Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Wednesday, December 24, 2025

திருக்குறள் வைப்புமுறை

 'திருக்குறள் வைப்புமுறை' 


மக்களுக்குத் திருக்குறளின் பாலுள்ள ஈடுபாட்டினைப் புலப்படுத்தும் வகையில் இந்நாள்வரையிலும்  திருக்குறளுக்கு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன.  திருக்குறள் நூலுக்கு எழுந்த பழைய உரைகள் பத்தும் எழுதியவர்கள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்று பதின்மரைத் திருக்குறளின் உரையாசிரியர்களாக ஒரு வெண்பா கூறுகின்றது.  திருக்குறள் உரையாசிரியர்களுள் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவர் என்றாலும் அவர் உரையினையே பெரும்பான்மையர் தழுவி குறள் நூல்கள் எழுதத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் எழுதுகையில்   பரிமேலழகர் கையாண்ட அதிகார வரிசைப்படுத்தும் முறையையும், அவற்றில் இருக்கும் குறள்களின் வரிசையையும் மற்றவர் பின்பற்றத் தொடங்கியதில் இன்று அது தர நிலைப்படுத்தும் முறையாகத் தானே அமைந்துவிட்டது.  

வள்ளுவர் என்பது ஆசிரியரின் இயற்பெயர்தான் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை, திருக்குறள் என்பதும் பாடலின் இலக்கண அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர் என்ற நிலையில், அப்புலவர் எழுதிய 1330 குறளையும் அவர் 133 அதிகாரங்களாகப் பிரித்தார் என்பதை மட்டும் திருக்குறள் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியச் சமயங்கள் அறிவுறுத்தும் மனிதர் அறியவேண்டிய மெய்ப்பொருள் (புருஷார்த்தம்-தருமம்/அறம், அருத்தம்/பொருள், காமம்/இன்பம், மோட்சம்/வீடு) என்று நான்கு வகைப்படுத்தப்பட்டாலும் வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த முயன்றதாகத்  தெரியவில்லை. வீடு என்பது அறத்தின் பயன் என்பதால் அதை அறத்துப்பாலில்  அடக்கிவிட்டார் வள்ளுவர் என்பது உரைகாரர்கள் கருத்தாக அமைகிறது. ஆதலால், முப்பாலுடன் வள்ளுவரின் பகுப்பு முறை முடிந்தது என்று தெரிகிறது. அது வள்ளுவரின் கொள்கை நிலைப்பாட்டை அறிவுறுத்தும் மிக முக்கியமான குறிப்பு என்பதையும் மறுப்பதற்கு இல்லை. 

இருப்பினும், முப்பால் பிரிவுக்குள் இயல்கள், அதிகாரங்கள் ஆகியனவற்றை வகைப்படுத்துதலை இன்றுவரை பல தமிழ் அறிஞர்கள்  முயன்றுள்ளனர். காமத்துப்பாலை  முதலில் வைக்க வேண்டும் என்று கருதியவர்களில் மு.வரதராசனும், கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர்கள். அவரவர் பார்வையில், அவரவர் முன்வைக்கும் ஏரணப்படி வரிசைப்படுத்தப்படுவது திருக்குறளின் கட்டமைப்பாகவும் உள்ளது என்றாலும், பரிமேலழகர் முறை பொதுமுறையாக நிலைத்துவிட்டது; அதனால் மு.வரதராசனும் அதையே பின்பற்றி தெளிவுரை எழுதினார். எனினும், பழைய உரைகாரர்களில்  காலத்தால் முதன்மையானவர் மணக்குடவர் என்பதால் அவர் முறையைத்தான் நாம் செம்பதிப்பு முறைக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வைக்கப்பட்டாலும், வழக்கத்திற்கு வந்துவிட்டதை இனி மாற்றுவது கடினம் மட்டுமல்ல தேவையற்றதும் ஆகும்.  

பழைய பத்து உரைகாரர்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்தாலும் அவர்கள் சிலரின் உரைகள் நமக்குக் கிட்டியதில்லை. பரிமேலழகர் உரை போன்றே மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பருதியார் ஆகியோர் உரைகளும் தனித்தனியே வெளிவந்துள்ளன. இக்காலத்தில் இந்நூல்கள் பலவற்றை இணையச் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம் (https://archive.org/details/thirukkural_201808/).  அனைத்து உரைகளையும் ஒப்பாய்வு செய்ய உதவும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் அவர்களின் உரைவளப் பதிப்பும், மேலும் சில உரைக்கொத்து, ஒப்பாய்வு பதிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இயல்பிரித்தல், வகைப்படுத்தலில் உரையாசிரியர்களில் இறைநெறி, சமயநெறி, வாழ்வியல் நெறிகளின் தாக்கம் இருப்பதை  மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான திருக்குறள் வரிசைப்படுத்தும் முறையை 'திருக்குறள் வைப்புமுறை' என்பர்.  வைப்புமுறை மாறுதல்களுக்கு, அதிகாரங்களை  வரிசைப்படுத்தும் நோக்கத்தை உரைகாரர் விளக்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடியும். 

பழைய உரைகளில் காலத்தால் முந்திய பத்தாம் நூற்றாண்டு மணக்குடவர்  உரையை, காலத்தால் பிந்திய பதின்மூன்றாம் நூற்றாண்டு பரிமேலழகர் உரையையும் அவற்றின் வைப்புமுறையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.  இவற்றில் இயல்கள் ஒன்றாக இருப்பினும் அதிகாரங்கள்  இயல்களுக்குள் மாறி உள்ளன.   ஓர் எடுத்துக்காட்டுக்காக;  முற்பட்ட மணக்குடவர், பின்வந்த பரிமேலழகர்  ஆகியோரது அறத்துப்பால்  பகுதியின் அதிகார வரிசையை மட்டுமே ஒப்பிடலாம். அறத்துப்பால் அதிகாரங்களில் 1.பாயிரம், 2.இல்லறவியல், 3. துறவறவியல், 4. ஊழியல் ஆகியவற்றில்; முதல் பாயிரம், இறுதி ஊழியல் ஆகியவற்றின் அதிகார வரிசை அமைப்பில் இருவர் வைப்புமுறையும் ஒன்றே, எந்த மாற்றமும் இல்லை. ஊழியியலில் இருப்பது ஒரே அதிகாரம் என்பதால் மாற்றவழியில்லை என்பது வேறு.  

இடையில் உள்ள இல்லறவியலிலும், துறவறவியலிலும் இயல்களில்  உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இல்லறவியலில் 20 அதிகாரங்களும், துறவறவியலில் 13 அதிகாரங்களும் இருவர் வைப்புமுறையிலும் இருந்தாலும், இவற்றுக்குள் அதிகார வரிசைகளும் இடம் மாறியுள்ளன, இயல்களின் அதிகாரங்களும் வேறுபட்டுள்ளன:  
1. இல்லறவியலின் பொறையுடைமை அதிகாரம் வரிசை மாறிவிட்டது. துறவறவியலில் தவமுடைமை, கூடாவொழுக்கம் அதிகாரங்கள் வரிசை மாறிவிட்டன. 
2. மணக்குடவர் முறையில் இருக்கும் வாய்மையுடைமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, புலான்மறுத்தல், கள்ளாமை ஆகிய ஆறு இல்லறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் துறவறவியலுக்கு மாற்றிவிட்டார்.  
3. மணக்குடவர் முறையில் இருக்கும் இனியவைகூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை ஆகிய ஆறு துறவறவியல் அதிகாரங்களைப் பரிமேலழகர் இல்லறவியலுக்கு மாற்றிவிட்டார். 
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இந்த மாற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. இயலுக்குள் மாற்றம் பச்சை நிறத்திலும், இயல் கடந்த மாற்றம் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஒப்பிட்டுப் படிப்பவருக்கு ஏன் இந்த மாற்றம், காரணம் என்ன என்று பல கேள்விகள் எழும். மாற்றத்திற்குக் காரணம் அவர்கள் சார்ந்த சமயநெறிக்கும் பங்குண்டு.  சமணர் என்று கருதப்படும் மணக்குடவர் கொல்லாமை, புலான்மறுத்தல் என்பவற்றை அனைவருக்கும் பொது என்று கருதுகிறார் என்றும்;  பரிமேலழகர்  இவை இரண்டையும் துறவறவியலுக்கு மாற்றிவிட்டால்  வைதீகக் கோட்பாடுகளுக்கு இசைவாக அமையும் என்றும் கருதி இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னணியை  அறியமுயல்வது ஆய்வாளர்களுக்கு மேலும் பல தகவல்களைக் கொடுக்கக் கூடும்.


திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் முப்பால் பிரிவுகளுக்குள் பல்வேறுவகையில் இயல்கள் பிரிப்பதிலும், அவற்றின் கீழ் அதிகாரங்களை வரிசைப்படுத்துவதிலும் மட்டும் வேறுபடவில்லை, அந்த அதிகாரங்களின் குறள்களுக்கு உரை எழுதிய வைப்புமுறையிலும் (வரிசைப்படுத்திக் கொள்வதிலும்) மாறுபடுகின்றனர். இக்காலத்தில் நாம் கையாளும் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றி அதனுடன் மற்ற உரையாசிரியர்களின் குறள் வைப்புமுறையை ஒப்பிட்டுள்ளார்கள் பல ஆய்வாளர்கள்.  
 

வைப்புமுறை வேறுபாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக;  நாணுடைமை அதிகாரத்தின் குறட்பாக்களின் வைப்புமுறையை கிடைக்கும் பழைய உரைகாரர்களான  பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகிய ஐவரின் உரைகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம். இந்த அதிகாரத்தின் குறள்களில் ஒரு குறள்கூட அனைவராலும் அதே வரிசையில் அமைக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகிறது. மு.சண்முகம் பிள்ளை(1972) எழுதிய 'திருக்குறள் அமைப்பும் முறையும்' என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 

பரிமேலழகர் - பரிப்பெருமாள் குறள் வைப்புமுறை ஒப்பீடு:
உரையாசிரியர் பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு, இவருக்கும் முன்னவரான மணக்குடவர் உரையைத் தழுவி இவருடைய உரை எழுதப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கா.ம.வேங்கடராமையா(1988) எழுதிய 'திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரையும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை அப்படியே பின்பற்றியதோடு மட்டுமின்றி, அவரது உரையையும்  அப்படியே எடுத்து எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதும் முறை இவருடையது. எடுத்துக்காட்டாக; 
     நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
     தன்றே மறப்பது நன்று.

[மணக்குடவர் உரை விளக்கம்] இதன் பொருள்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல, பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம் (என்றவாறு). 
[பரிப்பெருமாள் உரை விளக்கம்] இது, தீமை மறக்கவேண்டு மென்று கூறிற்று.
இவர்கள் இருவரும் இக்குறளை 102ஆம் குறளாக வைக்கிறார்கள்; பரிமேலழகர் நூலில் இக்குறள் 108 ஆவது  குறளாக அமைகிறது.  
குறைந்த அளவு வேறுபாடாக, பதினாறு இடங்களில்  பரிப்பெருமாள் மணக்குடவரிடம் இருந்து வேறுபடுகிறார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. 


ஓர் ஒப்பீட்டு  ஆய்வாக, 1330 குறள்களின் வைப்புமுறையில் பரிப்பெருமாளுக்கும் பரிமேலழகருக்கும் அதிகாரங்களின் கீழ்  குறள்களின் வரிசைப் படுத்துதலில் எந்த அளவு வேறுபாடு என்று ஆய்வு செய்த பொழுது: வெறும் 22% மட்டுமே இருவர் வரிசையும் ஒத்துப் போனது. பரிமேலழகர் வைப்புமுறைக்கும் பரிப்பெருமாள் வைப்புமுறைக்கும் இடையில் உள்ள வேற்றுமை 78%. ஒரு தோராயமாக ஐந்து குறள்களில் ஒன்றுமட்டுமே அதே வரிசை எண்ணில் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவு வேறுபாடு காணப்படுகிறது. 

மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய '2' அதிகாரங்களில் மட்டுமே இருவரின் குறள் வரிசைப்படுத்துதல் ஒன்றாக இருக்கிறது;
அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல், தவம், வாய்மை , அறிவுடைமை, குற்றங்கூறாமை, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், பொச்சாவாமை, கொடுங்கோன்மை, வினைத்திட்பம், மன்னரைச் சேர்ந்தொழுகல், அவை அஞ்சாமை, தீநட்பு, புல்லறிவாண்மை, உட்பகை, மருந்து, பெருமை, நன்றியில் செல்வம், நாணுடைமை, இரவச்சம், அலர் அறிவுறுத்தல், பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, கனவுநிலை உரைத்தல், அவர்வயின் விதும்பல், புணர்ச்சி விதும்பல், புலவி நுணுக்கம், ஊடலுவகை ஆகிய '30'அதிகாரங்களில் எல்லாக் குறள்களுமே வரிசை மாறியுள்ளன;
இவை தவிர்த்த '101' அதிகாரங்களில் ஆங்காங்கே ஒரு சில குறள்கள் தற்செயலாக அதே வரிசையில் அமைந்துவிடுவதாகத் தெரிகிறது. 



இதற்கான மாதிரி ஒப்பீடு அட்டவணையின் படம்  இணைக்கப்பட்டுள்ளது.  படத்தில் பச்சை நிறம் இருவர் வரிசையிலும் இசைந்து செல்லும் குறள்கள்.  மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய அதிகாரங்கள் ஒத்திருப்பதையும்; அன்புடைமை அதிகாரத்தில் எல்லாமே மாறி இருப்பதையும்; மற்றவற்றில் ஒரு சில குறள்கள் மட்டுமே ஒத்திருப்பதையும் காணலாம். முழுமையான 1330 குறள்களுக்குமான ஒப்பீட்டு அட்டவணை https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.   (291) வாய்மை

     சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
     செய்யாமை மாசற்றார் கோள்.   (311) இன்னா செய்யாமை

என்று அதிகாரத் தலைப்பை வரையறுப்பது போன்ற குறள்களை பரிமேலழகர் அவற்றுக்கான அதிகாரங்களின் முதல் குறளாக மாற்றியது  சிறப்பாக உள்ளது. எனினும், பிற இடங்களில் இதே முறையை அவர் பின்பற்றியதாகவும் தெரியவில்லை. ஆதலால், இதுவும் தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் அமைப்போ என்று எண்ண வைக்கிறது.  மாற்றத்துக்கான அடிப்படை ஏரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. 

இந்த ஒப்பீடு;  பாடல் தொகுப்பாக இருக்கும் தொன்ம இலக்கியங்களின் பாடல் வரிசை அவ்வாறே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது  என்ற எண்ணம் தவறானது என்று காட்டுகிறது. தொகுப்புப் பாடல்களாக இருக்கும் இலக்கியங்களில் பாடல் வரிசைகளில் காலம்தோறும்  மாற்றம் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புண்டு  என்ற புரிதலையும்  தருகிறது.

Tuesday, December 9, 2025

எண்ணென்ப சொல்லென்ப

எண்ணென்ப சொல்லென்ப 

திருக்குறளில்  அறம், பொருள், இன்பம் என்று முப்பால் உள்ளது, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என்ற எண்ணிக்கையில் 133 அதிகாரங்களில் மொத்தம் 1330 குறள்கள்  உள்ளன. ஒரு குறளில் முதல் அடியில் 4 சீர்கள், இரண்டாம் அடியில் 3 சீர்கள் என 7 சீர்கள் கொண்டது ஒரு குறள்  என்ற அடிப்படைத் தகவலைப் பள்ளிச்சிறார் முதற்கொண்டு அனைவரும் அறிவோம். மேலும் அறத்துப்பாலில் 4 இயல்களும், பொருட்பாலில் 3 இயல்களும், இன்பத்துப்பாலில் 2 இயல்களும் என திருக்குறளில் மொத்தம் ஒன்பது இயல்கள் உள்ளன. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் (380 குறள்கள்), பொருட்பாலில் 70 அதிகாரங்கள் (700 குறள்கள்), இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள்(250 குறள்கள்) என்ற கணக்கும் படித்திருப்போம். குறளுக்கு 2 அடி என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் குறளில் 2660 அடிகள் என்றும்,  ஒரு குறளுக்கு 7 சீர் என்பதால் 1330 குறளுக்கும்  கணக்கிட்டால் திருக்குறளில் 9,310 சொற்கள் இருக்கலாம் என அடுத்த கட்டமாக ஒரு தோராயமாக மதிப்பிடுவோம்.  

ஆனால், இதற்கும் அடுத்த கட்டமாக, திருக்குறளுக்குத் தொடரடைவு செய்த முனைவர் ப. பாண்டியராஜா, "திருக்குறள் - சொற்கள் - எண்ணிக்கை" என்று தனது ஆய்வுத் தளத்தை விரிவாக்கி ஆராய்ந்து இருக்கிறார் என்பதை அவருடைய தமிழ் தமிழ் இலக்கியத் தொடரடைவு தளத்தில் (http://tamilconcordance.in/TABLE-kuraL.html) உள்ள ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறியலாம். இனி திருக்குறள் குறித்து அவர் தளம் தரும் புள்ளி விவரங்களில்  ஒரு பார்வை: முனைவர் ப. பாண்டியராஜா திருக்குறளில் 11368 சொற்கள் உள்ளன என்றும்; அவற்றில் மீண்டும் மீண்டும் வராத சொற்களாக 4902 சொற்கள்  உள்ளன எனவும் குறிப்பிடுகிறார். சொற்களைப் பிரித்துக் கணக்கிட்ட  முறையை 'பிரிசொற்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாலறிவன் என்பதை வால்_அறிவன் என அவர் கையாண்ட முறையை விளக்குகிறார். இதனால் சொற்களின் எண்ணிக்கை 11368 என்ற அளவை எட்டியுள்ளது. 

அடுத்து, கூட்டுத் தொடரடைவு என்ற முறையில் சங்க இலக்கியப் பாடல்களில் (பத்துப்பாட்டு+எட்டுத்தொகை) உள்ள சொற்களையும், திருக்குறளில்  காணப்படும் சொற்களையும், "சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள், பொதுவல்லாத சொற்கள்"  என்று ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுகிறார். 
1. சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச்சொற்கள்: 
இப்பிரிவில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களைப் பொதுவான சொற்களாக  வகைப்படுத்துகிறார். அதாவது, 'பகவன் முதற்றே உலகு' என்பதில் இடம் பெறுவது போன்றே,  'உலகு காக்கும் உயர் கொள்கை (புறம்-400) என்ற புறப்பாடலிலும் "உலகு" என்ற சொல் இருப்பது  பொதுச்சொல் ஆகும். அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள் ஆகும். 

திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.  எனவே, (சங்க இலக்கியத்தில் இல்லாமல்) திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள் என்ற பிரிவில் குறளில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்.  திருக்குறளில்  இடம்பெறும் அடிமை, பகவன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை என்று எடுத்துக்காட்டி  விளக்குகிறார். சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள் என  2600 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

2. சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள்: 
சங்க இலக்கியத்தில் இடம் பெறாமல் திருக்குறளில்  மட்டுமே இடம் பெறும் சொற்கள் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேல் என்றாலும், திருக்குறளில் உள்ள 'அஞ்சுக' என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டதை  நினைவில் கொள்க. இப்பிரிவில் 2180 சொற்களை இவர் பட்டியலிடுகிறார். 

மொழியின் வளர்ச்சியில் புதுச்சொற்கள் மொழியில் பயன்பாட்டிற்கு வருவதும் சில வழக்கொழிவதும் இயல்பே. எனவே திருக்குறளில்  மட்டுமே வரும் சொற்கள் எவை என்று பார்வையிடுகையில் ஓர் எழுபது சொற்கள் தேர்வு செய்யப்படு இங்கே கொடுக்கப்படுகிறது. இந்தச் சொல் தேர்வுக்குச் சிறப்பு அடிப்படை என எதுவும் இல்லை என்பதைப் படிப்பவர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சொற்களைப் படித்துக் கொண்டே வருகையில், அப்படியா! இது சங்க இலக்கியத்தில்  இல்லையா என்று வியந்த சொற்கள்  இப்பட்டியலில் இடம் பெறுகின்றன.  இப்பட்டியலை வியந்து வியந்து இருமுறை படிக்கப் பரிந்துரை வழங்கப்படுகிறது. இப்பட்டியல் இருவேறு கோணங்களைக் காட்டும். முதலில் சங்க இலக்கியத்தில் இல்லாத திருக்குறள் சொற்களா? என்ற வியப்புடன் படிப்பது. அடுத்து மீண்டும், இன்றும் நம் வழக்கில் இந்தத் திருக்குறள் சொற்கள் உள்ளனவா என்று மற்றொருமுறை படித்து வியப்பது.  

சொல் எழுபது:
சங்க இலக்கியத்தில் இல்லாமல், திருக்குறளில் மட்டும் காணப்படும் 2180 சொற்களில் 70 சொற்கள்:
அகர, அடிமை, அமைச்சு, அறிவது, ஆசாரம், ஆட்சி, இகழ்ச்சி, இதனால், இருட்டு, இல்வாழ்க்கை, 
இழுக்கு, உலகத்தார், ஊருணி, எண்ணம், எனது, எனப்படும், ஒருகால், கடப்பாடு, கடைப்பிடித்து, கயவர், 
கல்வி, கள்ளம், கற்க, குலம், சார்பு, சிலர், செங்கோன்மை, செயற்கை, தலைமக்கள், தள்ளாமை, 
தானம், துப்புரவு, தும்மல், தூக்கம், தூய்மை, தொழும், தோல்வி, நாகரிகம், நுட்பம், நேர்வது, 
பகவன், பயன்படும், பழகுதல், பழங்குடி, பழமை, பாராட்டுதல், பாவம், பாவி, பிற்பகல், பிறந்தார், 
பிறவி, புல்லறிவு, புழுதி, பூசனை, பெருமிதம், மங்கலம், மதிநுட்பம், மாறுபாடு, மானம், முடிவு, 
முற்பகல், மேற்கொள்வது, மேன்மை, வணக்கம், வாணிகம், வியந்து, விழிப்பது, வெல்வது, வெறுப்பு, வேண்டுதல்
மீண்டும் ஒருமுறை படித்து குறளில்  இடம் பெறும்  இன்றும் வழக்கில் உள்ள  சொற்களை அறியவும்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 314 - 10.12.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 


Tuesday, December 2, 2025

'நமது கல்வி முறை'


'நமது கல்வி முறை'





 
"நியாயமான தேர்வு முறை என்பதற்காக எல்லோரும் ஒரே தேர்வை எழுத வேண்டும்: அனைவரும் தயவுசெய்து அந்த மரத்தில் ஏறுங்கள்" என்று கூறும் இந்தக் கருத்துப்படத்தை நாம் நன்கு அறிவோம். இது நமது கல்வி முறையை, அதில் உள்ள  குறைபாட்டை  விமர்சிக்கும் ஒரு கருத்துப்படம். இப்படத்தில் உள்ள கருத்து  அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக அறியப்படும், "எல்லோரும் ஒரு மேதைதான். ஆனால், ஒரு மீனை அதன் மரத்தில் ஏறும் திறனை வைத்து நீங்கள் மதிப்பிட்டால், அது தனது வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு  முட்டாள் என்று நம்பியே வாழும்" என்ற கருத்தைத்  தெளிவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கருத்துப்படம்.  உண்மையில் இந்தச் சொற்றொடர் தவறாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதாகப் பரவலாக அறியப்படும் ஒரு கூற்று. பல பத்தாண்டுகளாகவே கல்வித்துறை சார்ந்த அறிஞர்கள் பலர் சொல்லிவரும்  கருத்துதான் இது என்று இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஒவ்வொருவருக்கும் 'பொதுவான கல்வி' ஒன்றைக் கற்கக் கிடைக்கும் வாய்ப்பும், கற்கும் சூழ்நிலையும், அதில் அவர் காட்டும் திறமையும், பெறும் தகுதியும் வேறு வேறு என்பது மறுக்க இயலாத உண்மை.  பல பின்புலத்திலிருந்து வருபவர்கள் மாணவர்கள். அவர்கள் பெறும் தேர்ச்சி  மதிப்பெண்களை மட்டும் பயன்படுத்தி ஒரு வேலைக்கான அல்லது உயர்படிப்பிற்கான தகுதியை நிர்ணயித்தால், பல நூறாண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவே பின்தங்கிவிடக் கூடிய நிலை தொடரும் என்பது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் வைக்கும் வாதம். குறிப்பிடப்படும் இந்த நிலை  இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ உரிய சூழல் மட்டும் அல்ல. அமெரிக்கக் கல்விப்புலத்திலும் இந்த வாதம் பல ஆண்டுகளாக உள்ளது என்பதைத்தான் அங்குப் பரவலாக விவாதத்தில் உள்ள இக்கருத்தை  விளக்கும் இப்படம் காண்பிக்கிறது. கல்வித் துறையில் இந்த உருவகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையத்தேடலில் மேலும் பல செய்திகள் இது குறித்துக் கிடைக்கும்.  

