பிக்கோலிம் போர்
முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?
படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை. காரணம், அப்படி ஒரு போரே நடந்தது இல்லை. ஆனால் நடந்ததாக ஒரு மோசடி விக்கிப்பீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர் நடந்ததாக ஒரு கட்டுக் கதை. 1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிப்பீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது. இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுப் போர் நின்றது. உடன்படிக்கையின் விளைவாகச் சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது. இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு எனக் கண்டு கொள்ளப் பட்டு, 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை. தற்பொழுது விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).
அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப் பதிவுகள் இந்தப் பதிவினை விடவும் அதிகக் காலம் வலம் வந்திருக்கிறது. ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.
மோசடிக் கட்டுரைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த படங்கள்:
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg
http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg
இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கிக் கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது. அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிந்தனைக்கு: கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று மற்றும் இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே. புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.
எனவே; “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக … இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை. ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

விக்கிப்பீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, முன்னர் அதனை நூலாக வெளியிட்டு இருந்தது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை இதுபோல விற்பனை செய்வதைக் காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது. ஆர்வக் கோளாற்றின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஓர் ஆறு பக்கம் மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது. மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுக்கீசியர்கள் என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது. பிக்கோலிம் போர் என்ற இக்கட்டுரை மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விக்கிப்பீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

முன் குறிப்பு:
*** இது விக்கிப்பீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்***.
பிக்கோலிம் புளுகு:
பிக்கோலிம் போர் என்பது 1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுக்கீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்சுக்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2]. போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ் (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].
வரலாற்றுப் பின்னணி:
வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்ச்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].
இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603க்கும் 1639க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுக்கீசியர்களால், தங்கள் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்ச்சுக்கீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர் **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்ச்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதியில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].
டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஓர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுருவுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்குச் சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்ற பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].
மோதலின் பாதையில்:
மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்ச்சுக்கீசியத் தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].
இந்தத் தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாகத் தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதச்சார்பின்மை கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாகக் கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்தத் தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].
1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடைக் காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்ச்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திடாததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரதிநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
இப்ரம்பூர் மோதல்:
தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்ச்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராட்டியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக மாறி அவர்களுக்கே பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].
மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்னம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்தச் சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].
மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த தகவலின் படி போர்ச்சுக்கீசியப் படை அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்னம் பகுதியின் போர்ச்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்படைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்டியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ்கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினைப் பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].
ஆகஸ்ட் 1640ஆம் ஆண்டு நடந்த போர்ச்சுக்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிகச் சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்ச்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்குச் செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].
ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்ச்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஓர் ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்ச்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இப்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்ச்சுக்கீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இப்ரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].
தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ்கோட காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சம அளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்துத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கிப் பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுப் பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினைக் கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].
ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இப்ரம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளைப் போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினைச் செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].
மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்குப் பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்பப் போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.
மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினைச் சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர்த் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].
சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாகப் போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுக்கீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].
மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்:
சப்போரா ஆற்றின் வடகரையில் போர்ச்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, இந்தத் தகராற்றின் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வரப் போர் ஒன்றே உதவும் என்று இருதரப்பினரும் கருதினர் [12]. மராட்டியர்கள் இன்னமும் போர்ச்சுக்கீசியர்கள் இப்ரம்பூர் நோக்கித் தங்களது படைகளை நகர்த்தி மராட்டிய எல்லையை ஊடுருவ முயல்வதாக எண்ணினார்கள். போர்ச்சுக்கீசியர்களோ கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒரு பாதுகாப்பான அரணாக உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இதற்கு அவர்கள் கோலாப்பூரையும், கோலாப்பூருக்கு வடக்கில் உள்ள பகுதியையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது தேவையாயிருக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் போர்ச்சுக்கீசியர்களின் ஒரு திட்டமா அல்லது வெறும் வதந்தியா என்பது சரிவர உறுதியாகத் தெரியவில்லை [12]. பேர்னம் (Pernem) பகுதியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மராட்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் பேர்னம் பகுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை இருதரப்பினரும் அறிந்திருந்தார்கள் [11] [13]. மராட்டியர்கள் பேர்னமை பாதுகாக்கக் கருதியிருந்த தங்களது ஆரம்பக் காலத் திட்டத்தைக் கைவிட்டு, பிக்கோலிம்மின் தென்பகுதிக்குத் தங்கள் படையை நகர்த்தினர் [9].
பிக்கோலிம் படைகளால் நன்கு பலப்படுத்தப்படா விட்டாலும், மையமாகவும், பான்ஞ்சிம் (Panjim) இல் இருந்து எளிதில் அடையக்கூடிய வழித்தடத்திலும் இருந்தது. மராட்டியர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், வடக்குப் பகுதியில் இருந்த நிலவழியாக, பரந்த வயல் வெளிகள் வழியாக, சப்போரா ஆற்றின் தென்பகுதியிலிருந்து பிக்கோலிம்மிற்குள் நுழைந்தனர் [9]. இவ்வாறு மராட்டியர்கள் பிக்கோலிம்மில் நுழைந்ததை அப்பகுதி வாழ் மக்கள் அறிந்திருக்கவில்லை, இத்தகவல் தெரியவராமல் அவர்கள் ஏமாற்றப்பட்டோ அல்லது மராட்டியப் படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அத்தகவல் மறைத்தோ வைக்கப் பட்டிருந்தது [9].
ஆகஸ்ட் மாத முடிவில் மராட்டியக் காலாட்படை கன்சர்பால் (Kansarpal) மற்றும் லட்டம்பர்செம் (Latambarcem) நகர்களையும், மற்றொரு சிறிய படை அருகிருக்கும் ஸல் (Sal) பகுதியையும் தாக்கியது. இந்த இரு ஊர்களும் முக்கியமான இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மையங்களாகும் [9] [15]. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அப்பகுதி அதிக எதிர்ப்பினைக் காட்டவில்லை. அதனால் போரில் மிகக் குறைவான இழப்புகளுடன் அப்பகுதியைக் கைப்பற்றிய மராட்டியப் படைகள், அதனை மேலும் பலப்படுத்தி தங்கள் படைத்தளமாக மாற்றிக் கொண்டது [9]. சந்தடியின்றி நிகழ்ந்த இந்த மராட்டியப்படையின் ஆக்கிரமிப்பு பிக்கோலிம் நகரில் இருந்த நிகொல டி மெல்லோ (Nicolau de Mello) வின் கவனத்திற்கு வர ஒரு வாரக் காலம் ஆனது. ஆனால் வாஸ்கோட காமா நகருக்கும், இப்ரம்பூர் மற்றும் அலோர்னா கோட்டைப் பகுதிகளில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகளுக்கும் இத்தகவல் கிடைக்க மேலும் அதிகக் காலம் ஆனது [9].
மராட்டியப்படை, தோடமார்க் (Dodamarg) பகுதியில் இருந்து பார்டஸ் (Bardez) ன் எல்லைப் பகுதி வரை சென்ற நெடுஞ்சாலையையும், அச்சாலைக்கும் சப்போரா ஆற்றிற்கும் இடையே உள்ள அனைத்து இடைப்பட்ட பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது [9]. செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், அலோர்னாவின் மேற்குப் பகுதியில் இருந்த பாலம் வழியாகப் போர்ச்சுக்கீசியப் படையினர் சப்போரா ஆற்றைக் கடந்தனர் [9]. அவர்கள் உளவு பார்த்த பொழுது மராட்டியக் காலாட்படைகள் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரோந்து செய்வது தெரிய வந்தது, இதனால் நள்ளிரவில் போர்ச்சுக்கீசியப் படை ஆற்றைக் கடந்தது. இரவில் நடக்கும் ஆயுதத் தாக்குதல் திறனற்றதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது [9]. ஓசையின்றி முன்னேறிய போர்ச்சுக்கீசியப் படையினர் கன்சர்பாலுக்கு வடக்கில் இருந்த மராட்டியர்களின் படைத்தளத்தை அதிகாலையில் தாக்கினர். எனினும் இறுதியில் மராட்டியப் படை போர்ச்சுக்கீசியர்களைப் புடை சூழ்ந்த பொழுது வேறு வழியின்றி அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர் [9].
போர்ச்சுக்கீசியர்களின் இந்தத் தோல்வி, போராட்டத்தில் ஒரு மிக முக்கியத் திருப்பமாக மாறியது. அவர்களுக்குச் சாதகமாக இருந்த நிலை பறிபோனதுடன், ஆயுதங்களையும் இழந்தனர். மராட்டியர்களை முன்னர் கோவாவில் இருந்து விரட்டிய படைகளும் அலோர்னா கோட்டையில் இருந்த தங்கள் ஆயுதக் கிடங்கைக் கைவிட நேர்ந்தது. மராட்டியர்கள் மீண்டும் எல்லைப் பகுதியில் இருந்து மற்றொரு தாக்குதலை மாலிங்கும் (Maulinguem) மீது நிகழ்த்தினார்கள். அப்பகுதியில் இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அவர்கள் மராட்டியர்களை ஏற்றுக் கொண்டதாலும் மீண்டும் தாக்குதல் சுலபமாக மராட்டியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது [9].
