Showing posts with label நூலறிமுகம். Show all posts
Showing posts with label நூலறிமுகம். Show all posts

Sunday, November 23, 2025

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்—அறிவியல் நூல் அறிமுகம்

அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்அறிவியல் நூல் அறிமுகம்

பேரா. முனைவர் மு. முத்துவேலு, சென்னை

     அறிவியலை ஆய்வுகளை ஆக்கம்சேர் கணிப்பொறியைப் 
     பொறியியலை மருத்துவத்தைப் பொதுமைசேர் சட்டத்தின் 
     நெறியதனைத் தமிழாக்கி நிறைந்துவரும் நூலியற்றி 
     அறிவுசார் மொழிஎன்று அவனிக்குக் காட்டிடுவோம்! 
என்னும் என் கவிதைக்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை அருந்தமிழில் எழுதி அறிவியல் தமிழைப் பரப்பி வருகிற அறிஞர் பெருமக்களுள் முனைவர்  தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இந்நூலில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் என்னும் கட்டுரை தொடங்கி முச்சொல் முகவரி என்னும் கட்டுரை வரை உள்ளன. இந்த நூலில் அறிவியல் உலகத்தில் பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும் அறிவியல் கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகளும், சில அறிவியல் செய்திகளும் அடங்கி உள்ளன.

அறிவியல் அறிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகையில் நிறைவாக அந்த அறிவியல் அறிஞரின் நினைவாக உலகம் போற்றி வருகிற செயல்பாட்டினை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்குக் காத்தரின் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சுட்டிக் காட்டத் தக்கதாகும். அதைப் போலவே டிமிட்ரீ மெண்டலீயா என்னும் ருசிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் பெயரில் அறிவியலில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடுவது மேனாட்டு உலகம் அறிவியல் அறிஞர்களைப் போற்றிப் பாராட்டுகிற செயல்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

தொற்றுநோய்ப் பரவலைக் காட்டும் மருத்துவப்புவி வரைபடங்களின் வரலாறு எனும் கட்டுரையில் உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளை நோய் குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்களையும் அதன் செயல்பாடுகளையும் அதனைக் கண்டறிந்த வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இக்கட்டுரை நூலில் மூன்று பக்கங்கள் முதல் 15 பக்கங்கள் வரையிலான கட்டுரைகள் அடங்கியுள்ளன. சென்னைப் பெருநகரில் காலரா நோய் பரவியதற்குப் பின் அதனைத் தடுக்கும் நோக்கில்தான் இலண்டன் மாநகரைப் போலச் சென்னை நகரிலும் கழிவுநீர் வடிகால் வசதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றுச் செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது சென்னை நகரின் கழிவுநீர் வடிகால் வசதியின் வரலாற்றைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்ல நம் கைப்பேசித் திரையில் உலக வரைபடத்தைத் திறந்து நம் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடக்கமாகக் கடலுக்கு நடுவே செல்லுகிற கப்பலை ஒட்டுகிற மாலுமிகள் தாங்கள் செல்லும் திசையையும் கடலில் தாங்கள் கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதையும் கண்டறிவதற்கான அந்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வைக்கண்ட கடற்கால மாணி குறித்த கட்டுரை சுவையானதாக அமைந்துள்ளது.

உலக வரைபடங்களை உருவாக்கிப் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதனுடைய துல்லியம் இன்னும் செம்மைப் படவில்லை. அந்தத் துல்லியத்தை நோக்கித்தான் வரைபடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வரைபட வரலாறு இன்னும் அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்குக் கட்டுரை சான்றாக அமைகிறது.

முச்சொல் முகவரி என்ற கட்டுரையும் உலக வரைபடத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "அறிவியல் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய இன்றியமையாமையைத் தேமொழி தெரியப்படுத்துகிறார்" என்று பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம். அறிவியல் கருத்துக்களை எழுதும் பொழுது அதன் மொழிநடையும் சொல் பயன்பாடும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் முனைவர் தேமொழி அவர்கள் எளிய சொற்களில் ஊடகத் தமிழ் நடையில் எல்லோருக்கும் புரிகிற மொழியைப் பயன்படுத்தி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அறிவியல் அறிஞர்களின் படங்களையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் தேடிக் கண்டெடுத்து நூலிலே இணைத்திருப்பது, தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்கு இடையில் சற்று இளைப்பாறுதலையும் சுவையையும் ஊட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அறிவியல் ஆக்கங்களை எல்லாம் அருந்தமிழில் எழுதிப் பரப்பி வருகிற முனைவர் தேமொழி அவர்களின் அறிவியல் தமிழ்ப் பணி மேலும் சிறக்க அறிவியல் பூங்காவின் நல்வாழ்த்துக்கள்!


