Monday, November 14, 2022

அகம் புறம் வாழ்வு சிறக்க திருக்குறள் உணர்த்தும் குறிப்பறிதல் திறன்





முன்னுரை :
மக்களின் அக வாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் விளக்கிக் கூறும் சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பாகுபாடு செய்வது தமிழ் இலக்கிய மரபு. மக்களின் வாழ்வியலில் அவர்களின் காதல் வாழ்க்கையை அகம் என்றும், அவர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவற்றைச் சிறப்பிப்பன புறம் என்றும்,  அகம் புறம் ஆகிய இருதிணைகளும் பகுத்துக் கூறுகின்றன. இதனை;  
         'அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான், அதனாலாய பயன் தானே அறிதலின் அகம் என்றார்' (தொல். பொருள். இளம். 3) என்றும்,
         'புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் ஆகலான் அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார்' (தொல். பொருள். இளம் 3) என்றும்'
இளம்பூரணர் விளக்குவார்.

தமிழ் என்றாலே அதன் சிறப்பு அகம் என்பது தமிழறிஞர்களின் துணிபு. சங்க இலக்கியமாகிய  குறிஞ்சிப் பாட்டு "ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது" என்னும் குறிப்பைக் கொண்டுள்ளது.  இதனால், ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் நூலை இயற்றினார் என்ற இக்குறிப்பே   'அகம்'  என்ற இலக்கியப் பாகுபாடு தமிழ் தவிர்த்த பிற மொழிகளில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

தமிழின் இச்சிறப்பை 'தமிழ்ச்செல்வம்' என்பார் பாவேந்தர் பாரதிதாசன். தன் மகள்  இத்தகைய தமிழ்ச்செல்வமாக சிறப்புற்று வாழ விழைகிறார் அவளைப்  பெற்றவர்.
         புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
         புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
         புலவர் கண்ட நூலின் - நல்
         திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
         செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
         செல்வம் ஆக மாட்டாயா?
அக்காலம் முதல் இக்காலம் வரை இத்தகைய அகம் புறம் திணை வேறுபாடு  தமிழுக்கே உரிய சிறப்பாகப் போற்றப்படுகிறது என்பதை இவ்வரிகள் மூலம் அறிய முடிகிறது.  

அத்துடன், அதே பாடலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,  அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் வைத்துள்ளார்.

         அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
         அறிகிலாத போது - யாம்
         அறிகிலாத போது - தமிழ்
         இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
         இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
         இயம்பிக் காட்ட மாட்டாயா?
என்று பாரதிதாசன் கூறுவது புறப்பொருள் குறித்து அறிய திருக்குறள் ஒரு சிறந்த நூல் என்பதையும் உணர்த்துகிறது.  

திருக்குறளின் முப்பால்களில் அறமும் பொருளும்  புறவாழ்வின் வாழ்வியல் விழுமியங்களின் தொகுப்பாக அமைந்தவை.  இவ்விரண்டையும் தவிர்த்து  மூன்றாவதாக வள்ளுவர் வகுத்து அளித்த காமத்துப் பால் குறள்கள் அகப்பொருள்  குறித்து  அறிய உதவும் வழிகாட்டி.

குறிப்பறிதல்:
இவ்வாறு 'அகம்' (காமத்துப்பால்) எனவும் 'புறம்' (அறத்துப்பாலும் பொருட்பாலும்) எனவும்  வகுத்துக் கொண்டாலும், இவ்விரு அகம் புறம் பிரிவுகளிலும் "குறிப்பு அறிதல்" என்ற தலைப்பில் இரு அதிகாரங்களைக் கொடுத்து அதற்கான கருத்துக்களையும் வள்ளுவர் கொடுத்துள்ளதைக் காண்கிறோம்.  
'குறிப்பு அறிதல்' என்ற 71 ஆவது அதிகாரம் பொருட்பாலின் அமைச்சியல் கீழ் இடம் பெறுகிறது.
மற்றொரு 'குறிப்பு அறிதல்' என்ற 110 ஆவது அதிகாரம் இன்பத்துப் பாலின் களவியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பறிதல் என்பது உள்ளக்குறிப்பைத் தெரிந்துகொள்வது என்ற பொருள் தரும். அதாவது, பிறர் மனத்தில் உள்ளதை அவர் கூறாமலேயே அறிந்து கொள்ளும் ஆற்றல்.  குறிப்பறிதல்.  பிறர் தம்  உள்ளத்துள் எண்ணுவதை அவர் சொல்லாமலேயே  அவருடைய மனக் குறிப்பை அறிய உதவும் கருவிகளாக முகமும் கண்ணும் வள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டவருக்கு மற்றவர் உள்ளத்தின் அகக்குறிப்பை அறிந்துகொள்வது எளிது.

(I) பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[பொருட்பால்-அமைச்சியல்-71. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறியது என்னையெனின், குறிப்பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், 'இறந்தது காத்தல்' என்னும் தந்திர உத்தியால் கூறப்பட்டது என்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது , அரசர் கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாததாகலின் அதன் பின் வைக்கப்பட்டது, "  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "ஒருவருக்கொருவர் குறிப்பறிந்து பழகுதல். அரசன் குறிப்பறிந்து அமைச்சர் பழகுதலும் அவ்வாறே ஆள்பவன் மற்றவர்களின் குறிப்பறிந்து பழகுதலும் எல்லாம் இதிலடங்கும், " என்பது தமிழண்ணல் தரும்  அதிகார உரை விளக்கம்.  

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.  பொருட்பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
ஒருவர் தன் மனதில் என்ன எண்ணுகிறார் என்பதை அவரது முகமே காட்டிவிடும்.  கண்ணாடி தன் முன் நிற்பவர் உருவத்தைக் காட்டுவது போலவே, ஒருவரது உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவர் கூறுவதற்கு முன்னர் அவரது முகம் காட்டிக் கொடுக்கும்.  ஒருவர் ஒன்றும் கூறாத பொழுதே அவருடைய முகக்குறிப்பால் அவர் உள்ளத்து எண்ணங்களைப் புரிந்து கொள்ளுவது உலகின் மிகச் சிறந்த பண்பு. அவ்வாறு ஒருவர் பார்வையில் தோன்றும் வேறுபாடுகளைக் கொண்டே எதிரில் உள்ளவர்  நட்பு எண்ணம் கொண்டவரா அல்லது பகை எண்ணம் கொண்டவரா எனவும் அறிந்துவிடுவார்கள். அவ்வாறு மற்றவர் முகக்குறிப்பை அறியும் ஆற்றல் உள்ளவருக்கு அவரது கண்களே அளவிடும் கருவியாக அமையும். ஒருவர் மனதில் எழும் எண்ணங்களை தெய்வத்தால் மட்டுமே அறிய இயலும், எனவே அவ்வாறு புரிந்துகொள்ளும் திறன் கொண்ட ஒருவர் தெய்வத்திற்கு இணையானவர். அத்தகைய ஆற்றல் கொண்ட ஒருவரை எதைக் கொடுத்தும் துணையாக்கிக் கொள்ள வேண்டும்.  மற்றவர் எண்ணத்தைக் குறிப்பால் உணரக் கூடியவர்  பிறரைத் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் அவர் மற்றவரைவிட அறிவால் மேம்பட்டவர்.  அத்தகைய  குறிப்பறியும் ஆற்றல் கொண்டவராக ஒருவர் இருந்தால் அவர் முன் சென்று நின்றாலே போதும், பேச வேண்டிய தேவையில்லை.   முகக் குறிப்பால் மற்றவர் எண்ணத்தை அறிய முடியாதவருக்கு அவரது கண்களால் பயனில்லை.  

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
          கடுத்தது காட்டு முகம்.

(II) இன்பத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரம்:
[காமத்துப்பால்-களவியல்-110. குறிப்பறிதல்]
  —  "குறிப்பறிதலாவது தலைமகள் உள்ளக் குறிப்பினைத் தலைமகன் அறிதல்,"  என்பது மணக்குடவர் தரும் அதிகார உரை விளக்கம்.

  —  "அஃதாவது, தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம். தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின், தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது,"  என்பது பரிமேலழகர் தரும்  அதிகார உரை விளக்கம்.  

  —  "தலைவியைக் கண்டு அவள் அழகால் கவரப்பட்டு அவளை வியந்து நின்ற தலைமகன் அவளுடன் நெருங்கி உரையாட, உறவாட, அவள் குறிப்பினை அறிய முற்படுகின்றான். குறிப்பறிதலாவது அவள் உள்ளக் கருத்தினை அறிதலாகும்," என்பது  சி. இலக்குவனார் தரும்  அதிகார உரை விளக்கம்.  

காமத்துப் பாலில், களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் தலைவியர் உள்ளநிலை உணர்ச்சிகள், இருவருடையே காதல் அரும்பி மலரும் வளர்ச்சியை, அதன் பின்னர் உள்ளம் இணைந்த அன்பினால்  அவர்கள் கற்பு என்ற இல்லற வாழ்வில் இணைவதை வள்ளுவர் காமத்துப்பாலில் அழகுற விவரிக்கிறார். களவியலின்  குறிப்பறிதல் அதிகாரம் தலைவன் தலைவியின் உள்ளக் கிடக்கையை எவ்வாறு அவளது செயல்கள் மூலம் குறிப்பால் அறிகிறான் என்பதை விவரிக்கும். கண்ணுடன் கண் பேசும் மொழி, வாய்ச் சொல்லின் தேவையற்ற நிலை காதலர்கள் தம் துணையின் குறிப்பறிதலின் சிறப்பு.

காமத்துப் பாலின் குறிப்பு அறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் 10 குறள்களில் கூறும் கருத்துக்களைக் கீழ்க் காண்பது போலத் தொகுக்கலாம்:
காதலியின் பார்வை நோய் தருவதாகவும், அதே வேளை அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைகிறது. அவளது கள்ளத்தனமான கடைக்கண் பார்வை காதலன் தன்னை நெருங்கிவிட்டதில் அவள் உள்ளம் மகிழ்வதைக் காட்டுகிறது.  காதலனின் பார்வைக்கு நாணித்  தலை கவிழ்ந்த வண்ணம் பார்க்கும் பார்வை அவள் அவன் உறவை விரும்புவதைக்  காட்டி  காதலனின் நெஞ்சில் அன்பை வளர்க்கிறது.  காதலன் பாராத பொழுது அவனை நோக்கி பின் தனக்குள் புன்னகைக்கும் அவளது இதழ்களில் அரும்பும் முறுவல் அவள் உள்ளத்தின் இசைவைக் காட்டுகிறது. காதலியின் கடைக்கண் பார்வை அவளது காதலை உறுதி செய்கிறது. அயலார் போன்ற கோபப் பார்வையும் கடுமையான மொழியும் காதலியின் காதலை மறைக்காமல், மாறாக  அவளது அன்புள்ளத்தையே வெளிப்படுத்துகிறது. காதலர்களின் அயலார் போன்ற பொய்யான நடிப்பும், பகையுணர்வற்ற கடுமையான சொல்லும் பார்வையும், அவர்கள் உள்ளத்தால் உறவாகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. காதலன் பார்க்கும் பொழுது பரிவு கொண்ட பார்வையுடன் அவள் முறுவலிக்கும்பொழுது அவள் அழகான சாயலுடன் அவனுக்குத் தோன்றுகிறாள். பொது இடத்தில் அறிமுகமற்றவர் போலப் பாசாங்கு செய்து புதியவர் ஒருவரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வது காதல் உணர்வின் குறிப்பைக் கொடுக்கிறது. கண்களும் கருத்தும் ஒத்தவர்களாக மாறிய நிலையில்  அவர்களுக்கு இடையே உரையாடலுக்குத் தேவை இல்லாமல் போகிறது.

இவ்வாறு காதலனும் காதலியும் போலியாக பகைகொண்டவர் போலவும் புதியவர் போலவும் பொய்மையாகப் பார்த்துக் கொள்வதன் மெய்யான குறிப்பையும், அவர்களது கடுமொழியின் பின்னேயும் கடைக்கண் பார்வையின் பின்னேயும் இருக்கும் காதலின்  உண்மையான  குறிப்பையும்   உணராவிட்டால் அவர்கள் காதல் வளர வாய்ப்பில்லை.  காதலிப்பவர் காட்டும் பாசாங்கு  குறிப்பின் சரியான  உண்மையான பொருள்  அறிதலில் கவனமாக இருந்தாலே இல்லறம் வரையில் வாழ்வு உயரும். வாய்ச் சொல்லின்றி பார்வையினால் காதலரின் உள்ளக் குறிப்பு அறிதல் என்ற திறனின் தேவையை குறிப்பறிதல் அதிகாரத்தில் வள்ளுவர் இவ்வாறு உணர்த்துகிறார்.

இந்த அதிகாரத்தின் புகழ் பெற்ற குறள்;
          கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
          ளென்ன பயனு மில.

முடிவுரை:
அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் குறிப்பறியும் ஆற்றல் பொதுவானது என்பதையும், அந்த ஆற்றல் வாழ்வை மேன்மைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை வள்ளுவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
 

குறிப்பு:  குறிப்பறிதல் என்ற அதிகாரத்தின் பெயருக்கு "நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்" (தொல்காப்பியம், களவியல்: 1042) என்ற  தொல்காப்பியரின் களவியல் நூற்பா காரணமாயிருக்கலாம் என்பர்.  தலைமக்கள் இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர் தம் கருத்துக்களை ஒன்றுபடுத்தற்கு உணர்வினைக் கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும் என்பது இதன் பொருள்.  
பரிமேலழகர் உரையில் பொருட்பாலில் உள்ள அதிகாரம் 71றும்,  காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் 110தும் “குறிப்பறிதல்” என்ற தலைப்பிட்ட அதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  
பரிமேலழகருக்கு முற்பட்ட காளிங்கர் தம் உரையில் காமத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் என்பதை “குறிப்புணர்தல்” என்று கொடுத்துள்ளார்.  
அத்துடன், ‘குறிப்பறிவுறுத்தல் ’ என்ற 128வது அதிகாரம் ஒன்றும் தலைவி உடல்மொழியால் வாய்ச்சொற்கள் இல்லாமல், தம் உள்ளக் குறிப்பைத் தலைவனுக்கு அறியச் செய்வதையும் வள்ளுவர் சொல்லிச் செல்கிறார்.


பார்வை நூல் மற்றும் தளங்கள்:
திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும்
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html

குறள் திறன்
http://kuralthiran.com/Home.aspx





















நன்றி :
மின்தமிழ்மேடை  - 31 [அக்டோபர்  - 2022]
அகம் புறம் - சிறப்பிதழ் 
https://archive.org/details/THFi-QUARTERLY-31/page/131/mode/2up

#திருக்குறள், #மின்தமிழ்மேடை, #Themozhi