Monday, May 6, 2024

தொடராண்டு சுழற்சியாண்டுக் கணக்குகளின் நிறை குறைகள்

தொடராண்டு சுழற்சியாண்டுக் கணக்குகளின் நிறை குறைகள்


இன்றைய நாட்களில்,  வைதீக சமயத்தினர் (அல்லது இந்து சமயத்தினர்) பின்பற்றும் நாட்காட்டிக் காலக் கணக்கு (அல்லது பஞ்சாங்கம்) சக ஆண்டின் அடிப்படையில் அமைவது. சக ஆண்டுக் கணக்கு முறையானது அதைத் தோற்றுவித்தவராகக் கருதப்படும்  சாலிவாகனரின் பெயரினை ஒட்டி சாலிவாகன  சகாப்தம் (சக + அப்தம்) / சக ஆண்டு என்றும் குறிப்பிடப்படும்.   'சாலிவாகனன்'  என்பவர் பண்டைய இந்திய நிலத்தில் தக்காணப் பகுதியில் ஆட்சி புரிந்த  'சாதவாகனர்'  என்ற அரச மரபின் (தொன்மங்களில் இவர்கள் ஆந்திரர் எனவும் அழைக்கப்பட்டவர்) புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர்.   இன்றும் தக்காணப் பகுதியில் ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் வழக்கில் உள்ள இந்த 'சக சம்வத்' தொடராண்டு முறையில் 60 ஆண்டுகள் சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பெயரும் உண்டு.  

தமிழர்களின் புத்தாண்டு என்று கொண்டாடப்படும் ஆண்டுகள் (சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடியும் ஓராண்டுக் காலம்)  ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் என்று அறுபது ஆண்டுகளின் வடமொழிப் பெயர்கள்  கொடுக்கப்பட்டுள்ளது.  இவை அறுபது ஆண்டுகள் வட்டம்  அல்லது சம்வத்சரம் என்று குறிப்பிடப்படும். இதுவும்  சாலிவாகன சக ஆண்டுகளின் முறையைப் பின்பற்றி அமையும் அதே சுழற்சி முறைக் கணக்குதான்.  இது வியாழன் கோளின் நகர்வின் அடிப்படையில் அமைவதால் வியாழ வட்டம் என்றும்  குறிப்பிடப்படும். வியாழவட்டம் (60 year Jovian Cycle) சனிக் கோளுடன் இணைத்தவகையில் கணக்கிடப்படும்.  ஒரு முழு வியாழவட்டமானது  வியாழன் கோளின் ஐந்து சுற்றுகளைக் கணக்கில் கொண்டது. வியாழன் 12 ஓரைகள்(இராசிகள்) கொண்ட ஒரு கனலி வட்டத்தை (இராசிச் சக்கரத்தின் 12 இராசிகளை)  கடந்து முடிக்க, அதாவது கதிரவனை ஒரு முழுச் சுற்று சுற்றி முடிக்க 12 ஆண்டுகள் எடுக்கும். இதுபோன்று வியாழன் சூரியனை ஐந்து முழுச்சுற்றுகளைச் சுற்றி முடிக்கும் காலம் வியாழ வட்டக் கணக்கில் 60 ஆண்டுகள் கால அளவு கொண்டது (5 × 12).  

சாலிவாகன சக ஆண்டு முறைக் கணக்கிடல் நர்மதை தப்தி ஆறுகள், விந்திய சாத்பூரா மலைகளுக்குத் தெற்கில் உள்ள  தக்காணப் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகளாக வழக்கத்தில் பின்பற்றப்படுவது. இந்தக் காலக் கணக்கிடல் முறையில் கதிர்வழி (சௌரமானம்/solar) நாட்காட்டியையும், மதிவழி (சந்திரமானம்/lunar)  நாட்காட்டியையும் இணைத்து கதிர்-மதி வழி முறையில்  (lunisolar calendar) காலம் கணக்கிடுகிறார்கள்.  ஆதலால் சூரியன் மேஷ ஓரையில் நுழையும் காலத்தில் அமாவாசை / புதுநிலவு நாளில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவார்கள்.

