Showing posts with label ஐந்திணைமாலை. Show all posts
Showing posts with label ஐந்திணைமாலை. Show all posts

Saturday, January 16, 2021

அன்பின் ஐந்திணை – மருதம்

அன்பின் ஐந்திணை – மருதம் 



திணைமாலை நூற்றைம்பது நூலில் ஊடலும், ஊடல் நிமித்தமுமாகிய மருதத் திணை ஒழுக்கம் குறித்த பகுதி நூலின் இறுதியில் (பாடல்கள்:124 - 153)  30 பாடல்களைக் கொண்டு அமைகிறது. தலைவனின் பரத்தையர்  தொடர்பால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஊடல் தோன்றுவது பாடல்களில் இடம் பெறும் பொருண்மை.  மகாவித்வான் ரா. ராகவையங்கார் மற்றும் திரு. அ. நடராசபிள்ளை உரை நூல்களில் 128 ஆம்  செய்யுள் முதல் அதன் பின் வரும் இருபத்தேழு செய்யுட்கட்கும் பழைய பொழிப்புரை  கிடைக்கப் பெறவில்லை. 
 
தலைவி, தலைவன், தோழி, தலைவனின் பாங்கர் கூட்டம், பாணன், விறலி, பெரியோர், செவிலித்தாய், காமக்கிழத்தியும் அவளது தோழியும், தலைவன் தலைவியின் சிறு மகன், பரத்தையர் என இந்தப் பாடல்களில் பலரும் பங்கு பெறுகிறார்கள்.  ஆனால் தலைவனின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் எதுவும் திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்களில் இடம் பெறவில்லை.  தலைவியின் செவிலித்தாயிடம் தோழி பேசுவதாகவும் தலைவி மருதநிலத் தலைவனின் மகள் என்ற குறிப்பும் ஒரு பாடலில் கிடைக்கிறது.  பரத்தையர் குறித்து ஒரு சில பாடல்கள் தவிர்த்து, பெரும்பாலான பாடல்கள் குறிப்பிட்டாலும், பரத்தையர் நேரடியாக இடம் பெறவில்லை, ஒரே ஒரு பாடலில் மட்டும் காமக்கிழத்தி தலைவன் எப்படி மாறிவிட்டான் என்று அவளது தோழியிடம் கூறி வியப்பதாக இடம் பெறுகின்றது. தலைவிக்குப் பின்னர்த் தலைவனாற் கொள்ளப்பட்ட காமக்கிழத்தியையும், பரத்தையரையும் தலைவி எங்கையர் (என் தங்கை போன்று பின்னர் வந்தவர்கள்) என்று குறிப்பிடுகிறாள்.  

பாலையென்னும் பண்,  விளரி என்னும் பண், செவ்வழிப்பண் எனப் பல பண்களையும் மட்டுமின்றி அவற்றைக் கலவையாகவும் யாழில் இசைக்கும் திறமை உள்ளவனாகப் பாணன் காட்டப்படுகிறான்.   தலைவிக்கும் பாணனுக்கும் இடையிலேதான் உரையாடல்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன.  சற்றொப்ப மூன்று பாடல்களில் ஒரு பாடல் இவர்களுக்கு இடையேயான உரையாடல்களே. தலைவி பாணனைக்  கடிவதும், விரட்டுவதும், இகழ்ந்து பேசுவதும் என்ற பொருளில் இப்பாடல்கள் அமைகின்றன.  தலைவி தோழியிடம் தனது ஆற்றாமையையும், புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் என்றும், ஊடலைக் கைவிட்ட பிறகு தலைவனைக் குறித்து தோழியிடம் புகழ்வதும் என சில பாடல்கள் அமைந்துள்ளன. தலைவி தனக்குள் பேசிக் கொள்வதாக இரு பாடல்களும், தோழியும் அவ்வாறு தனக்குள் பேசிக் கொள்ளும் பாடல் ஒன்றும் அமைந்துள்ளன. 

சங்க இலக்கியங்களில் மருதத்திணைப் பாடல்களில் மரபாக, புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் திரியும் தலைவனின் செயலை மருதநிலக் கருப்பொருட்களின் மீது ஏற்றி உள்ளுறை உவமமாகப் பாடல்கள் அமைக்கப்படுவது ஒரு வழக்கம்.  எடுத்துக்காட்டுகள்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இயற்றிய அகநானூற்றுப் பாடல் (பாடல்-56); பரணர் இயற்றிய நற்றிணைப் பாடல் (பாடல்-260).  பாடலில் வரும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உவமேயத்தைப் பொருத்திக் காட்டும்படி குறிப்பாக அமைந்தால் அது உள்ளுறை உவமம் என்று சொல்லப் படும்.   பரத்தையர் உறவில் களிக்கும் தலைவனின் செயலைக் குறிப்பிடுகையில் உள்ளுறை  உவமமாக,  அவனை  ஊர் மேயும் எருமை மாடாகவும், மருத நில எருமை குளத்தில் புகுந்து ஆம்பல்களைக் கிழித்து (அதாவது, ஆம்பல்களான தலைவியின் தோழியர்களை வருத்தி)  குவளை மலர்களை உண்டு அசைபோடுவதாகவும் (பரத்தையர் குவளை மலர்களுடன் ஒப்பிடப்படுவார்) காட்டப்படும்.   தலைவியை மெல்லிய கரும்பாகவும், தனக்குக் கிடைத்துள்ள  கரும்பின் அருமை அறியாமல், அந்தக் கரும்பை மோதி விலக்கி குளத்தில் பாய்ந்து குவளை மலர்களை உண்டு அசைபோடும் எருமை மாட்டுடன் தலைவனை ஒப்பிடுவதை இந்த நூலிலும் காண முடிகிறது.  தலைவியே தலைவனை அவ்வாறு குறிப்பிடவும் செய்கிறாள் (பாடல்கள் - 137, 147, 148). 

மருத நில அகத்திணை ஒழுக்கத்தையும் இயற்கைக் காட்சிகளையும் அறிய திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்கள் மிகவும் உதவுகின்றன. திணைமாலை நூற்றைம்பது நூலின் மருதத் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவன், தலைவி, தோழி, பாணன், பரத்தையர் போன்ற எந்த ஒரு பாத்திரப் படைப்பும் ஒருவரே என்றோ, அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு மருத  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், திணைமாலை நூற்றைம்பது நூலின்  மற்ற பிற திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய 30  மருத  நிலப் பாடல்களையும் (பாடல்கள்:124 - 153) ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் ஊடலாகக்  கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.  



அன்பும் பண்பும் நிறைந்த தலைவி வளமான வயல்கள்  நிறைந்த அழகிய மருதநில ஊரின் தலைவனின் ஆசை மகள்.  அவள் தான் வாழும் ஊருக்கு அருகில் உள்ள மற்றொரு ஊரின் தலைவனிடம் காதல் கொள்கிறாள்.  அவனும் அவ்வாறே அவள் மீது காதல் கொண்டவனாக இருக்கிறான்.  அவனும் மருத நிலத்தின் ஊர்த் தலைவன்தான்.  அவனது ஊரில் அழகிய சிரல் (மீன்கொத்திப்) பறவை தனது பாட்டினை தங்கிப் பாடுகின்ற, பாய்ந்தோடும் நீர் வளம் நிறைந்திருக்கிறது. கழனிகளில் மலர்ந்த தாமரை மலர்கள்  நிறைந்திருக்கின்றன.  செந்தாமரை மலரோடு ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற பசுமையான கதிர்க் குலைகளையுடைய செந்நெற் பயிர்கள் நிரம்பிய வயல்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றது.  மண்ணில் படிந்தது போன்று தாழ்ந்து தொங்கும் குலையினையுடைய வாழை மரங்கள் நிறைந்த பசுமையான நல்ல வளம் மிகுந்த வயல்கள் நிறைந்துள்ளன.  அவனை மணம்  முடிக்க விரும்பும் தலைவிக்கு அவளது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். தனது காதலுக்குத் தன் இல்லத்தில் வரவேற்பில்லை என்பதால் தலைவியும் வேறுவழியின்றி தோழியிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டு தலைவனுடன் உடன்போக்கு செய்கிறாள்.  தலைவனுக்கும்  தலைவிக்கும், உடன்போக்கின் பின் தலைவன் மனையில் மண விழா நிகழ்கிறது. அதனைக் கேள்வியுற்ற செவிலித்தாய்  மணமக்களைக் காண வந்தபொழுது தோழி மணமக்களின் அன்புடன் கூடிய இல்லற வாழ்க்கையினை செவிலித்தாய்க்கு எடுத்துச் சொல்கிறாள்.

தலைவன் மீது மேல் மையல் கொண்டவளான, மருதநிலக் கிழாரின் மகளான நமது தலைவி, தனது கண் நிறைந்த கணவனாகிய காதல் தலைவனின் தோற்றம்  சிறக்கும் வண்ணம்  அவனுக்காக  அழகிய மலர் மாலை தொடுக்கிறாள்(140).   மணம் மிக்க சந்தனக் குழம்பு அணியப் பெற்ற அகன்ற மார்பின் மீது கூடியிருக்கும் தலைவி, அவன் மார்பை விட்டு நீங்காது பொழுதும் புலர்ந்துவிடும் வரை இணைந்திருக்கிறாள். அந்த விடியல் வேளையிலே, இல்லத்தின் அருகில் இருக்கும் நெற் குதிர்களின் உச்சியிலே  தங்கியிருக்கும் சேவலானது கூவி உறக்கத்திலிருந்து எழுப்ப, அதைக் கேட்டுப் பிற உயிரினங்களும் விழித்தெழுந்து இசையோடு பாடல்களைப் பாடத் துவங்கிவிடும் செவிலித்தாயே!  (143) என்று தலைவியும் தலைவனும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பில் திளைத்து நடத்தும் இல்லறத்தை மகிழ்ச்சியுடன் செவிலித்தாயிடம் கூறுகிறாள் தோழி.  

தலைவி கரு கொள்கிறாள்.  பிறக்கப் போகும் தனது குழந்தையின் வரவை எண்ணி மனதில் மகிழ்ச்சி கொள்கிறாள்.  ஆனால், நிலை மாறுகிறது! தலைவனுக்குப் பரத்தையர் தொடர்பு ஏற்படுகிறது.  அவன் அவர்களுடன் புனலாடி மகிழும் செய்திகள் தலைவியை எட்டுகிறது.  தலைவி மனம்  வருந்துகிறாள், அந்தச் செய்தியைத் தலைவனுடன் தொடர்பில் உள்ள பாணனே வந்து   தலைவியிடம்  சொல்கிறான்.  பாணனே! எனக்குத் தேவையற்ற செய்திகளை இங்கு வந்து கூறாதே. முள் போன்று துன்புறுத்தும்  சொற்களைக் கூறாது இவ்விடத்தை விட்டுச் சென்றுவிடு.  புதிய பரத்தையர் இல்லதிற்குள் தலைவன் நுழையும் முன்னர் அங்குச் சென்று அவன் வருகையை அவர்களுக்கு அறிவிப்பாயாக (126).  தலைவன் பற்றிய உண்மைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிராமல், எழுந்து செல்.  இங்குத் தலைவனின் இல்லத்தில் தனது மனைவியுடன் கூடிக் களிப்பதைக்  காரமான செய்கையாய்க் கருதி தலைவன் விலகுகிறான். பரத்தையருடன் கூடுவதை மிக விரும்பி வருகிறான் என்று தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்கும் நல்லவர்களாகிய அந்தப் பரத்தையரிடம் சென்று சொல் (127) என்று தலைவி பாணனிடம்  கூறி அவனை விரட்டுகிறாள்.  

தனிமையில் ஆழ்ந்துள்ள பொழுது, தலைவனின் நடவடிக்கை  அவள் மனதில் துயரத்தைக் கிளறுகிறது.   இவ்வாறு பரத்தையர் அணைத்து மகிழும் தலைவனின் மார்பை இனி  நான் அணைப்பது சரியல்ல(129). பரத்தை அவளது  மார்பின் மீது அணிந்திருக்கும் அழகிய மாலையின் வயப்பட்டு, அவளது மனம் போலச்  செயல்படும் மருத நிலத்து  ஊர்த்தலைவனது தொடர்பின்றி நயமாக விலகிச் சென்று அந்தத் துயருடன் வாழ்வதே மேலானது (128) என்றும் எண்ணி தனது நிலையை நொந்து கொள்கிறாள். தன்னைக் காண வரும் தோழியிடமும் புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் தொடர்பில் இருக்கும் தலைவன் பற்றிக் கூறி தலைவி வருந்துகிறாள்.  கரிய பெரிய கொம்புகளையும், சிவந்த கண்களையும் கொண்ட எருமை, வயலில்  பெரிய கொம்பு போல வளர்ந்துள்ள மெல்லிய கரும்புகளை மோதித் தள்ளி, அதன் சிறந்த கொம்புகளால்  ஆம்பல் மலர்களைக் களைந்து, அழகிய குவளை மலர்களையும் தின்று அழகான பற்கள் அசை போட வாயைத் தாழ்த்தி உண்பது போலத் தலைவனும் கரும்பு போன்ற என்னை விலக்கி, ஆம்பல் போன்ற எனது தோழியரைப்  புறம் தள்ளி, குவளை போன்ற  பல்வேறு பரத்தையர் பெண்களுடன் தலைவன் உறவாடுகிறான் பாராய் தோழீ! (137, 147) என்கிறாள். ஆனால், தனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையைப் பார்க்கத் திரும்பவும் வருவான் (148) என்பதை அறிவேன் என்கிறாள்.   

அவ்வாறு தலைவன் வருகையில் அவனிடம் கொண்டிருக்கும் ஊடலைக் கைவிட்டுவிடு என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  ஆனால் தனக்கு இரண்டகம் செய்த தலைவனை ஏற்க தலைவியின் மனம் இடம் தரவில்லை.  துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! தொடர்ந்து பலகாலம் கனிந்த அன்பினை  தலைவனின் உறவில் நான் பெறவில்லை.  ஆகவே, வெறுப்புற்று இருக்கும் எனது மனநிலை மாறினாலும் கூட, தனது செயலுக்காக வெட்கி நடுங்கும் தலைவனை நான் எப்பொழுதுமே  காண விரும்ப மாட்டேன் (153) என்று தோழியிடம் கூறுகிறாள்.   தலைவிக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் அழகிய குழந்தை பிறக்கிறது.  தலைவன் பிரிந்த துயரை மறந்து தனது மகனைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள் தலைவி.  அவள் எதிர்பார்த்தது போலவே, மகன் பிறந்த செய்தி கேட்டு தலைவன் தனது மகனைக் காண ஆவலுடன் இல்லம் திரும்புகிறான்.  தனது மனைவியைத் தழுவ முற்படுகிறான்.  ஆனால், தலைவி அவனை ஏற்க மறுக்கிறாள்.   தன்னுடைய முலைகளாலும், அணிகளாலும் முன்னே பரத்தையர்கள் தம் உறவுக்காகப் பெற்றுக்  கொண்ட பொருளாலும் உனது மார்பில் அவர்கள் பொருந்தியதற்கான சுவடு கலையும் முன்பே, உமிழ் நீரினைச் சிந்துகின்ற வாயினையுடைய என் மகன் முன்னர் வரும் தலைவனே!    (நீ என்னைத் தழுவினால்) எனது மார்பில் சுரக்கும் பால் உன் மார்பில் அணிந்துள்ள மாலையினைச் சிதைத்துவிடும், ஆகவே என்னைத் தழுவாதே, என்று தலைவி  தலைவனின் அணைப்பை மறுத்துக் கூறுகிறாள்(152). 

தலைவியைச் சமாதானப்படுத்தும் வகை அறியாத தலைவன் மீண்டும் பரத்தையர் இல்லம் திரும்புகிறான்.  பரத்தமை மேற்கொண்டு தலைவியை மறந்து நடந்த தலைவனிடம்  தலைவி பிடிவாதமான ஊடலைக் கொண்டிருந்ததால் அவன் அவளை விலக,  அதனைக் கண்ட பெரியோர் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனை அவளுடன் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள்.  தலைவனே! வீரப்போர்ப் புண்கள் மிகப்பெற்ற மனுவென்னும் அரசன் வகுத்த அறநெறி வழி நடப்பது என்ற பண்பு உன்னை விட்டு நீங்கி, நன்னெறி விலகி நீ வாழ்ந்தாலும், செங்கயல் மீனினைப் போன்ற கண்களையுடைய தலைவி, உன் நடத்தை கண்டு வருந்தாமல் நாணம் கொள்ளும் நிலையானது தலைவியிடம் பெண்மைப் பண்பு நிறைந்துள்ளதைக் காட்டுகிறது.  இது புது வகை இசை போல   உலகம் அறிந்திராத ஒரு புதுமை என்கிறார்கள்(149).  

நாட்கள் கடக்கின்றன.  வளர்ந்து வரும் மகன் குறித்த செய்திகள் வந்து சேரும் பொழுதெல்லாம் தலைவனுக்குத் தனது மகனைப் பார்க்க ஆவல் மேலிடுகிறது. பரத்தையர் இல்லத்தில் தங்கியிருக்கும், தனது யாழில் பல பண்களையும் இசைக்கும் திறமை கொண்ட பாணனிடம் தனது மனக்குறையைக் கூறுகின்றான். அழகிய குரல்வளம் கொண்டு பாடும் பரத்தையருடன் புணர்ந்து நான் விளையாடினேன் என்பதால், மணியொலி போன்ற குரலையுடைய மேன்மையான எனது தலைவி என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் பாணனே! என்று தலைவன் பாணனிடங் கூறுகின்றான் (141).  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள மனவேறுபாட்டைக்  களைய உதவும்படி தலைவன் கூறுகிறான்.  தான் வரவிருப்பதைத் தலைவியிடம் கூறச் சொல்கிறான்.   அவனது வேண்டுகோளை ஏற்று பாணனும் தலைவியின் இல்லத்திற்குத் தூது செல்கிறான். 

தலைவனின் புகழ் பாடி அவனது செயலுக்கான விளக்கங்களைக் கூறும்  பாணனின் உரையைக் கேட்கும்  பொழுது தலைவி பொறுமை இழக்கிறாள்.  பாணனே! அருமையான சிறு தேரினைத் தனது கையினாலே  இழுத்து உருட்டி விளையாடும் எனது மகன் பிறக்கும் முன்னர், இந்த இல்லத்தில் என்னுடன் அன்புடன் கூடி விளையாடியவன் எனது தலைவன். மாறாக, பின்னர்  எனக்குப் பின் வந்தவர்களாகிய பரத்தையர்களின் தோள்களில் மிகவும் விருப்பத்துடன் கூடி மகிழ்வதை விரும்பினான் (124).  மண்ணால் உருவாக்கப்பட்ட யானை சிலை மீது அமர்ந்து பாகன் போலக் கையில் கோலுடன் ஓட்டி விளையாடும் எனது மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன், அழகிய வளைவுகளைக் கொண்ட வளையல்களை அணிந்த பரத்தையரது சேரிக்குச் சென்றானா என்று சொல்வாயாக. அவனது  வாழ்க்கைத் துணையான எனது வீட்டின் வாயிலைத் தாண்டிச் சென்றானா அவன்?  சொல்வாயாக என்று தலைவி பாணனிடம் வினவினாள் (125).  எனக்குப் பின்னவளாகிய பரத்தையோடு தலைவன்  இயல்பாகக் கூடி மகிழ்ச்சியுடன் கிளர்ச்சியடைந்து வாழ்கின்றான்.  அவ்வாறே, தனது சின்னஞ்சிறு கைகளை அசைத்தும், மழலை பேசியும் பொருள் புரியாத வகையில் இங்கே  குழறும் மொழியுடன் ஓடிவிளையாடி நன்கு வளரும் எனது மகனுடன் நானும் நலமாகவே வாழ்கிறேன். ஆதலால், எனக்கொரு குறையும் இல்லை. தலைவன் வருகையைக்  கூற வந்த பாணனே,  என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும் (136) என்று  என்று தலைவி பாணனிடம்  கூறி  அவனை அனுப்பிவிடுகிறாள்.  

தலைவியையும் குழந்தையையும் காண வருகை தரும் உறவினரும், பெரியவர்களும் பிரிந்திருக்கும் இருவரையும் இணைத்து வைக்கத் தங்களால் இயன்றதைச் செய்ய முடிவெடுக்கின்றனர்.  இருவரிடம் ஒருவர் குறித்து மற்றவர் பெருமையைப் பேசி தலைவன் தலைவி இருவருடைய மனங்களையும் மாற்ற முயல்கின்றனர்.  தலைவனே! இம்மண்ணில் வாழ்பவர்களில் சான்றோர்களும் சிறிது நாட்களிலேயே தலைவியின் பெருமை உணர்ந்து அவளைப் பாராட்டி அவளுக்குத் தொண்டு செய்யும் வண்ணம், பெண்ணின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் முத்துமாலைகளைத் தவழ விட்டுள்ள  தலைவி மிகவும் எளிமை இனிமை அன்பின் உறைவிடமாக இல்லறம் நடத்தி வருகிறாள் என்று தலைவியின் இல்லத்தில் நுழைந்து பழகி அவள் இல்லறம் நடத்தும் பாங்கினைக் கண்ணுற்ற ஒருவன் தலைவனிடம் சென்று, தலைவி இல்லறத்தினை ஊரார் மெச்சும் வண்ணம் மாண்புடன் நடத்துவதை அவனுக்குத் தெரிவிக்கிறான் (146).  மற்றும் சிலர் தலைவியிடம் வந்து தலைவன் கூறும் விளக்கங்களைக் கூறி தலைவனின் பிழையைப் பொறுக்கும் படியும், அவன் அவளுடன் இணைய விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.  உண்மையான போக்கினைக்  கொண்டிராத தலைவனின் பொய்மையான மாய மொழிகளைக்  கேட்டது போதும். தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது.  என்னிடம்  காதல் கொண்டு தலைவன் செய்யும் செயல்களே கூடல் கருதி நிற்கும் அவனின் விருப்பத்தைக் காட்டுகிறது, ஆகவே  மேலும் பொய் உரைக்காமல் போய்ச் சேருங்கள் என்று தலைவி வாயில் தேடி வந்து தலைவனைப் புகழ்பவர்களுக்கு  மறுமொழி  கூறி அனுப்பிவிடுகிறாள்  (130).

தலைவனின் தோழர்களும், தலைவியின் தோழியரும் பிரிந்திருக்கும் தலைவனையும் தலைவியையும்  இணைக்கும் முயற்சியில் அடுத்து களம் இறங்குகிறார்கள்.   தலைவியின் தோழியர்களில் ஒருத்திக்கு செம்பட்டினை  உடுத்து வித்து, அவள் அணிந்துள்ள  அணிகலன்கள் எல்லாம் நிறம் மாறும்படி செஞ்சாந்தைப் பூசு வித்து, மிகுந்த அக்கறையோடு சிவந்த குவளை மலர்களையும் சூட்டி அவளைத்  தலைவன்   வாழும் பரத்தையர் வீடு நோக்கி அனுப்புகிறாள் தோழி.   தன்னைப் பிரிவதற்காகப் பரத்தை உன்மீது என்னதான்  வசைபாடினாலும், பரத்தைக்கு  மறுமொழி எதுவும் கூறாது வீடு திரும்புக,  உன் குலம் தழைக்க  தலைவியுடன்  நீ இணைய வேண்டும் என்ற  அறிவுரையையும்  கூறச் சொல்லி தோழி ஒருத்தியை அனுப்பியுள்ளாள் தலைவனே.  ஆகவே, தோழி  தரும் குறிப்பறிந்து நடப்பாயாக என்று தலைவனிடம் அவனுடைய பாங்கர்கள்  கூறுகின்றார்கள் (144). விறலியைத் தலைவன் தலைவியின் மனதை மாற்ற அனுப்பிவிட்டு, தலைவனும் வீடு திரும்புகிறான்.  விறலி தலைவியைப் பாராட்டிப் பேசி தலைவன் இனி தவறிழைக்காமல்  இருப்பான் என்று கூறுகிறாள்.  தலைவி  விறலியின் கூற்றை ஆராய்ந்து மனம் மாறுகிறாள்.  தலைவனை ஏற்றுக் கொள்கிறாள்.  தலைவன் அனுப்பிய பல தூதுகளை மறுத்து விட்ட தலைவி விறலியின் தூதினை மதித்து ஏற்று, தலைவனோடு மீண்டும் மகிழ்ந்திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்த விறலி, அருகே இருந்த தோழியினிடத்தே தனக்குக் கிடைத்த  நல்வாய்ப்பிற்கு நன்றி பாராட்டிக் கூறுகின்றாள். தலைவிக்கு யாவரையும் தனது உறவு என்று பாராட்டும் பெருந்தன்மையான குணம் குறையாது இருப்பதாலோ; அல்லது  பழமையானவை மக்களுக்குப் பலவகையில் பயன் தருவதை உணர்ந்திருக்கும் நிலையினாலோ;  உரிமையுடன்  தக்க குலத் தலைவர்கள் பலகுடிமக்களையும் உறவாக ஏற்றுக் கொள்ளும் முறையில் தலைவியும் நாய் போன்று மிகவும் தாழ்மையுள்ள என்னையும் ஏற்றுக் கொண்டுள்ளாள்.  தலைவியின் அருள் கிடைக்கப் பெற்றேன் நான்  என்று நெகிழ்கிறாள் விறலி (134). 

தோழியும் தனது பங்கிற்குத் தலைவனைப் புகழ்ந்து அவன் மனதை மாற்றுகிறாள். குளிர்ந்த குளத்தினிடத்திலே மலர்ந்துள்ள தாமரைப் பூவிலேயுள்ள, பெரிய ஆண் அன்னப் பறவையினைக் கீழ்ப்படியும் பெண் அன்னப்பறவையானது நீரிலிருந்து  விரும்பும் படியான கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்து ஊர்த் தலைவனே!  வளம் மிக்க  குளத்தினைப் போன்ற உனது பரந்த மார்பானது, புளியம்பழத்தினை மேலும் மேலும் சுவைக்க ஏற்படும்  விருப்பம்போல் விரும்பும் சிறப்பைக் கொண்ட ஒன்றாகும்.  உன்னுடன் கூடி வாழும் தலைவி  உன் மீது கொண்ட மாறாத மயக்கத்திற்கு அதுவே நோய் நீக்கும் மருந்து, என்று தோழி தலைவனைப் புகழ்ந்து அவனிடம் கூறுகின்றாள் (142).  பிரிந்தவர் கூடினர்.  தலைவன் களிப்புடன் தனது மகனுடன் விளையாடுகிறான். தலைவியின் மீது அன்பைப் பொழிகிறான். இதனால் தலைவியும் மனம் மாறிவிடுகிறாள்.  மருதமரங்களுடன் காஞ்சி மரங்களும் இணைந்து உயர்ந்து வளர்ந்துள்ளதால் அவை பரப்பும் நிழலின் கீழே, காளைகளுடன் உழவில் ஈடுபட்டுள்ள  உழவர்கள் எழுப்பும் ஒலியுடன், கழனியில் நாரைகளும் வாத்துக்களும்  எழுப்பும் ஒலியும் சென்று கலந்திருக்க; குளிர்ந்த அழகிய வயல்கள் நிறைந்தது; அமர்ந்து பயணிக்க முடியாத சிறிய பொம்மைத் தேரினை உருட்டும்  எனது மகனின் தந்தையாகிய எனது தலைவனின் மருத நிலத்தின் ஊர் ஒரு சிறந்த வாழிடம் என்று ஊடலைக் கைவிட்டு, தான் தலைவனுடன் மீண்டும் இணையக் காரணமாக இருந்த மகனையும் தன் தலைவனையும், அவர்கள் வாழும் ஊரின் சிறப்பையும்  புகழ்ந்து தலைவி தோழியிடம்  கூறுகிறாள் (138, 139).

தலைவியின் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கினாலும், தலைவனின் காமக்கிழத்தி தன்னைப் பிரிந்து சென்றுவிட்ட தலைவன் மீது ஆத்திரம் கொள்கிறாள்.  தலைவன் தலைவியிடம் சென்றவுடன் தன்னை மறந்து எப்படி மாறிவிட்டான்?  தலைவி ஆட்டுவிக்கும்படி எல்லாம் ஆடுகிறானே என்று மனம் குமைகிறாள். தோழியே! என்ன இது!!! இந்த மண்ணிலும் விண்ணிலும் இதற்கு முன்னர் கேட்டதும், கண்டதும் இல்லை, அதனால் அது குறித்து ஒரு முடிவும் அறியேன் நான். நம்மை விட்டு நீங்கிய தலைவன், மனைவியின்  பின் சென்று, அவள் கூறுவதைக் கேட்டு, அணங்குபோன்ற  தலைவி ஆட்டுவிக்கும் படி நடந்து அவள் கட்டளைகளைத் தட்ட விரும்பாமல், அவன் அணிந்துள்ள அணிகலன்கள் குலைந்தாடும் வண்ணம், மிகவும் பணிவுடன் தலைவியின்   ஏவல்களை நிறைவேற்றுகிறானே!!! என்று காமக்கிழத்தி தன் தோழியிடம்  கூறுகின்றாள்(135).  பாணனைத் தலைவன் வீட்டிற்குத்  தூது அனுப்புகிறாள் காமக்கிழத்தி.  அவனைத்  தலைவனைச்  சந்திக்க விடாமல் தலைவாயிலேயே தடுத்து நிறுத்தும் தலைவி பாணனை விரட்டி அனுப்புகிறாள்.  

பரத்தையர் வீட்டில் இருக்கும் பாணனே! நான் வாழும் இந்த இல்லத்தை நீ அத்தகைய பிற பெண்கள் வாழும் வீடு என்று தவறாகக் கருதி விட்டாய் போலிருக்கிறது.  அது போன்ற பெண்கள் வாழும் வீடு இது என்று தவறாக எண்ணாமல், இங்கிருந்து கிளம்பு. என் பின்னவர்களாகிய பரத்தையரின் வீட்டில்  மாலைப் பொழுது மறையும் நேரம்  மணவிழாத் தொடங்கப் போகும் நேரத்திற்குள் பரத்தையர் மனைக்குச் சென்றுவிடு (132).   சேற்றில் விளையாடுகையில் கிண்கிணி என ஒலிக்கும் கால் சலங்கை அணிந்த என் மகனின்,  செம்மையான பொன்னில் செய்யப்பட்ட நெற்றிச் சுட்டியில் புழுதி படர, இந்த வீட்டின் முன் முற்றத்தில் தன் மகனுடன் விளையாடும்  என் தலைவன், பண்பால் வேறுபட்ட பெண்களான பரத்தையரின்  வீடு சென்று விளையாட விரும்புவானோ? (விரும்பமாட்டான்) ஆகவே, அழகிய கோலுடன் அமைந்த யாழைக் கொண்ட பாணனே, நீ வீணே காலந்தாழ்த்தாது எனக்குப் பின்னவர்களான பரத்தையர் இல்லம் நோக்கிச் சென்றுவிடுவாயாக (151). முன்னர்  தலைவனுக்கு மாலை நேரத்தில் இசைக்கவேண்டிய பண்ணினைப் பாடி அவனுக்கு நீ பணி செய்ததில்லையோ; காலைவேளைக்குரிய  பண்ணினைப்  பாடவேண்டிய நிலையினை அறியாதவனாக விளங்கினாய் அப்பொழுது.  உனது நோக்கமும், நீ எப்படிப்பட்டவன் என்பதையும் நான் நன்கே அறிவேன்.  குறைவறாது நீ கூறும் பொய்களுக்கு மயங்குபவர்  இடம் தேடிச் சென்றுவிடு (133).  நற்பண்பு சிறிதும் அற்ற பாணனே!  தலைவனது கடந்த காலச் செய்திகளை, கொடிய சொற்களால் விவரித்துக்  கிண்டலாக என்னிடம் நினைவூட்டும் வகையில் சொல்லி, ஊடல் விலகி எனக்கும் தலைவனுக்கும் இடையே மீண்டும் தொடங்கப் பெற்றுள்ள உறவினை உன்னுடைய சொற்களால் துண்டிக்க  வேண்டாம்.  தலைவனின் கடந்த கால வாழ்வு குறித்துப் புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் நான் நன்கு அறிவேன் (131) என்று தலைவி பாணனிடம் கூறி அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள். 

தனது முயற்சி பலிக்காது சோர்ந்து திரும்பும் பாணனை வழியில் சந்தித்து விவரம் அறிகிறான் தலைவன். பல பண்களையும் கலந்து யாழில் இசைக்க வல்ல பாணனே! ஆராய்ந்து பார்த்தால் தலைவியைப் போலச் சிறந்த ஒரு பெண்ணை எங்கும்  காண இயலாது.  எண்ணிப் பார்த்தாலும் இன்று என் தலைவிக்கு நிகரான பெண்ணொருத்தி  கடல் சூழ்ந்த இந்த மண்ணுலகில் இல்லை. மறைந்து நடுகல்லாய் சமைந்துவிட்ட முன்னோர்களிலும் அத்தகைய பெண் இருந்ததில்லை. சிறப்பான  விண்ணுலகில் யாரேனும் இவளுக்கு இணையான சிறப்பு கொண்டவராய் இருக்கக் கூடும் (150) என்று ஊடலைக் கைவிட்டு, மன்னித்து  தன்னை ஏற்றுக்  கொண்டு தனக்கு வாழ்வளித்த தலைவியைப் புகழ்ந்து கூறும் தலைவன், பாணனிடம் தன்னைத் தொடர்வது இனி பயனளிக்கப் போவதில்லை என்று உணர்த்துகிறான்.  தலைவனும் தலைவியும் தங்கள் மகனுக்கு ஐம்படைப் பூட்டி, பெயர் சூட்டும் விழா நடத்துகிறார்கள். மகிழ்ச்சியுடன் அவர்கள் ஒருசேர இருப்பதைக் காண்கிறாள் தோழி.  பாடல்களின் ஒலியும், இன்னிசைக் கருவிகள் எழுப்பிய பண் ஒலியும், வளையாது நேராக அமைந்த புல்லாங்குழலினது இசையும் என வகை வகையான பல இசைகளும் கூடி ஒலிக்கும் வேளையில்;  வளைந்த நச்சுப்பற்களைக் கொண்டிருந்த பாம்பினைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த மந்திரமலை போன்ற சிறப்பு அடைந்த தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு  மருத நிலத் தெய்வமாகிய இந்திரனைப் போலத் தலைவியின் இடப்பக்கம் வந்து நிற்கின்றான் (145) என்பதைத்   தலைவியின் மகனுக்கு ஐம்படை பூட்டி பெயரிடும் விழாவில் காணும் தோழி மனம் மகிழ்கிறாள்.

 

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
140.  தனது கணவனின் தோற்றம் சிறக்கும் வண்ணம் அவன் மேல் காதல் கொண்ட தலைவி அவனுக்கு அழகிய மலர்மாலை தொடுக்கிறாள் செவிலித்தாயே! 
143.  தலைவனும் தலைவியும் கொண்டிருக்கும் அன்பின் நெருக்கத்தால் விடியும் வரையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில்லை செவிலித்தாயே!
126.  தேவையற்ற செய்திகளை என்னிடம் கூறாது  சென்றுவிடு, பரத்தையரிடம் சென்று தலைவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று சொல் பாணனே!
127.  மனைவியைக் கூடி மகிழ்வதைவிடப் பரத்தையரே தலைவனுக்கு  விருப்பம் என்று அந்தப் பரத்தையரிடம் போய்க் கூறு பாணனே!
129.  தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று பரத்தையுடன் புனலாடும்  செய்தி கேட்ட தலைவி மனம் வருந்தி பரத்தையர் கூடும் தலைவனின் மார்பைத் தான் இனி அணைப்பது நல்லதல்ல என்று எண்ணுகிறாள். 
128.  ஆற்று நீரில் பாய்ந்து ஆடும் பரத்தையர் மனம் போலச் செயல்படும் தலைவனை விலகி, அவன் இல்லாது  துயர் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதே நல்லது என்று தலைவி எண்ணுகிறாள். 
137.  தலைவன் வயலில் புகுந்து பல்வேறு மலர்களைத் தின்னும் எருமை போல பற்பல பெண்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறான் தோழி!
147.  புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் தோழியே!
148.  புறத்து ஒழுக்கம் மேற்கொண்ட தலைவன் பரத்தையர் உறவுக்குப் பின்னர் தனது மகனை நினைத்துக் கொண்டு வீடு திரும்புவான்  தோழியே!
153.  துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! நான் எப்பொழுதுமே  தலைவனைக் காண விரும்ப மாட்டேன். 
152.  உன் மார்பில் நீ அணிந்துள்ள மாலையினை என் முலைப்பால் சிதைக்கும், ஆகவே என்னைத் தழுவ வேண்டாம்  தலைவனே!
149.  தலைவியின் ஊடல் கண்டு விலகும் தலைவனிடம், தலைவி அவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனைச் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள்.
141.  எனக்குப் பரத்தையர் தொடர்பு உள்ளது என்று  என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் எனது தலைவி பாணனே !
124.  எனது மகன் பிறக்கும் முன்னர் என்னுடன் கூடி மகிழ்ந்திருந்த என் தலைவன் இப்பொழுது பரத்தையர்களை விரும்பி அவர்களைக் கூடி மகிழ்கிறான் பாணனே. 
125.  பாணனே,  என் மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன் இந்த வீட்டின் வாயிலைத் தாண்டி பரத்தையர் இல்லம் சென்றதுண்டோ? சொல்வாயாக!
136.  தலைவன் வருகையைக்  கூற வந்த பாணனே,  என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும்.
146.  தலைவி தனது பண்பின் மேன்மையால் சான்றோர் மெச்சும்படி இல்லறம் நடத்துகிறாள். 
130.  தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது, மேலும் பொய் உரைக்காமல் செல்லுங்கள் மக்களே என்கிறாள் தலைவி. 
144.  தலைவனே! தோழியின் குறிப்பை அறிந்து, பரத்தை என்ன வசை கூறினாலும் அதற்கு மறுமொழி ஒன்றும் கூறாது, உன் குலம் தழைக்க தலைவியுடன் கூட நீ இல்லம் திரும்புக என்று பாங்கர்கள் கூறுகின்றார்கள்.   
134.  தலைவியின் பெருந்தன்மையால் அவள் என்னை ஏற்றுக் கொண்டது நான் அடைந்த பேறு என்று விறலி தோழியிடம் கூறுகிறாள். 
142.  தலைவனே! உன் மீது மயக்கம் கொண்ட தலைவிக்கு உன் சிறந்த மார்பைச் சேர்வதே அவளது காதல் நோயைத் தீர்க்கும்  மருந்தாக அமையும். 
138.  எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
139.  எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
135.  தோழியே! தலைவன் தனது மனைவி ஆட்டுவித்தபடி அவள் ஏவிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறான் என்கிறாள் காமக்கிழத்தி.   
132.  பரத்தையர் வீட்டில் வாழும் பாணனே, இந்த வீடு அத்தகைய பெண்கள் வாழும் வீடல்ல,  பரத்தையர் வீடுகளுக்கே சென்றுவிடு. 
151.  பாணனே! தலைவன் தன் மகனுடன்தான்  விளையாட விரும்புவான், பரத்தையர்களுடன் அன்று. 
133.  பாணனே! நீ சொல்லும் பொய்களுக்கு மயங்குபவர் உள்ள இடம் தேடிச் சென்றுவிடு என்று தலைவி கூறுகிறாள்.  
131.  தலைவனின் கடந்த கால நடத்தை குறித்து நான் நன்கே அறிவேன், எங்களுக்குள் கலகம் மூட்டும் முயற்சியைக் கைவிடுக பாணனே! 
150.  என் குற்றத்தை மன்னித்து என்னை ஏற்றுக் கொண்ட என் தலைவியைப் போலச் சிறந்த பெண்ணொருத்தி இவ்வுலகில் கிடையாது பாணனே!
145.  தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு தலைவியின் இடப்பக்கம் நின்று விழாவில் பங்கேற்றான். 





உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி: சிறகு
ஜனவரி 16, 2021



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 



Saturday, January 2, 2021

அன்பின் ஐந்திணை – முல்லை

அன்பின் ஐந்திணை – முல்லை






"மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை நிலம் குறித்து வரையறுக்கிறது. இப்பகுதியில்  மிகுந்துள்ள முல்லை மலரின் பெயரினைத்  தாங்கியுள்ள முல்லை நிலத் திணையின் பெரும் பொழுது கார்காலம் எனவும், சிறுபொழுது மாலை நேரம் எனவும் நிலத்துக்குரிய பொழுதுகளாக அமைந்து வருகிறது. காடும், காடு சார்ந்த  முல்லை நிலம், செம்மண் பரந்திருத்தலால் செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது.  

முல்லைத்திணைக்குரிய  ஒழுக்கம் என்பது தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கி ஆற்றியிருக்கும்  இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்ற ஒழுக்கமாகும்.   தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் வராத நிலை கண்ட தலைவி மனம் கலங்கி தோழியிடம் புலம்பும் வகையிலும், தோழி தலைவியின் துயரை ஆற்றுவிக்கும் வகையிலும் பாடல்களின்  கருத்துகள் அமைவதைக் காணலாம்.  திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்களில்  முல்லை நில வளமையும் தோற்றமும், அழகிய மழைக்காலமும், மயங்கும் மாலைப் பொழுதும் மிக மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்களில் தொன்மக் கதைகளும் இடம் பெறுகின்றன.  வரிசையில் முதல் பாடலிலேயே மாமர வடிவில் கடலில் புகுந்து ஒளிந்து கொண்ட சூரனை முருகன் தனது வேலால் அழித்த தொன்மக் கதை இடம் பெறுவதைக் காணலாம்.  மழை முகில் சூரனை ஒழித்த முருகனின் வேல் போல ஒளி கொண்டு மின்னியதாகக் காட்டப்படுகிறது (93).  கண்ணன் சக்கரப் படையைச் செலுத்தி யானையின் மத்தகத்தைத் தாக்கி அதனைக் கொன்ற தொன்மக் கதையும் (97)  இடம் பெறுகிறது.   யானையின் மத்தகத்தில் புதைந்த சக்கரம் போல  மலையின் பின் வட்ட வடிவப் பகலவன் மறைவதாக ஒப்பிடப்படுகிறது.   அதுமட்டுமின்றி, கருத்து இருண்ட வானத்திற்கும்,  வெண்மையான பாலொளி சிந்தும் நிலவிற்கும் கண்ணனும் அவனது அண்ணன் பலராமனும் ஒப்புமையாகக் காட்டப் படுகிறார்கள்(96, 97).  

முல்லைத் திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும் பல பாடல்களில் மழை தோன்றும் அறிவியல் கருத்தும்  இடம் பெறுகின்றது.  முல்லைத் திணைக்கான 31 பாடல்களின் 7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) கடல் நீர் கதிரவன் வெப்பத்தால் மேகமாகிக் குளிர்ந்து மழையாகப் பொழியும்  அறிவியல் உண்மை கூறப்படுகிறது. 

பாடல்களில் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தலைவி ஒருமுறை (பாடல் 108 இல்)  "உருமுடை வான் ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு"  என்று கூறுகிறாள்.  அதாவது, தோழியே! இடியோடு கூடிப் பெய்கின்ற இம்மழை, என் போன்று காமம் கொண்டவர்களுக்கு  இறப்பு என்ற ஒன்று  நீங்கலாக மற்ற பிற துன்பங்களையும் உண்டாக்குவதாகும் எனத் தலைவி குறிப்பிடுகிறாள்.  அதற்குப் பாடல் வரிகளை மட்டும் வைத்துப் பொருள் கொண்டால் இவ்வாறுதான் பொருள் கொள்ளலாம்.  இருப்பினும் பழைய உரையில், பிரிவினால் காதலர் கொள்ளும்  நோய் வகை பத்து என்ற ஓர் எண்ணிக்கையையும், அதில் இறுதியில் உள்ள மரணம் என்பது தவிர மற்ற ஒன்பது துன்பங்களும் தலைவியை வருத்துகிறது  எனக் குறிப்பிடப்பட்டு ஒரு காதல் நோய்களின் பட்டியலும் கிடைக்கிறது.  காதலர் எதிர்கொள்ளும் பத்துவகை நோய்கள் என்பது அரியதோர் தகவலாக இருப்பதால் அது இங்குக் கொடுக்கப்படுகிறது. 
பத்து வகைக் காதல் நோய்த் துன்பங்கள்:   1. அன்பொடு பார்த்தல்,  2. உளங்கொடு பற்றல்,  3. புணர்ச்சி வேட்கை,  4. உறக்க மொழிதல்,  5. உடல் மெலிதல்,  6. உணர்வொழிதல்,  7. நாணழிதல்,  8. வாய்விட்டரற்றல்,  9. மயக்கமுறுதல் 10. இறப்பு.  

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்  திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு முல்லை நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  மற்ற பிற  திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய  31 முல்லை நிலப்  பாடல்களையும் (பாடல்கள்: 93-123)  ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. 

திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லை நிலப் பாடல்களில் இடம் பெறுபவர் தலைவியும் தோழியும் மட்டுமே.  தலைவன் ஒரே ஒரு பாடலில் மட்டுமே இடம் பெறுகின்றான்.  அவனுக்குத் தோழனும் கிடையாது.  தலைவி, தோழி தலைவன் என எவருக்குமே பெற்றோர் உடன் பிறந்தவர் போன்ற குடும்ப உறவுகளோ, கடந்த காலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்ட  நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்த குறிப்புகளோ கூட இப்பாடல்களில் கொடுக்கப் படவில்லை.  ஆகையால் இதைக் கதை வடிவிற்குக் கொண்டு செல்வதைவிட ஓரங்க நாடகக் காட்சி ஒன்றில்,  மான் போல  மருண்டு நோக்கும்  இளமங்கையான தலைவிக்கும்,  வாள் போன்ற நீண்ட கண்களையுடைய அவளது தோழிக்கும் இடையே நடக்கும் உரையாடலாகவே காட்டிச்  செல்ல இயலும். 

தலைவன் திரும்பி வரக் காலம் தாழ்த்துகிறானே என்று கலங்கும் தலைவியின் கவலைதான் எல்லாப் பாடல்களிலும் ஒலிக்கிறது.  தோழியும் தக்கத் துணையாகத் தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.  கண்முன்னே கார்காலத்தின் சுவடுகள் தெரிந்தாலும் கூட தலைவன் திரும்புவதாகச் சொன்ன கார்காலம் இன்னமும் துவங்கவில்லை என்னும்  அளவிற்குப் பொய்யுரைத்து தலைவிக்கு ஆறுதல் கூறும் நிலைக்கும் செல்கிறாள்.  உச்சக்கட்டக் காட்சியாகத் தலைவன் வருகிறான், அவன் வரவினால் தலைவி  மகிழ்ந்தாள்  என்ற வகையில் ஒரு சிறுகதையாக இப்பாடல்களைத் தொகுக்கலாம். வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.



அழகிய முல்லை நிலப்பகுதியில், வீட்டின்  தோட்டத்தில் அமர்ந்து தலைவியும் தோழியும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  கார்காலத்தில் தளிர்த்து வளரும் தளவமாகிய செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தினைப் பற்றி அணைத்துத் தழுவிப் படர்ந்திருக்கின்றன.  மழை பொழிந்து முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி முல்லை நிலப்பகுதி அழகாக மாறி இருக்கின்றது. பொன்னால் செய்யப்பட்ட சரங்களாகக் கொன்றை மரத்தில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.  காந்தள் மொட்டுக்கள் பூத்து நிற்கின்றன. சாதாரி பண்ணொலி போல  இசை பாடிய வண்ணம் பூக்கள்  தோறும் வண்டுகள் பறந்து செல்கின்றன. முல்லை நிலமெங்கும் ஆண் மான்கள் தம்முடைய பெண்மான்களுடனே கூடிக் களித்திட, அவற்றின் குட்டிகளும் அவற்றோடு சேர்ந்து குதித்துக் கும்மாளமிடுகின்றன. மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. கருக்கொண்டு பூத்துள்ள காயாம்பூச் செடியின் பூங்கொத்துகளை,  இறகுகள் தொகுதியாக அமைந்த ஆண் மயிலின் தோகை என்று எண்ணி, அஞ்சி விலகிப்  பின்வாங்கி, இடியால் தாக்குண்ட பூக்களையுடைய வெண்காந்தளின் அருகிலே சென்று  நாகப்பாம்பானது அந்த வெண்காந்தள் பூ போன்றே தன் உருவை மறைத்து நிற்கின்றது. இடையர்களின் குழலோசை மனதைக் கவரும் வண்ணம் ஒலிக்கிறது.  அவர்கள் பறியென்னும் படுக்கைக்கு மேலாக ஓலைப்படல் வேயப்பட்டிருக்க, பறிக்குக் கீழாக    பிறியோலையை விலக்கி அழைத்தும் அதட்டியும் ஆடுகளைப் படலுக்குள்  அடைக்கிறார்கள்.  பகலவன் மலைத்தொடரின் பின் சென்று மறைந்ததால் இருள் பரவ,  நிலவு தோன்றி  அவ்விருளைத் தனது வெண்மையான  நிலவொளியினை வெளிவிட்டு விரட்டிவிடுகின்றது.  

கார்காலத்தில் திரும்புவேன் என்று தலைவன் அளித்த உறுதிமொழியை நினைத்து அவன் இன்னமும் வராததால் தலைவி மனம் கலங்குகிறாள். தனது துயரை தோழியிடம் கூறுகிறாள்.   

மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது (94).  கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக !  (98). கார்காலத்து முல்லைக்கொடிகள்  குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதையும்  காண்பாய் தோழி! (105).  செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே (93).  மாலை மயக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் (97).  புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன (101).  இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத்  துன்பத்தைத் தரும்  தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி! (96).  

முன்னர் பிரியும் பொழுது, தன் விருப்பத்திற்கு நான் இணங்க வேண்டும் என்பதற்காக, கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கொடுத்த உறுதிமொழி தவறிப் போனது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை.  தோழியே! ஆதலால், உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் (100).  தலைவனின் பிரிவால்  என் மேனியின் ஒளி மங்கியது,  ஒளியிழந்தன என்னுடைய கண்களும்,  என் தோள்களும் அழகினை இழந்தன. எனது  மெல்லிய விரல்களும் தலைவனைப் பிரிந்ததால் நலமிழந்த நாட்களை எண்ணத் துவங்கி, அந்த நாட்களும்  எண்ணிக்கையில் அதிகமானதால் விரல்களும் தேய்ந்து விட்டன (99).  கார்காலத்தில் திரும்புவேன் என்று உறுதி கூறிய தலைவனின் மொழியும் பொய்யாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாத நானும் தலைவன் வரவை எதிர்நோக்கி கடமையாக  எனது உயிரை  வருத்திக் கொண்டிருக்கிறேன் (102).  துணையின்றித் தவிக்கும் காதலர்கள் துயருற்று இறவாமல் வாழும் வகை ஏதேனுமிருப்பின் என்னவென்று எனக்கு அதை உரைப்பாயாக  தோழி (111). 

கார்காலத்தில்  பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே! என்று தலைவி கொன்றை மரத்தை நோக்கி தோழியின் காதில் விழும்படி கூறுகின்றாள் (104).   தோழியும் தலைவியின் துயர் நீக்கும் பொருட்டு இது கார்காலம் அல்ல என்று சொல்லிவிட எண்ணுகிறாள். அவளும் மரத்தை நோக்கி,  கார்காலத்தில் பொழியும் மழை போலச் சீரான மழை பொழியாத பொழுதும் செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே! நீ  இவ்வாறாகப் பூத்திருப்பதைக் கண்டு  கார்காலம் துவங்கிவிட்டதோ என்று தலைவி கருதும்படி  செய்கிறாய்.  இவளை  உடல் மெலிந்து வருந்து என்கிறாய்.  நீ இவளை மட்டும் பெரிதும் துன்புறுத்துகிறாய் என்று தலைவியை ஆற்றுவிக்கும் நோக்கில் இது கார்காலம் அல்ல எனத் தலைவியின் காதில் விழும்படி தோழி குருந்த மரத்தினை நோக்கிக்கூறுகிறாள் (114). 

பிறகு தோழியை அணுகி, இதைக் கார்காலம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ஏன் எனில், மழை பெய்யும் தன்மையை நோக்கினால் அது  கார்ப்பருவத்தின் மழைக்கேற்ற முதிர்ச்சியுடன் சீராக இல்லை. கார்காலம்  வந்துவிட்டதே என்று  தவறான ஒரு பருவ காலத்தில் எண்ணி வருந்துவதை நீ ஒரு செயலாகச் செய்யலாமா? தலைவியே! (103) என்று தோழி தலைவி ஆற்றுவிக்க முற்பட்டு இது கார்காலமே அல்ல என்று பொய்யுரைக்க முற்படுகிறாள். 

காந்தள் மொட்டுக்கள் பூத்து நின்றன. எங்கும் மழையால் நீர் நிரம்பி தனக்குரிய கார்ப்பருவத்தினைக் காட்டி நிற்கிறது கார்காலத்து முல்லை நிலக் காடு.  அவ்வாறு இருக்க எதனால் இது என் காதலர் திரும்புவதாகச் சொன்ன கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முயல்கிறாய் இப்பொழுது? (118).   கார்காலத்தில் பூக்கும் மலர்கள் எங்கும் தேன் வண்டுகள் பாடும் நிலை கண்டு இது கார்காலம்தான் என்று எவரும் அறிய மாட்டார்களா? (120). ஆனால், நீயோ இது கார்ப்பருவம் அல்ல என்று சொல்லி நிற்கின்றாய்,   அவ்வாறு கார்காலம் அல்ல என்று உரைப்பது பொருத்தமான செயலாகுமா? (119).  கார்காலம் இன்னமும் வரவேயில்லை என்று பலவாறு  சொல்லி எனக்கு ஆறுதல் சொல்லும், மூங்கில் போன்ற தோள்களை உடைய தோழியே! எனது கண்ணீரினையே  தாரை நீராகக் கொண்டு எனது உயிரை வார்த்துக் கொடுத்தேன் இந்தப் பருவமல்லாத பருவத்திற்கு என்று தலைவி தோழியிடம் கூறினாள் (103).

மேலும் தொடர்ந்து, என் காதலர் இத்தனை நாட்களில் திரும்பிவிடுவேன் என்று கூறிச் சென்ற நாட்கணக்கு தவறாதிருக்குமானால் இது கார்காலமே.   இது கார்காலமாக இல்லாவிடில் மழை இவ்வாறு தொடர்ந்து பொழியாது. ஆதலால், எனக்கு ஆறுதல் கூறும் எண்ணத்தில், எனது துயர் நீக்கும் நோக்கில்  இது கார்காலம் அல்ல என்று நீ  சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது என்று தலைவி தோழியிடம்  கூறினாள் (108). 

தனது மறுதலிக்கும் முயற்சி பயனின்றிப் போனதை  உணர்ந்த தோழி, தலைவியை ஆற்றுவிக்கும்  தனது வழிமுறையை  மாற்றி, தலைவியின் கருத்தை ஏற்று அவளுக்கு இசைவாகப் பேசி அவளது துயர் நீக்க நம்பிக்கையூட்டும் வழிமுறையைக் கையாள்கிறாள். இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே ! (107).  கார்காலத்தின் அறிகுறிகள் தோன்றிவிட்டன எனவே விரைவில் தலைவன் உறுதிமொழி தந்தது போல  வந்துவிடுவான் (95).  தலைவன் திரும்பி வாராது இருந்துவிடுவானோ? நிச்சயம் வருவான். கார்காலம் துவங்கியது.  ஆகவே  நாமும் தலைவன் வரவை  எதிர்நோக்கி  அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமையாகும் தலைவியே (112).  தலைவன் திரும்பும்  கார்காலமும் வந்தது,  தலைவனும்  திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும்  என்ன காரணத்தால் இப்பொழுது உனது மெல்லிய தோள்களில்  பசலை பூக்களாயின? என்று கேட்டு தோழி தலைவியை வருந்தவேண்டாம் எனத் தோழி  வற்புறுத்துகிறாள் (117).  

தன்னை அன்புடன் ஏற்றுக் கொண்ட காதல் துணையைப் பிரிந்து செல்கின்ற காதலர் எப்படிப்பட்ட கொடியவர்! அந்தப் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று பிரிவுத் துயரில் வருந்துபவர்களிடம் சொல்பவர்களும் அது போன்ற கொடியவர்களே ஆவார்கள். அவ்வாறு ஆறுதல் அடையச்சொல்லி   வற்புறுத்துவோர் கொடியவர்கள், ஆதலால்  தோழி நீயும் கொடியவளே (106).  பெரியோர் என்பவரின் பெருந்தன்மைப் பண்பு என்பது என்றும் பெருமைக்குரியதே. துன்பம் வரும் சூழலில் இதைக் கண்கூடாக நாம் அறிந்து கொள்ள முடியும்.  நமக்கு அருமையான துணையாக இருந்தவர் வருத்தத்தை நீக்கும் வகையில் அருகில் இல்லையே என வருந்தி, மனம் ஆறாது,  அன்புடன் தலை  சாய்த்துக் கொள்ள வகையற்ற நிலையில் நான் இருப்பதைக்  கண்டு,  குளிர்ந்த செம்முல்லைச் செடிகளோ  சிறுமைக் குணத்தால் சிரித்துக்கொண்டு பூக்கின்றன. ஆனால், அதனைப் பார்த்துப் பொறுக்கவியலாத பெருந்தன்மை கொண்ட மலைகளோ மழை நீரினைக் கண்ணீராக வழிய விட்டு மிகவும் அழுது மயங்குகின்றன (110) என்று கூறி தலைவி வருந்துகிறாள்.   

கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கொண்டதைக் கண்டு வருந்திய தோழி,   குருந்த மரமே!  கொடி முல்லையே! கொன்றை மரமே!  உங்களால் கார்காலம் தோன்றிய அறிகுறிகளைக் கண்டு  அழகிய கூந்தல் தொங்கிப் புரளும்படியான மூங்கிலையொத்த தோள்களை, பெரும் பீர்க்கம் பூவின் நிறம் போன்று மீண்டும்  பசலை பூக்கச் செய்துவிட்டீர்கள் என்கிறாள் (116). 

நள்ளிரவு பொழுது கடந்தும்,   பரந்த பிடரி மயிரினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலமர்ந்து பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை (113). ஒற்றை ஆளாக நான் இருந்தும்,  ஒன்று அல்லாது  பல பகைகளும் என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன.  துணை அன்றிலை விட்டுப் பிரிந்து வேறாகப்  பொருத்தமற்று பனைமடலில் தங்கியுள்ள அன்றில் பறவையும்,  மாலைப்பொழுதும்,  பெய்யும் மழையும்,  ஆம்பற் குழலோசையும், கடலும் மட்டுமின்றி ஊர்ந்து செல்லும் முகில்களும் என் மேல் சினம் கொண்டுள்ளன இதற்கு நான் என்ன செய்வது தோழியே? (121).  கார்காலத்தில் மீளுவேன் என்று சொன்ன சொல் தவறிய தலைவன் வாராத இந்நிலை கண்டும் உயிரை நீக்காத நாணமில்லாத  என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது (122). பொன் போன்ற சிறப்புமிக்க துணையின் அருமை புரியாது பொன் தேடப் பிரிந்து சென்றவர் இக்கார்காலத்தில்  திரும்புவர். அவ்வாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் (109) எனத் தோழியிடம் கூறி தலைவி வருந்தினாள்.

ஆனால் தலைவியை மேலும் காக்க வைக்காமல் மறுநாள் காலையில் தலைவன் திரும்பிவிடுகிறான். வாயிலில் தேரில் பூட்டிய குதிரைகளின் மணியோசை கேட்டு தோழி விரைந்து வந்து பார்க்கிறாள். அவளை நோக்கிப் புன்னகைக்கும்  தலைவன்,   நீண்ட பெரிய கண்களில் கண்ணீர் தளும்பும் படிப் பார்க்கும், மூங்கில் போன்ற மெல்லிய  தோள்களையுடைய தலைவியிடம்,  தலைவனின் தேர் வாசலில்  வந்து   நிற்கிறது, உன் தலைவன்  திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே! என்று கூறுகிறான்(115). 

மகிழ்ச்சியுடன் மின்னலாகத் தோட்டத்திற்கு ஓடி அங்கு மூங்கிலைச் சுட்டுத் துளையிட்டுப் புல்லாங்குழல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவன் வரவைக் கூறுகிறாள் தோழி. தலைவன் வந்து விட்டான், தன்னை ஒவ்வொரு மாலையும் குழலிசையால் வருத்தும் மூங்கிலால் ஆன புல்லாங்குழலால் அவ்வாறு இனி செய்ய இயலாது என மகிழ்கிறாள் தலைவி.  ஏடி தோழியே! தலைவனைப் பிரிந்திருந்த என்னை, வருத்துதற்கு இலகுவானவள் என்ற எண்ணத்தில்  என்னை வருத்திய புல்லாங்குழலை  உலகிற் பலர் அறியச்  சுட்டுத் துளை செய்யப்படும் முறையினைக்  காண்பாயாக என்று தலைவி தோழியிடம் கூறி (123) மூங்கில் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டவள் போல உள்ளம் உவகையுற தலைவனை வரவேற்க வீட்டிற்குள் விரைகிறாள் தலைவி. 

 
குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
94.  மயக்கும் மாலைப்பொழுது எனது உயிரை வாட்டுகிறது தோழியே!
98.  கார்ப்பருவம் வந்ததால் கொன்றை மலரத் துவங்குகின்றது தோழியே காண்பாயாக !
105.  கார்காலத்து முல்லைக்கொடிகள்  குருந்த மரத்தை அணைத்துப் படர்ந்திருப்பதைக் காண்பாய் தோழி!
93.  செம்முல்லைக் கொடிகள் அருகில் உள்ள குருந்த மரத்தில் படர்வது போலத் தலைவனை அணைத்துக் கொள்ள எனக்கு வழி இல்லையே தோழி!
97.  மாலை மயக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாகத் தலைவனை எண்ணி வருந்துகின்றேன் தோழியே! 
101.  புல்லாங்குழலின் இசையும் மாலைப் பொழுதும் என்னை வருத்துகின்றன தோழி!
96.  இருண்ட வானும் வெண்ணிலவும் காதல் துணை அற்றவருக்குத்  துன்பத்தைத் தரும்  தன்மையைக் கொண்டனவாய் உள்ளன தோழி!
100.  கொடுத்த உறுதிமொழியின்படி தலைவன்  வராததால் என் உள்ளத்தில் ஏற்படும் அச்சத்தால் கண்ணீரால் நிறைகின்றன என் விழிகள் தோழியே!
99.  தலைவனைப் பிரிந்த நாட்களை எண்ணி எண்ணி என்னுடைய விரல்களும் நலிந்தன தோழி!
102.  கார்காலத்தில் திரும்புவேன் என்று  கூறிய தலைவன் வாக்குறுதி தவறியவனாக இருக்கக்கூடும் என்ற தெளிவைப் பெறாது நானும்  தலைவன் வரவை எதிர்நோக்கி எனது உயிரை  வருத்திக் கொண்டிருக்கிறேன்!
111.  அழகிய கார்காலம் தரும் துயரால்  என் உயிர் நீங்காமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்வாயாக தோழி!
104.  கார்காலத்தில்  பூத்துத் தழைத்து மலர்களாய் சொரிந்து என்னைக் கொல்கின்றாய் கொன்றை மரமே!
114.  கார்காலம் வந்தது போன்று காலம் தவறிப் பூத்துள்ள குருந்த மரமே,  இது கார்காலம் அல்ல, தலைவியை வருத்தும் நோக்கில் பூத்துள்ளாய்.
118.  கார்காலத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தோன்றுகையில் எதனால் இது  கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முற்படுகிறாய் தோழி?
120. கொன்றை மலர்கள் மலர்ந்து, வண்டுகள் பாடும் மாலைப் பொழுதைக் கண்ட பிறகும் இது கார்காலம்தான் என்ற உண்மையை அறிய மாட்டார்களா?
119. கார்காலம் இதுவல்ல என்று சொல்கிறார் சிலர், அது சரியல்ல இது கார்காலம்தான் தோழி!
103.  இது கார்காலம் அல்ல வென்று எனக்கு ஆறுதல் கூற முற்படும் தோழியே எனது உயிரை இந்தப் பருவத்திற்கே  அளிக்கிறேன் நான்.
108.  எனக்கு ஆறுதல் கூறும் பொருட்டு எனது துயர் நீக்கும் நோக்கில்  இது கார்காலம் அல்ல என்று நீ  சொல்வது எனக்கு நம்பிக்கை அளிக்காது தோழியே!
107.  இந்த அழகிய கார்காலம் நம்மை வருத்துவதற்கு என்றே வந்துள்ளது தலைவியே !
95.  கார்காலம் துவங்கியது, மழையால் காடுகள் தழைத்தோங்குகின்றன, தலைவன் திரும்பும் காலமும் வந்தது தலைவியே! 
112.  கார்காலம் துவங்கியது.  தலைவன் வரவை  எதிர்நோக்கி  அவனுக்கு விருந்து முதலியன செய்து காத்திருத்தல் நமது கடமை தலைவியே!
117.  தலைவன் திரும்பும்  கார்காலமும் வந்தது. தலைவன் திரும்பி வந்துவிடுவான் என்று தெரிந்தும் ஏன் பசலை நோய் கண்டாய் தலைவி?
106.  தலைவனின் பிரிவினைப் பொறுத்துக் கொள் என்று கூறி என்னை  வற்புறுத்தும் நீ கொடியவள் தோழி!
110. சிறுமதி கொண்ட செம்முல்லைகள் என் துயர் கண்டு நகைக்க, பெருந்தன்மை கொண்ட மலைகளோ  என் நிலை கண்டு அழுகின்றன தோழியே!
116.  கார்காலம் தோன்றிய அறிகுறிகளால் தலைவனின் வரவை எண்ணியிருந்த தலைவி பசலை நோய் கண்டாள்.
113.  நள்ளிரவு பொழுது கடந்தும் பொருள் தேடச் சென்ற என் தலைவன் வந்தாரில்லை தோழியே!
121. கார்காலத்துப் பல நிகழ்வுகளும் ஒற்றை ஆளான என்னை வருத்துதலே தமது தொழிலாகக் கொண்டுள்ளன தோழியே!
122.  முல்லைநிலக் காடுகள் தழைத்துள்ள கார்காலத்தில் தலைவன் திரும்பாததால் என்னுயிரானது, நொறுங்கி உதிர்ந்து விழுவது போலவுள்ளது தோழியே!
109.  பிரிந்து சென்ற தலைவர் சொன்னவாறு திரும்பி வாரார் என்றால் இனி துணையைச் சேரும் வாய்ப்பிழந்து வாழ்வார் தோழி!
115.  தலைவனின் தேர் வாசலில்  வந்து   நிற்கிறது, உன் தலைவன்  திரும்பிவிட்டான் என்பதைக் கூறுவாய் தோழியே!
123. தலைவனைப் பிரிந்திருந்த என்னை வருத்திய குழலும் அதன் கொடிய செய்கையின் பலனை இப்பிறவியிலேயே  அடையும் வண்ணம் துளையிடப்படுவதைக் காண்பாய் தோழி!



உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி: சிறகு
ஜனவரி 2, 2021



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 



Saturday, November 7, 2020

அன்பின் ஐந்திணை - பாலை

அன்பின் ஐந்திணை - பாலை 




கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணை, நெய்தல் திணைப்  பாடல்களைத்  தொடர்ந்து,  மூன்றாவதாகப் பாலைத்திணைப் பாடல்கள்  இடம் பெறுகின்றன. இப்பாடல்களின் மூலம்  பாலை  நிலத்தின் கொடிய தன்மையும்,  அப்பகுதியின் இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. பாலைத்  திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்( அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

தலைவி, தலைவன், தோழி, நற்றாய், செவிலித்தாய் ஆகியோர் படல்களில்  நேரடியாகக் குறிக்கப்படுகிறார்கள். தலைவியின் தந்தையும் தமையன் மாரும் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன, ஆனால் அவர்கள் நேரடியாக இடம் பெறவில்லை.  திணைமாலை நூற்றைம்பதின் குறிஞ்சி நெய்தல் பாடல்களுடன் ஒப்பிடுகையில்  பாங்கனுக்குப் பாலைநிலப் பாடல்களில் பங்களிக்கப்படவில்லை. தலைவனுக்குத் தலைவனைத் தவிர உறவுகள் வேறு யாரும் இல்லை, இருப்பதாகக் காட்டப்படவுமில்லை. 

இந்தப் பாலைத்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு  இணங்க,  தலைவன் தலைவியை மணந்து  கொள்ளத் தோழி உறுதுணையாக இருக்கிறாள். தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  தலைவன் மணந்து கொள்ளக்  காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள 'தோழி வரைவு கடாயது'  என்ற நோக்கில் இடம் பெரும் பாடல்கள் பாலைத்திணைப் பகுதியில் இடம் பெறவில்லை.  அவர்கள் காதல் தடைப்படும் பொழுது உடன்போக்கு செல்ல அவர்களுக்குத் தோழி முன்வந்து உதவுகிறாள். தலைவியை ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் துவங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.

பாடல் 74இல் பாலைத்திணையின் குறிப்புகளுடன் நெய்தலின் இரங்கல் ஒழுக்கமும் இருத்தலைக் காட்டி திணை மயக்கம் காட்டப்படுகிறது. 81ஆம் பாடல்,   தலைவியின் இற்செறிப்புக்காரணமாக தலைவனுடன் உடன் போக்கு சென்றுவிட்ட   தலைவியை  அவள் எங்குச் சென்றாள்  என்ன சொன்னாள் என்று மரங்களையும் கொடிகளையும் பாலைநில வழியே அவளைத்  தேடிச் செல்லும் செவிலித்தாய் கேட்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதே பாடல்,  தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன் இற்செறிப்புக்காரணமாக  அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும்  மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று காட்டப்படுவதும் தெரிகிறது. இங்குள்ள கதையில் இப்பாடல் தலைவனது கூற்றாகக் கையாளப் பட்டுள்ளது. 
 
இந்நூலின் பாலைத்திணைப்  பாடல் இடம் பெரும் பகுதி மலைகள் உள்ள இடம்.   கோடையில் பாலையாக மாறும் பகுதி.   இப்பகுதியில் இற்செறிப்பு இடம் பெறுகிறது, குறி  கேட்பதும் இடம் பெறுகிறது. உடன்போக்கும் இடம் பெறுகிறது. தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதை மரம் செடி கொடிகளிடம்  கூறிப் புலம்புவதும், தலைவனைப் பிரிந்த  தலைவி அதைப் புறாவிடம் சொல்லிப்  புலம்புவதும், செவிலித்தாய் குரா மரத்திடம் தலைவி சென்ற வழி காட்டச் சொல்லி வேண்டுவதும், வழிப்போக்கர்களாக வரும் கணவன் மனைவியாகிய இருவர் தலைவியும் தலைவனும் சென்ற வழி காட்டி உதவுவதும் ஆகிய பாடல்கள் சொல்லும் காட்சிகள்  நயம் மிக்கவை.  
 
திணைமாலை நூற்றைம்பது நூலின் பாலைத்  திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ, அவர்களின் நற்றாயும்,  செவிலித்தாயும்,  தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட பாலை   நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  30  பாலை நிலப்  பாடல்களையும் (பாடல்கள்: 63-92)  ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.
 
பிரிதலும், பிரிதல்  நிமித்தமுமாகிய ஒழுக்கம் கொண்ட பாலை  நிலப் பகுதியில் நிகழ்வது இக்கதை.


பாலைநில   வழிகளில்,  கள்ளிச் செடிகள் மிகுந்து வளர்ந்துள்ள காட்டு வழியில் காட்டுப்பசுக்கள் அஞ்சி  ஓடிடும்.  காட்டு எருமைகள் பிரிந்து காணாது போன தங்களது காட்டெருமைப் போத்துக்களை நினைத்துக் கதறி அழுது கொண்டிருக்கும். கற்களும் யானைகள் பரவி நிற்பன போலத் தோற்றமளிக்கும். சிள்வண்டுகள் கொடிய ஒலி எழுப்பியபடி திரிந்து கொண்டிருக்கும்.  பெரிய யானைகள்  தாகத்திற்குத்  தண்ணீர் குடிக்க விரும்பி சுனைகளிடம் சென்று, அங்கு நீர்   கிடைக்கப் பெறாது, மேலும் நடக்க இயலாமல் அந்தச் சுனை அருகிலேயே துவண்டு விழுந்து  கிடக்கும்.   இயலாமல் வருந்தி இறந்து வீழ்ந்த யானைகளை,  தமது பசி மிகுதியினாலே அவ்வழியில் செல்பவர்கள் பார்த்து அவற்றை உண்டு பசியாறிச்  செல்லும் வழக்கமும் உள்ளது. வெப்ப மிக்க ஞாயிறு எரிந்து,  புழுதிகள் சூடேறி மேலே எழுந்து புழுதிப் புயலாக வீசி வானையும் சூடேற்றும்.   தரையிலே,  நடந்து செல்வார் அடிகள் வெந்து கண்களையும் சுடச் செய்வதுமாகி பாலைநில வழியே எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள். கொள்ளை கொள்ளக் கூடிய  பொருள்  வழிப்போக்கரிடம் இல்லாவிட்டாலும்,  திடீரென்று எதிர்பாராத வகையில் வந்து அவர்கள் மீது அம்பெய்து  கொன்று இரக்கமற்ற வகையில் கொள்ளையடிக்கும் மறவர்கள் எதிர்ப்படும் அந்தப் பாலைநிலத்தின் வழி, பயணம் செய்ய ஏற்ற வழியல்ல.     

தலைவியும், தலைவியின் நற்றாயும் செவிலித்தாயும் தந்தையும் தமையன் மார்களும் மலைகள் கொண்ட பகுதி ஒன்றில்  வசிக்கிறார்கள். கொடிய கோடையில் அப்பகுதி வறட்சி கண்டு பாலைத் தன்மையைக் கொள்கிறது. இத்தகைய  நிலப்பகுதியில் வாழும் மிக அழகியான தலைவி காதுவரை நீண்டும் அகன்றும் உள்ள பெரிய விழிகளைக் கொண்டவள்.   அந்த விழிகள் மானைப் போன்ற மருண்ட பார்வைக் கொண்டனவாய் இருக்கின்றன.  காதில் மகரக்குழைகளையும், இரு கை நிறைய மின்னும் பொன் வளையல்களையும்  அணிந்திருக்கிறாள்.  நறுமணம் கொண்ட  தகரப்பொடியால் செய்த சாந்தை தனது அவிழ்ந்து விரிந்து புரளும் நீண்ட  குழலில் பூசி தனது கூந்தலுக்கு மணமூட்டி இருக்கிறாள். அவளுக்கு ஒரு தோழி.  விற்போரில் வல்லவனான ஓர் இளைஞனுக்கும்  தலைவிக்கும் இடையே அன்பு மலர்கிறது. தலைவியின் தோழி அவர்கள் இருவரின் காதலைப் புரிந்து கொண்டு அவர்களது நல் வாழ்வில் அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.  தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து பாலைநிலம் வழியாக வேறு இடத்திற்குச்  செல்ல விரும்பி அதைத் தலைவியிடம் கூறுகிறான்.  அதைக் கேட்டு அவள் அஞ்சுகிறாள்.  அவளைப் பிரிந்து சென்ற பிறகு அவளது துயர் கொண்ட மருண்ட விழிகளே அவனை வாட்டிய வண்ணம் உள்ளன. 

என் நெஞ்சே! பகலவனின் கொடிய வெப்பத்தால்  நெல்லும் பொரியாகப் பொரிந்துவிடக் கூடிய பாலை நிலத்தின் நெடிய வழியில் நான் பொருள் ஈட்டச் செல்ல விருப்பது குறித்து நீ அஞ்சாதே என்று எனது தலைவிக்கு ஆறுதலாகச் சில சொற்கள்  சொல்வதற்குள்,  அவளைப் பிரிவதை எண்ணி என் மனமும் அச்சமுற்றது.  அதனால் எனது முக மாறுதலைக் கண்டு அஞ்சிய அவளது பெரிய நீள் விழிகளில்  கண்ணீர் துளிர்த்தது.  தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு  நான்  பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான்(76).  தலைவனின் இந்த முடிவைக் கேட்டு வருத்தமுற்ற தலைவி அதைத் தனது தோழியிடம் வந்து சொல்கிறாள்.  

தலைவியின் துயரைக் காணச் சகியாத தோழி தலைவனிடம் அவனது எண்ணத்தைக் கைவிடும்படி கூறச் செல்கிறாள். பொருளால் எதையும் அடைந்துவிடலாம் என்று  பொருளுக்கு முதன்மை இடம் கொடுப்பவர் சொல்வதைப் பொன் போல மதித்து,  பொருள் தேடச் செல்கின்றீர்.  உங்களிடம் அன்பு கொண்டுள்ள தலைவியின் மேல் அருள் காட்டுவதை ஒரு பொருட்டாக நீங்கள் கொள்ளவில்லை.  பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு  அறிவுரை கூறுகிறாள் (85). ஆனால், தோழியின் சொற்கள் தலைவனிடம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  தனது முடிவில் தான் உறுதியாக இருப்பாகச் சொல்லும் தலைவன் பொருள் தேடக்  கிளம்பிச் சென்றுவிடுகிறான்.

தலைவன் சென்றுவிட்டான் என்பதைத்  தோழி  தலைவியிடம் சொல்ல அஞ்சினாலும்,  தயங்கியவாறே அவன் பிரிவை ஒருவாறு தலைவியிடம் தெரிவித்துவிடுகிறாள்.  அதைக் கேட்டு மனம் வெதும்புகிறாள் தலைவி. அவள் தனது குரலில் விரக்தி தொனிக்கத்  தோழிக்குப் பதில் கூறுகிறாள்.    தலைவன் பொருள் தேட பாலைநிலம்  வழியே செல்ல உறுதியான முடிவை எடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன்? ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல் என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள் (86).

நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல.  கள்ளிச்செடிகளும்,  சார் மற்றும்  கரிய மாமரங்களும், நாராகிய பற்றுதலில்லாது பூக்களையுடைய, நீண்டு வளர்ந்த முருங்கை மரங்களும், மிகுந்த  மூங்கிற் புதர்களும் நிறைந்த இடத்திற்கு, நல் வாழ்க்கையை வாழ  விரும்பும் மக்கள் விரும்பிச் செல்வார்களா? புள்ளிகளையுடைய பருந்துகள் மற்றும் கழுகுகள் புதிதாக வரும் வழிப் போக்கர்கள் கொண்டு செல்லும்  பொருளைக் கொள்ளை அடிக்க எதிர்பார்த்து, அவ்விடத்தில்,  தங்கியும்  உறங்கியும்  வீழ்ந்து கிடக்கும் இடமாகிய பாலை நில வழியே எவரும் செல்ல விரும்புவார்களா? என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள் (91).    அத்துடன், தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும் தம்மைச்  சார்ந்து வாழ்பவர் சிறப்பழிந்து வருந்துமாறு  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்(92).  

தலைவிக்கு ஆறுதல் சொல்ல விரும்பும் தோழி உலக நடப்பைக் கூறி அவளை அமைதி அடையச் செய்ய முயல்கிறாள்.   ஆண்களின் கடமை என்ன என்று அவர்களுக்கான நெறியினை ஆராய்ந்து பார்த்தால், ஆண்மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாகப்  பொருள் தேடுதலைப் பெரியோர் வகுத்து வைத்துள்ளனர்.  எனவே,  தலைவன் தான் மேற் கொள்ள வேண்டிய கடமையாகச் செல்வம் தேடிச் சென்றுள்ளார். ஆதலால், சுருக்கமாக உரையாடும் முறையை மேற்கொண்டு நீ சிறிது காலம் பிரிவால் வருந்துகின்ற உனது நிலையைப் பிறர் அறியாவண்ணம் மறைத்து வைப்பது நல்லது என்று தலைவிக்குத் தோழி கூறினாள்(82).

நல்ல தோழியே! கொடிய பாலைநில வழியே செல்ல விரும்புவார் எவராவது உண்டோ? அப்படி ஒரு செயலை எண்ணிப் பார்க்கவும் இயலாது.  அவ்வாறு நினைத்தாலே நெஞ்சு எரிவது போன்று துன்பம் தரும்.  பொருட்படுத்தாது அப் பாலை நிலவழியே வெற்றிகரமாகச் சென்று மீண்டு வரமுடியமா? தலைவன் அந்த வழியே சென்று பொருள் தேட எண்ணியது நிறைவேறுமா? (83).   கொள்ளையர்கள்  இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக, தனக்கென அறிவைக் கொண்டிருப்பவர்கள் எவரும் மறந்தும் செல்ல விரும்புவார்களா? ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல (84), என்று மீண்டும் மீண்டும் வருந்தி தலைவி தோழியிடம் புலம்பிய வண்ணம் இருக்கிறாள்.   அவளுக்கு  எவ்வாறு ஆறுதல் கூறுவது என அறியாது தோழியும் தவிக்கிறாள்.  

இதற்கிடையில், கொடிய பாலை நிலம்  வழியே செல்லும் தலைவனையும் தலைவியின் நினைவு துரத்துகிறது.  பொருளினைத்  தேட வேண்டு மென்று தீர்மானித்து;  தலைவியைப் பிரிந்து போக நினைத்தாலும், போகும் வகை விளங்கவில்லையே ? இப் பெரிய இப்பாலை நில வழியே செல்கையில் எதிர்ப்பட்டு,  என்னை நெடுந்தொலைவு தொடர்ந்து வந்து, தலைவியின்  நீண்ட கண்களின் ஏக்கப்  பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே! நெஞ்சே, பொருள் தேட நான் எப்படிச் செல்வேன்? என்று தனக்குத் தானே செல்லுதற்கு வருந்தி எண்ணிக் கொள்கிறான் (68). 

இவ்வாறு பிரிதல் காரணமாகத் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைத்து வருந்திக் கொண்டிருக்கையில், காலம் மெதுவாகக்  கடந்து செல்கின்றது. பருவங்கள் மாறுகின்றன. தலைவன் மீண்டும் வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற வேனிற் காலம் துவங்கியதை  இயற்கையின் அறிகுறிகள் உணர்த்துகின்றன. எரியும் தீ போன்ற நிறத்தோடு  மலர்ந்திருக்கும் நீண்ட அசோக மரத்தின் பூங்கொத்துகளில் எல்லாம்  உடலில் கோடுகள் கொண்ட  அழகிய நீண்ட  வண்டுகள் பாடி மொய்த்துக் கொண்டிருக்கின்றன.  பொன் போன்ற மலர்கள்  கோங்க மரங்களெல்லாம் பூத்துக்  குலுங்குகின்றன. 

தலைவி புறாவிடம்,  சிறிய பெட்டைப் புறாவே!  உனது துணையாகிய  ஆண்புறாவோடு, ஊடல் கொள்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஏனெனில்,  அன்பு கொண்ட உறவு மனநிலையில் உள்ளவரே என்றாலும், கடினமான இதயம் கொண்டவராக எனது தலைவன் போலப் பிரிந்து சென்று விடுவார்கள்.  தலைவன் தேரோடு வந்து சென்ற சுவடு கொண்ட அகன்ற வழியினைப் பார்த்து, பொன்னிறம் போர்த்தியது போன்று எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் (74).  இயற்கையின் மாறுதலையும், தலைவியின் நிலையையும் கண்ட தோழி,  தலைவியே! உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன?  என்று  வினவி,  வேனிற்பருவம்  என்பதால் தலைவன் வந்துவிடுவான் என்பதைத் தலைவியிடம் வலியுறுத்துகிறாள் (63). பொருள் ஈட்டும் பொருட்டு நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் திரும்பி வரும் நாள் அருகில்தான் உள்ளது. அல்லாமல் உன்னிடம் அன்பு செலுத்திய தலைவர்  விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர்  கொள்ளும் தலைவியே, காலம் தாழ்த்தமாட்டார். அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வேனிலால் வறண்ட  இம்மலை நாட்டிற்கு வரும்  தலைவரைக் கண்டு மகிழ்வாயாக என்று தோழி  தலைவியிடம் சொன்னாள் (79).  தலைவன் பிரிவைத்  தாங்க மாட்டாளே  தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் எந்த இடரையும் எதிர் கொள்ளாது நல்லவிதமாகத் திரும்புவார் என்று கூறி தலைவியும்  தனது உறுதியை  உணர்த்துகிறாள்(78). 

உன் உணர்வை வெளிக்காட்டாது  உன்னை இத்துன்பத்திலிருந்து காத்துக் கொள்வாய், என்று எத்தனைத்தான் சொன்னாலும் எச்சரிக்கை கொள்ளாது அனைவரும் அறியும் வண்ணம் வருந்தும் வெட்கக் கேடான செயலைச் செய்கிறாய் தலைவியே! நெருப்பினைச் சிதறி விட்டாற் போன்று  குளிர்ந்த முருக்க மரங்கள்  பூத்தன, கனமில்லாத நெற்பொரியினைச் சிதறி விட்டாற்போன்று புங்கைமரத்தின் பூக்கள் மலர்ந்தன(64). செல்வந்தர் வீட்டுச்  சிறுவர்களுக்கு அணிவிப்பதற்காகப்  பொற்கொல்லர் உயர்ந்த பவளத் துண்டத்தினை ஐம்படைத்தாலியில் பதித்து வைத்தாற் போலக்  காணும்படியாக மலர்ந்த மலர்களுடன் மரங்கள் திகழ்வதைக் காண்பாயாக (66),  வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவியிடம் கூறினாள்.  

வேனிற் பருவமும் வந்து விட்டது, பொருள் தேடிச் சென்ற தலைவனோ சொன்னபடி வேனிலில் வரவில்லை.  வந்துவிடுவார் பொறுத்துக் கொள் என்று நீ  சொல்வதால்  என்னால் பொறுத்துக்  கொள்ள முடியுமா? வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? என்னை வருத்துவதற்காகவே பொன்னிடத்திலே பொருந்தியுள்ள பவழத்தினைப் போன்று இந்தப் பூக்கள் அடர்ந்து வளர்ந்துள்ள முருக்க மரங்களில் மலர்ந்துள்ளன.  அதைக் காணுகையில் என் நெஞ்சினிலே துன்பம் மிகுந்துள்ளது, என்னால் தாங்க இயலாது (67) என்று தலைவி தோழிக்கு மறுமொழி கூறினாள்.  தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவர் இன்றே வருவார். இந்த நல்ல செய்தியை உணர்ந்து மிகவும் துடிக்கிறது எனது இடது கண்.   ஆதலால்,  கவலை கொள்ள  வேண்டாம் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள் (80).   வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம்  திரும்ப எண்ணும் தலைவன் தன் மனக்கண்ணில் தோன்றிய  தலைவியின் உருவம் கண்டு, பெண்ணே என் எதிரே என்னைச்  செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று  அவளை இனி  பிரியா முடியாத தனது நிலையை மனக்கண்ணில் தோன்றும் உருவத்திடம்  சொல்லி விரைகிறான்(77).  
 
தலைவன் ஊர் திரும்பிவிட்டான்.  தலைவனும் தலைவியும் தனிமையில் கூடிக் களிக்கிறார்கள். உன்னுடைய பார்வையைப்  போன்ற  பார்வையைக் கொண்ட மான் ஒன்று  குளிர்ந்த குராமரத்தினது நிழலில் நிற்பதைப் பார்.  மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக (70)  என்று தலைவன் அழைக்கிறான். இருவரும் மகிழ்ந்திருந்தாலும் இச்செய்தியை  அறிந்த தலைவியின் குடும்பம் மகிழவில்லை.   தலைவனையும் தலைவியையும் கடிந்து கொள்கிறார்கள்.  தலைவியின் தந்தையும் தமையன் மார்களும் பழிச்சொற்கள் கூறி தலைவியின் மனதை வருத்துகிறார்கள்.  தலைவி வீட்டை விட்டு வெளியேறாத  வண்ணம் வீட்டிலேயே அடைக்கப்படுகிறாள்.   

தலைவனுக்கு  வாக்களித்தவாறு, இற்செறிப்பின் காரணமாகச்  சந்திக்க வேண்டிய புனத்தில் சந்திக்க வேண்டிய வேளையில் தலைவியால் தலைவனைச் சந்திக்க இயலவில்லை.  தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன் அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும்  மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான். கொன்றை மரமே!  குருந்தமரமே! கொடிகளாகப் படர்ந்துள்ள முல்லைச் செடியே! நீங்கள் மிகவும் வாட்டமுற்றுக் காணப் படுகின்றீர்களே! உங்கள் எதிரில் நிற்கும் நான், உங்கள் துயரின் காரணம் தலைவியுடன் நீங்கள் கொண்ட உரையாடல் என்று அறிந்து கொண்டேன்.  நீண்ட கண்களையுடைய அவள் இவ்விடத்தை விட்டுச் செல்லும்படி என்ன கூறினீர்கள்?  உங்களிடம் அவள் என்ன கூறினாள்?அதற்கு நீங்கள் அவளுக்கு என்ன மறுமொழி அளித்தீர்கள்? அதற்கு அவள் உங்களிடம் என்ன பதில் சொன்னாள் ?  மின்னும் அணிகலன்களைப் பூண்ட அவள் அவற்றை மிளிரவிட்டுக் கொண்டிருக்க என்ன உரையாடல் இங்கு நடந்தேறியது? என்று பலவாறு புலம்புகிறான் தலைவன் (81).   

தலைவனும் தலைவியும் எதிர்கொள்ளும் இந்தச் சோதனை  நிறைந்த சூழலைத் தோழியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.  தலைவி தலைவனுடன் உடன்போக்கு செய்வதுதான் இதற்கான தீர்வு என்று கருதுகிறாள்.  முன்னர் தலைவி உடன்போக்கு எண்ணத்தைக் கைவிட்டது நினைவு வருகிறது. தலைவனிடம் அது குறித்துப் பேசுகிறாள்.  கழுத்தில் சிவந்த மாலை அணிந்தது போன்ற தோற்றம் கொண்ட கிளியின் சிவந்த வாயினின்றும் வெளிப்படும் கிள்ளை மொழியைக்  கேட்க இயலாமல் போகும்,  குளிர்ந்த குளத்தில் மலர்ந்திருக்கும் கருமையான கண்களையொத்த நீல மலர்களைக் காண இயலாமல் போகும், சிறப்பு மிக்க உறவினரும் சுற்றமும் அலரால் தோன்றக் கூடிய பழிச்சொல் கேட்டு துயர் கொள்வார் என்பனவற்றைக் கருதி வருந்தியதாலும் முன்னர் பேதையாகிய என் தலைவி உடன் போக்கு எண்ணத்தைக்  கைவிட்டாள் (73).  ஆனால் இனி வேறு வழியில்லை.  தலைவியை உங்களுடன் அழைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுங்கள் என்று தலைவனிடம் கூறிய தோழி அதற்கான ஏற்பாட்டில் இறங்குகிறாள்.  தலைவியிடமும் சென்று உடன்போக்கிற்குச் சம்மதிக்கச் செய்கிறாள்.  தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி,  யாவரும் விரும்பும் புகழினைக் கொண்ட  தலைவனைப் பின் தொடர்ந்து உடன் போக்கு செய்தல் ஒழுக்கம் பிறழாத செயலே ஆகும். விற்போரில் வல்லவனாக,   வேலைக்  கையில்  கொண்ட  தலைவன் பக்கத்தே துணையாய் வர செல்லுதற்கரிய தொலைவையும் பாலை நிலவழியையும்  கடப்பது எனக்குக்  கடினமான  செயல் அல்ல என்று தலைவி  தோழியிடம் கூறினாள்(87). 

அத்துடன், தோழியை நோக்கி, பொருத்தமற்ற வெறுப்புச்  சொற்கள் கூறி, எங்களது காதலைப் புரிந்து கொள்ளாது, எங்களைக் கடிந்து கொள்ளும்  தந்தையையும்  தமையன் மார்களையும் விட்டு நான் விலகுகிறேன்.  எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்குச் செய்கிறேன்.  தோழியே,  எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்கத் துணிவுடன் என் வீட்டிற்கு நீ  செல்வாயானால், நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை அவர்களுக்கு எடுத்துக் கூறி , உடன்போக்கு செல்லும்  எனது நிலையையும் முடிவையும் அவர்களுக்குக் கூறி, என் மீது கோபம் கொள்ளும்  அவர்களது மனதை மாற்றி,  எம்மேல் அவர்கள் கொண்டுள்ள  குறை நீக்கி, எங்கள் மீது  வீட்டை விட்டுச் செல்லும் பழிச் சொல்லும் கருத்தினையும் அவர்கள் மனத்திலிருந்து நீக்கி, நீ எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள்(88). 

தலைவனும் தலைவியும் முன்னர் தலைவி மறுதலித்த கொடிய பாலை  நிலம் வழியாகவே வேறிடம் செல்ல முடிவெடுத்து  வீட்டை விட்டு வெளியேறி தங்களது புதிய வாழ்க்கையைத் தொடரச் செல்கிறார்கள்.  கொடுமையான அந்த வெம்மை நிறைந்த பாலை வழியில் அவர்கள் பயணம் தொடர்கிறது. மாலை மயங்குகிறது.  அவர்கள் இருவரும் செல்வதைக் கண்ட வழிப்போக்கர் சிலர்,  தலைவியை அழைத்துக் கொண்டு பாலைவழிச் செல்லும் தலைவனிடம், நீங்கள் செல்கின்ற  இப்பாலை நில வழியும் நீண்டதாக உள்ளது.  நெருப்பினைப் போன்ற கதிர்களைக் கொண்ட பகலவனும் பாதியளவு வரை அந்த பெரிய மலையின் பின்னே மறைந்து விட்டான்.  ஆதலால், அணிகளை  அணிந்துள்ள இந்த அழகிய மங்கையுடன் நீங்களும், எங்களில் ஒருவராக உங்களைக்  கருதிக் கொண்டு எமது சிறிய ஊரில் இரவில் தங்கி,  நாளை அங்கிருந்து செல்வதே நல்லது என்று கூறி தங்களில் ஒருவராக அவர்களது சிற்றூரில் இரவு தங்கிச் செல்லும்படி  அழைக்கிறார்கள்(69). 

தலைவி உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்த செவிலித்தாய் துயர் தாளாமல் தலைவியைத்  தேடி பாலை நிலம் வழியே செல்கிறாள். வழியில் இருக்கும் குரா மரத்தின் கீழ் நின்று மரத்திடம் உதவுமாறு முறையிடுகிறாள். ஒரு தாய் போன்று மன நெகிழ்வுற்றுத்  தாழ்ந்து முலை போன்ற கோங்க மலர்களைக் கொடுத்துப் பாலூட்ட நீ பொம்மை போன்ற பெண் குழந்தையைப் போன்ற காய்கள்  பெற்றெடுத்தாய் குரா மரமே.  அது போலவே  தலைவியும் நான் பராமரிக்கும் எனது மகள்தான்  பெரிய குராமரமே! அவள் உன்னிடம்  சொல்லியவற்றை என்னிடம் சொல்ல முடியாவிட்டாலும்  பரவாயில்லை.  ஆனாலும்,  முள்  போன்ற கூரிய  பற்களைக் கொண்ட என் மகள் தனது தலைவனுடன் சென்ற வழி இதுதான் என்று மனமுவந்து அவள் எந்த வழியில் சென்றாள்  என்பதை எனக்குக் காண்பிப்பாயாக என்று குராவிடம் கூறுகிறாள்(65). 

அவ்வழியே வரும் கணவன் மனைவியாகிய இருவர் செவிலித்தாயின் நிலை கண்டு அவள் மீது கழிவிரக்கம் கொள்கிறார்கள்.   தாங்கள்  அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து  சென்றால் அவர்களைக் காணலாம் என்றும் கூறுகிறார்கள்.  விரைந்து நீங்கள் செல்வீர்கள் என்றால், நம்மவர்களாகிய  அவ்விருவரையும் காணவேண்டும் என்ற உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும். (பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டவனாகிய அவன்) வெப்ப மிக்க கதிரவன் போன்ற தலைவனை, நான்  பார்த்தேன் என்றும்,   குளிர்ந்த மதியையொத்த தலைவியை (மற்ற ஆண்மகனை ஏறெடுத்தும்  பார்க்காத) இவள் பார்த்தாளாம் என்று ஆண்மகன் செவிலித்தாயிடம் கூறுகிறான்(89).  அவன் காட்டிய வழியில் விரைகிறாள் செவிலித்தாய். எதிர்ப் பட்டவரிடம் எல்லாம் அவர்களை இந்த வழியில் நீங்கள் பார்த்தீர்களா, பார்த்தீர்களா  என்று கேட்டுக் கொண்டே கவலை தோய்ந்த முகத்துடன் செல்கிறாள். 

நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும்  அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் சிலர் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள்(71). செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர்களில் சிலர்  செவிலித்தாய்க்கு ஆறுதலும் கூறுகிறார்கள் (72). வீட்டில் தலைவி பிரிந்து சென்றுவிட்டதால் நற்றாயும் வருந்தியவாறு உள்ளாள். எரியும் தழல் போலச் சுடுகின்ற பகலவனின் ஒப்பில்லாத  கதிர்களால் வெம்மை சூழ்ந்த பாலை நிலத்தில்,  விரித்து விட்ட கூந்தலையுடைய என்மகள் விருப்பத்தோடு செல்லும் வழியில், முறுக்கி விட்ட கயிற்றினைப் போன்று மலைப்பாம்புகள் புரண்டு இறந்து  கிடக்குமே.   அத்தகைய கொடிய பாலை  நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து  சென்றுவிட்டாளே  என் மகள்.  அத்தகைய கொடிய வழி மகளுக்கு அச்சம் தருமோ  என அன்னை தனக்குள் கேட்டு கவலை கொள்கிறாள் (75). மகள் திரும்பி வருவாளா? உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய்  நிமித்தம் கேட்க முடிவு செய்கிறாள்.  தெய்வத் தன்மையின் அருளால் நிமித்தம் கூறக்கூடிய ஒருத்தியை அழைக்கிறாள்.  நிமித்தம்  கூறும் பலரிலும் நீ வேறுபட்டவள் என்ற கருத்தினால் உன்னைக் கேட்கிறேன்.  உன் தெய்வத்தன்மையின் உதவி கொண்டு கூறுவாயாக. புகழ்ந்து கூறும் நற்பண்பினைக்   கொண்டவனாக  எனது மனைக்கு முறைப்படி மணம் முடித்துத் தர எனது மகளைத் தலைவன்  அழைத்து வருவானா? அல்லது, ஒளி மிக்க வளையலணிந்த என் மகளைத் தனது மனைக்கே அழைத்துச் சென்று விடுவானா ?  என்று நற்றாய் குறி சொல்பவளிடம் கேட்கிறாள்(90).



குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
76. என் நெஞ்சே! பொருள் ஈட்ட நான் பாலை வழி செல்ல இருப்பதை எண்ணி அஞ்சாதே என்று நான் தலைவியை ஆற்றுவிக்கும் முன் அவளது பிரிவை எண்ணி நான் அஞ்சுவதை உணர்ந்து கொண்ட தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான். 
85. பொருளால்  எவற்றையும் அடைந்துவிடலாம் என்று பொருள் தேடி நீங்கள்  செல்ல விரும்புகையில்,  தலைவியின் மீது அருள் காட்ட மறக்கிறீர்கள்.  பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு  அறிவுரை கூறுகிறாள்.
86. தலைவன் பொருள் தேட பாலைநிலம்  வழியே செல்ல முடிவெடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன், ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல்  என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள். 
91.  நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.  
92. தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும்  கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.  
82.  தலைவியே ஆண்களின் கடமை பொருள் தேடுதல் என்பதால் தலைவன் பொருள் தேடிச் சென்றுள்ளார்.  பிறர் அறியும் வண்ணம் உனது துயரை  வெளிக்காட்டாதிருக்க வேண்டி  நீ அதிகம் பேசாமல் இருத்தல் நல்லது எனத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள். 
83.  தலைவன் பொருள் தேடி பாலை வழி செல்லவிருக்கிறான் என்று தோழி கூறியது கேட்டு தலைவி அதற்கு உடன்படாது சொல்லியது. 
84. கொள்ளையர்கள்  இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக அறிவுடைய எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள், ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். 
68. நெஞ்சே, பொருள் தேட எப்படிச் செல்வேன், பாலை வழியிலும் அழகிய என் தலைவியின் நீண்ட கண்களின் ஏக்கப்  பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே என்று தலைவன் வருந்துகிறான். 
74. புறாவே ஊடல் கொள்வதால் பயனில்லை, என்னைவிட்டு நீங்கிய தலைவன் சென்ற சுவட்டைக் கண்டு எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் தலைவி.
63. தலைவியே உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன என்று தோழி தலைவியை வினவினாள்.
79.  தலைவன் விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர்  கொள்ளும் தலைவியே, தலைவன் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை, அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வரப்போகும் அவரைக் கண்டு களிப்பாயாக என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  
78. தலைவன் பிரிவைத்  தாங்க மாட்டாளே  தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் நல்ல வகையில் திரும்புவார் என்று கூறி தலைவி தனது உறுதியை  உணர்த்துகிறாள். 
64. வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். 
66.  வேனிற் காலம் துவங்கி விட்டது, முருங்க மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன, வேனிலில் வருவதாகக் கூறிச் சென்ற  தலைவன் வந்துவிடுவான் தலைவியே!  
67. பொருள் தேடிச் சென்ற தலைவன் சொன்னபடி வேனிலில் வரவில்லை, வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும் என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள். 
80.  தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் வருவார். துடிக்கும் எனது இடது கண் அந்த நல்ல செய்திக்கு அறிகுறியாகும், கவலை வேண்டாம் எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். 
77. பெண்ணே என் எதிரே என்னைச்  செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று தன் மனக்கண்ணில் தோன்றிய தலைவியின் உருவத்துடன் வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம்  திரும்ப எண்ணும் தலைவன் கூறுகிறான். 
70. மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக  என்று தலைவன் அழைக்கிறான். 
81. இற்செறிப்புக் காரணமாகப் புனத்தை விட்டுச் சென்றுவிட்ட தலைவியைத்  தேடிச் சென்ற தலைவன்  தனது ஆற்றாமையால் மரம் செடி கொடிகளிடம் கேள்வி எழுப்பிக்  கொண்டிருந்தான்.
73. முன்னர் தலைவனுடன் உடன் போக்கை மேற்கொள்ள விருந்த தலைவி, பின்னர் அச்செய்கையால் ஏற்படக் கூடிய துயரை எண்ணிக் கைவிட்டாள்  என்று தோழி தலைவனிடம் கூறினாள். 
87. தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி,  விற்போரில் வல்லவனான அவனுடன் பாலை நில வழியில் செல்வது கடினமான செயல் அல்ல என்கிறாள். 
88. எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் நான் வெளியேறுகிறேன். தோழியே  எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்க என் வீடு சென்றால் எங்களது அன்பைக் கூறி, உடன்போக்கு செல்லும்  எனது நிலையையும் கூறி அவர்களது மனதை மாற்றி எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள். 
69. தலைவியை அழைத்துக் கொண்டு பாலை வழிச்செல்லும் தலைவனிடம், பொழுது சாயப் போகிறது எங்கள் சிற்றூரில் இரவு தங்கி நாளை செல்க என்று எதிர்ப்பட்ட வழிப்போக்கர்கள் கூறுகிறார்கள். 
65. சுரத்திடை (பாலை நிலவழி) தனது தலைவனுடன்  தலைவி சென்ற வழி எது என்று எனக்குக் காட்டுவாயாக எனச் செவிலித்தாய் குரா மரத்தருகில் நின்று புலம்புகிறாள்.
89.  உடன்போக்கு சென்ற தலைவியையும் தலைவனையும் பாலை நில வழியே தேடிச் செல்லும் செவிலித்தாயிடம், எதிர்ப்படும் கணவன் மனைவியாகிய இருவர், தாங்கள்  அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து  சென்றால் அவர்களைக் காணலாம் என்று கூறுகிறார்கள்.  
71. நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும்  அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள். 
72. செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர் செவிலித்தாய்க்கு ஆறுதல் கூறினர்.
75.  கொடிய பாலை  நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து  சென்றுவிட்டாளே  என் மகள், அந்த வழி அவளுக்கு அச்சம் தருவதாக இருக்குமோ  என்று துயர் கொள்கிறாள் தாய். 
90. உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய்  நிமித்தம் கூறுபவரிடம் குறி கேட்கிறாள்.  



உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html



நன்றி:  சிறகு 
நவம்பர் 7, 2020



#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi 


Saturday, October 24, 2020

அன்பின் ஐந்திணை - நெய்தல்

அன்பின் ஐந்திணை - நெய்தல்
 
 


கணிமேதாவியார் இயற்றிய  திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணைப்பாடல்களை அடுத்து 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்'  ஒழுக்கம் குறித்த  31 வெண்பாக்கள் (பாடல்கள் 32 -62)  நெய்தல்திணைப்  பாடல்களாக இடம் பெறுகின்றன. இப்பாடல்களிலும் நெய்தல் நில இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. நெய்தல் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்( அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 
 
இந்த நெய்தல்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு  இணங்க,  தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, ஊரில் அலர் தொடக்கம், வரைவு வேட்கை,  குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்; வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் தொடங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.
 
இந்நூலின் நெய்தல் பாடல்களைக் குறிஞ்சி நிலப் பாடல்களுடன் ஒப்பிடுகையில் தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, வெறியாட்டு ஏற்பாடு,  உடன்போக்கு  போன்ற குறிஞ்சிப் பாடல்களில் காணப்பட்ட கருத்தாக்கங்களை நெய்தல் பாடல்களில்  காண இயலவில்லை.  ஊர் மக்களின் அலர், அதனைத் தவிர்க்கப் பகலில் சந்தித்த காதலர்கள் இரவில் சந்திக்க முற்படுதல், இருப்பினும் அலர் தொடர்தல், அதனால் தோழி  தலைவனிடம் இரவிலும் வரவேண்டாம் என்று கூறி தலைவியை மணக்க ஏற்பாடு செய்யச் சொல்லல் என்ற பாடல்களே மிகுதி.  'கனை இருள் வாரல்!' என்ற கருத்தைத் தொடர்ந்து பல பாடல்களில் தோழி தலைவனிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்.
 
தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு.  தோழி வரைவு கடாயது  என்பது 13 பாடல்களில்  (பாடல்கள்: 34, 35, 36, 37, 43, 46, 50, 52, 53, 54, 55, 57, 59) காட்டப்படுகிறது. அதாவது மொத்த நெய்தல் பாடல் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 40 விழுக்காட்டுப் பாடல்கள் இந்த வகையில் அமைந்துள்ளன.  தலைவன், தலைவி, தோழன், தோழி, செவிலித்தாய் ஆகியோர் மட்டுமே பாடல்களில்  நேரடியாக இடம் பெறுகிறார்கள். தலைவியின் தந்தை, தமையன் மார் போன்றவர் குறித்துக் குறிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றது. செவிலித்தாயும் இரு பாடல்களில் மட்டுமே காட்டப்படுகிறாள்.  குறிஞ்சி நிலத் தலைவியைவிட நெய்தல் தலைவி கட்டுப்பாடுகள் அதிகம் இன்றி இருக்கிறாள். தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதைக் கடற்கரை நண்டிடம் கூறிப் புலம்புவதும், தலைவனைச் சந்திக்க இயலாத தலைவி அதைக் கடல் அலைகளிடம் சொல்லிப்  புலம்புவதும் என இரு பாடல்கள் காட்சியில் சிறப்பு மிக்கப் பாடல்களாக அமைந்துள்ளன.
 
திணைமாலை நூற்றைம்பது நூலின் நெய்தல் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும்  தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும்,  தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட ஒரே நெய்தல்  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது.  இருப்பினும்,  31 நெய்தல் பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம்.  அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள்  கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின்  வரிசை எண்.
 
இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட நெய்தல் நிலத்தில், கடற்கரையோரப் பகுதியில் நிகழ்வது இக்கதை.
 
அது ஓர் அழகிய நெய்தல் நிலம்.  குளிர்ந்த கடல் நீரும் அதில் தொடர்ந்து ஓர் அலை வந்து கரையில் மோதித் திரும்பும் முன்னர் மேலும் இரு அலைகள் அதை விரட்டிவந்து மோதிச்  செல்லும் வளப்பம் நிறைந்த கடற்கரை.  பகலிலும் இரவிலும் மக்கள் கடற்பகுதியில் அலைந்து அலைகளுக்குப் போட்டியாக ஆரவாரித்துக்  கொண்டு நடமாடியவண்ணம் உள்ளார்கள்.  அலைகளால் அள்ளி வரப்பட்டு கடற்கரையில் ஒதுக்கப்பட்ட சிப்பிகள்  வாய்பிளந்து காட்டுவதால் வெளிப்படும் முத்துக்களின்  ஒளி இரவில் இருளையும் விரட்டக்  கூடியதாக இருக்கிறது. அவற்றை அள்ளிச் செல்ல விரும்பும் மக்களின் நடமாட்டத்தை  இரவிலும் காணக்கூடியதாக உள்ளது.
 
கடற்கரையில் உப்பங்கழிகளும்  அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள கடற்கரையின் பசுமை நிறைந்த கானல் சோலைகளும், நீல நிறக் கடலும் இவற்றுக்கு மாற்றாக மிக வெண்மையான மணல் நிரம்பிய கடற்கரை மணலும் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது.  உப்பங்கழிகளில் சுறாமீன்கள் சுழன்று விளையாடி நீந்தியவண்ணம் உள்ளன. கடற்கரை  எங்கும் அன்று பூத்த மலர்களுடன் மணம் மிக்க புன்னை மரங்களும், ஞாழல்  மரங்களும், நெருக்கமாக அடர்ந்து வளர்ந்த தாழை மரங்களும், உயர்ந்து வளர்ந்த பனை மரங்களும் உப்பங்கழிகளைச் சுற்றி அடர்ந்த தில்லை மரங்களும் நீர் முள்ளிச் செடிகளும் வளர்ந்துள்ளன.  கடற்பகுதியில் வீசும் புலால் நாற்றத்தைப் புன்னை மரத்தின் மலர்களின் இனிய நறுமணம் நீக்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் நெய்தல் மலர்கள் பூத்துள்ளன. அங்கு மீட்டாமலே  மேன்மையான இசையை தேன்வண்டுகள் பொழிந்த வண்ணம் உள்ளன.
 
அவ்வூரின் நுளையர் குடும்பத்தில் அண்ணன்களும் ஓர் தங்கையும் எனச் சிறு குடும்பம் உள்ளது.  அந்த  அண்ணன் மார் படகு செலுத்தி, நுட்பமாகப் பின்னிய வலையை வீசி மீன் பிடிக்கும் தொழிலில் மிக வல்லவர்கள்.   அவர்கள் ஆழ்கடலில்   அமிழ்ந்து  முத்துக்களும்  சங்குகளும் கூட பிடித்து வருவார்கள்.  அவர்கள் அவ்வாறு வலை வீசி கடலில்  இருந்து முகந்து  வரும் மீன்களை வெய்யிலில்  கருவாடாக உலர வைத்து, அவற்றைப் பறவைகள் கொத்திப் போகாமல் காவல் காப்பது தங்கையின் வேலை. இவளே இக்கதையின் தலைவி. இவள்  வேலை ஒத்திருக்கும் மிகப் பெரிய நீண்ட கண்களையும், மருண்ட பார்வையையும், காதில் சிறிய சுறாமீன்கள் வடிவில் வார்க்கப்பட்ட மகரக்குழை  காதணிகளையும், கையில் முத்துக்கள்  பதித்த வளையல்களையும் அணிந்திருக்கிறாள்.  ஆகவே அவளை நாம் முத்தழகி என்றும் பெயர் சூட்டி  அழைக்கலாம். 
 
தலைவியின் அண்ணன்கள் வலைவீசி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டார்கள். கடற்கரை சோலைப் பகுதியில் மீன்கள் உலர்த்தப் பட்டுள்ளன.  அருகில் அடப்பங் கொடிகளில் முளைப்பாலிகையினைப் போல ஒன்றாகக் கூடி மலர்கள் பூத்திருக்கின்றன.   அவற்றின் மீது உடலில் இருந்து நீக்கிய கவசம் போல மீன் வலைகள் வெய்யிலில் உலர்த்தப் பட்டிருக்கின்றன. அப்பகுதியில் தலைவியும் அவளது  இணைபிரியாத தோழியும் கருவாடுகளை உலர்த்தி அவற்றைக் காவல் காத்த வண்ணமும், அவற்றை வாங்க விரும்புவோருக்கு  விலை  கூறி விற்றவாறும் பகல் பொழுதை ஓட்டிக்  கொண்டிருக்கிறார்கள். 
 
அந்தக் கடற்கரை ஊரின் தலைவனின் படகுக்  கூட்டம் கரையை நோக்கி வருகிறது.  அமைதி என்பதையே அறியாத மன்னவன் ஒருவனின் படை ஒன்று போருக்குச் செல்லுகையில் எவ்வளவு ஆரவாரம் இருக்குமோ அது போல ஆரவாரம் கடற்கரைப் பகுதியில் ஏற்படுகிறது.   அலை ஓசை போரின் பறை ஓசை போல முழங்க, அலைகள் யானைப் பாகனாகவும், நீண்ட தோணிகள் யானைப் படைகள் போலத் தோற்றமளிக்க, வானில் சுற்றும் பருந்துகள் புரவிகள் போல விரைந்து பின் தொடர, அந்த ஓசையில் அச்சமுற்ற  கடற்கரையினை அடுத்துள்ள சோலையில் ஆர்த்தெழும்   பறவைகள்  ஒருசேர அலறலுடன் வானில் எழும்பிட படைவீரர்களுடன் மன்னன் போருக்குச் செல்லும் காட்சி போல இருக்கிறது அது.  அந்தத் தலைவனின் தோற்றத்தால் கவரப்படுகிறாள் தலைவி. 

அவள் பார்வை கருவாடுகளைக் காவல் செய்வதை விட்டு அவன் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து அவனையே காவல் செய்யத் துவங்குகிறது.  தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவனும் அவள் பார்வை தன்னை சிறைபிடிப்பதை உணர்கிறான்.  அன்று பூத்த ஞாழல் மலர்களைக் கொத்தாகப்  பறித்து தலைவியின் கையில் திணிக்கிறான்.  இவர்களின் செயல்களைத் தோழியும் நோட்டமிட்டவாறே  எதையும் அறியாதவள் போல உடன் இருக்கிறாள். 
 
தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் தலைவியின் கவர்ந்திழுக்கும் பார்வை தவிர வேறொரு  சிந்தனையும் இன்றி அதில் மூழ்கியிருக்கிறான்.  தலைவனிடம் கண்ட மாறுதலை உணர்ந்து தோழன் அவனிடம்  பேச்சு கொடுக்கிறான்.
 
கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான் (32). அவளது வெண்முத்துப்பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் என்கிறான் (33).  தலைவியின் ஒரே பார்வையில் கவிழ்ந்துவிட்ட தலைவன் ஒரு பண்பாளனா என்ற எண்ணம் தோழனின் மனதில் தோன்றுகிறது. 
 
அவனது மனதின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தலைவன் தலைவி குறித்து மேலும் அடையாளம் கூறி அவனையே சென்று பார்த்துக் கொள்ளச் சொல்கிறான்.  கடல் அலைகள் ஆர்ப்பரித்துத் திரும்பிச் சென்ற வண்ணம் அலைமோதும் கரையினிடத்தே, கரையில் அலையும் நண்டுகளைக் கால்களினாலே  கண்டு பிடித்தவாறு, கரை அருகே  மலர்ந்துள்ள நெய்தற் பூக்களைக் கொய்தவாறு நிற்கும், மிக நீண்ட கண்களை உடையவள் எனக்குக் காதல் மயக்கத்தை உண்டாக்கியவள். அவள் அந்த பரதவரின் மகளாகிய என் தலைவி (60)  என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான். தலைவனைக் கவர்ந்தவளைத்தான் பார்த்துவிடுவோமே  என்ற எண்ணத்தில் தலைவன் குறிப்பிட்ட அடையாளங்கள் உதவியுடன் கடற்கரைக்கு  வந்து அவளைக் கண்டு வியக்கிறான் தோழன்.
 
ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும், இணையற்ற அவளது இரு பெரிய கண்களைப் பார்த்த பின்னரும் கூட  அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் மன உறுதி கொண்டவன் மட்டுமல்ல  பண்பில் சிறந்தவன்தான் (45) என்று தோழன் மனதில் எண்ணம் ஏற்படுகிறது. மீண்டும் தலைவனிடம் செல்கிறான்.
 
ஒரு பொருட்டாக அக்கறை செலுத்தாதவர்களும் கூட  காண நேர்ந்தால் இயற்கையழகு நிறைந்த தெய்வமாகக்  காட்சி அளிக்கக் கூடியவள் தலைவி. அத்தகையவளைக் கருத்தாகக் காக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான் (47). 
 
மீண்டும் தலைவியைக் காண விரும்பி கடற்கரை பக்கம் புரவி பூட்டிய தனது தேரில் செல்கிறான் தலைவன், அங்குத் தோழியைக் காணுகிறான். தான் தலைவியைச் சந்திக்க விரும்புவதைக் கூறுகிறான்.  தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான் (42). 
 
அவர்களது  காதல் நாடகத்தை முன்னர் பார்த்துக் கொண்டிருந்த தோழிக்குத் தலைவன் தலைவிக்கு ஏற்றவன்தான் என்ற எண்ணம் வருகிறது. அவனுக்கு உதவ முன் வருகிறாள்.  தலைவனே, உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது (44, 58).  அங்கு இல்லாவிடில், கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள் (51). 
 
தலைவனும் தலைவியும் சந்திக்கத் தொடங்குகிறார்கள்.  நாட்கள் கடக்கின்றன. தலைவன் தலைவியைப் பார்க்க வந்து செல்வது பிறர் கவனத்திற்கு உள்ளாகிறது.  ஊரில் அலர் எழுகிறது. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக என்னை வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் (41). இதனால் அவர்கள் சந்திக்க இயலாத நிலை ஏற்படுகிறது. 
 
கடற்கரைக்குச் செல்லும் தோழி அங்குத் தலைவனைச்  சந்திக்கிறாள், தலைவி இனி வரமாட்டாள் என்று சொல்கிறாள்.  நிலையைப் புரிந்து கொள்ளும் தலைவன் தோழியை நோக்கியவாறு, கடற்கரையில்  விளையாடும் நண்டிடம்  பேசுவது போல, துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான்.   தோழிக்கு அவனது நிலை காண்பதற்கு மிகவும்  இரங்கத் தக்கதாக இருக்கிறது.  அதை அவள் தலைவியிடம் வந்து தெரிவிக்கிறாள்.  தனது பெண் துணையோடு இன்புற்று விளையாடும் ஆண் நண்டினையும், என்னையும்  தலைவன் பார்த்து,  என் இனிய துணைவியாகிய தலைவியோடு இவ்வாறு கூடிக் களிக்க  எனக்கும் வாய்ப்பு கிடைக்குமோ?  என்று தனக்குத் தானே பேசிக் கொண்ட தலைவன்;  அந்த ஆண் நண்டினை நோக்கி நீ உனது இனிய துணையாகிய பெட்டை நண்டுடன்  இன்புற்று விளையாடுதலாகிய ஒன்றையே செய்திருப்பாயானால் பிரிவுத்துன்பம்  என்ன என்பதனை அறிந்திருக்கமாட்டாய், என் பிரிவுத்துயரை உன்னிடம் கூறுவதால் என்ன பயன்?   என நண்டிடம்  பேசுவது போலத்  தலைவன்  தனது கருத்தை எனது  கவனத்திற்குச் சொல்லிவிட்டுப் புரிந்து கொண்டவனாய் மனம் வெறுத்து விலகிச் சென்றுவிட்டான் (40) என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள் .
 
தலைவனின் நினைவால் தலைவியும் இரவில் உறக்கமின்றிப்  புலம்புகிறாள். என்னைப் போல உறக்கம் வாராது நீ ஏன் அலைமோதுகிறாய். நான் படும் துன்பத்தைப் போன்ற இந்த உறங்கா நிலையாகிய துன்பத்தை உனக்குக் கொடுத்தவர் யாரென்று சொல்வாயாக என்று தலைவி கடலை நோக்கிக் கேட்கிறாள் (38).
 
இவர்கள் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியாமல்  தோழி இரவில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். தலைவனைக் கண்டு,  தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும் (34).  கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள் (56). 
 
தலைவனும் வருகிறான், இரவில் அவர்கள் சந்திக்கிறார்கள்.  தலைவன் இரவில் வருகையில் அவனது புரவியின் குளம்புத் தடயம் மணலில் அழுந்தி அவன் வந்து சென்றதை அறிவிக்கிறது.  தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று அவன் இனி இரவிலும் வந்து தலைவியைக் காண வேண்டாம் என்று தோழி கூறுகிறாள் (48).   பகற் பொழுதில் நீ வந்தாய் எனில்  பழிச் சொற்கள் பல வரும். அப்பழிச்சொற்களைத் தவிர்க்க விரும்பி இரவில் நீ வந்தாய் என்றால் வருவதற்கு  இடையூறுகளும் பல உண்டு (59). அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்  இரவில் தலைவியைக் காண வர வேண்டாம் (49).  உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருக்கிறாள். நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள் (55).  இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும்,    உமக்கு ஒன்று நேருமாயின் தலைவி உயிர் வாழமாட்டாள்.  ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் (61) என்று தலைவனிடம் தோழி கூறுகிறாள். 

தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் (35). இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் (43). தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக (36, 37).   தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள்  (57).  தூக்கக் கலக்கத்தில் கண்ட கனவு போன்று விளங்கிக் கொள்ள முடியாத, வகையில் வருகின்ற உனது வரவை நிறுத்திவிடு தலைவனே.  முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான  செய்கை (50 ).   களவுப் புணர்ச்சியில் மிகுந்த விருப்பம் கொள்ளாமல் தக்க  நாளொன்றினைத் தேர்வு செய்து தலைவியை  மணம் புரிந்து கொள்வதுதான் உனக்கேற்ற  நன்னெறியாகும் (52).   எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக (53). இது குறித்து எண்ணி ஆய்வு செய்து காலத்தை வீணாக்க வேண்டாம், தக்க நாள் ஒன்றைத் தேர்வு செய்து, காலம் தாழத்தாது பெண் கேட்டு வந்தால்,  நீ தலைவியைத் துணையாக  அடையும்  வாய்ப்பு உமக்குக் கிட்டும் (46). ஆகவே மேலும் ஆராய்ந்து கொண்டிராதே, கோள்கள் குறித்து  ஆராய்தல் தேவையில்லை.  நிமித்தம் அறியும் கணிஞரை  வரவழைத்து, ஓர் மண நாளைக் குறித்துக் கொண்டு வந்து, இவளை விரும்பி  மணம் புரிந்து கொள்ளுதலே நீ தலைவிக்குச் செய்யும் நன்மையாக அமையும் (54) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
 
தலைவியைப் பெண்கேட்டு அயலார் சிலர் வருகிறார்கள்.  தோழி இனி அமைதியாய் இருப்பது சரியல்லவென்று செவிலித்தாயிடம் தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள். கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவன், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல (39). விற்போரில் வல்ல வீரர்கள் கூடி நடத்தும் வில்விழாக் கூட்டத்திலும், கடலினாலே சூழப் பெற்ற  இவ்வுலகத்தினிடத்தே நல்லவர் பலர் கூடி நடத்தும் மணவிழாக் கூட்டத்திலும், அன்று கடற்கரையினிடத்து தலைவிக்கு  ஒப்பற்ற உதவியினைச் செய்த கடல் துறை முகத்துக்குரியவனை   ஒத்த ஆடவரை நாங்கள் காணவில்லை!! இவரைப் போன்ற அத்தகைய சிறந்தவர் சுவர்க்கத்திலிருந்தாலும் அவரை தலைவிக்குத் தேர்வு செய்து மணமுடிப்பாயாக  நல்ல எமது அன்னையே!   நம் தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நிற்கிறாள் தோழி (62).

 
குறிப்பு - கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
32. கடற்கரையில் மீன் உலர்த்திக்  காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
33. தலைவியின் வெண் முத்துப் பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில்  மனம் துவண்டு வருந்துகிறேன் நான் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.
60. கடற்கரையில் நண்டு பிடித்தவாறு நெய்தல் பூக்களைக் கொய்து கொண்டிருக்கும் நீண்ட கண்களையுடைய தலைவி எனக்குக் காதல் மயக்கம் தந்தாள் என்று  தோழனிடம் கூறுகிறான் தலைவன்.
45. ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும் அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் பண்பில் சிறந்தவன்தான் என்று தோழன் வியக்கிறான்.
47. அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான்.
42. தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது  கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான்.
44. தலைவனே உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தோழி குறிப்பு கொடுக்கிறாள்.
58. அலைகடலும் அதனருகே கடற்கரைச் சோலையும், வெண்மணலும் ஞாழலும், தாழையும் புன்னையும் நிரம்பிய இடங்களை விரும்பிப் பார்ப்பாயாக எனத் தோழி  தலைவனுக்குப் பகற்குறி சொன்னாள்.
51. கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை  உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில்  அங்குக் காணலாம் எனத் தோழி தலைவனுக்குக்  குறிப்பு கொடுக்கிறாள்.
41. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து,  மழைமேகம் மூளுவது போல எங்கும்  சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.
40. துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான் தலைவன்.
38. தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்கும் என் நிலையைப் போல உறங்காமல் அலைமோதும் இத்துன்பத்தை  உனக்குக் கொடுத்தவர் யார் கடலே? என்று தலைவி கடலினை நோக்கிக் கேட்கிறாள்.
34. தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது  கண்களைக் காண இயலும்  என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
56. தலைவனே கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில்,  அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக்  கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில்  இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
48. தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காண நேரிட்டால் அலர் உண்டாகும்  என்று தலைவனை  இரவில் வர  வேண்டாம் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.
59. பகல் இரவு என்று இரு பொழுதுகளும் தலைவியைச் சந்திக்க  வருதலை விடுத்து  விரைவில் அவளை மணமுடித்துக் கொள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
49. அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும்  மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில்    இரவில் தலைவியைக் காண வருதல் ஏற்புடையதல்ல  எனத் தோழி தலைமகனிடம் மறுத்துரைக்கிறாள்
55. தலைவனே தலைவியைப் பார்க்க வரவேண்டாம், உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருப்பதைக் காண்பாயாக. நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள்  என்று தலைவனிடம் இரவு வருகையை நிறுத்தச் சொல்கிறாள் தோழி. 
61. இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும், ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
35. தலைவி மீது ஊரார் அலர்  தூற்றாதவாறு இருக்க நீ  இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் என்று தலைமகனிடம் தோழி  கூறுகிறாள்.
43. தலைவனே இரவில் தலைவியைத் தேடி  வாராதே, வந்ததால் அவளை மணமுடிக்கும் நோக்கில் மட்டும் வருவாயாக (கனை இருள் வாரல்!) என்கிறாள் தோழி.
36. உன் நாட்டுப் பறவைகளும் குடியும் குடித்தனமுமாக வாழ முற்படுகையில், அது போல நீயும்  தலைவியை  மணந்து அவளுடன் தங்கிவிடுவாயாக எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
37. தலைவிக்குத்  துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது.  அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு  மணம் செய்து கொள்வாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 
57. தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள் என்கிறாள் தோழி.
50. இரவில் வருவதை நிறுத்தி முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான செய்கை என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
52. நாள்  கடத்தாது, தக்க நாள் ஒன்றில் தலைவியை மணமுடித்து இல்லறம் மேற்கொள்வதே உன் தகுதிக்கேற்ற நல்லொழுக்கம் எனத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள்.
53. தலைவனே எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.
46. தலைவியைப் பெண்கேட்டு வந்து விரைவில் மணம் முடிப்பாய் தலைவனே, அதை விட்டு இடர் நிறைந்த இரவில் அவளைக் காண வருவதைத் தவிர்ப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
54. தலைவனே இரவில் வாராதே, இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
39. கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினைத் தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை  அடையத் தகுதி உடையவர், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல  என்று தோழி செவிலித் தாயிடம்  தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள்.
62. தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நின்றாள்.




உதவிய  தளங்கள்:
1. கணிமேதாவியார்  இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் - மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம்,  1927  (இரண்டாம்  பதிப்பு)
https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf
https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை - தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார் 
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html


நன்றி:  சிறகு 
அக்டோபர் 24, 2020


#சிறகு, #இலக்கியம், #ஐந்திணைமாலை, #திணைமாலை நூற்றைம்பது, #Themozhi