Saturday, March 22, 2014

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்


குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கும் பாடல்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. தொல்காப்பியத்திலும் கடவுளைக் குழந்தையாகக் கருதிப் பாடிய பாடல்களை 'தொல்காப்பியம் புறத்திணையியல்' பகுதி குறிப்பிடுகிறது.

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியப் பிரிவில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். அதில் புலவர்கள் தங்கள் புரவலர்களை, அரசர்களை, கடவுளைப் பிள்ளையாகக் கற்பனை செய்து பாடுவார்கள். குழந்தையின் வளர்ச்சியில் மூன்றாம் மாதம் முதல் இருபத்தியொன்றாம் மாதம் வரையில் உள்ள வளர்ச்சியின் காலகட்டத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் மரபு. அப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனின் சிறப்புகளைப் பாடல் வழியே உரைப்பதும் பிள்ளைத்தமிழின் இன்றியமையாத இலக்கணம் ஆகும். ஆண், பெண் என இரு பாலருக்கும் பத்துப் பருவங்களுக்கும் பாடல்கள் புனையப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் பருவங்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் பாடப்பெறும்.

மூன்றாம் பருவமாக வரும் தாலப்பருவம் என்னும் தாலாட்டுப் பருவம் குழந்தையின் ஏழாம் மாதம் பாடப்படும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று குழந்தையைத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் தாலாட்டுப்பாடல்கள் தனிச் சிற்றிலக்கியமாகவும், நாட்டுப்புறப் பாடல்களாகவும், ஏன் இன்றுவரை திரையிசைப் பாடல்கள் வரை தொடர்ந்து எங்கும் பரவியிருக்கிறது.

குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும். குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்? பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளைத் தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள். அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தே கொண்டு இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கியத் தாலாட்டுப் பாடல்கள் வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நாளில் நமக்கு மீண்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் இனிமை மிகு தாலாட்டுப் பாடலை எதிர்பாராவிதமாகச் சந்திக்க வைத்தது விளம்பரதாரர் வழங்கிய விளம்பரம் ஒன்று. புதுக்கோட்டைத் துணை இயக்குநர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் கவிஞர் ஜீவி (https://www.facebook.com/geevee.kavi) என்கிற ஜி.வெங்கட்ராமன் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் தாலாட்டுப் பாடலை எழுதியவர். அப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இனிய நினைவலைகளைக் கிளப்பிவிடும் பாடல்….

     ஏ….ஆராரோ ஆரிரரோ……
     எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ……
     குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே…..
     சரிந்து படுத்திருக்கும் செண்பகமே கண் உறங்கு. (ஆஆ….)

     நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை
     நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை
     ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு….. (ஆஆ…..)
     ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு
            காணொளி: http://www.youtube.com/watch?v=AmjQoYvGzBQ

உறவுகளின் பெருமை:
இதே சாயலில் நாம் பல நாட்டுப்புறப்பாடல்களை அறிவோம். தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்ற பொருளில் வரும்.

     ஆராரோ ஆராரோ – கண்ணேநீ
     ஆரிரரோ ஆராரோ
     ஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை
     அடித்தவரைச் சொல்லிஅழு
     மாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை
     மல்லிகைப்பூச் செண்டாலே?

என்ற பாடலை அறியாதவர் இருக்க முடியாது. அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே? தனது நெய் ஊற்றும் கையாலே? என்பதில் பாட்டியின் பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ, மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ, ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.

தாயன்பு:
தாய் தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும், தனது குழந்தையே அழகில் சிறந்த குழந்தை என்று எண்ணும் அவளது எண்ணம் வெளிப்படும் தாலாட்டுப் பாடலும் உண்டு.

தகப்பன் மீன் பிடிக்கச் செல்ல, அயிரைமீன், ஆரல்மீன், வாளைமீன், வழலைமீன், கெண்டைமீன், கெளுத்திமீன், குரவைமீன், பரவைமீன் எனப்பலப் பலவகை மீன்களும் கிடைக்கிறதாம் தந்தைக்கு. தாய் அவற்றை அயலூர் சந்தையில் விற்று, அரைச் சவரனுக்குத் தங்க நகை செய்து போட்டாளாம் மகளுக்கு. அரைச் சவரனுக்குத்  தங்க நகை செய்து போட்டேன் கண்ணே உனக்கு, உன் அழகைக்காண அனைவரும் வியந்து கூடினர் என்று தாலாட்டுப் பாடுகிறாள்.

     அத்தைமாரும் அண்ணிமாரும் – கண்ணே உன்
     அழகைப்பார்த்து அரண்டார்களே
     அரண்மனையார் ஓடிவந்து – கண்ணே உன்னை
     அதிசயமா பார்த்தார்களே
     ஆராய்ச்சி மணியடித்து – கண்ணே உன்னை
     அயலூராரே பார்த்தார்களே.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? இப்பாடல் காட்டும் தாயன்பு அருமையானது.

தந்தையின் பெருமை:
தாலாட்டின் வழியாகக் குழந்தையின் தந்தையின் பெருமையைக் குழந்தைக்கு எடுத்துரைக்கும் பாடலும் உண்டு நாட்டார் இலக்கியத்தில்.

தந்தை ஒருவன் சரிகை சட்டை, தலைப்பாகை அணிந்து பொட்டிட்டு தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, சாரட்டு வண்டிகட்டி சலங்கை போட்ட மாடுகட்டி ஊர்ப்பயணம் போகிறான். பதுங்கித் தாக்க வந்த பகையாளியைப் பட்டாக்கத்தி வீசித் துரத்தியடித்த பெருமை சொல்லப்படுகிறது ஒரு தாலாட்டுப் பாடல் வழியாக.

     கோயம்புத்தூர் போறாரு – உங்கப்பன்
     கோழிகூப்பிடும் நேரத்திலே
     பகையாளி பதுங்கிநிற்க – உங்கப்பன்
     பார்க்காமல் போகையிலே
     பறந்துபாய்ந்தான் பகையாளி – உங்கப்பன்
     பம்மினாரு பயமில்லாமே
     பட்டாக்கத்தி வீசையிலே கண்ணே அவன்
     பஸ்பமானான் பகையாளி.

இந்த அன்னை தனது குழந்தைக்குத் தகப்பனின் பெருமையை உரைக்கிறாளா அல்லது தனது கணவனின் வீரத்தை எண்ணி அகமகிழ இப்பாடலைப் பாடினாளா என்பது பிரித்துக் காணமுடியாத கருத்தாக்கம்.


நன்றி:  சிறகு
மார்ச் 22, 2014

#நாட்டாரியல், #சிறகு
 

Saturday, March 8, 2014

புகுமுக (புகாமுக) வகுப்புகள்

புகுமுக (புகாமுக) வகுப்புகள்


பெண்களின் உயர்கல்விக்காக, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘தாலிக்குத் தங்கம்’ மற்றும் ‘திருமண நிதி உதவி’ திட்டங்கள் தற்காலத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர், இது போன்று பொருளுதவி வழங்கி ஊக்குவிக்கும் முயற்சி இல்லாமலேயே பெண்கள் உயர் கல்வி பெற்று முன்னேற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதனை வழங்கியது ஒரு கல்விமுறை மறுசீரமைப்பாகும். அந்த வாய்ப்பினைச் செவ்வனே பயன்படுத்தி பெரும்பான்மையான மகளிர் உயர்கல்வி முடித்து, பணிபுரிந்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களது சந்ததியினரையும் முன்னேற்றிக் கொள்ள வாய்ப்பு கிட்டியதை இந்த உலக மகளிர்தின நாளில் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் உயர் கல்விக்குத் தடை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமின்றி அது பொருளாதாரம் ஏற்படுத்திய இடையூறாக இருக்கிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் இருந்த காரணங்கள் வேறு. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்கள் எதிர் கொண்ட தடைகள் வெவ்வேறு. சிலதடைகள் ஆண் பெண் இருவருக்கும் பொது. சில பெண்களுக்கே உரித்தானது. அவையாவும் பெண் கல்விக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம் என்ற ஒரு பொது வகையில் அடங்கிவிடும்.

ஒருவகையில், பெண்கல்விக்கு என்ன தேவை என்ற அலட்சிய மனப்பான்மை சமூகத்தில் ஊறியிருந்தது. மற்றொரு வகை மனப்பான்மையில் பெண்கள் தேர்ச்சி பெறுவதில் தோல்வியடைந்தால் அதனைக் கையாளும் முறையில் அமைந்தது. தேர்வில் தேர்ச்சி பெறுவது தடையாகத் தோன்றிய பொழுது அது வேறு வேறு விளைவுகளை ஆண் பெண் இருபாலருக்கும் வழங்கியது.

ஆண் தேர்வில் தவறினால் அது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று முயன்று ஆண்பிள்ளைகளைப் பெற்றோர் நெருக்கடி கொடுத்துப் படிப்பை முடிக்க வைத்தனர், உயர் கல்வி கற்க வைத்தனர். ஆனால் அதுவே பெண் தேர்வில் தவறினால், சரி இதற்கு மேல் உனக்குப் படிப்பு ஏறாது போலிருக்கிறது, உனக்குத் திருமணம் செய்து வைத்து என் கடமையை முடித்துக் கொள்கிறேன் என்று கையைக் கழுவிவிடும் நிலைமையில் முடிந்தது. ஆனால் இதன் விளைவென்னவோ பெண்களுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தடைப்பட்டதில்தான் முடிந்தது.

ஒரு தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், பெண்களின் கல்வி நிலை இருந்த அவலநிலையை பாரதி போன்றோர் பாடிச் சென்றுவிட்டனர்.

     “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
     எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
     வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
     விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று அவரால் இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே பாடிடும் நிலை இருந்த காலமது. ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களோ ஏராளம்.

ஓர் அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950 களின் மத்தியில் இருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின் அடிப்படையிலானதும், உயர் கல்விக்கு ஆதரவான சரியான கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல, இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.

பெண்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தயாரானதும், வயதுக்கு வந்துவிட்டாள், இனி குடும்பம் நடத்தத் தேவையான சமையல் கலை மற்றும் குடும்பப் பொறுப்பில்தான் கவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த உடல் வளர்ச்சி மாற்ற நிகழ்வுடன் படிப்பு நிறுத்தப்படும். ஆனால், அந்த வயதோ தனது விருப்பத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத, போராடி அடைய முடியாத, தனது வாழ்வுத் தேவையைப் பற்றி முடிவெடுக்க முடியாத வயது அது என்று இன்று நாம் உணர்கிறோம். ஆனால் வீட்டில் தாய் இறந்தால், அல்லது தாய்க்குப் பல பிள்ளைகள் இருந்தால், தாய்க்கு உதவப் பெண்களின் படிப்பு தடைக்குள்ளானது. ஏதோ அவ்வப்பொழுது ஒரு கடிதம் எழுதப் படிக்க இருக்கும் கல்வியின் அளவே பெண்களுக்குப் போதுமானது என்ற மனநிலையில் அக்கால மக்கள் இருந்தனர். பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருந்த பெரும்பாலான குடும்பங்களின் பெண்கள் எட்டாம் வகுப்பை எட்டிப் பார்ப்பதோ, அல்லது நடுநிலைப்பள்ளி வரை முடிப்பதோதான் உயர் கல்வி என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையைத்தாண்டி வெளியே வந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் மட்டக் குடும்பங்களாகக் கருதப்பட்டக் குடும்பப் பெண்கள். இவர்கள் உயர்நிலைப் பள்ளி வரை தடையின்றிப் படிக்க முடிந்தது. இவர்களும் பெண்கல்வி எதற்கு என்ற சமுதாயக் கட்டுப்பாட்டைத் தாண்டினாலும், உயர் கல்விக்கேற்ற வசதியான சூழ்நிலையும், அதற்கேற்ற கட்டமைப்பற்ற சமுதாயத்தால் உயர்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்த வேண்டிய முடிவை எதிர் கொண்டார்கள். பணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டிய நிலையில் சகோதரர்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பெண் புறக்கணிக்கப் பட்டாள்.

அடுத்து அக்காலம் கல்லூரிகளும் பல இல்லாத காலம் வேறு, வெளியூருக்கு அனுப்பி, விடுதியில் தங்கி பெண்கள் கல்வி கற்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னர் பலகுடும்பங்கள் நினைத்தும் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தனர். அக்கால கட்டத்தில் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள் கல்லூரியில் "இண்ட்டர்மீடியட்" என்ற வகுப்பை இரண்டாண்டுகள் படித்து, பிறகு மேற்கல்வி பயில வேண்டும். இண்ட்டர்மீடியட் வகுப்புகளின் பயிற்று மொழி ஆங்கிலம்.

பெரும்பான்மையான அக்கால மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியில் படித்து, பிறகு கல்லூரியில் உயர்படிப்பில் ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாறினார்கள். அவர்கள் இந்த மாறுதலில் சற்றே தடுமாறினாலும், அவர்களைச் சமாளித்து நிலை நிறுத்திக் கொள்ள இரண்டு ஆண்டுகள் படிக்கும் இண்ட்டர்மீடியட் கல்வி முறை உதவியது. துவக்கத்தில் சற்று சறுக்கியவர்கள் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 1950 களின் மத்தியில் இந்த இண்ட்டர்மீடியட் கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது, 1955-57 காலத்துக் கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு மாணாக்கர்கள்.

இண்ட்டர்மீடியட் வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர். இந்த முறையில் பட்டப்படிப்பிற்கு முன்னர் படிக்க வேண்டிய கல்வி ஓராண்டாகக் கல்வியாண்டு குறைக்கப் பட்டாலும், அதன் பாடத் திட்ட முறை ஓராண்டு ஆங்கில வழி பயிற்று முறை என்பது பெண்கல்விக்குப் பாதகமாகவே முடிந்தது.

கல்லூரிகள் பல தோன்றினாலும், பெண்கள் விடுதிகளில் சென்று படிக்கும் அளவிற்கு அக்காலச் சமுதாயத்தின் மனநிலை பரவலாக மாறினாலும், தமிழ்ப் பயிற்று மொழியிலிருந்து ஆங்கிலப் பயிற்று வழிக்கு மாறிய பெரும்பாலான மாணவர்கள் தடுமாறினார்கள். தங்களைச் சுதாரித்துக் கொள்வதற்குள், சூழல் மாறுதலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முன்னர் ஆண்டு இறுதித் தேர்வு வந்துவிடும். ஆண் பெண் இருபாலருக்குமே இந்த வகுப்புகள் மேற் கல்விக்குச் செல்வதில் தடங்கல் ஏற்படுத்தியது. புகுமுகவகுப்பு என்று அழைக்கப்பட்ட கல்லூரி அறிமுக வகுப்பு, மேல்படிப்பிற்குப் ‘புகாமுக’ வகுப்பாக மாறியது. ‘பாட்டில்நெக் எஃப்பெக்ட்’ (bottleneck effect) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், சீசாவின் குறுகிய கழுத்தினால் வெளிவரும் திரவத்தின் அளவு குறுக்கப்படும் பாங்கில், மேல்நிலைக்குச் செல்லும் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் புகுமுக வகுப்பு தடை ஏற்படுத்தியது. ஆங்கில பயிற்று வழிக்கு மாறிய மாணவர்கள் தாங்கள் கற்பதிலும் சிரமம் எதிர் கொண்டு, அவ்வாறு கற்றதையும் ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார்கள், அல்லது முற்றுமாகத் தோல்வியே அடைந்தார்கள்.

இதில் ஆண் தேர்ச்சியில் தவறினால் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாதே என்று அவர்களை எப்படியாவது தேர்வு பெற வைக்கப் பாடுபட்டார்கள். ஆனால் பெண்களுக்காக அவ்வாறு பாடுபட்டவர்கள் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். அதற்குள் பெண்களுக்கும் 18 வயது வந்துவிடுவதால், படிப்பு வராவிட்டால் அடுத்து திருமணம் செய்துகொள், என்று சொல்லி சடுதியில் திருமணம் செய்து அனுப்பிவைப்பதைக் கொள்கையாக வைத்திருந்தார்கள். வாழ்வின் மிக மிக முக்கியமான திருப்புமுனையான காலத்தில், இரக்கமற்ற வகையில் பெண்கல்வியை அந்தப் புகுமுக வகுப்பு முறை பாதித்தது.

அத்துடன் அந்தப் புகுமுக வகுப்பின் பாடத்திட்டம் மூன்றே பிரிவு பாடத்திட்டம் மட்டுமே கொண்டது.

 - முதல் பிரிவில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் பொறியியல் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.

 - இரண்டாம் பிரிவில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் மருத்துவம் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.

 - மூன்றாம் பிரிவில் கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளங்கலைப் பட்டத்திற்கான கல்வியில் அடங்கும் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்ற பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

இவையாவுடனும் ஆங்கிலமும், ஏதோ ஒரு மொழியும் (Part I & II) அவசியம். 


முதல் இரண்டு பிரிவும் தொழிற் கல்விக்கானதாக திட்டமிடப்பட்டு இருப்பினும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கும் அவையே அடிப்படை. இம்முறையில் இருந்த இடையூறுகள், முதல் இரண்டு பிரிவில் இருக்கும் மாணவர்கள் பொறியியலோ அல்லது மருத்துவமோ இவற்றில் ஏதேனும் ஒன்றினைத்தான் மேற்படிப்பாகக் கொள்ள முடியும். இரண்டு படிப்புகளுக்குமே விண்ணப்பிக்க இயலாத வகையில் அந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது.

ஓராண்டில் ஆங்கிலவழி முறை பயிற்று மொழிக்குத் தகவமைத்துக் கொள்ள முடியாத திறமைசாலி பள்ளி மாணவர்கள் தட்டுத் தடுமாறி இரண்டாம் வகுப்பிலோ அல்லது மூன்றாம் வகுப்பிலோ தேர்வு பெறுவார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களே பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப் படிப்பிலோ சேருவார்கள். இன்றைய காலத்தில் இருப்பது போலப் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் இல்லாத காலம் அது. எனவே தொழில் கல்வி படிக்கப் போட்டி அதிகம் இருந்தது. இன்றைய நாட்களில் இத்தனை பொறியியல் இடங்கள் காலியாக நிரப்பப் படாமல் உள்ளது என்பதைச் செய்திகளாகப் படிப்பவர்களுக்கு அக்காலச் சூழ்நிலை புரியுமா என்பதே சந்தேகம்.

புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற ஆண்கள் மேற்கொண்டு படித்து முன்னேறக் குடும்பத்தினர் ஆதரவு உண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது ஒன்றே வழியாக இருந்தது. அத்துடன் சில குடும்பங்களில் தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுக்காத மாணவிகளிடம், “படித்தால் டாக்டருக்குப் படி இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள், நான் என் கடமையை முடித்துக் கொள்கிறேன்”, என்ற முடிவுகளும் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டன. புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற பெண்களும், தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெறாதவர்களும் உயர்கல்வியிலிருந்து விலகிச் சென்றதைக் கண்கூடாகக் கண்ட என் சொந்த அனுபவமே இங்குக் காட்டப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பாகப் பள்ளியிறுதி வகுப்பு படித்து, கல்லூரியில் ஓராண்டு ஆங்கிலத்தில் புகுமுக வகுப்பு படித்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது 1978 – 1979 கல்வியாண்டில். தொடர்ந்து வந்தது புதிய "பிளஸ் டூ" முறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிளஸ் டூ முறை. பள்ளியிறுதி வகுப்பு என்பது பத்தாம் வகுப்பு என மாற்றப்பட்டது. கல்வியாண்டுகள் 1978 -1980 இல் முதல் மேல்நிலை வகுப்பு அல்லது பிளஸ் டூ வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் யாவும் மேல்நிலைப்பள்ளிகளாக மாறின. இம்முறை வழங்கிய ஆக்கப்பூர்வமான விளைவுகள், பலருக்கும் முட்டுக்கட்டையாக இருந்த உயர்கல்வி தடையை நீக்கியதுதான்.

