Saturday, November 19, 2022

தமிழகத்தின் வரலாற்றுக் காலத்தின் தொடக்கம்

அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?


தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?
நம் முன்னோர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்ற ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் இல்லாத பொழுது அவர்களுடைய வாழ்வியல் குறித்து அகழாய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் போன்ற தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் கணிக்கப்படும் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆகும்.    எழுத்து வடிவில் கிடைக்கும் சான்றுகளின் மூலம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய காலம் வரலாற்றுக் காலம் ஆகும்.  இது நாம் அனைவரும் பள்ளியில் படித்த வரலாறு குறித்த ஓர் அறிமுகமே.  ஆகவே எழுத்தின் தோற்றமே வரலாற்றுக் காலத்தின்  தொடக்கம் எனலாம். 

தொல்பொருட்கள் மூலம் முன்னோர் வாழ்வியலை அறியும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், முன்னோர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு எத்தகைய கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதன் அடிப்படையில்;  கற்காலம் (பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம்) என்றும், உலோகக் காலம் (செம்புக் காலம் மற்றும் இரும்புக் காலம்) என்றும் காலத்தைக் கணிக்க உதவியாகப் பிரித்து அறியப் படுகிறது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் வரலாற்றுக் காலமும் ஆகிய இப்பிரிவுகள் முறையே கற்காலம் → உலோகக் காலம் → வரலாற்றுக் காலம் எனக் காலக்கோட்டில் அமைத்து வரலாறு எழுதப்படுகிறது.  


சங்க கால மக்களின் எழுத்தறிவு: 
சங்ககால இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய செய்திகள் உள்ளன.  "கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து" (அகம் 343) என்றும்,  ''பீடும் பெயரும் எழுதி "; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரை மட்டுமன்றி அவர்கள் எதன்பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் பொறித்துள்ளனர் என்பதை அறியத் தருகின்றன.  தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் தடயங்களை அறிவியல் முறையில் கரிமப் பகுப்பாய்வு செய்து அறியப்பட்ட காலக்கணிப்பில் இன்று நாம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சங்ககால மக்கள் எழுத்தறிவு பெற்று இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

குறியீடுகள், தமிழி எழுத்துகள் - அதன் வளர்ச்சி:
முத்திரைகளில் உருவ எழுத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவை சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்துள்ளன.  இத்தகைய குறியீடுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன.  குறிப்பாக, சிந்துவெளி குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் தென்னிந்தியாவில் 'மட்டும்' கிடைக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 70 விழுக்காடு குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. உருவ எழுத்துகளிலிருந்து குறியீடுகளும், பின்னர் அதிலிருந்து எழுத்து முறையும்  உருவானது.  அகழாய்வு கண்டுபிடிப்புகளும் இதை உறுதிப்படுத்துகிறது.   தமிழக அகழாய்வுகளில் மேலடுக்குகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் அதற்குக் கீழே உள்ள அடுக்குகளில் காலத்தால் முந்தைய குறியீடுகளும் கிடைக்கின்றன. 

தமிழகத்தின் தொல்லியல் அகழாய்வுகள்:
ஒரு பண்டைய நாகரிகத்தின் கூறுகளை அறிந்துகொள்ள உதவுவது அகழாய்வு. குறிப்பாக வெவ்வேறு மண்ணடுக்குகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அம்மக்கள் வாழ்ந்த காலத்தினைக் கண்டறிய உதவுகிறது.  அகழாய்வு மூலம் தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்து, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்களைச் சேகரித்து, அவற்றைச் செயல்முறைக்கு உட்படுத்தி(processing), காலக்கணிப்பு செய்து,  பதிவு செய்து, ஆய்வு செய்தல் ஒரு பகுதியின் தொன்மை மற்றும் பண்பாட்டினைக் கண்டறிய உதவுகிறது.  ஓரிடத்தில் எப்போதிலிருந்து மக்கள் வாழத் தொடங்கினர் என்பது முதல் வரலாற்றுப் போக்கில் விடை அறியாத வினாக்களுக்கும்  அகழாய்வின் மூலம் அறிவியல் வழியில்  உரிய விடை கிடைக்க வழியுண்டு.   இன்றைய நாட்களில் தமிழகத்தில் செய்யப்பட்ட பல தொல்லியல் அகழாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் முன்னோர்கள் வாழ்வை நாம் அறிந்து வருகிறோம். ஆகவே தொல்லியல் ஆய்வுகளும்  தொல்லியல் அகழாய்வுகளும் தமிழர்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்த இன்றியமையாதவையாக அமைகின்றன. 