தமிழ்நாட்டிலும் வகுப்புரிமை குறித்த கருத்து தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டிற்கு  மேல் ஆகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் வகுப்புரிமையை நிலை நாட்டவே என்பதுதான் இந்திய வரலாறு. தமிழகத்தில் தொடங்கிய போராட்டத்தால் ஒன்றிய அரசு அதைக் கவனத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும் அறத்தை நிலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15(4) உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு நாடு முழுவதும், பணியில் கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி போன்ற தொழிற் கல்வி நுழைவுத் தேர்வுகள், கல்லூரியில் மாணவர் சேர்ப்பு நடக்கும் காலங்களில் பொதுவான ஒரு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தேர்வு குறித்த சர்ச்சைகள் எழும்புவது காலங்காலமாகத் தொடரும் ஒரு வழக்கம். 

இந்தச் சர்ச்சைக்கான தீர்வை,  அன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவர் ஒரு குறளில் உணர்த்தியுள்ளார் என்பது பரவலாகப் பேசப்பட்டதில்லை. 

     தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
     பாற்பட்டு ஒழுகப் பெறின்
     [அறத்துப்பால், நடுவு நிலைமை, குறள் - 111]
இக்குறளை நாம் இக்காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது இன்றியமையாதது.  இக்குறளுக்குத் தமிழ் அறிஞர்கள் வழங்கிய உரைகள் பின்வருமாறு:

மணக்குடவர்:  நடுவு நிலைமை என்று சொல்லப்படுகின்ற ஒன்று நல்லதே: அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

பரிமேலழகர் :  தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். 

மு.வரதராசன்: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
 
வ.சுப.மாணிக்கம் : இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச் சிறந்த அறமாம்.

"அவரவர் நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்" என்று மணக்குடவர் தெளிவுபடுத்துவதன் அடிப்படையில் படித்தோம் என்றால் இக்குறளின் பொருளை; பகுதியால் பாற்பட்டு நடந்து கொள்வார் எனின் நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஒன்று நல்லதே என்பதை இப்பாடலின் பொருளாகக் கொள்ள முடிகிறது. 'பகுதியால் பாற்பட்டு' என்பது பல வேறு பின்புலம் கொண்ட மக்களைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். பகுதியான் என்பது பகுதிதோறும் எனப் பொருள்படும் என விளக்குவார் பரிமேலழகர். மக்கட்பகுதி, அவரவர் நிலைமைப் பகுதி, அறப்பகுதி எனவும் உரைகாரர்கள் இதற்குப் பொருள் கூறுவர். 

ஆக, பலபிரிவு மக்களின் தேவை உணர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும்  நலன் விளையும் வகையில் நீதி வழங்கப்படும் முறையை  'எந்தப் பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்ளும் அறம் சார்ந்த நடுவு நிலைமை' என்கிறார் வள்ளுவர். 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்' என்று கூறிய வள்ளுவர் அறம் எது என்பதில் கொண்ட நிலைப்பாட்டை இக்குறளும் விளக்குகிறது.  

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 313 - 03.12.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, November 25, 2025

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

பொதுவாக "உறுதிப்பொருள்கள்" நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், திருவள்ளுவர் எவற்றை எல்லாம் மிக "உறுதியான கருத்துக்களாகக்" கூறுகின்றார் என்று அறிய முயல்வது ஆர்வமூட்டும் ஒரு தேடலாக அமையும் என்பதில் ஐயமில்லை. எதையும் உறுதிப்படக் கூறுவதற்கு இலக்கியத்தில் "தேற்ற ஏகாரம்" பயன் கொள்ளப்படும்.
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.  
என்ற முதல் குறளிலேயே அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பதை "முதற்றே" என்ற தேற்ற ஏகாரத்தில் முடியும் சொல்லாக அமைத்து உறுதிப்படக் கூறுகிறார். தேற்றப் படுத்தும் ஏகாரம்  அல்லது உறுதிப்படுத்தும் ஏகாரம் கொண்டு 'முதற்றே' என்ற சொல் அமைகிறது.

இந்த "ஏகார இடைச்சொல்" தேற்றம் தவிர்த்து;  வினா, பிரிநிலை, எண், ஈற்றசை  எனும் பொருள்களை உணர்த்தியும் அமையும்.
      “தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே,
      ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே
என்பது தொல்காப்பிய இடையியல்  நூற்பா.  

‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்றையும் கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.
      “பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
      இசைநிறை என ஆறு ஏகாரம்மே
ஆக, ஏகார இடைச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் கூட செய்யுள்களில் இடம் பெறுவதுண்டு. இது ஏகார இடைச்சொல் என்பதன் இலக்கணப்  பின்னணி.
குறளில் ஏகார இடைச்சொல் சற்றொப்ப 90 குறள்களில்  இடம் பெறுகின்றன, அவற்றுள் சில;

      சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை. (1031)  
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; இதில் 'உழவே தலை' தேற்றமாகக் கூறப்படுகிறது. தேற்றம் என்றால் தெளிவு, உறுதி என்று பொருள். என்று இதில் ஏ தேற்றப் படுத்துகின்றது. ஆகவே இது  தேற்றம்.

      அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
      புறத்த புகழும் இல. (39)
அற வாழ்வில் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன அல்ல, அவை புகழ்  தராது;   இதில் ஏ என்பது பலவழிகளை ஒப்பிட்டு அறவழியைப் பிரித்துச் சுட்டுகிறது. பிரிநிலை என்றால் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டுவது. ஆகவே இது பிரிநிலை.

      மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
      என நான்கே ஏமம் படைக்கு. (766)
வீரம், மானம், நன்னடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்;  இதில் வீரம், மானம், நன்னடத்தை, நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் என எண்ணிச் சொல்கிறது. ஆகவே இது எண்ணுப் பொருள்.  

குறளில் ஏகார இடைச்சொல்  பயன்கொண்டு தேற்றமாகவும் பிரித்து ஒப்பிட்டுக் காட்டும்வகையில் உறுதியாக உணர்த்தப்படும் கருத்துகள் சிலவற்றைப் பின் வரும் குறள்களில் காணலாம்.
தேற்றம்:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (282)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (293)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் (394)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527)

பிரிநிலை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (76)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (129)
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (221)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 312 - 26.11.2025] 


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, November 11, 2025

குறளுக்கு உரிமை கோரல்

குறளுக்கு உரிமை கோரல்

திருக்குறளின் சிறப்பு, நூலின் ஆசிரியர் யார் என்பதையும், அவர் பற்றிய குறிப்பாக அவருடைய காலம், இடம், சமயம், இனம் என எதுகுறித்தும் எக்குறிப்பையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடாமல் இருப்பது. வள்ளுவர் என்பவர் தமிழ் அறிந்தவர் என்பதையும் அவர் மக்கள் தம்  வாழ்வில் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பி அவற்றைக் குறள் வெண்பாக்களாக எழுதிவிட்டுச் சென்றார் என்பதை மட்டுமே நாம் உறுதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் நூலின் வழியே கிடைக்கும் குறிப்புகள் மூலம் ஏதேனும் அவர் குறித்துத் தெரிந்து கொள்ள இயலுமா என ஆராய்வது ஆய்வாளர்களின் ஆர்வம்.  ஆனால் அது போன்ற தேடல்களைத் தடை செய்ய இயலாது. வள்ளுவரைத் தங்கள் இனம் என்றும், தங்கள் சமயம் என்றும் என்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தமிழ் ஆய்வுலகின் தொடர்கதை.  

வள்ளுவர் ஒரு தமிழறிந்த ஆண் புலவர் என்பதையும், அறம் மிக்க வாழ்வை அவர் வலியுறுத்தினார் என்பதையுமே நாம் அவர் குறித்து உறுதியாகக் கூறக் கூடிய கருத்துகள்.
மழை மீதும், உழவு மீதும் பெருமதிப்பு  கொண்டிருந்தார்;
முன்னோர் வணக்கத்தை ஏற்றுக் கொண்டார்;
ஊழ் என்பதன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்;  
இல்லறத்தைப் போற்றினார் துறவறத்தையும் மதித்தார்;
ஈகைக் குணத்தைப் போற்றினார், பிச்சை எடுப்பதை வெறுத்தார்;
கொல்லாமை, ஊனுண்ணாமை ஆகிய பண்புகளைப்  போற்றினார்;
வாழ்வில் கல்வி, அன்பு, நட்பு, இல்வாழ்க்கை, நல்லொழுக்கம்  ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்;
பொய், களவு, கள், கொலை, காமம் (முறையற்ற உறவு/கணிகையர் உறவு) ஆகிய ஐந்தையும் தீய ஒழுக்கங்கள் என்றார்;
சினம் கொள்ளுதல், கடுஞ்சொல் கூறல், கேடு செய்தல்,  பற்று கொண்டிருத்தல், சூதாடுதல் ஆகியனவற்றைக் கண்டித்தார்;
முற்பிறவி, மறுபிறவி, ஏழ்பிறப்பு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பதை அவர் கொள்கை  நோக்குகளாக அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றின் மூலம் தெளிவாக அறிய முடியும்.  

வள்ளுவர் தன் சமயத்தவர் என உரிமை  கொண்டாட விரும்புபவர்களுக்கு ஆணித்தரமான குறிப்பு  எதையும் அவர் விட்டுச் செல்லாததுடன், அவர் எவற்றையும் பொதுச் சொல்லால் சொல்லிச் செல்வதே பலர் அவருடைய பாடல் குறிப்புகள் மூலம் தங்கள்  பிரிவில் அவரை அடக்கும் முயற்சிக்கு  வழிகோலிட்டு விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை. முதல் குறள் குறிப்பிடும் "ஆதிபகவன்" யார் என்பதிலேயே கேள்விகள் தொடங்கிவிடுகின்றன.  இந்திய நிலப்பரப்பில் தோன்றாத ஆபிரகாமிய சமயங்களும் கூட வள்ளுவரை  உரிமை கொண்டாடும் அளவிற்கு வள்ளுவர்பால் ஆர்வம் கரை புரண்டு ஓடுவது இன்றைய நிலை. இவ்வாறிருக்க, இந்திய மண்ணின் வைதீக சிரமண சமயங்கள் வள்ளுவர் கருத்துக்களின் அடிப்படையில் அவரை உரிமை கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை. குறள் சொல்லும் கருத்துக்களைச்  சீர் தூக்கிப் பார்த்தால்  அவர் யார் என்ற குறிப்பு கிடைக்கக் கூடும்.

வைதீக சிரமண சமயங்களும்  தமிழ் மண்ணுக்குப் புறச் சமயங்களே என்பதைத் தமிழர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வள்ளுவர் ஏதோ ஒரு சமயத்தில்  பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம் அதன் தாக்கமும் அவருக்கு  இருந்திருக்கலாம். மெய்ப்பொருள் காண விழைந்த அவர் பின்னர் வேறு ஏதோ  ஒரு சமயத்தையும் பின்பற்றியும் இருக்கலாம், அல்லது எந்தச் சமயமுமே எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கலாம். உலகைப் படைத்தவர் என்று எவரும் இல்லை (1.atheistic) என்றோ, அல்லது படைத்தவர் யார்? அப்படி என ஒருவர் உண்டா இல்லையா என்ற அக்கறை எனக்கில்லை (2.agnostic) என்ற பிரிவுகளின் கீழும் வள்ளுவர் நகர்ந்து இருக்கலாம். இந்திய மண்ணின் சமணம் பௌத்தம் எனப்படும் சிரமண  சமயங்களை  மெய்யியலாளர் முறையே  முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்துவதைக் காண இயலுகிறது.  ஆக, இறுதியில் வள்ளுவரின் கொள்கைகள் மூலம் அவர் வாழ்வின் சமய நிலைப்பாட்டைக் கண்டுணர இயலுமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

தனி வாழ்வில் அன்புடைமை, அருளுடைமை, அற வாழ்வு, பிறர்க்குத் தீங்கிழைக்காத வாழ்க்கை,  நன்னெறி பின்பற்றல் ஆகிய அறப்பொருள்  கருத்துக்களைக்  கொண்டோ;  அல்லது  பொது வாழ்வில்  மன்னனின் கடமை, மக்களுக்கு முறை செய்தல், பொருளாதாரக் கொள்கை, வரிவிதித்தல்  போன்ற  புறப்பொருள் கருத்துக்களைக்  கொண்டோ வள்ளுவரை ஒரு சமயத்திற்குள்  அடையாளப் படுத்தலாம் என்ற முயற்சி தெளிவான ஒரு முடிவைத் தராது.  ஏன் எனில், மக்களை  நோக்கிய நற்பண்புகளும், வாழ்க்கை நடைமுறைகளும் உலகின் அனைத்து   மண்ணிலும் வழக்கமாகவே இருக்கும், அவை பொதுவான கருத்துகள்.
     அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு. (72)
என்பது உலகம் தழுவிய கோட்பாடு, அனைத்துச் சமயங்களும் தோன்றுகையில் இதை அடிப்படையாகக்  கொண்டே தொடங்கப்பட்டிருக்கும். சமயம் நிறுவனமயமாக்கப் பட்ட பிறகு அதன் கொள்கைகள் மாறிவிடுவதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

     தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
     மெய்வருத்தக் கூலி தரும். (619)

     இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
     கெடுக உலகியற்றி யான். (1062)

     நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று. (222)

என்ற  இவை போன்று   கடவுளைப் பொருட்படுத்தாமை, கடவுளையே கண்டிக்கும் முறை, மேலுலகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் கருத்துகள் உலகின் பல சமய நம்பிக்கைகளுக்கு அடிப்படை அல்ல.  இது ஒருபுறமிருக்க,  உலகின் 'அனைத்து' உயிர்களிடமும் அன்பு செலுத்துக, 'புலால் உண்ணுவதைத் தவிருங்கள்' என்று கூறும் சமயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதைத்தான் வள்ளுவரின் சமயம் எது என்ற தேடலுக்கு முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972), பரந்து கெடுக உலகியற்றியான்  (1062) என்ற கூற்றுகளும்; புலால் மறுத்தல் (251-260) கருத்துகள் யாவும்   வள்ளுவர் யார் என்று அறியும் நோக்கில் முன்னேற வேண்டிய திசை காட்டும் கைகாட்டிகள்.

கர்மவினை, மறுபிறவி, முக்தி, தர்மம் இவை யாவும் இந்திய மண்ணின் சமயங்களில் பொதுவாக உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கம் தருவதில்தான்  அவற்றிற்கு  இடையே சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அது போன்றே, சொர்க்கம் நரகம் போன்றவையும் இச்சமயங்களில் உண்டு. இருப்பினும்,  இவற்றுக்கான விளக்கங்களும் வேறுபடும். இந்திரன் லட்சுமி போன்ற கடவுளரும் இச்சமயங்களில் உண்டு. ஆனால், அவர்களை அச்சமயத்தார் அணுகும் நோக்கமும் வேறுபடும். இந்தியச் சமயங்கள் யாவும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பல்வேறு நம்பிக்கைகளை, சடங்குகளை, வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொண்டவை  என்பது சமய ஆய்வாளர்கள் கூறும் கருத்து. காலப்போக்கில் அச்சமயங்களின் பரிமாணங்களிலும் மாற்றம் ஏற்பட்டு; மக்களின் தேவையை, விருப்பத்தை உள்வாங்கித் தங்களுடையதாக்கிக் கொண்டு வளர்ந்தவை. 

சொல்லப் போனால், அடிப்படையில் உலகைப் படைத்தவர் பற்றிய கருத்து, கொல்லாமை, புலால் மறுத்தல் கொள்கைகள் மட்டுமே இந்தியச் சமயங்களின் தனித்தன்மையை ஒவ்வொன்றிலும்  வேறுபடுத்திக் காட்டும்.  இவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளே ஆய்வாளர்களுக்கு அவர் யார் எனக் காட்டவும்  கூடும். வள்ளுவர் காலத்தில் கடவுளைப் பற்றிய கருத்திலும் புலால்மறுத்தலிலும் தீவிரமாக இருந்தவை  சிரமண சமயங்களான சமணமும் பௌத்தமும் என்பது வரலாறு. கொல்லாமை கருத்தில் பௌத்த சமயம், வைதீகம்-சமணம்  சமயக் கொள்கைகளுக்கு  இடைப்பட்ட வழியில் பயணித்தது. 

தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி "THIRUKKURAL–An Abridgment of Sastras" (2017) என்ற நூலை வெளியிடுவதற்கு முன்னரே; ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த திவ்ய ஸ்ரீமுகத்துடன் கூடிய "திருக்குறள் நூற்றெட்டு" என்ற நூலை 1950இல் (சங்கத மேற்கோள்களுடன்) ஶ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டுள்ளது; நூலின் உரையாசிரியர் பெயர் கொடுக்கப்படவில்லை, இது மடத்தின் வெளியீடு.  சுருக்கமாக; திருக்குறள் வேதங்களின் சாரம் என்பதுதான் அந்த நூலின் நிலைப்பாடும். ஏன் 108 திருக்குறள்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது? இந்திய ஆன்மீகத்தில் 108 என்ற எண்ணிற்குத்  தனிச்சிறப்பு உண்டு, வைதீகச் சமயத்திற்கு மட்டுமல்ல சமண புத்த சமயங்களுக்கும் 108 என்ற எண் முக்கியமானதே. ஒவ்வொரு சமயமும் 108 என்பதற்கு ஒவ்வொரு காரணத்தை அடிப்படையாகக் கூறும்.  இந்நூலில் பெரும்பாலும் சனாதன கருத்து சாயல் கொண்ட குறள்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு  வைதீகச் சமய தொடர்பு காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது "புலால் மறுத்தல்" என்பதற்கு இந்நூல் தரும் விளக்கத்தை மட்டும் காணலாம். 
     அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (259)
[அறத்துப்பால், துறவறவியல், புலால் மறுத்தல்]
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது (மு. வரதராசன் உரை). 
சனாதனத்தின் அடிப்படை செயலான வேள்வி குறித்த இக்குறளை  வைதீகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் பொழுது, கொடுக்கப்படும் விளக்கமே களத்தில் எதிரணிக்குச் சார்பாக விளையாடும் ஆட்டக்காரரின் செயல்பாடு போல அமைகிறது. குறிப்பாகப் பௌத்தச் சமயத்திற்குச் சார்பாக அமைகிறது இந்நூல் தரும் விளக்கம்.  அந்த விளக்கத்தை அவ்வாறே இங்குக்  கொடுப்பது தெளிவுதரும். 

"தமிழ்நாட்டில் பண்டை சங்கநூல்களில் புலால் உண்ணுவது ஆக்ஷேபிக்கப்படாதது மாத்திரமேயன்றி அது போற்றப்பட்டு மிருக்கிறது. பழைய தமிழ்மக்கள் புலாலருந்துவதைச் சிறப்பாகத்தான் கொண்டிருந்தார்கள். வேதங்களிலும் யாகம் முதலியவைகளில் மாம்சம் உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால் திருவள்ளுவர் வைதிகக் கொள்கையினராயிருந்தாலும் முதன் முதலாக புலால் மறுத்தலைப் பிரசாரம் செய்ததற்குக் காரணம் என்னவெனின், அவர்காலத்தில் வடநாட்டிலிருந்து புத்த சமண மதப்ரசாரங்கள் தென்னாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அப்போதிருந்த வைதிகமகான்கள் பௌத்தர்களுடைய அஹிம்ஸைக் கொள்கையைத் தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.அதனால்தான் இக்காலத்து பிராமணர்கள் புலால் தவிர்த்திருக்கிறார்கள் போலும்.

ஆனால் இவ்விதம் அபிப்பிராயப்படுவது சரியாகத்தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸாதர்மத்தை உபதேசித்திருப்பது பௌத்தசமயக் கொள்கைகளை அனுசரித்து அன்று, வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் உபதேசிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸாதர்மத்தை யனுசரித்தே ஆகும். அதெப்படியென்றால், வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் ஒருவன் கிரகஸ்தாச்ரமத்தை விட்டு ஸன்யாஸாச்ரமத்தை யடையும் போது உலகிவுள்ள எல்லாப்ராணிகளுக்கும் அபயப்ரதான ப்ரதிக்ஞை செய்து அஹிம்ஸா விரதத்தைக் கைகொள்ளும்படி உபதேசிக்கின்றன. பௌத்தமதமோ அம்மதத்தில் சேர்ந்தோர் எல்லாருக்குமே கொல்லாமையை உபதேசிக்கிறது. ஆனால் அந்த உபதேசம் அனுஷ்டானத்தில் விபரீதமாகவே முடிந்திருக்கிறது....    ....    ....  ஆதி புத்த பகவான்*  மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில் அவனால் பரிமாறப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத் தின்றுவிட்டதால் ஏற்பட்ட அதிசாரம் காரணமாகத் தான் என்று புத்தருடைய சரித்திரங்கள் கூறுகின்றன. (Vide Sacred Books of the East Vol XI page 71-73) பிறர் கொன்றதைத் தாம் சாப்பிட்டால் தவறில்லை என்ற கொள்கையை நம் நாயனார் கீழ்வரும் குறளில் பரிஹசித்திருக்கிறார் :-
      தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (256) 
(என்ற குறளுக்குப் பொருள் விளக்கம் அளித்துவிட்டு; தொடர்ந்து.....) 
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லாமக்களுக்கும் பூர்ண அஹிம்ஸாதர்மத்தை உபதேசிக்கவில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு மாத்திரம் உயிருள்ள ஒரு செடியினுள்ள இலையைக்கூடக் கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம் உபதேசிக்கிறது. வர்ணாச்ரமங்களின் படிகளையனுசரித்து அஹிம்ஸா தர்மமும் படிப்படியாக கடுமையாக்கப் பட்டிருக்கிறது....   ["திருக்குறள் நூற்றெட்டு" 1950, பக்கம் 56-57] என்று தொடர்கிறார் உரைகாரர். 
(*முதல் குறள் விளக்கத்தில் 'ஆதிபகவன்' என்பதை கீதையின் கண்ணனுடன் தொடர்புப்படுத்தியவரே இங்குப் புத்தருக்கு  அச்சொல்லைப்  பயன்படுத்துகிறார் !!!!!)

உண்மையில் இது ஒரு மிக நல்ல  வாதம், உரிமை கோரல் வழக்கைத் தெளிவாக்கிவிட்டது.  வைதீகர்கள் வேள்வியில் உயிரினங்களைப்  பலியிட்டனர் என்பது வேதத்தில் பதிவாகி உள்ளது என்றால்; 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு'  என்ற வகையில் உணவுக்கொள்கை வைத்திருக்கும் பௌத்தர்களை வள்ளுவர் கண்டிக்கிறார் என்றால்;   இந்த வாதத்தின் முடிவாகக் கொல்லாமை, புலால் மறுத்தலை அறிவுறுத்தும் திருக்குறளை  சமணக் கொள்கைகளின் தாக்கம் கொண்ட நூல் என்றுதான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.



[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 310, 311 - 12.11.2025, 19.11.2025]

Tuesday, November 4, 2025

திருக்குறள் அந்தாதி

திருக்குறள் அந்தாதி

ஒரு பாடலில் முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி [அந்தம்(முடிவு)+ஆதி(தொடக்கம்)] ஆகும். அந்தாதி வகை இலக்கியங்களின் இலக்கணம்; ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையுமாறு பாடல்களைப் புனைவதைக் குறிக்கும். இவ்வகைப் பாடல்கள் அகரவரிசையில் உள்ள ஆத்திசூடி பாடல்களைப் போல கற்பவருக்கு உதவும் வகையில் எளிதில் நினைவில் தங்கும் பண்பு கொண்டவை.

சங்க நூலான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து தொகுப்பில் உள்ள பத்து பாடல்களில் அந்தாதி அமைப்பைக் காணமுடிகிறது.  முழுவதும் அந்தாதி அமைப்பில் அமைந்த முதல் நூலாகக் கிடைப்பது  காரைக்கால் அம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி' ஆகும். ஆத்திசூடி பாடல் முறைக்கு எவ்வாறு ஔவை தொடக்கமோ அவ்வாறு அந்தாதி இலக்கியத்திற்கும் மற்றொரு  அம்மையே தொடக்கம். பின்னர் புகழ்பெற்ற பல அந்தாதி நூல்கள் தோன்றின.

குறளுக்குக் கிடைத்த பழைய உரைநூல்களை ஒப்பிட்டு  ஆராய்ந்தோர் வள்ளுவத்தில் அதிகார வரிசைமுறை, குறள் வரிசைமுறை, அதிகாரப் பெயர்கள் ஆகிய அமைப்புமுறை ஒவ்வொரு உரையாசிரியருக்கும் வேறுபடுகிறது என்பதனால் இன்று நாம் அறியும் திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் வடிவமைத்ததல்ல என்று கருதுகின்றனர். உரையாசிரியர்கள் பலரும் அதிகாரங்களை இயல் மாற்றி வகைப்படுத்தியும் அதிகாரத்திற்குள் வரும் குறட்பாக்களை இடம் மாற்றியும் அமைத்து உரை வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நம் வழக்கத்தில்  உள்ள திருக்குறளின் அதிகாரங்கள், அவற்றில் குறள் வரிசை வைப்பு முறை பரிமேலழகர் அமைத்தது. இவ்வாறான பரிமேலழகர் வைப்புமுறையில் வள்ளுவர் யாத்த குறள்களுள் ஒரு சிலவும் அந்தாதி  முறையில் தானே அமைந்துள்ளன.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)
   
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (358)

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் (574)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் (575)
   
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று (587)
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (588)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும் (707)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (788)
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (789)            
     
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801)  
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் (802)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி (1022)
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (1023)
   
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல் (696)
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் (697)
   
இவை குறள் வரிசை வைப்பு முறையில் அமைந்தவை. இருப்பினும் நாமும் கூட அந்தாதி முறையில் குறள்களை மேலே காண்பது போல இரண்டிரண்டு குறள்களாகவோ அல்லது கீழுள்ளது போல ஒரு நீண்ட அந்தாதித் தொடராகவோ அமைக்கலாம்.  

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு (1)

      உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
      கூம்பலும் இல்ல தறிவு (425)

      அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
      என்னுடைய ரேனும் இலர் (430)

      இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
      நிலமென்னும் நல்லாள் நகும் ( 1040)

      நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
      மேற்செனறு இடித்தற் பொருட்டு (784)

      பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
      ஆயும் அறிவி னவர் (914)

இதுபோன்றே; ஆர்.கே. அரங்கசாமி அவர்களால் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட "திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் அந்தாதி : மூலமும் உரையும்  (1946)" நூலில் 151 குறட்பாக்கள் அந்தாதி முறையில்  வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு குறள்தேனீ வினாடி வினா போட்டிகள் போல, காலிறுதி அரையிறுதி ஆண்டு நீண்ட விடுமுறை நாட்களில் அவர்களால் இயன்றவரை ஒரு நீண்ட  திருக்குறள் அந்தாதி உருவாக்குவதை வீட்டுப்பாடமாகக்  கொடுத்தால் விளையாட்டு போல அவர்கள் குறள் கற்கும் வாய்ப்பு உண்டு.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 309 - 05.11.2025]  

-----------------------------------


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, October 28, 2025

வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்

வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம்


வள்ளுவர் குறளில் வாழ்வியல் நெறிகளை விளக்க பொருத்தமான பல எடுத்துக்காட்டுகளைக் கையாண்டுள்ளார். உலகம் போற்றும்  நன்னெறி இவையிவை, பின்பற்ற வேண்டியவை இவை,  உலகம் ஏற்கும்  ஒழுக்கமுறை, இகழப்படும் நடைமுறை, தவிர்க்க வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை எனப் பல பொருள்களை எடுத்துக்காட்டுகள் மூலமே விளக்கியுள்ளார். ஒப்பிட்டுக் காட்டப் பல உவமைகளைக் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் இயல்புகளை, மக்களின் பண்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த முறையை 'ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்' என்று தொல்காப்பியம் (மரபியல் நூற்பா 104) குறிப்பிடுகிறது.

இயற்கையில் இருந்தும், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள்  எனவும் வள்ளுவரால் எடுத்துக்காட்டுகளாக, உருவகங்களாக  உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.   குழல், யாழ், பறை, பாறை, மலை, குன்று, கல், மழை, நீர், கடல், ஊருணி, ஊற்று, மணற்கேணி, குளம், வெள்ளம், நிலம், நன்னிலம், களர்நிலம், வேலி, தீ, வானம்,  வெயில், நிலவு, மதிமறைப்பு, மேகம், குவளை, அனிச்சம், மலர்கள், தளிர், நெருஞ்சி, பனை, தினை, நிழல், மரம், நச்சு மரம், பழுத்த மரம்,  பட்டமரம், மூங்கில், குன்றிமணி, கரும்பு, கருக்காய், எள், விதை, களை, பயிர், மீன், யானை, குதிரை, எருது, பசு, ஆட்டுக்கடா, புலி, நரி, முதலை, பாம்பு, எலி, புழு, கவரிமா, காக்கை, மயில், கொக்கு, அன்னம், ஆந்தை, ஆமை, வேடன், ஆயன், உழவன், மீனவன், அரசன், அமைச்சர், ஒற்றர், தூதர், படைத்தளபதி, வீரர், பேடி, யானைப்பாகன், தாய், தந்தை, மக்கள்,  மகன்,  தலைவன், தலைவி, செவிலி, தோழி, குழந்தை, புலவர், ஆசிரியர், மாணவர், மருத்துவர், நோயாளி, நல்லவர், தீயவர், செல்வந்தர், வறியவர், வள்ளல், கருமி, பிச்சைக்காரர், கொலையாளி, திருடர், கயவர், விலைமகளிர், தவம், தானம், வேள்வி, துறவி, அந்தணர், பார்ப்பனர், அறவோர், சான்றோர், பாவி, தெய்வம், இறைவன், இந்திரன், தாமரைக்கண்ணான், தேவர், எமன், பேய், அணங்கு, திருமகள், தவ்வை, பிணம், சொர்க்கம், நரகம், பகை, நட்பு, வில், வேல், வாள், காவடி, செங்கோல், ஊன்றுகோல், துலாக்கோல், அளவுகோல், தூண்டில், உரைகல், அரம், ஏர், எரு, அச்சாணி, வண்டி, தேர், சிவிகை, நாவாய், படகு, தெப்பம், தோணி, பளிங்கு, சதுரங்கம், கூத்தாடும் அரங்கு, சூதாட்டக் கழகம், சாக்கடை, வைக்கோல், குடிசை, கூடு, தூண், தாழ்ப்பாள், கதவு, அரண், சிறை,  கோடாரி, கயிறு, பொம்மலாட்ட மரப்பாவை, மண் பொம்மை, மண்கலம், செப்புக்கலம், கைவிளக்கு, தூங்கா விளக்கு, பட்டடை, பாரம், உடை, அன்னத்தூவி, மயிலிறகு, முகபடாம்,  பொன், அணிகலன், முத்து, பவளம், கண், மயிர், நெஞ்சம், உணவு, கொழுப்பு, நெய், தேன் கலந்த பால், கள், உப்பு, நோய், புண், மருந்து, நஞ்சு, மாசு, அமுது, கனி, காய், பிறப்பு, இறப்பு, உறக்கம், மறைமொழி, எழுத்து, நூல், செல்வம், ஊதியம், முதல் என்று அப்பட்டியல் மிக நீண்டது.  இவை நேரடியாகவோ  கொடுக்கப்பட்ட குறிப்பு மூலமோ  அறியக் கூடியவை.

இவ்வாறு வள்ளுவர் எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாம் மக்களின் வாழ்வில் இடம் பெறுபவை, மக்களாலும் நன்கு அறியப்பட்டவை.   எளிமை, தெளிவு, சுருக்கம், ஆழமுடைமை,என்னும் பண்புகள் கொண்டவனாய் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகள் முந்நூற்றைம்பதுக்கும் மேலானவை  திருக்குறளில் இடம் பெறுவதாக 'திருக்குறள் அமைப்பும் முறையும்’ (1972) நூலில் மு. சண்முகம் பிள்ளை கூறுகிறார்.

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 308 - 29.10.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Wednesday, October 22, 2025

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு

குறள் சொல்லும் துணைவயின் பிரிவு


திருமணம் முடிந்த தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில்; தலைவன் தலைவியைத் தனித்திருக்கச் செய்து பிரிந்து செல்லும் பிரிவு ஆறு வகைப்படும், அவை:  1. பரத்தையிற் பிரிவு (பரத்தையுடன் வாழ்தல்), 2. ஓதல் பிரிவு (கல்வி கற்க பிரிதல்), 3. காவல் பிரிவு (பாதுகாத்தல் தொழிலை  முன்னிட்டு பிரிதல்), 4. தூதிற் பிரிவு (தலைவன் தூது செல்லுதல்), 5. துணைவயின் பிரிவு (போரில் துணைபுரிதல்), 6. பொருள்வயின் பிரிவு (பொருளீட்டச் செல்லல்) என்பன. 

குறளில் காமத்துப் பாலில் வள்ளுவர் குறிப்பிடும் பிரிவு 'துணைவயின் பிரிவு' ஆகும். மன்னனுக்குப் பகைவர்களால் இடையூறு நேரும்பொழுது அவனுக்குத் துணைபுரியும் நோக்குடன் தலைவன் போருக்குச் செல்லும் பிரிவு இது. இலக்கண நூல்களின்படி அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவருக்கும் துணைவயின் பிரிவு உரியது. இதற்குரிய பிரிவு காலம் ஓர் ஆண்டு ஆகும். அவ்வாறு போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின் காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம் என்றும் இலக்கணம் கூறுகிறது (கல்வி கற்கச் செல்லும் பொழுது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புதல் கூடாது என்பது நம்பி அகப்பொருள் நூல் வகுக்கும் விதி). 

திருக்குறள் காமத்துப்பால் குறட்பாக்களில் குறிப்பிடப்படும் தலைவன் ஒருவனா அல்லது வெவ்வேறு ஆண்களா? அவ்வாறே குறள்களில் குறிப்பிடப்படும் தலைவி ஒருத்தியைக் குறிக்கிறதா  அல்லது அவர்கள் வெவ்வேறு பெண்களா?  என்பதை  நாம் உறுதியாகக்  கூற இயலாது.  ஆனால், வள்ளுவர் தன் வாழ்வையே வைத்து  அதில் பெற்ற அனுபவங்களை வைத்து குறள்  எழுதியிருக்கலாம், அல்லது தன் சூழலில் நிகழ்ந்தவற்றைக் கவனித்து அதன் அடிப்படையிலும் எழுதியிருக்கலாம். எனவே, அவர் குறிப்பிடும் தலைவன் யார் தலைவி யார் என்பதையும் அறுதியிட்டுக்  கூற இயலாது. 

இருப்பினும், குறள்களின் ஊடே அவர் விவரிக்கும் குறிப்புகளை வைத்து தலைவன் ஓர் உழவன், போர் நிகழும் காலத்தில் வேளாளர்களுக்கு அரசனின் அறிவிப்பு  கிட்டியதும், அரசனுக்கு உதவியாகப் போர்முனைக்குச் சென்ற ஒரு வீரர் என்று புரிந்து கொள்ள எந்த ஒரு  தடையும் இல்லை.  வள்ளுவர் உழவைப் போற்றுபவர். உழவுக்கு என்றே ஓர் அதிகாரத்தையும் ஒதுக்கி உள்ளார். 

மாறாக;  ஓர் அரசன் ஆட்சி செய்யும் முறைகளையும் நாடாளும் முறைகளையும் விரிவாகப் பொருட்பாலின் பல அதிகாரங்களில் வள்ளுவர் விளக்குவதால் திருக்குறளில் ஒரு குறுநில மன்னனின் அரசாளும் அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கலாம் என்பதையும் மறுக்க வழியில்லை.  

ஆக, தலைவன் ஓர் உழவு செய்யும் வேளாளனாகவோ, அல்லது ஒரு வேந்தனின் கீழ் அவனுக்கு உதவும் பொருட்டு போருக்குச் சென்ற சிற்றரசனாகவோ இருக்க வாய்ப்புண்டு. 



படைச்செருக்கு அதிகாரத்தில்; 
     என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
     முன்நின்று கல்நின் றவர்.   (771)
பகைவர்களே என் தலைவனை (அரசனை) எதிர்த்து நிற்காதீர்கள்; அவனை எதிர்த்தவர்கள் உயிரிழந்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என எச்சரிக்கிறான் ஒரு போர் வீரன். 



     கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
     மெய்வேல் பறியா நகும்.   (774)
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடும் வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ந்து அதனைப் பறித்துப் போரைத் தொடர்கிறான். 

படைச்செருக்கு அதிகாரம் காட்டும் வீரன் அகவாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைக் காமத்துப்பால்  குறள்கள்  மூலம் அறியலாம்.  



தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது தலைவனின் கூற்றாக; 
     ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
     நண்ணாரும் உட்குமென் பீடு.   (1088)
[காமத்துப்பால்-களவியல்-தகையணங்குறுத்தல்]
என்ற குறளைக் காணலாம்.  பகைவரையும் அஞ்ச வைக்கும் என் வலிமை என் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே  என்று போர் வீரனாகிய தலைவன் வியக்கிறான். 

தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் முடிந்து இல்லறவாழ்வில் மகிழ்ந்திருக்கும் பொழுது அரசனின் ஆணைக்கிணங்க போர்முனைக்குச் செல்கிறான் தலைவன் (தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை). அங்கே தலைவியின் நினைவில் புலம்புகிறான் என்று கற்பியல் குறள் மூலம் அறியலாம்.
     வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
     மாலை அயர்கம் விருந்து.   (1268)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
அரசன் இப்போரில் வெற்றி பெறட்டும்; பின்னர் நான் இல்லம் திரும்பி என் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக என்று தலைவியுடன் மீண்டும் இல்லறம் தொடர விரும்பும் தலைவன்  கூறுவதாக இக்குறள் அமைகிறது. 



அவன் வரவை எதிர்நோக்கி  இல்லத்தில் காத்திருக்கும் தலைவியின் கூற்றாக; 
     உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
     வரல்நசைஇ இன்னும் உளேன்.   (1263)
[காமத்துப்பால்-கற்பியல்-அவர்வயின் விதும்பல்] 
வெற்றியை விரும்பி ஊக்கத்தையே உறுதுணையாக எண்ணிச் சென்ற என் கணவர், திரும்பி வருவார் என்ற எண்ணத்தினால்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் என்று  கூறுவதாக அவர்வயின் விதும்பல் (அவரிடம் விரைதல்) குறள் மூலம் அறிய முடிகிறது. 

தமிழ் இலக்கண நூல்கள் தரும் குறிப்புகளின்படி குறளின் காமத்துப்பால்  தலைவன் போரில் துணைபுரிதல் காரணமாகப் பிரிந்து சென்றவன் என்று முடிவு செய்யலாம்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 307   -  22.10.2025]
-----------------------------------


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 



Monday, September 29, 2025

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

முனைவர் மு. முத்துவேலு
முதல் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது "வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்" என்னும் நூலாகும்.




நூலைத் தொகுத்தவர் பைந்தமிழ் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள்.  ஆத்திசூடி என்பது தமிழ் அற நூல்கள் மரபில் ஒரு புதிய யாப்பு வடிவத்தில்  அமைந்திருப்பதாகும்.  இது அறக்கருத்துக்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவமாக அமைந்துள்ளது. எனவே ஆத்திசூடி வடிவத்தை ஔவைக்குப் பின் பாரதியும் அதற்குப் பின்னர் பாரதிதாசனும் இன்னும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புலவர் மக்களும் தாங்கள் கூற வந்த கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ற வடிவமான ஆத்திசூடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள் திருக்குறளை ஆத்திசூடி முறையில் தொகுத்துள்ளார். தமிழின் நெடுங்கணக்கு அகர வரிசைப்படிச் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறுகிற ஆத்திசூடி முறையினுக்கு ஏற்ப
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" எனத் தொடங்கும் முதல் குறளில் இவரும் தொடங்கியுள்ளார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்"  என்னும் அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் 363-ஆம் குறளோடு இதனை நிறைவு செய்துள்ளார்.

எழுபது திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அமைத்துள்ளார். இந்த நூலில் கடவுள் வாழ்த்து, கல்வி, காலம் அறிதல், அவா அறுத்தல், புகழ், பெருமை, வாய்மை முதலிய அதிகாரங்களிலிருந்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனைய 54 அதிகாரங்களிலிருந்து ஒரு குறள் என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து மொத்தம் எழுவது குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் சில சிறப்புச் செய்திகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருக்குறள் பற்றிச் சில ஆராய்ச்சிச் செய்திகளை ஆய்வறிஞர் தொகுத்து வழங்கியிருப்பது மிகுந்த பயன்பாட்டுக்கு உரியதாகும்.

நூலில் ஆத்திசூடி என்பதற்கான இலக்கணத்தை அருமையாக எடுத்துரைப்பதும் மாணவர்களின் நலன் கருதி அமைந்தது எனலாம் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுகிற பொழுது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அமைத்துச் சொல்லுகிறார்.  ஔவையின் ஆத்திசூடியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

திருக்குறளில் இருந்து ஆத்திசூடி முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்களைப் பட்டியலிடும்போது முனைவர் சேயோன் அவர்கள் 2001 இல் தொகுத்தளித்த திருவள்ளுவர் ஆத்திசூடியையும் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமையையும் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

அகரவரிசையில் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அடுக்கித் தருகிற பணியை மட்டும் செய்யாமல் அந்தக் குறள்களுக்கு எளிய முறையில் உரையையும் வழங்கி உள்ளார்.  ஆய்வறிஞர் தேமொழி அவர்களின் எளிய உரைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
      முயற்சித் திருவினை யாக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்  (ஆள்வினை உடைமை குறள்- 616)
இந்தக் குறளுக்கு ஆசிரியரின் உரை பின்வருமாறு அமைகிறது. "முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையை வந்து சேரும்"

இரண்டாவதாக, 
      பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
      நன்மை பயக்கும் எனின்  (வாய்மை அதிகாரம் குறள் - 292)
இதற்கான தேமொழியாரின் உரை: பொய்யினால் நல்ல நன்மை ஏற்படக்கூடுமானால் அப்பொய்யையும் மெய்யாக ஏற்கலாம்.

இந்த வகையில் ஒவ்வொரு குறளுக்கும் இனிய எளிய உரை அமைத்திருப்பது சிறப்பாகும்.  இந்த உரைகளைக் காணும் பொழுது தேமொழியார் திருக்குறள் முழுவதற்கும் இது போன்ற எளியதோர் உரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

முனைவர் க. சுபாஷிணி  அவர்கள் தம் பதிப்புரையில், "பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிய முறையில் சில குறட்பாக்களைப் பிழையின்றிக் கற்றுக் கொள்வதற்கு இது சிறந்த முறை மட்டுமல்ல எளிமையானதும் கூட" என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம் உடையதாகும்.

ஆய்வறிஞர் தேமொழியார் தம் எளிய உரையின்மூலம் படிப்பவர்களை திருக்குறளுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.  எல்லோரும் திருக்குறளைக் கற்க இந்நூல் கைவிளக்காகத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
 — முனைவர் மு. முத்துவேலு
நன்றி: தமிழணங்கு - அக்டோபர் 2025 (பக்கம்: 91-93)



#தமிழணங்கு,  #திருக்குறள், #நூலறிமுகம், #முனைவர்.மு.முத்துவேலு, #Themozhi


Tuesday, September 23, 2025

திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு

திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு


வாழ்வியல் கருத்துக்களை ஏழு சீர்களிலும் இரண்டே அடிகளிலும் சுருங்கக்  கூறும் சிறப்புடையது திருக்குறள்.  ஆழமான கருத்துச் செறிவாலும் பல அணிநயம் கொண்டு இலக்கியச்சுவையுடன் அமைந்திருக்கும் காரணத்தாலும் மேலும் சிறப்பு கொண்டு விளங்குகிறது.  அணி என்பது இலக்கியத்தில் அழகுக்கு அழகுக் கூட்டும் முறையாகக் கருதப்படுகிறது.
     "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
     ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்"
என்று  பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் (நன்னூல் 55) பாயிரம் அழகுக்கு அழக்கூட்டுவதைக் குறிப்பிடுகிறது.

அணி என்றால் உவமையணி என்றே தொல்காப்பியம் குறிப்பிட்டாலும், பிற்காலத்தில் அணி இலக்கணம் விரிவடைந்து மேலும் பற்பல அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறளில் சொல்லும் கருத்தை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு விளக்கும் முறையில் "உவமையணி" கொண்ட குறள்களாகப் பல குறள்கள் உள்ளன. மேலும்;  எடுத்துக்காட்டு  உவமை அணி, இல்பொருள் உவமை அணி, தொழில் உவமை அணி, உருவக அணி, ஏகதேச உருவக அணி, நிரல்நிறை அணி, பின்வருநிலையணி, வஞ்சப் புகழ்ச்சி அணி, பிறிதுமொழிதல் அணி, வேற்றுமை அணி போன்ற அணிகளும் திருக்குறளில் இடம் பெறுகின்றன. இவையாவும் பள்ளிப்பாடங்களில் இலக்கண வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்டவையே.

உவமை அணி:
திருக்குறளில் "உவமை" என்ற சொல் வருவது ஒரே ஒரு முறைதான்.
     தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
     மனக்கவலை மாற்றல் அரிது   (குறள் - 7)
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்பவர்கள் மட்டுமே மனக்கவலை நீங்கப் பெறுவார்கள் என்பது இக்குறள் தரும் பொருள்.  இவ்வாறு ஒரே ஒருமுறை  'உவமை' பற்றிப் பேசும் திருக்குறளில்  நூற்றுக்கணக்கான உவமைகள் எடுத்தாளப் பட்டுள்ளன.  திருக்குறளில் காணப்படும் உவமை நயம் குறித்து நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன.

இலக்கண நூல்கள் உவமை அணியே முதன்மை  அணி என்று விளக்குகின்றன. புலவர் ஒருவர் தாம் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை (உவமேயம்) தெளிவாக உணர்த்தும் பொருட்டு, மற்றவர்களும் நன்கு அறிந்த பொருள் ('உவமை' அல்லது 'உவமானம்') ஒன்றின் பண்பு,தொழில், பயன் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுத் தம் பாடலின் கருத்தை விளக்கிக் கூறுவது உவமையணியின் இலக்கணம்.   

ஆக, ஒப்பிடப்படும் பொருள் உவமேயம்; ஒப்பிடப் பயன்படும் பொருள்  உவமை.  உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக் காணலாம். அவை: 1) உவமை; 2) உவமேயம்;  3) உவமை உருபு; 4) ஒத்த பண்பு.

ஒரு பொருளோடு ஒரு பொருளும்;  ஒரு பொருளோடு பல பொருளும்;  
பல பொருளோடு பல பொருளும்; பல பொருளோடு ஒரு பொருளும் 
என நான்கு வகையாகப் பொருள்கள் ஒப்புமைப்படுத்திக் கூறப்படும்.    பெரும்பாலும் உவமையையும் உவமேயத்தையும்  இணைப்பதற்கு 'போன்ற, போல, ஒப்ப' முதலிய  உவம உருபுகளில் ஒன்று பயன்படுத்தப்படும்.
     போல புரைய ஒப்ப உறழ
     மான கடுப்ப இயைய ஏய்ப்ப
     நேர நிகர அன்ன இன்ன
     என்பவும் பிறவும் உவமத்து உருபே  (நன்னூல் நூற்பா - 367)
என்பது உவம உருபுகள் குறித்து நன்னூல் தரும் இலக்கணம்.  

     நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
     பண்புடை யாளர் தொடர்பு  (783)
பொருள்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது 'போல' பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும். இதில், பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் என்ற உவமேயம், போல என்ற உவம உருபால், நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தரும் என்ற உவமையுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

பண்பு, தொழில், பயன் என மூவகை ஒப்புமைகள்:
பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை,  பயன் ஒப்புமை ஆகியவற்றின் அடிப்படையில் உவமை அணி வகைப்படுத்தப்படும். இதனால் பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும் என விளக்குகிறது தண்டியலங்காரம் நூற்பா.
     பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
     ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
     ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை (தண்டி, நூற்பா. 30)  

1. ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும்.  இப்பண்புகளின் அடிப்படையில் ஒப்புமைப் படுத்தப்படும் உவமை பண்பு உவமை ஆகும்;  
2. ஒரு பொருளின் 'தொழில்' அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்; 
3. ஒரு பொருளால் கிடைக்கும் 'பயன்' காரணமாக அமையும் உவமை பயன் உவமை எனப்படும்.

     பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
     வாலெயிறு ஊறிய நீர் (1121)
பொருள் : மென்மையான மொழிகளைப் பேசும் இப்பெண்ணின் வெண்மையான பற்களிடையே ஊறிய உமிழ்நீர், பாலும் தேனும் கலந்த சுவை போல் இனிமையானது- தலைவன் கூற்று. இது 'பண்பு உவமையணிக்கு'  ஓர் எடுத்துக்காட்டு.

     அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
     இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் (691)
பொருள்:  தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குறள் 'தொழில் உவமை அணிக்கு' ஓர் எடுத்துக்காட்டு.

     ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
     பேரறி வாளன் திரு (215)
தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டவரின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியை ஒத்ததாகும். இக்குறள் 'பயன் உவமையணிக்கான'  எடுத்துக்காட்டு.

உவமையணியானது 'எடுத்துக்காட்டு உவமையணி' என்றும் 'இல்பொருள் உவமையணி' என்றும் மேலும் இருவகையாகப் பிரிக்கப் படுதலும் உண்டு.  

எடுத்துக்காட்டு உவமையணி:  எடுத்துக்காட்டு உவமை அணி என்பது உவமானத்தையும் உவமேயத்தையும் தனி வாக்கியங்களாக  அமைத்து இது பொருள் இது உவமை என்பது விளக்கப்படுகையில் இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடுக்காமல் ஒப்பிடுவது.
     பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
     கண்ணோட்டம் இல்லாத கண் (573)
பொருள்: பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

இல்பொருள் உவமை அணி: இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது இல்பொருள் உவமை அணி. அதாவது இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும்.
     வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
     புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (273)
பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

மேலும்  சில கருத்தைக் கவரும் அணி வகைகளும் திருக்குறளில் உள்ளன.

பின்வருநிலையணி:
ஒரே சொல் மீண்டும் மீண்டும் ஒரு குறளில் வரும் "பின்வருநிலையணி" என்ற முறையையும் வள்ளுவர் கையாண்டுள்ளார். வாய்விட்டுப் படிக்கும் பொழுது அவற்றின் ஓசைநயம் படிப்பவரைக் கவரும் வகையில் இக்குறள்கள் அமைந்துள்ளன.  பாவலர் உணர்த்த விரும்பும் செய்தியை எளிதாகவும், அழகாகவும், கேட்பவர் மனதில் பதியும்படி சொல்வதற்கு  ஒரேசொல் மீண்டும் மீண்டும் பலமுறை இடம் பெறும் வகையில் "பின்வருநிலையணியில்" செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஒரே சொல் வெவ்வேறு எண்ணிக்கையில் பல குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளன.
     பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
     பற்றுக பற்று விடற்கு.  (350)
என்ற இக்குறளில் 'பற்று' என்ற ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது. இக்குறளின்  ஏழு சீர்களில்,  ஆறு  சீர்களில்  பற்று  என்ற சொல் இடம் பெறுகிறது.  பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இது போன்றே, ஒரே சொல் 5 முறை ஐந்து குறட்பாக்களிலும், 4 முறை 22 குறட்பாக்களிலும், 3 முறை 27 குறட்பாக்களிலும் அமைந்துள்ளன என்று திருக்குறள் குறித்துப் பல புள்ளிவிவரங்கள் தரும் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது 'பின்வரு நிலையணி'. இப் பின்வருநிலையணி மூன்று வகைப்படும்:
1. சொல்லும் பொருளும் பின்வருதல் - சொற்பொருள் பின்வருநிலையணி
2. சொல் மட்டும் தொடர்ந்து வருதல் - சொல் பின்வரு நிலையணி
3. சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதல் - பொருள் பின்வரு நிலையணி

     எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
     திண்ணியர் ஆகப் பெறின். (666)
எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர் என்பது இக்குறள் சொல்லும் பொருள்.  எண்ணிய என்ற சொல் திரும்பத் திரும்ப வரும் இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமையால்  இக்குறள் 'சொற்பொருள் பின்வரும் நிலையணி' என்ற அணிக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது

     பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
     பொருளல்ல தில்லை பொருள். (751)
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள். 'பொருள்' என்ற சொல் மட்டும் குறளில் தொடர்ந்து வேறு (மதிப்பு, செல்வம் ஆகிய) பொருள்களில் வருதலால் இக்குறளின் அணி 'சொல் பின்வருநிலை அணி' என்பதாக அமைந்துள்ளது.

     கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
     மாடல்ல மற்றை யவை. (400)
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்பது இக்குறளின் பொருள்.  இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களும் செல்வத்தையே குறிக்கின்றன. எனவே; சொற்கள் மாறி, ஆனால் பொருள் ஒன்றாக வருதலால் இக்குறளில் 'பொருள் பின்வரு நிலையணி' இடம் பெற்றுள்ளது.

திருக்குறளின் 1330 குறள்களில் சற்றொப்ப நான்கு விழுக்காடு குறட்பாக்கள் 'சொற்பொருள் பின்வருநிலையணியிலும்'  'சொல் பின்வரு நிலையணியிலும்' வள்ளுவரால் இயற்றப்பட்டுள்ளன.  இவையாவும் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிவுவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பிறிது மொழிதல் அணி:
      நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
      நீங்கின் அதனைப் பிற   (495)
ஆழமான நீரினுள் இருக்கும் வரை நீர்நிலைக்கு வரும் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; ஆனால் நீரிலிருந்து வெளியே வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும் என்பது இக்குறளின் பொருள். 

மக்களின் நல்வாழ்விற்கு வாழ்வியல் நெறிகளை விளக்க முடிவெடுத்த வள்ளுவர் அதை விட்டுவிட்டு ஏன் உயிரியல் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் மாறினார்? அவருடைய நோக்கத்திற்குத் தொடர்பில்லாமல் முதலை குறித்து ஏன்  பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்படலாம்.   ஆனால், ஒரு செயல் ஆற்றுவதற்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்பதை 'இடனறிதல்' என்ற அதிகாரத்தில் விளக்க முற்படும் வள்ளுவர் 'பிறிது மொழிதல் அணி' என்ற அணியை இக்குறளில் எடுத்தாள்கிறார். கூறக் கருதிய பொருளை உவமையால் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலாகிறது.

ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; ஆனால் தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்து இக்குறள் மூலம் உணர்த்தப்படுகிறது. ஆனால், இந்த உவமேயம் குறளில்  சொல்லப்படவில்லை,  முதலை  உவமை மட்டும் விளக்கப்பட்டுள்ளது. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டுமே இடம் பெறும்.  இவ்வாறாகத் தான் கூற விரும்பும் கருத்தை நேரடியாகக் கூறாமல், அதைப் புலப்படுத்தும் வகையில் வேறொரு கருத்தைக் கூறிப் புலப்படுத்துவதை, 
      கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
      ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
         (தண்டி. நூ. 52)
தண்டியலங்காரம் 'ஒட்டணி' என்று  விவரிக்கிறது. பிறிது மொழிதல் அணிக்கு நுவலா நுவற்சி, சுருங்கச் சொல்லல், தொகைமொழி, உவமப்போலி என்னும் வேறு பெயர்களும் உள்ளன.  அகத்திணைப் பாடலில் இடம்பெறும் பிறிது மொழிதல் அணி 'உள்ளுறை உவமம்' எனப்படுகிறது. எனவே உவமானத்தைக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் மறைபொருளாக, குறிப்பாக உணர்த்துதல் பிறிது மொழிதல் அணியாகும். 

வேற்றுமை அணி:
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது 'வேற்றுமையணி' எனப்படும்.
      தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு   (129)
தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.  இக்குறளில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்பட்டு, பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; ஆனால், உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடும் கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

நிரல்நிறை அணி: 
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது 'நிரல் நிறை அணி' (நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்) எனப்படும்.
      அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
      பண்பும் பயனும் அது (45)
அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

வஞ்சப்புகழ்ச்சி அணி:
ஒருவரைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் 'வஞ்சப்புகழ்ச்சியணி' எனப்படும். 'மாறுபடு புகழ்நிலை அணி', 'புகழாப் புகழ்ச்சி அணி' என வஞ்சப்புகழ்ச்சி அணி இருவகைப் படுத்தப் படுகிறது. 
      பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
      பீழை தருவதொன் றில்   (839)
அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிக இனியது; ஏனெனில், அவர்களிடம் இருந்து பிரிய நேர்ந்தால் அப்பிரிவு துன்பம் தருவதில்லை என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் அறிவிலார் உறவைப் புகழ்வது போல் பழித்துக் கூறுகிறார் வள்ளுவர். ஆதலால் இக்குறள் வஞ்சப்புகழ்ச்சி அணியின் கீழ் வகைப் படுத்தப்படுகிறது. புகழ்வது போல் பழிக்கும் வஞ்சப்புகழ்ச்சி அணியை  'மாறுபடு புகழ்நிலை அணி'  என தண்டியலங்காரம் கூறுகிறது.

அது போல;  ஒன்றைப் பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி.  
      மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
      பலர்காணும் பூவொக்கும் என்று  (1112)
அனைவரையும் பார்ப்பது தாமரை மலர். ஆனால், நெஞ்சே என்னை மட்டும் நோக்கும் என் தலைவியின் கண்கள் மலர்கள் போன்றது என்று நீ மயங்குவது சரியா? என்று நெஞ்சிடம் கூறுவது போல தலைவன் கூறுகிறான். எனினும் தலைவியின் கண்களைப் புகழாமல் புகழ்வதே தலைவனின் நோக்கம்.   ஆதலால்,  பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை தோன்றக் கூறும்  'புகழாப் புகழ்ச்சி அணி' க்கு இக்குறள்  ஓர் எடுத்துக்காட்டாகும்.

உருவக அணி: 
உவமை வேறு உவமேயம் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது 'உருவக அணி'யாகும்.
      இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
      பார்தாக்கப் பக்கு விடும்   (1068) 
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். உருவக அணியில் உவமேயம் முன்னும்  உவமை பின்னுமாக அமைவதுடன், அவையிரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறப்படும். 

ஏகதேச உருவக அணி:
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி. வடமொழிச் சொல்லான ஏகதேசம் (ஒரு பகுதி எனப்பொருள்படும்) சொல்லால் இது 'ஏகதேச உருவக அணி' எனப் பெயர் பெறுகிறது. 
      சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
      ஏமப் புணையைச் சுடும்  (306) 
சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். சினம் கொள்பவரை விட்டுச் சுற்றத்தார் விலகிவிடுதல் இயல்பாதலால் துன்பப்படும்பொழுது அவர்  உறவின் அரவணைப்பை இழந்துவிடுவார், உறவின் துணை மட்டுமே பாதுகாக்கும் தெப்பமாக உருவாகப்படுத்தப்பட்டுள்ளது.    

பரிவருத்தனை அணி:
பாடலின் கருத்து ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை அணி என்பதற்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது.   
      சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
      நோயும் பசலையும் தந்து (1183) 
தன் தலைவன் காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு தன்னுடைய அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார் என்று தலைவி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது. தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

நிதரிசன அணி:
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசன அணியின் இலக்கணம் ஆகும்.   
      குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
      மதிக்கண் மறுப்போல் உயர்ந்து  (957) 
மதிக்கப்படும் நற்குடியில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும் என்கிறது இக்குறட்பா.  பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற இயல்பை, அழகிய நிலவின் களங்கத்துடன் ஒப்பிட்டுக் கூறும் முறை நிதரிசன அணியின் இலக்கணத்தை  ஒட்டி அமைகிறது. 



[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 303   -  24.09.2025]  
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 304   -  01.10.2025]  
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 305   -  08.10.2025]
[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 306   -  15.10.2025]


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, September 16, 2025

சேரமானின் பண்டையோர் கூற்று

சேரமானின் பண்டையோர் கூற்று 


சேரநாட்டின் முடியுடை வேந்தர்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்பவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படுபவர். சைவ நூல்களின் தொகுப்பான 11 ஆம் திருமுறையின் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்று நூல்கள் இவரால் இயற்றப்பட்டவையாகும்.  இப்பெருமாக் கோதையாரே கழறிற்றறிவார் என அறியப்படுபவரும் ஆவார். இவர் சுந்தரரின் நண்பராகவும்,  சிவனைத் தொழ அவருடன் திருக்கயிலை சென்றதாகவும் அறியப்படுகிறார். அருணகிரிநாதர் அவருடைய திருப்புகழில் சேரமான் பெருமாள் நாயனாரை "ஆதிஅந்தவுலாவாசு பாடிய சேரர்" என்று குறிப்பிடுவார்.

இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகவும், இறைவனைத் தொழும் உயிர்களை அத்தலைவன் மீது காதல் கொண்ட பெண்களாகவும் "நாயகி-நாயக பாவம்" என்ற அமைப்பில் எழுதப்படும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது "திருக்கயிலாய ஞானவுலா".  உலகைத் தோற்றுவித்து ஆட்டுவிக்கும்  இறைவன்பால் எல்லா உயிரினங்களும் அன்பு கொண்டு திளைத்து இறைவனால் ஆட்கொள்ளப்படுவதைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டது திருக்கயிலாய ஞானவுலா. 

சேரமான் பெருமாள் நாயனார் தமக்கு முன் வாழ்ந்த திருமுறையாசிரியர்கள் அருளிய பொருளுரைகளை இவ்வுலாவில் பல விடங்களிலும் எடுத்தாண்டுள்ளார். திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் வாய்மொழிகளைத் தழுவி அவர் எழுதிய வரிகளைப் போலவே திருவள்ளுவர் குறள்களையும் இவர் எடுத்தாண்டுள்ளார். 
  
திருவுலா செல்லும் சிவபெருமானின் பேரழகைக் கண்டு மயங்கிய பெண்கள் பாடும் பாடல்களாக அமைந்த இந்த நூலின் மூலம் சேரமான் பெருமாள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது.

      "கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
      ஒண்டொடி கண்ணே யுளவென்று-பண்டையோர் 
      கட்டுரையை மேம் படுத்தாள்"
[திருக்கைலாய ஞானவுலா: 173-174 கண்ணிகள்]
இதன் பொருள்; நாம் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும் துய்க்கக் கூடிய ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன என்று மூத்தோர்  சொல்லும் வாய்மொழியை ஒத்த தோற்றத்தினை உடையவள், இறைவனையும் கவரும் தோற்றம் கொண்டவள் எனப் பேரிளம் பெண்ணின் (33 — 40 வயதுடையவள்) இயல்புரைக்கும் பொழுது,

      கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
      ஒண்தொடி கண்ணே உள.   
            [களவியல், புணர்ச்சி மகிழ்தல்: குறள் - 1101]
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன (மு. வரதராசன் உரை).என்ற குறளை எடுத்தாண்டு இருப்பார்.   

வள்ளுவரை பண்டையோர் என்று பெருமிதம் கொள்கிறார் சேரமான் பெருமாள்.  
அவ்வாறே;

      "இல்லாரை யெல்லாரும் எள்குவார் செல்வரை 
      எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னுஞ் -சொல்லாலே 
      அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் 
      மல்கிய சாந்தொடு பூண்புனைந்து"
            [திருக்கைலாய ஞானவுலா: 136 - 137 கண்ணிகள்]
என்ற வரிகளில்; பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர், செல்வரை எல்லோரும் சிறப்பு செய்வர் என்ற உலக வழக்கை அறிந்திருப்பதனால், இறைவன் தன் மீது மையல் கொள்ள வேண்டும் என்பதற்காக அவள் தன் மிக உயர்ந்த இடையில் மேகலையைச் சுற்றிக் கட்டி, தன் அழகிய மார்பின் மேல் மிக்க மணம் வீசும் சந்தனக் கலவையைப் பூசி மேலும் பல அணிகலன்களை அணிந்து கொண்டாள் என அந்த அரிவையின் (20 — 25 வயதுடையவள் அரிவை) அணிநலன்களைப் புலப்படுத்துகிறார். அவ்வரிகளில்,

      இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
      எல்லாரும் செய்வர் சிறப்பு.
            [கூழியல், பொருள்செயல்வகை:  குறள் - 752]
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார், செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர் (மு. வரதராசன் உரை) என்ற குறளையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளமை பொய்யில் புலவர் அருளிய திருக்குறளில் சேரமான் பெருமாள் நாயனார் கொண்ட பேரார்வத்தை இனிது புலப்படுத்துவதாகும் என்பார் வெள்ரைவாரணனார். 

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவத்து மகளிரும் தன்னைக் கண்டு காமுற்று மயங்கும் நிலையில் தலைவனொருவன் உலாப்போவது ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைத் திணையைச் சார்ந்தது, இக் கைக்கிளைச் செய்திகள் பரத்தையர்க்கு அன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாதவை என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.   

வள்ளுவர் குறிப்பிடும்  தலைவி இல்லறம் மேற்கொண்ட ஒரு குலமகள் என்ற வகையில் இது வேறுபடுகிறது. தலைவியைக் குலமகள் எனக் காட்டும் முகமாகத்தான்  வள்ளுவர் குறள்கள்  அமைந்துள்ளன.  அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பரத்தையர் என்ற பிரிவில் அடங்கும் பொதுமகளிரை "வரைவின் மகளிர்" (வரைவு= திருமணம்; ஓர் ஆணுடன் திருமண உறவு இன்றியும்,  ஒருவனுக்கு ஒருத்தி  என்ற இல்லற வாழ்க்கை மேற்கொள்ளாதவருமான பொதுப்பெண்டிர், பொருள் பெண்டிர்) என்ற அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் தனியாகக் குறிப்பிடுகிறார். 

பார்வை நூல்:  பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டாம் பகுதி: 8 - 12 திருமுறைகள்), வித்துவான் க. வெள்ரைவாரணன்.  பக்கம் 603. தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1969.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 302   -  17.09.2025]  

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 


Wednesday, September 10, 2025

சிவிகைப் பயணமும் அறவழியும்

சிவிகைப் பயணமும் அறவழியும் 

வள்ளுவர் தன் குறளின் தொடக்கமாக உள்ள 'பாயிரம்' பகுதியின் 4 அதிகாரங்களில்;  முதலில் இறைவணக்கம், வான்மழை போற்றுதல்,  உலகப் பற்றை நீத்தவர் பெருமை ஆகிய கருத்துக்களைக் கூறிவிட்டு அடுத்து அறநெறிப்படி வாழ்வதன் முக்கியத்துவத்தை 'அறன்வலியுறுத்தல்' அதிகாரத்தில் மூலம் எடுத்துரைக்கிறார்.  திருக்குறளின் நோக்கமே அறவாழ்வை, ஒழுக்க நெறிகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பதால் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறள்கள் யாவும் அறவாழ்வின் மேன்மைக்குக் கொடுக்கப்படும் முக்கியமான ஓர் அறிமுக உரையாகக் கொள்ளலாம். இதன் பின்னரே அறத்துப் பாலில் இல்லறவியல்,  துறவறவியல் ஆகிய இயல்கள் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன. 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் குறட்பாக்கள்:
31.  அறமானது சிறப்பையும் செல்வத்தையும் அளிப்பதால், அதைவிடச் சிறந்த வேறொரு நன்மையும் உயிர்க்கு இல்லை. 
32.  அறத்தின் மூலம் கிடைக்கும் சிறப்பையும் செல்வத்தையும் விட ஒருவருக்கு மேலான நன்மை இல்லை, அதே சமயம் அறத்தை மறந்து வாழ்வதைக் காட்டிலும் கொடிய கேடு வேறு இல்லை. 
33.  தன்னால் முடிந்த வழிகளில், எல்லா இடங்களிலும் அறச்செயல்களை இடைவிடாமல் செய்ய வேண்டும்.  
34.  மனத்தளவில் குற்றம் இல்லாதிருப்பதே உண்மையான அறமாகும்; இதைத் தவிர்த்த செயல்களும், வார்த்தைகளும் ஆரவாரத் தன்மை கொண்டவை, அவை உண்மையான அறம் ஆகாது. 
35.  பொறாமை, பேராசை, சினம், கடுமையான சொல் ஆகிய இந்த நான்கையும் நீக்கி, குறைவின்றி ஒழுக்கத்தோடு வாழ்வதே அறமாகும்.
36.  எதிர்காலத்தில் செய்யலாம் என்று அறங்களை ஒத்திவைக்காமல், செய்ய வேண்டிய நற்செயல்களை உடனடியாகச் செய்துவிட வேண்டும். அப்போதுதான், உடல் அழிந்துபோகும் நேரத்தில், அந்தச் செயல்களே நமக்கு நிலையான துணையாக அமையும். 
37.  பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. — மு. வரதராசன்
38.  அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். — சாலமன் பாப்பையா 
39.  மனித வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது புறப் பொருட்களைச் சார்ந்ததல்ல, மாறாக அது ஒருவரது அறவொழுக்கம் நிறைந்த வாழ்விலிருந்தே வருகிறது. 
40.  தன் வாழ்நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை அறச் செயல்களாகும்; தவிர்க்க வேண்டியவை பழிகளாகும். 

அறன்வலியுறுத்தல் அதிகாரத்தின் பொருளைச்  சுருக்கமாகச் சொன்னால்; குற்றமில்லாத மனதுடன், மற்றவரை எந்த வழியிலும் வருத்தாமல், பிறருக்கு உதவும் நோக்கத்துடன் நற்செயல்கள் செய்வதுதான் அறவொழுக்கமாகும்  எனப் புரிந்து கொள்ளலாம். 

      இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
      அறவிலை வணிக னாயலன் பிறரும்
      சான்றோர் சென்ற நெறியென
      ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (புறநானூறு: 134)
கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன், அறச் செயல்களைச் செய்தது, மறுமைக்கான நற்பலன் கருதி அல்ல. மாறாக, அதுவே சான்றோர் நெறி என்பதற்காகத்தான் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எழுதிய பாடல்.  வேள் ஆய் அண்டிரன் ஓர் "அறவிலை வணிகன்" அல்ல என்று அவனைப் பாராட்டுகிறார் புலவர்.   

தன்னல நோக்கோடு அறம் செய்யாமல்  ஈத்துவக்கும் இன்பத்திற்காக, அறம் என்ற நோக்கில் செய்யலாற்றுவது என்பதை வள்ளுவருமே ஈகை  அதிகாராத்தில் 
      நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
      இல்லெனினும் ஈதலே நன்று.   (குறள்  - 222) 
தன்னல நோக்கோடு அறம் செய்யாமல், ஈத்துவக்கும் இன்பத்திற்காக மட்டுமே அறம் செய்வதை வள்ளுவர் 'ஈகை' அதிகாரத்தில் குறிப்பிடுகையில், பிறரிடம் இரந்து வாழ்வதைத் தவிர்த்து விடுக, மேலுலகம் செல்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செய்யாமல் தன்னால் முடிந்தவரை பிறருக்குக் கொடுத்து உதவுவதே உயர்ந்த பண்பு  என்று குறிப்பிடுவார்.  பலன் கருதா நோக்கில் அறம் செய்தல் என்பதை ஓர் அளவுகோலாகக்  கொண்டு அறன் வலியுறுத்தல் குறள்களை ஆராய்ந்தால், நற்செயல் நோக்கம் மட்டுமே என்ற வகையில் ஆறு (32, 33, 34, 35, 39, 40) குறள்களும்; தன்னலப் பயன் கருதி செய்வனவாக மூன்று (31, 36, 38) குறள்களையும் தெளிவாக வகைப்படுத்திவிட முடியும். 

      அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (குறள் - 37)
என்ற குறள் பொருள்மயக்கம்  தரும் குறளாகும், இதற்குப் பொருள் கொள்வோர் பொருள்  கொள்ளும் முறையில் குறளின் கருத்து மாறுபடலாம்.  இது போன்ற சூழ்நிலையில் உரையாளர்கள்  பொதுவாகவே குறளின்  சொல்லுக்குச் சொல் பொருள் சொல்லிக் கடந்துவிடுவதும் வழக்கம். எடுத்துக்காட்டாக; "பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா"  என்று மு. வரதராசன் பொருள் கொள்வதைக் காண முடிகிறது.  




இக்குறளுக்கு இம்மையில் செய்யும் அறச்செயல் மறுமையில் நல்வாழ்வு தரும் என்ற (அறவிலை வணிகம்) பிறவிப்பயன்  கோட்பாட்டின் அடிப்படையில் பொருள்  சொல்லப்படும். முன்னைவினையின் பயன் என்ன என்பதைப் பல்லக்கு சுமப்பவனையும் அதில் பயணிப்பவனையும் பார்த்தாலே தெரியும், பயணிப்பவன் முற்பிறவியில் செய்த நல்வினையால் பல்லக்கில் செல்லும் நிலையில் உள்ளான், அவனைச் சுமப்பவர்கள் அறச்செயல் செய்யாததால் மற்றவரைச் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று பொருள் விளக்கம் கொடுக்கப்படுவது வழக்கம்.  இவ்வாறு பொருள் கொண்டால் இது நற்பயன் கருதி அறவழியில் நடக்க வலியுறுத்தும் பிரிவில் இக்குறளை வகைப்படுத்தலாம்.  இது வினைப்பயன் சார்ந்த ஒன்று. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர், ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் இந்த வினைக்கோட்பாட்டுக் கருத்துத் தோன்ற உரை எழுதியுள்ளனர்.  இக்காலத் தமிழ் அறிஞர்களுள்ளும் தேவநேயப் பாவாணர், வ.உ.சிதம்பரம், கா.சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார், சாமி சிதம்பரனார் ஆகியோருக்கும் இக்கருத்து ஏற்புடையதாகவே இருந்துள்ளது.  

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (குறள் - 1062) என்று இயலாமையில், வறுமையில் உள்ளவருக்காக வருந்தி, பிச்சை எடுத்தாவது ஒருவர் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், இந்த உலகைப் படைத்த கடவுளும் பிச்சையெடுத்து அலைந்து கெட்டுத் தொலைக என்று கடுமையாகக் கூறும் வள்ளுவரா துன்பத்தில் உழல்வது ஒருவர் செய்த முன்வினைப்பயன் என்பார் என்ற கேள்வியும் எழுகிறது. 

இக்குறளுக்குப் பொருள் சொல்லும்  குன்றக்குடி அடிகளார்; இக்குறள் "சிவிகை ஊர்ந்து செல்வோன் தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது. "உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது என்பார்" [உதவி:குறள்திறன் தளம்]. 

ஆகவே;  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்பதன் பொருள், 
சிவிகை  பொறுத்தானோடு = பல்லக்கைச் சுமப்பவனுக்கும் அவன் உதவியோடு   
ஊர்ந்தான் இடை = அப்பல்லக்கில் பயணிப்பவனுக்கும் இடையில் உள்ள தொடர்பை நோக்கும் பொழுது  
அறத்தாறு இதுவென வேண்டா =  அறவழி இதுதான் என்று எண்ணுதல் வேண்டாம்

அதாவது, பல்லக்கைச் சுமந்து செல்பவர்களையும் அதில் பயணிப்பவரையும் காணும் பொழுது, சொல்லாமலே எது அறவழி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  ஒரு சிலரை நோகச் செய்து அவர் வாழ்வில் தங்களை மேம்படுத்திக் கொள்வது அறவழியும் அல்ல அது அறவாழ்வும் அல்ல.  
 
பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்ய விரும்பும் ஆதீனங்கள் உள்ள இக்காலத்தில், அறவோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பல்லக்கில் பயணிப்பது அறம் பிழைபட்ட செயல் என்று உறுதியாக மறுத்துக் கூறியவரும் ஓர் ஆதீனத்தின் தலைவர் என்பது இங்குக் கவனத்திற்கு உரியது.


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 301   -  10.09.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi