Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Wednesday, June 25, 2014

"ஈஸி... வசந்த்"

"ஈஸி... வசந்த்"


நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்... என்று திட்டியபடி செல்போனை  சோபாவில் வீசியெறிந்தான் வசந்த்.  அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

"ஈஸி... வசந்த்" என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

அந்தப் பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள்.  தலையில்  கிரீடமாகக்   கறுப்புக் கண்ணாடி...காற்சட்டையில் துழாவி தனது  செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள். 

கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான்.  ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது. 

முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கே புரியவில்லை. 

"ஹலோ" என்றான் அவளை நோக்கி, இவள் யார்  எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்த்தின் குரலில்.  

"ஹலோ" என்றாள் அவளும், தனது போனில்.

"நான் உன்னிடம்தான் பேசுகிறேன்"

"நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை"

எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

"பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்காரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்"

"டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?"

"ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல"

"நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை"

விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது"

"நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்" என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

"உன்னை உதைப்பேன் என்கிறாள்"

"நீங்க வேற அதை  எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?" வசந்த் அவளை முறைதான்.

"ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட்,  வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக்  டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன்.  வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ்  பண்றேன்னு சொன்னார்". 

கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான். 

"நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?"

"நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்"

"அட சட்... பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு  ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்கச் சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்". 

"தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி ...தேவுடா..." என்று பாடி உதட்டைச் சுழித்து அழகு காட்டிய  தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.  

"அது சரி, நாங்க வந்த  போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?"

"ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ...." 

"ஓ ....அந்த அளவுக்கு முத்திப் போச்சா"

"பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க"

"நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்...  தேனு,  தேனுண்ணு ஒரு பொண்ணு"

"அதும் பேரும் தேனு தனா?"

"ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க, வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம்.  அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு.  இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர்  டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம்.  கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு  அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் ."

"பிறகு சென்னையில் அந்த  செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு  தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன்  விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும்  சுருட்டிக் கொண்டோடிவிட்டான்.   போதாக்குறைக்கு  ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான்.  ஜானுவுக்கும்  தேனுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை.  பொறுக்க முடியாமல்,  இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு  பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான்.  அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான்.  உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம்  புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க.  அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை.  தெருவில் உருண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க.  தெருவே வேடிக்கப் பாத்துது.  அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். "

"இதுக்கும்  நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது". 

"இருங்க பாஸ்.  பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட்.  அந்த மூணாவது பொண்ணு நேத்து  ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது.  அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான்  வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான்.  போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன்.  அவனிடம்  என்னை அறிமுகப் படுத்தி  வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன்  ரொம்பவே  உற்சாகமானான்."

"அந்த மாதிரி உற்சாகமானவனை  நீங்க   திட்ட  காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ்  ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்"

"தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க"

"கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?"

"அப்படி ஒரு  ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், "யோவ், நான்  உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே.  மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்.  சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன்.  பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க.  ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா?  மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன்.  தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன்,  தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில்  இருக்கிற தண்ணியெல்லாம்  முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன்.  நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே" அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

"நீ நெனச்சது சரிதான்"

"தேன்க் யூ  ப்ரபொசர்"

பாஸ்...என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து "இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்..." என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

"வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான்  ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற  லாயரா வருவேனா?" என்றாள் தேனு.

அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா  என வசந்த்திற்குப் புரியவில்லை.

"நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தைப் பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன்.  உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது".

"ஃபை..ஃபை..சொதப்பி   ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை" என்ற தேனு  எழுந்து ஆடினாள்.

"என்ன இங்க கொண்டாட்டம்?  ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது"

"வாங்க  ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்"

"நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர  பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு"

"பை, பை சீரியோ..."

தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும்.  ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன்.  "பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும்  கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?"

"ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு"

"என்ன பாஸ் திடீர்னு தத்துவம்"?

"தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?"

"இருக்கும்".... தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது "ஆனால் இருக்காது பாஸ்."

"ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?" பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

"வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்"  

"வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு" என்றாள் தேனு.






[தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் "கணேஷ்-வசந்த்" கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாற்றின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

நன்றி: வல்லமைக் குழுமம்
https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

ஜூன் 25, 2014

#சிறுகதை, #Themozhi