Friday, February 22, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7




அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)
                – பாஞ்சாலி சபதம், பாரதியார்

 

நன்றி: வல்லமை - பிப்ரவரி 22, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 


 
 

Monday, February 18, 2013

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?



     மங்கையைப் பாடுவோருண்டு
     மழலையைப் பாடுவோருண்டு
     காதலைப் பாடுவோருண்டு
     கருணையைப்  பாடுவோருண்டு
     அன்னையைப் பாடுவோருண்டு
     அரசினைப் பாடுவோருண்டு
     கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ?
     கதரினைப் பாடுவாருண்டோ?
என வியக்கலாம்.  கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன்.

இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன்.  அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் மின்னூல் வடிவம் கொடுக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் அவர்களது மின்னூல்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கவிதை நூல் பிறந்த வரலாறு:
இந்த நூலினை அறிமுகப் படுத்தும் மாலன் அவர்களின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த உணர்ச்சிப் பூர்வமான கதையும் நமக்குத் தெரிய வருகிறது.

1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள், வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியைச் சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த கதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்த நூல் இந்தக் கதர் ராட்டினப் பாட்டுக் கவிதை நூல். சுருங்கச் சொல்லின், இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்டப் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒன்று.

கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் கதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர்.  தானே தனது கையினால் நூற்ற நூலில் கதர் சேலையை நெய்யச் செய்து தீபாவளிப் பரிசாகத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கிறார். அது போன்றே தன் கையால் நூற்ற நூலைத் திரித்து தனது குழந்தைக்கு அரைநாண் கயிறும் அணிவித்திருக்கிறார்.  அத்துடன் நில்லாது, கடன் கொடுக்கும் அடிப்படையில் கதர் துணி விற்பனையையும் செய்து மக்கள் கதராடை அணிய  ஊக்கப் படுத்தியிருக்கிறார் கவிஞர்.  அவரிடம் கடனுக்குத் துணி வாங்கிய புதுவை ஜெகநாதம் என்பவரின் குறிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பாரதிதாசன் அவர்கள் இந்தக் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதும் தனது சொந்தச் செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலைக் குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசனின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்குக் கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்னாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலன் அவர்களுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.

கதர் இராட்டினப் பாட்டு:
(1) பாரததேவி, (2) ஜன்ம பூமியின் சிறப்பு, (3) காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம், (4) சுதந்திரதேவியும் கதரும், (5) தேசத்தாரின் பிரதான வேலை, (6) இராட்டினச் சிறப்பு, (7) அன்னைக்கு ஆடை வளர்க, (8) பாரததேவி வாழ்த்து ஆகிய எட்டு சுவை மிகு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

     “பாரததேவி”
     விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
     பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
     வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
     உளமேதன் மேனிக் குவப்பு

என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன.  சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.  தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையைக் குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.   காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்குச் சுருதிப்பெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலும் அதைப் பட விரும்புவோருக்குக் கவிதை நூல் வழங்கிய ஸ்வரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

     “பறை முழக்கம்”
     அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
     அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
     அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
     சுற்றும்-சுற்றும்-சுற்றும்

     இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
     என்று சொல்லிப் புயம் தட்டு – அட
     யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
     கொட்டு-கொட்டு-கொட்டு

இதன்மெட்டு:
ஆர்மோனிய ஸ்வரம்

     ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
     அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

     ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
     அறைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

     ஸஸ ஸஸா / ஸநி நீநீ / தா தா நீ* / பா மா கா
     அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

     கா கா , / கா கா , / கா பம பா ,,
     சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

     ஸ ஸ நீ / ஸ ஸ ஸ ஸ ஸ ஸ / ஸ ஸ ரீ
     இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

     ஸ ஸ நீ / தா தா தா / தா தா ,, / தப
     என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

     பா ஸ ஸ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
     யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

     கா கா / கா கா / காம மபா
     கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சுதந்திரதேவியும் கதரும்.  பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது.  அந்த அழகியை நீ யாரெனக் கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள்.  ஆளை மயக்கிடும் மாதொருத்தி எனத் துவங்கும் அப்பாடலில் அவள் யாரென அறியும் வரை அது ஒரு நாட்டுப் பற்றினைக் குறிக்கும் பாடல் என்ற எண்ணம் வராது.  தொடர்ந்து வரும் வரிகளில் அந்தச் சுதந்திர மங்கை அவளை அடையும் வழியையும் உரைக்கிறாள். அந்நியர் துணிகளை வாங்காதே, நீயே நூல் நூற்று ஆடை நெய்து கதராடை உடுத்து. அந்நியர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் வணிகம் வீழ்ச்சி அடையும்.  அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடையலாம்.  எனவே சுதந்திரம் அடைய இராட்டினம் சுழற்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார்.  அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

     “சுதந்திரதேவியும் கதரும்”
     ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
     அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
     பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
     பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
     தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
     சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
     காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
     காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
     .
     .
     .
     கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
     காதல் இருப்பது மெய் எனிலோ – அட
     சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
     தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
     அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
     கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
     கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
     கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)

இந்தக் கவிதைத் தொகுப்பில் கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சிறந்த உவமைக் கவிதையாக விளங்குகிறது.  அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கௌரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கண்ணா என் மானத்தைக் காப்பாற்று என்று பாஞ்சாலி கதறியபோது கண்ணன் ஆடை வழங்கி அவளது துயர் தீர்த்தான். இதனைக் கவிஞர் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது அவர் கற்பனையின் வளம் நம் கருத்தைக் கவர்வதாக உள்ளது. கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின்  துயர் நீக்குகிறாராம் காந்தி.  அப்பாடலின் இடம் பெற்ற வரிகளைக் கீழே காண்க.

     “அன்னைக்கு ஆடை வளர்க”
     “தீயார் துகிற் பறித்துத்
     தீர்க்கின்றார் எனமானம்
     மாயாமலர்க்கண்ணா
     வந்துதுயர் தீர்த்திடுவாய்”

     என்று பாஞ்சாலி
     இசைக்க அது கேட்டுச்
     சென்று மலர்க் கண்ணன்
     சித்திரஞ் சேர் ஆடை
     வளர்ந்திடுக என்றான்
     அறம் வளர்க்க வந்தோன்

     “தீயர் துகில் பறித்துத்
     தீர்கின்றார் என்மானம்
     மாயாமலர்க்கண்ணா
     வந்து துயர் தீர்த்திடுவாய்”

     என்று ரைத்திட்டாள்
     இதனைச் செவியுற்றுச்
     சென்று கண்ணக் காந்தி
     சித்திரஞ் சேர் ஆடை
     வளர்ந்திடுக என்றான்
     அறம் வளர்க்க வந்தோன்

கைராட்டினத்தையும் போற்றிப்பாடும் ஒரு கவிதை நூலா என்று முதலில் எழுந்த எண்ணம்; கவிதைகள் பிறந்த காலப் பின்னணியையும், நாட்டுப்பற்றுடன் தனது சொந்தச் செலவில், மனைவியின் நகையை விற்று, கவிஞரின் குடும்பமே கவிதை நூலைத் தயாரித்த தகவல்களாலும், அதற்குப் பிரெஞ்சு அரசாங்கம் ஏற்படுத்திய தடைகளை எண்ணும் பொழுதும், கவிஞரின் கவிதை வரிகளின் உவமை அழகிலும், கருத்துச் செறிவிலும் மனம் ஆழ்ந்து வந்தே மாதரம் என்று பாரதத் தாய்க்கும், சுதந்திர தாகம் கொண்ட அவளது அருமை மகனுக்கும் ஒருசேரத் தலை வணங்கும் வகையில் மாறிவிடுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தருவது நாட்டுப் பற்றையும், கவிதை அழகையும் ஒருங்கே அளிக்கும் சுவை விருந்து.

நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation): http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html

படங்கள்:
சுரதாவின் ‘பாரதிதாசன் பரம்பரை’ (பொதுவுடைமையாக்கப்பட்ட நூல்) நூலிலிருந்து.



