Wednesday, August 27, 2025

எண்குணத்தானும் கம்பரும்

எண்குணத்தானும் கம்பரும்


திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறும் 9ஆவது குறள்; 
      "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
      தாளை வணங்காத் தலை"

எண்குணங்களை  உடையவன் (அதாவது கடவுள் அல்லது வழிகாட்டியின்) திருவடிகளைப் பணிந்து வணங்காதவர் தலையானது செயல்திறனற்ற மெய், வாய், கண், மூக்கு, செவி முதலானவைபோல் செயலிழந்த ஐம்புலன்களை ஒத்திருக்கும் ஒரு  பயனற்ற தலையாக; அதாவது அறிவற்ற தலையாகக் கருதப்படும் என்ற பொருள் வருமாறு தமிழறிஞர் பலர் தெளிவுரை எழுதிச் சென்றுள்ளனர். 

இதில் "எண்குணம்" என்பதற்குப் பொருள் விளக்கம் தருவதில் பல கருத்து மாறுபாடுகளும் உள்ளன. 
[1] பெரும்பாலோர் எண்குணம்  என்றால் என்ன என்று  பொருட்படுத்தாமல்  விவரிக்காமல் "எண்குணத்தைக்  கொண்டவர்" என்று சொல்லியோ அல்லது சொல்லாமலோ கடந்து விடுவார். மு.கருணாநிதி, மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் ஆகியோர் தெளிவுரை தரும் முறை இது. 

[2] குறளுக்கு உரை தந்த தொல்லாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் ஆகிய மூவரும் எண் = எட்டு என்று பொருள் கொள்வர். எனவே, எண்குணத்தைக்  கொண்டவர் என்றால் எட்டு குணங்களைக் கொண்டவர் எனப் பொருள் விளக்கம் தர முற்படுவர். அதனால்  அவர்களுக்கு எண்குணங்கள்  யாவை என்ற விளக்கம் தரும் கட்டாயமும் ஏற்படுகிறது. 
(பரிமேலழகர் உரை: எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது).  இருப்பினும், சைவாகமத்தில் சிவனின் குணங்களாகக் காட்டப்படுவது சமண அருகரின் குணங்களே என்று ஆய்வாளர்கள் கூறுவர். இது போன்ற தரவுகள் வள்ளுவரைத் தத்தம் சமயப் பின்புலத்துடன் காணும் முயற்சி எனலாம். பௌத்தம் அருளும் எட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழும் குணமுடையவர் என்று பௌத்தருக்கும் வள்ளுவரை உரிமை கொண்டாட  வாய்ப்புள்ளது என்பதை மறுக்க இயலாது. 

[3] எண்=எளிய என்ற பொருள்  கூறப்படுதலும் உண்டு. இம்முறையில், எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள் கொள்ளப்படுகிறது. எண்பொருள வாகச் செலச்சொல்லி (குறள் 424) என்ற குறள் விளக்கம் போல, மேலும் சில குறள்களையும் (எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன், எண்பதத்தால் எய்தல் எளிதென்ப) காட்டி, 'எண்' எளிய என்ற  இப்பொருள் கொள்ளும் முறைக்கு  மேற்கோள்  காட்டப்படுகிறது. இம்முறையில், எண்குணத்தான் என்பவன் அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பது பொருள். 
 
[4] அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் அல்லது அன்பர்கள் எண்ணும் குண வடிவை ஏற்பவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்பதற்கு எண்குணம் கொண்டவர் என்ற பொருள் விளக்கத்தை முதன் முதலில் தந்தவராக காலிங்கர் அறியப்படுகிறார்.  சாலமன் பாப்பையாவும், எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே என்றுதான் பொருள் கொள்வார். 

மக்களால் நினைப்பதற்குரிய குணங்களை ஏற்பவர்; அதாவது மாந்தர் எண்ணிய குணம் கொண்டவரே இறைவன். கடவுளுக்கு  உருவங்களும் குணங்களும் தருபவர் மனிதர்கள்தாம் என்ற அடிப்படை உண்மையை இவ்விளக்கம் முன் வைக்கிறது. கடவுள் என்பவருக்கு வெறும் எட்டு குணங்கள் மட்டும்தானா என்று ஆழ்ந்து சிந்தித்து வினா எழுப்புபவருக்கு அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் எண்குணத்தான் என்ற இந்த விளக்கமே ஏற்புடையதாக இருக்கும்.  எண்குணத்தான் என்பது எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருள் கொள்வோமெனில்,  அதே கருத்தைக் கம்பரும் கூறுவதைக் காண முடிகிறது. 

      "ஒன்றே யென்னின் ஒன்றேயாம்  பலவென் றுரைக்கிற் பலவேயாம்
      அன்றே யென்னின் அன்றேயாம்  ஆமே யென்னின் ஆமேயாம்
      இன்றே யென்னின் இன்றேயாம்  உளதென் றுரைக்கின் உளதேயாம்
      நன்றே நம்பி குடிவாழ்க்கை  நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா"
            [யுத்த காண்டம், கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்]
 
இதன் பொருள்:  கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதால் ஒன்றே என எண்ணுவோருக்கு ஒன்றாக விளங்குகிறார். பல உயிர்களிலும் உறைந்து உள்ளமையால் பல என எண்ணுவோருக்குப் பலவாகத் திகழ்கிறார். கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான். மாறாகக் கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே. கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான். கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே. இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே. சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!

இவ்வாறாக, ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்குப் பல நாமம் சூட்டி அழைப்பதும் மக்கள் வழக்கம் என்பதைக் கருத்தில் கொண்டு இறைவனை உருவமாகவும் அருவமாகவும் உளதாகவும் இலதாகவும் கற்பிக்கும் பாடல்களுள் ஒன்றாகக் கம்பரின் பாடலும் அமைந்துள்ளது. இப்பாடலில் எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலானவர் கடவுள் என்கிறார்  கம்பர்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 299  -  27.08.2025]  



#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Tuesday, August 19, 2025

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும் 



ஔவையின் தனிப்பாடல் ஒன்று 'நான்கு கோடி பாடல்' என்று அறியப்படுகிறது. அரசன் இட்ட கட்டளைப்படி ஓர் இரவுக்குள் நான்கு கோடிப் பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ மன்னனின் அவைக்களப் புலவர்கள் கலங்கியதாகவும், அப்பொழுது, ஔவையார் நான்கு வரிகளைக் கொண்ட இப்பாடலைச் சொல்லி, இப்பாடல் சொல்லும் வாழ்வியல் நெறி ஒவ்வொன்றும் கோடிப் பொன்னுக்குச் சமம் என்று கூறியதாகவும் அக்கதை அறியப்படுகிறது. 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
          மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் 
          உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
          கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
          கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)

இப்பாடலில் ஒளவையார் வாழ்வியல் நெறிகளாக நான்கு செயல்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்குச் சமம் எனக் கூறுகிறார். அவை முறையே; 
தன்னை மதிக்காதவர்களின் வீட்டுக்குச் சென்று அவ்வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது.
உண்ண வருமாறு வருந்தி அழைக்காதவர்களின் வீட்டில் உண்ணாமல் இருப்பது.
கோடி கொடுத்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்திருப்பது.
எத்தனை கோடி கொடுத்தாலும், தான் சொன்ன சொல் தவறாமல் இருப்பது. 
'மிதியாமை', 'உண்ணாமை' ஆகிய அறிவுரைகள் செய்யாதீர் என்று எதிர்மறை கருத்துகளாகவும், நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்! சொன்ன சொல் தவறாமல் வாழ்! என்பன உடன்பாட்டுக் கருத்துகளாகவும் அமைந்துள்ளன. 
இந்த வரிகள், ஒருவரது குடிப்பிறப்பும், நற்பண்புகளும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை உணர்த்துகின்றன. 

வாழ்வியல் நெறிகளை வகுத்தளித்த வள்ளுவர் ஔவையார் போல எவையெவை கோடி மதிப்புப் பெறுபவை  என்று  கூறுகிறார் என்று அறிய விரும்பி  திருக்குறளை ஆராய்ந்தால் வள்ளுவத்தில் 10 குறள்கள் கோடி பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் இரண்டு குறள்கள்   (குறள்கள் - 554,  559) கோடி என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் மன்னனின் வளைந்த செங்கோல் (கோல்கோடி)  என்ற கொடுங்கோன்மை ஆட்சியைக் குறிப்பிடுகின்றன, இவற்றில் கோடி  என்பது வளைந்த என்ற பொருள் தருபவை. இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டால் எட்டு குறள்கள்  பின்வரும் கருத்துகளைச் சொல்கின்றன:
1. அறிவற்றவரின் தீங்கு விளைவிக்கும் நட்பை விட, அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகை அதைவிடக் கோடி மடங்கு மேலானது (816); 
2. சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பால் விளையும் தீங்கை விடப் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துகோடி மடங்கு நன்மையானது (817); 
3. தவறாக வழிநடத்தும் அமைச்சரை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலானது (639); 
4. இரக்கச்சிந்தையுடன் ஒருவர் பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அவரிடமும் சென்று இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும் (1061); 
5. கொடுத்து உதவும் பண்பில்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் இருந்தாலும் அதனால் எவருக்கும் பயனில்லை (1005); 
6. பலகோடிப் பொருள் கொடுத்தாலும் நற்பண்பு நிறைந்த குடியில் பிறந்தவர் தன் குடிப்பெருமையைக் குலைக்கும் செயலைச் செய்ய மாட்டார் (954); 
7. ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றிக் கோடிக்கும் மேலான எண்ணங்களுடன் மனக் கோட்டைகள் கட்டுவார்கள் (337);  
8. ஒருவர் முயன்று கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தாலும் அவரிடம் எது தங்குமோ அதன் பயனை மட்டுமே அவரால் துய்க்க இயலும் (377). 

