Wednesday, March 25, 2026

ராமானுஜரின் மேல்கோட்டைப் பயணம்

 ராமானுஜரின் மேல்கோட்டைப் பயணம்
 

ராமானுஜர் வாழ்ந்த காலம் முதலாம் குலோத்துங்கன் காலம் என்பதை வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. ராமானுஜருடன் சோழ மன்னருக்குத் தனிப்பட்ட வகையில் மோதல் இருந்திருக்கலாம்,  இது நடந்த காலம் கிபி 1100 களின் தொடக்கமாகவும் இருந்திருக்கலாம். வைணவக் கோயில்களுக்குக் கொடை வழங்கிய மன்னர் இவர் என்பதால் மன்னர் ஒரு வைணவப் பெரியாருடன் கொண்ட மோதலை  மதவெறிச் செயல் என்று கூற வாய்ப்பில்லை. 

சூழ்நிலை சரியில்லை என்று ராமானுஜர் சோழநாட்டிலிருந்து வெளியேறி இன்றைய கர்நாடகா பகுதிக்குச் சென்றார் என்பதற்கு கர்நாடகா / ஹோய்சாள மன்னர் பக்கத்துத் தரவுகளும் உண்டு.  ஹோய்சாள மன்னர் பிட்டிதேவா / விஷ்ணுவர்தனன்  (1108-1152) என்பவரைச் சமணத்திலிருந்து வைணவத்திற்கு மாற்றினார் ராமானுஜர் என்பது கர்நாடக நாட்டு வரலாறு.  

மன்னரின் மகளுக்கு வயிற்றுவலி போல அவளைத் துன்புறுத்திய ஒரு தீராத நோயை ராமானுஜர் தீர்த்தார் அதனால் மன்னர் மதம் மாறினார் என்பது ஒரு கர்நாடகா கதை.   
ராமானுஜரை தப்புவித்த அவருடைய  சீடர் கூரத்தாழ்வார் கண்கள் சோழ மன்னர்  ஆணையால் குருடாக்கப்பட்டன என்று மற்றொரு தமிழ்நாட்டுக் கதையும் உண்டு. 

அடிப்படையில்,  சுங்கம் தவிர்த்த சோழர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ராமானுஜர் மேல்கோட்டைக்குச் சென்றார் என்பது உறுதியாகத் தெரிகிறது. அந்நாட்டு மன்னரைச் சந்தித்து அவரை வைணவத்திற்கு மாற்றினார் என்பதும் தெரிகிறது.  விஷ்ணுவர்தனன் என்ற பெயரே ராமானுஜர்  பிட்டி தேவா மன்னருக்குச் சூட்டிய பெயர். 
(குறிப்பு: ராமானுஜர் சோழ நாட்டைவிட்டு ஏன் போனார் எதற்காகப் போனார் என்பதும் வேறு ஓர் ஆய்வு; எவ்வாறு ஹோய்சாள மன்னரை மதம் மாற்றினார் என்பதும் வேறு ஓர் ஆய்வு).  

அவ்வாறு சென்றவர் ஈரோடு சத்தியமங்கலம் வழியாகச் சென்ற பொழுது அப்பகுதி  வேட்டுவ அரசரும் அவருடைய மக்களும் ராமானுஜருக்கு  உணவளித்து அவரைக் கொள்ளேகலம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.  வைணவப் பெரியார் ஒருவரைக் காப்பாற்றிய அவர்களுடைய செயலை மெச்சி ஹோய்சாள மன்னர் அவர்களுக்கு  நான்கு கிராமங்களையும் அவற்றுடன் திருக்கோயில் மற்றும் ஒரு திருக்குளம் ஆகியனவற்றை  வழங்கினார் என்று கொங்கு நாட்டுச் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 


[This document was provided by Dr. Valaiparameswaran. MD]

இச்செய்திக்கு  சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள மெக்கன்சி ஆவணங்கள் ஒன்றிலும்  சான்று இருப்பதாகக் கணக்கம்பாளையம் கோயில் திருப்பணி அறிவிப்பில் கூறப்படுகிறது.  இச்செய்தி குறித்து மெக்கன்சி  ஆவணத்தில்  இருப்பது தொல்லியல் குறிப்புகளா அல்லது வாய்வழியாகப்  பரம்பரை பரம்பரையாகக்  கடத்தப்பட்ட தகவலா என்பது விரிவாக அறிய வேண்டிய ஒன்று. விஷ்ணுவர்தனன் சோழர் ஆட்சியில் இருந்த சில கொங்குப்  பகுதிகளையும்   கங்கபாடி பகுதிகளைக் கைப்பற்றி நாட்டை விரிவாக்கிய மன்னன் என்பதும், ஹோய்சாள மன்னர்களில் சிறந்தவன் என்பதும் வரலாறு. அப்பகுதி விஷ்ணுவர்தனன் ஆட்சியின் கீழ் இருந்ததால்தான் அவராலும் வேட்டுவ குடி மக்களின் செயலைப் பாராட்டி கிராமங்களைக் கொடையாகக் கொடுக்க முடிந்துள்ளது. 

இச்செய்தியின் அடிப்படையில்;  ராமானுஜர்  திருவரங்கத்தில் இருந்து காவிரியின் வடகரையில் பயணப்பட்டு ஈரோடு சத்தியமங்கலம் வழியாகக்  கொள்ளேகலம் சென்று சேர்ந்தார் என்பதை யூகிக்க முடிகிறது. 


தில்லை கோவிந்தராஜர் சிலையை கடலில் வீசியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியும் அக்காலத்தில் வாழ்ந்த சோழ அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தரால் அவருடைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால்;   பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன்  காலத்தில் நிறுவப்பட்ட தில்லைக் கோவிந்தராஜர் சிலையைக் கடலில் மூழ்கடித்த சோழ மன்னர்  இரண்டாம் குலோத்துங்கர் ஆவார்.  இவர் அநபாயச் சோழர்  என்றும் கிருமிகண்ட சோழர்  என்றும் அழைக்கப்படுவார். இவர் முதலாம் குலோத்துங்கரின் பேரன்.  இவரும் மதவெறியால் செய்யவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சீரமைக்கும் நோக்கில் செய்தார் என்றும் கூறுகிறார்கள்.  (ஆனால்; அரசன்  ஒரு பாழ்பட்ட படிமத்தை நீக்கி, அதைக் கடலில் போட ஏற்பாடு செய்தது  அரசவைப் புலவர் பாடல்களில் மீண்டும் மீண்டும்  ஒரு சாதனை போலக் குறிப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது  அல்ல.)

சோழ வேந்தர் கால வரிசை : 
குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163

ஒட்டக்கூத்தரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு.   ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப்புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும், பிறகு அவனது  மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது. அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. ஒட்டக்கூத்தர் இயற்றிய மற்றொரு நூல் - தக்கயாகப்பரணி. 

இணையக்கல்விக்கழகம் மூவருலா நூலுக்குத் தரும் விளக்கத்தில் திருமாலை கடலில் மூழ்கடித்த செய்தியைக் காணலாம் (பார்க்க: https://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01244l2.htm); 
மற்றும்: ஒட்டக்கூத்தர் அவர் இயற்றிய மூவருலா (https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZI2/mode/2up) நூலிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார். 

தில்லைக் கோயிலில் இருந்த திருமால் மூர்த்தியை எடுத்துக் கடலில் மூழ்கச் செய்தான் சோழன் என்பதைக் குலோத்துங்க சோழனுலா மற்றும் இராசராச சோழனுலா நூல்களில் கீழ்க்கண்டவாறு ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்
“தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறுதெய்வத், தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற்"  
     (ஒட்டக்கூத்தர் இயற்றிய - குலோத்துங்க சோழனுலா  கண்ணி - 39)
"பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பறுத்து, முன்னைக் கடலகழின் மூழ்குவித்த - சென்னி."
     (ஒட்டக்கூத்தர் இயற்றிய - இராசராச சோழனுலா  கண்ணி - 33)
தக்கயாகப்பரணி நூலில் :
"முன்றிற் கிடந்த தடங்கடல்போய் முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை, மன்றிற் கிடங்கண்ட கொண்டல்” :
     (ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி-777)

எது எப்படி இருந்தாலும் இச்செயல்கள் வைணவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மறுக்க முடியாது. தாத்தா ராமானுஜரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கும் பேரன் கோவிந்தராஜர் சிலையைக் கடலில் போட்டதற்கும் இடையே உள்ள கால இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் குறைவாக இருக்கலாம். 



#வரலாறு,  #Themozhi 


Wednesday, March 4, 2026

கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி - கவிதை

 “உண்மையில் நாம் யார்?”


மங்கலான வெளிர் நீலப் புள்ளி
விண்வெளி இருளில் மிதக்கும் புள்ளி
விந்தைமிகு  வெளிர் நீலப் புள்ளி
அளவில் ஒரு பொருட்டல்ல அப்புள்ளி
ஆமாம், அது ஓர் அற்ப சிறு புள்ளி
உணர்த்தும் பொருளிலோ அப்புள்ளி  
உண்மையிலேயே ஒரு பெரிய புள்ளி

மீண்டும் பாருங்கள்…
அதுவே அங்கு

அதுவே நம் வீடு
அதுவே நம் வாழ்வு

அந்தச் சிறு துகளில்தான்
நாம் நேசித்தவர்கள் எல்லாம்,
நாம் அறிந்தவர்கள் எல்லாம்,
நாம் தெரிந்து கொண்ட ஒவ்வொருவரும்
தங்கள் கனவுகளையும் கண்ணீரையும்
அங்குதான் விட்டுச் சென்றார்கள்
இன்பமும் துன்பமும் அங்கே
மகிழ்ச்சியின் ஆரவாரங்களும் அங்கே  
துயரத்தின் கதறல்களும் அங்கே  

எண்ணற்ற மதங்கள் நம்பிக்கையூட்ட
எண்ணற்ற வழிகாட்டிகள் நெறிப்படுத்த
எண்ணற்ற முரண் கொள்கைகள் நம்மைக்  குழப்ப
எண்ணற்ற போர்கள் நம் நிம்மதியைக் குலைக்க
உண்மையும் மாயையும் ஒருங்கிணைந்து
ஒரே புள்ளியில் அடுத்தடுத்து அடுக்கப்பட்டன.

வேட்டையாடியும் விவசாயியும், வீரனும் கோழையும்,
பண்பாட்டை உருவாக்கியவரும் அதைச் சிதைத்தவரும்,
அரசனும் ஏழையும், கனவில் மிதந்த காதலர்களும்  
நம்பிக்கையில் துடிக்கும் குழந்தை இதயங்களும்
என அனைவரும் அங்கேதான்

அங்கே ஒரு சூரியக் கதிரில் மிதக்கும் தூசித் துகளாக
விண்வெளி இருளில் நம் வரலாறு மிதக்கிறது

அந்தப் புள்ளியின்
ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர்
அழிக்க ஆர்வம் கொள்வர்  
ஆதிக்க வெறி கொண்டவர் பேராசையால்  
போரில் ஆறென ஓடிடும் இரத்த வெள்ளம்  
எல்லாம் அந்த ஒரு சிறு புள்ளியின்
ஏதோ ஒரு சிறு பகுதியை அடைவதற்காக

அண்டப் பேரரங்கில் பூமி ஒரு சிறு மேடை
ஆனால் அந்த மேடையில் நாமே நாயகர்கள்  
என்ற மாயை நம் கண்ணை மறைக்கிறது

காணும்  மங்கலான வெளிர் நீலப் புள்ளி
நம் அகந்தையை ஆணவத்தை அழிக்கிறது
நம் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது—
“உண்மையில் நாம் யார்?”

இந்த பரந்த இருளில் நமக்கு வேறிடம் இல்லை
எங்கிருந்தும்  எவரும் காப்பாற்ற வழியில்லை
உயிர் வாழ நமக்கிருப்பது  ஒரே உலகம்
வேறு கோள்களுக்குப் போகலாம் வரலாம்
ஆனால் அவற்றில் வாழ வழியில்லை  
குடியேற வகையில்லை

விரும்பினாலும் இல்லாவிட்டாலும்
நமக்கிருப்பது ஓர் உலகம் மட்டுமே
நிற்க இருக்கும் தரை இப்புள்ளி மட்டுமே

இந்த வெளிர் நீலப் புள்ளியின் படம்
நமக்குக் கற்பிப்பது
பணிவு, அன்பு, பொறுப்பு,
ஒருவரை ஒருவர் அன்புடன் அரவணைக்க  
இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாதுகாக்க,
நேசிக்க, பேணி வளர்க்கத் தெரிந்து கொள்வோம்

ஏனெனில் இதுவே இதுவரை
நாம் அறிந்த ஒரே இல்லம்
நாம் வாழக்கூடிய ஒரே உலகம்

---
கார்ல் சேகனின், 'பேல் ப்ளூ டாட்: எ விஷன் ஆஃப் தெ ஹியூமன் ஃப்யூச்சர் இன் ஸ்பேஸ்'
கட்டுரையின் கவிதை வடிவம்





நன்றி:  "சக்தி" இதழ் - மார்ச் 2026
“உண்மையில் நாம் யார்?”- தேமொழி
பக்கம்: 42 - 43
https://archive.org/details/sakthi-march-2026_202602/page/41/mode/2up

#சக்தி, #கவிதை, #Themozhi 

Tuesday, March 3, 2026

அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்

 "அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"


முன்னுரை:
தமிழ் அறவியல் புலம் பரந்துபட்டது. மக்களுக்கு அறநெறி உரைக்க இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களையும், அயலகத்தில் தோன்றிய சமயங்களையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் பல சமய நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம் தமிழ்மொழி.  அத்துடன் சமயக் கோட்பாடுகளை விமர்சிக்கும் சித்தர் பாடல்களுக்கும் தமிழில் இடமுண்டு. இத்தகைய தமிழ் அறநெறிச் சிந்தனையின் வளமான மரபில், மணிமேகலை காப்பியமும் திருக்குறளும் இரண்டு பெரும் தூண்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டு படைப்புகளும் அறம், ஒழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள் குறித்த ஆழமான பார்வைகளை முன்வைத்தாலும், அவற்றின் தத்துவப்பின்னணிகள் வேறுபட்டவை.

பௌத்தம் கூறும் அறம்:
அறத்தின் மையம் மனிதம், இப்பூமியில் மனிதருக்கும் மனிதச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவு அன்பு என்று உரைத்த பௌத்தம்; எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஏனைய பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமல், அவ்வுயிர்களின் துயர் களைவதே அறமாகும் என்று வரையறுத்தது. பௌத்தம் காட்டும் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய பண்புகளின் செயல் வடிவம்.

வள்ளுவம் காட்டும் அறம்:
மக்களுக்கு அறவழி காட்ட வந்த வள்ளுவர், தன் அறவுரைகளைச் சமய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவில்லை. உலக உயிர்கள் எல்லாம் அறம் என்ற குடையின் கீழ் அமைபவை என்ற கொள்கையுடன் சமயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகில் எவருக்கும் பொருந்தும் வண்ணம் அறவழி காட்டினார். சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் முன்னிறுத்தும் பௌத்த அறநெறிக் கோட்பாடுகளையும், திருவள்ளுவர் போதிக்கும் உலகப் பொதுவான அறக் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் அறநெறிச் சிந்தனையின் இருபெரும் கிளைகளின் ஒற்றுமை, வேற்றுமை மற்றும் அவை ஒன்றுக்கொன்று துணைநிற்கும் பாங்கினை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் மையமாகும்.

மணிமேகலை காப்பியம்:
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, பௌத்த அறிஞரான சீத்தலைச்சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை காப்பியம், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தாலும், அதன் தனித்துவம் பௌத்த மெய்யியலை மையமாகக் கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது. உலக இன்பங்களைத் துறந்து, கருணை வழியில் பயணிக்கும் மணிமேகலை என்ற கதைநாயகியின் வழியே, பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான அறம், இரக்கம், கொடை, துறவு, அருள், நிலையாமை ஆகியவற்றை இக்காப்பியம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக, பசித்தவருக்கு உணவளிக்கும் அமுதசுரபி என்னும் பாத்திரம், பௌத்த அறத்தின் செயல் வடிவமாகவும் குறியீடாகவும் விளங்குகிறது. எனவே மணிமேகலை என்றால் அறம், அறிவு, துறவு ஒருங்கிணைந்த ஓர் உருவம்.

திருக்குறள்:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் அறநெறி மரபில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட சமயம், இனம் அல்லது காலச் சூழலுக்குள் தன்னை வரையறுத்துக் கொள்ளாமல், மானுடப் பொதுமைக்கான அறக் கோட்பாடுகளைத் திருக்குறள் முன்வைக்கிறது.

[அ] அற விழுமியங்களில் ஒற்றுமையும் வேற்றுமையும்
திருக்குறளின் உலகப் பொது நெறியும், மணிமேகலையின் பௌத்த மெய்யியலும் பல முக்கிய அற விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் காணப்படும் ஒற்றுமைகள், தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த ஒப்பீட்டு ஆய்வில், திருக்குறளின் அறக்கருத்துக்கள், மணிமேகலையின் பௌத்த அறநெறிகளுடன் ஒத்திருக்கும் இடங்களிலும் நுட்பமாக வேறுபடும் இடங்களிலும் ஓர் ஒப்பீட்டு அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பௌத்த அறக் கருத்துக்களுக்கு இணையான அல்லது மாற்றான வள்ளுவரின் சிந்தனைகள், தமிழ் அறநெறி மரபின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

அறத்தின் ஆற்றல்: இரு நூல்களிலும் 'அறம்' என்ற கருத்தாக்கம்
மணிமேகலை மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களுக்கும் 'அறம்' என்ற கருத்தாக்கமே மைய அச்சாக விளங்குகிறது. அறம் என்பது வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அது அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இவ்விரு படைப்புகளும் அறத்தை வரையறுக்கும் விதத்தினை ஆராய்வது, அவற்றின் தத்துவ அடித்தளத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பௌத்த மரபில் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வடிவமாகும். அறம் எங்கிருக்கிறதோ அங்கு அன்பு, இரக்கம் ஆகியன தாமாகவே குடிகொண்டுவிடும் என்பது பௌத்த அறத்தின் உள்ளடக்கம். அறம் என்பது விதிகளின் தொகுப்பு அல்ல; அது அனைத்து உயிர்கள் மீதும் காட்டப்படும் பேரன்பின் வழியே பற்றற்ற நிலையை அடைய உதவும் மெய்யியல் பாதையாகும். மணிமேகலையின் செயல்கள் துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும் இந்தப் பேரறத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. மணிமேகலை அன்பை, அறத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடாகக் காண்கிறது. துறவறம், தவம் ஆகிய வழிகளைத் தேர்வு செய்து அறம் என்பதைச் செயல்படுத்துகிறது.
     "மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
     மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
     உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே"
          [மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை: 94-96]

உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, இந்த நிலவுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர் என்கிறது மணிமேகலையின் பௌத்தம். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதைச் சங்ககாலப் புலவரான குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப் பாடலும் (பாடல் எண் 18) கூறும் முறைமையால் இக்கருத்தாக்கம் தமிழ் மண்ணின் பண்பாகவும் இருந்ததை அறிய முடிகிறது.

மறுபுறம், திருக்குறள், அறத்தை உலகியல் வாழ்வோடு இணைத்து, ஒரு நடைமுறை ஒழுக்கக் கோவையாக முன்வைக்கிறது.
     "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
     பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள்: 49)
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் என்று இல்லறமே அறம் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். தொடர்ந்து;

     "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
     தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள்: 322)
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும் என்று கூறும் வள்ளுவர் மணிமேகலை காட்டிய பல்லுயிர் ஓம்புவது என்கிற தலையாய அறத்தை இல்லறம் வழிச் செயல்படுத்த அறிவுறுத்துகிறார் என்பதைக் காணமுடிகிறது. திருக்குறள் துறவறம், தவம் ஆகியவற்றை விவரித்தாலும், அறத்தை இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மைக் கடமையாக வரையறுக்கிறது.

அத்துடன் தீய குணங்களிலிருந்து விலகி இருப்பதே அறத்தின் அடிப்படை என்கிறார் அவர்:
     "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு தீய குணங்களையும் விலக்கி வாழ்வதே அறம் என்பது இதன் பொருள். எனவே, திருக்குறள் தீயவற்றை நீக்குவதே அறத்தின் இயல்பு என ஒரு வாழ்வியல் நெறியை வரையறுப்பதுடன், இல்லறம் போற்றி அனைவருக்கும் உதவ அறிவுரை கூறுகிறது.

[ஆ] பொதுவான அற விழுமியங்கள்: அன்பும் இரக்கமும் அருளும் நன்னெறிகளும்
அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஒத்துக் காணப்படும் திருக்குறளும் மணிமேகலையும் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
     "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்: 80)
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் என்பது இதன் பொருள். அத்துடன்,

     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு" (குறள்: 72)
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிச் செயல்படுபவர்கள் என்று அத்தகையவர்கள் பண்பையும் குறள் சுட்டுகிறது. குறளின் அதிகாரங்கள் பலவும், பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகளான 1. கொல்லாமை, 2. கள்ளாமை, 3. காமத்தில் தவறாமை, 4.பொய்யாமை, 5. கள் உண்ணாமை ஆகிய ஐந்து நல்லொழுக்கக் கொள்கைகளையும்; அத்துடன் பௌத்தம் போதிக்கும் ஈகை, நிலையாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை, ஒழுக்கமுடைமை, ஊழ் போன்ற நெறிகளையும் அதிகார அளவில் விளக்கும் குறட்பாக்களைக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அத்துடன், திருக்குறள் முன்வைக்கும் 'ஒழுக்கம்' என்பது எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் சாராத, மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் நெறியாகும்.

     "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும்" (குறள்: 131)
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பது திருக்குறளின் துணிபு. திருக்குறளில் வலியுறுத்தப்படும் 'ஒழுக்கம்' என்பது மதம், இனம், மொழி கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஓர் உலகப் பொதுவான அறநெறியாகும்.

[இ] உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதுதலும் ஈகையும்
மணிமேகலையின் ஆபுத்திரன் கதை மக்களிடம் உயர்வு தாழ்வு பேசுவதை மறுப்பதற்கும், அனைத்து உயிர்களையும் கருணையுடன் போற்றவதை வலியுறுத்தவும் படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். பிறந்த பின் அனாதையாக விடப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர் வேள்வியில் உயிர்ப்பலியைத் தடுப்பவனாகவும், அமுதசுரபி உதவியுடன் வறியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளிக்கும் இரக்கமுள்ளவனாகவும் காட்டப்படுகிறான்.

     "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
     செய்தொழில் வேற்றுமை யான்" (குறள்: 972)
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும் என்று கூறும் குறளும்;

     "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள்: 259)
அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது என்று கூறும் குறளும்;

     "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து" (குறள்: 221)
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது என்று கூறும் குறளும் அனைவரும் சமம், பிறப்பில் பேதமில்லை என்று கூறுகிறது.

மணிமேகலையின் அறவியல் கட்டமைப்பு, பௌத்தத்தின் தத்துவார்த்த இலக்கான 'நிப்பானம்' (நிர்வாணம்/முக்தி) என்ற வீடுபேற்றை அடைவதோடு பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை கூறும் அறங்கள் அனைத்தும் பிறவித் துன்பச் சங்கிலியை அறுக்கும் கருவிகளாகும். இதற்கு மாறாக, திருக்குறள் ஓர் உலகப் பொதுவான, சமயச் சார்பற்ற அறவியல் அமைப்பை முன்வைக்கிறது. அதன் நோக்கம், இவ்வுலகில் ஒரு சீரான, இணக்கமான, அறம் சார்ந்த வாழ்வை வாழ்ந்து சிறப்படைவதே ஆகும்.

     "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று" (குறள்: 222)
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது. நன்னெறி என்பதற்காக மட்டுமே அறம் செய்தல் சிறப்பாகும். மாறாக; முக்தி அடைதல், மேலுலகம் அடைதல் போன்ற நோக்கில் இல்லாமல், அதை எதிர்பார்க்காமல், பலன் எதிர் பார்க்காமல், அறவிலை வணிகம் செய்யாமல் நன்னெறி என்பதற்காகவே தேவையானவருக்கு உதவ வேண்டும் என்கிறது. இவ்வகையில், எந்த ஓர் உயிருக்கும் தீங்கு செய்யாமை, பல்லுயிர் ஓம்புதல் என்ற கொள்கையில் இவ்விரு நூல்களும் மிக வலுவாக ஒன்றிணைகின்றன. இது இவ்விரு அறவியல் மரபுகளுக்கும் இடையேயான ஒரு முக்கிய ஒற்றுமைப் புள்ளியாகும்.

மணிமேகலை, ஈகையைத் துறவறத்தின் ஒரு கடமையாகச் சித்திரிக்கிறது. திருக்குறளோ, அதை ஒரு சமூக மற்றும் தனிமனித அறமாக, ஒரு செம்மையான இல்லற வாழ்வின் இன்றியமையாத அங்கமாகக் கருதுகிறது. திருக்குறள் ஈகையை இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. துறவறம் போற்றவும் இல்லற வாழ்வினர் மேற்கொள்ளும் ஈகை உதவுகிறது என்று காட்டுகிறது.

முடிவுரை:
திருக்குறள் மணிமேகலை ஆகிய இவ்விரு நூல்களிலும் அறம் அடித்தளமாக விளங்குவதையும், அவ்வறச்சிந்தனைகளை இருவேறு கோணங்களில், ஆனால் ஒரே குறிக்கோள் நோக்கி வெளிப்படுத்துவதையும், இரு நூல்களும் அறம், அன்பு, அருள், கருணை, கொல்லாமை, நிலையாமை, ஊழ்வினை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஆழமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளமையையும், அவை மானுட வாழ்வின் மேன்மைக்கு அறமே அடித்தளம் என்பதை ஒருமித்த குரலில் பறைசாற்றுகின்றன என்பதையும் இந்த ஒப்பீட்டு ஆய்வானது எடுத்துரைக்கிறது.

குறள் சொல்லும் சமயம் கடந்த பொது நன்னெறி கோட்பாடுகளை விளக்க, அவற்றைக் கதைவடிவில் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு புனைவு எழுதப்படுமானால், ஒரு பௌத்தப் படைப்பாளரின் கருத்துரிமை அடிப்படையில் உருவான காப்பியமாக, மணிமேகலையாக அது திகழ்கிறது எனலாம். "பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்" (மணிமேகலை - 22; சிறைசெய் காதை) என்று சீத்தலைச் சாத்தனார் வள்ளுவரை மேற்கோள் காட்டும் வரிகள் மேகலை ஆசிரியருக்கு வள்ளுவம் கொடுத்த தாக்கத்திற்கும் சான்றாக அமைகிறது.

மணிமேகலையின் கதை வடிவ விளக்கமும், திருக்குறளின் கோட்பாட்டு விளக்கமும் ஒரே அறத்தின் இருவேறு வெளிப்பாடுகளாகும். ஆக, மணிமேகலை ஓர் ஆன்மீகத் தலைவியாக மட்டுமின்றி, சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறாள். உலக இன்பங்களைத் துறந்து, ஞானத்தைத் தேடி, மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆழமான ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறாள்.

இருப்பினும், அவற்றில் நுட்பமான சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. மணிமேகலை, பௌத்த மெய்யியலின்படி, பற்றுகளை அறுக்கும் துறவு நெறியை வீடுபேற்றுக்கான வழியாக முன்வைக்கிறது. மேலும், ஆன்மா குறித்த அதன் அனாத்மா பார்வை, இந்திய மெய்யியலின் பிற மரபுகளிலிருந்து தனித்து நிற்கிறது. மறுபுறம், திருக்குறள் இல்லறத்தை மையமாகக் கொண்ட ஓர் உலகப் பொது நெறியை வகுத்து, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்துகிறது வையத்தில் வாழ்வாங்கு வாழ அறிவுறுத்துகிறது.

இறுதியாக, இந்த இரு பெரும் நெறிகளும் முரண்பட்டவை அல்ல, மாறாகத் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பார்வையை வழங்கும் இருவேறு கிளைகள் என்பது நிறுவுகிறது. 'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை' என்ற பார்வையில் மணிமேகலையில், அறம் என்பது ஆன்மிக விடுதலையை நோக்கிய ஒரு பயணம்; திருக்குறளிலோ, அறம் என்பதே மனிதராக வாழ்வதன் இலக்கணம். இந்த இரு பெரும் மரபுகளும் இணைந்து தமிழ் அறநெறிச் சிந்தனையை வளப்படுத்தி, உலகிற்கே வழிகாட்டும் ஒருங்கிணைந்த பார்வையை வழங்குகின்றன.

சான்றாதாரங்கள்:
1. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்), ந.மு. வேங்கடசாமிநாட்டார் (ஆசிரியர்).  மணிமேகலை (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2019

2. வரதராஜன்.மு, திருக்குறள் உரை விளக்கம், திருவள்ளுவர் நிலையம், திருச்சி, 1954.

"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
— முனைவர் ஜோதி எஸ். தேமொழி
செயலாளர், தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
சான் பிரான்சிஸ்கோ, யூ.எஸ்.ஏ
-------


தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி. . .
டோக் பெருமாட்டி கல்லூரி-மதுரை, தமிழ் உயராய்வு நடுவம்
24.02.2026 அன்று நடத்திய
'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில்
"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
என்னும் தலைப்பில் முனைவர் ஜோதி எஸ். தேமொழி வழங்கிய கட்டுரை
கருதரங்க மலர் - ISBN: 978-93-47702-06-8




----

[நன்றி: தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம்-24.02.2026]

நன்றி: தமிழணங்கு,  ஏப்ரல் 2026 (பக்கம்: 37 - 42)



#தமிழணங்கு, #கருத்தரங்கம், #திருக்குறள், #சொற்சுவை, #மணிமேகலை, #Themozhi 

Tuesday, February 17, 2026

சக்தி - பெண்ணிதழ் - பதிவுகள்

"சக்தி" பெண்ணிதழ்  - பதிவுகள்
                           (இத்தளத்தில் . . . )



1. ஆற்றலின் மறுபெயர் கமலா ஹாரிஸ் (செப்டம்பர்-2024)
https://aintinai.blogspot.com/2024/09/blog-post_6.html

2. பெண்கல்விக்காகப் பாரதியின் குறள் (அக்டோபர்-2024)
https://aintinai.blogspot.com/2024/10/blog-post_4.html

3. அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் - கவிதை (அக்டோபர்-2024)
https://aintinai.blogspot.com/2024/10/blog-post_49.html

4. தலைவியின் துயரம் (நவம்பர்-2024 )
https://aintinai.blogspot.com/2024/11/blog-post.html

5. Periyars Arivu Sudar (டிசம்பர்-2024)
https://aintinai.blogspot.com/2024/12/periyars-arivu-sudar.html

6. ஒளவையின் ஒயில் (டிசம்பர்-2024)
https://aintinai.blogspot.com/2024/12/blog-post_6.html

7. விழித்தெழட்டும் என் நாடு! - கவிதை (பிப்ரவரி-2025)
https://aintinai.blogspot.com/2016/01/blog-post.html

8. பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம் (அக்டோபர்-2025)
https://aintinai.blogspot.com/2025/09/blog-post_30.html

9. கபடி வீரர் தங்க மகள் கார்த்திகா (நவம்பர்-2025)
https://aintinai.blogspot.com/2025/10/blog-post_9.html

10. பெண்ணின் பெருந்தக்க யாவுள (டிசம்பர்-2025)
https://aintinai.blogspot.com/2025/12/blog-post.html

11. கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி (பிப்ரவரி-2026)
https://aintinai.blogspot.com/2026/01/PaleBlueDot.html

12. உண்மையில் நாம் யார்?  - கவிதை (மார்ச்-2026)
https://aintinai.blogspot.com/2026/03/blog-post_11.html



#பதிவுத்தொகுப்பு, #சக்தி, #Themozhi 



தமிழணங்கு - பதிவுகள்

தமிழணங்கு  - பதிவுகள்
இலக்கியம், சமயம், பண்பாட்டு ஆய்விதழ்
                           (இத்தளத்தில் . . . )


1. 18 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பதிவுகள் (ஜூலை - 2022)
https://aintinai.blogspot.com/2022/07/18.html

2. செய்க பொருளை (அக்டோபர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/10/blog-post.html

3. ஆய்ச்சியர் குரவை (நவம்பர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/11/blog-post_5.html

4. தீபாவளி என்ற சொல் எப்பொழுது தோன்றியது (டிசம்பர் - 2022)
https://aintinai.blogspot.com/2022/12/blog-post.html

5. இந்தியாவின் முதலை இனங்கள் (பிப்ரவரி - 2023)
https://aintinai.blogspot.com/2023/02/blog-post.html

6. பெண்ணடிமை நிலை குறித்து பெரியாரின் பார்வை (மார்ச் - 2023)
https://aintinai.blogspot.com/2023/03/blog-post.html

7. அண்ணல் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் (ஏப்ரல்-2023)
https://aintinai.blogspot.com/2023/04/blog-post.html

8. சிறு நல் வாழ்க்கை (ஜூன் - 2023)
https://aintinai.blogspot.com/2023/06/blog-post.html

9. நிழலற்ற நாள்தான் ஆண்டின் தொடக்கமா? (ஆகஸ்ட் - 2023)
https://aintinai.blogspot.com/2023/08/blog-post_7.html

10. அறிஞர் அண்ணா எழுதிய"செவ்வாழை" (செப்டம்பர் - 2023)
https://aintinai.blogspot.com/2023/09/blog-post.html

11. ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் (நவம்பர் - 2023)
https://aintinai.blogspot.com/2023/11/blog-post.html

12. என்றென்றும் பெரியார் (டிசம்பர்- 2023)
https://aintinai.blogspot.com/2023/12/blog-post.html

13. உணக்குதல் (ஜனவரி - 2024)
https://aintinai.blogspot.com/2024/01/blog-post_8.html

14. நெஞ்சில் இட்ட கோலங்களின் தொகுப்பு (பிப்ரவரி - 2024)
https://aintinai.blogspot.com/2024/02/blog-post_5.html

15. அடிமைப்படுத்தும் தளைகளை உடைத்தெறிய வேண்டும் (மார்ச் - 2024)
https://aintinai.blogspot.com/2024/03/blog-post_4.html

16. சுழற்சியாண்டு தொடராண்டுக் கணக்குகளின் நிறை குறைகள் (மே - 2024)
https://aintinai.blogspot.com/2024/05/blog-post.html

17. இளங்கோவடிகளின் பார்வையில் பருவங்கள் தோறும் மதுரை மாநகர் (ஜூன் - 2024)
https://aintinai.blogspot.com/2024/06/blog-post.html

18. நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நிழலற்ற நாள் (ஜூலை - 2024)
https://aintinai.blogspot.com/2024/07/blog-post.html

19. தமிழ் நூல்களில் தமிழ் மாதங்கள் (செப்டம்பர் 2024)
https://aintinai.blogspot.com/2024/09/blog-post_2.html

20. தமிழ்ப் புத்தாண்டுப் புதிரை விடுவிக்கும் நச்சினார்க்கினியர் (அக்டோபர் - 2024)
https://aintinai.blogspot.com/2024/10/blog-post_7.html

21. ரிக் வேதம் கூறும் அகத்தியர் (மார்ச் - 2025)
https://aintinai.blogspot.com/2025/03/blog-post_7.html

22. தென்திசையின் அகத்தியன் (ஏப்ரல் 2025)
https://aintinai.blogspot.com/2025/04/blog-post.html

23. மனிதத்தின் பன்முகம் - கவிதை  (மே - 2025)
https://aintinai.blogspot.com/2025/05/blog-post.html

24. அட்சய திருதியை (ஜூன் - 2025)
https://aintinai.blogspot.com/2025/05/blog-post_28.html

25. Ranking Thirukkural by Web Popularity (ஜூலை - 2025)
https://aintinai.blogspot.com/2025/06/ranking-thirukkural-by-web-popularity.html

26. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா? (ஆகஸ்ட் -2025)
https://aintinai.blogspot.com/2025/08/blog-post.html

27. சமணர்களுக்குரிய தீபாவளி (அக்டோபர் - 2025)
https://aintinai.blogspot.com/2025/09/blog-post_29.html

28. சித்தன்னவாசல் குகைக்கோயில் "அரசன் அரசி ஓவியம்" (நவம்பர் - 2025)
https://aintinai.blogspot.com/2025/10/blog-post.html

29. கார்ல் சாகனின் வெளிர் நீலப் புள்ளி (பிப்ரவரி - 2026)
https://aintinai.blogspot.com/2026/01/PaleBlueDot.html

30. அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும் (ஏப்ரல் - 2026)
https://aintinai.blogspot.com/2026/03/blog-post.html




#பதிவுத்தொகுப்பு, #தமிழணங்கு, #Themozhi 


Monday, February 16, 2026

உலகத்தமிழ் - வார இதழ் - பதிவுகள்

 உலகத்தமிழ் வார இதழ் - பதிவுகள்
                           (இத்தளத்தில் . . . )



1 கோரியோலீஸ் விசை விளைவு [247]
          https://aintinai.blogspot.com/2024/08/blog-post.html
2 நிலவு மறைத்தல் [248]
          https://aintinai.blogspot.com/2024/09/blog-post_4.html
3 ஆற்றலின் மறுபெயர் கமலா ஹாரிஸ் ...[249]
          https://aintinai.blogspot.com/2024/09/blog-post_6.html
4 ஞாயிறு ஓசனித்தல் [250]
          https://aintinai.blogspot.com/2024/09/blog-post_18.html
5 பருவகால மாறுதல்களும் பறவைகளும் ...[251]
          https://aintinai.blogspot.com/2024/09/blog-post.html
6 நாள்காட்டியும் காலக்கணக்கீடும் ...[252]
          https://aintinai.blogspot.com/2024/10/blog-post_2.html
7 அச்சுத்திசை மாறுமியக்கம் [253]
          https://aintinai.blogspot.com/2024/10/blog-post_9.html
8 வருவீர் உளீரோ? [254] 
          https://aintinai.blogspot.com/2024/10/blog-post_16.html
9 ஆன்டிகிதெரா வானியல் கணிப்பொறி[255] 
          https://aintinai.blogspot.com/2024/10/blog-post_23.html
10 எல்.டி.சாமிக்கண்ணுவின் வானியல் குறிப்பு அட்டவணைகள் [256]
          https://aintinai.blogspot.com/2024/10/blog-post_30.html


11 பண்டைய வானியல் வரைபடம் - நெப்ராவானவட்டு[257]
          https://aintinai.blogspot.com/2024/11/blog-post_6.html
12 வானியல் கவனிப்பும் கணிதமும் காலமும் [258]
          https://aintinai.blogspot.com/2024/11/blog-post_13.html
13 கிழமைகளும் வாரங்களும் [259]
          https://aintinai.blogspot.com/2024/11/blog-post_20.html
14 பழமொழிகளும் வார நாள்களும் [260]
          https://aintinai.blogspot.com/2024/11/blog-post_27.html
15 காலவுரிமை எய்திய ஞாயிறு [261]
          https://aintinai.blogspot.com/2024/12/blog-post_4.html
16 தரை வீழ்ந்த விண்மீன் துகள் [262]
          https://aintinai.blogspot.com/2024/12/blog-post_11.html
17 புலவர் தந்த வானியல் குறிப்பு [263]
          https://aintinai.blogspot.com/2024/12/blog-post_18.html
18 வருகை தரும் வால்மீன்கள் [264]
          https://aintinai.blogspot.com/2024/12/blog-post_25.html
19 சுமேரிய வானியல் வட்டு [265]
          https://aintinai.blogspot.com/2025/01/blog-post_1.html
20 கதிர் நிலவு மறைப்புகளும் சரோஸ் சுழற்சியும் [266] 
          https://aintinai.blogspot.com/2025/01/blog-post_8.html


21 ஆனந்தரங்கம் பிள்ளை தரும் வானியல் குறிப்புகள் [268]
          https://aintinai.blogspot.com/2025/01/blog-post_22.html
22 வானியலில் ஏழு சகோதரிகள்[269]
          https://aintinai.blogspot.com/2025/01/blog-post.html
23 ப்ளீயட்ஸ் விண்மீன் கூட்டம் [270]
          https://aintinai.blogspot.com/2025/02/blog-post_5.html
24 ஆறு கார்த்திகைப் பெண்டிர் [271]
          https://aintinai.blogspot.com/2025/02/blog-post_12.html
25 வோல்காவில் இருந்து கங்கை வரை மரபணு பரவல்[272]
          https://aintinai.blogspot.com/2025/02/blog-post_19.html
26 அரும்பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு [273]
          https://aintinai.blogspot.com/2025/02/blog-post.html
27 மாதரார் தொழுதேத்தும் அருந்ததி விண்மீன் [274]
          https://aintinai.blogspot.com/2025/03/blog-post_5.html
28 எண்நாள் திங்கள் அனையதெண்ணீர்ச் சிறுகுளம் [275]
          https://aintinai.blogspot.com/2025/03/blog-post.html
29 வானியல் குறிப்புகள் மூலம் சிலப்பதிகாரக் காலக்கணிப்பு [276]
          https://aintinai.blogspot.com/2025/03/blog-post_19.html
30 மதுரை தீக்கிரையான நாள் [277]
          https://aintinai.blogspot.com/2025/03/blog-post_26.html


31 பாண்டியன் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் [280]
          https://aintinai.blogspot.com/2025/04/blog-post_16.html
32 குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும் -1 [288]
          https://aintinai.blogspot.com/2025/06/blog-post.html
33 குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும் -2 [289]
          https://aintinai.blogspot.com/2025/06/blog-post.html
34 குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும் -3[290]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post.html
35 யாமறிந்த வரையில்  [291]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post.html
36 வள்ளுவர் என்னும் காதலர் [292]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post.html
37 பள்ளிப் பாடங்களில் திருக்குறள்[293]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post_15.html
38 குறள் யாரை வழி நடத்துகிறது? - 1 [294]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post_29.html
39 குறள் யாரை வழி நடத்துகிறது? - 2 [295]
          https://aintinai.blogspot.com/2025/07/blog-post_29.html
40 குறள் சொல்லும் கிழக்கு [296] 
          https://aintinai.blogspot.com/2025/08/blog-post_6.html


41 வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும் -1 [297]
          https://aintinai.blogspot.com/2025/08/blog-post_19.html
42 வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும் -2 [298]
          https://aintinai.blogspot.com/2025/08/blog-post_19.html
43 எண் குணத்தானும் கம்பரும் [299] 
          https://aintinai.blogspot.com/2025/08/blog-post_27.html
44 குறளின் ஈற்றடிகள் [300]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post.html
45 சிவிகைப் பயணமும் அறவழியும் [301]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_10.html
46 சேரமானின் பண்டையோர் கூற்று [302]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_16.html
47 திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு -1 [303]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_23.html
48 திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு -2 [304]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_23.html
49 திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு -3 [305]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_23.html
50 திருக்குறளின் அணி இலக்கணச் சிறப்பு -4 [306]
          https://aintinai.blogspot.com/2025/09/blog-post_23.html


51 குறள் சொல்லும் துணைவயின் பிரிவு [307]
          https://aintinai.blogspot.com/2025/10/blog-post_22.html
52 வள்ளுவம் என்ற எடுத்துக்காட்டு களஞ்சியம் [308]
          https://aintinai.blogspot.com/2025/10/blog-post_28.html
53 திருக்குறள் அந்தாதி [309]
          https://aintinai.blogspot.com/2025/11/blog-post.html
54 குறளுக்கு உரிமை கோரல் - 1 [310]
          https://aintinai.blogspot.com/2025/11/blog-post_11.html
55 குறளுக்கு உரிமை கோரல் - 2 [311]
          https://aintinai.blogspot.com/2025/11/blog-post_11.html
56 வள்ளுவம் உறுதிப்பட உணர்த்தும் கருத்துகள் - [312]
          https://aintinai.blogspot.com/2025/11/blog-post_25.html
57 'நமது கல்விமுறை' [313]
          https://aintinai.blogspot.com/2025/12/blog-post_2.html
58 எண்ணென்ப சொல்லென்ப [314] 
          https://aintinai.blogspot.com/2025/12/blog-post_9.html
59 திருக்குறள் வைப்புமுறை -1 [316]
          https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html
60 திருக்குறள் வைப்புமுறை -2 [317]
          https://aintinai.blogspot.com/2025/12/kural-couplets-ordering.html



உலகத்தமிழ் வார இதழ்-பதிவுத்தொகுப்பு
https://archive.org/details/ilakkiyathil-ariviyal-nokku_2025
https://archive.org/details/thirukkural-themozhi-ulakaththamizh-articles


#பதிவுத்தொகுப்பு, #உலகத்தமிழ், #Themozhi