Showing posts with label Themozhi. Show all posts
Showing posts with label Themozhi. Show all posts

Tuesday, November 25, 2025

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள்

பொதுவாக "உறுதிப்பொருள்கள்" நான்கு என்று கூறப்படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன ஆகும். ஆனால், திருவள்ளுவர் எவற்றை எல்லாம் மிக "உறுதியான கருத்துக்களாகக்" கூறுகின்றார் என்று அறிய முயல்வது ஆர்வமூட்டும் ஒரு தேடலாக அமையும் என்பதில் ஐயமில்லை. எதையும் உறுதிப்படக் கூறுவதற்கு இலக்கியத்தில் "தேற்ற ஏகாரம்" பயன் கொள்ளப்படும்.
      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.  
என்ற முதல் குறளிலேயே அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பதை "முதற்றே" என்ற தேற்ற ஏகாரத்தில் முடியும் சொல்லாக அமைத்து உறுதிப்படக் கூறுகிறார். தேற்றப் படுத்தும் ஏகாரம்  அல்லது உறுதிப்படுத்தும் ஏகாரம் கொண்டு 'முதற்றே' என்ற சொல் அமைகிறது.

இந்த "ஏகார இடைச்சொல்" தேற்றம் தவிர்த்து;  வினா, பிரிநிலை, எண், ஈற்றசை  எனும் பொருள்களை உணர்த்தியும் அமையும்.
      “தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே,
      ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே
என்பது தொல்காப்பிய இடையியல்  நூற்பா.  

‘ஏ’ இடைச் சொல்லுக்குத் தொல்காப்பியர் கூறியுள்ளவற்றோடு ‘இசைநிறை’ என்ற ஒன்றையும் கூட்டி ‘ஏ’ ஆறு பொருளில் வரும் என்று நன்னூலார் இடையியலில் கூறியுள்ளார்.
      “பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
      இசைநிறை என ஆறு ஏகாரம்மே
ஆக, ஏகார இடைச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் கூட செய்யுள்களில் இடம் பெறுவதுண்டு. இது ஏகார இடைச்சொல் என்பதன் இலக்கணப்  பின்னணி.
குறளில் ஏகார இடைச்சொல் சற்றொப்ப 90 குறள்களில்  இடம் பெறுகின்றன, அவற்றுள் சில;

      சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை. (1031)  
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; இதில் 'உழவே தலை' தேற்றமாகக் கூறப்படுகிறது. தேற்றம் என்றால் தெளிவு, உறுதி என்று பொருள். என்று இதில் ஏ தேற்றப் படுத்துகின்றது. ஆகவே இது  தேற்றம்.

      அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
      புறத்த புகழும் இல. (39)
அற வாழ்வில் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன அல்ல, அவை புகழ்  தராது;   இதில் ஏ என்பது பலவழிகளை ஒப்பிட்டு அறவழியைப் பிரித்துச் சுட்டுகிறது. பிரிநிலை என்றால் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காட்டுவது. ஆகவே இது பிரிநிலை.

      மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
      என நான்கே ஏமம் படைக்கு. (766)
வீரம், மானம், நன்னடத்தை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்;  இதில் வீரம், மானம், நன்னடத்தை, நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் என எண்ணிச் சொல்கிறது. ஆகவே இது எண்ணுப் பொருள்.  

குறளில் ஏகார இடைச்சொல்  பயன்கொண்டு தேற்றமாகவும் பிரித்து ஒப்பிட்டுக் காட்டும்வகையில் உறுதியாக உணர்த்தப்படும் கருத்துகள் சிலவற்றைப் பின் வரும் குறள்களில் காணலாம்.
தேற்றம்:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (282)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (293)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் (394)
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள (527)

பிரிநிலை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (76)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (129)
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து (221)
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு (299)

[நன்றி: உலகத்தமிழ் - இதழ்: 312 - 26.11.2025] 


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Sunday, November 23, 2025

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்—அறிவியல் நூல் அறிமுகம்

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்அறிவியல் நூல் அறிமுகம்

பேரா. முனைவர் மு. முத்துவேலு, சென்னை

     அறிவியலை ஆய்வுகளை ஆக்கம்சேர் கணிப்பொறியைப் 
     பொறியியலை மருத்துவத்தைப் பொதுமைசேர் சட்டத்தின் 
     நெறியதனைத் தமிழாக்கி நிறைந்துவரும் நூலியற்றி 
     அறிவுசார் மொழிஎன்று அவனிக்குக் காட்டிடுவோம்! 
என்னும் என் கவிதைக்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை அருந்தமிழில் எழுதி அறிவியல் தமிழைப் பரப்பி வருகிற அறிஞர் பெருமக்களுள் முனைவர்  தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இந்நூலில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் என்னும் கட்டுரை தொடங்கி முச்சொல் முகவரி என்னும் கட்டுரை வரை உள்ளன. இந்த நூலில் அறிவியல் உலகத்தில் பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும் அறிவியல் கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகளும், சில அறிவியல் செய்திகளும் அடங்கி உள்ளன.

அறிவியல் அறிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகையில் நிறைவாக அந்த அறிவியல் அறிஞரின் நினைவாக உலகம் போற்றி வருகிற செயல்பாட்டினை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்குக் காத்தரின் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சுட்டிக் காட்டத் தக்கதாகும். அதைப் போலவே டிமிட்ரீ மெண்டலீயா என்னும் ருசிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் பெயரில் அறிவியலில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடுவது மேனாட்டு உலகம் அறிவியல் அறிஞர்களைப் போற்றிப் பாராட்டுகிற செயல்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

தொற்றுநோய்ப் பரவலைக் காட்டும் மருத்துவப்புவி வரைபடங்களின் வரலாறு எனும் கட்டுரையில் உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளை நோய் குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்களையும் அதன் செயல்பாடுகளையும் அதனைக் கண்டறிந்த வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இக்கட்டுரை நூலில் மூன்று பக்கங்கள் முதல் 15 பக்கங்கள் வரையிலான கட்டுரைகள் அடங்கியுள்ளன. சென்னைப் பெருநகரில் காலரா நோய் பரவியதற்குப் பின் அதனைத் தடுக்கும் நோக்கில்தான் இலண்டன் மாநகரைப் போலச் சென்னை நகரிலும் கழிவுநீர் வடிகால் வசதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றுச் செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது சென்னை நகரின் கழிவுநீர் வடிகால் வசதியின் வரலாற்றைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்ல நம் கைப்பேசித் திரையில் உலக வரைபடத்தைத் திறந்து நம் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடக்கமாகக் கடலுக்கு நடுவே செல்லுகிற கப்பலை ஒட்டுகிற மாலுமிகள் தாங்கள் செல்லும் திசையையும் கடலில் தாங்கள் கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதையும் கண்டறிவதற்கான அந்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வைக்கண்ட கடற்கால மாணி குறித்த கட்டுரை சுவையானதாக அமைந்துள்ளது.

உலக வரைபடங்களை உருவாக்கிப் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதனுடைய துல்லியம் இன்னும் செம்மைப் படவில்லை. அந்தத் துல்லியத்தை நோக்கித்தான் வரைபடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வரைபட வரலாறு இன்னும் அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்குக் கட்டுரை சான்றாக அமைகிறது.

முச்சொல் முகவரி என்ற கட்டுரையும் உலக வரைபடத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "அறிவியல் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய இன்றியமையாமையைத் தேமொழி தெரியப்படுத்துகிறார்" என்று பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம். அறிவியல் கருத்துக்களை எழுதும் பொழுது அதன் மொழிநடையும் சொல் பயன்பாடும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் முனைவர் தேமொழி அவர்கள் எளிய சொற்களில் ஊடகத் தமிழ் நடையில் எல்லோருக்கும் புரிகிற மொழியைப் பயன்படுத்தி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அறிவியல் அறிஞர்களின் படங்களையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் தேடிக் கண்டெடுத்து நூலிலே இணைத்திருப்பது, தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்கு இடையில் சற்று இளைப்பாறுதலையும் சுவையையும் ஊட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அறிவியல் ஆக்கங்களை எல்லாம் அருந்தமிழில் எழுதிப் பரப்பி வருகிற முனைவர் தேமொழி அவர்களின் அறிவியல் தமிழ்ப் பணி மேலும் சிறக்க அறிவியல் பூங்காவின் நல்வாழ்த்துக்கள்!


நன்றி:
அறிவியல் பூங்கா, மலர்: 17, இதழ்: 68, பக்கம் : 46 

______


நூல் : அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
ஆசிரியர் : தேமொழி 
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை (+91 70109 97639)
விலை : ரூ.150/-
______


என்னுடைய நூலுக்கு  நூலறிமுகம் கொடுத்துப் பாராட்டி  ஊக்கம் அளித்துள்ள பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


#Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல், #அறிவியல்பூங்கா, #நூலறிமுகம், #முனைவர்மு.முத்துவேலு

Saturday, October 11, 2025

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"

சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்"


சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்னவாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.  மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம். சித்தன்னவாசல் குகைக்கோயிலின் முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின் சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஓவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும் தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.  வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஓர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவு கொண்டனர். அவனுக்கு அண்மையில் உள்ளது அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது;  என்று இவ்வாறாகத் தமிழ் அறிஞரும் வரலாற்று  ஆய்வாளரும் ஆன டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர் எழுதிய "பல்லவர் வரலாறு" நூலில் குறிப்பிடுகிறார். 

ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்  எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்:   மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன.  நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை,  காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக  அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில்  காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில்,  மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும்.  அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு.  அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள்.  இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன.  உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார்  மயிலை சீனி வேங்கடசாமி.


செய்யறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட சித்தன்னவாசல் குகைக்கோயில்
"அரசன் அரசி ஓவியம்"



 
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு அக்கால வரலாற்று  ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர்.  மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.  

மேலும்; பாண்டிய மன்னன்  ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர்  சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

      "திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
      தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
      அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
      வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
      லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை  . . . . . . . . .
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
      அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
      சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
      புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
      மெடுத்தான் முன்"

சொல் பிரித்து :
      "திருத்திய பெரும் புகழ் தைவ தரிசனத்து 
      அரும் தவ முனிவனை பொருள் செல்வன்
      அறம் கிளர் நிலைமை இளங்கௌதமன் என்னும் 
      வளம் கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
      அவனே பார் முழுதும் ஆண்ட பஞ்சவர் குல 
      முதலார் கெழு வைவேல் அவநீப சேகரன்
      சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
      என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை......   
      பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
      அண்ணல்வாயில்  அலறிவர் கோ இன்
      முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி...... 
      அழியா வகையாற் கண்டனனே...... 
      சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம்
      புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டகம் 
      எடுத்தான் முன்"

இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில்,  சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது.  இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்துத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும்  காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும்,  அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.


அடிக்குறிப்புகள்:
https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htm
https://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை

நன்றி: தமிழணங்கு - நவம்பர் 2025 (பக்கம்: 3-6)

Tuesday, May 17, 2016

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்


பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது என நாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, குறுகிய ஒன்றே. தொடர்ச்சியாக அமைந்து, கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பைத் துண்டிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை அருகில் அமைந்த பாலக்காட்டுக் கணவாய், தென்காசி அருகில் செங்கோட்டைக் கணவாய் ஆகியவற்றைத் தவிர்த்து தெற்கே தென்குமரிக்கரையை ஒட்டி ஆரல்வாய் மொழிக் கணவாயும் அமைந்துள்ளது. இந்த மூன்று கணவாய்களும் பண்டைக்காலத்திலும் மேற்குக் கடற்கரையை அடைய உதவும் வணிகப் பெருவழியாகவே அமைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.

தொல்லியல் சான்றுகள்:


பண்டைய வணிகப் பெருவழிகள் இருந்ததையும் அவற்றின் அமைவிடங்களையும், அந்த வணிகப் பெருவழிகளில் இருந்த ஊர்களையும் சான்றுகளுடன் உறுதிப்படுத்த உதவுவது, அத்தடங்களிலும் ஊர்களிலும் அகழாய்வில் கிடைத்த அக்கால நாணயங்கள், வணிகப் பொருட்கள் போன்ற தடயங்களே.

கோயம்புத்தூர் அருகில், பண்டைய வணிகப் பெருவழியில் அமைந்த, வெள்ளலூர் (போத்தனூருக்குச் சமீபத்தில் இருப்பது) என்ற ஊரில் 1843 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 1891, 1931 மற்றும் 1939 ஆண்டுகளிலும் அகழ்வாராய்ச்சியின் பொழுது உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்து வருவதை “தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி” குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தில் கொடுமணம், ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று அரிசில்கிழாரால் குறிப்பிடப்பட்டது “கொடுமணல்” என்ற ஊர் நொய்யல் ஆற்றின் கரையின் தென்பகுதியில் அமைந்த ஓர் ஊர். அரிய கல்மணிகள் உற்பத்தி செய்வதில் புகழ் பெற்று சங்க காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்துள்ள கொடுமணல் ஈரோட்டில் இருந்து தென்மேற்கில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருந்ததற்குக் காரணம், வணிகப் பெருவழியில் அமைந்ததே என்பது “தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ்” அவர்களது கருத்து. கொடுமணல் அமைந்திருப்பது சேரநாட்டையும் சோழ நாட்டின் பூம்புகாரையும் இணைக்கும் முதன்மை வணிகப் பெருவழியிலாகும்.

இது போன்றே, வடக்கு நோக்கிச் செல்லும் பெருவழி ஒன்று, விசயமங்கலம், சத்தியமங்கலம் கடந்து பவானி ஆற்றின் துணை ஆறான மோயாற்றுப் பள்ளத்தாக்கு வழியாக இன்று மைசூர் என அழைக்கப்படும் எருமையூர் என்ற ஊரைச் சென்றடைகிறது என்றும்; தெற்கே செல்லும் பெருவழியொன்று, காங்கேயம், தாராபுரம், அயிரைமலை, பழநி வழியாக மதுரையை அடைகிறது எனவும்   மேலும் சில வணிகப் பெருவழிகளைப் பற்றியும் தொல்லியல் அறிஞர் ச. செல்வராஜ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

மதுரையிலிருந்து, கீழ்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் காணப்படும் பெருவழியொன்று மதுரையில் துவங்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை அமைந்திருந்ததை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மேலும் கம்பம் பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இது குற்றாலம், தென்காசி, செங்கோட்டைக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரையை அடைய உதவிய வணிகப் பெருவழியாகும்.

புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, இராமநாதபுரத்தின் அழகன்குளம் ஆகிய கடற்கரையோரப் பட்டினங்களும் அகழாய்வில் கிடைத்த தடயங்கள் மூலம் வணிகத்தில் பங்குபெற்ற இடங்களாகத் தெரியவருகின்றன. இந்த வணிகப் பெருவழிகள் வழியாக இந்தியாவின் மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பருத்தி ஆடைகள், முத்துகள், தந்தம், சந்தனம், விலையுயர்ந்த மணிகள், மரகதக் கற்கள் போன்றவை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து பொன்னும், வெள்ளியும், மதுவும் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அந்நாடுகளின் நாணயங்களும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன. “தி பெரிப்லஸ் ஆஃப் தி எரித்ரயென் சீ ” (Periplus of the Erythraean Sea) என்ற கி.பி 70 கால வாக்கில் எழுதப்பட்ட கிரேக்க நூலும் யவனர்கள் இந்தியாவுடன் வணிகம் செய்த பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.

இலக்கியச் சான்றுகள்:


காங்கேயத்தில் இருந்து பழநி வழியாக மதுரை செல்லும் வணிகப் பெருவழி பற்றிய சான்றை பேராசிரியர் ப.பாண்டியராஜா அவர்கள் அகநானூற்றுப் பாடலில் இருந்து எடுத்துக் காட்டுகிறார். பழநி வழியே செல்லும் நெடுவழி வணிகர்களைக் கொள்ளையடிக்க வரும் மழவர்களை நெடுவேள் ஆவி விரட்டியடித்தான் என்பது,

“வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடு வேள் ஆவி
அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் …”
(அகநானூறு – 1, மாமூலனார்)

என்ற இப்பாடலில் காணப்படுகிறது என்றும், பொதினி என்பது இன்றைய பழனி அருகில் உள்ள பொருந்தல் என்பதும் (பொருந்தல் என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் அது வணிகப் பெருநகராக இருந்திருக்கக்கூடிய சான்றுகள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன என்பதும்) அவர் கூறும் தகவல்.

அவ்வாறே, அகநானூறு 25 ஆம் பாடலில் பொருளீட்டும் பொருட்டு தலைவன் செல்லும் வழியைக் குறிப்பிடும் பொழுது அவன் பொதிகை மலைத் தலைவன் திதியன் ஆளும் பகுதி வழி செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“… பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரே”
(அகநானூறு – 25, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்)

குற்றால அருவிகள் பொதிகை மலையில் இருக்கின்றன. எனவே, தலைவன் செல்லும் அவ்வழியில் இசைக்கருவிகள் தரும் இசைபோன்ற ஒலியுடன் வீழும் “கல்மிசை அருவியை” குற்றால அருவியாக இருக்கலாம் என்றும், தலைவன் ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழி செல்லும் வணிகப் பெருவழியில் பயணம் செல்கிறான் எனக் கருதலாம் என்றும் கூறுகிறார்.

மேலும், அகநானூறு – 47 ஆம் பாடலில் பொருளீட்டச் செல்லும் தலைவன் பயணிக்கும் வழியை, பாடல் காட்டும் சுற்றுச்சூழல் குறிப்புகளான,

“…ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு
(அகநானூறு – 47, ஆலம்பேரிச் சாத்தனார்)

ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் செழித்துவளர்ந்த மூங்கில் காடுகளின் நடுவே சென்றிருக்கிறான் என்பது மேற்கு மலைத் தொடரைக் குறிக்கும் என்றும் எனவே தலைவன் செல்லும் வழியும் செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லும் வணிகப் பெருவழியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார் பேராசிரியர் ப. பாண்டியராஜா.

வாணிகச் சாத்தும் அய்யனாரும்:
பண்டைத் தமிழகம் வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு என்ற நூலில் “மயிலை, சீனி. வேங்கடசாமி” அவர்கள், கடைச் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்பதை ஆராய்ந்து, பண்டைய தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றி விளக்குவார். அதில், சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை ‘மாசாத்துவன்’ என்பவரையும், கோவலனின் மனைவியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ என்பவரையும் குறிப்பிட்டு அவர்களின் பெயர்களுக்கு விளக்கமும் அளித்திருப்பார்.

கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து – வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அது போன்றே, பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர் – கப்பலையுடையவர். நாவாய் – கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. ஆகையால், கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன் (மாநாய்கன்) எனக் குறிப்பிட்டு, வணிகர்களான மாசாத்துவனும், மாநாய்கனும் அவ்வாறு அழைக்கப்பட்ட காரணத்தையும் சீனி. வேங்கடசாமி விளக்குவார்.

திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று சென்ற ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2, 2015 நாளிதழ் செய்தி) “திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தின்” தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் இதே செய்தி மீண்டும் குறிப்பிடப்பட்டது. தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிக்குமார் அவர்கள், “பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானது முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரை உள்ள வழியாகும். அதாவது பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை இராசகேசரிப் பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

வரைபடத்தில் புவியிடக் குறியீடுகள்:
இச்செய்தியில் காணும் தகவல்படி தமிழகத்தில் சாத்தன் மற்றும் அய்யனார் ஆகியவற்றின் தொடர்பு எவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்பதை அறியும் பொருட்டு மேற்கொண்ட ஒரு முயற்சியே இக்கட்டுரை. பண்டைய அய்யனார் சிலைகளின் இருப்பிடங்களும், சாத்தன் என்ற பெயரில் தொடங்கும் ஊர்களும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் காணப்படக்கூடும் என்ற தேடல் துவங்கியது.

1. செய்தித்தாள்களில் கிடைத்த “பண்டைய அய்யனார்” சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் குறிப்புகள் சேகரிக்கப்பட்டன.

2. ‘சாத்தன்’ என்ற பெயர் இடம்பெற்ற ஊர்களின் இருப்பிடங்களைச் சேகரிக்க இந்திய “அஞ்சலக எண்” (Pincode) தரவுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தளத்தில் இருந்து பெறப்பட்டன. Pincode Search – All India Pincode Directory என்ற தளத்தில் (http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx) இருந்து ஊர்களின் பெயர்களும் அவற்றின் அஞ்சலக எண்களும் சேகரிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டன.

இப்பட்டியலில் உள்ள ஊர்களில் ‘சாத்தன்’ என்ற பெயருடன் தொடர்புடையவைதான் என்று உறுதியாகத் தெரிந்த ஊர்கள் மட்டும் (சாத்தனூர், சாத்தமங்கலம், சாத்தன்குளம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுப்பட்டியலும் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிரீதரன் அவர்களால் பார்வையிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊர்கள் ‘சாத்தன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையவைதான் என உறுதியளிக்கப்பட்டது. அய்யனார் சிலைகள் கிடைத்த இடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாத்தன் என்ற பெயருடன் 44 இடங்களும் கிடைத்தன.

1. இந்த இடங்கள் யாவும் ‘கூகிள் மேப்’ (Google Map) வரைபடத் தளத்தில் குறிக்கப்பட்டன. அதனால், அஞ்சலக எண் தரவுகளில் இடம்பெறாத சாத்தன் என்ற ஊர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கவில்லை

2. இருப்பினும், கூகுள் வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும்பொழுது மேலும் ‘சாத்தன்’ என்ற பெயருடன் அகப்பட்ட மற்றும் சில ஊர்களும் குறிக்கப்பட்டன

3. கூகுள் வரைபடத்தில் வணிகப் பெருவழிகள் என தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களும், பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களும்
(a.) குறிப்பிட்ட இடங்களும், (b.) வணிகவழித் தடங்களும், (c.) அந்த வரைபடங்களில் கொடுக்கப்பட்ட சில முக்கியமான வணிக ஊர்களும், கணவாய்களும் (சிவப்பு நட்சத்திரங்கள்), துறைமுகங்களும் (பச்சை வட்டங்கள்), அகழாய்வில் வணிக ஊராக அடையாளம் காணப்பட்ட இடங்களும் அடிப்படைக் குறிப்புகளாகக் (basic reference points) குறிக்கப்பட்டன





இடங்களும் தடங்களும் குறிக்கப்பட்ட பிறகு கூகுள் வரைபடம் வழி அறிந்து கொண்டவை:
[ஊர்களின் பட்டியலையும், கூகுள் வரைபடத்தையும் பார்வையிடத் தேவையான சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன]
1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும்   மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)

2. மத்திய அரசு வழங்கும் ‘அஞ்சலக எண் தரவுகளில்’ இன்றைய கேரளா பகுதியில் ‘சாத்தன்’ என்ற பெயரில் எந்த ஊரும் கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் கிடைக்கும் சில ஊர்களின் பெயர்களில் தற்செயலான ஒலிப்பு ஒற்றுமை மட்டுமே இருக்கலாம் என்று அந்த ஊர்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை (தவிர்க்கப்பட்ட அந்த ஊர்களின் பெயர்களும், அவற்றின் அஞ்சலக எண்களுடன் பட்டியலில் பார்வைக்குக் கிடைக்கும்)

3. இவ்வாறு குறிக்கப்பட்ட இடங்கள் யாவும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளின் அருகாமையில் அமைந்துள்ளன.

4. அத்துடன், பண்டைய வணிகப் பெருவழிகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறித்த தடங்களின் வழியிலேயும் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது.

5. குறிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வரையப்பட்ட கோடுகள், இக்காலத் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியிலும் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

வரைபடத்தில் இடங்களைக் குறிப்பதன் மூலம் (Geospatial data – relating to or denoting data that is associated with a particular location) ஒரு செய்தியைப் பற்றிய புதிய கோணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புவியிடக் குறியீடுகள் மூலம் நம் கவனத்திற்கு வந்திராத சில முக்கியத் தகவலும் பார்வைக்குக் கிடைக்கும். இவ்வாறு அறியும் முறை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் காலரா நோய் பரவிய பொழுது, நோய் பரவிய இடங்களை வரைபடத்தில் (epidemic on maps) குறிக்கும்பொழுது அறியப்பட்டது. ஜான் ஸ்னோ (Dr. John Snow) என்ற மருத்துவரே நோயறியும் வரைபட முறையை முதன் முதலில் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். காலரா நோயாளிகளின் இருப்பிடத்தை லண்டன் மாநகர் வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது நோய் அதிகம் பரவிய இடம் ஒரு குறிப்பிட்ட குடிநீர்க் குழாய் வழித்தடத்தில் இருப்பதும், குடிநீர் வழி நோய் பரவுவதும் தெரிய வந்து அதற்கு மாற்று வழி கண்டவுடன் நோய் பரவுவது தடுக்கப்பட்டது.

எனவே, அது போலவே தமிழக வரைபடத்தில் ‘சாத்தன்’ என்ற ஊர்கள் அமைந்துள்ள இடங்கள், வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்த இடத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றனவா? பயணத்தின் பொழுது வணிகர்கள் அவ்வூர்களைத் தங்குமிடங்களாகப் பயன்படுத்த, அவர்களின் தேவைக்கேற்பத் தக்க வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தனவா? அல்லது இந்த அமைவிட அமைப்பு தற்செயலாக அமைந்துவிட்ட ஓர் ஒற்றுமையா? என்பதை மேலும் பல வரலாற்று ஆய்வுகளும் தடயங்களும் இனி வரும் காலத்தில் காட்டக் கூடும். இக்கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்கக்கூடும்.

______________________________________________________________________

Access to provided information:
Pincode Search – All India Pincode Directory
http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx

Data:
https://docs.google.com/spreadsheets/d/1Uh9Wf8l7xlg6Aii1-PZdBOIzar6C286NedegalRrBP8/edit?usp=sharing

Map:
https://drive.google.com/open?id=1_-IcmZ8k9MAJL26oBqLo2HSzdk4&usp=sharing

______________________________________________________________________

References:
[1] Of commerce and Cupid
Dr. R. Nagaswamy [Dr. R. Nagaswamy, then Director, Tamil Nadu State Department of Archaeology]
January 18, 2013, The Hindu
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/of-commerce-and-cupid/article4315984.ece
Map: http://www.thehindu.com/multimedia/dynamic/01333/18FR_VELLALUR_eps_1333230g.jpg

[2] Digging up the past
T.S. Subramanian
Volume 29 – Issue 15: Jul. 28-Aug. 10, 2012, Frontline
http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291507000.htm

[3] Akananuru – Song 1, 25 & Song 47
Dr. P.Pandiyaraja
http://sangacholai.in/akam01.html
http://sangacholai.in/akam25.html
http://sangacholai.in/akam47.html
Map: http://sangacholai.in/akam01-3.jpg

[4] Travelling down the ages
Shankar Vanavarayar
Dec 03, 2005, The Hindu
http://www.thehindu.com/mp/2005/12/03/stories/2005120302860200.htm

[5] Aiyanar sculpture with Vattezhuthu inscriptions found near Koduvai
http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiyanar-sculpture-with-vattezhuthu-inscriptions-found-near-koduvai/article7935070.ece
8ம் நூற்றாண்டு அய்யனார் சிலை:திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=1400770
http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2015/12/02/1200-ஆண்டுகள்-பழைமையான-அய்யனார/article3157265.ece

[6] பண்டைத் தமிழகம்: வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு, வீ. அரசு
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=81

[7] பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13

[8] வரலாற்றுக்காலம் – 1. கொடுமணலும் மரக்காணமும்
ச. செல்வராஜ், தொல்லியல் துறை, மண்டல உதவி இயக்குநர், பணி ஓய்வு
http://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/2016/01/22/வரலாற்றுக்-காலம்—1.-கொடுமணலு/article3238036.ece

Additional Readings:
[1] Book Review: Merchants of Tamilakam
BY Sarath Ramakrishnan, November 25, 2013
The Merchants of Tamilakam: Pioneers of International Trade
by Kanakalatha Mukund
http://centreright.in/2013/11/book-review-merchants-of-tamilakam/#.Vzfa1VQrLIU

[2] Trade through the Palghat gap
http://historicalleys.blogspot.com/2009/06/trade-through-palghat-gap.html

[3] Use of GIS Mapping as a Public Health Tool—From Cholera to Cancer
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4089751/
______________________________________________________________________

நன்றி : சிறகு - மே 17, 2016
https://siragu.com/வாணிகச்-சாத்தும்-தமிழகத்/

#சிறகு,   #Themozhi