பண்டிகை தந்ததொரு பாடம்
சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும்
சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும்
நாம் வாழும் வாழ்க்கைதான் நிர்ணயிக்கும்
நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை
நல்லவர் மாண்டால் துக்கம் சூழ்வதும்
தீயவர் மாண்டால் துயரம் நீங்குவதும்
எடுத்துரைக்கும் செய்தி அறியாதவரா நாம்
அறிவுறுத்தும் பாடம் புரியாதவரா நாம்
காந்தியாக ஏசுவாக வாழ்ந்ததற்காக
என்றும் போற்றப்படுவதும் நம் கையில்
நரகாசுரனாக மகிஷாசுரனாக வீழ்ந்ததற்காக
என்றும் விழாவாகிப் போவதும் நம் கையில்
பிறர் போற்றும் வாழ்வாக இல்லாவிடினும்
பலர் தூற்றும் மறைவாக இல்லாதிருக்கட்டும்
திருந்தி நாம் வாழ்ந்திடப் பெற்றிடும் அறிவுரையிது
தீபாவளிப் பண்டிகை தரும் நல்லதோர் பாடமிது
குறிப்பு:
தன்னிலை விளக்கம் - தீபாவளி சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் அடைந்த வீடுபேற்றை (மறைவு) நினைவு கூரும் நாள் என்ற வரலாற்று உண்மையை அறிந்திராத காலத்தில் எழுதிய கவிதை
நன்றி வல்லமை - சிறப்பிதழ்
அக்டோபர் 31, 2013
#கவிதை, #வல்லமை, #Themozhi