இவர்களுக்குத் தெற்கே உள்ள தமிழக மலையாள மக்கள் சூரிய நாட்காட்டியை (solar calendar) மட்டுமே கணக்கில் கொள்வதால் மேஷ ஓரையில் சூரியன் நுழையும் நாளை  மட்டுமே புத்தாண்டு எனக் கணக்கிடுவார்.  ஆகவே சூரிய நாட்காட்டி  கணக்கிடும் முறை கொண்ட தமிழ் மக்களுக்குப் பொங்கல், ஆடி புதுவெள்ளம் போன்ற பண்டிகை நாட்கள் மாறவே மாறாமல்  எல்லா ஆண்டுகளும் தமிழ் மாதங்களின் அதே நாட்களில்தான் வரும். இடைக்காலத்தில் தமிழுடனும் தமிழகத்துடனும் கொண்டிருந்த உறவைத் துண்டித்துக் கொண்டு சேர நாடு மலையாள மொழியுடன் கேரளப் பகுதியாகத் தனித்து இயங்கும் பொழுது அவர்களும் கொல்லம் ஆண்டு என்ற 'தொடராண்டு' முறைக்கு மாறிவிட்டனர்.  

ஆனால் சோதனையாகத் தமிழ் மக்கள் தொடராண்டுக் கணக்கு முறையைப் பரவலாகப் பயன் படுத்தும் வழக்கமே இல்லாது இருந்தார்கள்.  தமிழகத்தின் கல்வெட்டுகள் ஒரு சில 'கலியாண்டு' அல்லது 'கலியூழி' (இந்த நடப்பு ஆண்டு- கலி 5125 ஆம் ஆண்டு) என்ற தொடராண்டு காலக் கணக்கைப்  பின்பற்றி இருந்தாலும்,  ஏனோ இந்தத் தொடராண்டு முறை  கணக்கிடல் தமிழகப் பகுதியில் பரவலாக இல்லாது போயிற்று.  தமிழக மன்னர்கள் சோழர்களும் பாண்டியர்களும் பெரும்பாலும் தாங்கள் வெட்டும் கல்வெட்டுகளில் உள்ள காலக் கணக்குச் செய்தியை இந்த மன்னனின் இத்தனையாவது ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் முறையைப் பின்பற்றினர்.

ஒரு காலத்தில் மேற்குலகிலும் ஐரோப்பாவில் இது போன்ற ஆட்சி முறைக் குறிப்பிடும் வழக்கம் ஜூலியன் காலக் கணக்கில் இருந்தாலும்,  அவர்கள் வெகு விரைவில் அம்முறையைக்  கைவிட்டு, கிபி 525 ஆம் ஆண்டு முதல்,  கிறிஸ்துவுக்கு  முன், கிறிஸ்துவுக்குப்  பின் என்ற ஒரு முறையான தொடராண்டுக்  கணக்கினை ஏற்றுக் கொண்டனர்.  இதற்குக் காரணம், ஆள்பவரின் ஆட்சி ஆண்டைக் கொண்டு கணக்கிடும் முறையில், ஒரே ஆண்டில் ஒரு மன்னரின் ஆட்சி முடிந்து மற்றொருவர் ஆட்சி தொடங்கினால்  கணக்கில் குழப்பம் ஏற்படுவது காரணமாக இருந்ததுதான்.  எனவே காலக்கோட்டில் அமையும் தொடராண்டு முறை உலகில் பல பகுதிகளில் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  

இந்தியாவிலும் விக்கிரம ஆண்டு தொடராண்டு முறை  வட இந்தியாவிலும், முன்னர் குறிப்பிட்ட  சக ஆண்டு தொடராண்டு முறை  தக்காணப் பகுதியிலும், ஏறத்தாழ  2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துவிட்டது. நடக்கும் இந்த ஆண்டில் விக்கிரம ஆண்டு-2081, சக ஆண்டு-1946  என்ற ஆண்டுகளின் கணக்கு எண்ணிக்கை இதைத்தான் காட்டுகிறது.  சூரிய நகர்வுகளைக் கொண்டு காலம் கணிக்கும் கதிர்வழி நாட்காட்டி முறை கொண்ட ஒரிசா(1431), வங்காளம்(1431), அஸ்ஸாம் (1431), மலையாளம் (கொல்லம் -1199) ஆகிய பகுதிகளும் இடையில் தொடராண்டு முறையில் காலத்தைக் கணக்கிடத் தொடங்கி விட்டனர்.  