கல்லூரி உயர்கல்விக்குத் தேவையான கல்வி பள்ளிகளிலேயே போதிக்கப்பட்டது. இதனால் வெளியூரில் கல்வி, புதிய கல்லூரி மற்றும் விடுதி வாழ்க்கை என்ற மாறுதல்கள் தவிர்க்கப்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையான காலத்தில், அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் சூழலில் எந்த ஒரு மாறுதலுமே இல்லாது, இது போன்ற தேவையற்ற சூழ்நிலை மாறுதல்கள் என்ற மாற்றத்தடைகள் அறவே நீக்கப்பட்டது.

அத்துடன், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள் அதே படிக்கும் முறையில் கற்கும் வாய்ப்பும் தொடர்ந்தது. இதனால் இவர்களுக்குப் பயிற்று மொழித் தடுமாற்றம் என்பது கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகுதான் துவங்கியது. ஆனால் மூன்று, நான்கு, ஐந்து ஆண்டுகள் என்று விதம் விதமான பயிற்சித் தேவை உள்ள பட்டப் படிப்புகளில் அவர்கள் துவக்கத்தில் தடுமாறிச் சறுக்கினாலும் மீண்டெழ வாய்ப்பும் கிடைத்தது. உயர்கல்வியில் நுழைந்து அதை முயன்று முடிக்கவும் முடிந்தது. மாறாக, அவர்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாற்றிக் கொண்டிருந்தாலும் கூட, 1950 களில் கல்லூரியில் இருந்த இரண்டாண்டு இண்ட்டர்மீடியட் வகுப்பு போலப் பயிற்றுமொழியினால் வரும் மாற்றத்திலிருந்து மீண்டு வர ஒரு வாய்ப்பும் கிடைத்தது. இதனால் பயிற்றுமொழியினால் வரும் தடை என்பதும் நீக்கப்பட்டது.

ஒரு முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1970 களின் இறுதியில் இந்த இரு முக்கியத் தடைகளும் நீங்கிய காலத்தில் பெண்கல்வியின் கண்ணோட்டமும் சமூகத்தில் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அத்துடன் பல தனியார் கலைக்கல்லூரிகளும், பற்பல தொழிற்கல்வி வழங்கும் பல்கலைக் கழகங்களும் தோன்றியதில் பலருக்கு உள்ளூரிலேயே உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மாற்றங்கள் பெண்கள் உயர்கல்வியில் அதிக அளவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ இப்பொழுது உயர்கல்வியில் தடை என்றால் இருவருக்கும் பொதுவாக அது பொருளாதார அடிப்படையினால் ஏற்படும் தடங்கல் மட்டுமே என்ற நிலைக்குத் தமிழகம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.

நன்றி:  சிறகு 
மார்ச் 8, 2014 

#கல்வி, #சிறகு, #Themozhi 

Monday, March 3, 2014

கைவிளக்கை உருவாக்கிய காரிகை

கைவிளக்கை உருவாக்கிய காரிகை


கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில் வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

இந்தப் பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்கூடியது.

இவரது தாய் பூர்வீகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்குத் தனது தாயின் நாடான பிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது பிலிப்பைன்ஸ் தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தைச் சேகரிக்க சோலார் செல் என்றழைக்கப்படும் சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றிப் பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்வது அவருக்குச் சிறந்த வழியாகத் தோன்றியது.

இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை, கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்க்கான பிரிவில் இவரது கண்டுபிடிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையான  கட்டமைப்பும், அத்துடன் இந்தக் கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

இவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுப்புறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிரப் பயன்படுத்தப்படுகிறது.


இவ்வாறு வெப்ப மின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்ப மின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெல்டியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறை மின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்பட்டிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்பொழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.


பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஓர் அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள வெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கிக் குறை மின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்ப மின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்கும் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

பலருக்குப் பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.


தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php


நன்றி: வல்லமை 


#அறிவியல், #பெண்கள், #வல்லமை, #Themozhi 



மார்ச் 3, 2014