நன்றி:
திண்ணை
பிப்ரவரி 18, 2013


#திண்ணை, #பாரதிதாசன், #நூல் மதிப்புரை, #Themozhi 


Thursday, February 14, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

 


முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
      வரிகள்: வாசன்

காதலர் நாள் வாழ்த்துகள் 


நன்றி: வல்லமை - பிப்ரவரி 14, 2013  



#ஓவியம், #வல்லமை,  Themozhi 



 

Monday, February 11, 2013

புதியதோர் உலகம் செய்வோம் . . .

புதியதோர் உலகம் செய்வோம் . . .


     புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
     போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
     பொதுவுடைமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
     புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
     இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
     இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
              - பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்

மனிதக் குல வரலாற்றில் அன்றும், இன்றும், என்றும் புதிய உலகம் படைக்கக் கனவு காண்பவர் ஒரு சிலர் இருந்த வண்ணம் உள்ளனர்.

பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்று புதிய உலகம் படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

தற்கால 20 வயதுகளில் இருக்கும் இளைய தலைமுறையினரே, எண்ணிமக் கால (digital age) இணையத்தின் முதல் தலைமுறையினரான இளைய சமுதாயமே, இந்த உலகளாவிய புரட்சியின் நிகழ்கால வினையூக்கிகள் ஆவார்கள்.  அவர்களுக்கு உதவுவது தொழில்நுட்ப வளர்ச்சியினால் பிறந்த இணையவழித்  தகவல் பரிமாற்ற முறையும், மாறிவரும் உலகின் பொருளாதாரத்  தேவைகளினால் சமுதாயத்திற்கு நிகழும் நிர்ப்பந்தங்களும் ஆகும்.

இவர்கள் எண்ணிமக் காலத்தின் இணையத் தலைமுறையினர். இந்தச் சக்தி வாய்ந்த இணையத்தின் தோழர்களான இளைய தலைமுறையினருக்கு, தொழில் நுட்ப வளர்ச்சியை அஞ்சாமல் கையாண்டு உலகத்தை மாற்றும் சக்தி உள்ளது.

வெளிப்படையான இயக்கங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இணையத்தின் வழி உலகின் இயக்கங்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வருகிறது. புதுவகையாக இணையத்தின் ஊடக பரிமாறிக்கொள்ளும் தகவல்களால் இந்த இளைய தலைமுறையினரின் நடவடிக்கைகள், காலம் காலமாக மாறுதல்கள் இன்றி இயங்கி வந்த அரசாங்கங்களை, தொழில் நிறுவனங்களை, ஊடகங்களை நிலைகுலையச் செய்கின்றது.

கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரும், சிந்தனையாளரும், பேச்சாளருமான ‘டான் டாப்ஸ்காட்’ (Don Tapscott) புதியதோர் புரட்சிகரமான உலகம் மலர்ந்துள்ளது, அதற்கு அடிப்படையாக விளங்குவது இணையத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார்.

இந்தப் புரட்சிக்கு வெற்றிகரமாக வழி வகுப்பது இணைய வழி தகவல் பரிமாறல்களினால் ஏற்பட்ட முன்னேற்றம்.  இந்தத் தகவல் பரிமாறல்களில் உள்ள…
வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்:
1. ஒருங்கிணைந்து செயலாற்றுதல், ஒரு பொதுக் குறிக்கோளுக்காகக் கூட்டு முயற்சியாக ஒத்துழைத்தல் (Collaboration)
2. வெளிப்படைத்தன்மை (Transparency)
3. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
4. முடிவெடுக்கும் திறன் (Empowerment)

ஆகிய நான்கு பண்புகள் புரட்சிகரமான வெற்றியைத் தரும் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகிறது என்கிறார் டான் டாப்ஸ்காட்.  இந்த “வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்” மூலம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியை நல்ல முறையில் மாற்றி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும்.  கீழ் வரும் எடுத்துக்காட்டுகள் இந்த உண்மையை வலியுறுத்துகிறார் டான் டாப்ஸ்காட்.

1. ஒருங்கிணைந்து செயலாற்றுதல்:
ராப் மெக் ஈவன் என்பவர் தங்கச் சுரங்கங்களில் முதலீடு செய்பவர். அவரிடம் பணி புரியும்  புவியமைப்பியல் (geologist) ஆய்வாளர்கள் உதவியினால் நிலத்தடி தங்கச் சுரங்கங்களில் தங்கம் கண்டெடுக்க முயன்றார்.  அவருடைய ஆய்வாளர்கள் தரும் தகவல்களும், புள்ளி விவரங்களும் அவருக்குத் தேவையான முறையில் அமைந்திருக்கவில்லை.  பொறுமை இழந்தார் ராப் மெக் ஈவன். தனக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் இணையத்தில் வெளியிட்டார்.  இந்தத் தகவல்களை ஆராய்ந்து தங்கம் எங்குக் கிடைக்கும் என்ற தகவலைச் சரியான முறையில் அறிந்து பதில் அளிப்பவர்களுக்கு அரை மில்லியன் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.  அவரது சவாலைப் பலர் ஏற்று ஆராய்ந்து அவருக்குத் தகவல் அளிக்க முன் வந்தார்கள்.  சமூக வலைத்தளங்கள்  வழி தகவல் பரவியதால் அவரது முயற்சி வெற்றி பெற்றது.  கிடைத்த தகவல்களினால் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கம் அவருக்குக் கிடைத்தது.  அவரது நிறுவனத்தின் மதிப்போ பற்பல பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

2. வெளிப்படைத்தன்மை:
இணையத்தின் வழியாகப் பெரிய நிறுவனங்களின் நடைமுறைகளும், அராசகங்களின் நடவடிக்கைகளும் விரைவில் மக்களுக்குத் தெரிய வருகிறது.  விக்கிலீக்ஸ் (WikiLeaks) நிறுவனரான ஜூலியன் அசான்ஜே (Julian Assange) போன்றவர்கள் எடுக்கும் முயற்சியினால் இரகசியமாகக் காப்பாற்றப் பட்ட தகவல்கள் அம்பலமாகின்றன.  பொதுமக்களின் விரல் முனைகளில் இப்பொழுது  உலக நடவைக்கைத் தகவல்கள் சுதந்திரமாக வந்து சேர்கின்றன.  இது போன்ற தகவல்களின் வெளிப்படைத் தன்மையினால் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வெறும் வெட்டிப் பேச்சுகளும், பொய்யான வாக்குறுதிகளும் உதவாது என்பதை நிறுவனங்களும், அரசாங்கங்களும் உணர்ந்து வருகின்றன. இதனால் அவர்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

3. பகிர்ந்து கொள்ளுதல்
அறிவுசார் உடமைகளை (intellectual properties) காப்புரிமை (copyright ) என்ற கட்டற்று (open source) பகிர்ந்து கொள்ளுதல்  ஆக்கத் திறன் வளர்ச்சியை விரைவு படுத்தி மனித இனம் மேம்பாடு அடைய வழி வகுக்கும். எடுத்துக்காட்டாக, ஐ.பி.எம்.(IBM) நிறுவனம் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் மென்பொருட்களை லின்னக்ஸ் (Linux) வளர்ச்சிக்குக் கொடுத்துதவியதால் பல பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று ஐ.பி.எம். நிறுவனம்தான் பயனடைந்தது.

வரும் ஓர் ஆண்டிற்குள் மருந்தியல் தொழில் துறையின் (pharmacological industry) தனிக்காப்புரிமை (patent rights) பெற்ற பல மருந்துகளின் காலம் முடிவடைகிறது. இதனால் அத்தொழில்துறை நிறுவனங்களின் வருமானம் 20-35% வீழ்ச்சி அடையும் நிலை ஏற்படப் போகிறது. நிறுவனங்களின் லாப முறையை நிலை நிறுத்த இந்த நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  தங்களது மருந்தியல் ஆராய்ச்சி முடிவுகளை அனைத்து மருந்தியல் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு நோய் தீர்க்க உதவும் புதிய மருந்துகளை விரைவில் கண்டு பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும்.  இவ்வாறு பகிர்ந்து கொண்டு, ஒருங்கிணைந்து செய்யும் ஆராய்ச்சிகள் மனிதக் குலத்தின் நோயற்ற நல்வாழ்விற்குப் பெரிதும் உதவும்.

காலத்திற்கேற்ற புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அதன்படி வியாபார உத்திகளை மாற்றாவிடில் இசைத்துறை இப்பொழுது தடுமாறும் நிலையைப் போன்ற நிலையை அடைய நேரிடும். உலகப் புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்களும், இசைத்துறை நிறுவனங்களும் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மாறுதல்களை அனுசரித்து, காலத்திற்கேற்ற புதிய தொழில் கட்டமைப்பு வழிகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதைச் செயல் படுத்தவில்லை. அதைத் தவிர்த்து தரவிறக்கம் செய்து பாடல்களைக் கேட்க விரும்பும் பதின்ம வயதினர் மீது காப்புரிமை வழக்கு போடுவதில்தான் மும்முரமாக இருக்கின்றனர்.  இது தொழில்நுட்ப வளர்ச்சியை அனுசரித்துச் செல்லும் வகையில் அமைந்த காலத்திற்கேற்ற அணுகுமுறையல்ல. பகிர்ந்து கொண்டு பலனடைவோம் என்று சிந்தனை முறையில் அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். வளைந்து கொடுக்காவிடில் வர்த்தகத்தில் வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

4. முடிவெடுக்கும் திறன்:
அறிவுடைமையே சக்தி தரும் என்பதை மெய்ப்பிக்கும் காலமாக எண்ணிமக் காலம் திகழ்கிறது. அதிகாரம் என்பது அரசாங்க நிர்வாகங்களில் மையப்படுத்தப் பட்டிருந்த நிலை இப்பொழுது மாறி வருகிறது. சமூக வலைத்தளங்கள் பழைய அதிகாரக் கட்டுப்பாட்டிற்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.  எந்த முடிவையும் நிர்ணயிப்பதில் பொதுமக்களின் பங்கு அதிகரித்து வருகிறது.  எண்ணிமக் காலத் தலைமுறையினர் அரசு சொல்வதைக் கேட்டு நடக்கும் முந்தைய தலைமுறையினரிலிருந்து பெரிதும் மாறு பட்டவர்கள்.  இவர்கள் சாதாரணக் குடிமக்கள் அல்ல.  எந்த உலக நிகழ்ச்சியிலும் இவர்களது பங்களிப்பு அதிகமாகிவிட்டது.

இதனைச் சமீபகாலத்தில் நடந்த உலகப் புரட்சிகளின் வழி அறியலாம்.  சமூக வலைத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் வெகு விரைவில் பரவி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.  சுதந்திரத்திற்கு வழி கோலுகிறது.  துனிஷியா (Tunisia) நாட்டின் கலவரத்தில், மாணவர்களைத் தாக்கிய கொலைக் கும்பலை மாணவர்கள் கையாண்ட விதமே இதற்குச் சான்று.  தாக்குதல்களை உடனுக்குடன் கைபேசியில் படம் பிடித்து அநீதி நடக்கும் இடங்களை நட்பு இராணுவக் குழுவிற்கு மாணவர்கள் காட்டிக் கொடுத்தனர். அதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். டுவிட்டெர் (Twitter) சமூகத்தள வழியாகச் செய்யப் பட்ட தகவல் பரிமாற்றம் சிரியாவின் கலவரத்தின் நிகழ்வுகளின் போக்கை நிர்ணயித்தது. இவ்வாறு அதிகாரம் பொதுமக்களின் கைக்கும் வருவதற்கு இணையம் உதவி செய்கிறது.

ஆனால், குறை என்று சொல்ல நேர்வது இந்த இளைய தலைமுறையினரின் போராட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தலைமை என்று ஒன்று இல்லாது போவது. அக்குறையையும் மீறி நல்வழியிலேயே இந்த இயக்கங்கள் கொண்டு வரும் மாறுதல்கள் நிகழ்கிறது.  வெளிப்படையான சமுதாயத்திற்கான இந்த புதிய கொள்கைகள் இனி உலக நிகழ்வுகள் பழைய முறைக்குச் செல்லும் நிலையையே இல்லாது செய்துவிட்டது.

தகவல் பரிமாற்ற வரலாறு:
வேளாண் கால (agrarian age) அறிவுடைமை அந்தந்த குழுக்களில் மையப் படுத்தப் பட்டிருந்தது. மக்கள் வாழ்வதற்காகப் பிறந்து வாழ்ந்து மடிந்தனர். அவர்கள் அறிந்ததைப் பலருக்கும் அறியப் படுத்தும் வாய்ப்பு இல்லாதிருந்தது.  ஜொஹனஸ் கட்டன்பர்க் (Johannes Gutenberg) 1450 இல் அச்சு இயந்திரம் கண்டறிந்த தொழில்துறை காலத்தில், மக்கள் அறிந்தவற்றை ஆவணப் படுத்தி பலருக்கும் விரைவில் சென்றடையுமாறு பரப்பும் வசதி ஏற்பட்டது. தற்பொழுதுள்ள எண்ணிமக் கால இணைய வளர்ச்சியில் உலகம் மிகவும் சுருங்கி விட்டது.

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்ததை உலக அளவில் அனைவருக்கும் எடுத்துரைக்கும் வழி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிலையில் அனைவரின் அறிவுத்திறனும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. நிறுவனங்களின் கட்டமைப்பு மாறுபட்டு ஒருங்கிணைந்து செயலாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது, நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது,  அறிவையும் தகவல்களையும் பொது நலனுக்காகப் பகிர்ந்து பரிமாறிக் கொள்வதால் ஒருங்கிணைத்த சக்தி மக்கள் வசமாகிறது. இது புதிய சுதந்திரத்திற்கு வழி வகுக்கிறது. இணையவழித் தகவல் காலத்தில் உலகம் ஒரு புதிய மாற்றத்தை நோக்கிச் செல்லத் துவங்கி விட்டது.

   புதுவினை செய்க அஃது
   பொதுநலம் ஆதல் வேண்டும்
   இதுசெய்க போர்கள் இல்லை
   இன்ப நல்லுலகைக் காண்பாய்
      - பாரதிதாசன், நாள்மலர்கள், பக். 134

புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய  கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.

இணையத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியால், அதனைத் தினமும் உபயோகிக்கும் இளைய தலைமுறையின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் அவர் கனவு நினைவாகி வருவதாகத் தெரிகிறது


Sources:
- Radical Openness: Four Unexpected Principles for Success (TED Books) by Anthony D. Williams and Don Tapscott (Jan 17, 2013) - http://www.amazon.com/Radical-Openness-Unexpected-Principles-ebook/dp/B00B14RIQS/

- A conversation about how the web is changing our world, Don Tapscott – http://dontapscott.com/




நன்றி:
திண்ணை   
பிப்ரவரி 11, 2013



#திண்ணை, #இணையம், #Themozhi 


Friday, February 8, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

 



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…
             வரிகள்: கண்ணதாசன்


நன்றி: வல்லமை - பிப்ரவரி  8, 2013  


#ஓவியம், #வல்லமை,  Themozhi 



Wednesday, February 6, 2013

குடதிசை மருங்கில்: ஆசியக் கலை அருங்காட்சியகம்

குடதிசை மருங்கில்:  ஆசியக்  கலை அருங்காட்சியகம்


ஆசிய நாடுகளின் கலைப்பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும்  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாகக் குறைந்தது ஒரு பத்துக்  கலைப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.  பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியகங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவை அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதிகளில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.


சான்ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்:


பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவே இருக்கும்.  ஆசிய நாடுகளிலிருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டுக் கலைப்பொருட்களை விடக் குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  அமெரிக்காவில் வாழும் ஆசியநாட்டு வழி வந்தவர்களில், தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும்  குறைவு.

இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாகக் கொடுத்து உதவியவர் சிகாகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

இவர் 1959இல் சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்குத் தன் தனிப்பட்ட கலைப்பொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களைச் சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடத் தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

சான்ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிகக் கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான்ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழப்  பாதிக் கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கலப் புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டுக் கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான்ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியகம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

சான்ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்பத் தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.
இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
(1) சீனா
(2) ஜப்பான்
(3) கொரியா
(4) தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
(5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
(6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்தியப் புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
(7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.
இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
(1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
(2) ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிகப்  பரிவர்த்தனைகள்
(3) ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

இந்தியாவினைக் குறிக்கும் சிறப்புக் கண்காட்சியாகச் சென்ற ஆண்டுகளில்:
மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]
ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியத் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with 'Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]
இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
போன்ற சிறப்புக் கலைப்பொருட்கள் கண்காட்சிகளையும்  சான்ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.


இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:


உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்குச் சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காகச் செதுக்கப்பட்டவை  இந்தியத் தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான்ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்தச் சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சி  2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் முதல் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் வரை பார்வைக்கு வைக்கப் பட்டது.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காகக் கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்றுத் தொகுத்து வழங்கப் படுகிறது.


அருங்காட்சியகத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாகக் கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமியத் தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருளுகிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளைச் சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களைத் தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.

பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்தத் திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராணக் கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலையாக  வடிக்கப் பட்டிருப்பார்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ்வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.


கணேசா:
இந்து தெய்வம் கணேசர்:


கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்தச் செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவற்றை உணர்ந்து யானையின் தலையைக் கணேசருக்குப் பொருத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாகக் கருதப் படுகிறது.

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023


பிரம்மா:


பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிப்பிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்ப வடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளைச் செதுக்குவது இயலாத செயலாகும்.

இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


விஷ்ணு:



விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்புப் பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டிக் காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவையும் ஆகும்.

இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தைச் சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தைத்  தங்கள் தலையில் மகுடமாகத் தரித்துள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாகச் சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003


சிவன்:


இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்குக் காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யும்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பிலிருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிருதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.

இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015


ஹரிஹரன்:


இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்குக் காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்பட்டுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.  அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013


எங்கெங்கு காணினும் சக்தியடா:
பார்வதி:

அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகன்று கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036


துர்கை:


துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசூரன்) கொன்றழித்தவர். இங்குக் காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025


திரிபுரசுந்தரி:
 

 திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகிய பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாகத் திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளை குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028


காளி/சாமுண்டி:


அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலான  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனையால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi: the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026


சூரியா:


இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாகச் சூரியனைக் குறிப்பவர். இங்குக் காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூர்யாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூர்யாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூர்யாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033


இறைவிகள்:
 

சிதைவிற்கு முன் இந்தக் கற்காலத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினை (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராக அவதாரத்தில் வராகத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராகி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையும் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.
சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராமணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியகத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.  அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029


கருடன்:


கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்குச் சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும் தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.

இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.  அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

ஆகஸ்ட் 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்தச்  சிறப்புக் கண்காட்சி  பிப்ரவரி 25 ஆம் தேதிவரை சான்ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றது. இப்பகுதியில் வாழும் தமிழர்களுக்குக் கண்காட்சியைக் காண ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்தது.  படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினுக்கு, குறிப்பாக அருங்காட்சியக அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.



Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.

குறிப்பு: படங்களின் தகவல் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் கையேட்டிலிருந்து பெறப்பட்டது



நன்றி: வல்லமை
ஜனவரி  4, 16, 23, 30 - 2013 & பிப்ரவரி 6, 2013



#அமெரிக்கா, #வல்லமை,  #Themozhi 


Friday, February 1, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4




சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே…வாழ்நாளிலே
       வரிகள்: கண்ணதாசன்



நன்றி: வல்லமை - பிப்ரவரி 1, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi