Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Sunday, January 4, 2026

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்

ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்


உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மக்களிடையே சமயச் சார்பு, இறை நம்பிக்கை ஆகியன குறைந்து வரும் காரணத்தால் தேவாலயங்கள் போகும் வழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.  அத்துடன், உலக அளவில் இறைமறுப்பு /சமயம் சாராதவர் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. 

தோராயமாக;  இன்றைய உலகில்  4 பேரில் ஒருவர் கிறித்துவராகவும் (28.8%), ஒருவர் இஸ்லாமியராகவும் (25.6%), ஒருவர் கடவுள்/சமய நம்பிக்கை சாராதவராகவும்(24.2%), மற்றும் ஒருவர் எந்த பிற சமயத்தவராகவோ( இந்து/பௌத்தம்/யூதம்/மற்றும் பிற=21.4%) இருப்பதாக  பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Center) அறிக்கை கூறுகிறது.

 


உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையில் இந்து மதத்தினர் அதிகம் இருப்பதற்கு  ஒரே காரணம் இந்தியாவின் மக்கள்தொகை அதிகம் இருப்பதாலும்,  அவர்களில் 80% மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதாலும் மட்டுமே. இந்து சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால் இந்திய-இந்துக்களின் மக்கள்தொகையை அதிகரித்தால் மட்டும்தான், அவர்களும் இந்து சமயக் கொள்கையைத் தொடர்ந்தால் மட்டும்தான் இயலும். 

உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், தேவாலயங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.  இதற்கு முக்கியமான காரணம் ஆலயங்களுக்கு  வரும் மக்கள்தொகை குறைவது, அதன் தொடர் விளைவாகப் பெரிய வழிபாட்டு இடங்களைப் பராமரிக்கும் செலவும் கட்டுப்படியாகாமல் போவதும்தான்.  சமயம் இறை நம்பிக்கை ஆகியன குறித்து மக்கள் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றமும், நகரமயமாக்கல் வளர்ச்சியும் ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் நிலை குறைவதன் மூல காரணங்களாக அமைகின்றன. 

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி நாடுகளிலும்; அமெரிக்கா, கனடா ஆகிய  வட அமெரிக்க நாடுகளிலும்; ஆஸ்திரேலியாவிலும் மக்கள் வருகையற்ற ஆலயங்கள் முதலில் பராமரிக்க இயலாமையால் மூடப்படுகின்றன. பல ஆண்டுகளாகப்  பயன்பாட்டில் இல்லாத வழிபாட்டு ஆலயங்கள் பின்னர் கட்டிட விற்பனை சந்தையில்  வைக்கப்படுகின்றன (https://www.churchesforsale.com/).  அவற்றை வாங்குபவரின் திட்டப்படி பின்னர் அவை மிகப் பெரிய வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவன கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள், சிறு தொழிற்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பண்பாட்டு மையங்கள்  என்ற மாற்றங்களைப் பெறுகின்றன. 
பொது வெளியில் சமய விழாக்கள், வழிபாடுகள் நடத்தப்படுவது  குறைவதும்; இயல்பாகவே ஏற்படும் பிற வாழ்வியல் நடைமுறை மாற்றங்களால் வெளிப்படையாக மத அடையாளங்களை அணிவதை,  பொது வெளியில் மதம் குறித்த உரையாடல்களை மக்கள் கைவிடுவதும்   காலப்போக்கில் சமய சச்சரவால் ஏற்படும் கலவரங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் குறைத்து விடும். மக்கள் அனைவரும் தத்தம் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் போது, நேரில் அருகில் உள்ளவர்களிடையே உரையாடலே இருப்பதில்லை. பிறகு,  சர்ச்சைக்குரிய உரையாடல் ஏது? பின்னர் அதனால் ஏற்படக்கூடிய மனக்கசப்பு, சண்டை சச்சரவுதான் ஏது? இதனால் தொலைநுட்ப வளர்ச்சிக்குத்தான் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். 

இன்றைய புள்ளிவிவரங்களின் படி சீனா (1.3 பில்லியன்), அமெரிக்கா (101 மில்லியன்),  ஜப்பான் (73 மில்லியன்) ஆகிய நாடுகளில் சமயம்-இறை சாரா கொள்கை கொண்டவர் எண்ணிக்கை மிகுதி. இந்த நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதும், அவர்கள் உருவாக்கித் தரும் கண்டுபிடிப்புகளைக் கொண்டு இந்திய ஆன்மிக மக்கள் தங்கள்  மதச் சடங்குகள் வழிபாடுகள்  ஆகியவற்றின் மூலம் மதத்தை வளர்க்கிறார்கள் என்பதுதான் நகை முரண். அண்மையில் அடுக்குமாடிக் குடியிருப்பு புதுமனைப் புகுவிழாவில் வேதியர் மந்திரம் சொல்ல ஒரு தானியங்கு பசு பொம்மை பயன்படுத்தப் பட்டு சடங்குகள் செய்யப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்ததை இங்கு நினைவு கூரலாம் (https://www.youtube.com/shorts/f99bGVFtatM).  இக்கருத்தை அறிஞர் அண்ணாதுரை  சென்ற நூற்றாண்டில் எழுதிய ஆயுத பூஜை கட்டுரையிலேயே சுட்டிக் காட்டி இருப்பார். 

புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதைவிடக் கண்டுபிடிக்கப்பட்டவற்றை இந்தியர் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கும் நிலை மாற வேண்டும் என்றால் இந்திய மக்களிடம் அறிவியல் சிந்தனையும் மனப்பாங்கும் வளர வேண்டும்.  அந்த மானப்பான்மையையும் அரசியலமைப்பு வரையறை கொண்டுதான் இந்தியாவில் வளர்க்க வேண்டிய ஒரு நிலை. அறிவியல் கருத்தரங்குகளில்  ஆன்மிகப் புராணக்கதைகளைப் பேசித்  திரிக்கும் நிலையும் நடைமுறையாக இருக்கிறது. அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற  அறிவியல் அறிஞர் வெ.ராமகிருஷ்ணன் இந்தியா அறிவியல் கருத்தரங்கங்கள் சர்க்கஸ் போல நடைபெறுகின்றன அவற்றில் நான் இனி பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்ததை நாம் கடந்து போக இயலாது. 



 
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் மக்களிடையே சமயச்சார்பு இன்மையும் இறைநம்பிக்கை இன்மையும் அதிகம் இருப்பதை  ஆய்வறிக்கைகள்  காட்டுகின்றன.  பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் எனத் தொடர்ந்து தரவரிசைப் படுத்துதலில் முன்னிடங்களில் உள்ளன.  இந்நாடுகள்  மதச்சார்பற்றவையாகவும் அதிக அளவில் இறை நம்பிக்கையற்ற மக்கள் வாழும் நாடுகளாகவும் அறியப்படுகின்றன.  இந்நாடுகளில் நிலவும் பொருளாதாரம், மக்களுக்கு ஆதரவான சமூக சூழ்நிலை, தனிமனித உரிமை ஆகியவையும் (Economic prosperity, High social support, Freedom to make life choices) மேம்பட்ட நிலையில் இருப்பவை. பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளின் மக்கள் வாழ்வில் பசி, வறுமை, நோய் குறித்த கவலைகளும் குறைவு.  மனித நேய அடிப்படையில் சமூக ஆதரவுகள் அதிகம் இருப்பதுடன், தனி மனித வாழ்க்கையில் அவர்களின் வாழ்வின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்றத்தைத் தடுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும் குறைவு.  

