Wednesday, December 4, 2013

சரியா? தவறா?

சரியா? தவறா?




காலிக் கோப்பையில் எறும்புகள்
கண்டன இனிப்புச் சுவைதனை
கழுவும் வேளையும் வந்ததுவே
கண்டேன் நானும் எறும்புகளை
கவனக் குறைவால் அலசிவிட்டால்
கண்டிடும் மரணத்தை அவ்வுயிர்கள்

அக்கறை கொண்டு செயல்பட்டால்
அத்தனை உயிர்களையும் என்னால்
அன்புடன்தான் காத்திட இயலும்
அன்றுடன் முடியாது தொடர்வதற்கு
அச்சிற்றெறும்புகளின் வாழ்க்கையிலோர்
அல்லல் நீக்கும் தேவதையாவேன்

சின்னஞ்சிறு தட்டல்களினால் தரையில்
சிதறியோடின எறும்புகள் எங்கும்
சிற்றெறும்பொன்றோ தன்கால் மாட்டிச்
சிக்கித் தவித்தது கோப்பைப் பிசுக்கில்
சிறுகுச்சியினால் விடுவித்தேன் அதனை
சிறிது தள்ளாடியே விழுந்தது தரையில்

நடக்க முடியாது தவித்த எறும்பின்
நட்பும் சுற்றமும் விட்டு விரைந்தோடின
நலிவுற்றுப் போகும்படி முடமாக்கினேனோ
நாளும் அதற்கினி தனிமையில் உயிர்வதையோ
நானும் துயருற்றேன் கொன்றிருந்தால் அதை
நல்லதோர் முடிவாக இருந்திருக்குமோ ஐயகோ!!!

 

நன்றி: வல்லமை 
டிசம்பர்  4, 2013  



#கவிதை,  #வல்லமை, #Themozhi