தமிழ்நாட்டில் அகழாய்வுகள்  மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான இடங்கள்:
இராமநாதபுரம் மாவட்டம்: அழகன்குளம், தேரிருவேலி
ஈரோடு மாவட்டம்: கொடுமணல்
கரூர் மாவட்டம்: கரூர்
காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி மாவட்டம்: மயிலாடும்பாறை
சிவகங்கை மாவட்டம்: கீழடி
தருமபுரி மாவட்டம்: மோதூர்
திருச்சி மாவட்டம்: உறையூர்
திருநெல்வேலி மாவட்டம்: மாங்குடி
திருவள்ளூர் மாவட்டம்: அத்திரம்பாக்கம், பட்டறைபெரும்புதூர்
தூத்துக்குடி மாவட்டம்: ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை
மதுரை மாவட்டம்: மாங்குளம்
மயிலாடுதுறை மாவட்டம்: பூம்புகார்
வேலூர் மாவட்டம்: அப்புக்கல்லு
பாண்டிச்சேரி பகுதியில் -  அரிக்கமேடு

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றது.  
1. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் - சிவகங்கை மாவட்டம் 
2. சிவகளை - தூத்துக்குடி மாவட்டம் 
3. கங்கைகொண்ட சோழபுரம் - அரியலூர் மாவட்டம் 
4. மயிலாடும்பாறை - கிருஷ்ணகிரி மாவட்டம் 
5. வெம்பக்கோட்டை - விருதுநகர் மாவட்டம் 
6. துலுக்கர்பட்டி - திருநெல்வேலி மாவட்டம் 
7. பெரும்பாலை - தர்மபுரி மாவட்டம்

அத்திரம்பாக்கம் அகழாய்வு  (15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்): 
அத்திரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் — 
இந்தியாவில் காலத்தால் முற்பட்டதாகக் கிடைத்திருப்பவை அத்திரம்பாக்கம் தொல்லியல் தடயங்கள். அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் உணவுக்காக விவசாயம் செய்தல், கால்நடை விலங்குகளை  வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில், கொற்றலையாறு பகுதியில் அமைந்துள்ளது அத்திரம்பாக்கம். இப்பகுதி கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கும் பகுதி.  இங்கு வாழ்ந்த மக்கள் அச்சூலியன் கருவி என்றழைக்கப்படும் கைக்கோடரி கருவிகளை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) கற்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். இந்த அச்சூலியன் கருவிகள்  வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும்  முற்கால மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுநர்கள்  19ஆம் நூற்றாண்டில் அத்திரம்பாக்கத்தில் தொல்லியல் தடயங்களாகக் கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்தனர். அண்மையில் சாந்தி பப்பு செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.  அத்திரம்பாக்கம் அகழாய்வின் மூலம்  கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பட்டறைபெரும்புதூர் அகழாய்வு (30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்): 
பட்டறைபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் — 
சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வு தொல்லியல் அகழாய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். பட்டறைபெரும்புதூர் அகழாய்வின் முக்கியத்துவம்; தமிழ்நாட்டில் இந்நாள்வரை அகழாய்வு நடந்த பகுதிகளில்,  இவ்விடத்தில் மட்டும்தான் கற்காலம் முதல் தற்போதைய காலம் வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான  பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காட்டும்  தடயங்களை  இங்குள்ள அகழாய்வு அடுக்குகளின் வழி  அறியமுடிந்துள்ளது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை (Megalithic Period) சேர்ந்த கைக்கோடரி, கத்தி, சுரண்டி (scrapper) போன்ற கற்கருவிகள் போன்றவையும், சங்ககாலச் செங்கற் கிணறு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

4200 ஆண்டுகள் பழமையான இரும்பு பயன்பாடு அறிந்திருந்த மயிலாடும்பாறை நாகரிகம் 
மயிலாடும்பாறை அகழாய்வு(கி.மு.2040):
மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் —
தமிழ்நாடு  மாநிலத் தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை பகுதியில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் 4200 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற மிக முக்கிய தரவு கிடைக்கப் பெற்றது.  இதற்குச்  சான்றாக இரும்புக் கால ஈமப்பொருட்கள், இரும்பால் ஆன நீண்ட வாள் போன்றவை மயிலாடும்பாறையில் கிடைத்துள்ளன.  

3200 ஆண்டுகள் பழமையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு (கி.மு.950):
ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் — 
இந்நாட்களில் தாமிரபரணி என்று அறியப்படும் பொருநை ஆற்றின் தென்கரையில்  ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.  தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என்று கூறக்கூடிய சிறப்புப் பெற்றது ஆதிச்சநல்லூர் - பொருநை ஆற்றங்கரையின் நாகரிகம். 

ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் யாகோர் (Dr. Jagor, 1816 — 1900) 1876ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூர் பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் மிகப்பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பண்டைய ஈமக்காடு இங்கிருப்பதைக் கண்டறிந்தார்.  ஆதிச்சநல்லூர் ஈமக்காடு 115 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அவர் இப்பகுதியில் சேகரித்த தொல் பொருட்கள் பெர்லின் அருங்காட்சியகத்தின் சேமிப்பில் உள்ளன.  தற்பொழுது  ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் "அகம் புறம்" என்ற தமிழர் பண்பாட்டுக் காட்சியில் இவை  மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

டாக்டர் யாகோர் செய்த ஆய்விற்குப் பின்னர்,  ஆதிச்சநல்லூர் பகுதியில்  பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea, 1858 — 1924) 1903-04-ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் அகழாய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் பொருட்கள்  தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்திய ஒன்றிய அரசின் தொல்லியல் துறை 2003 ஆம் ஆண்டு முதல் நிகழ்த்திய தொல்லியல் அகழாய்வில்  பல முதுமக்கள் தாழிகள் வெளிக் கொணரப்பட்டன.  பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டிலும், அதன் அருகில் உள்ள வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகளை மேற்கொண்டது. ஈமத்தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பல தொல்பொருட்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன.  

2021-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் வாழ்விடப்பகுதி முதன்முதலாகக் கண்டறியப்பட்டு ஆதிச்சநல்லூர் வாழ்விடப்பகுதியில்  அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் மூலக்கற்கள் மற்றும் நுண்கருவிகள், மேற்கூரை ஓடுகள், இரும்பு ஆணிகள், இரும்பினாலான தொல்பொருட்கள், கண்ணாடி மணிகள், குறியீடுகள் மற்றும்  தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக் காலம் வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த ஈமத்தாழியில் நெற்கதிர், பெண் உருவம், மான், முதலை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வளமையின் வெளிப்பாடாக வடிக்கப்பட்டுள்ளன. பொன்னால் ஆன நெற்றிப்பட்டங்கள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze), வெண்கலத்தினால் ஆன விலங்கு, பறவை கலைப் பொருட்கள், வாள், குறுவாள் போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்கள், ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியவை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டு அகழாய்வில் கிடைக்கப் பெற்றன. ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு  செய்ததில்,   நெல்மணிகளின் காலம் கி.மு.950 என்று அறியப்பட்டுள்ளது. 

சிவகளை அகழாய்வு (கி.மு. 1155):
சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் — 
சிவகளை பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.  ஆதிச்சநல்லூருக்கும் சிவகளைக்கும் இடையேயான தொலைவு 13 கி.மீ.  சிவகளை பகுதி ஈமக்காடு 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு-சிவப்பு நிறக் கிண்ணம், முதுமக்கள் தாழிகள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze),  இரும்பு உளி,  ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியன கிடைக்கப் பெற்றன. 

ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு  செய்ததில்,   நெல்மணிகளின் காலம்  கி.மு. 1155 என்று அறியப்பட்டுள்ளது. சிவகளை காலக்கணிப்பின் அடிப்படையில் ஆதிச்சநல்லூருக்கும் முற்பட்டதாக இருப்பதை அறிய முடிகிறது. 

கொற்கை அகழாய்வு (கி.மு. 785): 
கொற்கை, தூத்துக்குடி மாவட்டம் — 
கொற்கை  இடைச் சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது.  வெண்டேர்ச் செழியன் முதலாக, முடத்திருமாறன் ஈறாக, 79 பாண்டியர்கள் ஆட்சி கொற்கையில் நடைபெற்றுள்ளது.   கொற்கை கோமான், கொற்கைக் கோன், கொற்கை பொருநன், கொற்கை வேந்தன் போன்ற பெயர்களின் மூலம் கொற்கையின் வரலாற்றுச் சிறப்பை அறிய முடிகிறது.   தாலமி, பிளினி, மெகஸ்தனிஸ் போன்ற அயல் நாட்டவர்கள் எழுதிய குறிப்புகளில்  'கொல்சிஸ்', 'கொல்காய்' என்று கொற்கையைக்  குறிப்பிட்டுள்ளனர்.  

கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வழுவழுப்பான வடக்கத்திய கருப்புநிற மட்கல ஓடுகள்(Northern Black Polished ware),  மற்றும் கருப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள் (Black slipped Ware), வட இந்தியக் கருப்புப் பூச்சுப் பெற்ற பானை ஓடு,  9 அடுக்கு கொண்ட துளையிடப்பட்ட குழாய்கள், சங்கு வளையல்கள், வளையல் செய்ய அறுக்கப்பட்ட சங்குகள், அவற்றின் சில்லுகள் ஆகியன கொற்கை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே  தென்னிந்தியா இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகம் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இச்சான்றுகள்   தெளிவாகக்காட்டுகின்றன. கரிமப் பகுப்பாய்வு மூலம் கொற்கை கி.மு. 785 என்று காலக்கணக்கீடு பெறப்பட்டுள்ளது.

கொற்கை - ஆழ்கடல் ஆய்வு:  தற்பொழுது கொற்கை கடலிலிருந்து உட்புறம் சுமார் 7 கிமீ தொலைவில் இருப்பதால், சங்க காலப் பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண   இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆகியவற்றுடன் இணைந்து முதற்கட்ட முன்கள ஆய்வு 02.09.2021 முதல் 09.02.2022 வரை மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

2,500 ஆண்டுகள் பழமையான அழகன்குளம் நாகரிகம்
அழகன்குளம் அகழாய்வு (கி.மு. 465): 
அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்டம் — 
சங்ககாலப் பாண்டியர்களின் துறைமுகங்களில் அழகன்குளம் துறைமுகமும் ஒன்று. வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளம் அமைந்துள்ளது.  இங்கு நடந்த அகழாய்வில் கிடைக்கப் பெற்ற  ரோம் நாட்டுக் காசுகள், ரோம் நாட்டு அம்ஃபோரா  மதுச்சாடிகள் (amphorae), ரோம் நாட்டுப் பானை ஓடுகள்,  ரோம் நாட்டு மட்பாண்டங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள் ரோம் நாட்டுடன் அழகன்குளம் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கான சான்றுகளாக அமைகின்றன.   மேலும், அழகன்குளத்தில் இருந்த தொன்மக்காலச் சங்கு வளையல் தொழிற்கூடம், கல்மணிகள், கங்கைச் சமவெளி பானை ஓடுகள் போன்ற சான்றுகள் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அமைகின்றன.   

2,500 ஆண்டுகள் பழமையான கொடுமணல் நாகரிகம்
கொடுமணல் அகழாய்வு:
கொடுமணல், ஈரோடு மாவட்டம் — 
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”  (பதிற்றுப்பத்து, 74:5-6) என்னும் சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக  கொடுமணல் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  கொடுமணல் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலகட்டங்களில்  மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.

கொடுமணலின் தொல்லியல் சிறப்பு அதன் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும், அரியவகை வகை மணிகளும் ஆகும்.  இதுகாறும் தமிழ்நாட்டில் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் மொத்தம் 1532; இவற்றில் கொடுமணலில் மட்டுமே கிடைக்கப்பெற்ற  தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகளின் எண்ணிக்கை 1146 என்பது கொடுமணல் அகழாய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும். கொடுமணலில் கற்பதுக்கைகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

தமிழியில் "ஆதன்" என்று பொறிக்கப்பட்ட பானையோடு,   தமிழி எழுத்துக்களில் "ள் அகுர (வன்)" என்று பொறிக்கப்பட்ட பானையோடு ஆகியன இங்குக் கண்டெடுக்கப்பட்டது.மேலும் பண்டைய நாட்களில் கொடுமணல் தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது என்பதற்குச் சான்றுகளாக  இரும்பு உலை தொழிற்கூடம், மணிகள் தொழிற்கூடம்  இருந்த  தடயங்களும் கிடைத்துள்ளன.  

பலவகை பளிங்குக் கற்கள் மணிகள் இங்குக் கிடைத்துள்ளன.  அத்துடன்  இங்குக் கிடைத்த கார்னீலியன் (சூதுபவளம்), அகேட் வகைக் கல் மணிகள் (மூலக்கற்கள்) மராட்டியம், குஜராத் பகுதிகளில் கிடைப்பவை. இவை கொடுமணல்  பகுதிக்கு மூலப் பொருட்களாகக் கொண்டுவரப்பட்டு பட்டை தீட்டப்பட்டு, மெருகேற்றப் பட்டு, துளையிடப்பட்டு  அணிகலன்கள் செய்யும் மணிகளாக மாற்றும் தொழில் கொடுமணலின் மணிகள் தொழிற்கூடத்தில் நடைபெற்று இந்தமையைக் கிடைக்கப் பெற்ற மணிகளின் மூலம் அறிய முடிகிறது.  இது பழங்கால வணிக நடவடிக்கைகளுக்குச் சான்றாகவும் அமைகிறது.  இவ்வாறு மணிகள் தயாரிக்கும் தொழில் இன்றுவரை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருவதும் தொன்மையைப் பறைசாற்றும் சிறப்பு.  

2600 ஆண்டுகள் பழமையான வைகை ஆற்றங்கரை நாகரிகம்
கீழடி அகழாய்வு (கி.மு. 580): 
கீழடி, சிவகங்கை மாவட்டம் — 
அகழாய்வு குறித்துக் கூறினால் அதைக் கீழடி அகழாய்வுடன் இணைத்துக் குறிப்பிடும் அளவிற்கு இன்றைய நாட்களில் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் பரவலாக  மக்களிடம்  சென்று சேர்ந்துள்ளது.  அதற்குக் காரணம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டிருந்த கருத்துகளை மீள்பார்வை செய்ய வைத்தது கீழடி  அகழாய்வு வெளிக்கொணர்ந்த கண்டுபிடிப்புகள்.  

கீழடி அகழாய்வு முடிவுகளுக்கு முன்னர் இந்திய வரலாற்று ஆசிரியர்களின் கருதுகோள்களாக இருந்தவை; 
தென்னிந்தியாவில் நகர நாகரிகம் இருந்ததில்லை, சிந்துவெளிக்குப் பிறகு இரண்டாவது நகர நாகரிகம் கங்கைச் சமவெளியில் தான் தோன்றியது. தமிழகத்திற்கு எழுத்தறிவு வட இந்தியாவில் இருந்துதான் வந்தது. சங்ககால தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரம் நிலவவில்லை,  சங்ககால தமிழகத்தில் அரசுருவாக்கம் கிடையாது என்பது போன்ற பல கருதுகோள்கள்.  இக்கருதுகோள்களை   முறியடிக்க அறிவியல் வழியில் கீழடி அகழாய்வுச் சான்றுகள் உதவின. மேலும், சங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் உண்மையே, அவை அக்காலப் புலவர்களின் கற்பனை அல்ல என்று மெய்ப்பிக்கும் வகையில் பல செய்யுள்களின்  வரிகளை அகழாய்வுச் சான்றுகளுடன் பொருத்திப் பார்க்கும் வண்ணமும் கீழடியின் தொல்லியல் சான்றுகள் உதவின. 

கரிமப் பகுப்பாய்வின் மூலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகம் என்று உறுதி செய்யப்படும் கீழடி நாகரிகத்தின் மக்கள் கட்டுமான அமைப்புகள் மற்றும் தொழில் நுட்பத்தில் கொண்ட முதிர்ச்சி பெற்ற நாகரிகமாகவும், எளிய மக்களும் எழுத்தறிவு பெற்ற சமூகமாகவும், கைவினைத் தொழில்களில் சிறந்த தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வளமையான சமூகத்தினராகவும், திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் விளையாட்டுகள் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும்,  உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்ததற்குச் சான்றுகள் பல  கிடைத்துள்ளன. 

கரிமப் பகுப்பாய்வு (AMS Dating) முறைப்படி கீழடி கி.மு. 580 ஆண்டுக் காலப் பழமையானது என்று அறியப்பட்டுள்ளது.  செங்கல் கட்டுமானங்கள்  கீழடியின் தனிச்சிறப்பு.  கட்டிடங்கள், சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறைக் கிணறுகள், செங்கற்சுவர்கள், மண்பாண்டங்கள், தமிழி  எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், குறியீடுகள் கொண்ட மட்பாண்ட ஓடுகள், சிந்துவெளி எழுத்துக்களை ஒத்திருக்கும் குறியீடுகள் வரிவடிவங்கள் சில கொண்ட பானை ஓடுகள்,  தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் உருவ பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. 

கீழடி கட்டுமானங்கள் காட்டும் கட்டடத் தொழில்நுட்பம்;  "செம்பு இயன்றன்ன நெடுஞ்சுவர்" (மதுரைக் காஞ்சி - 455), "நூல் அறி புலவர் நுண்ணிதின கயிறு" (நெடுநல்வாடை- 74) போன்ற அரண்மனையை உருவாக்கிய முறையைக் கூறும் பாடல் வரிகளுக்கு ஒப்ப அமைந்துள்ளன.  

எலும்பினாலான கூர்முனைப் பகுதிகள் (Bone Points), தக்களிகள் (Spindle Whorls) போன்ற நெசவுத் தொழில் கருவிகளும்;  

மட்பாண்டங்கள், குடுவைகள், கிண்ணங்கள், பானைகள், அரவைக் கல், காட்டுப்பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள சூதுபவளம் மணி (கார்னீலியன்), கண்ணாடி மணிகள்,  போன்றவை பண்டைய மக்களின் கைவினைத் தொழில்களுக்குச் சான்றாகவும்  கிடைத்துள்ளன. 

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு அவர்களின் வாழ்வியல் பகுதியாக இருந்ததைக் காட்டும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டை ஒத்திருந்த  திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன. 

வளமையை வெளிப்படுத்தும் தங்க அணிகலன்கள், சுடுமண்ணைக் கொண்டு வட்டவடிவில் தட்டையாகக் காது துளையில் பொருத்தும் காதணிகள் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையில் இருந்ததையும்; 

திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பகடைக்காய் விளையாட்டுகள், வட்டச் சில்லுகள், ஆட்டக் காய்கள் விளையாட்டு மற்றும் பொழுது போக்குகள் இருந்ததற்கான சான்றுகளும்  கிடைத்துள்ளன.  

கங்கைச் சமவெளி சார்ந்த கி.மு.5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரை நாணயம், பல்வேறு அளவுகளில் கற்களால் ஆன எடைக்கற்கள், ஆமை உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் முத்திரைகள், ரோம் நாட்டு ரௌலட்டட் மட்கலன், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கக் கூடிய அகேட் மற்றும் கார்னீலியன் மணிகள் உள்நாட்டு அயல்நாட்டு வணிக தொடர்புகளுக்கான சான்றுகளாகக் கிடைத்துள்ளன. 

கீழடி பகுதிக்கு அண்மையில் அகழாய்வு நடத்தப்படும் கொந்தகையில்  ஈமத்தாழிகள், படையல் பொருட்கள் (பெரும்படை) ஆகியன கிடைத்துள்ளன.  

அகழாய்வு சான்றுகளின் காலக்கணிப்பின் அடிப்படையில் மக்கள் வாழ்ந்த காலத்தையும், நாகரிகத்தையும் காலக்கோட்டில்  அறிந்து கொள்வதே வரலாற்றை அறிவதன் தொடக்கப் புள்ளி.  காலத்தில் பின்னோக்கி வரலாற்றை அறிவதன் மூலம் நாம் எங்கிருந்து இந்த நிலையை  எட்டியுள்ளோம் என்று புரிந்து கொண்டாலே நம் எதிர்கால முன்னேற்றம் குறித்துத் தெளிவாகச் சிந்திக்க இயலும். 


நன்றி:   தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை   நவம்பர் 15, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்த   டாக்டர் பழனி ஜி பெரியசாமி  அறக்கட்டளை உரையில்,  மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் "பின்நகரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து" என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 



நன்றி: சிறகு 
நவம்பர் 19, 26 - 2022


#தொல்லியல், #சிறகு, #வரலாறு, #Themozhi