எங்கு மக்களுக்கு  அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதில் சிக்கல் இல்லையோ, எங்குத் தனிமனித உரிமை மதிக்கப் படுகிறதோ அந்தச் சூழலில் அவர்களுக்குப் பொதுவாழ்வில் மனமகிழ்ச்சி ஏற்படுவதும்;  அதன் காரணமாக அம்மக்கள்  தங்களுக்கு இறைமூலமோ  சமயம் மூலமோ  மீட்சி மற்றும் உதவி தேவை என்ற நிலையில்  இல்லாமல் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். துன்பம் ஏற்படக்கூடும் என்ற கலக்கமும், மக்களுக்குத் துன்பம் நேர்கையிலேயே கடவுள் குறித்த எண்ணம் உருவாவதன் உளவியல் அடிப்படைக்குச் சான்றாகவும் இதனைக் கருதலாம். "மதம் மக்களின் போதைப்பொருள்" ("religion is the opium of the people" ) என்ற  கார்ல் மார்க்ஸின் கூற்று இதனை விளக்கக்கூடிய ஓர் உண்மையே. சமய போதையில் ஆழ்ந்து மக்கள் கவலைகளை எதிர்கால அச்சத்தை மறக்க முயல்கிறார்கள்.


சான்றாதாரங்கள்: 
How the Global Religious Landscape Changed From 2010 to 2020
https://www.pewresearch.org/religion/2025/06/09/how-the-global-religious-landscape-changed-from-2010-to-2020/
June 9, 2025

List of religious populations
https://en.wikipedia.org/wiki/List_of_religious_populations

Indian Science Congress is a circus, won't attend it: Nobel laureate V Ramakrishnan
https://www.firstpost.com/india/indian-science-congress-is-a-circus-wont-attend-it-nobel-laureate-v-ramakrishnan-2572268.html#google_vignette
January 6, 2016

These Are the World’s Happiest Countries in 2025
https://www.afar.com/magazine/the-worlds-happiest-country-is-all-about-reading-coffee-and-saunas
By Michelle Baran, March 20, 2025
 
2018 data: Across countries, the happiest ones are the least religious
https://whyevolutionistrue.com/2018/03/22/2018-data-across-countries-the-happiest-ones-are-the-least-religious/
March 22, 2018

Are religious people happier, healthier? Our new global study explores this question
https://www.pewresearch.org/short-reads/2019/01/31/are-religious-people-happier-healthier-our-new-global-study-explores-this-question/

நன்றி:
தமிழ் மரபுத் திணை — 39 [ஜனவரி — 2026]
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2026/01/tamil-marabu-thinai-39-january-2026.pdf  





#இறைமறுப்பு, #அறிவியல், #ஆன்மிகம், #திணை, #Themozhi

Sunday, November 23, 2025

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்—அறிவியல் நூல் அறிமுகம்

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்அறிவியல் நூல் அறிமுகம்

பேரா. முனைவர் மு. முத்துவேலு, சென்னை

     அறிவியலை ஆய்வுகளை ஆக்கம்சேர் கணிப்பொறியைப் 
     பொறியியலை மருத்துவத்தைப் பொதுமைசேர் சட்டத்தின் 
     நெறியதனைத் தமிழாக்கி நிறைந்துவரும் நூலியற்றி 
     அறிவுசார் மொழிஎன்று அவனிக்குக் காட்டிடுவோம்! 
என்னும் என் கவிதைக்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை அருந்தமிழில் எழுதி அறிவியல் தமிழைப் பரப்பி வருகிற அறிஞர் பெருமக்களுள் முனைவர்  தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இந்நூலில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் என்னும் கட்டுரை தொடங்கி முச்சொல் முகவரி என்னும் கட்டுரை வரை உள்ளன. இந்த நூலில் அறிவியல் உலகத்தில் பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும் அறிவியல் கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகளும், சில அறிவியல் செய்திகளும் அடங்கி உள்ளன.