இன்றைய தமிழ் மக்கள் தமிழ் ஆண்டுகள் என்ற பெயருடன் வழக்கத்தில் வைத்திருக்கும் இந்த 60 ஆண்டுக் கணக்கு முறையில் ஆண்டுகள்  பிரபவ, விபவ, சுக்ல . . . என்று தொடங்கி . . . ரக்தாட்சி, குரோதன, அட்சய என்று முடியும்.    அறுபது ஆண்டுகள் நிறைவுற்று ஒரு முழுச் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் பிரபவ, விபவ, சுக்ல . . .  என்று கணக்கிடப்படும்.  வராகமிகிரர் (பொ.ஆண்டு  505 - 587) இயற்றிய 'பிருகத் சங்கிதை'யில்  குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்த 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் குறிப்பிடப் படுபவற்றில்  எதுவுமே தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பதையும் தமிழர்களும்  ஒப்புக் கொள்கிறார்கள்.  அதனால் இந்த 60 வடமொழிப்  பெயர்களையும் கைவிடாமல், தமிழ்ப்படுத்தியாவது தங்கள் வாழ்வில் இணைத்து தமிழாண்டுகள்  என்று கூறிவிட உறுதி பூண்டுள்ளார்கள் என்பது எந்த அளவில் தமிழ் மக்கள் சமயத்திற்கு முதன்மை நிலை அளித்து, தாய்மொழிக்கு அதற்கு அடுத்த நிலையைக்  கொடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.  கோவிலில் தங்களுக்குப் புரியாத வடமொழியில்  வழிபாட்டினை மேற்கொள்வதற்கும், திருமணங்களில் வடமொழி மந்திரங்கள் கூறி வாழ்க்கையைத் தொடங்குவதற்கும்  இணையானது இம்முறை என்பதால் இது குறித்து ஆராய்வது எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விளைவையும் கொண்டுவரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.  

எவ்வாறு இந்த வடமொழித் தழுவல் காலக் கணக்கீட்டு முறை  தமிழக மக்களின் வாழ்வில் நுழைந்தது என்பது மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில்  தமிழக மன்னர்கள் ஆட்சிக் காலம் தமிழகத்தில் மறைந்த பிறகு,  தமிழகப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் விஜய நகர நாயக்க மன்னர்களும், பின்னர் தஞ்சைப் பகுதியில் மராட்டிய மன்னர்களும் ஆவார்கள்.  இவர்கள் சக ஆண்டு கணக்கு முறையைப் பின்பற்றிய தக்காணப் பகுதியிலிருந்து வந்தவர்கள். தங்களின் இந்தக் காலக்கணக்கு முறையைத் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுதும் தொடர்ந்தார்கள்.

நடப்பில் உள்ள 2024 ஆம் ஆண்டை தக்காணப் பகுதியினர் கீழ்க் காணுமாறு தான் இன்றும் குறிப்பிடுகிறார்கள்.  
சக சம்வதா 1946 -  குரோதி (தெலுங்கு ஆண்டுக் கணக்கு)
சக சம்வதா 1946 -  குரோதி (கன்னட ஆண்டுக் கணக்கு)
சக சம்வதா 1946 -  குரோதி (மராத்தி  ஆண்டுக் கணக்கு)
(https://www.drikpanchang.com/panchang/hindu-panchangs.html)

ஏற்கனவே எந்த தொடராண்டு முறையும் பயன் கொள்ளாத தமிழ் மக்களின் இடையில் அரச நடவடிக்கைகளில் அந்நிய மன்னர்கள் கையாண்ட நாட்கணக்கு எளிதில் உள்வாங்கப்பட்டுள்ளது.  தமிழ் நாட்டுக் கோவில்களில் விஜயநகர மன்னர் ஆட்சிக் காலங்களில்தான் பிரபவ, விபவ, சுக்ல . . .என்று காலம் குறிக்கும் முறை கல்வெட்டுகளில்  தோன்றத் தொடங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலின் மூன்றாவது கோபுரத்தின் சுவரில் உள்ள பொ. ஆ. 1500 களில் வெட்டப்பட்ட  விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டு, திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் இந்த  நாட்காட்டி கணக்குமுறை ஊடுருவலுக்குச்  சான்றுகளாக அமைகின்றன.

இத்தகைய காலக் கணக்கு முறை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் வழக்கத்தில் இல்லை.  குலசேகரன் என்ற பராக்கிரமப் பாண்டியனுடைய செங்கோட்டைச் சிவன் கோயில் கல்வெட்டில்  முதன் முதலாக இந்த அறுபதாண்டுக் காலக் கணக்கு முறை இடம் பெற்றுள்ளது எனலாம். இக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்ற காலம் கி. பி. 1545 ஆம் ஆண்டாகும்  (Arch. Survey Vol I, No. VI P. 103-4).  இக் கல்வெட்டில் விசுவாவசு ஆண்டு குறிப்பிடப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அறுபது ஆண்டு வட்டத்தில் முப்பத்தொன்பதாவது ஆண்டாகும், இக் கல்வெட்டுத் தென் இந்தியாவில் விசய நகரப் பேரரசு சிறப்புற்று விளங்கிய காலத்தில் பொறிக்கப் பெற்றது. அப்பேரரசு காலத்திய கல்வெட்டுக்களில் இந்த ஆண்டுக் கணக்கு முறை வழக்கத்திற்கு வந்தமை புலனாகின்றது என்கிறார் க. த. திருநாவுக்கரசு.

இந்த அறுபதாண்டு  சுழற்சிமுறைக் கணக்கை மகிழ்வுடன் ஏற்றுப் பின்பற்றத் தொடங்கிய தமிழ் மக்கள் ஏனோ அதனுடன் இணைந்து வந்த  சக ஆண்டு என்ற தொடராண்டுக் கணக்கைப் பின்பற்றவில்லை.  இந்த முடிவை அந்நிய மன்னர்களே நடைமுறைப்படுத்த விரும்பாமல்  தங்களைத்  தமிழ் மக்களுடன் இணைத்துக் கொள்ளும்  விருப்பத்தால் செய்த மாற்றமா,  அல்லது தமிழ் மக்களே  தவிர்த்ததா என்பது மேலும் ஆய்வுக்கு உரிய ஒன்று.  அதனால் 15 ஆம் நூற்றாண்டு போல சித்திரையை முதல் மாதமாகக் கொண்டு தொடங்கும் அறுபது வியாழவட்ட  ஆண்டு பெயர்கள் கொண்ட காலக் கணக்கிடும் முறை தமிழகத்தில் நிலைத்துவிட்டது.  ஆனால் இந்த வரலாற்று உண்மையைத் தமிழர்கள் ஏற்கும் மனநிலையில்  இல்லாததால், மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்கள் வாழ்வில் வைதீக சமயம் கொண்டிருக்கும் தாக்கமே காரணம்.

ஒரு நிகழ்வை வரலாற்றில் பதிய வேண்டும் என்றால், இன்றும் நாம் வழக்கில் பின்பற்றும் நிலை போலவே குறைந்தது 3 குறிப்புகள் வேண்டும், அவை; நாள், மாதம், ஆண்டு.   மேற்கொண்டு கிழமை சொல்வதோ, கால மாலை என நேரம் சொல்வதெல்லாம் மேலதிகத் தகவல்.  காலப் போக்கில்  இக்குறிப்புகள் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு நிலையைச் சென்றடையும்.  ஆனால் இந்த ஆண்டு, இந்த மாதம், இந்த நாளில் என்பது மிக அடிப்படையான காலக்குறிப்பு.  இவையே கூட தேவை கருதிச் சுருக்கப்படுவதும் உண்டு. இந்தியா விடுதலை என்றால் ஆகஸ்ட் 15  என்ற அளவில் நின்று விடலாம். அமெரிக்கா சுதந்திரம் ஜூலை 4 என்று மட்டும் சொல்வது இதற்கு ஓர் எடுத்துக் காட்டு. மாறாக  ஆண்டை மட்டும் குறிப்பிட்டுக் கடக்கும் நிலையும் இருக்கலாம், 2004 ஆண்டு சுனாமி வந்தது என்பது போல.  ஆனால் காலக் கோட்டில் நிகழ்வை அறிந்து கொள்ள, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள,  தொடரான ஆண்டுக் கணக்கில் ஆண்டைக் குறிப்பிடுவது மிக மிக இன்றி அமையாதது.  இல்லாவிட்டால் நிகழ்வின் முக்கியத்துவம் மதிப்பிழந்து போகும். அத்துடன்,  ஒரு நிகழ்வைக் காலக் கோட்டிலும் புரிந்து கொள்ள இயலாது.  

பிற்காலத்தில் அந்நியர் ஆட்சியில் சக தொடராண்டுக் கணக்குடன் அவர்கள் இணைத்துப் பயன்படுத்திய சுழற்சி  ஆண்டையும் ஏற்றுக் கொண்டிருந்தாலாவது வரவேற்கத் தக்கதாக இருந்திருக்கும்.  ஆண்டு குறித்து இரண்டு குறிப்புகளை (ஆண்டு எண் + ஆண்டின் பெயர்) இணைத்துப் பயன்படுத்துவது துல்லியத்தை மேம்படுத்தும் ஓர் உத்தியாக இருந்திருக்கக் கூடும் (Cross checking of data validation method). ஆனால் தொடராண்டு பகுதியைக் கைவிட்டு வெறும் சுழற்சியாண்டு முறையை மட்டும் பின்பற்றியது மெச்சத் தகுந்த முறை அல்ல. அந்நியர் காலக் கணக்குமுறையைத் தத்து எடுத்தவர்கள் அதை முழுமையாக சக தொடராண்டு கணக்குடனாவது  தத்து எடுத்திருக்கலாம்.  அவ்வாறு செய்யாதது கிடைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகளை கிரிகோரியன் ஆண்டுக் கணக்கிற்கு மாற்றுவதில் சிக்கலானதாக, சுற்றுவழிக்  கணக்காக அமைந்துள்ளதால் கணக்கிடும் பிழைகளுடன் சிலர் கணக்கிடும் நிலையில் கொண்டு விடலாம். இதை எடுத்துக் காட்டுடன் விளக்கினால் இம்முறையில் உள்ள குறைபாடு  புரியும்.

எடுத்துக் காட்டாக,  நீங்கள் பிறந்தது நள ஆண்டு உங்கள் சகோதரி பிறந்தது ஆனந்த ஆண்டு என்றால் எது முன்னர் எது பின்னர்? அவர் உங்கள் அக்காவா தங்கையா? இருவருக்கும் என்ன வயது வேறுபாடு, உங்கள் வயதுதான்  என்ன என்று இந்தத் தகவலைக்  கேட்பவரால் புரிந்து கொள்ள முடியாது.  இதையே நான் பிறந்தது 1976 என் சகோதரி  பிறந்தது 1974 என்றால் எல்லா விவரமும் தானே தெரியும்.  இதே போல ஓர் ஓலைச்சுவடி  ஒன்று 'விளம்பி' ஆண்டு என்று குறிப்பிட்டு உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.    இந்தத் தகவல் மட்டுமே அது   நடப்பில் நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் ஆண்டில்  பின் வரும் 1478, 1538, 1598, 1658, 1718, 1778, 1838, 1898 ஆண்டுகளில்  எந்த ஆண்டில் எழுதப்பட்ட ஓலை என்று கணிக்கவே வழி வகுக்காது.  மேற்கொண்டும் சில தகவல்கள் தேவை.  விளம்பி ஆண்டு ஆடி  மாதம் 15 ஆம் தேதி என்று  மாதத்தின் எந்த  நாள் என்ற தகவல் குறிப்பிட்டாலும் கூட ஒரு பயனும் இல்லை. இதுவும் உதவாது. மேற் குறிப்பிட்ட விளம்பி  ஆண்டுகளில் அதுவும் ஏதோ ஓர் ஆடி மாதம் 15 ஆம் நாள் அவ்வளவுதான். இதற்கும் மேலாக,  கிழமையோ அல்லது அமாவாசை, பௌர்ணமி, வளர் பிறை தேய்பிறை நாட்கள் அன்றைய நட்சத்திரம்  போன்ற ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அது எந்த ஆண்டுடன் பொருந்துகிறது என்று கணக்கிட உதவும்.  இவ்வாறு கொடுக்கும் தகவலையும் சரியாகக் கணக்கிட்டுச்  சரியான கிரிகோரியன் நாளைக் கண்டுபிடிப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை என்பதை அண்மைய நிகழ்ச்சி ஒன்று காட்டியுள்ளது.

"பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு"  என்று ஏப்ரல் 19, 2024 அன்று வெளியான  நாளிதழ் செய்தி மூலம் இதை அறிய முடியும்.  நாளிதழ் செய்தியில் தன் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு திருக்குறள் ஓலைச்சுவடியைக்  கண்டெடுத்த ஆய்வாளர் அச்சுவடி எழுதப்பட்ட காலம் விளம்பி ஆண்டு ஆடி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்ற குறிப்பும் அதில் இருப்பதைக் கண்டார். இனி பழைய விளம்பி ஆண்டு பஞ்சாங்கங்களில் (1478, 1538, 1598, 1658, 1718, 1778, 1838, 1898 ஆண்டுகளில் உள்ள விளம்பி ஆண்டுகளில்) எந்த ஆண்டின் ஆடி மாதத்தின் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது என்று பொருத்திப் பார்த்தால் போதும். ஆனால் அது எளிதான முறையாக இருக்காது.  இதை எதிர் கொண்ட ஆய்வாளர் கணக்கிட்டு அவர் கண்டெடுத்த ஓலைச் சுவடியின்  காலம் 1718ம் ஆண்டு ஜூலை 31 என்றும்,  தற்போதைய நிலையில் 306 ஆண்டு பழமையான ஓலைச் சுவடி என்றும் கூறுகிறார்.  

ஆனால், 1718 ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி வருவது ஒரு "புதன் கிழமையில்" என்பதை இணையவழிப் பெறக்கூடிய பஞ்சாங்கம் காட்டுகிறது (https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=27/07/1718).   மாறாக, விளம்பி ஆண்டு - ஆடி மாதம் - 15 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை என்று ஓலைச்சுவடி கூறும் நாள் பொருந்திப் போவது 1838 ஆம் ஆண்டாக அறியப்படும் விளம்பி ஆண்டின் தகவலோடுதான் (https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=29/07/1838).  1838ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள்தான்  ஞாயிற்றுக் கிழமை ஆடி 15 ஆம் நாள். அதாவது அந்த ஓலைச்சுவடி 185 ஆண்டுகள் பழமையானது.  ஆய்வாளர் குறிப்பிடுவது போல 306 ஆண்டு பழமையான ஓலைச் சுவடி அல்ல.  