போர்ச்சுக்கீசியர்கள் பிக்கோலிம், லம்கவோ (Lamgao), முல்கவான் (Mulgaon), வதாடியா (Vathadeo) மற்றும் மராட்டியப் பேரரசிற்கும் சட்டாரி (Satari) க்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் அவர்களது படைகளை நிலை நிறுத்தினர் [9]. மராட்டியர்களுக்கு பிக்கோலிம் மக்களிடம் இருந்த ஆதரவை நன்கறிந்திருந்த அவர்கள் பிக்கோலிம்மில் இருந்த மராட்டியர்களை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்தனர். போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி, பாதுகாப்பினைப் பலப்படுத்தி இருந்த ஊர்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் அவை மராட்டியர்கள் வசம் இழக்கப்படும் வாய்ப்பும் குறைவாக இருந்தது [9]. அக்டோபரில் வதாடியா தக்கப்பட்டபொழுது மீண்டும் போர் துவங்கியது [9].
வதாடியா போர்:
வதாடியாவிற்காக நிகழ்ந்த போர் விரைவில் முடிந்துவிட்ட ஒன்று என்றாலும் கோவாவில் போர்ச்சுக்கீசியர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது அது. வதாடியா அமைந்திருந்த இடத்தின் முக்கியத்தத்துவத்தினால் மராட்டியர்கள் வதாடியாவைக் கைப்பற்றுவது பிக்கோலிம் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும் எனக் கருதினார்கள். போர்ச்சுக்கீசியர்கள் தேவையான பாதுகாப்பை அந்நகரைச் சுற்றி அமைத்திருந்தபோதிலும், அந்நகருக்கென நிரந்தரப் படை பாதுகாப்பிற்காக இல்லாமல் இருந்தது [9]. வதாடியாவைக் காக்க ‘ஆல்பர்ட் பின்ட்டோ’ பேர்னமில் இருந்து பிக்கோலிம்மிற்கு வரவழைக்கப் பட்டார் [9]. எதிர்பார்த்தவாறே மராட்டியர்கள் வடக்கிலிருந்து வதாடியாவைத் தாக்கினர். போர்ச்சுக்கீசியர்கள் உடனடியாகப் பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தனர் [9]. இத்தாக்குதலால் மராட்டியக் குதிரைப்படை சிதறுண்டது. தொடர்ந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைக்கும் சிறிது இழப்பு நேர்ந்தது [9]. போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கித் தாக்குதலின் குறி திறம்பட அமையாததால் மராட்டியக் குதிரைப்படையை அழிக்க முடியாது போனது [9].
போர்ச்சுக்கீசியர்கள் வதாடியாவின் வடக்குப்புற எல்லையைக் காக்கும் வகையில் படைகளை நிறுத்தினர். குதிரைப்படைகள் போர்ச்சுக்கீசியர்களை நெருங்கித் தாக்கி இழப்புகளை ஏற்படுத்த உதவும் வகையில் மராட்டியக் காலாட்படை அவர்களை எதிர்கொண்டது [9]. ஆனால் மோதல் துவங்கியவுடன் போர்ச்சுக்கீசியர்கள் மராட்டியர்களின் பாதுகாப்பு வளையத்தை விரைவில் உடைத்து மராட்டியர்களைத் தாக்கி அவர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினர். இதன் விளைவாக மராட்டியர்களின் போர்த்திட்டம் சிதைந்ததுடன் அவர்களது காலாட்படைக்கும் அதிக இழப்பு ஏற்பட்டது. படைத்தளபதிகள் கொடுத்த திறனற்றக் கட்டளைகளினால் மராட்டியக் குதிரைப்படை போர்ச்சுக்கீசியர்களின் எதிர்த்தாக்குதலைத் தடை செய்யக் கால தாமதம் ஆனது [9].
வதாடியாவின் வட முனையில் நிகழ்ந்த இப்போர்தான் பிக்கோலிம் போரில் தீவிரமான ஒன்று. தொடர் தீவிரத் தாக்குதல்களும், இரு பக்கங்களுக்கும் ஏற்பட்ட சம அளவு இழப்புகளும் தாக்குதல் நிகழ்ந்த நாளில் பெரும்பான்மையாக இருந்தது [9]. இறுதியில் இருள் கவிழத் தொடங்கியதும் ஆல்பர்ட் பின்டோ தனது போர்ச்சுக்கீசிய வீரர்களை முன்னேறுவதை நிறுத்துமாறும், வதாடியாவிற்குத் திரும்புமாறும் கட்டளை இட்டார் [9]. இப்போரின் இழப்பினைப் பற்றிய தகவல்களை வரலாற்றில் மராட்டியர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ குறிப்பிடாவிட்டாலும் இழப்புகள் அதிகம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது [9]. இப்போரில் நிகழ்ந்த இழப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானித்துவிடக் கூடும் என்பதினால் இரு தரப்பினரும் தங்களுக்கு நேர்ந்த அதிக இழப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்கியிருக்கலாம் என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].
போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிப் படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு மறுநாள் மராட்டியர்கள் மீண்டும் விடிவதற்கும் முன்னரே வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர்[9]. அதிகாலையில் தாக்குதல் வெற்றிகரமாகத் துவங்கினாலும் மீண்டும் மராட்டியர்களின் திட்டம் தோல்வியுற்றது. ஆல்பர்ட் பின்ட்டோவின் ராணுவத் திறமை மராட்டியர்களின் சாதக நிலையை முறியடித்து அவர்களை வடக்கு நோக்கித் துரத்தியது. ஆல்பர்ட் பின்ட்டோவின் அணுகுமுறையின் காரணமான திறமையான வழிநடத்துதலால் போர்ச்சுக்கீசியப் படைகளுக்குக் குறைவான சேதம் விளைந்தது [9]. ஆனால் மராட்டியக் குதிரைப்படையினர் திறமையாகத் தெற்கு நோக்கி முன்னேறி நகரில் இருந்த போர்ச்சுக்கீசியப் படையினரையும் தாக்கத் துவங்கினர் [9]. மராட்டியக் குதிரைப்படையினரின் தீவிரத் தாக்குதலால், போர்ச்சுக்கீசியர்களின் பெரும்பான்மையான படை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி வதாடியாவில் சரணடையும் நிலை ஏற்பட்டது [9].
போரின் நிலையை உணர்ந்த ஆல்பர்ட் பிளேட்டோவிற்குக் கோபம் ஏற்பட்டாலும், வெள்ளை நிறச் சமாதானக் கொடியை உயர்த்தி வதாடியாவிற்குள் பின்வாங்க நேர்ந்தது [9]. ஆனால் படைகள் பின்வாங்குதல் ஆல்பர்ட் பின்ட்டோவின் திறமையின் காரணமாக ஒழுங்குமுறையான கட்டுப்பாட்டுடன், படைகளின் இழப்பைக் குறைக்கும் வகையில் இருந்தது. இக்காரணத்தினால் பின்வாங்கி நகருக்குள் நுழைய இரவாகிவிட்டது [9]. மராட்டியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமையாகத் திட்டமிடப்பட்டு ஆல்பர்ட் பின்ட்டோவின் படைகளைத் தாக்கத் தயாரான நிலையில் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர் [9]. இவ்வாறு படைகள் நகர்த்தப்பட்டதால் மராட்டியர்களின் குதிரைப் படை வதாடியாவின் வடக்குப் பகுதிக்குத் தள்ளப்பட்டது. இரு தரப்பினரும் வெற்றி உறுதி என நம்பியதால் போர் நள்ளிரவு வரை தொடர்ந்தது [9]. ஆனால் இறுதியில் சோர்வடைந்த போர்ச்சுக்கீசியப் படையினர் நகரின் தென் பகுதிக்குப் பின்வாங்கிய பின்பு அப்பகுதியைப் பலப்படுத்திக் கொண்டு, நகரின் வட பகுதியை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றடையுமாறு விட்டு விட்டனர் [9].
இவ்வாறு ஊர் இரண்டுபட்ட பிறகு மராட்டியர்கள் குடிமக்களை நகரின் இருபகுதிகளுக்கும் தடையின்றிப் போய் வர அனுமதித்தனர். மராட்டியர்களின் அடிப்படை நோக்கத்தை உணர்ந்த ஆல்பர்ட் பின்ட்டோ ஊரடங்குச் சட்டம் போன்ற முறையினை அமல்படுத்தி, தனது படையின் ஒரு பகுதி வீரர்களை நகர மக்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினார். குறிப்பாக உயர் ஜாதி இந்துக்கள் எனப் பின்புலம் கொண்ட பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர் [9]. இக்குடிமக்கள் நகரின் வடபகுதிக்குச் சென்று மராட்டியப் படையைச் சந்தித்து, மராட்டியர்களுக்கு ஆதரவாகச் செயல் படுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டது [9]. இந்தச் சந்தேகத்தில் சிறிது உண்மையும் இருந்தது. மறுநாள் மதியம் இருதரப்பினர் படையும் இக்கட்டான செயலிழந்த நிலையில் இருக்கும் பொழுது, வடபகுதியில் இருந்து வந்த குடிமக்களின் கூட்டமொன்று போர்ச்சுக்கீசியர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடிக்கத் துணிந்தது. இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதும், கடினமான முறையில் தண்டிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, அவர்களின் துரோகச் செயலுக்காக ‘வாஸ்கோடா காமா’ நகருக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர் [9]. எனினும், போர்ச்சுக்கீசியர்களின் இந்த நடவடிக்கை வதந்தியாக விரைவில் மக்களிடையே பரவி, குடிமக்களிடையே அமைதி குறைந்த காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் குடிமக்கள் தென்பகுதிக்கு வருவதையே தடை செய்துவிட்டனர்[9] [11]. இந்நிலை ஏற்படக் காரணம் மராட்டியர்கள் வதந்திகளை மிகைப் படுத்தியதால் ஏற்பட்டதன் விளைவு என ‘டேவிட் டிஸோசா’ கருதுகிறார் [11].
நிலைமை எதுவாயினும் நகரின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கு இடையே இருந்த இருவேறுபட்ட இறுக்கமான சூழ்நிலை மக்களிடையே அமைதியின்மையை அதிகப்படுத்தியது [9]. மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரின் வடபகுதியில் இயல்பு நிலை நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தென்பகுதியில், வசதிபடைத்த, சலுகை அளிக்கப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான குடிமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது [9]. மறுநாள் மராட்டியர்கள் தங்கள் காலாட்படையை நகர்த்தி போர்ச்சுக்கீசிய்ர்களைத் தாக்கியவாறு முன்னேறத் துவங்கினர். போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் படைகளை ஒருங்கிணைத்து பதிலுக்குத் தாக்கி, மராட்டியர்களின் காலாட்படையைப் பின் வாங்கச் செய்தனர் [9]. மராட்டியர்கள் மேலும் வேகமாக முன்னேறி இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து குடிமக்களிடம் அவர்கள் விடுதலை அடைந்துவிட்டனர் எனக் கூறுவதில் நேரத்தைச் செலவழித்தனர் [9]. போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்த பின்பு குடிமக்களை அவர்கள் வீட்டிற்குள் செல்லுமாறு கட்டளை இட்டனர்[9]. வீட்டிற்குள் செல்வதற்குப் பதிலாகக் குடிமக்கள் போர்ச்சுக்கீசியப் படையை எதிர்த்து கலவரம் செய்யத் தொடங்கியதால் வதாடியா நகரின் தென்பகுதியின் கட்டுப்பாடு நிலைகுலையத் துவங்கியது [9]. இவ்வாறு போர்ச்சுக்கீசியப் படை கலவரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதில் தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, இரவில் மீண்டும் மராட்டியர்கள் எதிர்பாராவிதமாகத் தாக்கத் தொடங்கினர். விரைவாகவும் தீவிரமாகவும் நிகழ்த்திய தாக்குதலின் முடிவில் மராட்டியர்கள் நகரின் தென்மேற்கில் உள்ள மிகச் சிறிய பகுதிக்குள் போர்ச்சுக்கீசியர்களை ஓரங்கட்டினார்கள் [9].
ஆல்பர்ட் பின்ட்டோ தனது படையினரை வதாடியா நகரின் தென்பகுதியில் உள்ள சாலைக்குப் பின்வாங்கச் செய்தார். இதன் மூலம் மறுநாள் காலையில் நகரை முற்றுகை இடலாம் என்பது அவர் திட்டமாக இருந்தது [9]. போர்ச்சுக்கீசியப் படையினருக்கு வதாடியா நகரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ‘வாஸ் கோடா காமா’ நகரில் இருந்து புதிய கட்டளைகள் வந்தன [9]. இரு நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கீசியர்கள் நகருக்குள் செல்லும் விநியோக வழிகளைத் துண்டித்தனர் [9]. அவர்கள் மக்களை நகரெல்லையில் இருந்த வயல்களுக்கும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் எதிர்பாராத முற்றுகை போன்ற சூழ்நிலைக்குத் தயாராகாத மக்கள் உணவின்றித் துன்புற்றனர் [9]. நவம்பர் மாதத் தொடக்கத்தில் மக்கள் வதாடியா நகரில் இருந்து வெளியேறி போர்ச்சுக்கீசியர்களுக்கு அடிபணிந்தனர். அவர்களில் சிலர் துரோகியர்கள் எனக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தவிர்த்து நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப் பட்டவர்களில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கப் போர்ச்சுக்கீசியப் பிரிவினராவார்கள் [9] [11] [16].
எழுச்சியின் துவக்கம்:
மராட்டியர்கள் மேலும் படைகளை அனுப்பிப் போரிட இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் விரைவாகவும் திறம்படவும் முன் நிகழ்த்திய போர்களுக்கு எதிர் மாறாக, இப்போரில் போர்ச்சுக்கீசியர்களின் அதிநுட்பப் போர்க்கருவிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அதிகக் காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது [9]. மராட்டியர்களின் படை வதாடியாவில் முற்றுகையில் சிக்கித் தவித்தது. அவர்கள் தங்களுக்கு அதிக இழப்புகளைத் தரும் நடவடிக்கைகளைத் தவிர்க்க எண்ணி சூழ்நிலை சாதகமாக மாறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் [9].
ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் வதாடியா நகரில் வாழ்ந்த இந்துக்களைக் கைது செய்ததும், அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அருகில் உள்ள கோவாவின் கிராமப் பகுதிகளுக்கு வெகு வேகமாகப் பரவியது [16]. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர்களின் விருப்பத்திற்கு மாறாக மராட்டியர்களுடன் இணைந்த வதாடியா மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் உருவெடுத்து கதைகள் பரவ ஆரம்பித்தது [11]. இப்ரம்பூர் நகரில் முதல் பெரிய எதிர்ப்பு தோன்றியது. இப்ரம்பூர் முதலில் மராட்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்பொழுது அவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் பலத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள் [9]. இம்பரம்பூர் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு போர்ச்சுக்கீசியப் படைகளை எதிர்க்க முனைந்தார்கள். ஆயுதமற்ற கலகக்காரர்கள் நிகழ்த்திய இந்த எதிர்ப்பை, போர்ச்சுக்கீசியர்கள் வானை நோக்கிச் சுட்டுப் பலரைக் கதிகலங்கச் செய்தும், அடங்காது தொல்லைகள் கொடுத்தவர்களைச் சிறையிலடைத்தும் சுலபமாகக் கலவரத்தை அடக்கி நகருக்கு அதிகம் சேதம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் [9]. இப்ரம்பூருக்கு வடக்கில் இருந்த அன்கோனம் (Anconem) நகருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது [9].
எனினும், அலோர்னா கோட்டைக்கு வடக்கில் உள்ள தற்றாடிங்கம் (Tatradingam) என்ற குக்கிராமத்தின் மக்கள் கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்று, போர்ச்சுக்கீசியர்கள் பேர்னம்மை (Pernem) மராட்டியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்தார்கள், இதன் விளைவாகச் சிறிய சண்டையும் நிகழ்ந்தது [9]. அத்துமீறி கோட்டைக்குள் நுழைந்த கிராம மக்களிடம் போர்ச்சுக்கீசியப் பிரதிநிதிகள் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது இராணுவ தளத்தின் மீது நிகழ்த்தப் பட்ட அத்துமீறிய ஊடுருவல் என்பதால், கோட்டையின் தளபதி மக்களைத் தாக்க முடிவெடுத்து மக்களில் சிலரைக் காயமுறவும் செய்தார் [9]. அவர் கட்டளையின் கீழ் அதி உற்சாகமாகத் தாக்கிய படையினர் மக்களில் பெரும்பகுதியினரை மரணக் காயங்கள் ஏற்படும் அளவிற்குத் தாக்கினர். காயமடைந்தோரால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் இயலாது போனது [9]. டி ஆல்பெகுயிர்கேவும் (De Albequerque) படைத்தளத்தைப் பாதுகாக்க இத்தாக்குதல் அத்தியாவசியம் என்ற கண்ணோட்டத்துடன் இந்தத் தாக்குதலை அணுகியதால், இந்த வன்முறையை அவரும் கண்டிக்கவில்லை[9].
பிக்கோலிம் நகர மக்கள் டி மெல்லோ (D’Mello) தங்கியிருந்த அரசு மாளிகையைச் சூழ்ந்துகொண்டு இந்தப் படுகொலைகளை நிறுத்தச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள் [9]. ஆனால் டி மெல்லோ சர்ச்சைக்குரிய விதத்தில் படைகளிடம் நகரில் ஊரடங்கு உத்தரவை நிறைவேற்றக் கட்டளை இட்டார் [9]. இந்த ஊரடங்கு உத்தரவு பிக்கோலிம்மின் பிற பகுதிகளுக்கும் அதிகப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டது [9]. சிரிகவோ (Sirigao) பகுதியில் துவங்கிய மற்றொரு புரட்சி எழுச்சி பிக்கோலிம் பகுதி முழுமையிலுமே (போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிய பகுதிகளில்) அவசர நிலைப் பிரகடனத்தை அறிவிக்கும்படி செய்தது[9]. பேரினமின் கிழக்குப் பகுதியும் இராணுவத்தின் அவசரக்காலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது [9].
டிசம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கும் பொழுது, பார்டெஸ் (Bardez) நகரின் ட்ராவிண்டா (Dravinda) பகுதியில், ஐந்திலிருந்து பத்து இந்துக்கள் அடங்கிய ஒரு குழுவினர் நகரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் கோவாவைச் சுதந்திரமடையச் செய்து மராட்டியர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்கள் [11]. இத்தாக்குதல் மோசமான பழிவாங்கும் எதிர் விளைவை ஏற்படுத்தியது. போர்ச்சுக்கீசியர்கள் இந்த ட்ராவிண்டா கலகக் கும்பலைச் சுற்றி வளைத்தனர். இவர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்களையும், இப்போராட்டக் குழுவினரையும் தண்டிக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கிலிட்டனர் [11].
புத்தாண்டு பிறந்ததும், போர்ச்சுக்கீசியர்கள் மவுலிஞ்சியம் (Maulinguem) பகுதியில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிறு பகுதியைத் தாக்கினர் [9]. வெற்றிகரமான இத்தாக்குதலின் இறுதியில் அதிக இழப்பின்றி நகரைக் கைப்பற்றினர் [9]. மீண்டும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி மேலும் சில குடிமக்களைக் கைது செய்தனர் [9]. பிக்கோலிம்மில் தாங்கள் இழந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் போர்ச்சுக்கீசியர்கள் முன்னேறினார்கள். மராட்டியப்படைகள் தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் செல்லத் தொடங்கியதும் கோவாவை விட்டு வெளியேற நேர்ந்தது[9]. எனினும், மேலும் பல மராட்டியப் படையினர் எல்லையில் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தனர் [9]. அந்நிலையில் கோவாவில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே பகுதி வதாடியா மட்டுமே [9]. அங்கும் மராட்டியப் படை இரண்டு மாதங்களாக முற்றுகைக்குக் கீழ் இருந்ததால் தீவிர மராட்டிய ஆதரவாளர்களும் அமைதியை இழக்கத் துவங்கினர் [9].
சமாதான உடன்படிக்கை:
வதாடியாவில் மராட்டியர்களின் உணவுக் கிடங்குகள் போர்ச்சுக்கீசியர்களால் நாசப்படுத்தப்பட்டது, இது அவர்கள் உறுதியைக் குலைக்கும் இறுதிப் பேரிடியாக இறங்கியது. எனினும் மராட்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வதாடியா நகர மக்கள் பட்டினி கிடந்து மரணத்தைத் தழுவும் அவலத்தை விரும்பாததால், 1641 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெள்ளைக்கொடியை உயர்த்தி சமாதானத்தைத் தெரிவித்துச் சரணடைந்தார்கள் [9]. முதலில் இந்த நடவடிக்கையைச் சந்தேகித்த போர்ச்சுக்கீசியர்கள் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாக நகரில் இருந்து வெளியேறிய மராட்டியப் படைகள் எந்த விதத் தீங்கும் இழைப்பதாகத் தெரியவில்லை [9]. போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் பங்கிற்கு, மராட்டியப் படையினர் நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதித்தனர். உடனடியாகத் தங்கள் ஆயுதங்களை ஒப்புவிக்காத மராட்டியப் படையினரை மட்டுமே அவர்கள் கைது செய்தனர் [9]. மராட்டியப் படை வீரர்கள் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்க எண்ணியிருந்தாலும் பலநாள் பட்டினியினாலும், மனவுறுதி குலைந்த நிலையிலும் மிக எளிதில் போரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என ஸ்ரீநிவாசன் வசந்தகுலன் கருதுகிறார். போர்ச்சுக்கீசியர்கள் மிக விரைவில் படைகளைப் பலப்படுத்தியதால் மராட்டியர்களைவிடப் போர்ச்சுக்கீசியப் படையினரின் எண்ணிக்கை நகரில் அதிக அளவு இருந்தது [9].
பிப்ரவரி மாதத் துவக்கத்தில் மராட்டியப் படைகள் இப்ரம்பூருக்குள் நுழைந்தது. ஆனால் இம்முறை அவர்கள் உடன்படிக்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைத் தெரிவித்தனர். மராட்டியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மராட்டிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்தனர் [9]. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியே டி’ ஆல்பெகுயிர்கேவை நேரில் சந்தித்து சமாதான உடன்படிக்கைக் கோரிக்கைகளைக் குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அந்த உடன்படிக்கையின் படி; மராட்டியப் பேரரசுக்கும் போர்ச்சுக்கீசியர்களின் கோவாவிற்கும் இடையிலான எல்லையையும், அருகில் உள்ள சிற்றரசுகளின் எல்லைகளையும் மராட்டியர்கள் அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கப் பட்டது [9]. பதிலுக்குப் போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் வடபகுதியின் எல்லையை விரிவுபடுத்த முயல்வதில்லை எனவும் முடிவானது [9].
இந்த உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணங்கள் பற்பல [11] [13]. மராட்டியர்கள் வதாடியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களது படைவீரர்களை மீட்டு மீண்டும் தங்கள் படையில் இணைத்துக் கொள்ள விரும்பினர். மராட்டியர்கள் தாங்கள் முன் நினைத்திருந்ததைப் போல கோவாவை விரைவான தாக்குதல் மூலம் கைப்பற்றி விடலாம் என்பது இனி நிச்சயமற்ற நிலை என அறிந்திருந்தனர். அத்துடன் முதலில் திட்டமிட்டபடியே மராட்டியப் பேரரசின் தென் எல்லையை மட்டும் பாதுகாப்பதே போதுமானது என்ற முடிவுக்கும் வந்தனர். இதனால் தெற்கெல்லையில் போரைத் தொடர அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் மூலம், இரு அரசுகளுக்கும் இடையே இருந்த மராட்டியர்களின் தெற்கெல்லை முழுதிலுமே அமைதியான முறையில் பாதுகாப்பினைப் பெற வழி கிடைக்கும் [11].
போர்ச்சுக்கீசியர்களின் கண்ணோட்டத்தில், பிக்கோலிம்மிலும் பேரினமிலும் ஏற்பட்டது போன்ற மக்களின் புரட்சிகரமான எழுச்சி விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவி, அந்தச் சூழ்நிலை மராட்டியர்களுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்ற அதிகப்படியான அச்சம் இருந்தது. அத்துடன் அவர்களுக்கு மராட்டியர்கள் எல்லைப்பகுதியில் படைகளைக் குவித்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது . ஒரே சமயத்தில் மக்களின் எழுச்சிப் போராட்டமும், எல்லையிலிருக்கும் மராட்டியப் படைகளின் தாக்குதல்களும் நிகழ்ந்தால் கோவாவின் வட பகுதி முழுமையையுமே மராட்டியர் வசம் இழக்க நேரிடலாம். அத்துடன் பான்ஞ்சிம் (Pangim) மற்றும் வாஸ்கோட காமா நகர்களின் பாதுகாப்பான நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் புரிந்திருந்தது [9] [11]. ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிகழ்ந்த பொழுதே மராட்டியர்களும் தங்களால் இப்ரம்பூரை எந்தவித எதிர்ப்புமின்றி தாக்க முடியும் என்பதையும் போர்ச்சுக்கீசியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர் [11].
ஒரு சில கோவா குடிமக்களுக்கு இந்த உடன்படிக்கை திருப்தி அளிக்கவில்லை. மராட்டிய எல்லையை விரிவுபடுத்தக் கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் பெரும்பாலோருக்கு இந்த உடன்படிக்கை ஏற்பட்டது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது. மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் ஏற்படும் உடன்படிக்கை மூலம் அமைதி நிலவிவிட்டால் தாங்கள் எதிர்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகள் தொடராது என இவர்கள் கருதினர் [2]. போர் கோவாவின் மக்களிடையே தோன்றிய எழுச்சியை நிறுத்தாவிட்டாலும் அதைத் தீவிரமாகக் குறைத்தது. மேலும் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் போராட்டம் போர் என்ற முறையில் வரலாற்றில் எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் இருதரப்பினருமே தாங்கள் போர் நிகழ்த்துவதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. ஆயினும் மராட்டியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஒருவரை ஒருவர் தாக்க, போருக்குத் தங்களைத் தயார் படுத்திய வண்ணமே இருந்தனர் [9].
பாரம்பரியச் சிறப்பு:
வரலாற்றுச் சிறப்பு — இந்தச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கையின் காரணத்தினால் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்தது. இதன் காரணமாகப் பின்னர் மராட்டியப் பேரரசு மிகவும் வலிமை நிறைந்ததாக இருந்த காலத்திலும் கோவாவை நோக்கித் தனது தெற்கு எல்லையை விரிவு படுத்த முயலவில்லை. இதனால் போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டிலேயே கோவா தொடர்ந்து இருந்து வந்தது, பின்னர் இந்தியாவின் நடுவண் அரசின் ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் ஒன்றாக1961 இல் இணைத்துக் கொள்ளப்பட்டது [17]. தற்காலக் கோவா தனக்கென ஓர் அரசாங்கமும், கலாச்சாரமும் கொண்டு, தன்னுரிமைப் பெற்று இந்தியாவின் ஒன்றிய ஆளுமைப் பகுதியாக விளங்கி வருகிறது.
கலாச்சாரச் சிறப்பு — இந்தப் போர் மிகக் குறுகியது, இதன் தாக்கமும், போரின் இழப்புகளும், சேதங்களும் மிகக் குறைவு. இதன் காரணமாக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தையோ, திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனத்தையோ இது சற்றும் ஈர்க்கவில்லை. 1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிராங்க் மெச்காலஸ் (Frank McCallus) எழுதிய புதினமொன்றில் விவரிக்கப்பட்ட இந்தியப் புரட்சி பற்றிய நிகழ்ச்சியில் பிக்கோலிம் போர் போன்ற நிகழ்ச்சிகளின் குறிப்பிடத்தக்கச் சாயல்கள் உள்ளது [17]. மற்றொரு கோவாவின் எழுத்தாளர் விக்டர் டி’ ஸோசா 1958 இல் வெளியிட்ட ‘கோவாவில் வாழ்க்கை’ (Goan Life, a Book by Victor D’ Souza) என்ற நூலில், கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவக் குடும்பம் ஒன்று மராட்டியப் பேரரசின் மீது உள்ள தங்கள் பற்றுதலை விளக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தக் கதை பிக்கோலிம் போரினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் [17].
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.
Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003
______________________________________
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
**என் குறிப்பு:
சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.
______________________________________
Related Articles:
War is over: Imaginary ‘Bicholim Conflict’ page removed from Wikipedia after five years, Eric Pfeiffer, Yahoo! News Eric Pfeiffer, Yahoo! News January 4, 2013; http://news.yahoo.com/blogs/sideshow/war-over-imaginary-bicholim-conflict-page-removed-wikipedia-234717353.html
A copy of the deleted Wikipedia’s Bicholim Conflict Article: http://www.absoluteastronomy.com/topics/Bicholim_conflict
படம் உதவி:
Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG
Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png
அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg
செய்தி ஆதாரம்:
http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/
http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml
நன்றி: வல்லமை
ஜனவரி 7, 2013; மார்ச் 20, 2013; ஏப்ரல் 3, 2013; மே 7, 2013; ஜூன் 7, 2013; ஜூலை 12, 2013; ஜூலை 19, 2013
#வரலாறு, #வரலாற்றில் பொய்கள், #வல்லமை, #Themozhi