அறிவியல் அறிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகையில் நிறைவாக அந்த அறிவியல் அறிஞரின் நினைவாக உலகம் போற்றி வருகிற செயல்பாட்டினை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்குக் காத்தரின் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சுட்டிக் காட்டத் தக்கதாகும். அதைப் போலவே டிமிட்ரீ மெண்டலீயா என்னும் ருசிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் பெயரில் அறிவியலில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடுவது மேனாட்டு உலகம் அறிவியல் அறிஞர்களைப் போற்றிப் பாராட்டுகிற செயல்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

தொற்றுநோய்ப் பரவலைக் காட்டும் மருத்துவப்புவி வரைபடங்களின் வரலாறு எனும் கட்டுரையில் உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளை நோய் குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்களையும் அதன் செயல்பாடுகளையும் அதனைக் கண்டறிந்த வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இக்கட்டுரை நூலில் மூன்று பக்கங்கள் முதல் 15 பக்கங்கள் வரையிலான கட்டுரைகள் அடங்கியுள்ளன. சென்னைப் பெருநகரில் காலரா நோய் பரவியதற்குப் பின் அதனைத் தடுக்கும் நோக்கில்தான் இலண்டன் மாநகரைப் போலச் சென்னை நகரிலும் கழிவுநீர் வடிகால் வசதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றுச் செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது சென்னை நகரின் கழிவுநீர் வடிகால் வசதியின் வரலாற்றைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்ல நம் கைப்பேசித் திரையில் உலக வரைபடத்தைத் திறந்து நம் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடக்கமாகக் கடலுக்கு நடுவே செல்லுகிற கப்பலை ஒட்டுகிற மாலுமிகள் தாங்கள் செல்லும் திசையையும் கடலில் தாங்கள் கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதையும் கண்டறிவதற்கான அந்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வைக்கண்ட கடற்கால மாணி குறித்த கட்டுரை சுவையானதாக அமைந்துள்ளது.

உலக வரைபடங்களை உருவாக்கிப் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதனுடைய துல்லியம் இன்னும் செம்மைப் படவில்லை. அந்தத் துல்லியத்தை நோக்கித்தான் வரைபடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வரைபட வரலாறு இன்னும் அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்குக் கட்டுரை சான்றாக அமைகிறது.

முச்சொல் முகவரி என்ற கட்டுரையும் உலக வரைபடத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "அறிவியல் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய இன்றியமையாமையைத் தேமொழி தெரியப்படுத்துகிறார்" என்று பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம். அறிவியல் கருத்துக்களை எழுதும் பொழுது அதன் மொழிநடையும் சொல் பயன்பாடும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் முனைவர் தேமொழி அவர்கள் எளிய சொற்களில் ஊடகத் தமிழ் நடையில் எல்லோருக்கும் புரிகிற மொழியைப் பயன்படுத்தி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அறிவியல் அறிஞர்களின் படங்களையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் தேடிக் கண்டெடுத்து நூலிலே இணைத்திருப்பது, தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்கு இடையில் சற்று இளைப்பாறுதலையும் சுவையையும் ஊட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அறிவியல் ஆக்கங்களை எல்லாம் அருந்தமிழில் எழுதிப் பரப்பி வருகிற முனைவர் தேமொழி அவர்களின் அறிவியல் தமிழ்ப் பணி மேலும் சிறக்க அறிவியல் பூங்காவின் நல்வாழ்த்துக்கள்!


நன்றி:
அறிவியல் பூங்கா, மலர்: 17, இதழ்: 68, பக்கம் : 46 

______


நூல் : அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
ஆசிரியர் : தேமொழி 
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை (+91 70109 97639)
விலை : ரூ.150/-
______


என்னுடைய நூலுக்கு  நூலறிமுகம் கொடுத்துப் பாராட்டி  ஊக்கம் அளித்துள்ள பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


#Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல், #அறிவியல்பூங்கா, #நூலறிமுகம், #முனைவர்மு.முத்துவேலு

Tuesday, March 19, 2024

மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும் - கேரளத்தமிழ்

"மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்" கட்டுரை

மார்ச் (2024) மாதத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மாத இதழான கேரளத்தமிழ் இதழில் வெளியிடப்பட்டது.  வெளியிட்ட திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இதழின் ஆசிரியர்களுக்கு என் மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றியுடன்

தேமொழி 

 

நன்றி : கேரளத்தமிழ்
மார்ச் (2024) - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மாத இதழ்  
மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்

#கேரளத்தமிழ், #அறிவியல், #Themozhi