Saturday, October 24, 2020

அன்பின் ஐந்திணை - நெய்தல்

அன்பின் ஐந்திணை - நெய்தல்
 
 


கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணைப்பாடல்களை அடுத்து 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்'  ஒழுக்கம் குறித்த  31 வெண்பாக்கள் (பாடல்கள் 32 -62)  நெய்தல்திணைப்  பாடல்களாக இடம் பெறுகின்றன. இப்பாடல்களிலும் நெய்தல் நில இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. நெய்தல் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்( அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 
 
இந்த நெய்தல்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு  இணங்க,  தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, ஊரில் அலர் தொடக்கம், வரைவு வேட்கை,  குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் தொடங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.
 
இந்நூலின் நெய்தல் பாடல்களைக் குறிஞ்சி நிலப் பாடல்களுடன் ஒப்பிடுகையில் தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, வெறியாட்டு ஏற்பாடு,  உடன்போக்கு  போன்ற குறிஞ்சிப் பாடல்களில் காணப்பட்ட கருத்தாக்கங்களை நெய்தல் பாடல்களில்  காண இயலவில்லை.  ஊர் மக்களின் அலர், அதனைத் தவிர்க்கப் பகலில் சந்தித்த காதலர்கள் இரவில் சந்திக்க முற்படுதல், இருப்பினும் அலர் தொடர்தல், அதனால் தோழி  தலைவனிடம் இரவிலும் வரவேண்டாம் என்று கூறி தலைவியை மணக்க ஏற்பாடு செய்யச் சொல்லல் என்ற பாடல்களே மிகுதி.  'கனை இருள் வாரல்!' என்ற கருத்தைத் தொடர்ந்து பல பாடல்களில் தோழி தலைவனிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்.
 
தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  தோழி வரைவு கடாயது  என்பது 13 பாடல்களில்  (பாடல்கள்: 34, 35, 36, 37, 43, 46, 50, 52, 53, 54, 55, 57, 59) காட்டப்படுகிறது. அதாவது மொத்த நெய்தல் பாடல் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 40 விழுக்காட்டுப் பாடல்கள் இந்த வகையில் அமைந்துள்ளன.  தலைவன், தலைவி, தோழன், தோழி, செவிலித்தாய் ஆகியோர் மட்டுமே பாடல்களில்  நேரடியாக இடம் பெறுகிறார்கள். தலைவியின் தந்தை, தமையன் மார் போன்றவர் குறித்துக் குறிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றது. செவிலித்தாயும் இரு பாடல்களில் மட்டுமே காட்டப்படுகிறாள்.  குறிஞ்சி நிலத் தலைவியைவிட நெய்தல் தலைவி கட்டுப்பாடுகள் அதிகம் இன்றி இருக்கிறாள். தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதைக் கடற்கரை நண்டிடம் கூறிப் புலம்புவதும், தலைவனைச் சந்திக்க இயலாத தலைவி அதைக் கடல் அலைகளிடம் சொல்லிப்  புலம்புவதும் என இரு பாடல்கள் காட்சியில் சிறப்பு மிக்கப் பாடல்களாக அமைந்துள்ளன.
 
திணைமாலை நூற்றைம்பது நூலின் நெய்தல் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும்,  தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட ஒரே நெய்தல்  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  31 நெய்தல் பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.
 
இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட நெய்தல் நிலத்தில், கடற்கரையோரப் பகுதியில் நிகழ்வது இக்கதை.
 
அது ஓர் அழகிய நெய்தல் நிலம்.  குளிர்ந்த கடல் நீரும் அதில் தொடர்ந்து ஓர் அலை வந்து கரையில் மோதித் திரும்பும் முன்னர் மேலும் இரு அலைகள் அதை விரட்டிவந்து மோதிச்  செல்லும் வளப்பம் நிறைந்த கடற்கரை.  பகலிலும் இரவிலும் மக்கள் கடற்பகுதியில் அலைந்து அலைகளுக்குப் போட்டியாக ஆரவாரித்துக்  கொண்டு நடமாடியவண்ணம் உள்ளார்கள்.  அலைகளால் அள்ளி வரப்பட்டு கடற்கரையில் ஒதுக்கப்பட்ட சிப்பிகள்  வாய்பிளந்து காட்டுவதால் வெளிப்படும் முத்துக்களின்  ஒளி இரவில் இருளையும் விரட்டக்  கூடியதாக இருக்கிறது. அவற்றை அள்ளிச் செல்ல விரும்பும் மக்களின் நடமாட்டத்தை  இரவிலும் காணக்கூடியதாக உள்ளது.
 
கடற்கரையில் உப்பங்கழிகளும்  அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள கடற்கரையின் பசுமை நிறைந்த கானல் சோலைகளும், நீல நிறக் கடலும் இவற்றுக்கு மாற்றாக மிக வெண்மையான மணல் நிரம்பிய கடற்கரை மணலும் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது.  உப்பங்கழிகளில் சுறாமீன்கள் சுழன்று விளையாடி நீந்தியவண்ணம் உள்ளன. கடற்கரை  எங்கும் அன்று பூத்த மலர்களுடன் மணம் மிக்க புன்னை மரங்களும், ஞாழல்  மரங்களும், நெருக்கமாக அடர்ந்து வளர்ந்த தாழை மரங்களும், உயர்ந்து வளர்ந்த பனை மரங்களும் உப்பங்கழிகளைச் சுற்றி அடர்ந்த தில்லை மரங்களும் நீர் முள்ளிச் செடிகளும் வளர்ந்துள்ளன.  கடற்பகுதியில் வீசும் புலால் நாற்றத்தைப் புன்னை மரத்தின் மலர்களின் இனிய நறுமணம் நீக்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் நெய்தல் மலர்கள் பூத்துள்ளன. அங்கு மீட்டாமலே  மேன்மையான இசையை தேன்வண்டுகள் பொழிந்த வண்ணம் உள்ளன.
 
அவ்வூரின் நுளையர் குடும்பத்தில் அண்ணன்களும் ஓர் தங்கையும் எனச் சிறு குடும்பம் உள்ளது.  அந்த  அண்ணன் மார் படகு செலுத்தி, நுட்பமாகப் பின்னிய வலையை வீசி மீன் பிடிக்கும் தொழிலில் மிக வல்லவர்கள்.   அவர்கள் ஆழ்கடலில்   அமிழ்ந்து  முத்துக்களும்  சங்குகளும் கூட பிடித்து வருவார்கள்.  அவர்கள் அவ்வாறு வலை வீசி கடலில்  இருந்து முகந்து  வரும் மீன்களை வெய்யிலில்  கருவாடாக உலர வைத்து, அவற்றைப் பறவைகள் கொத்திப் போகாமல் காவல் காப்பது தங்கையின் வேலை. இவளே இக்கதையின் தலைவி. இவள்  வேலை ஒத்திருக்கும் மிகப் பெரிய நீண்ட கண்களையும், மருண்ட பார்வையையும், காதில் சிறிய சுறாமீன்கள் வடிவில் வார்க்கப்பட்ட மகரக்குழை  காதணிகளையும், கையில் முத்துக்கள்  பதித்த வளையல்களையும் அணிந்திருக்கிறாள்.  ஆகவே அவளை நாம் முத்தழகி என்றும் பெயர் சூட்டி  அழைக்கலாம். 
 
தலைவியின் அண்ணன்கள் வலைவீசி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டார்கள். கடற்கரை சோலைப் பகுதியில் மீன்கள் உலர்த்தப் பட்டுள்ளன.  அருகில் அடப்பங் கொடிகளில் முளைப்பாலிகையினைப் போல ஒன்றாகக் கூடி மலர்கள் பூத்திருக்கின்றன.   அவற்றின் மீது உடலில் இருந்து நீக்கிய கவசம் போல மீன் வலைகள் வெய்யிலில் உலர்த்தப் பட்டிருக்கின்றன. அப்பகுதியில் தலைவியும் அவளது  இணைபிரியாத தோழியும் கருவாடுகளை உலர்த்தி அவற்றைக் காவல் காத்த வண்ணமும், அவற்றை வாங்க விரும்புவோருக்கு  விலை  கூறி விற்றவாறும் பகல் பொழுதை ஓட்டிக்  கொண்டிருக்கிறார்கள். 
 
அந்தக் கடற்கரை ஊரின் தலைவனின் படகுக்  கூட்டம் கரையை நோக்கி வருகிறது.  அமைதி என்பதையே அறியாத மன்னவன் ஒருவனின் படை ஒன்று போருக்குச் செல்லுகையில் எவ்வளவு ஆரவாரம் இருக்குமோ அது போல ஆரவாரம் கடற்கரைப் பகுதியில் ஏற்படுகிறது.   அலை ஓசை போரின் பறை ஓசை போல முழங்க, அலைகள் யானைப் பாகனாகவும், நீண்ட தோணிகள் யானைப் படைகள் போலத் தோற்றமளிக்க, வானில் சுற்றும் பருந்துகள் புரவிகள் போல விரைந்து பின் தொடர, அந்த ஓசையில் அச்சமுற்ற  கடற்கரையினை அடுத்துள்ள சோலையில் ஆர்த்தெழும்   பறவைகள்  ஒருசேர அலறலுடன் வானில் எழும்பிட படைவீரர்களுடன் மன்னன் போருக்குச் செல்லும் காட்சி போல இருக்கிறது அது.  அந்தத் தலைவனின் தோற்றத்தால் கவரப்படுகிறாள் தலைவி. 

அவள் பார்வை கருவாடுகளைக் காவல் செய்வதை விட்டு அவன் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து அவனையே காவல் செய்யத் துவங்குகிறது.  தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவனும் அவள் பார்வை தன்னை சிறைபிடிப்பதை உணர்கிறான்.  அன்று பூத்த ஞாழல் மலர்களைக் கொத்தாகப்  பறித்து தலைவியின் கையில் திணிக்கிறான்.  இவர்களின் செயல்களைத் தோழியும் நோட்டமிட்டவாறே  எதையும் அறியாதவள் போல உடன் இருக்கிறாள். 
 
தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் தலைவியின் கவர்ந்திழுக்கும் பார்வை தவிர வேறொரு  சிந்தனையும் இன்றி அதில் மூழ்கியிருக்கிறான்.  தலைவனிடம் கண்ட மாறுதலை உணர்ந்து தோழன் அவனிடம்  பேச்சு கொடுக்கிறான்.
 
கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான் (32). அவளது வெண்முத்துப்பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் என்கிறான் (33).  தலைவியின் ஒரே பார்வையில் கவிழ்ந்துவிட்ட தலைவன் ஒரு பண்பாளனா என்ற எண்ணம் தோழனின் மனதில் தோன்றுகிறது. 
 
அவனது மனதின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தலைவன் தலைவி குறித்து மேலும் அடையாளம் கூறி அவனையே சென்று பார்த்துக் கொள்ளச் சொல்கிறான்.  கடல் அலைகள் ஆர்ப்பரித்துத் திரும்பிச் சென்ற வண்ணம் அலைமோதும் கரையினிடத்தே, கரையில் அலையும் நண்டுகளைக் கால்களினாலே  கண்டு பிடித்தவாறு, கரை அருகே  மலர்ந்துள்ள நெய்தற் பூக்களைக் கொய்தவாறு நிற்கும், மிக நீண்ட கண்களை உடையவள் எனக்குக் காதல் மயக்கத்தை உண்டாக்கியவள். அவள் அந்த பரதவரின் மகளாகிய என் தலைவி (60)  என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான். தலைவனைக் கவர்ந்தவளைத்தான் பார்த்துவிடுவோமே  என்ற எண்ணத்தில் தலைவன் குறிப்பிட்ட அடையாளங்கள் உதவியுடன் கடற்கரைக்கு  வந்து அவளைக் கண்டு வியக்கிறான் தோழன்.
 
ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும், இணையற்ற அவளது இரு பெரிய கண்களைப் பார்த்த பின்னரும் கூட  அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் மன உறுதி கொண்டவன் மட்டுமல்ல  பண்பில் சிறந்தவன்தான் (45) என்று தோழன் மனதில் எண்ணம் ஏற்படுகிறது. மீண்டும் தலைவனிடம் செல்கிறான்.
 
ஒரு பொருட்டாக அக்கறை செலுத்தாதவர்களும் கூட  காண நேர்ந்தால் இயற்கையழகு நிறைந்த தெய்வமாகக்  காட்சி அளிக்கக் கூடியவள் தலைவி. அத்தகையவளைக் கருத்தாகக் காக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான் (47). 
 
மீண்டும் தலைவியைக் காண விரும்பி கடற்கரை பக்கம் புரவி பூட்டிய தனது தேரில் செல்கிறான் தலைவன், அங்குத் தோழியைக் காணுகிறான். தான் தலைவியைச் சந்திக்க விரும்புவதைக் கூறுகிறான்.  தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான் (42). 
 
அவர்களது  காதல் நாடகத்தை முன்னர் பார்த்துக் கொண்டிருந்த தோழிக்குத் தலைவன் தலைவிக்கு ஏற்றவன்தான் என்ற எண்ணம் வருகிறது. அவனுக்கு உதவ முன் வருகிறாள்.  தலைவனே, உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது (44, 58).  அங்கு இல்லாவிடில், கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள் (51). 
 
தலைவனும் தலைவியும் சந்திக்கத் தொடங்குகிறார்கள்.  நாட்கள் கடக்கின்றன. தலைவன் தலைவியைப் பார்க்க வந்து செல்வது பிறர் கவனத்திற்கு உள்ளாகிறது.  ஊரில் அலர் எழுகிறது. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக என்னை வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் (41). இதனால் அவர்கள் சந்திக்க இயலாத நிலை ஏற்படுகிறது. 
 
கடற்கரைக்குச் செல்லும் தோழி அங்குத் தலைவனைச்  சந்திக்கிறாள், தலைவி இனி வரமாட்டாள் என்று சொல்கிறாள்.  நிலையைப் புரிந்து கொள்ளும் தலைவன் தோழியை நோக்கியவாறு, கடற்கரையில்  விளையாடும் நண்டிடம்  பேசுவது போல, துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான்.   தோழிக்கு அவனது நிலை காண்பதற்கு மிகவும்  இரங்கத் தக்கதாக இருக்கிறது.  அதை அவள் தலைவியிடம் வந்து தெரிவிக்கிறாள்.  தனது பெண் துணையோடு இன்புற்று விளையாடும் ஆண் நண்டினையும், என்னையும்  தலைவன் பார்த்து,  என் இனிய துணைவியாகிய தலைவியோடு இவ்வாறு கூடிக் களிக்க  எனக்கும் வாய்ப்பு கிடைக்குமோ?  என்று தனக்குத் தானே பேசிக் கொண்ட தலைவன்;  அந்த ஆண் நண்டினை நோக்கி நீ உனது இனிய துணையாகிய பெட்டை நண்டுடன்  இன்புற்று விளையாடுதலாகிய ஒன்றையே செய்திருப்பாயானால் பிரிவுத்துன்பம்  என்ன என்பதனை அறிந்திருக்கமாட்டாய், என் பிரிவுத்துயரை உன்னிடம் கூறுவதால் என்ன பயன்?   என நண்டிடம்  பேசுவது போலத்  தலைவன்  தனது கருத்தை எனது  கவனத்திற்குச் சொல்லிவிட்டுப் புரிந்து கொண்டவனாய் மனம் வெறுத்து விலகிச் சென்றுவிட்டான் (40) என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள் .
 
தலைவனின் நினைவால் தலைவியும் இரவில் உறக்கமின்றிப்  புலம்புகிறாள். என்னைப் போல உறக்கம் வாராது நீ ஏன் அலைமோதுகிறாய். நான் படும் துன்பத்தைப் போன்ற இந்த உறங்கா நிலையாகிய துன்பத்தை உனக்குக் கொடுத்தவர் யாரென்று சொல்வாயாக என்று தலைவி கடலை நோக்கிக் கேட்கிறாள் (38).
 
இவர்கள் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியாமல்  தோழி இரவில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். தலைவனைக் கண்டு,  தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும் (34).  கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள் (56). 
 
தலைவனும் வருகிறான், இரவில் அவர்கள் சந்திக்கிறார்கள்.  தலைவன் இரவில் வருகையில் அவனது புரவியின் குளம்புத் தடயம் மணலில் அழுந்தி அவன் வந்து சென்றதை அறிவிக்கிறது.  தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று அவன் இனி இரவிலும் வந்து தலைவியைக் காண வேண்டாம் என்று தோழி கூறுகிறாள் (48).   பகற் பொழுதில் நீ வந்தாய் எனில்  பழிச் சொற்கள் பல வரும். அப்பழிச்சொற்களைத் தவிர்க்க விரும்பி இரவில் நீ வந்தாய் என்றால் வருவதற்கு  இடையூறுகளும் பல உண்டு (59). அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்  இரவில் தலைவியைக் காண வர வேண்டாம் (49).  உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருக்கிறாள். நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள் (55).  இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும்,    உமக்கு ஒன்று நேருமாயின் தலைவி உயிர் வாழமாட்டாள்.  ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் (61) என்று தலைவனிடம் தோழி கூறுகிறாள். 

தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் (35). இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் (43). தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக (36, 37).   தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள்  (57).  தூக்கக் கலக்கத்தில் கண்ட கனவு போன்று விளங்கிக் கொள்ள முடியாத, வகையில் வருகின்ற உனது வரவை நிறுத்திவிடு தலைவனே.  முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான  செய்கை (50 ).   களவுப் புணர்ச்சியில் மிகுந்த விருப்பம் கொள்ளாமல் தக்க  நாளொன்றினைத் தேர்வு செய்து தலைவியை  மணம் புரிந்து கொள்வதுதான் உனக்கேற்ற  நன்னெறியாகும் (52).   எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக (53). இது குறித்து எண்ணி ஆய்வு செய்து காலத்தை வீணாக்க வேண்டாம், தக்க நாள் ஒன்றைத் தேர்வு செய்து, காலம் தாழத்தாது பெண் கேட்டு வந்தால்,  நீ தலைவியைத் துணையாக  அடையும்  வாய்ப்பு உமக்குக் கிட்டும் (46). ஆகவே மேலும் ஆராய்ந்து கொண்டிராதே, கோள்கள் குறித்து  ஆராய்தல் தேவையில்லை.  நிமித்தம் அறியும் கணிஞரை  வரவழைத்து, ஓர் மண நாளைக் குறித்துக் கொண்டு வந்து, இவளை விரும்பி  மணம் புரிந்து கொள்ளுதலே நீ தலைவிக்குச் செய்யும் நன்மையாக அமையும் (54) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
 
தலைவியைப் பெண்கேட்டு அயலார் சிலர் வருகிறார்கள்.  தோழி இனி அமைதியாய் இருப்பது சரியல்லவென்று செவிலித்தாயிடம் தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள். கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவன், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல (39). விற்போரில் வல்ல வீரர்கள் கூடி நடத்தும் வில்விழாக் கூட்டத்திலும், கடலினாலே சூழப் பெற்ற  இவ்வுலகத்தினிடத்தே நல்லவர் பலர் கூடி நடத்தும் மணவிழாக் கூட்டத்திலும், அன்று கடற்கரையினிடத்து தலைவிக்கு  ஒப்பற்ற உதவியினைச் செய்த கடல் துறை முகத்துக்குரியவனை   ஒத்த ஆடவரை நாங்கள் காணவில்லை!! இவரைப் போன்ற அத்தகைய சிறந்தவர் சுவர்க்கத்திலிருந்தாலும் அவரை தலைவிக்குத் தேர்வு செய்து மணமுடிப்பாயாக  நல்ல எமது அன்னையே!   நம் தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நிற்கிறாள் தோழி (62).

 
குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
32. கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
33. தலைவியின் வெண் முத்துப் பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் நான் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
60. கடற்கரையில் நண்டு பிடித்தவாறு நெய்தல் பூக்களைக் கொய்து கொண்டிருக்கும் நீண்ட கண்களையுடைய தலைவி எனக்குக் காதல் மயக்கம் தந்தாள் என்று  தோழனிடம் கூறுகிறான் தலைவன்.
45. ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும் அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் பண்பில் சிறந்தவன்தான் என்று தோழன் வியக்கிறான்.
47. அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான்.
42. தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான்.
44. தலைவனே உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தோழி குறிப்பு கொடுக்கிறாள்.
58. அலைகடலும் அதனருகே கடற்கரைச் சோலையும், வெண்மணலும் ஞாழலும், தாழையும் புன்னையும் நிரம்பிய இடங்களை விரும்பிப் பார்ப்பாயாக எனத் தோழி  தலைவனுக்குப் பகற்குறி சொன்னாள்.
51. கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள்.
41. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.
40. துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான் தலைவன்.
38. தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்கும் என் நிலையைப் போல உறங்காமல் அலைமோதும் இத்துன்பத்தை  உனக்குக் கொடுத்தவர் யார் கடலே? என்று தலைவி கடலினை நோக்கிக் கேட்கிறாள்.
34. தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும்  என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
56. தலைவனே கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
48. தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று தலைவனை  இரவில் வர  வேண்டாம் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.
59. பகல் இரவு என்று இரு பொழுதுகளும் தலைவியைச் சந்திக்க  வருதலை விடுத்து  விரைவில் அவளை மணமுடித்துக் கொள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
49. அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்    இரவில் தலைவியைக் காண வருதல் ஏற்புடையதல்ல  எனத் தோழி தலைமகனிடம் மறுத்துரைக்கிறாள்
55. தலைவனே தலைவியைப் பார்க்க வரவேண்டாம், உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருப்பதைக் காண்பாயாக. நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள்  என்று தலைவனிடம் இரவு வருகையை நிறுத்தச் சொல்கிறாள் தோழி. 
61. இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும், ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
35. தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் என்று தலைமகனிடம் தோழி  கூறுகிறாள்.
43. தலைவனே இரவில் தலைவியைத் தேடி  வாராதே, வந்ததால் அவளை மணமுடிக்கும் நோக்கில் மட்டும் வருவாயாக (கனை இருள் வாரல்!) என்கிறாள் தோழி.
36. உன் நாட்டுப் பறவைகளும் குடியும் குடித்தனமுமாக வாழ முற்படுகையில், அது போல நீயும்  தலைவியை  மணந்து அவளுடன் தங்கிவிடுவாயாக எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
37. தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
57. தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள் என்கிறாள் தோழி.
50. இரவில் வருவதை நிறுத்தி முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான செய்கை என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
52. நாள்  கடத்தாது, தக்க நாள் ஒன்றில் தலைவியை மணமுடித்து இல்லறம் மேற்கொள்வதே உன் தகுதிக்கேற்ற நல்லொழுக்கம் எனத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள்.
53. தலைவனே எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.
46. தலைவியைப் பெண்கேட்டு வந்து விரைவில் மணம் முடிப்பாய் தலைவனே, அதை விட்டு இடர் நிறைந்த இரவில் அவளைக் காண வருவதைத் தவிர்ப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
54. தலைவனே இரவில் வாராதே, இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
39. கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவர், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல  என்று தோழி செவிலித் தாயிடம்  தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள்.
62. தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நின்றாள்.




உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html


நன்றி:  சிறகு 
அக்டோபர் 24, 2020


#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 



Saturday, October 10, 2020

அன்பின் ஐந்திணை - குறிஞ்சி

அன்பின் ஐந்திணை - குறிஞ்சி




திணைமாலை நூற்றைம்பது நூலின் குறிஞ்சித் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும், நற்றாயும், தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட குறிஞ்சி நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  31 குறிஞ்சிப் பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண். 

புணர்தலும் புணர்தல்  நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட குறிஞ்சி நிலத்தில், மலைநாட்டில் நிகழ்வது இக்கதை.  

தலைவனுக்கு 'வேலன்' என்றும் தலைவிக்கு 'வள்ளி' என்றும் பெயர்கள் சூட்டியும் அழைக்கலாம்.  தலைவன் கையில் வேலை வைத்துள்ளவன், வேட்டை ஆடும் வீரன். அவன் ஓர் அழகிய மலைநாட்டிற்குத் தலைவன். அவனுக்கு ஒரு நண்பன்.  இவர்களைப் பாடல்களின் மூலம் அறிய முடிகிறது. 

தலைவியின் குடும்பத்தில் இருப்போர் நற்றாய், தந்தை, தலைவியின் வீரம் மிக்க அண்ணன்மார்கள், செவிலித்தாய், தலைவியைப் பிரியாத தோழி  ஆகியோர்.   அழகிய நிலவு போன்ற முகத்தையும், அதில் வில் போன்ற வளைந்த புருவங்களையும், அதன் கீழ் உயிரைக் குடிக்கும் வேல்  போன்ற கண்களையும் கொண்ட ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவள் அத்தலைவி. நறுமணம் மிக்க தேன் சொட்டும் மலர்களைத் தனது அழகிய நீண்ட குழலில் அணிந்து, சிறப்பான அணிகலன்களையும் அணிந்தவள்.  

அவளுடைய தமையன்கள் வீரம் மிக்கவர்கள் தங்கள் வாழ்வில் குறுக்கிடும் எவருடைய உயிரையும் போக்கிவிடுபவர்கள்.  அவர்களுக்கு மிக அருமையான நறுமணம் மிக்க சந்தனம், அகில் போன்ற மரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  அழகிய மலையில், முகில் தடவிச் செல்லும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்துள்ள அந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அங்குத் தினை விதைத்துப் பயிரிடுகிறார்கள். 

அந்தத் தினைப்புனத்தைக் காவல் காக்க தலைவியைத் தோழியுடன் அனுப்பி வைக்கிறார்கள்.   உடல் மணக்கும்படி சந்தனக் குழம்பைப்  பூசிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, தினைப்புனத்தில் சந்தன மரங்களைக் கால்களாக நிறுத்தி அமைக்கப்பட்ட பரணில் நின்று தானியங்களைத் தின்ன வரும் கிளிகள் போன்ற பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுவது கொடுக்கப்பட்ட பணி. 

அப்பொழுது அயலூரைச் சேர்ந்த கட்டிளம் காளை ஒருவன் வேட்டையாட அப்பகுதிக்கு வருகிறான். அவன் துரத்தி வந்த மானின் மீது அம்பெய்கிறான். ஆனால் அந்த மானோ உடலில் தைத்த அம்புகளுடன் தப்பி ஓடிவிடுகிறது.  மானைத் துரத்தி வரும் தலைவன்  தினைப்புனம் வழி செல்கையில் பரணில் நிற்கும் தலைவியிடமும் தோழியிடமும், பெண்களே நான் வேட்டையாடிய மான் அம்புகளுடன் இப்பக்கம் வந்ததைப் பார்த்தீர்களா? (1) என்று கேட்கிறான்.  இது தலைவன் தலைவி ஆகிய இருவரின் காதலின் தொடக்கம்.  தலைவியின் அழகில் தனது உள்ளத்தை அவளிடம் பறி கொடுக்கிறான். 

தலைவியின் முகத்தை மறக்க இயலாமல் தனது ஊருக்குத் திரும்புகிறான்.  தலைவியின் நினைவு தன்னை வாட்டுவதாகத் தனது தோழனிடம் கூறுகிறான். வேட்டையாடிய விலங்கைக் கண்டீர்களா  என்று கேட்கச் சென்ற இடத்தில் தலைவி என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுவிட்டாள்(9), தினைப்புனம் காக்கும் தலைவியின் அழகில் என்மனம் கட்டுண்டு கிடக்கிறது(30), தலைவியின் முலைகள் மேல் கொண்ட விருப்பினால் எனது நலனும் பெருமையும் அழிந்துவிட்டது(23) என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.   தலைவியைத் தான் சந்தித்த இடத்தை தோழனுக்கு அடையாளம்  சொல்லி அனுப்புகிறான். ஆவல் மேலிடத் தலைவனின் உள்ளத்தைக் கவர்ந்தவள் எப்படி இருப்பாள் எனக் காணச் செல்லும் தோழனும் தலைவியைப் பார்த்து அயர்ந்து போகிறான்.  இத் தலைவியை விட்டு எவ்வாறு தலைவன் பிரிந்து வந்தான்? அது அவனது உள்ளத்தின் உறுதியைக் காட்டுகிறதோ (28) என எண்ணி வியக்கிறான். 

அரண் போன்ற மலைகள் சூழ்ந்து நடுவே இருக்கும் அழகிய தலைவியின் சிற்றூருக்கு, கொடிய விலங்குகளும், பாம்புகளும், வேங்கைப் புலிகளும், மதநீர் சொட்டும் மதம் பிடித்த யானைகளும் குறுக்கிடக் கூடிய அச்சம் தரக் கூடிய வழியில் தனது வலிமையான கால்களையும், தனது வேலையும் மட்டும் துணையாகக் கொண்டு  மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். அவளைச் சந்திக்க வாய்ப்பு தேடி அவளது தோழியின் மூலம் அணுக விரும்புகிறான்.  தினைப்புனம் அருகில் உள்ள வேங்கை மரத்தின் கீழ் நின்று தலைவிக்குக் கொடுக்க கையில் தான் கொணர்ந்த பூந்தாழைகளுடன் நின்று கொண்டிருப்பவன் கண்ணில் தோழி தென்படுகிறாள். 

தலைவியைக் காண்பதே தன்னை வாட்டுவதாக (19) தனது ஆற்றாமையைத் தோழியிடம் தலைவன் கூறுகிறான். சந்தன மரம் போன்ற அருமையான மரங்களை எல்லாம் வேரோடு வெட்டி உழுது நிலத்தைப் பண்படுத்தி தினை வித்துக்களை விதைத்துப் பயிரிட்டு தினைப்புனம் உருவாக்கும் அவளது அண்ணன்மார் போன்று தலைவிக்கும் எனது வருத்தம் புரியவில்லை என்கிறான் தலைவன் (24). நான் தலைவியைக் குறித்து நன்கே அறிவேன்.  இளமை நிரம்பிய அவள் தனது இடை வருந்தும்படியாக சிறிது தொலைவு அவள் நடந்து செல்வதற்கு முன்னரே என் நெஞ்சம் அவளது இடை இற்று விழுந்து விடுமே என்று அஞ்சும், அவள் சிறிதும் என்பால் அன்புகாட்டுவதைக் காணாது நைந்து  உருகி என் நெஞ்சம் வருந்துகிறது. என் உள்ளம் அவள் பின் சென்று தளர்ந்து விடுகிறது (17) என்று தலைவன் தோழியிடம் கூறுகிறான். 

நான் வந்தால் மலை நெற்குவியலுக்குப் பாதுகாப்பு இருக்கும். இங்கேயே நான் இருப்பேன் என்றால்  சிவந்த தினையினையும் கருந்தினையினையும் கொண்ட  தினைப்புனக் காவலாகவும் இருக்கும் (8) என்று தலைவன் தோழியிடம் நயமாகப்  பேசி தனக்கு ஆதரவாக மனமாற்றம் கொண்டுவர விரும்புகிறான். தனது ஊரிலிருந்து தலைவிக்குக் கொணர்ந்த பூந்தாழைகளைத் தலைவிக்குக் கொடுக்குமாறு தோழியிடம்  கொடுக்கிறான். 

தலைவன் தரும் அன்பளிப்பை ஏற்க இயலாமல் மறுக்க வேண்டிய சூழ்நிலையை விளக்குகிறாள் தோழி. வலிமைமிக்க பெரும் புலியினைப் போன்று கொடுமை மிக்கவர்  என்தமையன் மார்கள்.  நீயும் வலிமை மிக்க பெரும்புலியினைப் போன்றுள்ளாய். ஆதலால் இருவருக்கும் இடையில் மோதலைத் தவிர்க்க விரும்புவதால்  நாங்கள்  நீ கொணர்ந்த அருமையான இத்தழையினை ஏற்க இயலாத சூழ்நிலை இன்று. ஆதலால் நீ இத்தழையினை நாளைக் கொண்டுவந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலும் (20)  என்கிறாள் தோழி தலைவனிடம். பிறகு அவனது வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொள்கிறாள்.  நீ கொண்டு வந்த  இக் குறுங் கண்ணிகள் வாடாதவாறு  தலையிடம் சேர்த்து, இக்கண்ணிகள் நல்லனவென்று நான் கூறினால், மையுண்ட கண்களையுடைய தலைவி வருந்தாமல் ஏற்றுக் கொள்ள உடன்படுவாள் (21) என்று தலைவனிடம் தோழி கூறி, தலைவன் தலைவிக்குத்  தரும் அன்பளிப்பைத் தோழி ஏற்றுக் கொண்டு தலைவியிடம்  சேர்ப்பிக்க உதவுகிறாள். 

பரணில்  உள்ள தலைவியை அணுகும் தோழி தலைவன் தந்த பூந்தாழைகளை அவளிடம் கொடுத்துவிட்டு, உன்னால் தன் விருப்பம் நிறைவுறும் என்று எண்ணி உனக்கு அன்பளிப்புகளுடன் வருகிறான் அந்த மலைநாட்டுத் தலைவன்.  ஆனால் தனக்கு என்ன தேவை  என்பதை எனக்கு விளங்கச் சொல்கின்றானில்லை.  வேங்கை மரத்தினது நிழலில்  நிலை கொள்ளாது நிற்கின்றான். வலிமை மிக்க பெரும் புலியினை  ஒத்தவனாகிய இவனது மனக் கருத்துதான் என்னவாக இருக்கலாம் (31) என்று தோழி தலைவியைக் குறும்பாக வினாவுகிறாள்.  

பரணில் காவல் காக்கும் தலைவியையும் தோழியையும் தினைப்புனத்தில் நுழைந்த மதயானை ஒன்று அச்சுறுத்துகிறது.  தக்க நேரத்தில் அங்கு வந்த தலைவன் அம்பு வீசி யானையை விரட்டி பெண்களைக் காப்பாற்றுகிறான். சுனையில் பூத்த நீலோற்பலம் பூக்களையும் மணம் வீசும் அசோக மலர்களையும் கொய்து வந்து தலைவியின் கூந்தலில் சூட்டுகிறான். தலைவி தலைவன் மீது காதல் கொள்கிறாள்.   தலைவன் தலைவியிடம், வீரம் மிக்க உன் அண்ணன்கள் ஒரே அம்பினால் மற்றவரைக் கொல்வர். ஆனால் காமனின் கணைகளை உன்னுடைய இருவிழிகளாகக் கொண்டு நீ உன் இரு கண்களால் தாக்கி என்னைக் கொல்கிறாய் (22) சொல்கிறான். 

தலைவனும் தலைவியும் தினைப்புனம் அருகில் உள்ள சோலையில் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலில் கட்டுண்டு இருக்கையில் காலம் கடந்து செல்வதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  ஆனால் தினைப் பயிர் வளர்ந்து முற்றிவிடுகிறது.  வேங்கை மரபும் பூக்கத் தொடங்கி அறுவடைக் காலம் நெருங்குவதை உணர்த்துகிறது.  காதலர் இருவரும் அதை உணர்ந்தார் இல்லை. ஆனால் தோழிக்குக் கவலை ஏற்படுகிறது. 

தலைவியைத் தேடி வரும் தலைவனை  விரைவில் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வைக்கும் ஏற்பாட்டில் இறங்குகிறாள் தோழி.  அவனிடம், தலைவனாகிய உங்கள் மீது கொண்ட காதல் உணர்வால், பெண்மை மிகுந்த நிலையில் வாய்திறந்து தலைவி ஆலோலம் பாடி விரட்டுகையில்  அவளது  குரல் கிளியின் குரல் போலவே  இருப்பதால், தினை உண்ணும் பறவைகள் அஞ்சி எழுந்து பறப்பதில்லை. ஆகவே குரல்  மாறிவிட்ட இவள் பறவை விரட்டும் தொழிலுக்கு ஏற்றவள் இல்லை என இனி அவளை வீட்டிலேயே நிறுத்திவிடுவர் (3) என்று தோழி தலைவனிடங் கூறுகிறாள்.  அதேபோல தலைவியிடம், தலைவியே, பனை போன்ற வளர்ந்த இன்பத்தை நாம் எதிர்நோக்கியிருக்க, அதற்கு மாறாகப் பாத்தியில் விளையும் சிறு தினையாக அது மாறிவிடுமாறு, அறுவடைக் காலத்தின் அறிகுறியாக வேங்கை மரம்  பூத்துவிட்டது. அறுவடை நெருங்கும் அளவு பயிரும்  வளர்ந்துவிட்டது, இனி  தலைவனைப்  பார்க்க இங்கு வரும் வாய்ப்பு இல்லாது போகும்.  இற்செறிப்பால் தலைவனிடம் இருந்து பிரியும் நிலை வரப்போகிறது (5) எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். 

அவ்வாறே, பகலில் தலைவியை நாடி வந்த தலைவனைக் கண்டு தலைவியை விரைவில் மணம் புரிந்து கொள்ளச் சொல்லி மீண்டும் வலியுறுத்துகிறாள் தோழி. என்ன  ஆகப்போகிறதோ! பெருந்தன்மை இல்லாத இந்த இள வேங்கை  மரமானது  பூ பூத்து தினைக் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நாள் வருவதைத் தெரிவிக்கிறது.  பொன்னாலாகிய அணிகலன் முதலியவற்றைப் பரிசமாக எதிர்பார்க்கும் போர் விருப்பமிக்க வேலினையுடையவர்  எந்தையும் என்னையன் மாரும். என்ன கொடுமை. இனிமேல்  தலைவிக்கும் உங்களுக்கும் உள்ள  நட்பானது கதிர் அறுக்கப்பட்ட புனம் போல வறண்டு விடும் (18) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 

இனி தலைவி வீட்டில் அடைபட்டுவிடுவாள் என்பதைப்  புரிந்து கொள்ளும் தலைவன் எவ்வாறு இனி அவளைச் சந்திப்பது என்று கவலை கொள்கிறான்.  அவனது துயரை உணர்ந்த தோழி தலைவி இற்செறிப்புக்கு உள்ளானால், வேறு எவ்வாறு சந்திக்கலாம் எனக் குறிப்பு கொடுக்க நினைக்கிறாள். தலைவனே, உயர்ந்த பலாமரங்களின் பக்கத்திலே, மரங்களால் பாத்தியாகப் பிரிக்கப்பட்ட தோட்டத்தின் நடுவே, நிலவொளி படர்ந்தது போன்ற மிகுந்த மணல் வட்டமாகப் பரவியுள்ள பகுதியில்,  காட்டாற்றுக்கு  அருகே உள்ள குளிர்ந்த சோலையில் நானும் தலைவியும் பகலில் விளையாடுவோம் (29) என்று தோழி தலைவனிடம் சந்திக்க வேண்டிய இடத்தைக் குறிப்பால் கூறுகிறாள்.

தலைவி இற்செறிப்பு செய்யப்படுகிறாள். அவளைக் காண வரும் தலைவனால் அவளைப் பார்க்கக் கூடும் என்று  எண்ணும் இடங்களில் எங்கும் அவளைக் காணாது தவிக்கிறான். மாறாத புகழுடைய பாண்டியனின் மதுரை மாநகரைப் போன்ற சிறப்புப் பொருந்திய என் தலைவியினை அவளது  விளையாட்டுப் பண்ணையிலும் காணமுடியவில்லையே.  அழகிய என் தலைவியை என்னால் எங்கும் காண இயலவில்லையே (4) என்று  அவளைக் காண இயலாத வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான். இரவில் வந்து சந்தித்து விடுவது என்று தீர்மானித்துக் கொள்கிறான்.  கொடிய விலங்குகள் வாழும் காட்டு வழியில் அவளைத் தேடி இரவில் வருகிறான். இந்நிலையில் தலைவனின் உயிருக்கு ஏற்படக்கூடிய இடர் குறித்து, அவ்வாறு ஏதாவது நிகழ்ந்தால் தலைவியும் உயிர் வாழ விரும்ப மாட்டாளே என்று தோழி அச்சம் கொள்கிறாள். 

அவன் இரவில் வருவதைத் தவிர்க்க வேண்டுகிறாள் (இக்கருத்திற்கே திணைமாலை நூற்றைம்பது நூலில் இருக்கும் 31 குறிஞ்சிப் பாடல்களில் 8 பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது  தோழி எந்த அளவு தலைவனின் இச்செயலைத் தடுக்க நினைக்கிறாள் என்பதைக் காட்டுகிறது). தலைவனே, மிகுந்த இருள் நிரம்பிய நள்ளிரவிலே, நீ வந்தாய் எனில் அதனால் உனக்கு இடையூறு நேரும் எனத் தலைவி கலங்குவாள் அல்லவா? அதனை நீ எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன் (6). மதம் கொள்ளும் யானைகளை, பெரும் புலிகளை, கொடிய நாகங்களை எதிர் கொள்ளக்கூடிய வழியில் இரவில்  நீ வருவதை என் தலைவியால் தாங்கிக் கொள்ள இயலாது (7, 11, 13,10). உன்  நலனுக்காகத்  தலைவி வருந்தும்படி அவளைக் காண இரவில் வரவேண்டாம். அவ்வாறு வருவீர்  என்றால் அதைத் தாளாது இனி உயிர் வாழ மாட்டாள் தலைவி (25, 26) என்று பலவாறு கூறி தோழி தலைவனைத் தடுக்கிறாள். 

தலைவனைக் காணாது அவனை எண்ணி உடல் நலிவுறுகிறாள் தலைவி. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை  நீக்க வேலவனின் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கிறாள் செவிலித்தாய்.  அவளுக்குத் தலைவியின் நிலைக்கான காரணத்தை விளக்குகிறாள் தோழி.  வெறியாட்டும் பொருட்டு வரவழைத்த வேல் கைக்கொண்ட பூசாரி சென்றுவிடட்டும். பலியிடக் கொண்டுவந்துள்ள ஆட்டுக் குட்டியினையும் விடுவிக்கவும், கடவுளுக்குப் படைக்கக்  கொண்டு வந்துள்ள  கள்ளினையும் அதனை உண்ணக் காத்திருக்கும் மக்களுக்குக் கொடுத்துவிடவும் (12). தலைவியின் நெஞ்சத்தைக் கவர்ந்தவன் ஒருவன் உள்ளான்  செவிலித்தாயே!  தினைப்புனம் காக்கையில் மதங்கொண்ட யானை ஒன்று தலைவியைத்தாக்க வந்த வேளையில் அதனைத் தாக்கிவிரட்டி தலைவியைக் காப்பாற்றினான் ஒருவன்.  அக் கட்டழகன் தலைவியின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டான் (2), யானையிடம் இருந்து காப்பாற்றிய தலைவனைத்தான் தலைவி மணப்பாள் (14) என்று தோழி செவிலிக்குக் கூறுகிறாள். குற்றமில்லாத என் தலைவிக்கு நலக்குறைவு எதுவும் இல்லை (காட்டாற்று நீரில்  அடித்துச்  செல்லப்பட்ட பொழுது,  பாய்ந்து சென்று காப்பாற்றிக்  கரை சேர்த்த  அவளது  காதலனைத் தவிர்த்து வேறு எவரையும்  உறுதியாகத்  தலைவி தன் வாழ்க்கைத் துணையாக ஏற்க மாட்டாள் என்று செவிலியிடம் தோழி கூறும் ஒரே ஒரு பாடலின் (12) கருத்து மட்டும்  கதைப்போக்கில் ஏற்படுத்தக் கூடிய முரண் கருதித் தவிர்க்கப்பட்டிருக்கிறது). 

தலைவியைத் தேடி தலைவன் வருவதைத் தாயும் அறிந்து விடுகிறாள், நிலை மோசமாவதை உணர்கிறாள் தோழி. எனவே தலைவனிடம், தலைவனே, இதற்கு முன்  தலைவியை மணவாது நாளைக் கழித்தீர்கள்.  இனிமேலாகிலும், காலம் தாழ்த்தாது  மணந்து கொள்வீர்கள்  என்று எண்ணி உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். இடர் கண்டு வெறுக்கத்தக்க இம்மலை வழியாகத் தலைவியைத்தேடி நீங்கள் வருவதை எங்கள் அன்னை பார்த்துவிட்டதால் எங்களைச் சினந்தாள்.  இனி எங்கள் மீது கண்காணிப்பை அதிகப்படுத்துவாள். ஆகையால், தலைவியை விரைவில் மணமுடிப்பீர்களாக (27) என்று தோழி தலைவனிடம் கூறினாள்.  தலைவனும் தனது ஊரைச் சேர்ந்த சான்றோர்களைத் தனது சார்பாகத் தலைவியின் இல்லத்திற்கு அனுப்புகிறான். 

ஆனால், தலைவியின் குடும்பத்தார் தலைவன் தலைவியை மணமுடித்துத் தருமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. தலைவியை அடைய முடியாத ஆற்றாமையால் மடல் ஊரத் துணிந்த தலைவன்  அதைத் தோழிக்குத் தெரிவிக்கிறான்(16). அன்று பூத்த  மணக்கும் சுரபுன்னை மலர்களைச் சூடி, அதன்  தேனால் நனையப்பட்ட கூந்தலையுடைய தலைவி, அணிகலனோடு கூடிய தன்னுடைய மார்பினை எனக்குக் கொடுத்து, என்னோடு சேரும் காலம் வரைக்கும், மடலேற அணிந்த எலும்பாற் செய்த அணிகலன் என் மார்பிலிருந்து நீங்கப் போவதில்லை  என்று உனக்குச் சொல்கிறேன்.  அதற்கு மாறாக வேறு சொல் கூறமாட்டேன்.  பனைமடலால்  செய்யப்பட்ட குதிரையின் மீதே  அமர்ந்து தலைவியின் தெரு வழியே  மடல் ஊருதற்குத்துணிந்து விட்டேன் என்று தலைவன் தோழியிடம் கூறுகிறான். 

தலைவனும் தலைவியும் காதல் கைகூடாமல் துயர் கொள்வதைச் சகிக்கமாட்டாத நற்றாய் தலைவனின் கோரிக்கையை ஏற்றுத் தலைவியை அவனுக்கு மணமுடிக்குமாறு தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும் அறிவுறுத்துகிறாள்(15). தலைவன் மன்றல் விரும்பி அனுப்பிய,  குறையேதும் கூறவியலாத  சான்றோர்களினது வருகையினை ஏற்றுக் கொண்டவர்களாக, மறுக்காது நீர் வார்த்துக் கொடுத்தலாகிய மண முறையில் மகளை மணம் செய்து கொடுத்தல் நல்லது.  அல்லாமல், மகளின் தளர்ச்சியுறாத எழிலும் முலைகளுமாகிய இரண்டினுக்கும், கடலாற் சூழப்பட்ட இந்த உலகைக் கொடுப்பினும்  பொருத்தமான விலையாகுமோ?  காதலினையே  மதிக்கவேண்டும் என்று நற்றாய் தலைவியைத் தலைவனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறாள்.  


குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது: 
1.  பெண்களே நான் வேட்டையாடிய மான்கள் அம்புகளுடன் இப்பக்கம் வந்ததைப் பார்த்தீர்களா?  
9.  வேட்டையாடிய விலங்கைக் கண்டீர்களா  என்று கேட்கச் சென்ற இடத்தில் தலைவி என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டுவிட்டாள்  
30.  தினைப்புனம் காக்கும் தலைவியின் அழகில் என்மனம் கட்டுண்டு கிடக்கிறது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்  
23.  காதலியின் முலைகள் மேல் கொண்ட விருப்பினால் தன் நலனும் பெருமையும் அழிந்துவிட்டதாகத் தலைவன் கூறுகிறான்  
28.  தலைவியைக் கண்ட தோழன் இவளை விட்டு எவ்வாறு தலைவன் பிரிந்து வந்தான்? அது அவனது உள்ளத்தின் உறுதியைக் காட்டுகிறதோ என எண்ணி வியக்கிறான்  
19.  தலைவியைக் காண்பதே தன்னை வாட்டுவதாகத்  தனது ஆற்றாமையைத் தோழியிடம் தலைவன் உரைத்தல்  
24.  பிறர் அருமை அறியாத தனது அண்ணன்களைப் போன்று தலைவிக்கும் எனது வருத்தம் புரியவில்லை என்கிறான் தலைவன்  
17.  நான் தலைவியைக் குறித்து நன்கே அறிவேன் என்று தலைவன் கூறுவது  
8.  தலைவன் தோழியிடம் நயமாகப்  பேசி தனக்கு ஆதரவாக மனமாற்றம் கொண்டுவர விரும்புதல்  
20.  தலைவன் தரும் அன்பளிப்பை ஏற்க இயலாமல் மறுக்க வேண்டிய சூழ்நிலையை தோழி விளக்குகிறாள்  
21.  தலைவன் தலைவிக்குத்  தரும் அன்பளிப்பைத் தோழி ஏற்றுக் கொண்டு தலைவியிடம்  சேர்ப்பிக்க உதவுகிறாள்  
31.  உன்னால் தன் விருப்பம் நிறைவுறும் என்று எண்ணி உனக்கு அன்பளிப்புகளுடன் வருகிறான் தலைவன் என்கிறாள் தோழி  
22.  வீரம் மிக்க உன் அண்ணன்கள் அம்பினால் மற்றவரைக் கொல்வர், ஆனால் நீ உன் கண்களால் என்னைக் கொல்கிறாய்  
3.  தலைவனே உன் உறவால் தலைவியின் இயல்பு மாறியதைக் கண்டு இனி அவளைத் தினைப்புனம்  காக்க அனுப்பாமல் வீட்டில் இருத்திவிடுவார்கள்  
5.  தலைவியே அறுவடை நெருங்கும் அளவு பயிர் வளர்ந்துவிட்டது, இனி  தலைவனைப்  பார்க்க இங்கு வரும் வாய்ப்பு இல்லாது போகும்  எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்  
18.  பகலில் தலைவியை நாடி வந்த தலைவனைக் கண்டு தலைவியை விரைவில் மணம் புரிந்து கொள்ளச் சொல்வது  
29.  பலாமரக் காட்டருகில், காட்டாறு பாயும்  சோலைக்கருகில் உள்ள மணல் வெளியில் நானும் தலைவியும் பகலில் விளையாடுவோம் என்று தோழி தலைவனுக்குக் குறிப்பு கொடுக்கிறாள்  
4.  அழகிய என் தலைவியை என்னால் எங்கும் காண இயலவில்லையே  
6.  தலைவனே இரவில்  வருவதால் உனக்கு ஏற்படக்கூடிய இடையூற்றுக்குத் தலைவி  வருந்துவாள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள் 
7.  தலைவனே நீ இரவில் நீ வருவதை என் தலைவியால் தாங்கிக் கொள்ள இயலாது என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்  
11.  இரவில் மதம் கொண்ட யானைகள் உலாவும் வழியாகத் தலைவியைக் காண வரவேண்டாம்  
13.  பாம்புகளும் யானைகளும் நிறைந்த காட்டு வழியின் வழியே இரவில் தலைவிக் காண வரவேண்டாம் என்று தோழி கூறுகிறாள்  
10.  தலைவனே தேவர்கள் உலாவும் இடங்கள் வழியாகத் தலைவியைக் காண வருவதைக் கைவிடுங்கள்  
25.  உங்கள் நலனுக்கா தலைவி வருந்தும்படி அவளை இரவில் காண வரவேண்டாம்  
26.  உங்கள் நலனுக்கா தலைவி வருந்தும்படி அவளை இரவில் காண வரவேண்டாம்  
12.  செவிலியிடம் வெறியாடலைத் தவிர்க்கும்படியும், தலைவி அவளது காதலனை மணக்க விரும்புகிறாள் என்றும் தோழி அறிவுறுத்துகிறாள்
2.  தலைவியின் நெஞ்சத்தைக் கவர்ந்தவன் ஒருவன் உள்ளான்  செவிலித்தாயே!  
14.  தினைப்புனம் காக்கையில் மதங்கொண்ட யானையிடம் இருந்து காப்பாற்றிய தலைவனைத்தான் தலைவி மணப்பாள் என்று தோழி செவிலிக்குக் கூறுகிறாள்  
27.  தலைவிக்காக நீ வருவதைத் தாய் அறிந்து கொண்டாள், இனி காவல் மிகுதியாகும் எனவே தலைவியை விரைவில் மணம் முடிப்பாயாக  
16.  தலைவியை அடைய முடியாத ஆற்றாமையால் மடல் ஊரத் துணிந்த தலைவன்  அதைத் தோழிக்குத் தெரிவிக்கிறான்  
15.  தலைவனின் கோரிக்கையை ஏற்றுத் தலைவியை அவனுக்கு மணமுடிக்குமாறு நற்றாய்  தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும் அறிவுறுத்துகிறாள்  


உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி:  சிறகு 
அக்டோபர் 10, 2020



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 




அன்பின் ஐந்திணை - திணைமாலை நூற்றைம்பது

அன்பின் ஐந்திணை: திணைமாலை நூற்றைம்பது



தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாக;  புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும். 
இந்த அன்பின் ஐந்திணைகளை; 
          'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் 
          ஊடல் இவற்றின்  நிமித்த மென்றிவை 
          தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' 
                    (தொல். பொருள். அகத்திணையியல் நூற்பா-16) 
என்று தொல்காப்பிய நூற்பா வரையறுக்கிறது. 
ஆகவே, 
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ; 
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை ; 
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை ; 
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் ; 
ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்
ஆகிய நிலங்களுக்கு உரியவையாக நாம் அறிகிறோம். 

ஒரு திணைக்குரிய உரிப்பொருள் மயங்குவதில்லை. ஒரு பாடலின் உரிப்பொருளே அப்பாடல் அகத்திணையில் எந்தத்  திணையைச் சார்ந்தது எனத் தீர்மானிக்க உதவுகிறது.   குறிஞ்சித்திணைப் பாடல்களின் காட்சிகள் கருத்துகள் உரையாடல்கள் என எவற்றுக்குமே அதன் பொருண்மையான புணர்தலும் புணர்தல் நிமித்தமும்தான் அடிப்படை.  இதே வரையறையே மற்ற பிறதிணைப்  பாடல்களுக்கும் பொருந்தும். 

பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு.  தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, ஊரில் அலர் தொடக்கம், வரைவு வேட்கை, வெறியாட்டு ஏற்பாடு  என்று நிலைமையை அறிவுறுத்துதல்; குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; உடன்போக்கு, வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் தொடங்கி வளர்ந்து கைகூடுவதில் சங்ககாலத் தோழியின் பங்களிப்பு மிகுதி. 

திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய  'திணைமாலை நூற்றைம்பது' நூலின் பாடல்கள்  உதவுகின்றன.  மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர்  கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது என்ற நூல்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 'ஏலாதி' நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய  நூல் இது.  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும்  ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை  ஒழுக்கம்  குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன. 

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ளமையால்  'திணைமாலை' என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது.  இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக;  இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால்  மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும்  பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால்  இந்நூல் மொத்தம்  154 பாடல்களைக் கொண்டதாகும். 

இவற்றுக்கு மிகப் பழைய உரையும் உள்ளது.  அகத்திணை தொகுப்பாக அமைந்த மற்ற  கீழ்க்கணக்கு நூல்களில்  தலைப்பிற்கு ஏற்ப பாடல்களின் எண்ணிக்கை அமைந்திருக்க, இந்த நூல்  மட்டும் அந்த விதியிலிருந்து மாறுபடுவது குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியம் கூறும் அகத்திணைகள்  பற்றி அறிய இது ஒரு சிறந்த நூல் என்று இதற்கு உரை எழுதிய மகாவித்வான் ரா. ராகவையங்கார் தனது நூலின் முன்னுரையில் பரிந்துரைக்கிறார். ஐந்திணை இயற்கைக் காட்சிகள் அழகாக இந்நூலில் விவரிக்கப்படுகிறது. குறிஞ்சித் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்(அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.  

தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்று, ஒப்புமை கூறுவதற்கு அரிய இனிய தமிழ் மொழியில் சிறப்பாக ஆராய்ந்து இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலில், அகத்திணை கருத்துக்களை  வெறுத்தவர்களின்  வெறுப்பு விலகும்படியாக, முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் அகப் பொருளாகிய களவியல் கொள்கைகளைக்  கணிமேதாவியார் கனிவுடன் கூறினார் என்று நூலின் இறுதியில் இடம்பெறும் பாயிரம் குறிப்பிடுகிறது.   


நன்றி:  சிறகு 
அக்டோபர் 10, 2020


#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi