ஆய்ச்சியர் குரவை
பொருளிழந்து, பெருமையிழந்து, புகார் துறந்து, மறுவாழ்வு தேடி மதுரையை நோக்கிச் செல்கிறார்கள் கோவலனும் கண்ணகியும். அவர்களுக்கு வழித்துணையாகச் செல்கிறார் சமணக் குரத்தி கவுந்தி அடிகள். மதுரை புறநகர்ப் பகுதியில் வாழும் இடையர் குலப் பெண்ணாகிய மாதரியிடம், கோவலனும் கண்ணகியும் தக்க இடம் கிடைத்து வாழ்வைத் தொடங்கும் வரை அவர்களைப் பாதுகாக்குமாறு அடைக்கலமாகக் கொடுத்துச் செல்கிறார் கவுந்தி அடிகள்.
அங்குக் கண்ணகி சமைத்துப் பரிமாறிய உணவை உண்ட பிறகு, கண்ணகியின் காற்சிலம்புகளில் ஒன்றைக் கடைவீதியில் விற்றுப் பொருளீட்ட மதுரை நகருக்குள் செல்கிறான் கோவலன். ஆனால், அச் சிலம்பு பாண்டிய அரசியின் களவு போன சிலம்பு என்று பொய்ப் பழி சுமத்தப்படுவதை எதிர்கொள்கிறான். வழக்கை ஆராய்ந்து பாராத பாண்டிய மன்னன், கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனைக் கொன்று அரசியின் சிலம்பை மீட்டு வருமாறு காவலர்களுக்கு ஆணையிடுகிறான். காவலர்களால் கொலைத் தண்டனைக்கு உள்ளாகி உயிரிழக்கிறான் கோவலன்.
மறுநாள் அதிகாலையில் பாண்டிய அரசனின் அரண்மனையில் காலை மணி ஒலிக்கிறது. ஆயர்கள் வாழும் புறநகரில் இடைக்குலத்து முதியவளாகிய மாதரி அன்று கோயிலுக்கு நெய்யளக்கும் முறை தன்னுடையது என்று நினைவு வந்தவளாகத் தன் மகள் ஐயையை அழைத்துக் கொண்டு, கையில் மத்துடன் வெண்ணெய் கடைவதற்காகத் தயிர் வைக்கும் தாழியிடம் செல்கிறாள். பானையில் பால் உறைந்து தயிராக மாறியிருக்கவில்லை. முன்னர் உறியில் சேமித்த வெண்ணெய்யை எடுத்து உருக்குகிறாள், அதுவும் நெய்யாக உருகவில்லை. கொட்டிலில் எருது கண்ணீர் வடிக்கிறது, பசு அஞ்சுவது போல நடுங்குகிறது. அதன் கழுத்தணி தரையில் அறுந்து கிடக்கிறது. துள்ளியாடும் ஆடும் துடிப்பின்றிச் சோர்வாகப் படுத்திருக்கிறது. இவற்றை அடுத்தடுத்துக் காணும் மாதரி, இவை யாவற்றையும் தீய நிமித்தங்களாக உணர்கிறாள். தொழுவில் நிற்கும் ஆனிரைகளுக்கு எந்தத் துன்பமும் நேராமல் இருக்க மாயவனான மாலையும் அவனுக்கு மூத்தவனாகிய பலராமனையும் வாழ்த்தி குரவையாட்டம் நிகழ்த்த முடிவெடுக்கிறாள்.
தொழுவத்தில் நிற்கும் ஏழு காளைகளை ஏழு ஆயர்குல மகளிர் வளர்த்து வருகிறார்கள். அக் காளைகளை அடக்குபவரையே மணமுடிக்க வேண்டும் என்பது அவர்களது அவா. அந்த ஏழு பெண்களையும் அழைத்து அவர்களுக்குக் குரவைக்காகப் 'படைத்துக் கோள்' பெயர் இடுகிறாள் மாதரி. நிகழ்த்துக் கலைகளான நாட்டியம் நாடகம் போன்றவற்றில் கூறப்படும் கதையில் இடம் பெறும் பாத்திரங்களுக்கான பெயரை நடித்துக் காட்டுபவருக்குச் சூட்டுவது வழமை. அதாவது நடிப்பவருக்கு ஒரு புனைபெயர் இட்டுச் சொல்வது வழக்கம் (எ. காட்டு: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், கார்த்தியின் படைத்துக் கோள் பெயர் வந்தியத்தேவன்).
ஆடுவோர் ஏழு பேரோ அல்லது ஒன்பது பேரோ கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடும் நடன வகை குரவை எனப்படும். வரிசையில் நிற்போரில் இடமிருந்து வலமாக முறையே; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று இசைக்குரிய ஏழு சுரங்களின் பெயர்களைக் கைகோர்த்து ஆடவிருக்கும் ஆய்ச்சியர் எழுவருக்குப் பெயர்களாக மாதரி சூட்டுகிறாள்.
இக்காலத்தில் இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) எனக் கூறப்படும் ச, ரி, க, ம, ப, த, நி (அதாவது; சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்பெறுபவை), அக்காலத்தில் தமிழில் 'குரல்', 'துத்தம்', 'கைக்கிளை', 'உழை', 'இளி', 'விளரி', 'தாரம்' என்னும் ஏழு பெயர்களாலும் அறியப்பட்டன. இந்த சுரங்களின் பலவேறு வகைக் கோர்வைகளின் அடிப்படையில் இசையின் பண் (அல்லது இராகம்) உருவாகிறது.
அவர்கள் சம நிலையாக வட்டவடிவில் நின்று, நண்டுகள் போல அடுத்து நிற்பவரின் கைகளுடன் தங்கள் கைகளைப் பிணைத்துக் கொண்டு, கண்ணனின் புகழை வாழ்த்திப் பாடி குரவை ஆட ஆயத்தம் ஆனார்கள். இந்தக் காட்சியைக் கூறும் சிலப்பதிகார வரிகள் இவை:
இடை முதுமகள் இவர்க்குப் (52)
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.
மாயவன் என்றாள் குரலை; விறல் வெள்ளை
ஆயவன் என்றாள் இளி தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை. (60)
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்
முத்தைக்கு நல் விளரி தான்
அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை-தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
‘ஐ!’ என்றாள், ஆயர் மகள் (70)
அவர்-தாம்
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் (73)
[சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம், 7. ஆய்ச்சியர் குரவை, வரிகள் 52-73]
பாடல் கூறுவதன்படி குரவையாடுபவர் வரிசை,
குரல் = மாயவன்
துத்தம் = நப்பின்னை/பிஞ்ஞை
கைக்கிளை = ஆயமகள் ஒருத்தி
உழை = ஆயமகள் ஒருத்தி
இளி = பலராமன்
விளரி = ஆயமகள் ஒருத்தி
தாரம் = ஆயமகள் ஒருத்தி
மாயவன் சீர் வரிசையில் (அணியில்) பின்னையும் தாரமும் நின்றனர்.
பலராமன் சீர் வரிசையில் உழையும், விளரியும் நின்றனர்.
பிஞ்ஞையின் இடப்பக்கம் கைக்கிளை நிற்கிறாள்
முத்தைக்கு வலப்புறம் விளரி நிற்கிறாள்
இவ்வாறாகப் பாடல் தரும் குறிப்புகள் குரவை ஆடுபவர் நிற்கும் வரிசையைக் காட்டும்.
இதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் காட்சிப்படுத்துகிறது.
இளங்கோவடிகள் இப் பாடல் வரிகளில் பல இசை நுட்பங்களைப் பொதிந்து வைத்துள்ளார் எனலாம்.
இசையில் கருவிகளுக்கு முதல் முதல் சுருதி சேர்க்கும்பொழுது ச-ப-ச என்ற மூன்று சுரங்களுக்குப் பொருந்தச் சேர்த்துக் கொள்வார்கள். ச-ப-ச என்ற சுரங்கள் சட்சம-பஞ்சம முறைப்படி (ஓசை அளவீட்டில் 1, 1½, 2) அமையும். கீழ் 'ச' வின் இருமடங்கு ஓசையுடையது மேல் 'ச' வாக இருப்பதனாலும் இடைப்பட்ட நிலையில் பஞ்சமம் சேரும்பொழுது கேட்பதற்கு இசை ஒத்து இனிமை நிறைந்து நிற்கும். சட்சம-பஞ்சம முறைப்படி இசை கூட்டப்படுவதின் காரணம் சட்சமம் -பஞ்சமம் இரண்டும் ஒலி வேறுபாடற்றவை, ஒரே முறையில்தான் ஒலிக்கப்படும். ஆனால் ஏனைய ஐந்தும் (ரி, க, ம, த, நி) ஒலிப்பில் வேறுபாடுகள் கொண்டவை, அவற்றுக்குத் தனிப்பெயர்களும் உண்டு, குறியீடுகளும் உள்ளன. ('ரி' இல் 3, 'க' இல் 3, 'ம' இல் 2, 'த' இல் 3, மற்றும் 'நி' இல் 3 வேறுபாடுகள் உள்ளன).
இதைத் தமிழ்ப் பெயர்களில் குறிப்பிடுவோமென்றால், குரல் (ச) மற்றும் இளி (ப) ஆகிய இரண்டும் ஒலி வேறுபாடற்றவை. இவை முறையே மாயவனுக்கும், பலராமனுக்கும் எனக் குறிப்பிடுகிறாள் மாதரி. இத் தேர்வு மாயவன் பலராமன் ஆகிய இருவரின் சிறப்பை, தனித்தன்மையைக் காட்டுவதற்காக எனக் கொள்ளலாம். குரல், இளி ஆகிய இருவர் மட்டுமே ஆண் உருவாகப் பாவித்து ஆடுகிறார்கள். மற்ற ஐவரும் பெண் உருவாகவே குரவை ஆடுகிறார்கள்.
ச, ரி, க, ம, ப, த, நி என்ற சுரங்கள் வரிசையில் எட்டாவதாக மீண்டும் 'ச' வருகையில் (ச, ரி, க, ம, ப, த, நி, ச) 'ச' விற்கு முன்னதாக 'நி' இடம் பெறும்.
அதாவது, 'குரல்' மறுபடி வரும்பொழுது அதற்கு முன்னர் 'தாரம்' வரும். இங்குக் குரவை ஆடுபவர்கள் வட்டவடிவில் நிற்கும் பொழுது குரலுக்கு முந்தையதாக (முன்னதாக) தாரம் நிற்கிறாள். முந்தை முத்தை எனப் பாடலில் விகாரம் அடைந்தது. இதை வலித்தல் விகாரம் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
என்று இணை சேர்த்துவிட்டு, கைக்கிளையை (இணையின்றி /ஒருதலைக் காதல்) தனித்து விட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.
மாயவன் கழுத்தில் நப்பின்னை துளசி மாலையைச் சூட்டி அவனோடு இணைந்து ஆட, வட்டவடிவில் கைகோர்த்து மற்றவரும் அவன் புகழ் பாடி குரவை ஆட்டத்தைத் தொடங்கினர்.
பார்வை நூல்கள்:
சிலப்பதிகாரம், நூலாசிரியர் இளங்கோவடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
சிலம்பின் கதை, நூலாசிரியர் பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்
படம் உதவி:
நடனக் காட்சி படவுதவி: தமிழ் மரபு அறக்கட்டளை; தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியக ஏற்பாட்டில் நடக்கும் "அகம் புறம்" தமிழ்க் கண்காட்சியின் தொடக்கவிழாவின் கலைநிகழ்ச்சி.
நன்றி: தமிழணங்கு, நவம்பர்-2022
#இலக்கிய நுட்பம், #சிலப்பதிகாரம், #தமிழணங்கு, #Themozhi

