Saturday, December 25, 2021

ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்”

ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்”



‘பொதுநலமோ தியாகமோ பெருமைக்குரியதல்ல. பொதுவாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி என்பதும் சுயநலம்தான்’ என்று பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே அதுகுறித்து வெளிப்படையாகக் கருத்துரைத்த ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துகள் காலாவதியானவையா அல்லது காலம் கடந்து சிந்திக்கப் பட்டவையா என்று ஆராய்ந்து எடை போட உதவும் நூல்களுள் ஒன்று அவர் எழுதிய “இனிவரும் உலகம்” என்ற நூல். விற்பனையில் கலை கட்டிக்கொண்டிருந்த அவரது கழகத் தோழர்கள் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோரின் திரை வசன நூல்களை அச்சிட்ட முறை போலத்தான் இந்த நூலின் அமைப்பும் அமைந்துள்ளது. ஈரோடு குடி அரசு பதிப்பகம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஆறாம் பதிப்பாக 15 காசுக்கு வெளியிடப்பட்ட இந்நூலின் படி ஒன்று தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகச் சேமிப்பில் கிடைக்கிறது.

திராவிட இயக்கக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரோ, அல்லது தொடர்வண்டி பேருந்து போன்றவற்றுக்குக் காத்திருக்கும் வேளையிலோ சற்றொப்ப பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடித்துவிடக் கூடிய ஒரு நீண்ட கட்டுரைதான் “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் ஈ.வெ.ரா. எழுதிய அளவில் சிறிய நூல். திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கொண்டு, ஒரு பொருண்மையின் கீழ் ஒருசிலக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்து, பலரைச் சென்றடையும் நோக்கில் வெளியிடப்பட்ட அக்காலத்து ஒரு பரப்புரை நூல் வடிவில் அமைந்துள்ள இந்த நூலில் நான்கு பக்க முன்னுரையும் உட்பட நூலின் மொத்தப் பக்கங்கள் 20, பக்கத்திற்குச் சுமார் 115 சொற்களாக 2300 சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஒரு நெடிய கட்டுரையாக நூல் அமைந்துள்ளது. இன்றைய சமூகவலைத்தளப் பயனர்களுக்கு விளங்கும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிமிட வாசிப்பு கொண்டவையாக 10 பதிவுகளில் நீளும் ஒரு கட்டுரைதான் இனிவரும் உலகம் எப்படி இருக்கும் என்று பெரியார் கணித்த கணிப்பைத் தொகுக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்து முடித்த காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை மீளாய்வு செய்தால் இவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று ஈ.வெ.ரா. வியக்கவைக்கிறார்.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு முறை எப்படி மாறும் அவர் கூறியவற்றில் சில கீழே:
    ▪️ போக்குவரவு எங்கும் ஆகாயவிமானமும் அதிவேகச் சாதனமுமாகவே இருக்கும்.
    ▪️ கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
    ▪️ ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    ▪️ உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்கச் சவுகரியம் ஏற்படும். (பக்கம்: 17)

கையில் உள்ள திறன்பேசி இல்லாமல் வாழத் தெரியாத நடைமுறையில் இன்று நாமிருக்கும் நிலையையும், அது தரும் வசதிகளையும், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழி கற்றல், கலந்துரையாடல் என்ற முறைக்கு நாம் மாறிவிட்ட நிலையையும் சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொல்லிவிட்டார் என்பதைக் கணக்கில் கொண்டால் அவர் கணிப்புகள் ஐயத்திற்கு இடமின்றிக் காலத்தைக் கடந்தவைதான்.

மனித வாழ்க்கையில் அறிவியல் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களாக அவர் குறிப்பவை: நீண்ட மனித ஆயுள், சோதனைக்குழாய் கருத்தரிப்பு-குழந்தை, குறைந்த அளவு மக்கட் தொகை நோக்கில் உலகில் ஏற்படும் மாற்றம். இந்தியாவே அந்த மக்கள்தொகை நகர்வை எட்டிவிட்டது. இப்பொழுது இந்தியப் பெண்ணொருத்திக்கு இரு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக அண்மைய புள்ளிவிவரம் சொல்கிறது. அவர் சொற்களிலேயே கீழே அவர் கருத்து கொடுக்கப்படுகிறது.

    ▪️ மனிதனுடைய “ஆயுள் நூறு” ஆண்டு என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.
    ▪️ பிள்ளைப்பேற்றுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
    ▪️ மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.(பக்கம்: 18)

சமூக நோக்கில் மக்களின் வேலை, அதன் தேவை, அதற்கான ஊதியம், கிரிப்டோ கரன்சி முறை பொருளாதாரம் அவை மனித வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள், பெண்கள் வாழ்வில் அவை எத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம் என்று அவர் கணிப்பதை அடுத்ததாகக் காணலாம்.

    ▪️ ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்சினைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத் தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப் பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.(பக்கம்: 9)

    ▪️ வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்கு வந்துவிடும். சுகம் பெறுவதிலும், போக போக்கியமடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறைவாகவே இருக்கும். (பக்கம்: 11)

   ▪️ புதிய உலகத்தில் மோட்ச நரகத்திற்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இடமிருந்தால் தானே மோட்சமும், நரகமும் வேண்டும்; எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக்கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?(பக்கம்: 21)

சுருக்கமாக அவர் பார்வையில், கடின உழைப்போ மனிதர்களின் தன்மானத்தை இழிவுபடுத்தக் கூடிய வேலைகளோ வழக்கொழிந்துவிடும். இன்று இழிவாகக் கருதப்படும் வேலைகள் கருவிகளின் துணையுடன் முடிக்கப் பெறும். மக்கள் வேலை செய்யும் நோக்கம் உடற்பயிற்சிக்காக என்ற முறையில் மாறும். எனவே அவர்கள் உழைப்பில் கொள்ளும் ஆர்வமும் அதை நோக்கி இருக்கும். அதிசயப் பொருளும், அற்புதக்காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் அனைத்து மக்களும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். முடியாட்சி மறைந்துவிடும். குற்றம் நிகழ்ந்தால் அதற்கான காரணம் உளவியல் கோணத்தில் மனநோய் பிழற்சியால் நேரும் என்கிறார்.

இந்தியர்கள் அறிவியலில் பின்தங்கியிருந்த கடந்த கால நிலைக்கு அவர்களது கல்வியில் பிழையையும் தேவைக்கு உதவாத தரக்குறைவான பாடத்திட்டங்களையும் காரணமாகக் காட்டுகிறார். “மக்களுக்கு அறிவு வளர்க்க வேண்டிய பாடத்திட்டங்களின் குறையினால் மக்கள் புதுமை, முற்போக்கு போன்ற சிந்தனைகள் இன்றி வாழ்கிறார்கள். பழையவற்றை ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் பயன்கொள்ள வேண்டியது தேவை என்றாலும்; புதியவற்றில் முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு புதியவற்றைக் கண்டு பிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்” என்கிறார்.

இந்த மாற்றங்களை எளிதில் அடைய முடியுமா என்று சிந்திக்கும் ஈ.வெ.ரா. மாற்றத்தைத் தடைபடுத்த ஏற்படக் கூடிய இருவகை முட்டுக்கட்டைகளைச் சுட்டிக் காட்டுகிறார். பழமை மாறாது இருந்தால் ஆதாயம் அடையக்கூடிய தன்னலவாதிகளும், அவர்களின் சூழ்ச்சியான எண்ணத்தைப் புரிந்து கொள்ளும் திறனற்ற அறிவற்றவர்களும் புதிய வகை மாற்றங்களைத் தடுக்க முயல்வது இயல்பாக நிகழும். இந்த இரண்டு பெரிய எதிரிகளையும் கண்டு கலங்காமல் மனித முன்னேற்றத்திற்கான கடமையை முன்னெடுப்பவரே இனிவரும் புதிய உலகை வடிக்கும் உலகச் சிற்பிகளாக முடியும் என்பது ஈ.வெ.ரா.வின் ‘இனிவரும் உலகம்’  நூல் கொடுக்கும் அறிவுரை.



நூல் விவரம்:
இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.
குடி அரசு பதிப்பகம், ஈரோடு
ஆறாம் பதிப்பு - 1961
தமிழன் அச்சகம், ஈரோடு.
விலை: 15 காசு


நன்றி: சிறகு
டிசம்பர் 25, 2021



#சிறகு, #நூல் மதிப்புரை, #Themozhi  





Saturday, December 11, 2021

தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’

தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’


இரயில் பயணங்களில், கைப்பேசியில் முகம் கவிழ்க்காமல் அருகில் உள்ளவர்களைக் கவனித்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வுமுறையையும் புரிந்து கொள்ளும் முறை என்பது கடந்த காலம். அந்தக் கடந்த காலக் கட்டமைப்பில் இரயில் பயணிகள் இருவரின் அறிமுகத்தைத் தருகிறது தமிழவன் எழுதிய ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள முதல் கதையான ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ என்ற சிறுகதை.

தொடர்வண்டிப் பயணங்களில் பொழுதைக் கழிக்கும் இராமநாதன், முதிய வயதில் உறவுகள் யாரும் இன்றி, மனதில் தோன்றும் பொழுது கோவைக்கும் பாலக்காட்டுக்கும் எனக் காரணம் ஏதுமின்றி பயணித்து, இயற்கை அழகையும் மக்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழும் ஓர் ஓய்வுபெற்ற தத்துவப் பேராசிரியர்.

ஒரு பயணத்தில் அவருடன் பயணிக்கிறார் ஜார்ஜ் மேயர் என்ற ஒரு வெள்ளைக்காரப் பேராசிரியர். ஆய்வு செய்து எதையும் தெரிந்து கொள்வதில் தனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறும் ஜார்ஜ் மேயரின் மனநிலையை, அவர் விவரிக்கும் அந்த மகிழ்ச்சியை, அப்பண்பில் தோய்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அவர் இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பவர்.

இருவருக்கும் நடக்கும் உரையாடலில் தமிழர்களின் முற்காலக் குடும்ப வரலாற்று அறிவு என்பது குறுகியது. அவர்களின் தந்தையார் பாட்டனார் தலைமுறைகளுக்கு மேல் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் குடும்ப வரலாற்று அறிவு அவ்வளவுதான் என்பதைப் புரிந்து கொள்கிறார் ஜார்ஜ் மேயர், “உங்கள் அறிவு மூன்று தலைமுறை வரை மட்டுமே விரிந்தது. அதற்கு முன்பும் யாரைப் பற்றியும் ஒன்றும் தெரியாது” என்று வியக்கிறார். அத்துடன், இந்தியாவின் பழமையான தொல் வரலாறாக அறியப்படுவது எல்லாம், மக்கள் நினைவில் கடத்தப்படும் ஓர் இனத்தின் கூட்டு வரலாறு, அதுவே வரலாறாக இலக்கியங்களில் பதியப்பட்ட வரலாறு என்பதையும் ஜார்ஜ் மேயர் புரிந்து கொள்கிறார்.

தனி மனித, குல வரலாறுகள் மூன்று தலைமுறைக்கு மேல் கடத்தப்படுவதற்கு ஒருவர் வாழ்க்கை தனித்துவமாக அறியப்படும் நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கருதுவார்கள் என்பதும், மாறாக வரலாறு என்று ஆவணப்படுத்துவதில் மேலை நாட்டவர்க்கு வேறு கோணம் உள்ளது என்பதையும் இருவரும் உணர்ந்து மௌனமானார்கள் என்பதை இருவரின் உரையாடல் முற்றுப்பெற்று மௌனம் குடிகொண்டதன் மூலம் உணரலாம்.

எவரும் தனது மூதாதையர் வாழ்வு முறை வரலாறு குறித்து ஆராய்ந்தாலே பாரம்பரிய வரலாறு என்பது உருவாகும். ஆனால் தமிழர்கள் தங்களின் நடைமுறை வாழ்விற்கு அத்தேடலில் மூலம் ஆதாயம் எதுவும் கிட்டாது என்றால், தங்கள் முன்னோர் வரலாற்றை அறிந்து கொள்வதில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் தங்கள் பரம்பரை எந்தவகையில் ‘ஆண்ட பரம்பரை’ என்று ஆய்வதில் உள்ள இன்றைய அக்கறை இத்தகைய ஆதாயம் தேடும் ஓர் ஆய்வே, அவர்கள் வரலாற்றுக்குத் தரும் மதிப்பின் இப்பின்னணியில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

‘தனிமனிதர்களின் வாழ்வை அணுகும் முறை’ இருபண்பாடுகளிலும் வேறு வேறு என்பதை உலகின் கிழக்கு மற்றும் மேற்கு என்ற இரு பண்பாட்டிலும் வாழ்ந்தவர்களால் தெளிவாக அறியமுடியும். இதுவே இச்சிறுகதையின் மையக்கருத்தாக எடுத்தாளப்பட்டுள்ளது என்று கருதலாம். ஆனால் நம் நாட்டிலோ தெளிவாகத் தெரிந்திராத அந்தப் பாரம்பரியம் என்பதன் மேல்தான் சாதிக் கட்டுப்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு நகைமுரண். இதை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது நல்லது என்று வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் மேயர் மௌனம் காக்க முடிவெடுத்தார் என்று வாசிப்பவர் கோணமாக எடுத்துக் கொள்ள நேர்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. கதை இறுதியில் உரையாடுபவர்கள் இடையே ஏற்படுவதாகச் சுட்டப்படும் அந்த மௌனம் உண்மையை வெளிப்படையாகச் சுட்டாத பொருள் பொதிந்த மௌனம். ஆகவே பாரம்பரியம் என்று நம் மக்கள் பேசுவது பேசுவது எத்தகைய வெற்றுப் பேச்சு என்பது கசப்பான ஓர் உண்மைதான்.

சாதாரண மக்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் முறைகள் குறித்தும் நம்முடைய இலக்கியங்களில் வரலாற்றில் வெற்றிடங்கள் மிகுதி ஏன் என்பதை நினைவுபடுத்தும் சிறுகதை இது.



தமிழவன் – உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?
http://tamizhavan.com/blog/?paged=5&author=1



நன்றி: சிறகு
டிசம்பர் 11, 2021



#சிறகு, #திறனாய்வு, #Themozhi