கோடி என்ற சொல் இடம் பெறும்  குறள்களும் அவற்றுக்கு மு. வரதராசனார் வழங்கிய தெளிவுரையையும்  அடுத்துக் காணலாம்: 
         1.  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
          ஏதின்மை கோடி உறும்.    (குறள் - 816)
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். 

          2. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
          பத்தடுத்த கோடி உறும்.   (குறள் - 817)
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

          3. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
          எழுபது கோடி உறும்.   (குறள் - 639)  
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.  

          4. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
          இரவாமை கோடி உறும்.   (குறள் - 1061)
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். 

          5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
          கோடியுண் டாயினும் இல்.    (குறள் - 1005)
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

          6. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
          குன்றுவ செய்தல் இலர்.   (குறள் - 954)
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. 

          7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
          கோடியும் அல்ல பல.   (குறள் - 337)
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். 

          8. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
          தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (குறள் - 377)
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் என்று ஔவையும்; அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் என்று வள்ளுவரும் நற்குடி பிறந்தவர் சிறப்பைப் பாராட்டுகிறார்கள்.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 297 &  298  -  13.08.2025 & 20.08.2025]  


#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #முக்குடை, #Themozhi 

Wednesday, August 6, 2025

குறள் சொல்லும் கிழக்கு

குறள் சொல்லும் கிழக்கு  


இன்று கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று திசைகளை நாம் அடையாளம் காண்கிறோம்.  சிந்துவெளி ஆய்வாளர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன்  இதைச் சிந்துவெளியின் திராவிடப் பரிமாணம் என்பதற்குச் சான்றாகக் காட்டி இருப்பார்.  இந்த மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு என்பதற்கும் சிந்துவெளி நகர வடிவமைப்பில் இருக்கும் முக்கியமான தொடர்பினை  "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற அவருடைய நூலில் விளக்கி இருப்பார்.  சிந்துவெளி  நகர்கள் இருபகுதிகளை உள்ளடக்கியவை  என்றும், மேற்கே  உயரமான பகுதியில் கோட்டை போன்ற கட்டிடங்கள் அமைந்த நகரின் பொது நிர்வாகக்   கட்டமைப்பும்; அதன் அருகில் கிழக்கே உள்ள தாழ்ந்த பகுதியில் பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இருந்தன  என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இயற்கையிலேயே மேற்கில் உயர்ந்த நிலப்பகுதி இல்லாவிட்டாலும் செயற்கையாக அப்பகுதியை உயர்த்தி கோட்டை அமைத்து சிந்துவெளி மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

"சிந்துவெளி ஒரு வன்பொருள் என்றால் சங்க இலக்கியம் அதைப் புரிந்து கொள்ள உதவும் ஒரே மென்பொருள்" என்ற கருத்தையும் முன்வைக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் "சிந்துவெளியைப் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான்" என்று சங்க இலக்கியம் சிந்துவெளிப் பண்பாடு தொடர்பு குறித்து முடிந்த முடிவாகவும் குறிப்பிடுவார்.  இதற்குப் பல சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டும் ஆர். பாலகிருஷ்ணன், திசைகள் குறித்த சான்றாக சங்க இலக்கிய வரிகளையும் மேற்கோள்களாகத் தருவார்.  

குறுந்தொகைப் பாடல்(337)  காட்சியில், தலைவி வளர்ச்சியுறும் முலையையும், அவளுடைய தலையின் தழைத்த கூந்தல் தாழ்ந்து தொங்கும் அளவிற்கு இளமைப்பருவம் கொண்டவள் என்பதை;
     "முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
      கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே"
என்ற வரிகள் கூறும்.  இதில் 'கிழக்கு' என்ற சொல் திசையைக் குறிக்காது.  மாறாக, தரையைத் தொடுவது போல தலைவியின் கூந்தல்  'தாழ்ந்து'  கீழே நீண்டு  தொங்குவதைக் குறிக்கிறது. கிழக்கு என்பது இங்கு கீழ் என்ற பொருள் கொள்கிறது. (தரையின் கீழ் இருப்பதால் அச்செடி கிழங்கு எனப்படுகிறது என்று  வேர்ச்சொல் ஆய்வுகள்  விளக்குவது போல, கிழக்கும் அவ்வாறான அடிப்படையில் உருவான சொல்.)

சங்க இலக்கியத்தில் 'கிழக்கு என்ற சொல்  மூன்று முறை இடம் பெறுகிறது.  அவை கீழ்  என்ற பொருளில் மட்டுமே இடம் பெறுகின்றன. மேலே காட்டப்பட்ட குறுந்தொகை பாடல் தவிர்த்து;
   பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப (நற். 297/1)
   (பாலானது கீழே பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்க)

   குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய (பதி. 36/10)
    (போர்க் களத்தில் பறவை கீழே தரை இறங்கும் காட்சி)
ஆகிய பாடல்களில் வரும் 'கிழக்கு இருப்ப', 'கிழக்கு இழிய' ஆகிய சொற்களும்  'கீழே' என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் திசையைக் குறிப்பிடும் கிழக்கு மேற்கு என்பதற்கு, முறையே குண, குட (எடுத்துக்காட்டு: குணபுலம். குடவாயில்) என்ற சொற்களே எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கு மேற்கு என்ற சொற்களால் திசைகள்  குறிப்பிடப்படவே இல்லை.  குறிப்பாக, மேற்கு என்ற சொல் சங்கப்பாடல்களில்  இடம் பெறவும் இல்லை.
   குண குட கடலா எல்லை (புறம். 17/2; மது. 71)
   குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி (நற் 153/1; நற் 346/1)
   குண கடல் கொண்டு குட கடல் முற்றி (மது.  238)
போன்ற பாடல் வரிகள் மூலம் சங்கப் பாடல்களில் திசைகள் குறிப்பிடப்பட்ட முறையை அறியலாம்.

வள்ளுவரும் திருக்குறளில் கிழக்கு என்ற சொல்லை 'கீழ்' என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்.
   செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
   காணிற் கிழக்காந் தலை. (குறள் - 488)

பகைவர்க்கு முடிவுகாலம் வந்து அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும்  உரிய நேரம் வரும்  வரையில்  தங்களின் பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும் என்பது காலம் அறிந்து செயல் படுவது குறித்து வள்ளுவர் வழங்கும் அறிவுரை.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 296  -  06.08.2025]

#உலகத்தமிழ், #திருக்குறள், #சொற்சுவை, #Themozhi 

Friday, August 1, 2025

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!


“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று தொடங்கி  பகவத்கீதையின் சாரம் என்ற குறிப்புடன் “கீதாசாரம் சுவரொட்டி"யில் இடம் பெறும் கருத்துகள் யாவும் ஓர் ஆன்மீகப் புனைவு அல்லது கட்டுக்கதை.



வேதங்களின் சாரம் உபநிஷத்துகள்; அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத்கீதை. உபநிஷத்துகளின் சாரமான பகவத்கீதையை கண்ணன் மக்களுக்காக அருளிச் செய்தார் என்பது ஆன்மீக வாதிகள் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை. இவ்வாறாக பகவத்கீதை என்பதே எழுநூறு வசனங்களில் கொடுக்கப்பட்ட உபநிஷத்துகளின் சுருக்கமான சாரம்  என்ற நிலை இருக்கையில், அந்த சாரத்திற்கும் சாரம் என்று கீழ்க்காணும்;

      "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
      எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
      உன்னுடையதை எதை இழந்தாய்,
      எதற்காக நீ அழுகிறாய்?
      எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
      எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
      எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
      அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
      எதைக் கொடுத்தாயோ,
      அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
      எது இன்று உன்னுடையதோ
      அது நாளை மற்றொருவருடையதாகிறது
      மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
      இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்."
 பதினைந்து வரிகள் கொண்ட சொற்றொடர்கள் மிகப் பரவலாக அறியப்படுகின்றன.  

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ததும் ஊடகவியலாளர்களுக்கு அது குறித்து அவர் அளித்த செய்தியில்;  
      "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
      எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"
என்று தமது சமயச்சார்பற்ற உள்ளத்தை வெளிப்படுத்தினார்.

கீதையின் சுருக்கமாக கீதையின் இறுதியில் இரண்டே வசனங்களில் கண்ணனே கூறும் சாரத்திற்கும், கீதாசாரம் என அறியப்படும் இந்த 15 வரி சொற்றொடர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும்; பகவத்கீதையை முழுமையாகப் படித்தவர்கள், கீதாசாரம் சுவரொட்டியில் இருக்கும் வரிகள், கீதையில் எங்கே உள்ளன என்று தேடிப் பார்த்தால், அவை அங்கு இல்லை என்பதை உணரலாம். கீதாசாரத்தில் உள்ள கருத்துகளைக் கீதையிலிருந்து மறைமுகமாகக் கொண்டு வரலாம்; ஆனால் அவை கீதையின் நேரடி வாக்கியங்கள் அல்ல, கீதையின் சாரமும் அல்ல. இந்த கீதாசாரத்தை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது என்கிறார்  ஸ்ரீ கிரிதாரி தாஸ் (https://www.facebook.com/profile.php?id=100005426808787).  

மேலும் அவர்,   கீதாசாரத்தின் இந்த அழகிய வரிகளை ஒரு நல்ல கவிதையாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால் கீதாசாரமாக ஏற்க முடியாது.  இதிலுள்ள கருத்துகள் கீதையின் சாரமும் அல்ல, கீதையின் தத்துவத்திற்கு ஒத்துவரக்கூடியவையும் அல்ல, கீதாசாரம் சுவரொட்டியில் உள்ள முதல் கருத்து, கீதைக்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமும் இல்லை. என்கிறார்.

அனைத்தும் நன்மைக்கே என்பதைக் கீதையில் காண இயலாது.
"இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது.” (பகவத்கீதை: 8.15) என்கிறது கீதை.
இவை  ஒன்றுக்கு  ஒன்று முரண் படும் கருத்துகள்.

தொடர்ந்து வரும் மற்ற வரிகளும்  கீதை சொல்லும் பூர்வ ஜன்ம கர்ம வினைப்பயன் கருத்துக்கு மாறான கருத்துகளாகவே  அமைந்துள்ளன என்கிறார் ஸ்ரீ கிரிதாரி தாஸ். அதாவது, புண்ணியம் செய்தோர் நற்பலன்களையும், பாவம் செய்தோர் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும், இவ்வுலகிலுள்ள அனைத்தும் ஒவ்வொருவரின் கர்ம வினைப்படியே நடக்கின்றது  என்பது கண்ணன் கீதையில் கூறும் தத்துவம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் கண்ணனைச் சரணடைய வேண்டும் என்பதே உண்மையான கீதாசாரம். என்பது இவர் வைக்கும் கருத்தாகும்.

திருவண்ணாமலை முனிவர் பகவான் ரமண மகரிஷி அவர்கள் பகவத்கீதையின் 700 வசனங்களில் 42 வசனங்களைத் தேர்ந்தெடுத்து, முழு கீதையின் சாரத்தையும் கீதாசாரம்  என்று தமிழில் வழங்கியுள்ளார்.  


கண்ணனின் கூற்றாகக் கீதை சாரத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் மிகச் சுருக்கமாக கர்ணன் திரைப்படப் பாடலில்  தந்துள்ளார்:
"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்

என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே
[நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்]
கண்ணதாசன் (கர்ணன் - 1964)

கீதாசார சுவரொட்டியில் உள்ளவை பாபர் மசூதி இடிப்புக்குப்பின் அதை நியாயப்படுத்த ஆர் எஸ் எஸ்ஸால் பரப்பப்பட்ட வரிகள். ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்ட எல்லா கோவில்களிலும் இவ்வரிகள் கீதாசாரம் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பதாகவும் கருத்தொன்று மக்களிடையே இருப்பது தெரிகிறது.


சான்றாதாரம்:
1.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். டிசம்பர் , 2012. https://tamilbtg.com/whatever-happened-it-happened-well-is-this-gitacharam/

2.  கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும். ஸ்ரீ கிரிதாரி தாஸ். ஞான வாள். ஜனவரி  3, 2013
https://tamilbtg.com/what-is-real-gita-charam/

3.  கீதாச்சாரம் யாரால் உருவானது?
https://ta.quora.com/கீதாச்சாரம்-யாரால்

4. ரமண மகரிஷி வழங்கிய பகவத் கீதை சாரம் - 42 வசனங்கள்
https://www.facebook.com/watch/?v=4881951441837476


நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up
_________________________

#தமிழணங்கு,  #வரலாற்றில் பொய்கள், #Themozhi