Friday, November 8, 2024

தலைவியின் துயரம்: இலக்​கி​ய ஓவி​யங்கள்

தலைவன் தான் வருவதாகக் குறிப்பிட்ட காலம் கடந்தும் அவன் வரவில்லை என்றால் தலைவி மிகவும் துயரம் அடைவாள்; தன் வருத்தத்தை ஆற்ற முடியாத தலைவி தோழியிடம், தலைவன் இன்னமும் வரவில்லையே என்று கூறி வருந்தும் பாடல்கள் முல்லைத்திணையின் உரிப்பொருள் (இருத்தலும், இருத்தல் நிமித்தமும்) பிரிவில் அடங்கும்.
 
      இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
      துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
      நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
      நீர்வார் பைம்புதற் கலித்த
      மாரிப் பீரத் தலர்சில கொண்டே
            கோக்குள முற்றனார், குறுந்தொகை - 98
 
[இன்னளாயினள் = இத்தகையவள் ஆனாள்]
 

 
பாடலின் பொருள்:
தோழி! நம் தோட்டத்தில் நீர் ஒழுகி வழிந்தோடியதால் பசுமையாக வளர்ந்துள்ள புதர்களின் மேல் தழைத்துப் படர்ந்திருக்கும் கொடியில் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைப் பறித்துச் சென்று தலைவனை நெருங்கி, நீ வாராமையால் உன் நினைவால் தலைவி இவ்வாறு ஆகிவிட்டாள் என்று அம்மலர்களைக் காட்டுபவர் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
 
தலைவனைப் பிரிந்து அவனைப் பாராமல் துயருற்று வருந்தும் தலைவியின் உடல் வெளிர் மஞ்சள் நிறம் அடையும் என்றும், அதைப் பசலை நோய் என்றும் இலக்கியங்கள் கூறுகிறது. பசலை நோயின் அறிகுறிகள் நெற்றியில் எளிதாக வெளிப்படும் என்றும் அது பீர்க்கம்பூவின் நிறத்தை ஒத்திருக்கும் என்பதால் பசலைக்குப் பீர்க்கம் பூவை உவமை கூறுவதும் இலக்கிய வழக்கு.

நன்றி: "சக்தி" பெண்ணிதழ்
நவம்பர் 2024
"தலைவியின் துயரம்‌"
https://archive.org/details/sakthi-november-2024/page/15/mode/2up

#சக்தி, #இலக்​கி​ய ஓவி​யங்கள், #செய்யறிவு, #Themozhi