Wednesday, June 19, 2013

அவளா? இவளா?

அவளா? இவளா?
 

என்ன ஒரு செக்கச் சிவப்பு
கண்ணைக் கவரும் வாளிப்பு
மதியை மயக்கும் வனப்பு
அழகிய பளபளப்பு மினுமினுப்பு
பார்த்தாலே தெரியும் உன் மேன்மை
பரவசமூட்டுவதோ உனது புதுமை
உனை அடைய விழைவதும் உண்மை
அடைந்தாலோ கிடைத்திடும் பெருமை

உன் இளமை, உன் வேகம்
உன் ஆற்றல், உன் விவேகம்
யாவும் அனைவரும் அறிவர்
அனைவரின் விருப்பமும் நீயே
அருகில் நின்று மயக்கும்
உனை ஒப்பிடுகிறேன்
தொலைவில் எனக்காகவே
காத்திருக்கும் எனதன்புடன்

இளமை இழந்து
தளர்ந்த உடல்தான்
புதுமையும் வேகமும்
உன்போல் இல்லைதான்
அன்று என் கல்லூரிக் காலத்தில்
தொடங்கிய சொந்தம் அது
இன்றும் என் குழந்தைகளைச் சுமந்து
பள்ளியில் சேர்க்கும் பந்தம் அது

விட்டுப் பிரிவேனோ என்று
எந்நேரத்திலும் தடங்கலின்றி
நம்பிக்கையுடன் வேலைக்குச்
செல்லத் தயாராக உதவிடும் பாங்கு
கடும்பனி, காற்று, வெயில், மழை
அனைத்திலிருந்தும் கொடுத்த
அக்கறை நிறைந்த பாதுகாப்பை
நன்றியுடன் நினைக்கிறது மனம்

என்றும் எனதன்பை உன்னுடன்
ஒப்பிடவே முடியாது என்னால்
பிரிந்துவர நினைக்கவும் இயலாது
அன்பை நோக்கி விரைகிறது
என்னுடைய கால்கள் வெளியில்
அழகு காத்திருக்கிறது அங்கே
சிற்றுந்து விற்பனையாளரின்
குளிரூட்டிய காட்சி அறையில்

 


நன்றி: வல்லமை 
ஜூன் 19, 2013  


#கவிதை, #வல்லமை, #Themozhi