Showing posts with label வரலாற்றில் பொய்கள். Show all posts
Showing posts with label வரலாற்றில் பொய்கள். Show all posts

Friday, August 1, 2025

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!


“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி  பகவத்கீதையின் சாரம் என்ற குறிப்புடன் “கீதாசாரம் சுவரொட்டி"யில் இடம் பெறும் கருத்துகள் யாவும் ஓர் ஆன்மீகப் புனைவு அல்லது கட்டுக்கதை.



வேதங்களின் சாரம் உபநிஷத்துகள்; அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத்கீதை. உபநிஷத்துகளின் சாரமான பகவத்கீதையை கண்ணன் மக்களுக்காக அருளிச் செய்தார் என்பது ஆன்மீக வாதிகள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. இவ்வாறாக பகவத்கீதை என்பதே எழுநூறு வசனங்களில் கொடுக்கப்பட்ட உபநிஷத்துகளின் சுருக்கமான சாரம்  என்ற நிலை இருக்கையில், அந்த சாரத்திற்கும் சாரம் என்று கீழ்க்காணும்;

      "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
      எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
      உன்னுடையதை எதை இழந்தாய்,
      எதற்காக நீ அழுகிறாய்?
      எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
      எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
      எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
      அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
      எதைக் கொடுத்தாயோ,
      அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
      எது இன்று உன்னுடையதோ
      அது நாளை மற்றொருவருடையதாகிறது
      மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
      இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்."
 பதினைந்து வரிகள் கொண்ட சொற்றொடர்கள் மிகப் பரவலாக அறியப்படுகின்றன.  

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ததும் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அவர் அளித்த செய்தியில்;  
      "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"
என்று தமது சமயச்சார்பற்ற உள்ளத்தை வெளிப்படுத்தினார்.

கீதையின் சுருக்கமாக கீதையின் இறுதியில் இரண்டே வசனங்களில் கண்ணனே கூறும் சாரத்திற்கும், கீதாசாரம் என அறியப்படும் இந்த 15 வரி சொற்றொடர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும்; பகவத்கீதையை முழுமையாகப் படித்தவர்கள், கீதாசாரம் சுவரொட்டியில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளைக் கீதையிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது என்கிறார்  ஸ்ரீ கிரிதாரி தாஸ் (https://www.facebook.com/profile.php?id=100005426808787).  

மேலும் அவர்,   கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது.  இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல, கீதாசாரம் சுவரொட்டியில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமும் இல்லை. என்கிறார்.

அனைத்தும் நன்மைக்கே என்பதைக் கீதையில் காண இயலாது.
"இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத்கீதை: 8.15) என்கிறது கீதை.
இவை  ஒன்றுக்கு  ஒன்று முரண் படும் கருத்துகள்.

தொடர்ந்து வரும் மற்ற வரிகளும்  கீதை சொல்லும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்பயன் கருத்துக்கு மாறான கருத்துகளாகவே  அமைந்துள்ளன என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ். அதாவது, புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும், பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படியே நடக்கின்றது  என்பது கண்ணன் கீதையில் கூறும் தத்துவம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் கண்ணனைச் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். என்பது இவர் வைக்கும் கருத்தாகும்.

திருவண்ணாமலை முனிவர் பகவான் ரமண மகரிஷி அவர்கள் பகவத்கீதையின் 700 வசனங்களில் 42 வசனங்களைத் தேர்ந்தெடுத்து, முழு கீதையின் சாரத்தையும் கீதாசாரம்  என்று தமிழில் வழங்கியுள்ளார்.  


கண்ணனின் கூற்றாகக் கீதை சாரத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மிகச் சுருக்கமாக கர்ணன் திரைப்படப் பாடலில்  தந்துள்ளார்:
"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்

என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே
[நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்]
கண்ணதாசன் (கர்ணன் - 1964)

கீதாசார சுவரொட்டியில் உள்ளவை பாபர் மசூதி இடிப்புக்குப்பின் அதை நியாயப்படுத்த ஆர் எஸ் எஸ்ஸால் பரப்பப்பட்ட வரிகள். ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்ட எல்லா கோவில்களிலும் இவ்வரிகள் கீதாசாரம் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பதாகவும் கருத்தொன்று மக்களிடையே இருப்பது தெரிகிறது.


சான்றாதாரம்:
1.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். டிசம்பர் , 2012. https://tamilbtg.com/whatever-happened-it-happened-well-is-this-gitacharam/

2.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். ஜனவரி  3, 2013
https://tamilbtg.com/what-is-real-gita-charam/

3.  கீதாச்சாரம் யாரால் உருவானது?
https://ta.quora.com/கீதாச்சாரம்-யாரால்

4. ரமண மகரிஷி வழங்கிய பகவத் கீதை சாரம் - 42 வசனங்கள்
https://www.facebook.com/watch/?v=4881951441837476


நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up
_________________________

#தமிழணங்கு,  #வரலாற்றில் பொய்கள், #Themozhi 

Wednesday, May 28, 2025

அட்சய திருதியை எவருடைய பண்டிகை ?

 
ஒவ்வொரு ஆண்டும் இளவேனில்  காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகை அட்சய திருதியை, வட இந்தியாவில்  இந்து மாதமான வைசாக வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அக்ஷய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) பண்டிகை கொண்டாடப்படும்.  அதே நாளானது  தமிழகப்பகுதிகளில் சித்திரை மாதத்து  வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளாக இருக்கும். எனவே தமிழகத்தில் சித்திரை வளர்பிறை  மூன்றாம் நாள்  அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம்.
 
அட்சய  / அக்ஷய என்றால் குறைவற்ற  என்ற பொருள்; அட்சய பாத்திரம் என்பது அதே பொருளின் அடிப்படையில்  உருவான சொல்தான்.  திருதியை என்றால் 3 ம் நாள் என்பதாகும்.   இது நாட்காட்டியில் பழைய முறையில் வானியல் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடும் முறையில் அமைகிறது.  
வளர்பிறை (சுக்கில பட்சம்/நிலவொளி அதிகரிக்கும் நாட்கள்) மற்றும் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்/நிலவொளி குறையும் நாட்கள்) நாட்கள் அமாவாசை (அல்லது) பௌர்ணமி அடுத்த நாள் முதலாகத் தொடக்கம் கொண்டு  கணக்கிடப்படுவது வழக்கம். 
 
இவ்வாறு தொடங்கும் வரிசையில்  மூன்றாவது நாள் திரிதியை எனக் குறிப்பிடப்படும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. "திருதியை", 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி,  12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அல்லது) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
 
அட்சய திருதியை நாளில் அசையும் அசையா சொத்துக்களில் பணம் முதலீடு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது வணிகர்கள் தொடக்கி வைத்த வணிகத் தந்திரம்.  குறிப்பாக இது  தங்க நகை  வியாபாரிகளின் முன்னெடுப்பு.  அட்சயதிருதியை நாளில் 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என்று கூறும் வழக்காறு மக்களிடையே நிலவி வரும் காரணத்தால் கடன் வாங்கியாவது குன்றிமணி அளவு  தங்கம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை  இது மக்களிடம் வளர்த்துவிட்டது.சென்ற ஆண்டு வாங்கினோமே  அதனால்  செல்வம் கொழித்ததா என்பது ஆராயப்படுவதில்லை.  அட்சய திருதியை கொண்டாட்டம் அண்மைய வழக்கம்.  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அட்சய திருதியை என்பதை ஆன்மீகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.  குறிப்பாக 50 அல்லது 60 அகவை முதிர்ந்த பெரியோர்களைக்  கேட்டாலோ, அக்காலத்து ஏப்ரல் மே மாதங்களில் வெளியான பத்திரிக்கை செய்திகள், கதைகள் போன்றவற்றை மீள்பார்வை செய்தாலோ இந்த உண்மை தெளிவாகும்.  இது மக்களின் ஆசைக்குத் தூபம் போட்டு வணிக நோக்கில் பெரிதாக்கப்பட்ட பண்டிகை.
 
 
 

 
தீபாவளியைப்  போலவே  சமணர்களிடம் இருந்து வைதீகச் சமயத்தார் உள்வாங்கிக் கொண்டது இந்த அட்சய திருதியை பண்டிகையாகும்.  
 
சமணத்தில், அட்சய திருதியை நாள் என்பது, சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது.
 
'வர்சி தப' என்றும்  சமணர்கள் இவ்விழாவைக் குறிப்பிடுவது வழக்கம். ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர். இந்நாளில் சமணர்கள் உண்ணாநோன்பு இருப்பதும் வழக்கமே.
 

 
சமண பண்டிகையான தீபாவளியை  எடுத்துக் கொண்டு அதற்கு ஒன்றுக்கும்  மேற்பட்ட  கதைகளாக நரகாசுரன் வதம்,ராமர் சீதை அயோத்தி திரும்பிய நாள், லக்ஷ்மி பூஜை  நாள் என்று பற்பல காரணங்களைக் காட்டி இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கம் போலவே;  வைதீகச் சமயம் இந்நாளுக்கும்  ஒன்றுக்கு மேற்பட்ட பல புராணக் கட்டுக் கதைகள் கொடுத்துள்ளது; அவை
 
1.  பகவான் பரசுராமர் அவதரித்த நாள்
2.  ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்
3.  திரேதாயுகம் ஆரம்பமான நாள்
4.  பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்
5.  அன்னபூரணி தேவி அவதரித்த நாள்
6.  கங்கை நதி பூமியைத் தொட்ட நாள்
7.  குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்
8.  வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்
9.  குசேலர் கிருஷ்ண பகவானைச் சந்தித்த நாள்
இவற்றில் இழையோடி இருக்கும் கருத்து செல்வச் செழிப்பின்  தொடக்கம் என்பதாக இருப்பதைக் காண முடிகிறது.
 
இந்துமதத்தினர் தங்கள் சமயத்தில் அட்சயதிருதியை இணைத்துக் கொண்டது போலவே புத்த சமயத்தினரும் பிழையாக அட்சயதிருதியை நாளை மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும் அட்சயபாத்திரம் கிடைத்த நாளாகக்  கூறி வருகிறார்கள்.   மணிமேகலை காப்பியம் சொல்லும் தகவலுடன் இக்கருத்து  முரண்படுகிறது.  அட்சயதிருதியைக்கும் மணிமேகலை  அமுதசுரபி  என்ற  அட்சய பாத்திரத்தைப் பெற்ற கதைக்கும் தொடர்பில்லை. 
 
மணிபல்லவம் தீவில்  (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி  மணிமேகலைக்குக் கிடைத்த நாள்  வைகாசி விசாகம் முழு நிலவு நாளாகும். இந்த நாள் புத்த பூர்ணிமா நாள்  என்று அழைக்கப்படும். புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
அதாவது, வரும் மே 12, 2025 வைகாசி விசாகம் / புத்த பூர்ணிமா என்ற முழுநிலவு நாள், இது வட இந்திய நாட்காட்டி கணக்கு முறை; பார்க்க:https://www.drikpanchang.com/panchang/month-panchang.html?date=12/05/2025)
 
மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக்  காத்து நிற்கும் தீவதிலகை என்பவள் மணிமேகலையிடம் கூறுகிறாள்.  இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல்.
(ref : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0017366_மணிமேகலை.pdf)
எனவே, வைகாசி விசாக நாள் என்பது வேறு, அட்சயதிருதியை நாள் என்பது வேறு. 
 
ஒரு பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பண்டிகைக்கு,  நம்ப முடியாத வகையில் பல்வேறு  கதைகள் சொல்லப்பட்டால்,  அவை யாவும் அப்பண்டிகையைத்  தங்கள் வழக்கத்தில் உள்வாங்கிக் கொள்ளப் புனையப்பட்ட புனைவுகள் என்பதையும், அப்பண்டிகை  உண்மையில் வேறு ஒருவருக்குச் சொந்தம் என்பதற்கான அறிகுறி அது என்பதையும்  புரிந்து கொள்ளலாம்.  பிறகு முறையான ஆய்வை முன்னெடுப்பதன் மூலம் அப்பண்டிகை எவருடைய வழக்கம் என்பதும் தெளிவாகும்.   இது போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் பண்பாட்டுக் கலப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.  

நன்றி:
தமிழணங்கு

அட்சய திருதியை
முனைவர் தேமொழி

தமிழணங்கு - ஜூன் 2025 (பக்கம்:3-6)
https://archive.org/details/thamizhanangu-june-2025/page/3/mode/2up

&

முக்குடை - ஜூலை 2025 (பக்கம்: 21 -23)


"அட்சய திருதியை" என்ற கரும்புச்சாறு திருவிழா!
மின்தமிழ்மேடை  - 30 [ஜூலை  - 2022]
https://archive.org/details/THFi-QUARTERLY-30/page/n41/mode/2up















































































































































#தமிழணங்கு,  #மின்தமிழ்மேடை, #வரலாற்றில் பொய்கள், #Themozhi