நன்றி:
அறிவியல் பூங்கா, மலர்: 17, இதழ்: 68, பக்கம் : 46 

______


நூல் : அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
ஆசிரியர் : தேமொழி 
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை (+91 70109 97639)
விலை : ரூ.150/-
______


என்னுடைய நூலுக்கு  நூலறிமுகம் கொடுத்துப் பாராட்டி  ஊக்கம் அளித்துள்ள பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


#Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல், #அறிவியல்பூங்கா, #நூலறிமுகம், #முனைவர்மு.முத்துவேலு

Monday, September 29, 2025

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்

முனைவர் மு. முத்துவேலு
முதல் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது "வள்ளுவர் குறள் ஆத்திசூடி முறையில்" என்னும் நூலாகும்.




நூலைத் தொகுத்தவர் பைந்தமிழ் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள்.  ஆத்திசூடி என்பது தமிழ் அற நூல்கள் மரபில் ஒரு புதிய யாப்பு வடிவத்தில்  அமைந்திருப்பதாகும்.  இது அறக்கருத்துக்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவமாக அமைந்துள்ளது. எனவே ஆத்திசூடி வடிவத்தை ஔவைக்குப் பின் பாரதியும் அதற்குப் பின்னர் பாரதிதாசனும் இன்னும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல புலவர் மக்களும் தாங்கள் கூற வந்த கருத்துக்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ற வடிவமான ஆத்திசூடியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆய்வறிஞர் தேமொழி அவர்கள் திருக்குறளை ஆத்திசூடி முறையில் தொகுத்துள்ளார். தமிழின் நெடுங்கணக்கு அகர வரிசைப்படிச் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறுகிற ஆத்திசூடி முறையினுக்கு ஏற்ப
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" எனத் தொடங்கும் முதல் குறளில் இவரும் தொடங்கியுள்ளார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்"  என்னும் அவா அறுத்தல் அதிகாரத்தில் வரும் 363-ஆம் குறளோடு இதனை நிறைவு செய்துள்ளார்.

எழுபது திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அமைத்துள்ளார். இந்த நூலில் கடவுள் வாழ்த்து, கல்வி, காலம் அறிதல், அவா அறுத்தல், புகழ், பெருமை, வாய்மை முதலிய அதிகாரங்களிலிருந்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனைய 54 அதிகாரங்களிலிருந்து ஒரு குறள் என்ற விதத்தில் தேர்ந்தெடுத்து மொத்தம் எழுவது குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் சில சிறப்புச் செய்திகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருக்குறள் பற்றிச் சில ஆராய்ச்சிச் செய்திகளை ஆய்வறிஞர் தொகுத்து வழங்கியிருப்பது மிகுந்த பயன்பாட்டுக்கு உரியதாகும்.

நூலில் ஆத்திசூடி என்பதற்கான இலக்கணத்தை அருமையாக எடுத்துரைப்பதும் மாணவர்களின் நலன் கருதி அமைந்தது எனலாம் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுகிற பொழுது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அமைத்துச் சொல்லுகிறார்.  ஔவையின் ஆத்திசூடியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

திருக்குறளில் இருந்து ஆத்திசூடி முறையில் செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்களைப் பட்டியலிடும்போது முனைவர் சேயோன் அவர்கள் 2001 இல் தொகுத்தளித்த திருவள்ளுவர் ஆத்திசூடியையும் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளரின் ஆழ்ந்த புலமையையும் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

அகரவரிசையில் திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அடுக்கித் தருகிற பணியை மட்டும் செய்யாமல் அந்தக் குறள்களுக்கு எளிய முறையில் உரையையும் வழங்கி உள்ளார்.  ஆய்வறிஞர் தேமொழி அவர்களின் எளிய உரைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
      முயற்சித் திருவினை யாக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்  (ஆள்வினை உடைமை குறள்- 616)
இந்தக் குறளுக்கு ஆசிரியரின் உரை பின்வருமாறு அமைகிறது. "முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையை வந்து சேரும்"

இரண்டாவதாக, 
      பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
      நன்மை பயக்கும் எனின்  (வாய்மை அதிகாரம் குறள் - 292)
இதற்கான தேமொழியாரின் உரை: பொய்யினால் நல்ல நன்மை ஏற்படக்கூடுமானால் அப்பொய்யையும் மெய்யாக ஏற்கலாம்.

இந்த வகையில் ஒவ்வொரு குறளுக்கும் இனிய எளிய உரை அமைத்திருப்பது சிறப்பாகும்.  இந்த உரைகளைக் காணும் பொழுது தேமொழியார் திருக்குறள் முழுவதற்கும் இது போன்ற எளியதோர் உரையை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

முனைவர் க. சுபாஷிணி  அவர்கள் தம் பதிப்புரையில், "பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எளிய முறையில் சில குறட்பாக்களைப் பிழையின்றிக் கற்றுக் கொள்வதற்கு இது சிறந்த முறை மட்டுமல்ல எளிமையானதும் கூட" என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம் உடையதாகும்.

ஆய்வறிஞர் தேமொழியார் தம் எளிய உரையின்மூலம் படிப்பவர்களை திருக்குறளுக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.  எல்லோரும் திருக்குறளைக் கற்க இந்நூல் கைவிளக்காகத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

வள்ளுவர் குறள் - ஆத்திசூடி முறையில் - தேமொழி - நூலறி(வு)முகம்
 — முனைவர் மு. முத்துவேலு
நன்றி: தமிழணங்கு - அக்டோபர் 2025 (பக்கம்: 91-93)



#தமிழணங்கு,  #திருக்குறள், #நூலறிமுகம், #முனைவர்.மு.முத்துவேலு, #Themozhi


Sunday, May 18, 2025

எது தமிழ்ப் புத்தாண்டு???

எது தமிழ்ப் புத்தாண்டு???

MJ. பிரபாகர்

தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்: நூலறிமுகம் 


தமிழர் பண்டிகைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தமிழ்ப் புத்தாண்டு.  தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற சர்ச்சை மிக நீண்ட காலமாகவே நிலவி வருகிறது.  ஒரு சாரார் சித்திரை மாதம் எனவும், ஒரு சாரார் தை மாதம் எனவும் வலியுறுத்திக் கொண்டே உள்ளார்கள். 12 கட்டுரைகளின் வழியாக அறிவியல் சார்ந்த தனது கருத்துக்களை இந்நூலில்  ஆசிரியர் பதிவு செய்து உள்ளார். 

மனிதராகிய நாம் அனைவரும் வெளி மற்றும் காலம் சார்ந்து தான் வாழ்கிறோம். இதில் வெளி என்பது வீடு, தெரு, ஊர், நாடு எனப் பல பிரிவுகளில் நாம் பகுத்து அறிகிறோம்.  காலம் என்ற அம்சத்தை அளந்து, பிரித்து அறிய உதவும் கருவியே நாட்காட்டி.

தமிழர்கள் உட்பட இந்தியப் பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய - சந்திர நாட்காட்டிகளை உருவாக்கியுள்ளார்கள். தற்போது நாம் ஆங்கில நாட்காட்டியைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். 

சங்க காலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லை. சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் தையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றுகளும் இல்லை. 

இத்தகைய கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டுமென்றால் அதற்கு நமக்கு அறிவியல் அடிப்படைத் தேவை.  இந்த நூல் அறிவியல் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பண்டைய கால  நாட்காட்டிகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எளிய தமிழில் நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

ஆவணி மாதம் தான் பழந்தமிழரின் புத்தாண்டு என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நூல் ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

வரலாற்று ஆய்வாளர் என்பவர் உண்மைக்கு மட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும்.  ஏனெனில் உண்மைதான் வரலாற்றின் தாய்.  வரலாறு தான் அருஞ்செயல்களை ஆவணப்படுத்தி அடைகாக்கிறது. தெளிவின்மையின் எதிரி. கடந்த காலத்தின் சாட்சி. எதிர்காலத்தின் இயக்கு விசையும் கூட என்ற அம்பேத்கரின் கூற்றை நூலாசிரியர் அருமையாகச்  சுட்டிக்காட்டி உள்ளார். 

நூலாசிரியர் எந்த வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. 
தை புத்தாண்டு என்று சொல்பவர்களையும் சித்திரைதான் புத்தாண்டு என்று சொல்பவர்களையும் அவர்களின் கொண்டாட்டத்தை மாற்றிக்கொள்ள எந்த வகையிலும் கூறவில்லை. 
ஆவணியே ஆதி என்று வரலாற்று ஆவணங்களான நிகண்டுகள் தெரிவிப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். 

எனவே ஆண்டின் தொடக்கம் எது என தமிழர்கள் வரலாற்றில் மேற்கொண்ட ஆய்வு இது என்பதை ஏற்றுக் கொண்டு, ஆண்டின் தொடக்கம் குறித்த உண்மையை,  தமிழர் மரபு எது என்பதைப்  புரிந்து கொண்டாலே இந்த நூலில் நோக்கம் நிறைவேறி உள்ளதாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் தமிழகச் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்த உரைகளையும் நமக்கு ஆதாரமாக வழங்கி உள்ளார்.

தமிழ் வரலாறு பண்பாடு குறித்து ஆர்வம் உடையவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல் இது. பகுத்தறிவு சிந்தனைகளையும் நமக்கு வழங்கி உள்ளார். 

தமிழ் மொழி ஆர்வலரான முனைவர் ஜோதி எஸ்.  தேமொழி அமெரிக்க வாழ் தமிழர்.  

"தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்"
நூலாசிரியர் : முனைவர் தேமொழி
வெளியீடு :  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் -2024
விலை : ரூபாய் 250/-
தொடர்புக்கு: E Mail : mythforg@gmail.com 
நூல் கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum

#தமிழ்ப்புத்தாண்டு, #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi  


Monday, December 23, 2024

மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்: நூலறிமுகம்

செயற்கை தீவுகளை உருவாக்கிய கற்கால மனிதர்கள்

 

தீக்கதிர் (23-12-2024) - நூலாற்றுப்படை - பக்கம்:  5

செயற்கை தீவுகளை உருவாக்கிய கற்கால மனிதர்கள்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை விரிவாக ஆராயும் 10 அத்தியாயங்கள் கொண்ட நூல். மரபணு ஆராய்ச்சியில் தாய்வழி முக்கியத்துவம், மனித இனப்பரவல், தோல் நிற மாற்றங்கள், அமெரிக்க புலம்பெயர்வு, ஆஸ்திரேலியப்  பழங்குடியினர்-தமிழர் தொடர்பு போன்ற முக்கிய தலைப்புகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது.

4000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் மனிதகுலம் செயற்கை தீவுகளை உருவாக்கியது, 1870களில் மனித ஆயுட்காலம் 30 ஆண்டுகளாக இருந்து இன்று 75 ஆண்டுகளாக உயர்ந்தது போன்ற சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது.

அமெரிக்க வாழ் தமிழர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளரான ஆசிரியர், பெண்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவர்களின் மரபணு வழி ஆராய்ச்சியின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்

நூலாசிரியர்:  ஜோதி.எஸ்.தேமொழி  

விலை: ரூ.150/-  

வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம்  

தொடர்பு எண்:  7010997639





மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்:  நூலறிமுகம்

நூலாற்றுப்படை எம்.ஜே. பிரபாகர்


#அறிவியல்நூல், #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi  

Saturday, October 12, 2024

மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்: நூலறிமுகம்




மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்:  நூலறிமுகம்

நூலாற்றுப்படை எம்.ஜே. பிரபாகர்


மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள பெண்களின் (தாய் வழி) மரபணு ஆராய்ச்சியே இன்றியமையாததாகும்.
அமெரிக்க வாழ் தமிழர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் ஜோதி. எஸ். தேமொழி எழுதியுள்ள "மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்" நூலானது 10 அத்தியாயங்களைக் கொண்டதாகும். குறிப்பாக;  
(1) மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு
(2) மனித இன பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்
(3) மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தனர்
(4) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்பு உண்டா?  
(5) ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள் இனக்குழுவின் பரவலுக்குக் காரணம்
(6) நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும்
(7) மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம்
(8) நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும்
(9) ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள்
(10) தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு
போன்ற தலைப்புகளில் அறிவியல் கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளார் நூலாசிரியர்.

உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு  மிகவும் பாராட்டுக்குரியதாகும். குறிப்பாக அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதோடு  ஆண்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொடர்ந்து முற்பட்டு வருகிறார்கள்.  மனித இனம் தங்கள் வரலாற்றை,  பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது அதற்குப் பெரிதும் உதவியாய் இருப்பது பெண்கள் தான்.  பெண்களின் மரபணு அடிப்படையில் தான் பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையும் உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் பறை சாற்றுகிறது.  ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியை விட பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதே விஞ்ஞானப் பூர்வமான உண்மை. இதன் மூலம் பெண்களின் பங்கு வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதைத் தெளிவுபடப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

மனித இனம் அமெரிக்க மண்ணில் 24,500 முதல் 22,000 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒரு முறையும்,  பின்னர் 16,400 முதல் 14,800 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒரு முறையும் என வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பிரிவாக வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றுச் சான்றுகளோடு பதிவிடுகிறார் நூலாசிரியர்.  இந்த இரு காலகட்டங்களில் இருந்த தட்பவெப்ப நிலை,  சுற்றுச்சூழல் ஆகியவை வெற்றிகரமான புலம் பெயர்வுக்கும் குடியேறுதலுக்கும் உதவியிருக்கக்கூடும் என்பது புவியியல் சார்ந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

தோற்றத்தில் தென்னிந்திய மக்களை ஒத்திருக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் அவர்களது பண்பாடு மொழிக் கூறுகளுடன் தமிழருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ஓர் அறிவியல் கருத்துள்ளது.

உலக அளவில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரே பறவை கோழிதான். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடுதலின் தொடக்கமே கோழி வளர்த்தலின் தொடக்கமாக இருந்தது.  அதற்கு முன்னர் கோழி ஒரு வளர்ப்பு பறவை அல்ல என்பதே பல்வேறு ஆய்வுகளில் கிடைத்திருக்கும் செய்தி.  நெல் பயிரிடும் முறை கண்டறியப்படாமல் இருந்தால் கோழி மனிதர்களுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டிருக்காது. இரை போடும் மனிதருக்கே இரையாவது வெள்ளாடுகளின் நிலை மட்டுமல்ல கோழிகளுக்கும் அதே முடிவு தான் என்பதை மிக அருமையாக நூல் ஆசிரியர் பதிவில் பதிவு செய்துள்ளார்.

இரும்பின் பயன்பாடு மனித குல வரலாற்றில்  திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தொழில் நுட்பக் கண்டுபிடிப்பு ஆகும்.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தான் வேளாண் உற்பத்தி பெருக்கமும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கத்தையும் நகரமயமாக்கலையும் நாகரீக பண்பாட்டு வளர்ச்சியையும் உருவாக்க முடிந்தது.  சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்பது வரலாற்று ஆய்வில் தெரிய வருகிறது. குறிப்பாக மயிலாடும்பாறை பகுதியில் செய்யப்பட்ட ஆய்வு இதனை உறுதிப்படுத்துகிறது.

1850 முதல் 1950 வரையில் நிகழ்ந்த போக்குவரத்து தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் நகர வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும்  நேரடியான காரணங்களாக அமைந்தன.

4000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் மனித குலம் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளது என்பது அதிசயமிக்க தகவலாகும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருவரின்  வாழ்நாள் காலம் என்பது அதிகரித்து உள்ளதை நாம் அறியலாம். இதன் மூலம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 75 ஆண்டுகள் என உயர்ந்து உள்ளதைப் பார்க்க முடியும். 1870 களில் மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 30 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தது. இன்றைய அறிவியல் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றின் மூலம் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சி மக்களை இவர்களிடம் இருந்தும் இயற்கைப்  பேரிடர்கள் இருந்தும் காக்கக்கூடிய வசதிகள் ஏற்பட்டதன் காரணமாக மனிதனின் சராசரி வாழ்க்கை என்பது 75 ஆக அதிகரித்துள்ளது.

இது போன்ற அறிவியல் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்துத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் தேமொழி.  அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மாணவர்களும் அனைவரும் இந்த நூலை வாசிப்பது அவசியம்.  இதன் மூலம் அறிவியல் வளர்ச்சி,  முன்னேற்றம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.


நூல் விவரம்:
"மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்"

(அறிவியல் கட்டுரைகள்)

நூலாசிரியர் :  ஜோதி.  எஸ்.  தே மொழி

விலை : ரூபாய் 150/-
வெளியீடு :  சந்திரோதயம் பதிப்பகம், மதுரை- 625018

தொடர்பு எண்:  7010997639

 

M.J.Prabakar Views

ref : https://www.facebook.com/photo?fbid=122121209174451111&set=a.122095853354451111

 

M.J.Prabakar Views

https://www.facebook.com/profile.php?id=61563533337657

#அறிவியல்நூல், #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi  

 

Thursday, April 9, 2015

அனிச்ச மலர்கள் – நூலறிமுகம்

 அனிச்ச மலர்கள் – நூலறிமுகம் 

அனிச்ச மலர்கள், தேமொழி, கௌதம் பதிப்பகம், ரூ. 80

அனிச்ச மலர்கள் – நூலறிமுகம் 
– ராஜராஜன்

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இந்த நூலில் மொத்தம் 17 சிறுகதைகள் உள்ளன. அதில் உள்ள கடைசி சிறுகதையின் தலைப்புதான் இந்த நூலின் தலைப்பான அனிச்ச மலர்கள்.

இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர் தேமொழி (தேன்மொழி அல்ல). திருச்சியில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவருபவர். பல மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். தற்பொழுது இணையத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

சிறுகதை எழுதும் முறையில் பல வகைகள் உள்ளன. நடந்த சம்பவத்தைச் சுருக்கமாகக் கூறுவது, ஒரு நாளில் ஒருவன் வாழ்வில் நடந்ததைக் கூறுவது, ஒரு ஆரம்பம், ஒரு பிரச்சனை, முடிவு என கொஞ்சம் பெரிய சிறுகதையாகக் கூறுவது என பலவகையில் உள்ளன. சுஜாதா போல சாதாரண கதையில் கிளைமாக்ஸில் சின்ன திருப்பம்/அதிர்ச்சி/டுவிஸ்ட் வைப்பது என்பது பொதுவான சிறுகதை பாணியாகும்.

இந்த நூலில் முதல் கதை “சிலை அழுதது”. ஒரு ராணுவ வீரனின் மரணத்துக்குபின் அவன் காதல்மனைவி எடுக்கும் முடிவைப் பற்றியது. உணர்வுபூர்வமான கதை. முடிவு எதிர்பாராதது மற்றும் ஒரு வார்த்தையில் பல விஷயங்களைப் புரியவைக்கும் அழகான முடிவு. ஆனால் இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் இறுதிச்சடங்கு பற்றிய வர்ணனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட்கத் தோன்றுகிறது. 31 பக்க சிறுகதையில் (!) 7 பக்கங்கள் இந்த வர்ணனையே போய்விடுகிறது. ஆனாலும் அதில் வரும் தகவல்கள் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது என்பதை மறுக்கமுடியாது.

உதாரணமாக சவப்பெட்டியை எப்படித் தூக்கி வருவார்கள், அதில் உள்ள தேசியக்கொடியை எப்படி அகற்றவேண்டும், எப்படி மடிக்க வேண்டும் என விரிவாகக் கூறியுள்ளார்.

இரண்டாம் கதை இன்றைய “படித்த” இளைஞர்கள் பற்றியது. ஆர்க்கிடேக் படித்த இஞ்சினியரை விட சாதாரண கொத்தனார் தெளிவாகக் கணக்கு போடுவார் என்பார்கள், அதுபோல இந்தக் கதையில் கணக்கில் புலி என சொல்லக்கூடியவர் காலரைக்கால், முக்காலே அரைக்கால் என்ற அளவை எல்லாம் எப்படி எழுதவேண்டும் என்று தெரியாமல் முழிப்பது இன்றைய கல்விமுறையை தோலுரித்துக் காட்டுகிறது.

மூன்றாம் கதை மிகச் சாதாரணமானது. வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு பெண்மணி தன் தம்பி, தம்பி மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருக்கிறார். முன்பு தன் தாய் இருந்தபோது வீடு கலகலப்பாக இருந்தது, இப்போது இல்லை என வருத்தப்படுகிறார். இதில் என்ன புதுமை என எனக்குத் தெரியவில்லை? ஒருவேளை வெளிநாட்டில் எழுத்தாளர் இருப்பதால் அவருக்கு பிரிவுத் துயரம் பெரிதாக இருக்கலாம்.

நூலில் தலைப்பாக வந்துள்ள சிறுகதை, ஒரே வகுப்பில் படிக்கும் மூன்று மாணவிகள் பற்றியது. அதில் ஒருவர் அய்யர், ஒருவர் முஸ்லிம். பள்ளி விழாவில் நடனமாட உள்ள பெண்ணுக்கு சலங்கை தேவைப்பட அதை எடுக்க மூவரும் அய்யர் பெண் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு பல இடங்களில் உள்ளது போல ஒரு பழைய பஞ்சாங்கப் பாட்டி இருக்கிறது. வீட்டினுள் கால் வைக்க வரும் பெண்ணை அதட்ட அவர்கள் கோபப்பட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். உண்மையில் மிக அருமையான கதை இது.

இந்தக் கதை முதல்கதையாக இருந்திருக்கலாம். இதை கடைசியில் வைக்கும் ஐடியாவைக் கொடுத்த புண்ணியவான் யாருன்னு தெரியல. மாணவிகளின் குடும்பச் சூழல், அவர்களின் குணநலன்கள் அனைத்தையும் கதை நடக்கும்போதே அழகாகப் புரியவைத்துவிடுகிறார் ஆசிரியர். முஸ்லிம் பெண்களை அவர்கள் வீட்டார் அதிக தூரம் நடக்க விடமாட்டார்கள் என்பதைக்கூட அழகாகச் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் மாட்டிக்கொண்டு வாட்ச்மேன்கள் படும்பாட்டைக்கூட விடவில்லை. இப்படி கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்குபவர்கள் கடைசிக் கதையில் இருந்து வருதல் நலம்.

எல்லா கதைகளையும் பற்றி எழுதினால் இந்த நூலைவிட அதிகம் எழுதவேண்டி வரும். இதில் என்னைக் கவர்ந்த கதைகள் என்றால்,
1. அனிச்ச மலர்கள்
2. பழங்கணக்கு
3. காசியில் பிடித்ததை விடணும்
4. உண்மைக்காதல்
5. சற்றே இளைப்பாற
சில கதைகளில் சில வார்த்தைகள் தூய தமிழில் வருகின்றன. அடுத்த வார்த்தை சாதாரண ஆங்கிலத்தில் வருகிறது, இரண்டையும் ஆங்கிலம் அல்லது தூய தமிழ் என எழுதியிருக்கலாம். இதுபோல சில குறைகள் இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய சிறுகதைத் தொகுப்பு இது.
– ராஜராஜன்


[குறிப்பு: மதிப்புரை வழங்கிய mathippurai.com க்கு மனமார்ந்த நன்றிகள்]
http://mathippurai.com/2015/04/09/anichcha-malargal/#more-609
2015/04/09




அனிச்சமலர்கள்
ஆசிரியர் : தேமொழி
வகை: சிறுகதைகள் - தொகுப்பு
பதிப்பு ஆண்டு : அக்டோபர் 2013
பதிப்பு :    முதற் பதிப்பு
பதிப்பகம் :கௌதம் பதிப்பகம்
பக்கங்கள் :192
விலை :80.00
ISBN :    978-93-81134-49-8


மின்னூலாக இணையத்தில் . . . 


#நூலறிமுகம், #Themozhi