ்டெப்ஃபெனி கோலக் உயிர்நீத்தார்.

அமெரிக்க இராணுவம் “கெவ்லரைக் கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி ஸ்டெப்ஃபெனி கோலக், உங்கள் கண்டுபிடிப்பின் மூலம் பல வீரர்களின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது, உங்கள் ஆன்மா அமைதி பெறட்டுமாக” என்று அவரது மறைவிற்கு ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் இராணுவத்தின்  இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது. துப்பாக்கிச் சூட்டில் கவச உடை அணிந்திருந்ததன் காரணமாக உயிர்பிழைத்தோர் ஒரு கழகம் துவக்கியுள்ளனர். அக்கழகத்தில் இதுவரை உயிர்பிழைத்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர் உறுப்பினர்களாக உள்ளனர். தனது உயிர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து கவச உடையால் காப்பாற்றப்பட்ட பின்னர் உயிர்பிழைத்தோர், அம்மையாரைத் தொடர்பு கொண்டு நன்றி கூறும் பொழுதெல்லாம் அதைக் கேட்டு மனம் மிக மகிழ்வாராம் ஸ்டெப்ஃபெனி கோலக். “நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது”, என்று அவர் கூறியது அவர் அந்தச் செய்திகள் மூலம் கிடைத்த மனநிறைவினால்தான்.


நன்றி:   சிறகு
ஜூன் 28, 2014

#அறிவியல், #சிறகு, #பெண்கள், #Themozhi


Wednesday, June 25, 2014

"ஈஸி... வசந்த்"

"ஈஸி... வசந்த்"


நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்... என்று திட்டியபடி செல்போனை  சோபாவில் வீசியெறிந்தான் வசந்த்.  அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

"ஈஸி... வசந்த்" என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

அந்தப் பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள்.  தலையில்  கிரீடமாகக்   கறுப்புக் கண்ணாடி...காற்சட்டையில் துழாவி தனது  செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள். 

கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான்.  ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது. 

முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கே புரியவில்லை. 

"ஹலோ" என்றான் அவளை நோக்கி, இவள் யார்  எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்த்தின் குரலில்.  

"ஹலோ" என்றாள் அவளும், தனது போனில்.

"நான் உன்னிடம்தான் பேசுகிறேன்"

"நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை"

எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

"பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்காரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்"

"டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?"

"ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல"

"நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை"

விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது"

"நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்" என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

"உன்னை உதைப்பேன் என்கிறாள்"

"நீங்க வேற அதை  எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?" வசந்த் அவளை முறைதான்.

"ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட்,  வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக்  டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன்.  வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ்  பண்றேன்னு சொன்னார்". 

கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான். 

"நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?"

"நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்"

"அட சட்... பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு  ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்கச் சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்". 

"தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி ...தேவுடா..." என்று பாடி உதட்டைச் சுழித்து அழகு காட்டிய  தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.  

"அது சரி, நாங்க வந்த  போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?"

"ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ...." 

"ஓ ....அந்த அளவுக்கு முத்திப் போச்சா"

"பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க"

"நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்...  தேனு,  தேனுண்ணு ஒரு பொண்ணு"

"அதும் பேரும் தேனு தனா?"

"ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க, வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம்.  அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு.  இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர்  டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம்.  கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு  அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் ."

"பிறகு சென்னையில் அந்த  செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு  தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன்  விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும்  சுருட்டிக் கொண்டோடிவிட்டான்.   போதாக்குறைக்கு  ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான்.  ஜானுவுக்கும்  தேனுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை.  பொறுக்க முடியாமல்,  இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு  பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான்.  அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான்.  உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம்  புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க.  அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை.  தெருவில் உருண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க.  தெருவே வேடிக்கப் பாத்துது.  அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். "

"இதுக்கும்  நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது". 

"இருங்க பாஸ்.  பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட்.  அந்த மூணாவது பொண்ணு நேத்து  ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது.  அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான்  வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான்.  போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன்.  அவனிடம்  என்னை அறிமுகப் படுத்தி  வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன்  ரொம்பவே  உற்சாகமானான்."

"அந்த மாதிரி உற்சாகமானவனை  நீங்க   திட்ட  காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ்  ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்"

"தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க"

"கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?"

"அப்படி ஒரு  ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், "யோவ், நான்  உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே.  மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்.  சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன்.  பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க.  ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா?  மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன்.  தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன்,  தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில்  இருக்கிற தண்ணியெல்லாம்  முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன்.  நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே" அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

"நீ நெனச்சது சரிதான்"

"தேன்க் யூ  ப்ரபொசர்"

பாஸ்...என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து "இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்..." என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

"வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான்  ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற  லாயரா வருவேனா?" என்றாள் தேனு.

அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா  என வசந்த்திற்குப் புரியவில்லை.

"நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தைப் பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன்.  உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது".

"ஃபை..ஃபை..சொதப்பி   ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை" என்ற தேனு  எழுந்து ஆடினாள்.

"என்ன இங்க கொண்டாட்டம்?  ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது"

"வாங்க  ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்"

"நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர  பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு"

"பை, பை சீரியோ..."

தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும்.  ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன்.  "பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும்  கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?"

"ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு"

"என்ன பாஸ் திடீர்னு தத்துவம்"?

"தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?"

"இருக்கும்".... தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது "ஆனால் இருக்காது பாஸ்."

"ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?" பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

"வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்"  

"வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு" என்றாள் தேனு.






[தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் "கணேஷ்-வசந்த்" கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

நன்றி: வல்லமைக் குழுமம்
https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

ஜூன் 25, 2014

#சிறுகதை, #Themozhi 

Saturday, June 14, 2014

தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு

தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு

தேனீக்களிடம் நம்மைக் கவரும் பல வியப்பான பண்புகள் உண்டு. தேனீக்களின் கடின உழைப்பு, தேனை அதே பண்புகளுடன் தேனீயைத் தவிர வேறு யாராலும் உருவாக்க முடியாத தனித்திறனைக் கொண்டிருப்பது, மெழுகை உருவாக்கும் திறமையைக் கொண்டிருப்பது, தங்களுக்குள் இன்னாருக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்து கொண்டு கடமையாற்றுவது, தேன்கூடு கட்டி கூட்டாகச் சமூக அமைப்பின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துவது என்று தனது பற்பல திறமைகளால் தேனீக்கள் நம்மைக் கவர்கின்றன.

தேன்கூடு என்பது தேனீக்கள் வசிக்குமிடம் மட்டுமல்ல. அவை தங்கள் உணவைச் சேகரித்து வைக்கும் இடமுமாகும். தேன்கூடு இவ்வாறு உணவைச் சேமிக்கவும், வாழும் இடமாகவும் அமைந்துவிடுவதால் அதைச் சிறந்தமுறையில் வடிவமைப்பது தேனீக்களுக்கும் மிக இன்றியமையாத தேவையாகிறது. வடிவமைக்கப்படும் தேன்கூடு, குறைந்த செயல்திறனில், அதிகப் பலனைக் கொடுக்கும் வகையில் ஆற்றல் நிறைந்த வகையில் அமைக்கப்படவேண்டும். தேன்கூட்டின் கட்டமைப்பு தேனீக்களின் கட்டிடத் திறமைக்கு, அவற்றின் கணிதத் திறமைக்கு ஒரு சான்று.

தேன்கூட்டின் அமைப்பு அமைந்திருக்கும் விதத்தால் தேனீக்களால் துல்லியமாகக் கோணங்களை அளக்க இயலும் என்பது நமக்குத் தெரிய வருகிறது. தேன்கூட்டின் அறுங்கோண அறைகளின் ஒவ்வொரு கோணத்தையும் சரியாக 120 பாகைகள் இருக்குமாறு தேனீக்கள் கட்டுகின்றன. தேன்கூட்டின் அமைப்பு மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட அறுங்கோண அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையும் ஒரு தேனீ நுழையும் அளவிற்கும் அமைக்கப்பட்டதாகும். அத்துடன் அவை குறைந்த பரப்பளவில், இடமும் விரயமாகாமல் அதிகக் கொள்ளளவு இருக்கும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதற்காகவே அறுங்கோண அறை அமைப்புகளைத் தேனீக்கள் தேர்வு செய்துள்ளன. இது பரிணாம வளர்ச்சியின்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தேனீக்கள் தங்கள் தொழில் நுட்பத்திறன் மூலம் வளர்த்துக்கொண்ட அறிவு. இதன் காரணமாக ஒரு குறையற்ற பண்பு கொண்ட வடிவத்தில், சிறந்த ஆற்றலுடன் தேன்கூடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேன்கூட்டின் கட்டமைப்பின் சிறப்பினை உணர அதன் கட்டமைப்பின் வடிவத்தை அறிவியல் ஆய்வு நோக்கில் பார்க்க வேண்டும். வடிவியல் அடிப்படையில் முக்கோணம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம், வட்டம் எனப் பல வடிவங்கள் இருக்க தேனீக்கள் அறுங்கோணத்தைத் தங்கள் கூட்டின் அறைகளைக் கட்டத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? இதுவே ஆராய்ச்சிக்குரிய கேள்வி.

[1] தேனீக்கள் எதிர்கொள்ளும் தேவைகள், அவற்றின் மொத்தச் சமூகமும் பாதுகாப்பாக வாழத் தகுதி நிறைந்த கூடு ஒன்று.
[2] மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மலர்ச்சாறு, தேனாக முதிர்ச்சிபெறும் காலம் வரை சேமிக்க உதவும் கிடங்கு ஒன்று.
[3] இத்தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்திறன் அடிப்படையில் அமைக்கப்பட்ட இருப்பிடம் ஒன்று.

ஒரு நல்ல இருப்பிடம் தேனை உருவாக்கச் சேமிக்கும் சிறுசிறு அறைகள் இருப்பதுடன், தேனீ நுழையப் போதுமான அளவிலும் இருத்தல் அவசியம். அவற்றைக் குறைந்த அளவு மெழுகைப் பயன்படுத்தியும் செய்யவேண்டும். எட்டு கிலோ கிராம் தேனை உண்டால்தான் தேனீயால் ஒரு கிலோ கிராம் நிறையுள்ள மெழுகை உற்பத்தி செய்ய முடியும். ‘தேன் உணவு’ என்ற மூலதனம் தேனீக்களைப் பொறுத்தமட்டில் அதிக மதிப்புள்ளது. எனவே குறைந்த அளவு மெழுகைப் பயன்படுத்தி அதிக அளவு தேனைச் சேமிக்கும் வகையில் கூடு வடிவமைக்கப்பட வேண்டும். இதுவே தேனீக்களின் குறிக்கோளாக, இயற்கையின் நியதியாகவும் இருக்கும்.


இந்தக் குறிக்கோளை அடைய, குறைந்த அளவு மெழுகு கொண்டு அதிகம் தேன் சேமிக்க எந்த வடிவ அறைகள் சிறந்ததாக இருக்கும்? வடிவியல் அடிப்படையில் வட்ட வடிவமே இந்தக் குறிக்கோளை அடைய உதவும். ஆனால் வட்டவடிவில் நெருக்கமாக அமைக்கப்பட்ட அறைகளின் இடையில் சிறு இடைவெளிகள் விட நேரும். இந்த இடைவெளிகளும் தேனீக்கள் நுழையமுடியாத அளவில் மிகச் சிறியவையாக அமைந்து விடுவதால் தேனீக்களாலும் பயன்படுத்த வழியின்றிப் போகும். இட விரயமாக அறைகளுக்கு இடையே இடத்தை அடைக்கும் வடிவங்களாக அந்த இடைவெளிகள் அமைந்துவிடும். எனவே அதிகச் சேமிப்பு குறிக்கோள் என்ற அடிப்படையில் வட்டவடிவம் சிறந்ததாக இருந்தாலும், அறைகளை நெருக்கமான வகையில் அமைக்கச் சரியான வடிவத் தேர்வாக இல்லாது போய் விடுகிறது. இட விரையத்தை ஏற்படுத்துகிறது. ஐங்கோண அறைகள் வடிவமைப்பிலும் தேவையற்ற இடைவெளிகள் அமையும்.

முக்கோண வடிவமும், செவ்வக வடிவமும் இடைவெளியற்ற நெருக்கமான முறையில் அறைகளைக் கட்ட உதவினாலும், கொள்ளளவு அடிப்படையில் அதிக ஆதாயம் கொடுக்க வழியற்ற வடிவங்களாக அமையும். எனவே வடிவியல் கணித முறையில் கணக்கிடும்பொழுது, குறைந்த பரப்பளவில், அதிகக் கொள்ளளவு கொண்ட அறைகளை, குறைந்த அளவு மெழுகு கொண்டு அமைக்க உதவும் வடிவம் அறுங்கோணம் என்ற முடிவு தெரிய வரும். தேன்கூட்டின் சிறந்த கட்டமைப்பு அமையக் காரணம் பரிணாம வளர்ச்சியின் மூலம் தேனீக்கள் அறிந்துகொண்ட அறிவாகும்.

சான்று:
Weisstein, Eric W. “Honeycomb Conjecture.” From MathWorld–A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/HoneycombConjecture.html


நன்றி: சிறகு - ஜூன் 14, 2014 

#அறிவியல்,  #சிறகு, #Themozhi