Case study method என்று ஆய்வுலகம் பின்பற்றும் ஓர் ஆய்வுமுறையின் அடிப்படையில் இந்த நிகழ்வை விளக்கலாம்.  எடுத்துக் கொண்ட ஒரு விளம்பி வருடக் குறிப்பு,  அதைத் துல்லியமாக கிரிகோரியன் கணக்கில் மாற்றி சரியான  காலம் காட்ட எத்தனை இடர்ப்பாடுகளைக்  கொடுக்கிறது என்பதை இச்செய்தி காட்டுகிறது. வெறும் விளம்பி ஆண்டு, விகாரி  ஆண்டு  என்ற குறிப்புகள் 'அரைகுறையான காலக் குறிப்புகள்', அவை  காலத்தைத்  துல்லியமாகக் காலக்கோட்டில்  அறிய உதவுவதில்லை. அத்தகைய காலக் கணக்கீடும் எளிதல்ல, அவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை.  மேற்கொண்டு அதிகப்படியாகக்  கிடைக்கும்  தகவல் இருந்தால் அதையும் பல பஞ்சாங்கங்களுடன்  பொருத்திப் பார்த்தே குறிப்பு கொடுக்கும் காலத்தை அறிய முடியும். சுழற்சியாண்டு  காட்டும் அரைகுறை காலக்  குறிப்பையும் சரியாகக் கணக்கிடுவதும் எளிதாக இல்லை என்பதும் இச்செய்தி மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், இன்னமும் ஏன் தமிழர்கள் இந்தத் தமிழ்ப் பின்புலம் இல்லாத வடமொழிப் பெயர் கொண்ட, பயனற்ற ஆண்டுக் கணக்கைத் தமிழாண்டுகள் என்று கூறி பெருமிதம் கொள்கிறார்கள்? தமிழுக்குத் தலைக்குனிவான நிலையை ஏற்படுத்துகிறோம் என்பதைப் புரியாதவர்களாக இருக்கிறார்கள்? என்று சிந்தித்தால்;  மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையாகும் இயல்பையும், 'மதம் ஒரு போதைப்பொருள்' (“Religion is the opium of the people") என்று பொருளாதார மேதை கார்ல்மார்க்ஸ்  கூறியதையும் ஒருங்கே இணைத்துப் பார்த்தால் தமிழர்கள் பயனற்ற அறுபது ஆண்டுக் கணக்கைக் கைவிட முடியாத, மீள முடியாத  மனநிலையில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழர்கள் தொடக்கத்தில் இருந்தே இதில் தெளிவற்ற குறிப்புகளைப் பின்பற்றியவர்களாக வரலாற்றுக் காலக் கணிப்பில்  பின்தங்கிய நிலையில் இருப்பது நம் வரலாற்றை நாம் சரியாக அறிய முடியாத நிலையில் நம்மை வைத்திருக்கிறது. மற்றவர்கள் இதுதான் நம் வரலாறு என்று எழுதும் வாய்ப்பையும் அளிக்கிறது.  காலத்தின் முக்கியத்துவம் ஏன் தமிழ்ப் பண்பாட்டில் இத்தகைய முக்கியமற்ற ஒரு நிலையில் இருந்திருக்கிறது என்பது வியப்பளிக்கும் கேள்வி. இறுதியாக 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தொடராண்டு முறை ஒன்று தமிழக அரசால் முன்மொழியப்பட்டு, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. தொடர்ந்து 1981இல் அரச ஆவணங்களிலும் அலுவல் முறையில் பயன்படுத்தும் அரசாணையும் வெளியானது. திருவள்ளுவர் ஆண்டு தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடராண்டு  நாட்காட்டி முறைமை என்ற தகுதியும்  பெற்றது. இருப்பினும் குதிரை ஓடிய பின்னர் இலாயம் பூட்டப் பட்டது போன்ற நிலையில்,  பழங்காலத்து வரலாறுகளை எல்லாம் தொலைத்த பிறகு, அத்துடன் இன்று உலகம் முழுவதும் பொது வழக்கத்தில் வந்துவிட்ட கிரிகோரியன் காலக்கணிப்பு பயன்பாட்டில் இருக்கும் காலத்தில் அது ஒரு பொருளற்ற முயற்சியாக அமைந்தது.  


பின்குறிப்பு:
பின்வருபவை 60 வடமொழிப் பெயர் கொண்ட “தமிழ்” ஆண்டுகள் எனப்படுவன . . .
1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய




சான்றாதாரங்கள்:
அறுபது ஆண்டுகள்
https://ta.wikipedia.org/s/73v3
 
"The effects of Samvatsaras",  Jorge Angelino (2009).

கல்வெட்டுப் பாடல்கள். மா. இலாவண்யா, வரலாறு இதழ் 87 [மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012]
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1104

தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை, திரு. க. த. திருநாவுக்கரசு.  ஆய்வுக் கோவை, தொகுப்பாளர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை, 1971, பக்கம்: 376 - 381.

திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள், தேமொழி, ஜூன் 12, 2021 - சிறகு.  
http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/

திருக்கணித முறை தமிழ்ப் பஞ்சாங்கம்
https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர் தகவல், வெள்ளி, ஏப்ரல் 19, 2024, தினமலர்
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-theni/-306-year-old-tirukkural-footprints-discovered-by-archeologist---/3602345



நன்றி:  தமிழணங்கு
மே,  2024



#தமிழ்ப்புத்தாண்டு , #தமிழணங்கு, #Themozhi