உதகை வாழ் தோடர் இன மக்கள் - பிரிட்டிஷ் லைப்ரரி படங்கள்
நீலகிரி மலைப்பகுதியின், தோடர் இன மலைவாழ் பழங்குடியினரின் படங்கள் சில பிரிட்டிஷ் லைப்ரரி சேகரிப்பில் உள்ளன.
இப்படங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 19 ஆம் நூற்றாண்டிலும் (1870களிலும்), சில 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்டுள்ளன. 1820களில் உதகை பகுதி ஆங்கிலேயர்களின் கோடைக்காலக் குடியிருப்புப் பகுதியாக மாற்றம் பெறத் துவங்கியது. மேலை நாட்டு மக்களின் வரவின் தாக்கத்தால் விரைவில் மாறிவரும் பழங்குடியினரின் பண்பாட்டு நிலையை உணர்ந்து இப்படங்களை எடுத்து அவர்கள் வாழ்வுமுறையை ஆவணப்படுத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடும் செய்திருக்கிறார் ஆங்கிலேய அதிகாரியான 'ஜேம்ஸ் வில்கின்சன் பிரீக்ஸ்' (James Wilkinson Breeks, the Commissioner of the Nilgiris). மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின் பெயர் குறிப்பிடப்படாத புகைப்படக் கலைஞர் ஒருவர் 1871-72 காலத்தில் சில படங்களை எடுத்துள்ளார். மேலும் சிலரும் படங்களை எடுத்துள்ளனர்.
குழுக்களாக இடையர்கள் வாழ்வு முறையைக் கடைப்பிடித்து, புல்வெளியில் (sholas) எருமை மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்துவது தோடர் இன மக்களின் வாழ்வு முறை. இவர்கள் தாவர உணவை உண்பதை (vegetarian) வழக்கமாகக் கொண்டவர்கள். எருமைகளைப் புனிதத்தன்மையைக் கொண்டதாகக் கருதும் தோடர்களுக்கென தனிப்பட்ட மொழியும் பண்பாடும் உள்ளது. தோடர்களுக்கு அவர்களது வழிபாட்டிற்கான கோவில்களும் (Boas and Palthchis) உண்டு. தோடர்களில் ஒருசிலர் அதிகாரமிக்க சமயத்தலைவர் (Palals) பதவியிலிருந்து அவர்கள் இன மக்களுக்கு அறிவுரை கூறும் பொறுப்பில் இருப்பார்கள்.
தோடர்கள் சிவப்பு, நீலம், கருப்பு வண்ண வேலைப்பாடமைந்த கரைகளுடைய நீண்ட பருத்தி ஆடைகளையும் (Puthukuli), வேலைப்பாடமைந்த அணிகலன்களையும் அணியும் வழக்கம் கொண்டவர்கள். சிறந்த கைவினைக் கலைஞர்களாகவும் திகழ்பவர்கள். ஆண்கள் புருவம் வரை கொண்ட முடியைப் படிய வாரிவிட்டுக் கொள்பவர்கள்.
பெண்கள் நடுவகிடு எடுத்து, நீண்டு சுருண்ட குழல் கற்றைகள் முதுகில் தொங்குவது போன்ற தலையலங்காரம் செய்திருப்பார்கள். ஆண்களைப் போன்றே நீண்ட ஆடை அணிந்து அதனைத் தோளின் இருபுறத்திலும் சுற்றி முன்புறம் கொண்டுவந்து கைகளில் பிடித்துக் கொண்டு காட்சியளிப்பார்கள். பெண்களில் சிலர் பச்சைகுத்திக் கொள்ளும் வழக்கமும் உண்டு.
தோடர்கள் இருவர் தங்கள் இசைக்கருவிகளுடன் (Buguri). புல்லாங்குழலும் கொம்பும் கொண்ட கலவையான இசைக்கருவி ஒன்றை இசைப்பது தோடர்கள் வழக்கம்.
இருளர், குரும்பர், கோட்டா, பகடா போன்ற பிற பழங்குடி மக்களுடன் இரு தோடர்கள்.
படத்தில் காணப்படுபவர்கள் தோடர்களின் சமயத்தலைவர்கள் (Palals)
(படங்கள் : 1871 ஆம் ஆண்டு)
*****
நீலகிரியின் உதகை பகுதியில் தோடர் இன மக்களின் குடியிருப்புகள் (Toda mund) அமைந்துள்ளன. வீடுகள் மலைச்சரிவுகளில் காடுகள் துவங்கும் இடத்தில் கட்டப்பட்டிருக்கும். கூண்டுவண்டியின் கூண்டு அமைப்பில் அவர்கள் வீடுகள் தோற்றமளிக்கும். நெருக்கமாகப் பரப்பப்பட்ட மூங்கில்களாலும், புற்களாலும், காற்று மழைநீர் புகாத வகையில் கூரை வேயப்பட்டிருக்கும். சுவர்கள் கற்களை அடுக்கி எழுப்பப்பட்டிருக்கும். சுவர்களில் சாளரங்கள் அமைக்கப்படுவதில்லை. நுழைவாயில் தவழ்ந்து உள்நுழையும் வண்ணம் குறுகியதாக இருக்கும். உள்ளே பெரிய அறையாக, ஒருபுறம் படுக்க அமைக்கப்பட்ட மேடைகள் கொண்ட பகுதியாகவும், மறுபுறம் சமைக்கும் பகுதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். சுவர்கள் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருக்கும். பொதுவாகத் தோடர்களின் வீடுகள் ஐந்து குடில்கள் இணைந்த அமைப்பாக இருக்கும், அவற்றில் மூன்று குடில்கள் வசிப்பதற்காகவும், ஒன்று பால் தொடர்பான பணிகளுக்காகவும், மற்றொன்று கால்நடைகளின் தொழுவமாகவும் பயன்படுத்தப்படும்.
தோடர்களின் குடில் - தோடர்களின் குடியிருப்புப் பகுதி
1880 ஆம் ஆண்டு (Nicholas and Company)
தோடர்களின் கோவில் (Boa)
1871 ஆம் ஆண்டு
1900 ஆம் ஆண்டு (Penn, Albert Thomas Watson)
1870 ஆம் ஆண்டு (Archaeological Survey of India Collections)
1896 (அல்லது 1869) ஆம் ஆண்டு (Bourne, Samuel)
தோடர் குடும்பத் தலைவர் இறந்த பிறகு நடத்தப்படும் சடங்கில் (Kordzai Kedu), அவரது மந்தையிலிருந்து இரண்டு எருமைகள் பிரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அவருடன் இறுதிப்பயணம் மேற்கொள்ளும். இறந்த எருமைகளின் கொம்புகளை இறந்த குடும்பத்தலைவரின் கைகள் பற்றியிருப்பது போல இணைக்கப்படும். இச்சடங்கு மரணம் நிகழ்ந்த உடனேயே செய்யப்படும். பிறகு மற்ற சடங்குகள் தொடரும்.
1871 ஆம் ஆண்டு
************
நன்றி: மின்தமிழ் மேடை
அக்டோபர் 14, 2016
#மின்தமிழ் மேடை, #Themozhi









