Thursday, June 25, 2026

“விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” – நூல் அறிமுகம்

“இலக்கியத்தில் உள்ள அறிவியல் சுரங்கம்“

MJ பிரபாகர், 25/06/2026



 முனைவர் தேமொழி எழுதிய 
“விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” – நூல் அறிமுகம்


எழுத்தாளர் தேமொழி எழுதிய “விண்ணை நோக்கி ~ இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” என்ற நூல், தமிழ் இலக்கிய உலகில் பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளை வெளிக்கொணரும் ஒரு மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.

பண்டைய தமிழர்கள் வெறும் கற்பனையிலும் அழகியலிலும் மட்டும் திளைக்காமல், மிகச் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரிதலோடு வாழ்ந்தார்கள் என்பதை இந்நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

23 அத்தியாயங்களை கொண்ட இந்நூல் சங்க இலக்கியங்கள் (புறநானூறு, பரிபாடல், அகநானூறு போன்றவை) மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களில் பொதிந்துள்ள வானியல், புவியியல், உயிரியல் சார்ந்த அறிவியல் உண்மைகளை இன்றைய நவீன அறிவியலோடு ஒப்பிட்டு ஆராய்கிறது. முக்கியமாக, விண்வெளி மற்றும் பிரபஞ்சம் குறித்த தமிழர்களின் பார்வையை பிரதானமாக பதிவு செய்து உள்ளார்.

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்தும், வானியல் மற்றும் கோள்களான சூரியன், சந்திரன், விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் துல்லியமான கணிப்பு பற்றியும், தொல்காப்பியரின் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினப் பாகுபாடு குறித்தும், நில அமைப்பைப் பொறுத்து ஐந்திணைகளாகப் பிரித்த தமிழரின் சூழலியல் அறிவு குறித்தும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார்.

ஆசிரியர் தேமொழி, பழந்தமிழ் பாடல்களில் மறைந்திருக்கும் நவீன அறிவியல் கூறுகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
உலகம் முதலில் பேரொலியுடன் தோன்றி, பின் பெருங்காற்று, நெருப்புக்கோளம், தொடர்மழை என மாறி, இறுதியில் நிலம் உருவானதை விளக்குகிறது. இது இன்றைய நவீன அறிவியல் கூறும் புவித் தோற்றக் கொள்கையோடு அப்படியே ஒத்துப் போவதை நூல் சுட்டிக்காட்டுகிறது.

தானாக ஒளிரும் விண்மீன்கள்: புறநானூற்றில் விண்மீன்களை ‘நாண்மீன்’ (தானாக ஒளிர்பவை – Stars) என்றும், கோள்களை ‘கோண்மீன்’ (ஒளியைப் பிரதிபலிப்பவை – Planets) என்றும் பிரித்தறிந்துள்ளனர். எந்தவொரு நவீனத் தொலைநோக்கியும் இல்லாத காலத்தில் தமிழர்கள் ஒளியின் தன்மையை உணர்ந்திருந்ததை ஆசிரியர் வியந்து பாராட்டுகிறார்.

சூரியனின் இயக்கம், காற்றோட்டத் திசை மற்றும் எவ்வித ஆதாரமும் இன்றி ஆகாயத்தில் பூமி மிதக்கும் தன்மை போன்றவற்றைச் சங்கப் புலவர்கள் அளந்தறிந்தவர்கள் போலப் பாடியுள்ளதை யும் இந்நூல் விளக்குகிறது.

நூலாசிரியர் வெறும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், ஒவ்வொரு அறிவியல் கூற்றுக்கும் தகுந்த சங்கப் பாடல் வரிகளையும், அதற்கு இணையான நவீன அறிவியல் விதிகளையும் பக்கபலமாக வைத்துள்ளார். கடினமான அறிவியல் கோட்பாடுகளையும், பழந்தமிழ் இலக்கியச் சொற்களையும் சாமானிய வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் விளக்கியுள்ளார்.

மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் உயிரியல் மற்றும் வானியலில் சிறந்திருந்தனர் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது இந்நூல்.

மேலைநாட்டு அறிவியல் வரலாற்றோடு இன்னும் சற்று ஆழமான ஒப்பீட்டு ஆய்வை (Comparative Study) வழங்கியிருந்தால், இந்நூலின் தரம் சர்வதேச அளவில் இன்னும் உயர்ந்திருக்கும்.

எழுத்தாளர் தேமொழியின் “விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்” என்ற நூல், ‘தமிழ் இலக்கியம் என்பது வெறும் ‘கற்பனைக் கதம்பம்’ அல்ல, அது ‘அறிவியல் சுரங்கம்’ என்பதை நிரூபிக்கும் ஒரு காலக்கண்ணாடி. தமிழ் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அறிவியல் மாணவர்களும் படித்துப் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த படைப்பு இது.


நூலின் விவரங்கள்:
நூலின் பெயர்: விண்ணை நோக்கி: இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
ஆசிரியர்: முனைவர் தேமொழி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
விலை: ₹.180.00 மட்டுமே 
அறிமுகம் எழுதியவர்:  MJ பிரபாகர்

நன்றி : 
https://bookday.in/prof-themozhis-vinnai-nokki-ilakkiyathil-ulla-ariviyal-seithikal-tamil-book-reviewed-by-mj-prabakar/





# நூலறிமுகம், #MJ பிரபாகர், #bookday, #Themozhi, #அறிவியல், #அறிவியல்நூல்



Saturday, June 13, 2026

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் 


"திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" என்ற கோரிக்கை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களால் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நீண்ட நெடிய கோரிக்கையாகும். 

கோரிக்கையை முன்வைத்தோர்:
பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்: 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், இலக்கிய மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திருவள்ளுவர் தினம் போன்ற முக்கிய நாட்களில் இக்கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. 

அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுகள்: 
கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  கட்சி பாகுபாடின்றி தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் எனப் பலரும் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வக் கடிதங்கள் மூலமாகவும், அமைச்சரவை தீர்மானங்கள் மூலமாகவும் இக்கோரிக்கையை வைத்துள்ளனர். அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தில்லி நிதி ஆயோக் கூட்டத்தில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அரசை நேரிடையாக 2026இல் வலியுறுத்தியுள்ளார்.  

புகழ்முகங்கள் மற்றும் அறிஞர்கள்: 
உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து போன்ற பல இலக்கிய ஆளுமைகளும், அறிஞர்களும் பல்வேறு காலக்கட்டங்களில் பிரதமர்களுக்குக் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். 

நீதிமன்றப் பார்வை: 
தனிநபர் சிலர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இருப்பினும், இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியாது எனக்கூறி அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தாலும், அது இந்திய அளவிலான பன்மொழி பண்பாட்டுச் சூழலால் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இருப்பினும் அதற்கான சிறப்புத் தகுதிகள் மறுக்க முடியாதவை. 

திருக்குறள் "உலகப் பொதுமறை" என்று அழைக்கப்படுவதற்கு அதன் உலகளாவிய, காலத்தைக் கடந்த மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்களே முதன்மைக் காரணமாகும். மனித சமுதாயத்தின் வாழ்வியலுக்குத் தேவையான அறங்களை எவ்வித இனம், மத, குல, தேச வேறுபாடின்றிப் பொதுவான நோக்கில் இந்நூல் வழங்குகிறது. 

திருக்குறளின் உலகளாவிய முக்கியக் கருத்துக்களின் தொகுப்பு: 
1. பிறப்புரிமைச் சமத்துவம் -
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற குறள் மூலம் திருவள்ளுவர் மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்று அறிவுறுத்தினார்.  இனம், குலம், பிறப்பிடத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதை விடவும், அவர்களின் செயல்களின் சிறப்பே அவர்களை உயர்த்துகிறது என்று சமத்துவக் கொள்கையை அன்றே வலியுறுத்தினார்.

2. பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வை -
 "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"  என்பதன் வழியாக எதைப்பற்றியும் எவர் கூறினாலும், அதை அப்படியே ஏற்காமல் அதன் உண்மையான அர்த்தத்தை ஆராய்ந்து அறிவதே உண்மையான அறிவு என்கிறார்.  இந்தச் சிந்தனை நவீனக் காலத்தின் அறிவியல் பூர்வமான மற்றும் பகுத்தறிவுப் பார்வைக்கு மிக நெருக்கமானதாகும். 

3. மதச்சார்பின்மை மற்றும் பொதுமைத் தன்மை - 
திருக்குறள் எங்கும் எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளின் பெயரையோ, மதக் கோட்பாட்டையோ, வழிபாட்டு முறையையோ குறிப்பிடவில்லை. கடவுளை ஒரு பொதுவான பேராற்றலாகவும், "அறவாழி அந்தணன்" (அறக்கடலாக விளங்கும் இறைவன்) என்றும் மட்டுமே உருவகப்படுத்துகிறார்.  இதனால், உலகிலுள்ள அனைத்து மதத்தினரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் கூடத் திருக்குறளைத் தங்களுக்குரிய அறநூலாக ஏற்க முடிகிறது. 

4. உலகளாவிய நற்பண்புகள் - 
வள்ளுவர் அன்புடைமை மற்றும் ஒழுக்கம் ஆகியனவற்றை மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமாக அன்பை முன்னிறுத்துகிறார். ஒழுக்கமே ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.  அத்துடன்; துன்பம் தராமை /இன்னா செய்யாமை(அகிம்சை) என்ற நல்லொழுக்கத்தை, தனக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் திரும்பத் துன்பம் செய்யாமல், அவர்களுக்கு நன்மையே செய்வதை உலகளாவிய வகையில் ஏற்கக்கூடிய நெறியாக வள்ளுவர் போதிக்கிறார். 

5. சிறந்த மேலாண்மை மற்றும் அரசியல் கோட்பாடுகள் - 
மக்களுக்கு நல்லாட்சி வழங்குதல் குறித்தும் குறள் வலியுறுத்துகிறது.  ஒரு நாட்டின் தலைவர் எப்படிக் குடிமக்களைக் காக்க வேண்டும், எப்படி வரி வசூலிக்க வேண்டும், எப்படி நீதி வழங்க வேண்டும் என்பதை 'பொருட்பாலில்' மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார்.  கால மேலாண்மை, சுற்றந்தழால் மற்றும் நட்பு அதிகாரங்களில் இன்றைய பெருநிறுவனங்கள் மற்றும் நவீன மேலாண்மைக் கல்வி கற்பிக்கும் திட்டமிடல், தகுதியான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், காலத்தை அறிதல் போன்ற உத்திகள் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 

உலக அறிஞர்களின் பார்வையில் திருக்குறள்:
மகாத்மா காந்தி: திருக்குறள் தனது ஆன்மாவைத் தொட்ட ஓர் உன்னதமான அறநூல் என்று குறிப்பிட்டுள்ளார். 

லியோ டால்ஸ்டாய்: வன்முறையற்ற "அகிம்சை" என்ற உயர்ந்த கருத்தைத் தான் ஜெர்மன் மொழி திருக்குறள் வாயிலாகவே அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

திருக்குறள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மனிதனே மனிதனுக்குக் கூறிய உன்னத அறிவுரையாக இருப்பதால், அது இன்றுவரை உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது. 



மின்தமிழ் 
ஜூன் 13, 2026 


 #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi