Saturday, May 31, 2014

பிரமிப்பூட்டும் பெண்மணி

பிரமிப்பூட்டும் பெண்மணி

[கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ 
மொழிபெயர்ப்பு – தேமொழி]

அழகிய பெண்கள் வியக்கிறார்கள்
என் இரகசியம் என்னவென்று.
நான் ஓர் அழகியுமல்ல,
பேரழகிக்குரிய தோற்றமும் எனக்கில்லை.
நானிதைச் சொன்னாலோ
நான் பொய்யுரைப்பதாக
அவர்கள் எண்ணுகிறார்கள்.
நான் சொல்கிறேன்,
எனது கைக்கெட்டும் வகையில்
எனது இடையின் அளவில்
எனது நடையின் துடிப்பில்
எனது கடைவாயிதழ் சுழிப்பில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

நான் அறையில் நுழைந்தால்
பிறர் மனம் குளிரும்.
மனம் மகிழும்.
ஓர் ஆணிடம்
அருகே தோழர்கள் நிற்பார்கள்
அல்லது மண்டியிடுவார்கள்.
பிற்பாடு தேன்கூட்டினை
மொய்க்கும் தேனீக்களாக
என்னை அவர்கள் மொய்ப்பர்.
நான் சொல்கிறேன்,
எனது விழிச் சுடரொளியில்
எனது புன்னகையின் மின்னலில்
எனது இடையின் அசைவில்
எனது நடையின் துள்ளலில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

ஆண்களும் வியக்கிறார்கள்
என் ஈர்க்கும் சக்தியின்
காரணம் என்னவென்று.
அவர்கள் என்னதான் முயன்றாலும்
என்னுள் மறைந்திருக்கும் மாயம்
அவர்களுக்குப் புரியாது.
நான் விளக்கினாலும்
அவர்களுக்கு விளங்குவதில்லை.
நான் சொல்கிறேன்,
எனது கவர்ச்சி இருப்பது
எனது முதுகின் நிமிர்வில்
எனது புன்னகையின் ஒளிர்வில்
எனது மார்புகளின் அசைவில்
எனது இயல்பின் நளினத்தில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே

இப்பொழுது புரிகிறதா
என் தலைவணங்க மறுப்பதன் காரணம்?
நான் கத்துவதுமில்லை குதிப்பதுமில்லை,
கவனத்தைக்கவர உரத்துப் பேசத் தேவையுமில்லை.
நான் கடந்து செல்வதைக் காணும் பொழுதே
உங்களைப் பெருமை கொள்ள வைக்கும்.
நான் சொல்கிறேன்,
எனது கால்களிடும் தாளத்தில்
எனது கூந்தலின் துவளலில்
எனது கையில் எதிர்பார்ப்பது
ஓர் அன்பின் அரவணைப்பு
ஏனெனில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

"Phenomenal Woman" -  By Maya Angelou
https://www.poetryfoundation.org/poems/48985/phenomenal-woman
Poetry Foundation


நன்றி:  சிறகு
மே 31, 2014

#கவிதை, #சிறகு, #Themozhi 



Saturday, May 17, 2014

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு


உலகை உலுக்கிய ஒரு நிகழ்வான உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நிகழ்ந்து சென்ற மாதத்துடன் (ஏப்ரல் 2014) இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏப்ரல் 26, 1986 அன்று யூனிட் 4 அணு உலை (Unit 4 reactor) வெடிப்பின் விளைவாக, கடுமையான, அளவுக்கு மீறிய கதிரியக்கத் தாக்கத்தை எதிர்கொண்ட அணுமின்நிலைய ஊழியர்களும், விபத்தின் விளைவுகளைக் கட்டுப்படுத்தப் போராடிய தீயணைப்பு படையினர் பலரும் சில வினாடிகளுக்குள் இறந்தனர். அல்லது உடல் உறுப்புக்களும் திசுக்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிடச் சில வாரங்களுக்குள் இறந்தனர்.

செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு அருகில் இருந்த பல இடங்களை வாழத் தகுதியற்ற இடங்கள் எனக் கைவிட்டு மக்கள் வெளியேறினர். அப்பகுதியில் இருந்த பிற உயிரினங்களும், தாவரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டன. உடல் ஊனமும், குறைகளும் தோன்றி விலங்குகளின் வாழ்வு பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சூழ்ந்திருந்த பைன் மரக்காடுகளில் மரங்கள் பட்டுப் போய் அதன் ஊசியிலைகள் செங்கல் நிறத்தை ஒத்த செவ்வண்ணம் பெற்று மரங்களும் சில நாட்களில் உயிரிழந்தன. அப்பகுதியே இதனால் சிவப்பாகிவிட, அக்காட்டுப்பகுதி “செந்நிறக்காடு” (The Red Forest) என்றழைக்கப்பட்டது.

கதிர்வீச்சின் அளவு ‘மணிக்கு இத்தனை மில்லெர்ரங்கென்ஸ்’ (milliroentgens per hour – mR/h) என அளவிடப்படுகிறது. [குறிப்பு: இயற்கையிலேயே கதிர்வீச்சுகள் உள்ளது, அத்துடன் அனைத்துக் கதிரியக்கமும் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. அவ்வாறு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சு 'மைக்ரோசீவர்ட்ஸ்' (microSieverts per hour) என்ற அலகால் அளக்கப் பெறும். அது மேலே குறிப்பிட்ட மில்லெர்ரங்கென்ஸ் என்ற அலகில் இருந்து மாறுபட்டது]. அணுவுலை கதிர்வீச்சின் அளவு, மேலும் அதன் தாக்கத்தின் விளைவுகள் இவற்றின் அடிப்படையில் செர்னோபில் பகுதி அறிவியல் அறிஞர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல் பகுதி (The first zone ) – கதிர்வீச்சின் அளவு 500 mR/h அல்லது அதற்கு அதிகமான அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதி. இப்பகுதியில் உயிரினங்கள் பேரழிவிற்கு உள்ளாகும்.

இரண்டாம் பகுதி (The second zone) – கதிர்வீச்சின் அளவு 200–250 mR/h உள்ள பகுதியில் உள்ள மரங்கள் 25–40% வரை அழிந்துவிடும்.

மூன்றாம் பகுதி (The third zone) – கதிர்வீச்சின் அளவு 50–200 mR/h உள்ள பகுதியில் வளர்ந்த மரங்கள் பாதிக்கப் பட்டாலும் உயிர் பிழைக்கும். ஆனால் இளம் மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்துவிடும்.

நான்காம் பகுதி (The fourth zone) – கதிர்வீச்சின் அளவு 20 mR/h உள்ள பகுதியில் உயிர்ச் சேதம் இருப்பதில்லை, ஆனால் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த மூன்று மற்றும் நான்காம் பகுதியில், கதிர்வீச்சின் அளவு குறைவாக இருக்கும் இடங்களில் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்பதைக் கடந்த கால் நூற்றாண்டாகச் சில உயிரியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர் திம்மோத்தி மூசவ் (University of South Carolina, Biologist Timothy A. Mousseau, http://cricket.biol.sc.edu/Mousseau/Mousseau.html).

கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் பலமுறை தொடர்ந்து செர்னோபில் பகுதிக்குச் சென்று குறைந்த அளவு கதிர்வீச்சை எதிர்கொள்ளும் உயிரினங்களில் என்ன மாறுதல்கள் நிகழ்கிறது என்று ஆராய்ந்து வருகிறார். தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் நீடித்த விளைவுகள் பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா, ஜப்பான், அணு உலைகளின் விபத்திற்குப் பிறகு அங்கும் ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். இவ்விரு இடங்களில் அணுவுலை விபத்தின் காரணமும், ஏற்பட்ட விதமும் வேறாக இருந்தாலும், அதிகப் பரப்பளவுள்ள இடங்கள் அணுவுலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது என்ற முடிவு ஒன்றே.

இவரது ஆய்வுக்குப் பல உயிரினங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. பல பறவை இனங்கள், பூச்சி இனங்கள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், வௌவால், எலிகள், சிலந்திகள் என்ற பலவகை உயிரினங்கள் இவரால் ஆராயப்பட்டு வருகின்றன. சிலந்தி வலைகளைப் படம் பிடித்து, கதிர்வீச்சின் தாக்கத்தால் அவற்றின் வலை பின்னும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும், பாதிக்கப்பட்ட எலிகளின் இனங்களில் மரபணுக்களில் வேறுபாடுகள் உள்ளனவா என்றும் இவரால் ஆய்வுகள் நிகழ்த்தப் படுகின்றன.

குறைந்த அளவுள்ள தொடர் கதிர்வீச்சு உடனே மரணத்தைத் தருவதில்லை. ஆனால் அது உயிரினம் எவ்வளவு நாட்கள் வாழும் என்பதை நிர்ணயிக்கும், புற்றுநோய்களால் பாதிக்கப்படுதலையும் விளைவிக்கும். பாதிக்கப்பட்ட உயிரினங்களில் மரபணு மாறுபாடுகளும், கண்புரைகளும் காணப்படுவதுண்டு. பாதிக்கப்பட்ட உயிரினங்களின் மரபணுக்களில் டிஎன்ஏ இழைகள் கதிர்வீச்சால் சிதைவுறுகிறது. மரபணு மாற்றங்களின் விளைவு காரணமாகக் கதிர்வீச்சுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்படும்.

மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பறவைகளில் பெரும்பான்மையானவை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவற்றின் அலகுகளில் குறைபாடுகள் தோன்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்ற ஏப்ரல், 2014 வெளியீடான ‘ஜர்னல் ஆஃப் பங்க்க்ஷனல் இகாலாஜி’ (Journal Functional Ecology;  http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf)


ஆய்விதழில்  திம்மோத்தி மூசவ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை, கதிர்வீச்சின் விளைவைப் பற்றிய எதிர்பாராத தகவல் ஒன்றினைத் தருகிறது. அந்த அறிக்கையின்படி சிலபறவை இனங்கள் கதிர்வீச்சிற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் செய்கின்றன என்பது தெரிய வருகிறது.

இப்பறவைகளில் குறைந்த அளவிலான தொடர் கதிரியக்கத்தின் தாக்கம், அதிக அளவு பாதுகாப்பை அளிக்கும் ‘ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்களை’ (antioxidants) உற்பத்தி செய்வதையும், அதனால் ‘ஃபிரீராடிக்கல்’ குறைவதையும், அதன் தொடர் விளைவாக மரபணுக்களில் சேதம் ஏற்படுவதைக் குறைத்துள்ளது. இது பரிணாம வளர்ச்சி விதியின்படி, இயற்கைத் தேர்வு முறையில் உயிரினங்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழும் முறையினை ஒத்திருக்கிறது. இதிலிருந்து சிலபறவை இனங்கள் குறைந்தளவு தொடர் கதிர்வீச்சிற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் பறவைகளின் பல்வேறு இனங்களில் வெவ்வேறு விதத்தில் வேறுபடுகிறது.


சான்றுகள்:
[1] Chronic exposure to low-dose radiation at Chernobyl favors adaptation to oxidative stress in birds. Ismael Galván, Timothy A. Mousseau and Anders P. Møller et al.,
Functional Ecology, Wiley Online Library, 16-Apr-2014 [You have free access to this content]http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf

[2] At Chernobyl, Hints of Nature’s Adaptation, By HENRY FOUNTAIN, The New York Times, MAY 5, 2014
http://www.nytimes.com/2014/05/06/science/nature-adapts-to-chernobyl.html

[3] Chernobyl: Capping a Catastrophe, By HENRY FOUNTAIN, The New York Times, April 27, 2014
http://www.nytimes.com/interactive/2014/04/27/science/chernobyl-capping-a-catastrophe.html

[4] 28 Years Later, The Animals Of Chernobyl Have Reclaimed Their Homeland… At A Price, by Nick Visser, The Huffington Post, 05/06/2014
http://www.huffingtonpost.com/2014/05/06/chernobyl-animals_n_5275596.html

[5] Some Birds in Chernobyl Site have adapted to Radioactive Environment, by BUSTA SEBETSEBA, NewsTonight, 05/07/2014
http://newstonight.co.za/content/some-birds-chernobyl-site-have-adapted-radioactive-environment#ixzz31BwyG2A9

[6] The Red Forest – http://www.nuclearflower.com/zone/zone08.html

[7] Radiation: How much is harmful? – http://knowledge.allianz.com/environment/energy/?1458/radiation-how-much-is-harmful


நன்றி:  சிறகு
மே 17, 2014

#அறிவியல்,  #சிறகு,  #Themozhi